Tuesday, August 20, 2013

பொது பலசேனா நாட்டுக்குள்ளே, த.தே.கூ கூட்டுக்குள்ளே! கல்முனை மக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு!

30 வருடகால யுத்தத்தின் விளைவாக ஓட்டாண்டிகளாக நடுத்தெருவில் விடப்பட்டுள்ள சமுதாயம் யாது என்று கேட்டால், அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேச சபைக்குட்ட தமிழ் சமுதாயம் என்று கூறினால் அது மிகையாகது. கல்முனை தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டதுடன் தமிழ் மக்களது நிர்வாகம் முஸ்லிம்களது கைகளுக்கு தாரைவார்க்கப்பட்டது எவ்வாறென்பதற்கு இலகுவான பதில் „ அஷ்ரப்பின் அரசியல் சாணக்கியமும் தமிழ் தலைமைகளது பிச்சைக்காரன் கைப்புண் அரசியலும்' என்பதாகும்.

கல்முனைப் பிரதேசத்தின் சகல நிர்வாக அதிகாரங்களும் முஸ்லிம்களின் கைகளில் மாட்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கின்ற தமிழ் தலைமைகள் எதிர்தரப்பில் அமர்ந்திருந்து எதிர்ப்பு அரசியல் செய்ய அரசின் பங்காளிகளாக மாறிய முஸ்லிம் தரப்பு இணக்க அரசியல் ஊடாக தமிழ் மக்களின் வளங்கள் யாவற்றையும் சூறையாடியுள்ளது.

பிரதேசத்தின் முடிவெடுக்கும் சக்தியாக முஸ்லிம் தரப்பு மாறியுள்ளதுடன் தமிழ் மக்கள் அரசின் வளங்களை பெற்றுக்கொள்ள முஸ்லிம்களிடம் கையேந்தி நிற்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அவல நிலை தொடர்பில் வாய்திறப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அதனூடாக தமது குடும்பங்களை வளப்படுத்திக்கொண்டிருக்கின்ற தமிழ் தலைமைகள் வக்கற்றவர்களாக உள்ளனர். இதற்கான காரணம் தமிழ் மக்களின் தலைமைகள் எனப்படுகின்றவர்கள் முஸ்லிம் தலைமைகளிடம் பின்கதவால் தமது குடும்பங்களுக்காக பெற்றுக்கொள்ளுகின்ற அர்ப்ப சொற்ப சலுகைகளே ஆகும்.

இந்தநிலைமையை மாற்றி அமைக்கவும் இழந்தவற்றை மீளப்பெறவும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயற்படுகின்ற சமூகசேவகர்கள் சிலர் பொது பலசேனாவின் உதவியை நாடியுள்ளனர். நற்பட்டிமுனை பிரதேசத்தை சேர்ந்த பாபு எனப்படுகின்ற ஈஸ்வரன் தலைமையிலான குழுவொன்று பொது பலசேனாவினரை சந்தித்து தாம் இழந்தவற்றை மீட்டுக்கொள்ள உதவி புரியுமாறு பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைகளின்போது கல்முனை பிரதே செயலகத்தின் செயற்பாடு தொடர்பாக மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 1988 கல்முனை கரவாகுப்பற்று உதவி அரசாங்க அதிபர் காரியாலயமாக இருந்து கல்முனை முஸ்லிம் , தமிழ் பிரதேச செயலகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இரு செயலகங்களின் செயற்பாடுகளும் முஸ்லிம் பிரதேச செயலகத்தின் உப செயலகமாகவே தமிழ் செயலகம் செயற்படுகின்ற நடைமுறையில் உடனடி மாற்றம் வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் காணி மற்றும் நிதிமூலங்கள் முற்று முழுதாக முஸ்லிம் பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதுடன் தமிழ் பிரிவிற்கான நிதி வளங்கல்கள் முஸ்லிம் பிரதேச செயலகத்தின் ஊடாகவே வழங்கப்படுவதாகவும் கல்முனை பிரதேச செயலகத்திற்கென வருகின்ற நிதியில் சுமார் 20 விழுக்காடு கூட தமிழ் பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கப்படுவதில்லை என்றும் தமிழ் பிரதேச செயலகத்திற்கென தனியான கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு அரசின் நிதிவளங்கல்கள் நேரடியாக தமிழ் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்படவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

தமிழர் தரப்பு சமூக நலன்விரும்பிகளின் குறைநிறைகளை கேட்டுக்கொண்டு பொது பலசேனாவினர் விடயத்தினை பொது நிர்வாக சேவைகள் அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கவனத்தின் கீழ் கொண்டு சென்றுள்ளனர். பொதுபலசேனாவின் மத்தியஸ்தத்துடன் மேற்படி இரு அமைச்சுக்களிலும் தமிழர் தரப்பு சமூக நலன்விரும்பிகள் ஈஸ்வரன் தலைமையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தமிழர் தரப்பு தேவைகள் எடுத்துக்கூறப்பட்டபோது , தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது , தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகியோரின் கடமையை நீங்கள் சுமந்து வந்து நிற்கின்றீர்களே எனக் கேட்கப்பட்டுள்ளது. கேள்விக்கு பதிலளிக்க முடியாது நின்ற குறித்த குழுவினர் „தேர்தல் காலங்களில் வாங்கு கேட்டு வருவார்கள், அதன் பின்னர் ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற கதைதான் எங்கள் கதை' எனப் பதிலளித்துள்ளனர். எது எவ்வாறாயினும் விடயத்திற்கு மிக விரைவில் சாதகமான தீர்வு ஒன்றை பெற்றுத்தருவதாக பாதுகாப்பு அமைச்சிலிருந்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, தமிழ் முஸ்லிம் பிரதேச செயலகங்களை 1989 க்கு முன்னர் இருந்ததுபோல் இணைத்து ஒரு பெரும்பாண்மை இனத்தினரை பிரதேச செயலராக நியமிப்பதுடன் இரு உதவி பிரதேச செயலர்கள் நியமிப்பது என்றும் அவர்களில் தமிழர் தரப்பு விடயங்களை கவனிப்பதற்கு தமிழர் ஒருவர் என்றும் முஸ்லிம் தரப்பு விடயங்களை கவனிப்பதற்கு முஸ்லிம் ஒருவர் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவை பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழர் தரப்பு நலன்விரும்பிகள் நிராகரித்துள்ளதுடன் அவ்வாறு இரு பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்டால் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் தமது அரசியல் பேரம்பேசல்கள் அல்லது பலத்தினூடாக பிரதான பிரதேச செயலர் கதிரையில் முஸ்லிம் ஒருவரை அமர்த்தி இன்றிருக்கும் நிலைமையைக்கூட இல்லாமல் செய்யலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த அச்சத்தில் ஒருவகை நியாயம் இருந்தாலும் இன்று தமிழர் பிரதேசங்களில் இருக்கின்ற அரச அதிகாரிகளின் தான்தோன்றி தனமான செயற்பாடுகளை கட்டப்படுத்த அல்ல இல்லாது ஒழிக்க வேண்டுமானால் பிரதேசத்துடன் எவ்வித உறவுகளையும் கொண்டிராத வெளியிடங்களைச் சேர்ந்த நடுநிலைமையான அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும். தமிழர் பிரதேசங்களிலே பெரும்பாண்மை இனத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அது தொடர்பாக எழுகின்ற இனவாத ஓலங்கள் ஒழியவேண்டும். காரணம் இன்று எமது பிரதேசங்களில் இருக்கின்ற அரச அதிகாரிகள் சேவைகளின்போது பாரபட்சம் காட்டுவது என்பது சாதாரண விடயமாகியுள்ளது. இந்த பாரபட்சம் சொந்தங்கள் , நண்பர்கள், வேண்டப்பட்டவர்கள் , எனது இனத்தவன் , எனது சாதிக்காரன் என்று தொடர்ந்து செல்ல எந்தவித தொடர்புகளும் கிடையாத கீழ் மட்ட மக்கள் அடிமைப்படுத்தப்படுகின்றனர், அலைக்கழிக்கப்படுகின்றனர்.

எனவே இன்று தமிழர் பிரதேசங்களில் உள்ள நிர்வாக சேவையில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். பாரபட்சமற்று மக்களுக்கு வேவை வழங்கவேண்டும் என்ற மன நிலை அதிகாரிகள் மத்தியில் உருவாகாத பட்சத்தில் இனமத பேதங்களுக்கு அப்பால் வெளிமாவட்டங்ளிலிருந்து நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும்.

1 comments :

ஈய ஈழ தேசியம் ,  August 20, 2013 at 9:32 PM  

தமிழர் கூட்டமைப்பால் தமிழர்களுக்கு எந்த பயனும் கிடைக்க போவதில்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com