Monday, March 25, 2013

வட மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது: தேர்தல் திணைக்களம் தெரிவித்தது!

மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வட மாகாண சபை இதுவரை அமைக்கப்படாமையினாலேயே தேர்தல் நடத்த முடியாதுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரசாங்கம் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது என தீர்மானித்துள்ள போதும் தம்மால் தேர்தல் வேலைகளை தொடங்க முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்த 2006ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட பின், கிழக்கு மாகாண சபை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தும்படி ஜனாதிபதி பணித்தார்.

இந்த நடைமுறையே வட மாகாணத்திலும் பின்னப்பற்றப்பட வேண்டும். ஆனால் எமக்கு இன்னும் கட்டளைகள் கிடைக்கவில்லை" என அவர் தெரிவித்தார்.

தேர்தல் செயன்முறைகளை பூர்த்தி செய்ய மூன்று மாதங்கள் தேவைப்படும். தேர்தலை செப்டம்பரில் நடத்துவதாயின் எமக்கு ஜனாதிபதியின் கட்டளை மே மாதத்தில் கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கம் இடம்பெயர்ந்தோரை குடியமர்த்த வேண்டும் எனும் சாட்டில் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்தாது இருந்தது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது.

வட மாகாண சபை தேர்தல் செப்டம்பரில் நடைபெறும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார். அரசாங்கம் வட மாகாண சபை தேர்தலை நடத்த தீர்மானித்திருப்பதை அண்மையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க அனுசரனையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வரவேற்றிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com