‘ஈரானின் ‘தூது’ சஞ்சிகை இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும்’ என்கிறது பொது பல சேனா
ஈரான் நாட்டின் கலாச்சாரத்திற்கு பௌத்த சிலைகள் பாதிப்பைச் செலுத்துகின்றன என அந்நாடு குறிப்பிடுவதால், இந்நாட்டு ஈரான் தூதுவராலயத்தினால் பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்ற இஸ்லாமியப் பிரச்சார மாத இதழ்களான ‘தூது’ மற்றும் ‘சங்ஹிந்தியாவ’ இதழ்களை கூடிய சீக்கிரம் தடை செய்யுமாறு அரசியல்வாதிகளுக்குக்குஎச்சரிப்பதாக பொது பல சேனா இயக்கத்தின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானஸார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த வழிபாட்டுத் தளமொன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நாட்டு எந்தவொரு பௌத்தமதத்தைச் சார்ந்தவரோ, பௌத்த மதகுருமார்களோ உலகில் எந்தவொரு நாட்டிலும் பௌத்த பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பதை அடித்துச் சொல்லலாம் என்றும் ஈரானியர்கள் இந்நாட்டின் ஞாபக சின்னமாக அந்த நாட்டுக்கு பௌத்த சிலையைக் கொண்டு சென்றார்களே தவிர, யாரும் கட்டாயப்படுத்தி அவர்கள் அந்த பௌத்த சிலையை அந்நாட்டுக்குக் கொண்டுசெல்லவில்லை என்றும் ஞானஸார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நாட்டு அரசியலாளர்கள் முஸ்லிம்கள் மக்கா செல்வதற்கு திறைசேரியில் பணம் ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால் எந்தவொரு பௌத்தனுக்கும் ஸ்ரீபாத வழிபாடு செய்வதற்கோ, தம்பதிவ செல்வதற்கோ திறைசேரியில் பணம் ஒதுக்கப்படவில்லை. என்றாலும் பௌத்தர்கள் அதனை எண்ணிப் பார்க்காமல் பொறுமை காத்தார்கள். முஸ்லிம்கள் மக்காவுக்குச் சென்று திரும்பும்போது அடிப்படைவாதிகளாகவே வருகின்றனர். அடிப்படைவாதிகளாக நின்று இந்நாட்டு மக்களுக்குத் திணிக்கப்பார்க்கின்ற விடயங்களை தொடர்ந்து எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்று மதத்தவர்களின் மதங்களைப் பிரச்சாரம் செய்வதற்கு சிறந்த இடமாக இலங்கை உள்ளது. இந்நாட்டு மக்களை மதமாற்றம் செய்யும்போது பெரும்பான்மையினத்தினர் சீறியெழும் நேரங்களில் கூட இந்நாட்டு அரசியலாளர்கள் வாய்புதைத்து நிற்பது கவலைக்குரிய விடயம் என்றும் ஞானஸார குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment