Sunday, February 10, 2013

மதங்களுக்கெதிரானவற்றை உடன் தெரிவிக்கலாம்

இன்று முதல் 24 மணி நேரமும் துரித பணியில் பொலிஸார்

நாட்டில் ஆங்காங்கே மதப் பிளவுகள் மற்றும் அசம்பாவிதங்கள் போன்றன நடைபெற்றுவருவதனால், அவற்றை இல்லாதொழிக்கும் நோக்குடன் இன்று முதல் பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கவென பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கைப் பிரிவொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்கக்கோனின் ஆலோசனைக்கு அமைய இன்று ஞாயிற்றுக்கிழமை (10) முதல் 24 மணி நேரமும் இவ்விசேட நடவடிக்கைப் பிரிவு இயங்கவுள்ளது.

எந்தவொரு மதத்திற்கும் எதிராக யாரும் செயற்பட முடியாது எனவும், அவ்வாறு யார் செயற்பட்டாலும் உடனடியாக இந்த விசேட பிரிவுக்கு தொலைபேசி மூலமாகவோ, தொலைநகல் மூலமாகவோ முறைப்பாடு செய்ய முடியும் எனவும் முறைப்பாடு கிடைத்த அடுத்த நிமிடமே பொலிஸார் குறிப்பிட்ட இடத்திற்கு வருகைதந்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. முறைப்பாடுகளை 011-3182904 அல்லது 011-3188753 என்ற தொலைபேசி இலக்கங்களில் ஒன்றுக்கு தெரிவிக்கலாம் எனவும், தொலைநகலில் முறைப்பாடுகளை அனுப்பிவைக்க 011-2423944 என்ற இலக்கத்தைப் பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com