Sunday, January 20, 2013

இந்தியாவும் பாக்கிஸ்தானும் காஷ்மீர் எல்லை முரண்பாட்டில் அச்சுறுத்தல்களை விடுக்கின்றன. By Sampath Perera

கட்டுப்பாட்டுக் கோடு நெடுகே (LoC), முரண்பாட்டிற்கு உட்பட்ட காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையேயான அழுத்தங்கள் தீவிரமாக இருப்பதுடன், புது டெல்லியும் இஸ்லாமாபாத்தும் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு நிகழும் எல்லை மோதல்களுக்காக ஒன்றையொன்று குற்றம் சாட்டியுள்ளன. இந்திய, பாக்கிஸ்தானிய இராணுவ அதிகாரிகளுக்கு இடையே கட்டுப்பாட்டுக் கோட்டில் நடைபெற்ற “கொடிக் கூட்டம்” 15 நிமிடங்களுக்குள் தோல்வியில் முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியத் தளம் கொண்ட Hindu நாளேட்டில் வந்துள்ள தகவல்படி, இந்தியத் தூதுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் டி.எஸ். சாந்து ஜனவரி 8ம் தேதி இரு இந்திய படையினர் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படும் எல்லை கடந்த தாக்குதலுக்கு பாக்கிஸ்தான் பொதுமன்னிப்புக் கேட்கும் வரை இந்தியா “பதிலடி கொடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது” என்றார். அத்தாக்குதலில் ஒரு படையினரின் தலை துண்டிக்கப்பட்டது.

அனைத்து இந்தியக் குற்றச்சாட்டுகளையும் பாக்கிஸ்தானின் இராணுவத் தூதுக்குழு நிராகரித்தது. இந்தியா சமீபத்திய மாதங்களில் கூடுதல் நிலவறைகளைக் கட்டுவதின் மூலம் முறையாக 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்தை, திட்டமிட்டபடி மீறுகிறது என்றும் பாக்கிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. அதன்பின் ஜனவரி 6ம் திகதி பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பிற்குள் இருக்கும் காஷ்மீருக்கு வந்து ஒரு பாக்கிஸ்தானிய படையினரை கொன்று, மற்றொருவரை மோசமாக காயப்படுத்தியுள்ளது என்றும் கூறுகிறது.

முன்னதாகத் திங்களன்று இந்திய இராணுவத்தின் தலைமை அதிகாரி ஜெனரல் பிக்ரம் சிங் ஆக்கிரோஷ உரை ஒன்றை நிகழ்த்தினார். இதில் அவர் பாக்கிஸ்தானுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து காஷ்மீரில் தன்கீழ் இருக்கும் அதிகாரிகளிடத்தில் “ஆத்திரமூட்டலையும் சூட்டினையும் எதிர்கொள்ளும்போது ஆக்கிரோஷமாகவும், தாக்குதல் செய்யக்கூடியதாகவும் இருக்கவேண்டும்... நீங்கள் ஒன்றும் செயலற்று இருக்க வேண்டியதில்லை” என்றார்.

இந்திய இராணுவ தின விழாவில் செய்தியாளர்களிடையே பேசிய ஜெனரல் சிங் பாக்கிஸ்தான் 8ம் தேதி எல்லை கடந்து வந்து நடத்திய தாக்குதல் “முன்கூட்டித்திட்டமிடப்பட்ட” நடவடிக்கை என்றார். படையினர் ஒருவரின் தலையைக் கொய்தது குறித்த முந்தைய எரியூட்டும் இந்தியக் குற்றச்சாட்டுக்களையும் அவர் விரிவாகப் பேசினார். இது “கொடூரமானது, மிகவும் மன்னிக்கத்தக்கதற்ற ஒரு செயல்” என்றும் அழைத்தார். “எந்த நேரத்தில் எங்கு பதிலடித் தாக்குதல் நடத்துவது என்பது குறித்து” இந்திய இராணுவம் தன் விருப்பப்படி செயல்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

“பாக்கிஸ்தான் சுட்டால் சுடுவதன் மூலம் போரிடுங்கள், கட்டுப்பாட்டுக் கோட்டில் இருக்கும் அதிகாரிகளுக்கு இராணுவத் தலைவர் உத்திரவிடுகிறார்” என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரையில் டைம்ஸ் ஆப் இந்தியா கூறுகிறது. “ஜெனரல் சிங் தற்போதைய அழுத்தம் பெரும் போராக மூளாது என வலியுறுத்தினாலும் கூட, நாடுகள் முழுப்போரில் ஈடுபடுமுன் சில கட்டங்களைக் கடக்க வேண்டும் என்றாலும்கூட, சுழற்படியின் முதல் கட்டம் அடையப்பட்டுள்ளது என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.”

வேறுவிதமாகக் கூறினால், புது டெல்லி தண்டனையளிக்கும் இராணுவ நடவடிக்கையை பரிசீலிக்கிறது. அணுவாயுதங்களைக் கொண்ட இரு நாடுகளுக்கு இடையே பின்னர் போர் விரிவாக்கம் ஏற்பட்டால் அது கட்டுப்படுத்தப்பட முடியும் என்ற சூதாட்ட நம்பிக்கையைக் கொண்டுள்ளது.

சனிக்கிழமை அன்று இந்திய விமானப் படையின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் என்.கே.பிரௌனே மறைமுகமாக தற்போதைய அன்றாட பீரங்கி, துப்பாக்கிக் குண்டுப் பறிமாற்றத்திற்கு அப்பால் இராணுவ நடவடிக்கை குறித்த வாய்ப்பை எழுப்பினார். “நிலைமையை மிகவும் கவனத்துடன் நாங்கள் கண்காணிக்கிறோம். இப்படியே விடயங்கள் நடந்தால், மீறல்கள் தொடரப்பட்டால், பின்னர் ஒருவேளை இதை எதிர்கொள்ள வேறு விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க நேரிடும்.” என்றார் பிரௌனே.

அதே தினத்தன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான அரசாங்கம் இராஜதந்திர, இராணுவ முறையில் பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் பெரும் அழுத்தத்தில் உள்ளது என்று குறிப்புக் காட்டினார். எவரையும் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், குர்ஷித் இந்தியாவின் இராணுவ-தேசியப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஹிந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியின் பிரிவுகளை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார். “பழி, பதில் நடவடிக்கை என்றும் கண்டபடியான அழைப்புக்களின் அழுத்தங்களுக்கு நாங்கள் பணியமாட்டோம்” என்றார் குர்ஷித்.

திங்களன்று பேசிய குர்ஷித் இந்தியாவும் பாக்கிஸ்தானும் 2003ல் ஆரம்பித்த விரிவான சமாதான வழிவகை தொடர்வதற்கான அவருடைய அரசாங்கத்தின் ஆதரவை மறு உறுதிப்படுத்தினார்; ஆனால் அது அதிக முன்னேற்றம் அடையவில்லை. “கேட்க நன்றாக இருக்கின்றது என்பதற்காக சமாதான நிகழ்போக்கில் பெரும் முதலீட்டை நாங்கள் செய்யவில்லை.” என்றார் குர்ஷித்.

பாக்கிஸ்தான் அரசாங்கம் சமாதான வழிவகைக்குத் தன் ஆதரவை மீண்டும் கொடுத்துள்ளது. இது கடந்த பெப்ருவரி மாதம்தான் மூன்று ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின் தொடரப்பட்டது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இத்தகைய உறுதிப்பாடுகள் பாக்கிஸ்தானின் இராணுவத் தலைவர்களின் அச்சுறுத்தும் அறிக்கைகளுடன் இணைந்துதான் வந்துள்ளன.

கடந்த வியாழன் அன்று இந்திய அரசாங்கத்தையும் இராணுவ ஆதாரங்களையும் அடித்தளமாக கொண்டு ஹிந்து ஏட்டில் வந்துள்ள கட்டுரை ஒன்று, பாக்கிஸ்தான் தொடர்பற்று எல்லை மோதல்களைத் தொடக்கியது என்னும் உத்தியோகப்பூர்வ இந்தியக் கூற்றுக்களை முரண்படுத்தியுள்ளது. ஹிந்துவின் கூற்றுப்படி, கடந்த செப்டம்பர் மாதம் இந்திய இராணுவம் கட்டுப்பாட்டுக் கோட்டில் சரோன்டா பகுதியில் நிலவறைகளைக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டது. இது அவர்கள் கண்காணிப்பை முன்னேற்றுவிக்கும். இந்திய காஷ்மீர்ப்பகுதியில் வசிக்கும் ஒரு மூதாட்டி கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து பின் பாக்கிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அவருடைய மகன்களுடன் இணைந்தபின் நடந்துள்ளது. இம்மகன்கள் எல்லை கடந்த கடத்தலில் ஈடுபட்டுவர்கள் என இந்திய இராணுவத்தால் கருதப்பட்டால் என பயந்து அவர்கள் ஆசாத் காஷ்மீருக்குள் தப்பியோடிவிட்டனர். ஜம்மு காஷ்மீரில் இந்திய ஆட்சி நடப்பதற்கு எதிரான பாக்கிஸ்தான் ஆதரவுடைய எழுச்சியை அடக்குவதற்குப் சித்திரவதை, மறைந்துபோதல் ஆகியவற்றிற்கு இந்திய பாதுகாப்புப்படையினர் பெயரெடுத்தவர்கள்.

சரோன்டா பகுதியில் இருந்த அழுத்தங்கள் ஜனவரி 6 துப்பாக்கிச் சண்டைக்கு மூன்று மாதங்கள் முன்னதாகவே விரிவடைந்தன. பாக்கிஸ்தானிய இராணுவம் நிலவறைகள் அகற்றப்பட வேண்டும், ஏனெனில் அவை 2003 உடன்பாட்டை மீறுகின்றன என வலியுறுத்துகிறது. இரு திறத்தாரும் அவ்வப்பொழுது பீரங்கி, துப்பாக்கி மோதல்களில் ஈடுபடுகின்றனர். அக்டோபர் மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்தியப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் மூன்று பேர் பாக்கிஸ்தான் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இக்கட்டுரை கடந்த ஆண்டு இந்திய, பாக்கிஸ்தானிய படையினர் எதிரிகளின் தலைகளை எல்லைப் போர்களில் கொய்தனர் என்றும் தெரிவிக்கிறது. இந்த வெளிப்பாடு இந்திய இராணுவம் மற்றும் அரசாங்கம் பாக்கிஸ்தானின் கொடுமையை வேண்டுமேன்ற உயர்த்திக் காட்டும் கூற்றைக் கூறியுள்ளது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

முழுமையாக சரியானதாக இல்லை என்றாலும் ஹிந்து குறிப்பிட்டுள்ளது நம்பகத் தன்மை உடையது என்றாலும்கூட, இது இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஏன் மீண்டும் அபாயகர அச்சுறுத்தல்களைப் பறிமாறிக் கொள்கின்றன, ஏன் இரு நாடுகளின் ஆளும் உயரடுக்குகளின் ஆதரவைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் சமாதான வழிவகைகள் ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொன்றிற்குத் தள்ளாடுகிறது என்பதற்கு விளக்கம் இல்லை. இரு அரசாங்கங்கள் அல்லது இராணுவங்களில் ஒன்று ஒரு சிறு தவறு இழைத்தாலும் அது பரந்த எல்லைப் மோதல்களை குறைந்தப்பட்ச அல்லது முழுப் போராக விரைவில் விரிவாக்கக் கூடும்.

இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே உள்ள பூகோள அரசியல் போட்டி 1947 வகுப்புவாத முறையில் துணைக்கண்டம் ஒரு ஹிந்து இந்தியா, ஒரு முஸ்லிம் பாக்கிஸ்தான் என பிரிவினைக்கு உட்பட்டதில் வேர்களைக் கொண்டுள்ளது. இந்த குருதிகொட்டிய பிரிவினை இந்திய, பாக்கிஸ்தானிய தேசிய முதலாளித்துவங்களால் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் துணையுடன் செயல்படுத்தப்பட்டது. இது பொருளாதார வளர்ச்சியை முடக்கி, வகுப்புவாதத்தைத் தூண்டுவதுடன் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கும் வசதியளிக்கிறது.

இதைத்தொடர்ந்த ஆறரை தசாப்தங்களில் இரு நாடுகளின் ஆளும் உயரடுக்குகளும் தங்கள் நாடுகளுக்கு இடைப்பட்ட போட்டி, விரோதப் போக்கை நிலைநிறுத்திக்கொள்ள பரந்த பொருள்சார் மற்றும் அரசியல் நலன்களை வளர்த்துள்ளன. இதனை பெரும் வறிய நிலை, பொருளாதாரப் பாதுகாப்பின்மையால் விளைந்த சமூகச் சீற்றம் மற்றும் வெறுப்பு என்பவற்றை பிற்போக்குத்தன தேசிய, வகுப்புவாத வழிவகைகளில் திசைதிருப்பும் கருவியாக உள்நாட்டு முதலாளித்துவம் பயன்படுத்துவதும் அடங்கும்.

21ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இருந்து ஒரு சக்திவாய்ந்த ஸ்திரத்தை குலைக்கும் காரணி இந்த நச்சுக் கலவையில் சேர்க்கப்பட்டுள்ளது. அது ஆசியாவில் தன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலாகும்.

சீனாவின் எழுச்சியைக் கட்டுப்படுத்தி, அகற்றுவதற்கான அமெரிக்க உந்துதலில் இருக்கும் இந்தியாவை முக்கிய கருவியாகப் பயன்படுத்துதல் என்பது தெற்கு ஆசியாவின் மூலோபாயச் சமநிலையை மாற்றிவிட்டது. இது இந்திய பாக்கிஸ்தான் போட்டியை சீன அமெரிக்கப் போட்டியுடன் பிணைத்துவிட்டது. இதனால் ஒவ்வொன்றிலும் ஒரு வெடிப்புகரமான புதிய பரிமாணம் சேர்க்கப்பட்டுவிட்டது.

1960களின் நடுப்பகுதியில் இருந்து இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் இணைந்திருந்த நிலையில் பனிப்போர்க்காலத்தில் அமெரிக்க நலன்களுக்கு உதவியநிலையில் பாக்கிஸ்தான் அமெரிக்கா, சீனா என்னும் இரண்டு தூண்களை நம்பியிருந்தது. தற்போதைய அமெரிக்காவின் “ஆசியாவில் முன்னிலை” என்பது பாக்கிஸ்தானை ஐயத்திற்கு இடமின்றி குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. இந்தியா மீது அமெரிக்கா ஆதரவைக் கொட்டுவது மட்டுமில்லாமல், பாக்கிஸ்தானுக்கு எதிராக புது டெல்லியின் கரங்களையும் வலுப்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத் சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் வாஷிங்டனுடனான உறவுகளுக்குக் குறுக்கே நிற்கின்றன. இந்த உறவை பாக்கிஸ்தானிய முதலாளித்துவம் எப்பொழுதும் அதன் வர்க்க ஆட்சிக்கு அரண் என்றுதான் கருதியிருந்தது.

இந்தியா “ஒர் உலகச் சக்தியாவதற்குத்” தான் “உதவத்தயார்” என்பதை அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதில் இந்தியப் பெருங்கடலில் இந்தியக் கடல்படைச் சக்தி முன்னேற்றுவிப்பது ஒரு ஆரம்பம் ஆகும். உலகின் அணுச்சக்தி ஒழுங்குபடுத்தல் அமைப்பில் இந்தியாவிற்கு ஒரு சிறப்புத் தகுதிக்கு அது பேச்சுக்களை நடத்தியுள்ளது. இந்தியாவோ அணுவாயுதபரவா உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்றாலும் அணுவாயுதம் கொண்டுள்ள ஒரு நாடாகும். இத்தகுதி, பாக்கிஸ்தானுக்கு மறுக்கப்பட்டது. இந்தியாவை பொதுத்தேவை தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு அணுச்சக்தி எரிபொருள் பெறும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது. இதனால் தனது சொந்த அணுத் திட்டம் மற்றும் ஆயுதங்களின் வளர்ச்சியில் இந்தியா கவனத்தை காட்ட முடியும். பாக்கிஸ்தான் தன் அணுவாயுதக் கிடங்கினை வலுப்படுத்தும் அவசரத் திட்டத்தில் ஈடுபட்ட வகையில் இதை எதிர்கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

பாக்கிஸ்தானின் வடக்கு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் மூலோபாயப் பங்காளித்தனத்தை வளர்க்கவும் அமெரிக்க இந்தியாவிற்கு ஊக்கமளித்துள்ளது. மத்திய ஆசியாவில் அமெரிக்க அதிகாரத்தை நிலைநிறுத்த அந்த நாட்டை ஆக்கிரமித்தபின் இது நடந்துள்ளது. அமெரிக்கா இப்பொழுது ஆப்கானிஸ்தானத்தில் தன் படையின் வலிமையைக் குறைக்கத் திட்டமிட்டு, காபூலில் இருக்கும் கைப்பாவை அரசாங்கத்தை மறுசீரமைக்கையில், புது தில்லி, மற்றும் இஸ்லாமாபாத் இரண்டுமே அங்கு செல்வாக்கைப் பெறப் போட்டியிடுகின்றன.

தற்போதைய இந்திய-பாக்கிஸ்தானிய எல்லை மோதல்களின் உடனடி விளைவு எப்படி இருந்தாலும், தெற்கு ஆசியா மற்றும் சர்வதேசரீதியாக தொழிலாளர்கள் அடிப்படை அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். தன் பொருளாதாரச் சரிவை ஈடுகட்ட இராணுவ சக்தி மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கோண்டுள்ள முயற்சிகள் உலகெங்கிலும் பூகோள அரசியல் மோதல்கள் மற்றும் அழுத்தங்களை விரிவாக்கி, பரந்த இராணுவ மோதல்களுக்கான விதைகளையும் தூவுகிறது. உலக முதலாளித்துவத்தின் அமைப்புமுறையில் இருக்கும் நெருக்கடி கடந்த நூற்றாண்டின் அளவிலான இராணுவ மோதல்களில் முடிவடையாமல் இருக்கவேண்டும் என்றால், சோசலிச சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க, உலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டு அணிதிரளவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com