Friday, January 18, 2013

எதிர்த்தரப்புப் படைகள் முன்னேறுகையில் பிரான்ஸ் தொடர்ந்து மாலிமீது குண்டு பொழிகிறது.By Alex Lantier

பிரெஞ்சுத் தரைப்படைகள், காப்டன் அமடௌ ஹயா சனோகாவின் இராணுவ ஆட்சிக்குழுவை, இஸ்லாமியவாத வடக்கு மாலியில் தளம் கொண்டிருக்கும் எழுச்சியாளர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக நாட்டில் நுழைகையில், நேற்று முன்தினம் பிரெஞ்சுப் போர் விமானங்கள் மாலி மீது குண்டுத்தாக்குதல்களை நடத்தின.


வடமேற்கு ஆபிரிக்காவின் வரைபடம்

செவ்வாய் காலையில் பிரெஞ்சு போர் விமானங்கள் மத்திய மாலியில் உள்ள டியபலியின் மீது குண்டுகளைப் போட்டன. அப்பகுதியை எழுச்சியாளர்கள் திங்களன்று கைப்பற்றியிருந்தனர். நகரத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டது உறுதியாகிவிட்டது; நேற்று மாலை வரை எதிர்த்தரப்பினர் இந்நகரத்தை தங்கள் வசம் வைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. டியபலி தலைநகரான பமாகோவில் இருந்து வடக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. செகௌவில் இருந்து கிட்டத்தட்ட 150 கி.மீ. தொலைவு ஆகும்.

டியபலியை எழுச்சியாளர்கள் கைப்பற்றியது மாலிய இராணுவ அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது. அருகில் இருக்கும் நியோனோவில் ஒரு தளபதி, எழுச்சியாளர்கள் டியபலியைக் கைப்பற்ற மாட்டார்கள் என உறுதியாகக் கணித்தவர், அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் டியபலியில் உள்ள இராணுவ நிலையத்தினர் படுகொலைக்கு உட்பட்டிருக்கலாம் என்று தான் அஞ்சுவதாகக் கூறினார். “உண்மையில் நாங்கள் அச்சுறுத்தப்படுகிறோம் என்பதை உணர்கிறோம்.”

மாலிய இராணுவம் தொடர்ந்து சரிகிறது. 130,000 மக்கள் வசிக்கும் மாலியின் ஐந்தாம் பெரிய நகரமான செகௌவில் இருந்து பிரெஞ்சுக் குடிமக்கள் வெளியேற்றப்படுகின்றனர்; எழுச்சியாளர்கள் அங்கும் போராளிக்குழுக்களை அனுப்பியுள்ளனர் என்று வந்துள்ள தகவல்களுக்கு இடையே.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரான்சின் பாதுகாப்பு மந்திரி Jean-Yves Le Drian எழுச்சியாளர்களின் தென்புறத் தாக்குதலின் கிழக்குக் கூறுபாட்டை பிரெஞ்சு குண்டுவீச்சு நிறுத்தியுள்ளது என்றாலும், டியபலியின் மேற்குப் பகுதியில் ஆபத்து “உறுதியாக உள்ளது”, “தெற்கே வரும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது” என்றார்.

எழுச்சியாளர்கள் முக்கிய செவரே விமான தளம் மீது ஒரு கிளர்ச்சி தாக்குதலை நிறுத்த பிரான்சினால் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டபோதும் பிரெஞ்சு ஆதரவு மாலிப் படைகளால் தொடக்கத்தில் கொன்னாவை மீட்க இயலவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆரம்ப அறிக்கைகள் இக்குண்டுவீச்சில் பெரும்பாலும் சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்று கூறுகின்றன.

இஸ்லாமியவாத எதிர்த்தரப்பு தலைவர் அன்சார் டைன் மாலிவெப் இடம் வடக்கு மாலியில் இருக்கும் நகரங்களை விட்டு இஸ்லாமியப் படைகள் நீங்குகின்றன என்றார்; வார இறுதியில் பிரெஞ்சுப் போர் விமானங்கள் இப்பகுதிகளில் குண்டுவீச்சை நடத்தின. சமீபத்திய தகவல்கள் காவோவில் 60 பேர் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிடுகின்றன.

மாலியில் தன்னுடைய ஆயுதப் படைகளை தற்போதைய 800ல் இருந்து 2,500க்கு மும்மடங்காக்கும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இவற்றில் கிட்டத்தட்ட 500 தரைப்படையினர், 40 கவச வாகனங்கள் பமாகோவில், செவரே விமான நிலையத்தை பாதுகாக்கும் ஒரு சில டஜன் துருப்பினர் மற்றும் சிறப்புப் படைப் பிரிவினர் ஆகியோர் அடங்குவர்.

பல மேற்கு ஆபிரிக்க நாடுகள் பிரான்சின் ஆதரவு பெற்ற ஆபிரிக்க படைக்கு மாலியில் துருப்புக்களை அளிக்க உறுதிமொழி கொடுத்துள்ளன. இதில் நைஜர், பர்க்கினா பாசோ, செனேகல், டோகோவில் இருந்து 500 துருப்புக்கள், பெனினில் இருந்து 300 துருப்பினர் மற்றும் நைஜீரியாவில் இருந்து 600 முதல் 900 துருப்புக்கள் ஆகியவை அடங்கும். ஆனால் இப்படைகள் இன்னும் வந்து சேரவில்லை.

நேற்று பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அபுதாபியில் இருக்கும் பிரெஞ்சு இராணுவத் தளம் ஒன்றிற்கு விஜயம் செய்து, பிரான்சின் ராபால் ஜெட் விற்பனைக்காக செல்வாக்கைப் பயன்படுத்தினார். இதுவும் மாலிப் போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாலியின் பிரான்ஸின் இலக்குகளைப் பற்றி எடுத்துரைத்த பேச்சு ஒன்றில் அவர் கூறினார்: “இந்தச் செயற்பாட்டில் மூன்று இலக்குகள் உள்ளன: முதலாவது, பமாகோ வரை நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள முற்படும் பயங்கரவாத ஆக்கிரமிப்பை நிறுத்துதல்; பின் பமாகோவைக் காத்தல், அங்கு பல ஆயிரம் குடிமக்கள் உள்ளனர்; இறுதியாக மாலி மீண்டும் தன்னுடைய நிலப்பகுதியை மீட்க அனுமதித்தல்; இப்பணி ஆபிரிக்க படைக்குக் கொடுக்கப்படும்; அதற்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம், விரைவில் இப்பணியை அது நிறைவேற்றும்.”

பிரான்சினுடைய ரபால் ஜெட்டுக்களின் அழிக்கும் திறன்களை நிரூபிக்க அது மாலியில் பயனபடுத்தப்படுவது எப்படி கணிசமாக செயற்பாடு என்ற உண்மையை ஹாலண்ட் வெற்றுத்தனமாகக் குறிப்பிட்டார். பிரான்சின் “விதிவிலக்கான” முறையில் மாலியில் நிலைப்பாடு குறித்துப் பாராட்டிய அவர், ஒரு ரபால் விமானியிடம், “உங்களுடைய இரட்டைப் பணிக்காக நன்றி—இரண்டுமே செயற்பாடுகளைக் கொண்டவை மற்றும் வணிகத் தொடர்பு கொண்டவை என கூறவேண்டும். இதற்கு நன்றி.” என்றார்.

மாலியில் நடக்கும் இப்போர் மிருகத்தனமான ஏகாதிபத்தியப் போர் ஆகும்; அதன் முன்னாள் மேற்கு ஆபிரிக்க காலனித்துவ பேரரசின் மையத்தானத்தில் இருக்கும் இருப்புக்கள் செழித்த பகுதியின் இதயத்தானத்தில் இது நடக்கிறது. பிரான்ஸ் இதற்கான நியாயங்களை இழிந்த முறையில் முன்வைக்கிறது—இப்போர் “ஜனநாயகத்திகாக”, மாலியின் “நிலப்பகுதி இறைமையை” மீட்க, “பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிட” என்ற, இத்தகைய சொற்றொடர்கள் தெளிவற்றவை எனக்கூறக்கூடிய வகையில் முரண்பாடுகள் நிறைந்தவையாக உள்ளன.

“ஜனநாயகத்திற்காக” போர் செய்கிறோம் என்று கூறுகையில், பிரான்ஸ் சனோகோ இராணுவ ஆட்சிக் குழுவிற்கு ஆதரவு கொடுப்பதற்காக மாலிமீது படையெடுத்துள்ளது. ஏகாதிபத்திய சக்திகள் கடந்த மார்ச் மாதம் சனோகோ அதிகாரத்தைக் கைப்பற்றியது குறித்து தீவிரமாகக் குறைகூறின; ஒரு குறுகிய காலத்திற்கு அவருடைய அரசாங்கத்திற்கு, மேற்கு ஆபிரிக்க அரசுகளின் பொருளாதார சமூகம் (Economic Community of West African States -ECOWAS) என்னும் அமைப்பின் மூலம் பொருளாதாரத் தடை விதிக்கவும் உதவியது; அது அவரை அதிகாரத்தில் இருந்து அகற்றும் முயற்சி ஆகும்.

சர்வதேச சட்டத்தை மீறி இப்போர் நடைபெறுகிறது. பாரிஸ் நடத்தும் போருக்கு சட்டபூர்வ அடிப்படையான ஐ.நா. பதுகாப்புக் குழுத் தீர்மானம் 2085 இசைவு கொடுக்கவில்லை. ஏகாதிபத்திய சக்திகளின் அழுத்தத்தால் இயற்றப்பட்ட தீர்மானம், “மாலியில் ஆபிரிக்க தலைமையிலான சர்வதேச ஆதரவுப் பணி நிலைப்பாடு கொள்ள வேண்டும்” என்று ஒப்புதல் கொடுக்கிறது. ஆனால் ஆபிரிக்கர்களின் தலைமையில் போர் நடக்கவில்லை; பிரெஞ்சுத் தலைமையில் நடக்கிறது; இதன் துணை ஆபிரிக்கப் படைகள் இன்னும் வந்து சேரவில்லை.

மாலியின் நில இறைமையை பொறுத்தவரை, 2011ம் ஆண்டு லிபியாவில் கேர்னல் முயம்மர் கடாபிக்கு எதிரான போரை ஒட்டி அதைப் பெரிதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது நேட்டோதான். வடக்கு மாலி, கிட்டத்தட்ட டெக்சாஸின் நிலப்பரப்பைக் கொண்டது, பெரும்பாலும் மலைகளையும், சகாரா பாலைவனத்தின் பிரிவுகளையும் கொண்டது; இது நீண்டகாலமாக பமாகோவில் இருக்கும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து பிரிந்த முறையில் தன்னாட்சியைக் கொண்டது. இப்பொழுது அது துவரெக் சிப்பாய்கள் என்று கடாபியின் தோல்விக்குப் பின் தப்பிவந்தவர்கள் மற்றும் அல் குவேடாவுடன் பிணைந்த கூறுபாடுகளைக் கொண்ட ஜிகதிப் போராளிகளைக் கொண்ட கூட்டணியின் நடவடிக்கைத் தளமாகும்; பிந்தையவை லிபியாவிற்குள் நேட்டோவின் முக்கிய பினாமிப் படைகளாக செயல்பட்டன.

மேலும் கடாபி ஆட்சியின் கைவிடப்பட்ட ஆயுதக் கிடங்குகளில் இருந்து எடுத்த ஆயுதங்களும் வடக்கு மாலியில் வெள்ளமென வந்துள்ளன. பிரான்ஸ் 24க்கு துனிசிய ஜனாதிபதி Moncerf Marzouki கூறியுள்ளபடி துனிசியா மற்றும் அல்ஜீரியா ஆகியவை “லிபிய ஆயுதங்களின் தாழ்வாரம் போல்” செயல்பட்டு வருகின்றன; இஸ்லாமியவாதக் குழுக்கள் ஆயுதங்களை வடக்கு மாலிக்கு அனுப்புகையில். “இப்போர் ஒரு வலை போன்றது, துனிசியா உட்பட அனைத்து நாடுகளின் பாதுகாப்பையும் அச்சுறுத்தும்” என்றார் அவர்.

ஏட்டளவில் ஹாலண்ட்டின் திட்டம் தெற்கு மாலியை பிரெஞ்சுத் துருப்புக்கள் காப்பதற்கு ஒப்பாகும்; ஒரு சிறிய படை, அதிக ஆயுதமில்லாத 3000 ஆபிரிக்க சிப்பாய்களை கொண்டது, வடக்கு மாலியின் பரந்த பாலைவனப் பகுதிகளில் ரோந்து வருகின்றது; இது அதிக ஆயுதங்கள் கொண்ட கெரில்லாக்களை அழிக்கும் முயற்சி ஆகும்; வடக்கு மாலியை பமாகோவின் கட்டுப்பாட்டிற்குள் மீட்கும் முயற்சியும் ஆகும்.

அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் இத்திட்டம் குறித்துப் பெரிதும் அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. பெயரிட விரும்பாத அமெரிக்க ஆதாரம் ஒன்று ராய்ட்டர்ஸிடம் கூறியது: “பிரான்ஸ் இறுதியில் எதைச் சாதிக்க விரும்புகிறது என எனக்குத் தெரியவில்லை. அவர்களின் நோக்கம் என்ன? ஆப்கானிஸ்தானில் எங்கள் ஆரம்ப நடவடிக்கையைத்தான் இது எனக்கு நினைவுபடுத்துகிறது. வான் தாக்குதல்கள் சிறந்தவை. ஆனால் விரைவில் நீங்கள் எளிய இலக்குகளிடம் இருந்து அகன்றுவிடுவீர்கள். பின் என்ன செய்வீர்கள்? அவர்கள் மலைகள் மீது சென்றுவிட்டால் என்ன செய்வீர்கள்?’

அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா பிரெஞ்சுப் போரை நியாயப்படுத்தும் வகையில், அதை “பயங்கரவாதத்தின் மீதான போரின்” ஒரு பகுதி என்றார். “நாங்கள் எப்போதும் அல் குவேடா செயற்பாட்டு தளம் ஒன்றை நிறுவுவதையிட்டு கவலைப்படுகிறோம். அமெரிக்கா, ஐரோப்பா மீது அவர்கள் தாக்குதல் நடத்த உடனடித் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், இறுதியில் அதுதான் அவர்களுடைய இலக்காக இன்னமும் உள்ளது.”

இது ஒரு இழிந்த பொய் ஆகும். சிரியாவில் அல் குவேடாவுடன் பிணைந்த அல் நுஸ்ராவுடன் அமெரிக்க நெருக்கமாக ஒத்துழைப்பது நன்கு அறியப்பட்டுள்ளது; அதேபோல்தான் லிபியாவிலும் நடைபெற்றது. லிபியாவில் அல்குவேடா பிணைப்புடைய செயலர்கள் அப்தெல்ஹகிம் பெல்ஹாட்ஜ் மற்றும் அபு சுபியன் பின் குமு போன்றோருக்கு ஒத்துழைப்புக் கொடுக்கையில், அமெரிக்க அதிகாரிகள் பானெட்டாவை நேரடியாக முரண்படுத்திய வகையில்தான் “உள்ளூர்” அல் குவேடா குழுக்களை சித்தரித்தனர்.

ஒரு அதிகாரி நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்: “வெளியில் இருந்து வரும் அல்குவேடா ஊடுருவல் பற்றித்தான் நாங்கள் உள்ளூரில் இருப்பவற்றைவிடக் கவலை கொண்டுள்ளோம். இவற்றுள் பெரும்பாலானவை உள்ளூர் செயற்பட்டியலைக் கொண்டுள்ளன; எனவே மேற்கிற்கு ஒரு அச்சுறுத்தலை அளிக்கின்றன எனக் கூறுவதற்கு இல்லை.”

ஆனாலும் பிரான்சின் நட்புநாடுகள் போருக்கு உதவுகின்றன. அமெரிக்கா, உளவுத்துறை உதவியை கொடுக்கிறது. பிரித்தானியா பிரெஞ்சுப் போர் முயற்சிக்குப் போக்குவரத்து விமானங்களைக் கொடுக்கிறது. ஜேர்மனிய அரசாங்கம் புதன் அன்று காபினெட் கூட்டத்தில் போருக்கு ஆதரவு குறித்த தன் திட்டத்தை விவாதிக்கும். ஜேர்மனிய செய்தி ஊடக அமைப்பு பேர்லின் நான்கு Transall போக்குவரத்து விமானங்களையும் ஒரு ஏர்பஸ்ஸையும் ECOWAS துருப்புக்கள் பயணிக்க அனுப்பும் திட்டத்தைக் கொண்டுள்ளது என அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com