Friday, January 11, 2013

சூடுபிடிக்கிறது பிரதம நீதியரசர் மீதான விவாதம் மாலையில் வாக்கெடுப்பு!

வாத பிரதிவாதங்களை தொடர்ந்து இன்று 6.30க்கு வாக்கெடுப்பு. நடை பெறவுள்ளது. முன்னதாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்த பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று நிராகரித்திருந்தார்.


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவுக் குழுவின் அறிக்கை கிடைத்திருக்காவிட்டால் அது குறித்து கட்சித் தலைவர் கூட்டத்தில் வினவியிருக்க வேண்டும் என்று தெரிவித்த சபாநாயகர் விவாதத்தை ஒத்திவைக்குமளவிற்கு போதுமான அளவு ஆதாரங்கள் கிடையாது என தெரிவித்தார்.

இதனடிப்படையில் தெரிவுக் குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட முன்னர் எதிர்க் கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைக்க ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரன்பாடு ஏற்பட்டதால் சபையில் குழப்பநிலை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

விவாதத்தை ஒத்திவைக்க வேண்டுமென எதிர்த்தரப்பு எம்.பிக்கள் கோரினர். பாராளுமன்ற நிலையியற் கட்டளைப்படி அறிக்கை சமர்ப்பித்த நாளிலிருந்து ஒரு மாத காலத்தின் பின் விவாதம் நடத்த முடியும் என்று தெரிவித்த ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்  விவாதம் நடத்தப்படுவதை தடுக்கவே எதிர்க்கட்சி இவ்வாறு கேள்வி எழுப்புவதாகக் குற்றம் சாட்டினர். 


சகல தரப்புக்களது வாதங்களையும் செவிமடுத்த சபாநாயகர் டிசம்பர் 8 ஆம் திகதி தெரிவுக் குழு தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் இவற்றின் பிரதிகளை எடுத்துச் சென்றதாக அறிந்தேன். நிலையியற் கட்டளையின்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் அது குறித்து விவாதிக்க முடியும் எனவும் அதன்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனது தீர்ப்பை அறிவித்தார்.

இது தொடர்பில் எதிர்க் கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்கவின் கருத்து 

தெரிவுக் குழுவின் அறிக்கை டிசம்பர் 17 ஆம் திகதி தான் அச்சிடப்பட்டது. இந்த அறிக்கை ஜனவரி 8 ஆம் திகதி தான் எம்.பிக்களுக்கு கிடைத்தது. குற்றப் பிரேரணை குறித்து ஆராய போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். எனவே இதற்காக ஒரு மாத காலம் வழங்குமாறு கோருவதுடன் இந்த அறிக்கை இன்னும்  பல எம்.பிக்களுக்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்

எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து 

பாராளுமன்றம் உயர்வானதெனின் அதனை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். தெரிவுக் குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பித்து ஒரு மாதத்தின் பின்னரே அது குறித்து விவாதிக்க முடியும். என்பதுடன் பாராளுமன்றத்தில் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படும்வரை இந்த நடவடிக்கை பூரணமாகாது என்பதுடன் சிராணி மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யவே சபாநாயகர் தெரிவுக் குழுவை நியமித்தார். எனவே சகல குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை செய்வது தெரிவுக் குழுவின் பொறுப்பாகும். ஆனால் 5 குற்றச் சாட்டுகள் குறித்தே விசாரிக்கப்பட்டுள்ளதால் இந்த அறிக்கை முழுமையடையவில்லை எனக்குறிப்பிட்டார்.

சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா


குற்றப் பிரேரணை குறித்து விவாதம் நடத்துவதற்கு திகதி நிர்ணயிக்க இரு தடவைகள் கட்சித் தலைவர் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னரே விவாதம் நடத்த திகதி குறிக்கப்பட்டது. 3 நாட்கள் விவாதம் நடத்த வேண்டும் என்றே ஐ. தே. க. கோரியது எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவுக் குழுவின் அறிக்கை கிடைக்காதது குறித்தே, ஒரு மாத காலஅவகாசம் குறித்தோ எதிர்க் கட்சி சுட்டிக்காட்டவில்லை. எனக்குறிப்பிட்டார்.

திஸ்ஸ அத்தநாயக்க 
பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் மேசை மேலே அறிக்கை வைக்கப்பட்டு கிடைக்க வேண்டும் என்பதாகும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளுக்கு  8 ஆம் திகதியே அறிக்கை கிடைத்தது எனக்குறிப்பிட்டார்.

ஜோசப் மைக்கல் பெரேரா 

தெரிவுக் குழு தனது பணியை சரியாக மேற்கொண்டதா என அறிந்த பின்னரே அதனை ஆதரிப்பதா எதிர்ப்பதா என எமக்கு முடிவு செய்ய முடியும். அறிக்கையை ஆராய எம்.பி. களுக்கு ஒரு மாதகாலம் வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்திற்கு மேலாக சென்று நீதிமன்றமாகவே பாராளுமன்றம் செயற்படுகிறது.

இவையனைத்தையும்  பொறுமையாக செவிமடுத்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இது குறித்து முடிவு செய்வதற்கு 10 நிமிட நேரம் பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததுடன் தொடர்ந்து பேரணை மீது விவாதம் நடைபெறுகிறது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com