Friday, November 23, 2012

இதோ பார் நான் யாரென.. இலங்கை புலனாய்வுத் துறையை அதிர வைத்த அறிவிப்பாளன்.

எந்தப்பொந்துக்குள் எந்தப்பாம்பு இருக்கின்றதென யாருக்கு தெரியும் என்பது தற்போது எம்மவரிடையே அதிகமாக பேசப்படும் பழமொழி அல்லது வாக்கியம். இந்த வாக்கியம் தற்போது நம்மவர்களால் பேசப்படுவதற்கு காரணம் மே 17 இன் பின்னர் இடம்பெற்ற பல்டியடிப்புகள். இந்த பல்டியடிப்புக்களைப் பார்த்து நமது மக்கள் அதிர்ந்து நிற்கின்ற நிலையில் தமிழ் அறிப்பாளர் ஒருவர் இலங்கை புலனாய்வுத்துறையையே அதிர வைத்திருக்கின்றார்.

இந்த அறிவிப்பாளர் புலம்பெயர் நாடுகளில் ஒலிபரப்பான வானொலிகளிலும் சில தொலைக்காட்சிகளிலும் பெரும் புரட்சிப்புயலாக செயற்பட்டவர். மக்களென்றால் புலிகள் , புலிகளென்றால் மக்கள். சிவபுராணம் எல்லாம் பண்டைய புராணம் பாடினால் பாடவேண்டும் பிரபாகரன் புராணம் என்றெல்லாம் சொன்னவர். இப்படியானவர்களின் முழக்கத்தை கேட்ட , பார்த்த பிரபாகனும் வன்னி தனது பிடியில் உள்ளது போன்று புலம்பெயர் தேசமும் தனது சகாக்களின் பிடியிலே உள்ளது எனவும் இவர்களெல்லாம் தனது நியாய பக்தர்கள் என நினைத்து கொண்டிருந்தார்.. இனி விடயத்திற்கு வருவோம்..

மேற்படி அறிவிப்பாளர் ஜேர்மன் , பிராண்சிலிருந்து வெளிவந்த புலி ஆதரவு ஊடகங்களில் அறிவிப்பாளராக இருந்தார். மக்களுக்கும் இவரது பேச்சைக் கேட்பதில் நல்ல பிரியம். அறிவிப்பாளர் என்றால் இப்படியெல்லோ இருக்கவேண்டும் என தங்களிடம் உள்ள விடயங்களையும் ரெலிபோண் அடித்து இவரிடம் சொல்வதும் வழக்கம்.

அறிவிப்பாளருக்கும் வானொலி உரிமையாளருக்கும் உரசல் ஏற்பட்டு விட்டது. உடனடியாக தனியாக வானொலி ஒன்றை ஆரம்பிக்க தயாரானார். ஏற்பாடுகள் யாவும் அலாதியாக இடம்பெற்றது. யாவரும் எங்கிருந்து இவ்வளவு பணம் என்றும் தங்களை குடைந்து கொண்டனர். சிலர் புலிகளின் ஆதரவாளர்தானே அவர்கள் கொடுத்திருப்பார்கள் என்று ஊகித்துக் கொண்டனர். சிலர் அவரிடம் நேரடியாக கேட்டபோது மறுக்கவில்லை கொடுப்புக்குள் ஒரு சிரிப்பு .

புதிய வானொலி கதையும் அதை ஆரம்பிக்க இருப்பவர் யாரென்ற கதையும் இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு எட்டியது. உடனடியாக குறித்த வானொலிக்கு அனுமதி வழங்குகின்ற திணைக்களத்திற்கு உத்தியோக பூர்வமாக கடிதம் ஒன்றை எழுதினார்கள்.

அக்கடிதத்தில் குறிப்பிட்ட ஊடகவியலாளர், ஓர் தீவிர புலி ஆதரவாளர், கடந்த காலத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வந்தவர், இவருக்கு வானொலி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் பட்சத்சத்தில் தொடர்ந்தும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பார். எனவே இவருக்கு வானொலி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டால் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை தெரிவிக்கின்றோம் என எழுதப்பட்டது. தூதுவராலய மட்டத்திலிருந்து வந்த கடிதத்தை பலிசீலித்த திணைக்களம் அறிவிப்பாளருக்கு ஒரே கடிதத்தில் வானொலி அனுமதிப்பத்திரம் வழங்கமுடியாது என ஒரிரு வார்த்தைகளில் எழுதி பைலை மூடிவிட்டது.

நம்ம ஆள் சும்மா இருப்பாரா? தனது மேலிடத்திற்கு விடயத்தை அறிவித்துள்ளார். அவர்கள் உத்தியோகபூர்வமாக திணைக்களத்தை தொடர்பு கொண்டு அனுமதிப்பத்திரம் மறுக்கப்பட்டதற்கான காரணத்தை கோரியுள்ளனர். ராஜதந்திர தொடர்பு கொள்ளல் அல்லவா உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். இலங்கை புலனாய்வுத்துறையிடமிருந்து கடிதம் வந்த கதை பரிமாறப்பட்டது. கடிதத்தின் பிரதியும் வழங்கப்பட்டதாக என்பது தெரியாது. விடயம் நமது அறிவிப்பாளருக்கு தனது எஜெமானர்களால் சொல்லப்பட்டது.

ஆத்திரமடைந்த அறிவிப்பாளர் தனது இரகசிய கோப்பிலிருந்த முக்கியமான ஆவனங்களில் இரண்டை கொப்பி செய்து கொண்டு நேரடியாக இலங்கை தூதுவராலயத்திற்கு சென்றார். அங்கு இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியை சந்தித்தார். ஐயா நான் யாரென்று உங்களுக்கு தெரியாது, இங்கே பாருங்கள் என இரு கடிதங்களை வழங்கினார். ஒன்று ஏழு வருடங்களுக்கு முன்னர் அறிவிப்பாளர் கனடாவின் புலனாய்வுத்துறையின் ஒற்றர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதற்கான நியமனக் கடிதம் மற்றயது கடைசி மாதக் கொடுப்பனவுக்கான பற்றுக்சீட்டு ஆங்கிலத்தில் பேசீட் என்பார்கள்.

இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரி அதிர்ந்துபோய் கையை கொடுத்தார்.

இவர்கள்தான் தம்மை புலி ஆதரவாளர்கள் என காண்பித்துக்கொண்டு, புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் உள்வீட்டு விடயங்களை வெளிநாட்டு புலனாய்வுத்துறையினருக்கு வழங்கியவர்கள்.

இதை வாசித்தவர்களில் பலருக்கு ஊத்தை சேது என செல்லமாக அழைக்கப்படுகின்ற நடராசா சேதுரூபன் ஞாபகத்திற்கு வரலாம் ஆனால் இவர் அவர் அல்ல.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com