Thursday, November 22, 2012

என்னுடைய ஆதரவாளரை கடத்தியது ஈபிடிபி தான் என்கிறார் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்.

நேற்று அதிகாலை வேலனைப்பகுதியில் நபர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் கடத்தப்பட்ட நபர் தனது தீவிர ஆதரவாளர் எனவும் குறிப்பிடும் முன்னாள் நகர சபை உறுப்பினர் நிசாந்தன் தனது ஆதரவாளரை கடத்தியது ஈபிடிபி அமைப்பே எனத் தெரிவிக்கின்றார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி நகர சபைக்கு தெரிவான அவர் ஈபிடிபியின் உடன் ஏற்படுத்திக்கொண்ட முரண்பாடு காரணமாக கட்சியிலிருந்து விலக்கப்பட்டு தனது மாகாணசபை உறுப்புரிமையையும் இழந்ததுடன் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் நிசாந்தன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.

பகிரங்கமான கண்டன அறிக்கையும் எச்சரிக்கையும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரும் எனது தீவக முக்கிய செயற்பாட்டாளருமான சதாசிவம் யோகேஸ்வரன் (வயது 37) வேலணை வங்களாவடியில் அவரது வீட்டில் வைத்து கறுத்த மூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களினால் நேற்று அதிகாலை 02.45 மணியளவில் கடத்தி செல்லப்பட்டார். இந்த கடத்தல் சம்பவத்திற்கு எனது பகிரங்கமான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் யோகேஸ்வரன் தச்சுவேலை செய்து தனது குடும்பத்தை பார்த்து வந்தாலும் மக்களுக்கு அநீதி செய்யும் அதிகாரிகளையும், அரசியல் சார்ந்தவர்களையும் நேருக்கு நேராக நின்று உடனுக்குடன் கேள்வி கேட்கும் திறமை உள்ளவர் கடந்த காலங்களில் என்னுடன் நின்று பல மக்கள் நலன் சார்ந்த மற்றும் அரசியல் விவகாரங்களிலும் கூடுதலாக செயற்பட்டிருந்தார். அண்மையில் எனது உறவினர் வீடு வேலணையில் தாக்கப்படுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பு யோகேஸ்வரனை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை காரியாலயத்தில் பணி புரியும் ராம் என்பவரால் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தப்பட்டிருந்தார். எனினும் யோகேஜ்வரன் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து போகாமல் தொடர்ந்தும் என்னோடு நின்று வேலைத்திட்டங்களை செய்து வந்தார். தீவகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் ஒன்றினைத் திறப்பதற்கு தீவிரமான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். மேலும் அன்று காலையில் இது கைதா, கடத்தலா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் இது நிச்சயமாக கைதாக இருக்க முடியாது ஏனெனில் கைது செய்வது எனில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் யாப்பில் ஒருவரை கைது செய்வது எனில் எவ்வாறு கைது செய்ய வேண்டும் என தெளிவுபடுத்தி கூறப்பட்டுள்ளது. ஆகவே இது கைதுக்கு மாறாக இருப்பதால் கடத்தலாகத் தான் இருக்கும்.

தற்போது நாட்டில் அவசர காலச்சட்டமோ அல்லது பயங்கரவாத சட்டமோ இல்லாத நிலையில் எதற்காக இவ்வாறு அதிகாலையில் கடத்தப்பட்டார். இது தான் ஜனநாயகமா இலங்கை நாடு முழவதும் அரச கட்டுப்பாட்டில் இருப்பது உண்மை. அதற்காக தமிழ் மக்களுக்கு எதிராக எதையும் செய்யலாம் என நினைப்பது ஜனநாயகமா? ஜனநாயகத்தைப் பற்றி மக்களிடம் தேர்தல் காலத்தில் முழக்கமிடும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே ஒவ்வொரு வருடமும் ஒன்று இரண்டு பேரை கடத்துவதும் ஃ சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதும், பெண்களை கற்பளிப்பதும் தான் உங்களது ஜனநாயகமா? முதலில் உங்கள் கட்சிக்கென்று நிரந்தரமான மக்களுக்கு சாதகமான ஒரு கொள்கையை வகுத்து முடிந்தால் செயற்பட்டும் பாருங்கள் அதைவிடுத்து எவ்வித கொள்கையும், உறுதியும் இல்லாமல் ஆடிக்கொரு கொள்கை அமாவாசைக்கொரு கொள்கை என கூற வேண்டாம். முதலில் இணைந்த வடக்கு கிழக்கு என்றும் பின்னர் மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி என்கிறீர்கள் கட்சி சின்னமான வீணையை அரசிடம் தாரை வார்த்து கொடுத்துவிட்டுவெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம் என்கிறீர்கள் பின்னர் இணக்க அரசியல் என்கிறீர்கள் இப்போது எதுவுமே இல்லை இப்படியான உங்கள் கட்சியா மக்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கப் போகின்றது. இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?

எனவே யோகேஸ்வரனின் கடத்தலுக்கு நேரடியாக சம்பந்தப்பட்டவர்களும் மறைமுறைகமாக சம்பந்தப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரும் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு யோகேஸ்வரனின் விடுதலைக்கு ஆவன செய்ய வேண்டும் இல்லையேல் இன்று உங்களை வடக்கு, கிழக்கிலும் குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதிகளில் மக்கள் ஓரங்கட்டியது மாதிரி விரைவில் தீவகத்தில் இருந்தும் மக்கள் மத்தியில் ஓரங்கட்டி விரட்டியடிக்கும் நிலை உருவாகும். எனவே யோகேஸ்வரனின் கடத்தலில் உங்களுக்கு ஒரு பங்கு இருப்பதாக அறியமுடிகின்றது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைப்பீடம் உடனடியாக நல்ல முடிவொன்னை எடுத்து அவரது குடும்பத்தினருடன் சேர வழிவகுக்குமாறு கேட்டுக் கொள்வதோடு இவ்வாறான கீழ்த்தனமான நாசகார வேலைகளை செய்வதன் மூலம் என்னையோ என்னைச் சார்ந்த கட்சியினரையோ மிரட்டிவிடமுடியாது என்பதனை திட்டவட்டமாக கூறிக்கொள்கின்றேன்.



என்றும் மக்கள் சேவையிலுள்ள

s. நிசாந்தன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com