Sunday, November 4, 2012

1961ல் பாரிஸில் அல்ஜீரியர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் ஒப்புக்கொள்ளுகிறார்!

(By Antoine Lerougetel and Alex Lantier)
பாரிஸில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணிகளான அல்ஜீரிய எதிர்ப்பாளர்களைப் பொலிசார் கொன்ற 51வது ஆண்டு நினைவு நாளன்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியை (PS) சேர்ந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் உண்மையில் படுகொலை நிகழ்ந்தது என்பதைப் பற்றிய முதல் உத்தியோகப்பூர்வ அங்கீகாரத்தை அளித்தார்.

அவர் வெளியிட்ட சுருக்கமான அறிக்கை கூறுகிறது: “அக்டோபர் 17, 1961ல் சுதந்திரத்திற்காக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த அல்ஜீரியர்கள் குருதி கொட்டிய வன்முறை அடக்குமுறை மூலம் கொல்லப்பட்டனர். இந்த உண்மைகளைக் குடியரசு தெளிவாக உணர்கிறது. பெரும் சோகம் நடந்து 51 ஆண்டுகளுக்குப் பின் நான் பாதிக்கப்பட்டவர்களுடைய நினைவிற்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்.”

பிரான்ஸிற்கு எதிராக அல்ஜீரியாவின் சுதந்திரப் போர் நடந்த காலத்தில் இப்படுகொலை நடந்தது; அப்பொழுது FLN எனப்பட்ட அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி பாரிஸில் “முஸ்லிம் அல்ஜீரியர்கள்” மீது அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த சார்ல்ஸ் டு கோல் சுமத்திய ஊரடங்கு உத்தரவிற்கு எதிராக அமைதியான எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தது. கிட்டத்தட்ட 30,000 அல்ஜீரியர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். பாரிஸ் போலிஸ் அதிகாரி மௌரிஸ் பாப்போன் உத்தரவின் பேரில் பொலிசாரால் அவர்கள் தாக்கப்பட்டனர்; இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அவர் பிரான்ஸின் பாசிச விஷி ஆட்சியில் யூதர்களை நாஜி ஜேர்மனிக்கு அனுப்பிவைத்ததில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

தங்கள் குடும்பங்களுடன் அமைதியான எதிர்ப்பில் பங்கு பெற வந்திருந்த ஏராளமான அல்ஜீரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்—சுட்டுக் கொல்லப்பட்டனர், செயின் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டனர் அல்லது அடித்துக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பியவர்கள் அது பகிரங்கமாக்கப்பட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை; ஏனெனில் பொலிசாரின் பழைய ஆவணங்கள் பகிரங்கமாக்கப்படவில்லை. படுகொலையைப் பற்றி La Bataille de Paris (பாரிஸ் போர்) என்ற நூலை எழுதியிருந்த வரலாற்றாளர் Jean-Luc Einodi, இறப்பு எண்ணிக்கை 250 ஆக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளார்; ஆனால் பாப்போனின் அபத்தமான எண்ணிக்கையான 3 பேர் இறந்தனர், 64 பேர் காயமுற்றனர் என்பது இன்னும் பிரெஞ்சு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையாக உள்ளது. (பிரெஞ்சுத் திரைப்படத் தயாரிப்பாளர் அலன் தஸ்மா நிகழ்வு குறித்த உணர்வுபூர்வமான படம் ஒன்றை, October 17, 1961 Nuit noire என்ற பெயரில் 2005ம் ஆண்டில் எடுத்திருந்தார்)

பொலிசார் 11,538 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து Vel D’Hiv சைக்கிள் அரங்கம் உட்பட பாரிஸில் பல இடங்களில் காவலில் வைத்தனர்; அங்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு René Bousquet உத்தரவின் பேரில் பாரிஸ் பொலிசார் ஆயிரக்கணக்கான யூதர்களை நாஜி மரண முகாம்களுக்கு அனுப்புமுன் காவலில் வைத்திருந்தனர்.

இக்கொடூரத்தை சுருக்கமாக ஒப்புக் கொண்ட ஹாலண்டின் முடிவு, அரசியல் இழிந்த தன்மையின் திட்டமிட்ட செயற்பாடு ஆகும். அவருடைய அறிக்கை இறப்பு எண்ணிக்கையைத் துல்லியமாகக் கொடுக்கவும் இல்லை, அக்காலத்திய பொலிஸ் ஆவணங்களை பகிரங்கமாக்கவும் இல்லை; அவை இன்னும் இரகசியமாகத்தான் உள்ளன; அதேபோல் ஏன் பிரெஞ்சு அரசாங்கம் அரை நூற்றாண்டுக் காலம் ஒப்புக்கொள்ள மறுத்தது என்பது குறித்தும் விளக்கவில்லை. இந்த நடவடிக்கை அவருக்கு சற்று “இடது” நம்பகத்தன்மையைக் கொடுக்கும் என்று ஹாலண்ட் நம்புகிறார் போலும்; இதில் அவருக்கு செலவு ஏதும் இல்லை; ஏனெனில் பிரான்சில் தற்பொழுது இருக்கும் அரசியல் அமைப்புகள் ஏதும் குற்றத்திற்கு பொறுப்பு எவரேனும் ஏற்கவேண்டும் எனப் போராடப்போவதும் இல்லை; அதில் சோசலிஸ்ட் கட்சி தன்னை தீவிரமாகத் தொடர்புபடுத்தியிருந்தது.

இதில் எதுவும் அல்ஜீரியாவில் இருந்த ஊழல் மிகுந்த FLN ஆட்சியை—தற்பொழுது பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அருகிலுள்ள மாலியில் தலையிடுவதற்குத் தயார் செய்கிற—ஹாலண்டைப் பாராட்டுவதைத் தடுத்துவிடவில்லை. அல்ஜீரியாவின் பிரதம மந்திரி அப்டெல்மலெக் செல்லல் பிரான்ஸின் “நல்ல நோக்கங்களைப்” புகழ்ந்தார். ஹாலண்டின் அறிக்கை “நிரூபிக்கப்பட்ட உண்மைகளை அங்கீகரிக்கும் வரலாற்றுத் தன்மை கொண்டது” என்று FLN உடைய செய்தித் தொடர்பாளர் கசா ஐசி கூறியுள்ளார்.

ஆனால் மறுபுறத்தில், பிரான்சிற்குள் கோலிசவாத UMP (Union for a Popular Majority) மற்றும் நவ பாசிச தேசிய முன்னணியும் (FN) ஹாலண்டின் செயலைக் கண்டித்துள்ளன. தேசிய சட்டமன்றத்தில் UMP குழுவின் தலைவரான கிறிஸ்டியான் ஜாகோப் பிரான்ஸின் “குடியரசு சார்புடைய சக்திகளை” குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு எதிராக எச்சரித்து, மேலும் கூறினார்: “இந்த அறிக்கை நம் நாட்டின் ஒருங்கிணைப்புத் தன்மைக்கு ஆபத்தானது.”

ஜாகோப்பின் அறிக்கை ஒருவேளை தன்னார்வமற்ற முறையில் 1961 படுகொலை குறித்த எந்த உண்மையான விசாரணையின் வெடிப்புத்தன்மை உடைய பாதிப்பை ஒப்புக்கொள்ளுவது போல் ஆகும்.இப்படுகொலை போருக்குப் பிந்தைய பிரான்சில் பாசிச ஒத்துழைப்பாளர்களின் பங்கிற்கு உதாரணம் ஆகும்; அதுவும் குறிப்பாக பிரான்சின் மிருகத்தனமான காலனித்துவப் போர்கள் இந்தோசீனாவிலும் அல்ஜீரியாவிலும் நடத்தப்பட்டதற்கும், பிரான்சை இன்று ஆளும் அதிகாரிகளுடன் அவை கொண்டுள்ள நேரடித் தொடர்புகள் குறித்தும்.

இதை அவை செய்யும் திறன், எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினிசப் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் இழிந்த பங்கில் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் வளர்ச்சியுற்ற புரட்சிகரப் போராட்டத்தை நோக்குநிலை பிறழச்செய்யும் வகையில் அது முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்தது; முதலாளித்துவ ஆட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்தி, ஒத்துழைப்பாளர்களின் குற்றங்கள் முழுவதும் வெளிவராமல் தடுத்தது.

முன்னாள் விஷி அதிகாரிகள் பின்னர் வலது மற்றும் சமூக ஜனநாயக “இடது” அரசாங்கங்களின் கீழ் உயர்பதவியில் இருந்தனர். அத்தகைய அதிகாரிகளுள் பாப்போன், Bousquet, எல்லாவற்றிற்கும் மேலாக ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் ஆகியோர் இருந்தனர்; மித்திரோன் PS ஐ 1971ல் இருந்து 1995ல் அவர் இறக்கும் வரை வழிநடத்தினார்; மற்ற இருவருடைய நண்பரும் ஆவார். பாப்போன் ஓர் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்தார்; Bousquet இந்தோசீனா வங்கியில் வேலை செய்து, பிரெஞ்சு சமூக ஜனநாயக அரசியல்வாதிகளுக்கு நிதியளிக்க உதவினார்.

Martine Aubry, Ségolène Royal, Lionel Jospin மற்றும் கிட்டத்தட்ட தற்போதைய முழு PS உயர்மட்டத் தலைமையைப் போல், ஹாலண்டும் தன் அரசியல் வாழ்வை மித்திரோனின் கீழ் தொடக்கினார்; அவருடைய மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்டவர்களின் குற்றங்களை மூடி மறைக்க உதவினார்.

இந்த வரலாறு பிரான்சின் “தீவிர இடது” கட்சிகள் என்று அழைக்கப்படுபவற்றையும் குற்றச்சாட்டிற்கு உட்படுத்துகிறது; அவை ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய அரசியல் பின்தோன்றல்கள், NPA என்னும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவை ஆகும்; இக்கட்சி மித்திரோனையும் அவருடைய PS ஐயும் 1968க்குப் பிந்தைய காலத்தில் ஆதரவு கொடுத்திருந்தது.

1943ம் ஆண்டு Order de la Francisque என்ற விருதினால் விஷி ஆட்சியினால் பெருமைப்படுத்தப்பட்டிருந்த மித்திரோன் பின்னர் உள்துறை, நீதித்துறை மந்திரியாக சமூக ஜனநாயக அரசாங்கங்களில் பணியாற்றினார்; அவை 1950களில் அல்ஜீரியப் போரை நடத்தின; அந்த அரசாங்கங்கள் அல்ஜீரிய தேசியப் போராளிகள் கில்லடின் இயந்திரத்தில் கொலைசெய்யப்பட ஒப்புதல் கொடுத்தன. அவர் 1956க்குப் பின் மரணதண்டனை விதிக்கப்பட்ட 45 அல்ஜீரியக் கைதிகளுக்கு கருணை காட்ட மறுத்தார்.

அதே ஆண்டு பாப்போன் அல்ஜீரியாவிலுள்ள கான்ஸ்டன்டைனுக்கு, பிரெஞ்சு ஆட்சிக்கு எதிர்ப்பை நசுக்குவதற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஏராளமான அல்ஜீரியர்களைக் கைது செய்து, அவர்கள் சித்திரவதைக்கு உட்படுதல், கொலை செய்யப்படுதல் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்தார்.

விஷியின் ஆட்சிக்கு ஒத்துழைப்பு மற்றும் அல்ஜீரியப் போரின் போது அவருடைய பங்கு ஆகியவை மித்திரோன் இரு பதவிக் காலங்கள் ஜனாதிபதியாக இருக்கும்போது 1981-1995ல் கவனத்தை ஈர்த்தன. தேர்தலுக்கு மறு ஆண்டில், மித்திரோன் பாராளுமன்றத்தைக் கட்டாயப்படுத்தி 1961ல் டு கோலுலுக்கு எதிரான இராணுவ ஆட்சி மாற்றம் கொண்டுவர முற்பட்ட நான்கு தளபதிகளுக்கு மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்தார்; இது அல்ஜீரியா சுதந்திரம் அடைவதைத் தடுப்பதற்காக நடந்த செயல் ஆகும்.

1986 வரை Bousquet உடடனான நட்பை மித்திரோன் நீடித்திருந்தார்; அந்த ஆண்டு Bousquet இன் கடந்த கால விவரங்கள் வெளிப்படலாயின. பிந்தையவர் 1991ல் குற்றம் சாட்டப்பட்டார்; ஆனால் வழக்கு முடியும் முன் அவர் Christian Didier ஆல் 1993ல் படுகொலை செய்யப்பட்டார், பாப்போனை பொறுத்தவரை—1982ல் முதலில் யூதர்களை கடத்தியதில் இவர் பங்கு பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன—1998 வரை அவர் “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் உடந்தை” என்ற குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

மித்திரோனுக்கு ஒத்துழைப்புக் கொடுத்த கடந்த காலம் பற்றி 1994ல் எழுதிய நூல் Une Jeunesse Francaise( ஒரு பிரெஞ்சு இளைஞர்) ல் Pierre Pean எழுப்பிய வினாவிற்கு ஜோஸ்பன் இழிந்த முறையில் விடையிறுத்தார்: “ஒரு எளிமையான, தெளிவான போக்கை, 1970 கள் மற்றும் 1980 களில் பிரெஞ்சு இடதிற்குத் தலைமை தாங்கியவர் பற்றி நாம் கனவு காண்போம்.”

1997 முதல் 2002 வரை பிரதம மந்திரியாக இருந்த ஜோஸ்பன் 1961 பொலிஸ் படுகொலை குறித்த பொலிஸ் பழைய ஆவணங்களை மூடிவைத்தார்; இவை பாப்போன் விசாரணையில் “தலையீடு செய்யக்கூடும்” என்ற காரணத்தைக் கூறினார். 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாப்போன், உடல்நலக் காரணம் கூறி மூன்று ஆண்டுகளுக்குப் பின், 2002ல் விடுவிக்கப்பட்டார். அவரைப் பற்றி வெளியிடக் காரணமாக இருந்த அறிக்கை அவரை “செயலற்றவர், முற்றிலும் படுக்கையில் கிடப்பவர்” என்று விவரித்தாலும்கூட, பாப்போன் Santé சிறையில் இருந்து தனது காலால் நடந்தே வெளியே வந்தார்.

பாப்போன் குறித்து 2002ல் PS ன் முதன்மைச் செயலராக இருந்த ஹாலண்ட் அறிவித்தார்: “அவர் விடுவிக்கப்பட அவருடைய உடல் நலம் தீர்மானிக்கப்பட்டது காரணம் என்றால், நான் அது பற்றிக் கருத்து ஏதும் கூறத்தயாராக இல்லை.”.

1 comments :

Anonymous ,  November 4, 2012 at 1:46 PM  

Past is over but still he continues the human rights violations in Syria.Libya and in many other. countries..This type of game
will never have and end.Apology is just an eyewash.We have heard about the crocodile tears.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com