Friday, September 7, 2012

118 ஊடகவியலாளர்களுக்கு "அசிதிஸி" ஊடகப்புலமைப் பரிசில்

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த 118 ஊடகவியலாளர்களுக்கு 2012ஆம் ஆண்டுக்கான "அசிதிஸி" ஊடகப்புலமைப் பரிசில் நேற்று வழங்கப்பட்டது. தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகவியலாளர்களுக்கான இந்தப் புலமைச் பரிசிலை வழங்கி வைத்தார்.

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அறிவும் அனுபவமும் நிறைந்த முன்னேற்றகரமான ஊடக வியலாளர்களை உருவாக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இங்கு உரையாற்றுகையில், சிறந்த துறைசார்ந்த திறமையுள்ள இளம் ஊடகவியலாளர்களை நாளை தினம் உருவாக்கும் நோக்குடனே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனைக்கமைய இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது எனவும், ஊடகவியலாளர்களுக்கான இந்தப் புலமைப் பரிசிலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

ஊடக வழிகாட்டல்களை மாத்திரம் வழங்காமல் அவர்களுக்குத் தேவையான துறைகள் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

அமைச்சின்செயலாளர் கலாநிதி சரித்த ஹேரத் இந்த நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தினார். அரச தனியார் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகை வானொலி தொலைக்காட்சி இணையத்தளங்களில் சேவையாற்றும் ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com