Saturday, June 2, 2012

பா.உ பதவியை முடிந்தால் ராஜனாமா செய்து விட்டு வாரும் மாகாணசபையில் போட்டியிடுவோம்.


யோகேஸ்வரனுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சவால்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான பிரசாந்தன் பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார் அச்சவாலில் முடிந்தால் யோகேஸ்வரன் தனது பாராளுமன்ற பதவியை துறந்து விட்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகத் தயாரா? ஏனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்லடி கடற்கரையில் இடம்பெற்ற உதயகீற்று இளைஞர் கழகத்தின் வருடாந்த கலாசார விளையாட்டு விழாவின் போது கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்படி சவாலை விடுத்து அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில் கிழக்கு மாகாண இன வீதாசாரமோ, வாக்காளர் வாக்களிப்பு வீதமோ தெரியாமல் பிதற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழர் தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையாக வந்து ஆட்சி அமைக்க முடியுமா என்று கூடத் தெரியாமல் சிறு பிள்ளை வேளாண்மை செய்வது போல் கருத்து வெளியிடுவது வெட்கப்படக்கூடிய விடயமாகும்.

சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துவமாக எடுத்த முடிவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணம் என்பதை மறந்து ஆட்டம் போடும் இவர்கள் எடுத்த வாக்குகளுக்கு மக்களுக்குத்தான் நல்லது செய்யாது விட்டாலும் மட்டக்களப்பு பிரதிநிகளாக இருந்து கொண்டு கிழக்கின் வாக்களிப்பு நிலமை தெரியாது மக்களை ஏமாற்ற முற்படுகின்றது மீண்டும் சந்தேகத்தை தருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 15,000 மக்களுக்கு மேல் கலந்து கொண்ட கிழக்கில் மிக பிரமாண்டமான தேசிய மாகாநாட்டினை நடத்தியிருந்தது. அதில் யாரையும் குறை கூறவோ யார் பக்கமும் பழியைப் போடவோ முற்படவில்லை. மக்களை ஏமாற்றியும் அழைத்து வரவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கையின் பின்னாலும் தூர தரிசன செயற்பாடுகளின் பின்னாலும் அணி திரண்ட மக்கள் அவர்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவர்.

ஆனால் வேறு மாவட்டங்களிலிருந்து பஸ் வண்டிகளில் ஏற்றிவந்து மாகாநாடு நடாத்தி விட்டு மக்கள் எல்லாம் எங்கள் பக்கம் நிற்கின்றார்கள் என்று தம்பட்டம் அடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் 14வது மாநாட்டிற்கு மட்டக்களப்பு மக்கள் பெருமளவு கலந்து கொள்ளாததால் தமது தோல்வியை மறைப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீது வசைபாடுவது தமிழ் தேசிய கூட்டடைப்பின் அநாகரிகமான, உண்மைக்கு புறம்பான செயலாகும்.

தமது கட்சிக்குள் இருக்கும் உட்பிணக்குகளை கூட தீர்த்துக்கொள்ள வழி தெரியாதவர்கள் கூறும் போலியான வார்த்தைகளின் உண்மைகளை வெகு விரைவில் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

கிழக்கு தமிழருக்கு இருக்கின்ற மாகாணசபை முறைமையினையும் இல்லாதொழித்து தமிழ் மக்களை நட்டாற்றில் அரசியல் அநாதைகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமக்கு கைபோனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுணம் பிழைக்க வேண்டும் என்ற வகையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றி நினைக்காது தமது அரசியலை மாத்திரம் மையமாக வைத்து செயற்படுகின்றனர்.

இவர்களின் போலி முகத்திரைகளை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்று கல்லடி கடற்கரையில் இடம்பெற்ற உதயகீற்று இளைஞர் கழகத்தின் வருடாந்த கலாசார விளையாட்டு விழாவின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com