Sunday, November 27, 2011

ஐ.தே.க.வின் 'தேசிய எதிர்ப்பு' போராட்டத்தில் மனோ பங்கேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியினால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படவுள்ள 'தேசிய எதிர்ப்பு' போராட்டத்தில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி பங்குகொள்வதற்குத் தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருடனான கலந்துரையாடலையடுத்தே தாம் இத்தீர்மானத்திற்கு வந்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எமது ஜனநாயக மக்கள் முன்னணியும் கலந்து கொள்ள வேண்டுமாயின், நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் தமிழர்களின் பிரச்சினை மற்றும் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான கோரிக்கைகளும் தேசிய எதிர்ப்பு போராட்டத்தில் உட்படுத்தப்பட வேண்டும் என்று நாம் முன்வைத்த நிபந்தனையை ஐ.தே.க. எற்றுக்கொண்டதையடுத்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தாம் கலந்துகொள்ள தீர்மானித்தோம் என்று மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நவசமாஜக் கட்சியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்ற இருப்பதாக தெரியவருகிறது.

மக்களுக்கு எவ்வித பயனும் இல்லாத 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், சரத் பொன்சேகாவின் விடுதலை, நட்டமடையும் நிறுவனங்களை சுவீகரிப்பதற்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்ட மூலம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com