Sunday, November 6, 2011

ஏறாவூர் புன்னக்குடாக் கடலில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா கடலில் குளிக்க சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் மூழ்கி பலியாகியுள்ளனர்.எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவர்களே சம்பவத்தில் பலியானவர்களாவர்.

தளவாய் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் ஏழு மாணவர்கள் மேலதிக வகுப்பு முடிவடைந்த பின்னர் நேற்று பிற்பகல் புன்னக்குடா கடலில் குளிக்க சென்றுள்ளனர். இவர்கள் குளித்துக் கொண்டிருந்த வேளையிலேயே 07 பேரும் கடலில் மூழ்கியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேச மீனவர்கள் மற்றும் பொதுமக்களும் குறித்த மாணவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். இதன்போது இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் ஏனைய ஐந்து மாணவர்களும் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com