Tuesday, April 12, 2011

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம். - புன்னியாமீன்

(International Day of Human Space Flight) மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினமாக (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் திகதியை கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. A/65/L.67 இலக்கத்தைக் கொண்ட இத்தீர்மானம் 2011 ஏப்ரல் 7 ஆம் திகதி பொதுச்சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ரஷ்யாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டுவரப்பட்டது.

ஏப்ரல் 12 ஆம் திகதி மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாளாகப் பிரகடனம் செய்யப்படுவதற்கு மூலமாக அமைந்த காரணி விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளிப்பயணம் நிகழ்ந்து 50வது ஆண்டுகள் பூர்த்தியடைவதால் ஆகும். ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி வஸ்டொக்-1 விண்கலத்தில் பயணித்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாகத் தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யூரி அலெக்சியேவிச் ககாரின் ரஷ்யாவில் மொஸ்கோ நகருக்கு மேற்கே அமைந்துள்ள க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934 இல் பிறந்தவராவார். இவர் பிறந்த இப்பிரதேசமானது பிற்காலத்தில் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. (இவர் 1968ம் ஆண்டில் காலமானார்). இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் கடமையாற்றியவர்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School) இல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். 1957 இல் வலென்டினா கொரசோவா என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர் ஆரம்பத்தில் நோர்வே எல்லையில் மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் தனது பணியை ஆரம்பித்தார்.

1960 இல் சோவியத் யூனியனின் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார். இத்திட்டத்தில் இணைந்தவர்களுக்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவ்விருவருள் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.


யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961 இல் வஸ்டோக் 3KA-2 (வஸ்டோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் (108 நிமிடங்கள்) விண்வெளியில் பறந்தது.

விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்வதாகும். இது பற்றிய எண்ணக்கரு அல்லது, விண்வெளிக்கு மனிதனையோ, வேறு பொருட்களையோ அனுப்பும் எண்ணம் 19ம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியிலிருந்து விஞ்ஞானப் புனைக்கதைகளிலில் இடம் பெற்று வந்துள்ளன. எட்வர்ட் எவரெட் ஹேல் எனும் எழுத்தாளர் 1869 ஆம் ஆண்டில் எழுதிய 'தி பிரிக் மூன்' என்னும் கற்பனைச் சிறுகதையில் முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது பற்றி எழுதியிருந்தார். 1903 ஆம் ஆண்டு, கோன்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கை (1857–1935)என்பவரின், "த எக்ச்ப்லோறேஷன் ஒப் காஸ்மிக் ஸ்பேஸ் பை மீன்ஸ் ஒப் ரியாக்க்ஷன் டிவைசஸ்" என்ற ஆய்வறிக்கை நூலில் ஏவுகனையைக்கொண்டு எவ்வாறு விண்கலங்களை ஏவலாம் என்பது பற்றி விளக்கப்பட்டிருந்தது. விண்வெளி தொடர்பாக முதலில் வந்த நூலாக இது கருதப்படுகின்றது. 1945 ஆம் ஆண்டில் கம்பியில்லா உலகம் என்ற கட்டுரையில், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான நாவல் எழுத்தாளரான ஆர்தர் சி. கிளார்க் (1917-2008) தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களைப் பற்றி எழுதியுள்ளார். ஆர்தர் சி. கிளார்க் விண்வெளிப்பயண வரலாற்றை ஒரு பலமான அத்திவாரத்தையிட்ட விஞ்ஞான எழுத்தாளராகக் கருதப்படுகின்றார்.

விண்வெளி ஆய்வுப் பயணத்தில் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் திகதி, சோவியத் ஒன்றியத்தினால் ஆளில்லாத விண்கலமான ஸ்புட்னிக் ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 1957 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதியன்று லைக்கா எனும் பெயர் கொண்ட நாய் முதல் முறையாக புவி சுற்றுப்பாதையை சுற்றி வர அனுப்பப்பட்டது. புவி சுற்றுப்பாதையை சுற்றி வந்த முதல் ஜீவராசி இதுவாகும். இவ்வெற்றியை அடுத்தே யூரிககாரின் ஏப்ரல் 12, 1961 இல் வஸ்டோக்-1 விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி அமெரிக்க அப்பலோ 11 விண்கலத்தின் மூலம் சந்திரனில் முதல் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது. சந்திரத் தரையில் முதலில் பாதம் பதித்தவர் என்ற பெருமையினை நீல் ஆம்ஸ்ட்றோங் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவின் அப்பலோ - 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்றோங் உடன் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோரும் பயணித்தனர். ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைக்க அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். மைக்கேல் கொலின்ஸ் விண்கலத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட விண்வெளி திட்டமானது இன்று பல மைல்கற்களை சாதித்துள்ளது, 1957 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தால் ஸ்புட்னிக் 1 என்கின்ற முதல் செயற்கைக்கோள் விண்வெளியில் செலுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் பூமியை சுற்றி இருக்கும் கோளப்பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. 50 நாடுகள் இதுவரை செயற்கைக்கோள்களை செலுத்தி இருந்தாலும் அவற்றை வானில் செலுத்தும் ஆற்றல் பத்து நாடுகளுக்கு மட்டுமே இதுவரை உள்ளது. ஒரு சில நூறு செயற்கைக்கோள்கள் மட்டும் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளன

செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நாடுகளாக சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இத்தாலி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சுவிச்சர்லாந்து, ஜப்பான், மக்கள் சீன குடியரசு, போலந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், இந்தியா, இந்தோனேசியா, செக்கோஸ்லோவாக்கியா, பல்கேரியா, பிரேசில், மெக்சிகோ, சுவீடன், இஸ்ரேல், லக்சம்பேர்க், அர்ஜென்டினா, பாக்கிஸ்தான், தென் கொரியா, போர்த்துக்கல், தாய்லாந்து, துருக்கி, உக்ரேன், சிலி, மலேசியா, நோர்வே, பிலிப்பைன்ஸ், எகிப்து, சிங்கப்பூர், தாய்வான், டென்மார்க், தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், மொரோக்கோ, அல்ஜீரியா, கிரீஸ், நைஜீரியா, ஈரான், கசக்ஸ்தான், பெலருஸ், கொலம்பியா, வியட்நாம், வெனிசுலா, சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம். அதே நேரம் செயற்கைக்கோள்களை வானில் செலுத்தும் ஆற்றல் மிகு நாடுகளாக ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், மக்கள் சீன குடியரசு, உக்ரேன், இந்தியா, இஸ்ரேல், உக்ரேன், ஈரான் ஆகியன காணப்படுகின்றன.


விண்வெளி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 20 ஆண்டு ஆய்வின் பின்பு, அப்பணியின் கவனமானது ஒருமுறை மட்டுமே விண்வெளி ஓடத்தை பயன்படுத்தும் முறையிலிருந்து மாறி மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி ஓடத் திட்டம் போன்ற மறு சுழற்சி முறைக்கும், போட்டியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையம் என்பது போன்ற ஒத்துழைப்பு திட்டங்களுக்கும் இடம் பெயர்ந்தது. 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து தனியார் துறையும் விண்வெளி சுற்றுலாவாண்மையை மேம்படுத்தவும் அதன் பிறகு சந்திரனுக்கு தனியார் விண்வெளி பயணத் திட்டத்தையும் ஆரம்பித்தார். இன்று சந்திரனுக்கு மாத்திரமன்றி ஏனைய கிரகங்களை நோக்கியும் விண்வெளிப் பயணத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com