Monday, April 4, 2011

காணாமல்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் மர்மம் தொடர்கிறது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமற்போன நான்கு கடற்படை சிப்பாய்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் விசாரைணகளை மேற்கொண்டு வருவதாக கடற்படைப் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கடற்படைச் சிப்பாய்கள் காணாமற் போய் நேற்றுடன் ஆறு நாள்கள் கடந்துள்ள நிலையில் அவர்கள் காணாமற் போனது இன்னும் மர்மமாகவே உள்ளது என அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு கடற்படைச் சிப்பாய்கள் டிங்கிப் படகு ஒன்றுடன் கடந்த மாதம் 29ஆம் திகதி காணாமற் போயிருந்தனர்.

இதனையடுத்து, கரையோர பிரதேசங்களில் முப்படையினரும் கூட்டாக இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இந்திய கடற்படையினரின் உதவியையும் கோரியுள்ளனர்.

இதன் பிரதிபலனாக வெற்றிலைக் கேணி கடற்பரப்பில் வைத்து சிப்பாய்கள் பயணித்த டிங்கிப் படகைப் படையினர் கண்டுபிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட படகுக்கு எதுவித சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை.

கடற்படைச் சிப்பாய்கள் காணாமற்போன அதேதினத்தில் ஆயுதக் குழு ஒன்று இலங்கை கடற்பரப்பில் வைத்து ஒரு சிலரைப் படகில் ஏற்றுவதைத் தாம் கண்டதாக என இந்திய மீனவர்கள் அறிவித்திருந்தனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கடற்படை பேச்சாளர், இவ்வாறானதொரு தகவலும் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பிலும் விசாரணைகள் இடம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

காணாமற் போயுள்ள கடற்படை சிப்பாய்களின் உறவினர்களிடமும் அவர்கள் தொடர்பாகத் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com