Tuesday, November 2, 2010

இலங்கை அகதிகள் தொடர்பாக ஆஸ்ட்ரேலியா - இந்தோனேஷியா பேச்சு

இலங்கை அகதிகள் தொடர்பாக ஆஸ்ட்ரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட்டும், இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனோ ஆகியோர் பேச்சு நடத்தியுள்ளனர். ஆசிய பசிபிக் நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜுலியா கில்லார்ட், இந்தோனேஷியா சென்று அவரை சந்தித்துள்ளார். அப்போது இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்துவதற்கு பிராந்திய ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது குறித்து பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு திமோரில் அகதிகளை பராமரிக்கும் மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் பேசப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா பிராந்திய ஒத்துழைப்பு குறித்த பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.

எனினும் இதற்கு கிழக்கு திமோர் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இதற்கு இந்தோனேசியாவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து வரும் அகதிகளை இந்தோனேசியாவிலேயே தடுத்து நிறுத்தும் வகையிலான முயற்சிகள் இனி வரும் காலங்களில் ஆஸ்ட்ரேலியாவினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பிலான உள்ளடக்கங்களை முழுமையாக அறியாத வரையில் ஆஸ்ட்ரேலியாவின் கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என மலேசியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com