Tuesday, August 3, 2010

நிரந்தரப் புரட்சியை புரிந்துகொள்வதற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு By David North

நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: ஆவணப் பதிவு தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு ரிச்சார்ட் பி.டே மற்றும் டானியல் கெய்டோ (பிரில், 2009).

A significant contribution to an understanding of Permanent Revolution.

Witnesses to Permanent Revolution: The Documentary Record edited and translated by Richard B. Day and Daniel Gaido. (Brill, 2009).

நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்:
ஆவணப் பதிவு என்ற ஆவண நூல் வெளியீடு 1917 அக்டோபர் புரட்சியின் தத்துவார்த்த அடித்தளங்களின் கல்வியில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த குறிப்பிடத்தக்க தொகுதியில் (677 பக்கங்கள்) வழங்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் - வரலாற்றாசிரியர்களான ரிச்சார்ட் பி. டே மற்றும் டானியல் கெய்டோ இருவரும் தொகுத்து, மொழிபெயர்த்து, அறிமுக உரையும் வழங்கியுள்ளனர் - நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் தோற்றத்தில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் விவாதவியல் குறித்த ஒரு திறம்பட்ட மதிப்பாய்வை இவை வழங்குகின்றன. இருபதாம் நூற்றாண்டில் மார்க்சிச தத்துவம் மற்றும் புரட்சிகர மூலோபாயத்தின் அபிவிருத்தியை புரிந்து கொள்ள விரும்புவோருக்கு கட்டாயம் அவசியமானதொரு புத்தகத்தை டே மற்றும் கெய்டோ அளித்துள்ளனர்.

மிசிசாகாவில் உள்ள டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் பல வருடங்களாக பேராசிரியராக கடமையாற்றிவரும் ரிச்சார்ட் டே சோவியத் வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் விடயத்தில் ஒரு ஆளுமையுள்ளவராக மதிக்கப்படுபவர் ஆவார். லியோன் ட்ரொட்ஸ்கியும் பொருளாதார தனிமைப்படல் அரசியலும் (Leon Trotsky and the Politics of Economic Isolation) (1973) என்கின்ற அவரது நூல் சோவியத் ஒன்றியத்தில் 1920களில் பொருளாதார கொள்கை மீதான போராட்டத்தின் பின்னமைந்த அதிமுக்கிய தத்துவார்த்த பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு முக்கியமான படைப்பாகத் திகழ்கிறது.

இ.எ.பிரெயோபிரசன்ஸ்கி எழுதிய முதலாளித்துவ வீழ்ச்சி (1985) என்னும் புத்தகத்தை மொழிபெயர்த்தது உட்பட அவரது வாழ்க்கை மற்றும் கருத்துக்கள் குறித்து டே எழுதியவை ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பாளர் அணியில் இருந்த, 1937ம் ஆண்டில் இறுதியில் ஸ்ராலினால் படுகொலை செய்யப்பட்ட அந்த முக்கிய மனிதரை வரலாற்றின் ஞாபகமறதியில் இருந்து மீட்டெடுத்துக் கொண்டு வந்தது. மார்க்சிச மெய்யியல் உள்ளிட்ட பல்வேறு வகையான விடயங்களில் பேராசிரியர் டே கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இப்போது பிரெயோபிரசன்ஸ்கியின் முன்னதாக அறிந்திராத எழுத்துகளின் ஒரு புதிய தொகுப்பை வெளியிடுவதற்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

அர்ஜெண்டினாவில் பிறந்த டானியல் கெய்டோ ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக இஸ்ரேலில் படித்தவர், வாழ்ந்தவர். பாலஸ்தீனியர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் அவர் செயலூக்கத்துடன் பங்குபெற்றிருந்தார். கெய்டோ சமீபத்தில் அர்ஜெண்டினா திரும்பி விட்டார். அவர் வெளியிட்டிருக்கும் படைப்புகளில் அமெரிக்க முதலாளித்துவத்தின் உருவாக்க காலம்: ஒரு சடவாத விளக்கம் (2006) (The Formative Period of American Capitalism: A Materialist Explanation) என்கிற புத்தகமும் அடங்கும். அமெரிக்க வரலாறு மட்டுமே அவரது ஆராய்ச்சி விடயம் அல்ல. ஜேர்மன் சோசலிச இயக்கத்தின் வரலாறு குறித்தும் கெய்டோ விரிவாக எழுதியுள்ளார், அத்துடன் இரண்டாம் அகிலத்தின் காலகட்டத்தில் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் வரலாறு குறித்தும் இப்போது தயாரிப்பு செய்து வருகிறார்.

நிரந்தரப் புரட்சி தத்துவம் எழுவதற்கு அடித்தளமாக இருந்த விவாதத்தின் ஆளுமைமிக்க புத்திஜீவித்தன விரிவெல்லையை மறுகட்டமைப்பு செய்வதே நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள் நூலின் முக்கிய நோக்கம். அத்தத்துவத்தின் விளக்கத்திலும், இன்னும் முக்கியமாக, ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் அதன் மூலோபாய மற்றும் நடைமுறைப் பயன்பாட்டிலும், ட்ரொட்ஸ்கி ஆற்றிய தீர்மானமான பாத்திரத்தை மறுக்கவில்லை என்றபோதிலும், பிரான்ஸ் மேஹ்ரிங், ரோசா லுக்சம்பேர்க், அலெக்சாண்டர் ஹெல்ப்ஹாண்ட் (பார்வஸ்), கார்ல் காவுட்ஸ்கி, மற்றும் அதிகம் அறியப்பட்டிராத டேவிட் ரியாசனோவ் போன்ற மற்ற முக்கிய சோசலிச சிந்தனையாளர்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து வாசகருக்கு பரிச்சயம் செய்ய டேயும் கெய்டோவும் விழைகின்றனர். தன் மீது தீவிரமாகவும் தனிப்பட்ட வகையிலும் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு தத்துவத்தின் மூலங்கள் குறித்த ஒரு விரிவாக மதிப்பிடுவதற்கு ட்ரொட்ஸ்கி நிச்சயம் ஆட்சேபித்திருக்க போவதில்லை.

1923ம் ஆண்டில் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக அரசியல் குழுவின் சினோவியேவ், காமனேவ் மற்றும் ஸ்ராலின் ஆகிய மூவர் குழு ஆரம்பித்த கன்னை மோதல் தாக்குதல்கள் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு எதிரான பிரச்சாரமாக துரிதமாய் அபிவிருத்தியுற்றது. ட்ரொட்ஸ்கியின் தனிநபர் தவறுகளாகவும், அரசியல் பிழைகளாகவும் கூறப்படுவது, அவரது “விவசாயிகள் பற்றிய குறைமதிப்பீடு” மற்றும் அவரில் உள்ளூறியிருந்த “போல்ஷிவிச எதிர்ப்பு” எல்லாவற்றிற்கும் இந்த மிக ஆபத்தான தத்துவமே மூலமாக இருந்ததாக திரும்பத் திரும்ப பிரகடனம் செய்யப்பட்டது.

1917ம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே, முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் மற்றும் அதன் மென்ஷிவிக் கூட்டணியினருக்கு எதிராக போல்ஷிவிக் கட்சியின் போராட்டத்திற்கு மூலோபாய அடித்தளத்தை நிரந்தரப் புரட்சி தத்துவம் வழங்கியது. ஆனால், ஆறே வருட காலத்திற்குப் பின்னர், அத்தத்துவம் மார்க்சிச கோட்பாடுகளில் இருந்து விலகிச் சென்ற ஒன்றாக கண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தனது சொந்த கருத்துகளை திரிப்பதோடு மட்டுமல்லாமல் சோசலிச தத்துவத்தின் வரலாற்றையும் பொய்மைப்படுத்துவதை கண்ட ட்ரொட்ஸ்கி வெளிப்படையான கோபத்துடன் எழுதினார்:

“நிரந்தரப் புரட்சி” என்கிற வார்த்தைப்பிரயோகம் மார்க்சினுடையதாகும். இதனை அவர் 1848ம் ஆண்டு புரட்சிக்கு பயன்படுத்தினார். மார்க்சிச இலக்கியத்தில், அதாவது திருத்தல்வாத மார்க்சிசத்தில் அல்லாது புரட்சிகர மார்க்சிசத்தில், இந்த வார்த்தை எப்போதுமே அதற்கான உரிமையான இடத்தை கொண்டிருந்திருக்கிறது. பிரான்ஸ் மேஹ்ரிங் 1905-07 புரட்சிக்கு இந்த வார்த்தையை பயன்படுத்தினார். சரியான மொழிபெயர்ப்பில், நிரந்தரப் புரட்சி என்றால் தொடர்ந்த புரட்சி, தடைப்படாத புரட்சி என்று அர்த்தமாகும். [1]

நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மார்க்சிச பாரம்பரியம் குறித்த ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை டேயும் கெய்டொவும் உறுதிப்படுத்துகின்றனர். அரசானது மதத்தை இல்லாதொழித்தலை சாதிக்க வேண்டுமாயின் “அதன் சொந்த வாழ்க்கை நிலைமைகளுடன் மோதல்மிக்க முரண்பாட்டிற்கு வருவதன் மூலம் மட்டுமே, புரட்சியை நிரந்தரமானதாக அறிவிப்பதன் மூலம் மட்டுமே” முடியும் என்று யூத பிரச்சினை மீதான கட்டுரையில் மார்க்ஸ் 1843ம் ஆண்டு வாக்கிலேயே எழுதியிருந்தார் என்பதை அவர்கள் குறிப்பிடுகின்றனர். [2]

இன்னும் குறிப்பிடத்தகுந்த வகையில் 1850 மார்ச்சில் ”கழகத்தின் மத்திய அதிகாரக் குழுவிற்கான” உரையில் மார்க்ஸும் ஏங்கல்ஸும் ஜனநாயக குட்டி முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக பின்வருமாறு கூறினர்: ‘அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உடைமைகளை கொண்ட அனைத்து வர்க்கங்களும் அவற்றின் ஆளும் நிலைகளில் இருந்து துரத்தப்படும் வரை, ஒரு நாட்டில் மட்டுமல்ல மாறாக உலகின் அத்தனை முன்னணி நாடுகளிலும் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி போதியளவு முன்னேறி, அத்துடன் இந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கத்திடையே போட்டியுணர்வு மறைந்து, குறைந்தபட்சம் உற்பத்தியின் தீர்மானகரமான சக்திகளேனும் தொழிலாளர்களின் கைகளில் இருக்கிறது என்கிற மட்டத்திற்கேனும் புரட்சியை நிரந்தரமாக்குவது தொழிலாளர்களின் கடமையாக இருக்கிறது, நமது அக்கறை வெறுமனே தனியார் உடைமையில் திருத்தம் செய்வதாய் இருக்கக் கூடாது, மாறாக அதனை இல்லாதொழிக்கவேண்டும், வர்க்க முரண்பாடுகள் பற்றிய பேச்சை அடக்குவதாக இருக்கக் கூடாது மாறாக வர்க்கங்களை இல்லாதொழிக்க வேண்டும், நடப்பு சமூகத்தை மேம்படுத்துவதாக இருக்கக் கூடாது மாறாக ஒரு புதிய சமூகத்தை ஸ்தாபிப்பதாய் அமைய வேண்டும்.”

புரட்சியின் நிரந்தரம் குறித்த கருத்தாக்கம் 1848ம் ஆண்டில் ஐரோப்பாவெங்கும் வீசிய வர்க்க போராட்ட அலையின் அனுபவத்தில் இருந்து அபிவிருத்தி செய்யப்பட்டதாகும். பிரான்சில் ஜனநாயக குட்டி பூர்சுவாக்களின்* மிகவும் தீவிரமுற்ற பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாகோபின்கள் புரட்சிகர தீவிரவாதத்தின் உதவியுடன் பழைய பிரபுத்துவ ஆட்சியைச் சிதறடித்து ஒரு பூர்சுவா அரசை ஸ்தாபிப்பதற்கான அடித்தளத்தை நிறுவி ஐம்பது ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலம் தான் கடந்திருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஐரோப்பாவின் சமூக கட்டமைப்பு மிகவும் சிக்கலானதாக மாறியிருந்தது. பூர்சுவாக்களுக்கும் பழைய அரசாட்சிக்கும் இடையிலான தற்போதுள்ள அரசியல் மோதலின் தன்மையும் மற்றும் அரசியல் தாக்கங்களும் ஒரு புதிய சமூக சக்தியான ஒரு சொத்துமற்ற வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியால் மாற்றமடைந்துள்ளது. பழைய அரசாட்சிக்கு எதிரான ஒரு பரந்துபட்ட எழுச்சியினுள் புதிய தொழிலாள வர்க்கம் உள்ளிளுக்கப்பட்டு, நிலமானித்துவ எச்ச்சொச்சங்களுக்கு எதிராக மட்டுமல்லாது முதலாளித்துவ சொத்துடமைக்கும் அச்சுறுத்தும் பரிமாணத்தை எடுத்துவிடலாம் என அச்சம்கொண்டது.

இவ்வாறு, 1848 போராட்டங்களிலும் அதன் உடனடி பின்விளைவுகளிலும், பூர்சுவாசி தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் புரட்சிகரப் போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றது. புரட்சியின் பழைய மையமாக இருந்ததும் ஐரோப்பிய அரசுகளில் அரசியல்ரீதியாக மிகவும் முன்னேறியதாய் இருந்ததுமான பிரான்சில் 1848 ஜூனில் ஜெனரல் கவாய்னாக் (General Cavaignac) தலைமையின் கீழான இராணுவப் படை மூலம் பாரிஸ் பாட்டாளி வர்க்கத்தினர் படுகொலை செய்யப்பட்டதில் புதிய வர்க்க உறவுகள் மிருகத்தனமான வெளிப்பாட்டைக் கண்டன. பிரான்சின் எல்லைகளுக்கு அப்பால் பழைய அரசகுடியினருடன் சமரசம் செய்து கொள்வதற்கும் பூர்சுவாக்கள் விருப்பமுடையதாய் இருந்தனர். ஒரு ஜனநாயகக் குடியரசை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கையை கைவிடுவது மற்றும் அரசில் அரசகுடியினரின் ஆதிக்கத்தை தொடர ஒப்புக்கொள்வது என்கிற மட்டத்திற்கு இது சென்றது. இது தான் ஜேர்மன் புரட்சியின் தலைவிதியானது. வெகுஜனக் கிளர்ச்சிகளாலும் “கம்யூனிசப் பூதத்தாலும்'' அதிர்ச்சியடைந்து போன முதலாளித்துவம் பிரஷ்ய அரச குடியினரிடம் அரசியல்ரீதியாக சரணாகதியடைந்தது.

பூர்சுவாக்களால் அதனது “சொந்த” பூர்சுவா புரட்சி காட்டிக்கொடுக்கப்பட்டமை “இடது” குட்டி பூர்சுவா பிரதிநிதிகளால் இலகுவாக்கப்பட்டது. இந்த “இடது” குட்டி பூர்சுவா ஒவ்வொரு அதிமுக்கிய தருணத்திலும் தொழிலாள வர்க்கத்திற்கு முழுக்க நம்பத்தகாத கூட்டாளியாகத் தான் நிரூபணமாகி இருக்கிறது. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ”மத்திய அதிகாரக் குழுவிற்கான உரையில்:” விளக்குவது போல, “சமூகம் மொத்தத்தையும் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்திற்காக மாற்ற விரும்புவதிலிருந்து அந்நியப்பட்டு, ஜனநாயக குட்டி பூர்சுவாசியானது நடப்பு சமூகத்தை சாத்தியமான மட்டத்திற்கு தங்களுக்கு சகிக்கத்தக்க மற்றும் வசதியானதாக்குவதற்கு சமூக நிலைமைகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முனைகின்றது.”[4]

தொழிலாள வர்க்கம் தனது போராட்டங்களும் நலன்களும் வரம்புபடுத்தப்படுவதையோ காட்டிக் கொடுக்கப்படுவதையோ அனுமதிக்கக் கூடாது என்று மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் முடிவிற்கு வந்தனர். மாறாக தொழிலாளர்கள், தங்களது வர்க்க நலன்கள் என்ன என்பதில் தங்களை தெளிவுபடுத்திக் கொள்வதன் மூலமும், எவ்வளவு விரைவாய் முடியுமோ அவ்வளவு விரைவாய் தங்களது நிலையை ஒரு சுயாதீனமான கட்சியாக நிலைப்படுத்திக்கொள்வதன் மூலமும், மற்றும் பாட்டாளி வர்க்க கட்சியின் சுயாதீனமான அமைப்பாவதில் இருந்து பின்வாங்கச் செய்கின்ற ஜனநாயக குட்டி பூர்சுவா கபடநாடக வார்த்தைகளால் ஒரு கணம் கூட தவறாக வழிநடத்தப்பட தங்களை அனுமதிக்காதிருப்பதன் மூலமும் தங்கள் இறுதி வெற்றிக்கு அவசியமான அனைத்தையும் செய்ய வேண்டும். அவர்களது யுத்த முழக்கமாக இருக்க வேண்டியது: “புரட்சி நிரந்தரமாக வேண்டும்” என்பதே. [5]

ஐம்பது வருடங்களுக்கு பின்னர், இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில், இந்த யுத்த முழக்கத்தின் அரசியல் முக்கியத்துவமும் தாக்கங்களும் துரிதமாய் வளர்ந்து கொண்டிருந்த ரஷ்ய சோசலிச இயக்கத்திற்குள்ளாக தீவிரமான விவாதப் பொருளாக ஆகவிருந்தது. எந்த சமரசத்திற்கும் இடமின்றி நாடு 300 ஆண்டு கால எதேச்சாதிகார ஆட்சியை தூக்கியெறியும் ஒரு ஜனநாயகப் புரட்சியை நோக்கி போய்க் கொண்டிருந்தது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. ஆனாலும் அந்த பொதுவான முன்நிபந்தனைகளுக்கு அப்பால், வர்க்க இயக்கவியல், அரசியல் நோக்கங்கள் மற்றும் இறுதியாக புரட்சிகர இயக்கத்தின் சமூக-பொருளாதார பின்விளைவுகள் குறித்து எல்லாம் கடும் மாறுபாடான நோக்கங்கள் அபிவிருத்தியுற்றன. 1789-1794 ''மரபார்ந்த'' பிரெஞ்சு புரட்சியில் நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகாரம் தூக்கியெறியப்பட்டதும் அது இறுதியில் பூர்சுவா பொருளாதார உறவுகளை அடித்தளமாகக்கொண்ட பூர்சுவாக்களின் அரசியல் ஆட்சிக்கு இட்டுச் சென்றது, அது போன்றதொரு பாதையை ரஷ்ய புரட்சி பின்பற்ற வேண்டுமா? அல்லது அதற்கு ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர் பரந்த அளவில் மாறுபட்ட சமூக-பொருளாதார நிலைமைகளின் கீழ் அபிவிருத்தியுற்றுக் கொண்டிருக்கும் ரஷ்ய ஜனநாயகப் புரட்சியானது ஒரு ஆழமாக வேறுபட்ட வடிவத்தை அவசியமாக எடுக்க வேண்டுமா? 1900ம் ஆண்டின் ரஷ்யாவில் 1790ம் ஆண்டின் பிரான்சைப் போல ஒரு புரட்சிகர பூர்சுவாசி இருந்ததா? எதேச்சாதிகாரத்திற்கு எதிராக ஒரு புரட்சிகரப் போராட்டத்தை நடத்துவதற்கோ, அல்லது ஆதரிப்பதற்கோ கூட ரஷ்ய பூர்சுவாசி உண்மையாகவே தயாராய் இருந்ததா?

எல்லாவற்றிற்கும் மேலாய், ரஷ்யா இருபதாம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த நேரத்தில் அங்கு மிகவும் செயலூக்கமிக்க இயக்கமிகுந்த சமூக சக்தியாக தொழிற்துறை தொழிலாள வர்க்கம் தான் இருந்தது என்கிற உண்மை ஜனநாயகப் புரட்சியின் அபிவிருத்தியை எவ்வாறு பாதிக்கும்? அந்நிய மூலதனத்தின் பாய்ச்சலால் ரஷ்யாவில் பெருமளவிலான தொழில்மயமாக்கத்திற்கு நிதியாதாரம் கிட்டிய நிலையில் துரிதமாய் பெருகிக் கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் தீவிரமான சக்தி ஏற்கனவே 1890களின் வேலைநிறுத்தத்தில் வெளிப்பட்டிருந்தது. ஜனநாயகப் புரட்சியில் தொழிற்துறை பாட்டாளி வர்க்கம் ஆற்றப் போகும் பாத்திரம் என்ன? எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிவதில் அதன் வலிமை தீர்மானகரமாய் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரம் தனது வர்க்க எதிரியான ரஷ்ய முதலாளித்துவத்திடம் செல்வதை ஏற்றுக் கொள்ளப் போகிறதா? இல்லையெனில் தொழிலாளர்கள் 'மரபார்ந்த' ஜனநாயக புரட்சியின் வரம்புகளைக் கடந்து முன்னேறி, அதிகாரத்தை தங்களது சொந்த கரங்களில் எடுத்துக் கொண்டு, முதலாளித்துவ சொத்துடைமையின் புனிதத்தை மீறும் சமுதாயத்தின் தொலைதூர விளைவுகள் கொண்ட பொருளாதார மறுசீரமைப்பை நடத்த தலைப்படுவார்களா?

இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டு நிரந்தரப் புரட்சி குறித்த மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கருத்தாக்கம் தவிர்க்கவியலாமல் ஒரு மீள்கருத்தாக்கலுக்கும் கூடுதல் விளக்கத்திற்கும் ஏறக்குறைய அழைத்துச் செல்லப்பட்டு விட்டது. இந்த தொகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் 1903 மற்றும் 1907 ஆம் ஆண்டுக்கு இடையே ரஷ்ய மற்றும் ஜேர்மன் சோசலிச இயக்கத்தில் நிகழ்ந்திருந்த விவாதத்தின் புத்திஜீவித்தன ஆழத்திற்கு சாட்சியமளிக்கின்றன. எதேச்சதிகாரத்தின் அரசியல் நெருக்கடி ஆழமுறும் ஒரு பின்புலத்தில், ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் ஸ்தாபகம் தொடங்கி அதற்கு வழிகாட்டி வந்திருந்த அரசியல் முன்னோக்குடன் அதிருப்தி பெருகிக் கொண்டிருந்தது. ஜாரை தூக்கியெறிந்தால் தவிர்க்கவியலாமலும் அவசியமாகவும் அரசியல் அதிகாரம் ரஷ்ய முதலாளித்துவத்தின் கைகளில் சென்று சேர்வதை தயாராய் ஏற்றுக் கொள்கின்ற ஜனநாயகப் புரட்சி குறித்த ஒரு கருத்தாக்கத்திற்கு தத்துவார்த்த மற்றும் அரசியல் ஆட்சேபங்கள் தோன்றின.

இந்த முன்னோக்கானது “ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை” என்று அழைக்கப்பட்ட ஜி.வி.பிளெக்கானோவின் பணியுடன் பிரதானமாக அடையாளம் காணப்பட்டது. ஜாரிசத்திற்கு எதிரான போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் தாராளவாத முதலாளித்துவத்துடன் கூட்டு கொள்ள வேண்டும் என்ற நிலையையே பிளெக்கானோவ் பராமரித்து வந்தார். எதேச்சதிகாரம் தூக்கியெறியப்பட்டதும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு ரஷ்ய வடிவம் ஸ்தாபிக்கப்படும். தொழிலாள வர்க்கத்தின் கட்சி ரஷ்ய நாடாளுமன்றத்தில் சோசலிச எதிர்ப்பாளர்களாக நுழைந்து தாராளவாத ஜனநாயக ஆட்சியை எவ்வளவு இடது நோக்கி செலுத்த முடியுமோ அவ்வளவு செலுத்த தலைப்படும். ஆனால் நாடு முதலாளித்துவ அடிப்படையில் காலவரையற்ற காலத்திற்கு தொடர்ந்து அபிவிருத்தியடையும். இறுதியாக, ஆனால் அது எப்போது என்று ஒருவருக்கும் தெரியாது, ரஷ்யா அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சோசலிசத்திற்கு போதுமான முதிர்ச்சியைப் பெறும். அந்தப் புள்ளியில் முதலாளித்துவ ஆட்சியை தூக்கியெறிய தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கும்.

இந்த முன்னோக்கின் மைய பிரச்சினையாக இருந்தது என்னவென்றால் ஜனநாயகப் புரட்சியின் தன்மை மற்றும் கடமைகளை, வரலாற்றில் செல்லுபடியற்றதாகவிட்டிருந்த ஒரு சூத்திரத்திற்கு இணக்கமான வகையில் பொருள் புரிந்து கொள்ள அது தலைப்பட்டது. உண்மையில் 1889ம் ஆண்டுவாக்கிலேயே, ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சியானது ஒரு தொழிலாளர்கள் புரட்சியாக மட்டுமே வெற்றி பெற முடியும் என்று பிளெக்கானோவ் வலியுறுத்தியிருந்தார். ஆனால் பிளாகானோவ் தொடர்ந்து வலியுறுத்தியபடி எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிவதில் தொழிலாள வர்க்கம் தான் தீர்மானமான சக்தியாக இருக்கப் போகிறது என்றால், பின் எதற்காக அரசியல் அதிகாரம் அவசியமாக தாராளவாத முதலாளித்துவத்தின் கைகளில் சென்று சேர வேண்டும்? இத்தகைய கேள்விகள் எழாமல் இருக்கச் செய்யும் முயற்சியில் பிளெக்கானோவ் முன்வைக்க முடிந்த ஒரே பதில் என்னவென்றால், தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதையும் சோசலிசத் தன்மை கொண்ட நடவடிக்கைகளை அமுல்படுத்துவதையும் அனுமதிக்கும் மட்டத்திற்கு ரஷ்ய பொருளாதார அபிவிருத்தி போதுமான அளவில் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்பது தான்.

முக்கியமானதாக, முன்கண்டிருக்கக் கூடிய பூர்சுவா ஜனநாயகப் புரட்சியின் பாரம்பரிய மாதிரியில் இருந்து சற்று வேறுபட்ட பாதையில் ரஷ்ய அபிவிருத்தி நடக்கலாம் என்று தெரிவித்த முதல் முக்கிய தத்துவவியலாளர் கார்ல் காவுட்ஸ்கி ஆவார். 1902 மற்றும் 1907ம் ஆண்டுகளுக்கு இடையே காவுட்ஸ்கி தொடர்ச்சியாக பல ஆவணங்களை எழுதினார். அவை இந்த தொகுதியில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இவை பிளெக்கானோவின் தத்துவ முன்னோக்கின் அதிகாரத்தை கடுமையாய் கீழறுத்தன; காலம் கடந்த முன்மாதிரி நிகழ்வுகளை நோக்கி ஒரு விமர்சன பார்வையை அபிவிருத்தி செய்ய பங்களிப்பு செய்தன. அத்துடன் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் ரோசா லுக்சம்பேர்க் உள்ளிட்ட ரஷ்ய மற்றும் போலந்து சமூக ஜனநாயக தத்துவவியலாளர்களின் ஒரு இளம் தலைமுறையின் திருப்பு முனையான வேலைகளுக்கு ஊக்கமளித்தன.

1902ம் ஆண்டில் "ஸ்லாவியர்களும் புரட்சியும்" என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையில், ஜாரிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ரஷ்ய பூர்சுவாசி ஒரு புரட்சிகர பாத்திரத்தை ஏற்கும் என்பதான அனுமானத்தின் மீது காவுட்ஸ்கி கேள்வி எழுப்பினார். முந்தைய ஜனநாயகப் புரட்சிகளின் சகாப்தத்திற்குப் பின்னர் வர்க்க உறவுகளிடையேயான இயக்கம் ஆழமாய் மாற்றம் கண்டிருந்தது. காவுட்ஸ்கி எழுதினார்: "1870ம் ஆண்டிற்கு பின்னர் அனைத்து நாடுகளின் பூர்சுவாக்களும் புரட்சிகர இலட்சியத்தில் எஞ்சியிருந்த இறுதி சொச்சங்களையும் இழக்கத் தொடங்கி விட்டனர். அந்த சமயம் முதல், புரட்சிகரவாதியாக இருக்க வேண்டுமென்றால் சோசலிஸ்டாகவும் இருந்தாக வேண்டும் என அர்த்தப்படுகின்றது." [6]

"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எந்த மட்டத்திற்கு காலாவதியாகி இருக்கிறது?" என்று ஆத்திரமூட்டும் தலைப்பில் எழுதப்பட்ட இன்னொரு கட்டுரையில் (1903ம் ஆண்டில் முதலில் எழுதப்பட்ட இக்கட்டுரை 1906ல் திருத்தப்பட்டது) காவுட்ஸ்கி கூறினார்: அறிக்கையில் ஒரு 'பிழை' இருக்கிறது, அதன் மீது குறிப்பிடத்தக்க விமர்சனம் அவசியமாய் இருக்கிறது என்று நாம் பேசுவோமானால், அந்த விமர்சனம் அரசியல் வார்த்தைகளில் பூர்சுவாசி புரட்சிகரமானது என்று உரைக்கப்படுகின்ற 'சித்தாந்த'த்தில் இருந்து சரியாகத் தொடங்கியாக வேண்டும். கடந்த ஐம்பது வருடங்களில் புரட்சி என்பது பரிணாம வளர்ச்சி என இடம்பெயர்க்கப்பட்டிருப்பதானது புரட்சிகர பூர்சுவாசி இனியும் இருக்கவில்லை என்கிற உண்மையில் இருந்து எழுகிறது." [7]

முதலாம் உலகப் போருக்கு முன்னதாக நிரந்தப் புரட்சி முன்னோக்கை அபிவிருத்தி செய்வதில் காவுட்ஸ்கி ஆற்றிய தீவிரமான பாத்திரத்தை உண்மையான வரலாற்று பதிவுகளைக் கொண்டு நினைவுகூர்ந்தது, டே-கெய்டோ தொகுப்பு நூலின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாய் திகழ்கிறது. ரஷ்ய புரட்சி குறித்து காவுட்ஸ்கியின் எழுத்துகளை வெளியிடுவது அவரை "மவுனவாதத்தின் தூதராகவும் புரட்சிகர வார்த்தை ஜாலத்தில் தோய்ந்த ஒரு சீர்திருத்தவாதி"யாகவும் பார்க்கும் வழக்கமான தவறான பார்வையை வெல்வதற்கு உதவும் என்று டே மற்றும் கெய்டோ நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.[8] அவர்கள் மேலும் கூறுகின்றனர்:

1917க்கு பின்னரான காவுட்ஸ்கியின் போல்ஷிவிச விரோத விவாதவியலில் இருந்து எடுக்கப்பட்ட மிகப் பொதுமைப்படுத்தப்பட்டதான இந்த பார்வை முதன்முதலில் தீவிர இடது மெய்யியல் அறிஞரான கார்ல் கோர்ஸ்ச் (Karl Korsch) மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டது. காவுட்ஸ்கியின் சடவியல்ரீதியான வரலாற்றுப்பார்வை (Die materialistische Geschichtsauffassung-1927) என்கிற படைப்பிற்கான தனது பதிலில் கோர்ஸ்ச் இதனை அபிவிருத்தி செய்தார். எரிக் மத்யாஸ் எழுதிய காவுட்ஸ்கி மற்றும் காவுட்ஸ்கியவாதம் என்னும் புத்தகம் வெளியான பின்னர் கல்வியாளர்கள் மத்தியில் இக்கருத்து ஸ்தாபகம் பெற்றது. லெனின் அல்லது ட்ரொட்ஸ்கி பகிர்ந்து கொண்டிராத இந்த கருத்தை மறுப்பதற்கு காவுட்ஸ்கியின் பிரதான வரலாற்றாசிரியரான மரெக் வால்டென்பெர்க் ஏராளமான விடயங்களை வழங்கினார். அவர்கள் இருவரும் காவுட்ஸ்கியின் புரட்சிகர கால எழுத்துகளை கம்யூனிச தொழிலாளர்களுக்குப் பரிந்துரைத்து வந்திருக்கின்றனர். [9]

லெனினும் ட்ரொட்ஸ்கியும் வலியுறுத்தியது போல, காவுட்ஸ்கி பின்னாளில் சோசலிசத்தை காட்டிக் கொடுத்தது அவரது சொந்த எழுத்துகளையே மறுதலிப்பதாய் அமைந்தது. "ஒரு காலத்தில் காவுட்ஸ்கி எப்படி எழுதினார்" என்று லெனின் குறிப்பிடுகையில், தனது ஆசிரியராய் திகழ்ந்த மனிதரின் அரசியல் மற்றும் புத்திஜீவித்தன நிலைக்குலைவைக் கண்டு ஆழமான அதிருப்தியும் கோபமும் அதில் வெளிப்படுகிறது. 1914 ஆகஸ்டில் காவுட்ஸ்கியின் காட்டிக் கொடுப்பானது புரட்சிகரவாதிகளின் ஒரு ஒட்டுமொத்த தலைமுறைக்கும் ஏன் அதிர்ச்சியளிப்பதாய் அமைந்தது என்பதை இத்தொகுதி தெளிவாக்குகிறது. இத்தொகுதி காவுட்ஸ்கியின் புரட்சிகர எழுத்துகளில் உண்மையிலேயே மிக அற்புதமான பல பத்திகளைக் கொண்டிருப்பதால், இரண்டாம் அகிலத்தின் "மார்க்சிச ஆண்டகையாக (போப்)" திகழ்ந்தவர் குறிப்பிடத்தக்க அளவில் நுண்புல அறிவு மிக்கவராக, தொலை நோக்கில் சிந்திக்கத்தக்கவராக, கடுமையான தர்க்கவாதியாக இருந்தார் என்பதை வெளிப்படுத்துகிற மேற்கோள்களைக் கொண்டு இந்த திறனாய்வினை சுமையேற்றும் எண்ணத்தை தவிர்ப்பது கடினமான ஒன்றாகும். திரும்பிப் பார்த்தால் காவுட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட சில கருத்தாக்கங்களில் அரசியல் பலவீனங்களை நாம் கண்டறிவது (நாம் பின்னால் குறிப்பிடவிருக்கிறோம்) சாத்தியமே. குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்கும் அரசிற்கும் இடையில் ஒரு நேரடியான மோதலின் தாக்கங்கள் குறித்து அவர் எழுதியபோது. ஆனால், காவுட்ஸ்கி என்பவர் ஏதோ ஏனோ தானோ ஞாபக மறதி பேராசிரியர், வரலாற்று அவசியத்தால் வழங்கப்படும் ஒரு பரிசு போல் புரட்சி வந்து சேரும் வரை சாவகாசமாகக் காத்திருப்பவர் என்பது போன்ற வழக்கமாகக் காட்டப்படும் அவரது பிம்பத்திற்கும் அந்த உண்மையான மனிதருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் பெரும் சக்தியுடன் எழுந்து நிற்கிறது. 1904 பிப்ரவரியில் வெளியான "புரட்சிகர பிரச்சினைகள்" என்ற தலைப்பிலான கட்டுரையில், பல கல்வியியல் விமர்சகர்கள் அவரது வழக்கமான கையிருப்பில் இருந்த அரசியல் விதிவசவாதத்திற்கு எதிராக காவுட்ஸ்கி வாதிடுகிறார்:

சமூகத்தின் நலனுக்கு அத்தியாவசியம் என்கிற சமயத்தில் புரட்சியை எப்பொழுதுமே வெற்றிக்கு அழைத்துச் சென்று விடுகிற வகையில் மிகுந்த தேவையுடனான நோக்கத்துடன் இந்த உலகம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி மற்றும் அதன் பின் வரக் கூடிய சோசலிசத்தின் அவசியம் குறித்து நாம் பேசுகையில், வெற்றி தவிர்க்கவியலாதது என்றோ அல்லது நமது விமர்சகர்கள் பலரும் நினைப்பது போல, அது தன்னியல்பாகவும் இன்னும் புரட்சிகர வர்க்கம் இயக்கமற்றிருந்தால் கூட விதிவச நிச்சயத்துடன் நடந்தேறும் என்றோ நாம் அர்த்தப்படுத்தவில்லை. முன்னோக்கி செல்வதற்கு புரட்சி மட்டுமே சாத்தியம் என்கிற பொருளில் அவசியம் என்பது இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது எதிரிகளைத் தோற்கடிப்பதில் வெற்றி காணவியலாமல் போகும்போது, சமூகம் அதற்கு மேல் முன்னேறிச் செல்ல முடியாது, தேங்கி நிற்க வேண்டும் அல்லது அழுகத்தொடங்க வேண்டும்.

"பிரெஞ்சு புரட்சியின் சான்ஸ்-குலோட்டுகள்” (“The Sans-Culottes of the French Revolution”) என்கிற இன்னொரு கட்டுரையில் புரட்சிகர வன்முறை குறித்த ஒரு உண்மையான புகழுரை இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் 1889ல் எழுதப்பட்ட இக்கட்டுரை 1905ம் ஆண்டில் மறுவெளியீடு செய்யப்பட்டது. காவுட்ஸ்கியின் கூற்றுப்படி, ஜாக்கோபின் ஆட்சியின் பயங்கரவாதம் “உள்ளே இருக்கும் கபட எதிரியை மிரளச் செய்வதற்கும் நடுங்கச் செய்வதற்கும் ஒரு போர் என்ற ஆயுதத்தை விட அதிகமான ஒன்றாய் இருந்தது. அத்துடன் புரட்சியின் காப்பாளர்கள் வெளிப்புற எதிரிகளுக்கு எதிராக தங்களது போராட்டத்தை தொடர்வதற்கு அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கும் இது சேவை செய்தது.” [11]

அப்படியானால் ஒரு திருத்த முடியாத “கண்ணியமற்ற” சடவாதியாக காவுட்ஸ்கி, அரசியலில் அகநிலைக் கூறின் பாத்திரம் குறித்து எந்தவிதமான உணர்வும் இல்லாதிருந்தார் என்று கூறப்படுவது பற்றி என்ன கருதலாம்? வெகுஜன நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் சக்திகள் குறித்த அவரது கருத்தாக்கம் வரண்ட தனிநபர் சாராத பொருளாதார துடிப்புகளை மட்டுமே அங்கீகரித்தது என்றும், உணர்ச்சிகளும் இலட்சியங்களும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கையில் எந்த முக்கியத்துவமான பாத்திரத்தையும் ஆற்றியதை அவர் ஒப்புக் கொள்ளத் தவறினார் என்றும் கூறப்படுவது பற்றி? காவுட்ஸ்கி குறித்த இந்த வழக்கமான சித்திரத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள், அமெரிக்க தொழிலாளர்கள் இடையே “புரட்சிகர கற்பனாலட்சியங்கள்” இல்லாதிருப்பதும் அவை “மிகவும் மனச்சாட்சியற்ற முதலாளித்துவத்தின்” புத்திஜீவிகள் இடையே பரவலாய் நிறைந்திருப்பதும் அமெரிக்காவில் சோசலிசத்தின் பலவீனத்தில் முக்கியமான காரணிகளாக இருப்பதாய் அவர் கருதினார் என்பதை அறியும்போது மிகவும் ஆச்சரியம் கொள்வார்கள். [12]

இந்த கூட்டுத்திரட்டு தெளிவாக்குவது போல, ரஷ்ய விடயங்களில் காவுட்ஸ்கி செயலூக்கத்துடன் ஈடுபட்டதன் காரணம் வெறுமனே, ஜார் தலைமையேற்றிருந்த ஒரு மூர்க்கத்தனமான பிற்போக்குவாத போலிஸ் அரசுக்கு எதிராக வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபட்டு இரத்தத்தை வியர்வையாய் சிந்திக் கொண்டிருந்த தனது இளம் தோழர்களுக்கு ஒரு நல்லுள்ளம் படைத்த மூத்தவர் பேணும் அக்கறையின் வெளிப்பாடு மட்டுமன்று. ரஷ்ய நிகழ்வுகள், குறிப்பாக ரஷ்ய-ஜப்பான் போர் மற்றும் 1905 புரட்சி வெடித்ததன் பிந்தைய விளைவுகள், ஜேர்மனியில் சோசலிச இயக்கத்தின் தலைவிதிக்கு அதிமுக்கியமானவையாக காவுட்ஸ்கியாலும் அப்போது அவரது நெருங்கிய கூட்டாளியான ரோசா லுக்சம்பேர்க்காலும் பார்க்கப்பட்டன.

SPD (ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி) இன் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிப்பதில் தொழிற்சங்கங்களின் அதிகாரம் பெருகிக் கொண்டிருந்ததைக் கண்டு ரோசா லுக்சம்பேர்க் போலவே காவுட்ஸ்கியும் ஆழமாய் கவலையுற்றார். 1903 செப்டம்பரில் டிரேஸ்டன் நகர கட்சி காங்கிரசில் எட்வார்ட் பேர்ன்ஸ்ரைனின் திருத்தல்வாதத்தை மரபுவழி மார்க்சிஸ்டுகள் முறைப்படி வெற்றி கண்டனர் என்றாலும், தொழிற் சங்கங்களால் செலுத்தப்பட்ட அழுத்தமானது சமூக ஜனநாயகக் கட்சி ஒரு புரட்சிகர இயக்கமாக இருப்பதற்கு ஒரு மிகப் பெரும் அபாயமாக விளங்கியது. 1905 புரட்சி வெடிப்பானது கட்சிக்குள் அரசியல் மோதலை தீவிரப்படுத்தியது.

ரஷ்யாவில் நடந்த பாரிய வேலைநிறுத்தங்கள் ஜேர்மனியில் புரட்சிகரப் போராட்டம் மற்றும் சுய-தியாகத்தின் ஒரு புதிய அலைக்கு கட்டியம் கூறுவதாக சமூக ஜனநாயகக் கட்சிக்குள் இருந்த இடதுசாரி சக்திகளின் தலைவர்கள் கண்டனர். பின்னாளில் பிரதம சீர்திருத்தவாதியாக மாறிய ருடோல்ஃப் ஹில்பர்டிங் கூட ரஷ்ய எழுச்சியில் இருந்து உத்வேகத்தைப் பெற்றார். நவம்பர் 14, 1905 அன்று காவுட்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு கூறினார்: “ஜாரிச நிலைக்குலைவு என்பது இப்போது நெருங்கிக் கொண்டிருக்கும் நமது புரட்சியின், நமது வெற்றியின் தொடக்கமாகும். 1848ல் வரலாற்று நகர்வு குறித்து மார்க்ஸ் தவறுதலாக வெளிப்படுத்தியிருந்த, எதிர்பார்ப்பு இப்போது பூர்த்தி செய்யப்படும் என்றும் நாம் நம்புகிறோம்.” [13]

வெகுஜனப் போராட்டங்கள் குறித்து காவுட்ஸ்கி இன்னும் பேரார்வத்துடன் இருந்தார். 1905ம் ஆண்டில் அவர் எழுதினார்: “நிரந்தரமான ஒரு புரட்சி தான் ரஷ்ய தொழிலாளர்களுக்கு மிகவும் அவசியமாக இருக்கும் ஒன்றாகும்.”[14] காவுட்ஸ்கி அறிவித்தார்: “புரட்சிகர அபிவிருத்திகளின் ஒரு சகாப்தம் தொடங்கியிருக்கிறது. மெதுவான, வலி மிகுந்த, ஏறக்குறைய புலனுணர முடியாத முன்னேற்றங்கள் எல்லாம் வழிவிட்டு புரட்சிகள், முன்நோக்கிய திடீர் பாய்ச்சல்கள் கொண்ட சகாப்தம் திறக்கும். அவ்வப்போது பெரும் தோல்விகளும் கிட்டும் தான், ஆனாலும் இறுதியில் மாபெரும் வெற்றிகள் கிட்டும். பாட்டாளி வர்க்கத்தின் செயல்திறனில் நாம் அத்தகையதொரு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.” [15]

ஆனால் சமூக ஜனநாயகக் கட்சிக்குள்ளாக போர்க்குணமிக்க போக்குகளின் உணர்வுகளுக்கு ஊக்கமூட்டிய அதே புரட்சி தொழிற்சங்க தலைமையை அச்சத்தாலும் எரிச்சலாலும் நிரப்பியது. ரஷ்ய மாதிரியின் தாக்கத்தில் அச்சம் கொண்டு, 1905 மே மாதத்தில் கோல்ன் (Köln) நகரில் நடந்த சமூக ஜனநாயக சுதந்திர தொழிற் சங்கங்களின் ஐந்தாவது காங்கிரஸ் வெகுஜன வேலைநிறுத்தத்தை நிராகரித்ததோடு அதனை ஊக்குவித்த ஆர்ப்பாட்டத்தையும் தடை செய்தது. சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் ஒகுஸ்ட் பேபெல் “சாதாரண, தனித்த” தொழிற்சங்கவாதத்தை தாக்கியதோடு, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் பாரிய வேலை நிறுத்தத்தை வழிமொழியும் தீர்மானத்தை ஆதரித்தார். இந்த தீர்மானம் 1905 செப்டம்பரில் ஜெனாவில் நடந்த கட்சி காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது.

ஆயினும், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான அதிகார சமநிலையானது முந்தைய சகாப்தத்தில் இருந்து கட்சிக்கு சாதகமற்ற வகையில் வெகு அளவில் மாறியிருந்தது. கட்சியின் தலைமையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டவை தான் என்றாலும் தொழிற்சங்கங்களின் உறுப்பினத்துவம் பெருகி அவற்றின் வங்கிக் கணக்குகளும் ஊதி வளர்ந்த போது அவை தனித்துவமான தீர்மானகரமான எதிர்ப்புரட்சி நலன்களை முன்வைத்தன. தியோடர் போமெல்பேர்க் என்னும் தொழிற்சங்கங்களின் செய்தித் தொடர்பாளர் வெளிப்படையாக அறிவித்தது போல எல்லாவற்றுக்கும் மேல் அவர்கள் விரும்பியதெல்லாம் “நிம்மதியும் அமைதியும்” தான். 1905 வாக்கில் தொழிற்சங்கங்களின் வருடாந்திர வருவாய் சமூக ஜனநாயகக் கட்சியினுடையதைக் காட்டிலும் சுமார் ஐம்பது மடங்குகள் அதிகமானதாய் இருந்தது. தொழிற்சங்கங்களின் மானியங்களை சார்ந்து சமூக ஜனநாயகக் கட்சி வளர்ச்சியுற்ற நிகழ்வு அதிகரித்த மட்டத்திற்கு, அது அவற்றின் கோரிக்கைகளுக்கு ஆட்படுவதானது. மேலும், தொழிற்சங்கங்கள் சமூக ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொண்டு திருத்தல்வாதிகளின் பிரிவுகளுடன் சேர்ந்து உறுதியெடுத்துக் கொண்ட எதிர் புரட்சிகர “தொழிலாளர்கள்” கட்சியை உருவாக்கும் சாத்தியம் குறித்தும் பேபெல் போன்ற அனுபவம் வாய்ந்த சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். அரசு சமூக ஜனநாயகக் கட்சியின் மீது வன்மத்துடன் தாக்குவதற்கான நிலைமைகளை இது உருவாக்கும். தொழிற்சங்கங்களை சாந்தப்படுத்துவதற்கு சமூக ஜனநாயகக் கட்சியின் மீதிருந்த அழுத்தம் பிரம்மாண்டமானதாய் இருந்தது. இவ்வாறாக, ஜெனா காங்கிரசில் பாரிய வேலைநிறுத்த தீர்மானம் நிறைவேறிய போதிலும், சமூக ஜனநாயகக் கட்சி நிர்வாகக் குழு தொழிற்சங்க பொது வாரியத்துடன் இரகசியமாக சந்தித்தது. ”ஒரு வெகுஜன வேலைநிறுத்தத்தை சமூக ஜனநாயகக் கட்சி முடிந்த அளவு தடுக்க முயல வேண்டும்” என்கின்ற உறுதி கோரிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு பேபெல் அடிபணிந்தார். ஒரு அரசியல் வேலைநிறுத்தம் நிகழ்ந்தால், தொழிற்சங்கங்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொள்ளும் என்று பொது வாரியம் சமூக ஜனநாயகக் கட்சியை எச்சரித்தது. வேலைநிறுத்தத்தை இரகசியமாய் கீழறுக்க தொழிற்சங்கங்கள் வெளிப்படையாய் வேலை செய்யாது என்பது அவை வளங்கிய ஒற்றை விட்டுக்கொடுப்பாகும். வர்க்க உறவுகளை தீவிரமயமாக்க அச்சுறுத்தும் எதற்கும் தொழிற்சங்க தலைமை காட்டிய கடுமையான குரோதத்தை மனதில் கொண்டு பார்த்தால், இந்த விட்டுக்கொடுப்பிலும் சமூக ஜனநாயகக் கட்சி நம்பிக்கை வைத்ததா என்பது சந்தேகமே.

காவுட்ஸ்கியின் நெடிய புரட்சிகர வாழ்க்கையில் இந்த காலகட்டம் தான் உயர்ந்த புள்ளியாகும். தொழிற்சங்க தலைவர்களின் கடுமையான தாக்குதல்களில் இருந்து இவர் லுக்சம்பேர்க்கை பாதுகாத்துப் பேசியதால், அவர் இவரை பாசத்துடனும் மரியாதையுடனும் “மாமனிதர் கார்ல்” (Karolus Magnus) என்று குறிப்பிட்டார். அதன்பின் காவுட்ஸ்கி வலதுநோக்கி நகர்ந்த போது (இதனை தொழிற்சங்கங்களை சாந்தப்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்பதாக தனிப்பட்ட உரையாடலில் காவுட்ஸ்கி நியாயப்படுத்தினார்) லுக்சம்பேர்க் கொண்ட பயங்கர ஏமாற்றத்தையும் கடுமையையும் அவர்களின் நெடிய உறவின் பின்புலத்தில் தான் புரிந்து கொள்ள முடியும்.

இந்த தொகைத்திரட்டில் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சிக்குள் (RSDLP) தோன்றிய முக்கியமான ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. ரியாசனோவ் என்னும் கட்சிப் பெயர் கொண்ட டேவிட் போரிஸோவிச் கோல்’டெண்டா எழுதிய இரண்டு ஆவணங்களும் இதில் அடங்கும். 1870ல் ஓடிசாவில் பிறந்த இவர் பின்னர் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஆகியோரின் இலக்கிய பாரம்பரியத்தின் தளர்ச்சியற்ற வரலாற்றாசிரியராகவும் காப்பக அறிஞராகவும் சிறந்த வகையில் அறியப்பட்டார். போல்ஷிவிக் புரட்சிக்குப் பின்னர், இவர் அரசு காப்பக கூட்டமைப்புக்கு தலைமை தாங்கியதோடு சோசலிஸ்ட் அகாதமி மற்றும் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகத்திற்கும் உதவினார். இவர் மேற்கு ஐரோப்பாவிற்குப் பயணம் செய்து பல்வேறு சமூக ஜனநாயக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தொடர்பான பரந்த அளவிலான ஆவணங்களைப் பெற்றார்.

இந்த மிகச்சிறந்த மார்க்சிச அறிஞர் ஒரு முக்கிய புரட்சிகர தத்துவாசிரியராகவும் வாழ்ந்தார். ட்ரொட்ஸ்கியைப் போல இவரும் போல்ஷிவிக் மற்றும் மென்ஷிவிக் கன்னைகளுக்கு வெளியே நின்றார். 1917ம் ஆண்டிலும், ட்ரொட்ஸ்கியைப் போலவே, மாவட்டங்களுக்கு இடையிலான அமைப்பின் (Mezhraionka) உறுப்பினராகி பின் அக்கோடையில் போல்ஷிவிக் கட்சிக்குள் நுழைந்தார். போல்ஷிவிக் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகான ரியாசனோவின் பாத்திரம் குறித்து அலெக்சாண்டர் ரபினோவிட்ச் எழுதிய அதிகாரத்தில் போல்ஷிவிக்குகள் (இண்டியானா யுனிவர்சிட்டி பிரஸ், 2007) என்னும் படைப்பில் தீவிரமான கல்வியியல் கவனம் அளிக்கப்பட்டுள்ளது. மென்ஷிவிக்குகளின் ஒரு பிரிவினருடன் பொதுவான களம் காண அவர் முயன்றார். ரியாசனோவின் நெடிய புரட்சிகர வாழ்க்கை, மார்க்சிச தத்துவம் மற்றும் சோசலிச இயக்க வரலாற்றில் அவரது ஆழமான அறிவு, மற்றும் அவரது அகன்ற கலாச்சார ஆர்வங்கள் ஆகியவை சோவியத் ஒன்றியத்தில் புரட்சிகர மார்க்சிச புத்திஜீவிகளை அழிக்கும் ஸ்ராலின் பிரச்சாரத்தின் தவிர்க்கவியலாத ஆரம்ப இலக்காக அவரை ஆக்கின. முதலில் 1931 பெப்ரவரியில் ரியாசனோவ் கைது செய்யப்பட்டார், “மென்ஷிவிக் மைய”த்தின் பாகமாக இருந்ததாகவும் “வரலாற்று விடயத்தில் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில்” ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ரியாசனோவ் தனது “தனிநபர் நேர்மைக்கு பலியானார்” என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். [18] கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு சாரடோவுக்கு நாடு கடத்தப்பட்ட ரியாசனோவ் மீண்டும் 1937ல் கைது செய்யப்பட்டார். இராணுவ கண்காணிப்புக் குழு என்பதாய் அழைக்கப்பட்ட ஒன்று அவருக்கு ஜனவரி 21, 1938 அன்று மரண தண்டனை விதித்து, அதே நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த தொகைத் திரட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ரியாசனோவின் முதல் ஆவணம் 1902-03 காலத்தில் ’இஸ்காரா’வின் வேலைத்திட்ட வரைவு மற்றும் ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகளின் கடமைகள் என்கிற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. மூல ஆவணம் 302 பக்கங்கள் வரை நீண்டு செல்கிறது என்பதால், டேவும் கெய்டோவும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிளவுகளை மட்டும் எடுத்து வழங்கியுள்ளனர். கன்னை மோதலின் தீவிரத்தை பிரதிபலிக்கும் சுவாரசியமான ஆவணமாக இது இருக்கிறது. திரும்பிப் பார்த்தால், 1903 செப்டம்பரில் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் இரண்டாவது காங்கிரசில் வெடித்த பிளவினை முன்கூட்டி சித்தரித்ததாய் இருக்கிறது. மேலும் வரவிருக்கும் ரஷ்ய புரட்சியின் அத்தியாவசிய முதலாளித்துவ தன்மை குறித்தும் வடிவம் குறித்துமான பிளெக்கானோவிய கருத்தாக்கம் குறித்தான அதிருப்தியும் இந்த ஆவணத்தில் நிச்சயமாய் வெளிப்படுகிறது. ஆயினும், “இஸ்காரா வேலைத்திட்டம் குறித்த ரியாசனோவின் விமர்சனம் மிகக் குறிப்பிடத்தக்க ஒன்று, ஏனெனில் ஏறக்குறைய ஒவ்வொரு அம்சத்திலும் அது நிரந்தரப் புரட்சி தத்துவத்தை முன் எதிர்பார்க்கிறது” என்று டேயும் கெய்டோவும் திட்டவட்டமாய் கூறுகையில் அது சற்று மிகைப்படுவதாய் அமைவதாகவே இம்மதிப்புரையாளர் நம்புகிறார். [19]

தொழிலாள வர்க்கத்தின் கடமைகளை வரையறுக்கையில் புரட்சிக்குப் பின்னர் முதலாளித்துவ ஆட்சிக்கு அடிபணிவது என்கிற பிளெக்கானோவின் எண்ண ஓட்டத்தைக் கடந்ததொரு வகையிலான சில சூத்திரப்பாடுகளைக் கொண்டு ரியாசனோவ் முயற்சித்தார். அத்துடன் ரியாசனோவ் புரட்சிகர போராட்டத்தில் விவசாயிகள் ஒரு முக்கியமான சுயாதீனமான பாத்திரத்தை ஆற்றலாம் என்ற ஒரு ஐயுறவுவாத மனப்போக்கையும் வெளிப்படுத்துகிறார். அது பற்றி பின்னர் பர்வஸ் மற்றும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களில் இன்னும் வேகத்துடன் அதற்கு எதிராக அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆயினும் வரவிருக்கும் புரட்சிகர ஆட்சி குறித்து ரியாசனோவின் சூத்திரங்கள் எல்லாம் சற்று தற்காலிகவயப்பட்டவையாக உள்ளன. “புரட்சியானது சந்தேகத்திற்கிடமில்லாமல் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் தான் நிகழும், அந்த அர்த்தத்தில் அது நிச்சயமாக ‘முதலாளித்துவ’ புரட்சியே....” என்று அவர் எழுதுகிறார். ஆனால் ”ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பாட்டாளி வர்க்கம் புரட்சியின் தலைமைக் கூறாக இருக்கும் என்பதாலும், ஒட்டுமொத்த இயக்கத்தின் மீதும் தனது வர்க்க முத்திரையைப் பதிக்கும் என்பதாலும் அந்த அர்த்தத்தில் அது பாட்டாளி வர்க்க புரட்சியாகவும் இருக்கும்.” ஆவணத்தின் இன்னொரு பகுதியில் அவர் உறுதிபடக் கூறுகிறார். [20] “முதலாளித்துவத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க போராட்டம் சுதந்திரமாக அபிவிருத்தியுறுகிற வடிவம் தான் ஒரு ஜனநாயகக் குடியரசாகும்”. [21] ஆயினும் இந்த சூத்திரமாக்கல்கள் எல்லாம் ட்ரொட்ஸ்கியால் பின்னர் கொண்டு செலுத்தப்பட்டவற்றுடன் ஒப்பிட்டால் கணிசமாக பின்தங்குகின்றன. தொழிலாள வர்க்கம் புரட்சியில் தனது தடத்தைப் பதிப்பதோடு அரசு அதிகாரத்தையும் கைப்பற்றும் என்று ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.

ரியாசனோவ் ஆவணத்தின் ஒரு பெரும் பகுதி - மிகப் பலவீனமான பகுதிகள் - லெனினின் ‘என்ன செய்ய வேண்டும்’ மீதான தாக்குதலுக்கு, அதிலும் குறிப்பாக சோசலிச நனவு தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக தன்னிச்சையாய் அபிவிருத்தியுறுவதில்லை, மாறாக அது வெளியில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு வரப்படுகிறது என்று லெனின் வலியுறுத்தியன் மீதான தாக்குதலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. லெனினின் இந்த கருத்துக்கு எதிரான ஒரு வலிமையான விவாதவியல் வாதத்தில் “தோழர் லெனின் வரம்பு கடந்து செல்கிறார்” என்று ரியாசனோவ் எழுதுகிறார். டே மற்றும் கெய்டோவின் வர்ணனை ரியாசனோவின் நிலைப்பாட்டில் அவர்கள் ஓரளவுக்கு அனுதாபத்துடன் இருப்பதையே சுட்டிக்காட்டுகின்றன. ஆயினும், சரியாக இந்த விடயத்தில் தான் - அதாவது, சோசலிசம் தொழிலாள வர்க்கத்தின் தன்னிச்சையான பொருளாதார போராட்டங்கள் மற்றும் நடைமுறை செயல்பாடுகளின் வட்டத்திற்கு வெளியில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக கொண்டு வரப்படுகிறது என்பது - லெனின் மீதான காவுட்ஸ்கியின் தாக்கம் மிகவும் திட்டவட்டமானதாய் இருந்தது. தனது என்ன செய்ய வேண்டும் என்னும் படைப்பில் லெனின், காவுட்ஸ்கி எழுதிய ஒரு நீளமான பத்தியை சேர்த்து பின் “சோசலிச நனவு என்பது பாட்டாளி வர்க்க போராட்டத்துக்குள் வெளியில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் ஒன்றே தவிர உள்ளுக்குள்ளேயே தன்னிச்சையாய் எழுவதல்ல” என்று விளக்கினார். [22] சீர்திருத்தவாதத்திற்கான ரியாசனோவின் எதிர்ப்பு இருந்த போதிலும், சில வெகுமுக்கிய அம்சங்களில் ‘என்ன செய்ய வேண்டும்’ படைப்பின் பிரதான இலக்காக இருந்த பொருளாதாரவாதிகளின் நிலைப்பாடுகளை ஒத்த நிலைப்பாடுகளையே அவரது ஆவணம் முன்னெடுக்கிறது. இஸ்காரா மீதான ரியாசனோவின் விமர்சனத்தை ஒரு வரலாற்றாசிரியர் 1970ல் எழுதுகையில் “புரட்சிகர பொருளாதாரவாதம்” என விவரித்ததாய் டே மற்றும் கெய்டோ குறிப்பிடுகின்றனர். [23]

சுமார் மூன்று வருட காலம் கழித்து 1905 புரட்சியின் மத்திய சமயத்தில் எழுதப்பட்ட ரியாசனோவின் இரண்டாவது ஆவணம் ட்ரொட்ஸ்கி மற்றும் பர்வஸ் அபிவிருத்தி செய்த சூத்திரப்பாடுகளுக்கு நெருக்கமாக வரும் சூத்திரமாக்கங்களை கொண்டிருக்கிறது. “சொத்துடமை குறித்த பிரச்சினை”யின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ரியாசனோவ் அறிவித்தார்:

தனது சொந்த கடமைகளை நிறைவு செய்வதில் தனது அனைத்து முயற்சிகளையும் ஒன்றுபடுத்துகின்ற அதே சமயத்தில், தொழிலாள வர்க்கமானது, தற்காலிக அரசாங்கத்தில் பங்கேற்பதல்ல பிரச்சினை, மாறாக தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் ‘முதலாளித்துவ புரட்சி’யை சோசலிசப் புரட்சிக்கான ஒரு நேரடி முன்நிகழ்வாக மாற்றுவதும் தான் உண்மையான பிரச்சினை என்பதான தருணத்தை நெருங்குகிறது. [24]

ரஷ்ய புரட்சிக்கான தத்துவம் மற்றும் மூலோபாயத்தின் பரிணாமத்தில், “பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்” குறித்த லெனினின் கருத்தாக்கமானது 1905ல் பிளெக்கானோவின் மரபுவழி கருத்தாக்கத்திற்கான ஒரு முக்கிய மாற்றாக எழுந்தது. லெனினின் முன்னோக்கு பிளெக்கானோவினுடையதில் இருந்து இரண்டு அடிப்படை அம்சங்களில் வேறுபட்டது. அந்த இரண்டு அம்சங்களுமே நீண்டகால அரசியல் மற்றும் நடைமுறைத் தாக்கங்களைக் கொண்டிருந்தன. முதலாவதாக, வரவிருக்கும் புரட்சி முதலாளித்துவ புரட்சி என்றே லெனின் குணாம்சப்படுத்தினார் என்றாலும் அந்த புரட்சிக்கு ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் தலைமையேற்கவே முடியாது எனும் போது புரட்சியை முதலாளித்துவ வர்க்கம் ஒரு தீர்மானமான முடிவிற்கு இட்டுச்செல்வது என்கிற கருத்தை அவர் தீர்மானமாய் நிராகரித்தார். பிளெக்கானோவ் கருத்துக்கு நேரெதிராய், முதலாளித்துவ தாராளவாதிகளுடனான எந்த அரசியல் கூட்டணி உறவையும் லெனின் திட்டவட்டமாய் நிராகரித்தார். மேலும், லெனினைப் பொறுத்த வரை, “முதலாளித்துவ” புரட்சியின் அத்தியாவசியமான வரலாற்று முக்கியத்துவமானது ஜனநாயக நாடாளுமன்ற ஸ்தாபனங்களை நிறுவுவதில் அடங்கியிருக்கவில்லை, மாறாக கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ உறவுகளின் அனைத்து சுவடுகளையும் தீவிரமாய் அழிப்பதில் தான் அடங்கியிருந்தது. இதனால் தான் “விவசாயப் பிரச்சினை” என்பதான ஒன்றை ஜனநாயகப் புரட்சியின் மையத்தில் லெனின் இருத்தினார். “பிளெக்கானோவை விட கணக்கிடமுடியாத பெரும் சக்தியையும் உறுதியையும் கொண்டிருந்த லெனின் விவசாயப் பிரச்சினையை ரஷ்யாவில் ஜனநாயகத் திருப்பத்தின் மையப் பிரச்சினையாக முன்னெடுத்தார்” என்று ட்ரொட்ஸ்கி நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மூலங்கள் குறித்த தனது கடைசி முக்கிய கட்டுரையில் வலியுறுத்திக் கூறினார்.

பிளெக்கானோவ் கூறியதில் இருந்து அடிப்படையில் வேறுபட்ட ஒரு அரசியல் மூலோபாயம் இந்த பகுப்பாய்வில் இருந்து எழுந்தது. நாட்டுப்புறங்களில் பழைய நில உடைமை வர்க்கங்களின் பரந்த நிலப்பரப்புகளை பறிமுதல் செய்வதை அவசியமாக்கிய ஜனநாயகப் புரட்சியின் வெற்றியானது ரஷ்யாவின் மில்லியன் கணக்கான விவசாயிகளின் பாரிய அணிதிரட்டலால் தான் சாதிக்கப்பட முடிந்தது. தனியார் உடைமைக்கு எதிராக செலுத்தப்படும் வெகுஜன நடவடிக்கையின் எந்த வடிவத்திற்கும் குரோதப்பட்ட ரஷ்ய முதலாளித்துவம் கிராமப்புறத்தில் நிலவும் உடைமை உறவுகளைப் புரட்சிகரமாய் புரட்டிப் போடுவதை அனுமதிக்கவோ அல்லது, தலைமையேற்கவோ முடியவில்லை. ஆனால் ரஷ்ய மக்களில் மிகப் பெரும்பான்மையினராக இருந்த விவசாயிகளின் அத்தகையதொரு பாரிய அணிதிரட்டல் மூலமாக மட்டும் தான் ஜாரிச ஆட்சி தூக்கியெறியப்பட முடிந்தது.

எனவே, லெனினைப் பொறுத்தவரை, தாராளவாத முதலாளித்துவத்தை நோக்கி பிளெக்கானோவ் திரும்புவதானது புரட்சிக்கு அழிவுதான். ஜாரிச ஆட்சிக்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அத்தியாவசியமான கூட்டாளி விவசாயிகள் தான். ஜனநாயகப் புரட்சியின் இயக்கவியல் குறித்த இந்த மதிப்பீட்டில் இருந்து தான், பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்னும் ஜாரிச எதேச்சாதிகாரத்தை பிரதியீடுசெய்ய கூடிய புரட்சிகர அரசு அதிகாரத்தின் புதிய வடிவம் குறித்த கருத்தை லெனின் அபிவிருத்தி செய்தார். ஜனநாயகப் புரட்சி குறித்த லெனினின் கருத்தாக்கம் ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் போல்ஷிவிக் பிரிவை (1912 வரை போல்ஷிவிக்குகள் தங்களை சுயாதீனமான கட்சியாக அறிவித்துக் கொள்ளவில்லை) முதலாளித்துவத்திற்கும் மற்றும் ஜார் தூக்கியெறியப்படுவதன் ஒரே நியாயபூர்வமான அரசியல்ரீதியான விளைபொருளாக ஒரு தாராளவாத முதலாளித்துவ நாடாளுமன்ற குடியரசு மட்டுமே இருக்கும் என ஏதேனும் ஒரு வடிவத்தில் வலியுறுத்திய அனைத்து மென்ஷிவிக் போக்குகளுக்கும் சமரசப்படுத்த முடியாத அரசியல் குரோதமுடையதாக்கியது. ஆயினும் ஜனநாயகப் புரட்சிகளுக்கும் சோசலிசப் புரட்சிகளுக்கும் இடையில் லெனின் தெளிவாய் வித்தியாசப்படுத்திக் காட்டினார். லெனின் கருத்தில் கொண்ட பாட்டாளிகளினதும் விவசாயகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்பது முதலாளித்துவ உறவுகளின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்படும். 1905ல் எழுதுகையில் லெனின் விளக்கினார்:

ஆனால் அது ஒரு ஜனநாயக சர்வாதிகாரமாக இருக்குமே அன்றி சோசலிச சர்வாதிகாரமாக இருக்காது என்பது உண்மையே. (புரட்சிகர அபிவிருத்தியின் தொடர்ச்சியான இடைக் கட்டங்கள் இன்றி) இதனால் முதலாளித்துவத்தின் அத்திவாரங்களை பாதிக்க முடியாது. சிறப்பான வகையில் செய்யப்பட்டால், அது விவசாயிகளுக்கு சாதகமாக நில உடைமையில் தீவிரமான மறுபங்கீட்டைக் கொணரலாம், ஒரு குடியரசை உருவாக்குவது மற்றும் கிராமப் பகுதிகளில் மட்டுமல்லாது தொழிற்சாலை வாழ்க்கையிலும் ஆசிய அடிமைத்தனத்தின் ஒடுக்குமுறை அம்சங்கள் அனைத்தையும் நீக்குவது உள்ளிட்ட முழுமையான ஜனநாயகத்தை ஸ்தாபிக்கலாம், தொழிலாளர்களின் நிலைமைகளில் ஒரு முழுமையான மேம்பாட்டிற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் ஒரு எழுச்சிக்குமான அடித்தளத்தை அமைக்கலாம், மற்றும் கடைசியாக ஆனாலும் முக்கியத்துவத்தில் குறைவில்லாது, ஐரோப்பாவிற்குள் புரட்சிகர நெருப்பை சுமந்து செல்லலாம். ஆயினும் இத்தகையதொரு வெற்றி எந்த வகையிலும் நமது முதலாளித்துவப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சியாக மாற்றி விடாது; ஜனநாயகப் புரட்சி உடனடியாக முதலாளித்துவ சமூக மற்றும் பொருளாதார உறவுகளின் எல்லைகளைக் கடந்து விட முடியாது; எப்படியிருப்பினும், ரஷ்யா மற்றும் மொத்த உலகத்தின் வருங்கால அபிவிருத்திக்கு இத்தகையதொரு வெற்றியின் முக்கியத்துவம் மிகச் செறிந்ததாகும். [26]

ட்ரொட்ஸ்கி பின்னர் எழுதியதைப் போல லெனினின் வேலைத்திட்டம், முதலாளித்துவ புரட்சி குறித்த பிளெக்கானோவின் கருத்தாக்கத்தைக் கடந்து ”முன்னால் எடுத்து வைத்த ஒரு மிகப்பெரும் அடியை” பிரதிநிதித்துவப்படுத்தியது. [27] ஆயினும் லெனினின் சூத்திரமாக்கலின் இருமுகப்பட்டதன்மையையும் மட்டுப்படுத்தப்பட்டதன்மையையும் வெளிப்படுத்துவதாய் அமைந்த தொடர்ச்சியான பல தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகளை அது எழுப்பியது. குறிப்பாக, லெனினின் கருத்தாக்கத்தில், அதிகாரமானது பாட்டாளிகள் மற்றும் விவசாயிகள் ஆகிய இரண்டு வர்க்கங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற ஒரு புதிய முன்கண்டிராத அரசு வடிவத்தின் உருவாக்கம் எதிர்பார்க்கப்பட்டது. இந்த இரண்டு வர்க்கங்களுக்கு இடையே அதிகாரம் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட முடியும்? மேலும், லெனின் தெளிவாய் அங்கீகரித்ததைப் போல, பழைய நிலப் பண்ணைகள் அழிக்கப்பட்டு நிலம் மறுபங்கீடு செய்யப்பட்டிருப்பதால் நிலம் தனியார் உடைமையாய் இருப்பது முடிவுக்கு வந்து விட்டது என்பது அர்த்தமல்ல. சற்று சமநிலைப்பட்ட அடிப்படையில் என்றாலும் விவசாயகள் தனிச்சொத்துடைமையுடன் இணைந்ததாகத்தான் இருந்தது. எப்படியாயினும், விவசாயிகள் தனிச்சொத்துடைமையை எதிர்ப்பதற்கும், பாட்டாளி வர்க்கத்தின் சமூக இலட்சியங்கள் மற்றும் நோக்குநிலைக்கும் குரோதமாகத் தான் இருந்தது. இரண்டு வர்க்கங்களின் சமூக நோக்குநிலையிலான இந்த அடிப்படை முரண்பாடு லெனினின் ஜனநாயக சர்வாதிகாரம் குறித்த கருத்தின் செல்லுபடியாகும் தன்மையை கேள்விக்குரியதாக்கியது.

லெனினின் வேலைத்திட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தபோதிலும், ஒரு புறநிலையான வரலாற்று அர்த்தத்தில், அது ரஷ்ய புரட்சிகர சிந்தனையின் அபிவிருத்தியில் ஒரு முக்கியமான மைல்கல்லை குறித்தது. ஆகவே, லெனினின் நிலைப்பாடு குறித்த டே மற்றும் கெய்டோவின் பலவீனமான அணுகுமுறை மற்றும் ஏறக்குறைய நிராகரிக்கும் மனோநிலை இந்த மதிப்புரையாளரை சற்று குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இந்த ஒரு இடத்தில் தான் அரசியல் நிலைப்பாடு உரசிக்கொள்வதை குறித்து ஒருவர் காண முடிவதுடன், நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மீதான விவாதம் குறித்த பொதுவாக மிகச் சிறந்ததாய் அமைந்திருக்கும் அவர்களின் இத்திறனாய்வை இது பலவீனப்படுத்துகிறது. அவர்கள் தெரிவிப்பதாவது: "லெனின் கூறிய 'பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம்' எனும் கருத்தின் பிரச்சினை வெளிப்படையானது. ரஷ்யாவில் ஒத்துழைத்து செயல்படத்தக்க எந்த புரட்சிகர குட்டி முதலாளித்துவ கட்சியும் இல்லை. இத்தகையதொரு கட்சி இறுதியில் எழும் என்று லெனின் கருதினார், ஆனால் அரசியல் தந்திரோபாயத்தினை அடிப்படையாகக் கொள்ளக் கூடிய ஒரு நடைமுறையை அடிப்படையில் அமைந்ததாக இக்கருதுதல் இருக்கவில்லை." [28]

இந்த முடிவு ஒருவரை ஆச்சரியப்படச் செய்கிறது. லெனினின் தத்துவத்தில் என்ன மட்டுப்படுத்தப்பட்டதன்மைகள் இருந்தாலும், அவை நிச்சயமாக "வெளிப்படையாய் அமைந்தவையாய்" இருக்கவில்லை. அப்படி இருந்திருக்குமானால், "ஜனநாயக சர்வாதிகார" முன்னோக்கு மீதான ட்ரொட்ஸ்கியின் விமர்சனங்களும், அதனைக் கடந்து நிரந்தரப் புரட்சி தத்துவமாக அதனை அவர் அபிவிருத்தி செய்ததும் இத்தகையதொரு புத்திஜீவித்தன சாதனையாக இருந்திருக்காது. மேலும் ரஷ்யாவில் ஒரு வெகுஜன விவசாயக் கட்சிக்கான சாத்தியத்தை திறந்து வைத்திருந்ததற்காக லெனினை அதிகமாய் குறை காண முடியாது. சோசலிஸ்ட் புரட்சிகர கட்சி (Socialist Revolutionary Party) விவசாயிகளிடையே வெகுஜன ஆதரவைப் பெற்று -இந்த ஆதரவு ஸ்திரமானதாக இல்லாது போனாலும்- வருங்காலத்தில் அபிவிருத்தி கண்டது லெனின் எண்ணியது சரியென நிரூபித்தது. இறுதியாக, லெனின் பாரிஸ் கம்யூனின் பெரும்தோல்வியின் பின்னர் அரசியல் முதிர்ச்சி பெற்ற ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பாரிஸ் தொழிலாளர்கள் பிரெஞ்சு விவசாயிகளை தங்களது பக்கத்திற்கு அணிதிரட்ட முடியாமல் போனது வெர்சாயில்ஸில் இருந்த முதலாளித்துவ ஆட்சி 1871 மே மாதத்தில் கம்யூனை அழிப்பதற்கு வழிவகை செய்தது. அது எளிதாய் மறந்து விடத்தக்க ஒரு அரசியல் தோல்வி அல்ல. லெனினைப் பொறுத்த வரை, ரஷ்யாவில் (இந்த விஷயத்தில், ஒரு பெரும் விவசாய மக்களைக் கொண்ட எந்த ஒரு நாட்டுக்கும்) தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியானது விவசாயிகளின் ஆதரவை வெல்லும் அதன் திறனின் மீது தங்கியிருந்தது. வரலாற்று காலகட்டத்தை கருத்தில் கொள்வது எப்போதும் சிறந்தது. பாரிஸ் கம்யூனுக்கும் 1905 புரட்சிக்கும் இடையில் வெறும் 34 வருட இடைவெளியே இருந்தது. 1975 மே மாதத்தின் சய்கோன் (Saigon) வீழ்ச்சி இன்றைய நாளுக்கு எவ்வளவு அருகில் உள்ளதோ, கம்யூன் அழிவானது 1905ம் ஆண்டில் லெனின் தலைமுறைக்கு அதனினும் மிக அருகிலமைந்த நிகழ்வாய் இருந்தது!

ஜனநாயக சர்வாதிகாரம் குறித்த லெனினின் சூத்திரமாக்கலில் மிகப் பெரும் முக்கியத்துவம் கொண்ட இன்னொரு அம்சமும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேல், விவசாயிகளின் கிளர்ச்சிகளும், நிலங்களின் பாரிய பறிமுதலும் முதலாளித்துவ உறவுகளின் அழிவுக்கு இட்டுச் செல்லும் கட்டாயம் இல்லை என்ற அவரது வலியுறுத்தல் விவசாயிகளின் புரட்சிகர இயக்கத்தின் முரண்பாடான தன்மை குறித்த லெனினின் புரிதல் நுண்மையானதாகவும் கூர்மையானதாகவும் இருந்தது. இடதுகளுக்குள்ளாக (உதாரணமாக காஸ்ட்ரோ, மாவோ, நக்சலைட்டுகள் மற்றும் மெக்சிகோவின் "sub-Comandante" மார்கோஸ் ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே) மீண்டும் மீண்டும் அரசியல் குழப்பத்திற்கு காரணமாய் அமையும் ஒரு பிரச்சினையைக் கையாளுகின்ற லெனின், விவசாயிகளின் தீவிரவாதம் கிராமப்புற ஏழைகளுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகப் போராடுகிறது என்றாலும் சோசலிச வகையானது என்கிற பரவலாக இருக்கும் தவறான கருத்துக்கு எதிராக வாதிட்டார். நிலங்களை தேசியமயமாக்குவது ஜனநாயகப் புரட்சியின் ஒரு முக்கிய பாகம் என்பதோடு குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் முதலாளித்துவத்தின் அபிவிருத்திக்கு வெகு முக்கியமானதாகும் ஆகும் என்று லெனின் வலியுறுத்தினார். நிலங்களை தேசியவுடைமையாக்குவது சோசலிச நடவடிக்கை என்பதைக் காட்டிலும் ஒரு ஜனநாயக நடவடிக்கை ஆகும் என்பதை விளக்க முற்படும் லெனின் பின்வருமாறு எழுதினார்: "இந்த உண்மையை புரிந்து கொள்ள மறுப்பது சோசலிசப் புரட்சியாளர்களை (Socialist Revolutionaries) குட்டி முதலாளித்துவத்தின் நனவற்ற கருத்துவாதிகளாக்குகிறது. இந்த உண்மையில் வலியுறுத்தி நிற்பது சமூக ஜனநாயகத்திற்கு தத்துவத்தின் பார்வையில் மட்டுமல்லாது நடைமுறை அரசியலின் பார்வையில் இருந்தும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால் தற்போதைய "பொதுவான ஜனநாயக" இயக்கத்தில் பாட்டாளி வர்க்க கட்சியின் முழுமையான வர்க்க சுயாதீனம் என்பது ஒரு தவிர்க்கமுடியாத நிபந்தனை என்பது இதில் இருந்து தான் வருகிறது." [29]

ஜப்பானுடனான போரில் ரஷ்யா பெற்ற இராணுவப் பேரழிவுகள் ஒரு புரட்சியின் வெடிப்புக்கு அழைத்துச் சென்றது. குளிர்கால அரண்மனைக்கு 1905 ஜனவரி 9 அன்று எதிர்ப்பு பேரணி நடத்திய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதன் அறிவிப்பு அடையாளமானது. ரஷ்ய சாம்ராஜ்யத்திற்குள்ளான சமூக வெடிப்பு புரட்சிகர தத்துவத்தின் அபிவிருத்திக்கு சக்திவாய்ந்ததொரு உத்வேகத்தை அளித்தது. நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் சூத்திரமாக்கலில் மையப் பாத்திரம் ஆற்றிய இரண்டு பேர் பார்வஸ் மற்றும் ட்ரொட்ஸ்கி ஆவர்.

இறந்து 85 வருடங்கள் ஆகியும் ஜேர்மனியில் பார்வஸ் (1867-1924) குழப்பமூட்டும் ஒருவகைப் புதிரான மனிதராகத் தான் பார்க்கப்படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளிலும் ஒரு மார்க்சிச தத்துவாசிரியராக இவர் ஆற்றிய மிகச் சிறந்த பணியைக் காட்டிலும் முதலாம் உலகப் போரின் போதான தனது படுபயங்கர வர்த்தக நடவடிக்கைகளுக்காகத் தான் பார்வஸ் அதிகமாக நினைவுகூறப்படுகிறார். அச்சமயத்தில் அவர் புரட்சிகர இயக்கத்தைக் கைவிட்டிருந்தார். ஆனால் அலெக்சாண்டர் ஹெல்ப்ஹான்ட் என்னும் இயற்பெயர் கொண்ட பார்வஸ் ரஷ்யாவிலும் ஜேர்மனியிலும் புரட்சிகர இயக்கத்தின் வாழ்வில் ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றினார் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. எட்வார்டு பேர்ன்ஸ்ரைனின் திருத்தல்வாதத்தின் மீதான தனது தாக்குதல்கள் மூலம் இவர் முதன்முதலில் ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் கவனத்தை ஈர்த்தார். காவுட்ஸ்கியை விடுங்கள், லுக்சம்பேர்க் கூட களமிறங்கியிராத 1898 ஜனவரி மாத சமயத்திலேயே அவரது முதல் பேர்ன்ஸ்ரைன்-எதிர்ப்பு கட்டுரைகள் ஜேர்மன் சோசலிச ஊடகங்களில் தோன்றின. சரியான சமயத்தில் வெளியானதால் மட்டுமே பார்வஸின் கட்டுரைகள் முக்கியத்துவம் பெறவில்லை; பேர்ன்ஸ்ரைனுக்கு அவர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பதே தெரியவில்லை என்ற ஒரு முத்திரை பதியுமளவிற்கு ஜேர்மன் மற்றும் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீதான ஒரு மிகச் சிறந்த புரிதலை அக்கட்டுரைகள் வெளிப்படுத்தின.

ட்ரொட்ஸ்கியே பின்னர் ஒப்புக்கொண்டது போல, ரஷ்ய புரட்சிகர அபிவிருத்தியின் இயக்கவியல் குறித்த ட்ரொட்ஸ்கியின் சொந்த சிந்தனைகளில் பார்வஸின் ஆழமான தாக்கம் இருந்தது. ‘பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதென்பது ஏதோ வானவியல் ‘இறுதி’ இலக்கு போல் பார்க்கப்பட்டதை நமது சொந்த நாளின் நடைமுறைப் பணியாக திட்டவட்டமாக உருமாற்றியது’ பார்வஸ் தான் என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். 1905 அக்டோபரில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சோவியத் எழுந்தது தொழிலாள வர்க்கத்திற்கு ஏராளமான சாத்தியக்கூறுகளை திறந்து விட்டது என்பதை பார்வஸ், ட்ரொட்ஸ்கி இருவரும் அங்கீகரித்தனர். தேசிய உற்பத்தி சக்திகளின் ‘புறநிலை’ அபிவிருத்தியாக கருதப்படும் அருவமான கணக்கீடுகளில் இருந்து முன்னெடுக்கப்படும் அதே சமயத்தில், அதற்கு சளைக்காத மட்டத்திற்கு ஒரு புரட்சிகர சூழ்நிலையில் இருந்து விரிவடையும் வர்க்க சக்திகளின் புறநிலை இயக்கவியலை அதிகளவில் புறக்கணித்து முன்னெடுக்கப்படும் புரட்சிக்கான பொருத்தமான ”கடமைகள்” குறித்த கருத்தாக்கங்கள் முழுக்க போதுமானவையல்ல என்று பார்வஸ் வாதிட்டார். தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது சாத்தியமாக ஆகியிருந்ததாய் பார்வஸ் வாதிட்டார். இருக்கும் பொருளாதார ஆதாரவளங்கள் குறித்த விதிவசவாத கணக்கீட்டின் அடிப்படையில், முதலாளித்துவம் அதிகாரத்தை தனது கைகளில் எடுத்துக் கொள்வதை தொழிலாள வர்க்கமானது தள்ளி நின்று மரியாதையுடன் கவனிக்க வேண்டும் என்பதான மென்ஷிவிக்குகளின் வாதத்தை அவர் நிராகரித்தார். அரசியலுக்கும் மற்றும் பொருளாதாரத்திற்கும் இடையிலான இடைத்தொடர்புகளில் அல்லது ஒன்றின் மீதான ஒன்றின்தாக்கத்தில் ஒரு அற்புதமான வெளிப்பாட்டை கொணர்ந்த பார்வஸ் பாட்டாளி வர்க்க புரட்சிகர மூலோபாயத்திற்கான ஒரு வெகு தீவிரமான சூத்திரமாக்கலுக்கு பாதையை தெளிவாக்கினார்:

வர்க்க உறவுகள் வரலாற்று நிகழ்வுகளின் பாதையில் சற்று எளிமையான நேர்கோடான வகையில் தீர்மானிக்கப்படுவதாய் இருந்தால், அப்போது நமது மூளைகளை நாம் உலுக்க வேண்டியதே இருந்திருக்காது: வானவியல் அறிஞர்கள் ஒரு கோளின் இயக்கத்தை குறிப்பது போன்ற அதே வழியில் சமூகப் புரட்சிக்கான தருணத்தை கணக்குப் போட்டு விட்டு உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருக்க வேண்டியதைத் தான் நாம் செய்ய வேண்டியிருந்திருக்கும். ஆனால், யதார்த்தத்திலோ வர்க்கங்களுக்கு இடையிலான உறவு மற்ற எல்லாவற்றிற்கும் மேலாய் அரசியல் போராட்டத்தை உருவாக்குகிறது. அதற்கும் மேலாய், அந்த போராட்டத்தின் இறுதி விளைவு என்பது வர்க்க சக்திகளின் அபிவிருத்தியால் தீர்மானிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளை தழுவியிருக்கும் ஒட்டுமொத்த வரலாற்று நிகழ்முறையானது எண்ணிலடங்கா இரண்டாம்தரமான பொருளாதார, அரசியல், மற்றும் தேசிய கலாச்சார நிலைமைகளை சார்ந்திருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாய் போராடும் தரப்புகளின் புரட்சிகர சக்தி மற்றும் அரசியல் நனவு - அவர்களின் தந்திரோபாயம் மற்றும் அரசியல் தருணத்தை பற்றிக் கொள்வதில் அவர்களின் திறன் - ஆகியவற்றை இது சார்ந்திருக்கிறது. சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கு ரஷ்யா முதிர்ச்சியுற்று விட்டது என்று பார்வஸ் கூறவில்லை. “மேற்கு ஐரோப்பாவில் ஒரு சமூகப் புரட்சி இல்லாமல், ரஷ்யாவில் சோசலிசத்தை நனவாக்குவது இப்போது சாத்தியமில்லாதது” என்று அவர் திட்டவட்டமாய் தெரிவித்தார். ஆனால் வர்க்க போராட்டத்தின் இயங்குவிசை தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற இயலுகின்ற ஒரு நிலைமைகளை உருவாக்க முடியும் என்று அவர் நம்பினார். அதன்பின் தொழிலாள வர்க்கம் தனது நலன்களை சாத்தியமான அளவு முன்னேற்றும் வகையில் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.

பார்வஸ் புரட்சிகர அபிவிருத்தியின் துல்லியமான பாதையை முன்கணிக்க முயலவில்லை. அவரது பார்வையில் அரசியல் என்பது, அபிவிருத்தியின் ஏராளமான வகைகளை அனுமதிக்கும் சக்திகள், பாதிப்புகள் மற்றும் காரணிகளின் ஒரு சிக்கலான இடைத்தொடர்பு சம்பந்தப்பட்டது. போராட்டத்தின் ஒரு நெடிய நிகழ்போக்கை அவர் முன்கண்டார். அதில் ஜாரிச சர்வாதிகாரத்தை உண்மையாகத் தூக்கியெறிவது புரட்சியின் ஆரம்பப் புள்ளியை மட்டுமே குறித்தது. பார்வஸ் வாதிட்டார்:

சமூக ஜனநாயகக் கட்சி, ஒட்டுமொத்த மக்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் புரட்சிகர இயக்கத்தின் மத்தியிலும் தலைமையிலும் பாட்டாளி வர்க்கத்தை இருத்துகின்ற அதே சமயத்தில், சர்வாதிகாரத்தை தூக்கியெறிந்த உடன் தோன்றும் உள்நாட்டு யுத்த காலத்திற்கும், விவசாய மற்றும் முதலாளித்துவ தாராளவாதத்தால் தாக்குதலுக்குள்ளாகும் காலத்திற்கு மற்றும் அரசியல் தீவிரவாதிகள் மற்றும் ஜனநாயகவாதிகளால் காட்டிக் கொடுக்கப்படும் காலத்திற்கு பாட்டாளி வர்க்கத்தை தயாரிப்பு செய்யவும் வேண்டும்.

புரட்சியும், சர்வாதிகாரத்தின் வீழ்ச்சியும் ஒரே விடயம் அல்ல என்பதையும், அரசியல் புரட்சியை நிறைவாகக் கொண்டு செல்ல முதலில் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் அதன்பின் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் போராட வேண்டியது அவசியம் என்பதையும் தொழிலாள வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும். [33]

"ஜனவரி 9-ல் என்ன சாதிக்கப்பட்டது” என்கின்ற பார்வஸின் சிறப்பான கட்டுரை ஏராளமான அரசியல் ஆழ்நோக்குப் பார்வைகளை கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் வர்க்க போராட்ட யதார்த்தங்கள் குறித்த புரிதலிலேனும் இவை நம்மை விட மிக உயர்ந்த உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு அரசியல் அனுபவத்தின் அறிவைப் பிரதிபலிக்கின்றன. தற்காலிகமான ஸ்திரமற்ற கூட்டணியினருடன் சேர்ந்து போராடும்போதான பிரச்சினைகளை விவாதிக்கையில் பார்வஸ் அறிவுறுத்துகிறார்:

1. அமைப்புரீதியான வரையறைகளை குழப்பாதீர்கள். தனித்தனியாய் அணிவகுத்து செல்லுங்கள், ஆனால் சேர்ந்து தாக்குங்கள்.

2. நமது சொந்த அரசியல் கோரிக்கைகளில் ஊசலாட்டம் காணாதீர்கள்.

3. நலன்களின் வித்தியாசங்களை மறைக்காதீர்கள்.

4. நமது எதிரிகளை கண்காணிக்கும் அதே வழியில் நமது கூட்டணியினரையும் கண்காணித்து வாருங்கள்.

5. கூட்டணி சேர்ந்தவரை பராமரிப்பதைக் காட்டிலும் போராட்டத்தால் உருவாக்கப்படும் சூழ்நிலையை அனுகூலமாக்குவதற்கு அதிகமான கவனம் செலுத்துங்கள். [34]

1905ம் ஆண்டின் பிற்பகுதியில் ட்ரொட்ஸ்கி “ஜனவரி 9 வரை” என்கிற படைப்பை எழுதினார். இந்த படைப்பின் ஒரு முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு முதன்முறையாக இந்த தொகைத்திரட்டு நூலில் தோன்றுகிறது. ரஷ்ய முதலாளித்துவத்தின் தாராளவாத பிரதிநிதிகளின் அரசியலின் அழுகிப்போன தன்மையை கூர்மையாகவும் அப்பட்டமாகவும் அம்பலப்படுத்தும் ஒரு படைப்பாக இது இருக்கிறது. ஜப்பானுடனான போரில் ரஷ்ய இராணுவத்தின் படுமோசமான தோல்விகளால் நேர்ந்த ஒரு நெருக்கடி குவிந்த காலகட்டத்தில் ஜாரிச ஆட்சியை நோக்கி அவர்கள் கொண்டிருந்த முதுகெலும்பற்ற மண்டியிடும் மனோநிலையை ட்ரொட்ஸ்கி காலவரிசையில் பட்டியலிடுகிறார். போரில் தாராளவாத அரசியல்வாதிகள் சத்தமின்றி அடங்கிப் போன விதத்தை ஏளனம் செய்யும் விதமாய் ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்:

ஒரு அவமானகரப் படுகொலையின் இழிவான வேலையில் கைகோர்த்துக் கொள்வதும் மற்றும் செலவினங்களின் ஒரு பகுதியை மக்களின் மீது சுமத்துவதற்கு தங்கள் மீதான பொறுப்பெடுத்துக்கொள்வதும் இவர்களுக்கு (தாராளவாதிகளுக்கு) போதுமானதாய் இருக்கவில்லை. (அரசியல் ரீதியாய் ஜாடையிலேயே சம்மதம் சொன்னதுடனும்) ஜாரிசத்தின் வேலையை மறைமுகமாக அரசியல்ரீதியாக சாதகமாக்கியதுடனும் மற்றும் மிகவிருப்பத்துடன் மறைத்ததுடனும் அவர்கள் திருப்தி அடைந்து விடவில்லை. மாபெரும் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு தங்களது தார்மீக ஆதரவு இருப்பதை அனைவருக்கும் அவர்கள் பகிரங்கமாய் அறிவித்தனர்.... தங்களின் அரசியல் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தும் உத்தியோகபூர்வ அலங்காரப்பேச்சு கருத்தரங்குகள் மூலமாக ஒருவர் பின் ஒருவராய் இவர்கள் போர் பிரகடனத்திற்கு தமது பிரதிபலிப்பை காட்டினர்.

சரி தாராளவாத ஊடகங்களின் கதை என்ன? இந்த பரிதாபத்திற்குரிய, முணுமுணுக்கின்ற, மண்டியிடுகின்ற, பொய்யுரைக்கின்ற, வாலைச் சுருட்டிக் கொள்கின்ற, அதிகாரமற்ற, ஊழலுற்றுக் கொண்டிருக்கும் தாராளவாத ஊடகங்களின் கதை!

இந்த வார்த்தைகளைக் கொண்டு அமெரிக்க ஜனநாயகக் கட்சி மற்றும் இன்றைய நியூயோர்க் டைம்ஸ் குறித்து இளம் ட்ரொட்ஸ்கி விவரித்துக் கொண்டிருப்பதாய் ஒருவர் நம்பினால் அதற்காக அவரை மன்னிக்கலாம். ஆனால் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பே, முதலாளித்துவ தாராளவாதத்தின் அழுகிப்போன தன்மையை சோசலிஸ்டுகள் நன்கு புரிந்து வைத்திருந்தனர்.

மற்ற சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை உள்ளடக்கிய இந்த தொகைத்திரட்டிலும் கூட, ட்ரொட்ஸ்கியின் ஆரம்ப கால கட்டுரைகளில் ஒரு புதிய முன்னோக்கு உண்மையான சக்திவாய்ந்ததொரு குரலில் வெளிப்படுகிறது. இந்த ஆரம்ப கால எழுத்துகளில், தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியுறும் வெகுஜன புரட்சிகர இயக்கம் மற்றும் அதிகாரத்துக்கான அதன் போராட்டத்தின் அடிப்படையான சக்தி குறித்த கருத்தாக்கமும் சிறப்பான நடையில் அவை வழங்கப்பட்டிருப்பதும் மிகச் சிறப்பான அம்சங்களாய் அமைந்திருக்கின்றன. இந்த அர்த்தத்தில், காவுட்ஸ்கியின் எழுத்துகளுடன் இருக்கும் வித்தியாசம் வெளிப்பட்டதாய் இருக்கிறது. ஒரு புரட்சிகர முன்னோக்கை சூத்திரப்படுத்திக் கொண்டு அதனைப் பாதுகாத்து எழுதிய சமயத்திலான காவுட்ஸ்கியின் சிறந்த படைப்பிலும் கூட எதிரான வர்க்க சக்திகளின் மோதல் குறித்த காவுட்ஸ்கியின் சித்தரிப்பு விடுபட்டதாய் இருக்கிறது, இது ஆசிரியரின் உள்முக சந்தேகங்களைப் பிரதிபலிப்பதாய் அமைகிறது. தொழிலாள வர்க்கம் தனது வர்க்க எதிரியை வன்முறையில் இறங்காமலேயே அதிகாரத்தை சரணடையச்செய்ய அச்சுறுத்த முடியும் என்பதற்கான சாத்தியத்தை அவர் திறந்தே வைத்திருந்தார்! (மிகவும் நம்பிக்கையூட்டும் வகையில் இதனை அவரால் செய்ய இயலவில்லை என்றாலும்) அவர் எழுதினார்:

ஒரு எழுச்சியுறும் வர்க்கம் பழைய ஆளும் வர்க்கத்திடம் இருந்து பறிமுதல் செய்ய விரும்பினால் அதற்கு அவசியமான அதிகாரத்திற்கான அமைப்புகளை தன்னகத்தே கொண்டிருந்தாக வேண்டும். ஆனால் அவற்றை பயன்படுத்தியாக வேண்டும் என்பது கட்டாயமான அவசியம் அல்ல. குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இத்தகைய அமைப்புக்கள் இருக்கின்றன என்கின்ற விழிப்புணர்வே ஒரு வீழ்ந்து கொண்டிருக்கும் வர்க்கத்தை வளர்ந்துவிட்ட ஒரு எதிராளியுடன் அமைதியான முறையில் உடன்பாட்டிற்குக் கொண்டு வர போதுமானதாக இருக்க முடியும்.

சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) பிரிவுகளுக்கு உள்ளாக, குறிப்பாக தொழிற்சங்கங்களுக்குள்ளாக, அதிகாரத்துக்கான ஒரு ஆயுதப் போராட்டத்தை கட்சி அறிவுறுத்தியது என்று கூட வேண்டாம், அதன் தவிர்க்கவியலாத தன்மையில் நம்பிக்கை கொண்டிருந்தது எனக் கூறுவதைக் கூட விரும்பாத நிலை நிலவியதை காவுட்ஸ்கி நன்கு அறிந்து வைத்திருந்தார் என்பதையும் ஒருவர் மனதில் கொள்ள வேண்டும். அதேபோல், முன்னெச்சரிக்கையில்லாத சூத்திரமாக்கல் எதனையும், அது ஒரு தத்துவார்த்த பத்திரிகையில் என்றாலும் கூட, சமூக ஜனநாயக கட்சியின் மீதான ஒரு தாக்குதலுக்கான சாக்காக பிரஷ்ய அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்பதையும் அவர் அறியாதவரல்ல. அரசின் உயர் மட்டங்களில் இருந்த செல்வாக்கான குரல்கள் சமூக ஜனநாயகத்துடன் ஒரு குருதி கொட்டும் மோதலுக்கு தொடர்ந்து ஆலோசனையளித்துக் கொண்டிருந்தன என்கின்ற உண்மை நன்கறியப்பட்டதே. ஆயினும், 'அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் இருக்கும் இராணுவப் படைகளின் எதிர்ப்பை வெல்வது எப்படி?' என்கின்ற ஒரு நவீன முதலாளித்துவ அரசில் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்ட ஒரு தவிர்க்கவியலாத பிரச்சினைக்கு காவுட்ஸ்கியிடம் எந்த தெளிவான பதிலும் இல்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஒரு கட்டுரையில், இராணுவ வலிமையைத் திரட்டிக் கொள்வதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தை தோற்கடிப்பது சாத்தியமில்லாமல் போகலாம் என்று கூறுமளவுக்கு காவுட்ஸ்கி சென்று விட்டார். "அவசியமான மூர்க்கத்தனத்தை கொண்டிருக்கக் கூடிய எந்த அரசாங்கத்திற்கும் தொழில்நுட்ப இராணுவ மேலாதிக்கத்தைக் கொண்டிருப்பதான நனவு ஒரு ஆயுதமேந்திய வெகுஜனக் கிளர்ச்சியை அமைதியாக கவனிக்க முடிவதை சாத்தியமாக்குகிறது." [37]

டே மற்றும் கெய்டோ சுட்டிக் காட்டுவதைப் போல, ட்ரொட்ஸ்கி நேரெதிரான வாதத்தை வைக்கிறார்: போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளும் உத்தரவுகளுடன் அரசாங்கம் பதிலிறுப்பு செய்யும்போது ஒரு வெகுஜனப் போராட்டம் அவசியமாக ஒரு ஆயுத மோதலுக்கு இட்டுச் செல்லும்." [38] காவுட்ஸ்கியைப் பொறுத்தவரை தொழிலாளர்களை சுடச் சொல்லி படைவீரர்களுக்கு உத்தரவிடுவது புரட்சியை முடிவுக்கு கொண்டு வந்து விடக் கூடும். ட்ரொட்ஸ்கிக்கோ இத்தகைய உத்தரவுகள் ஒடுக்குமுறை அரசின் முடிவுக்கு இட்டுச் செல்லலாம். புரட்சியைத் தோற்கடிக்க அடக்குமுறை படையை போதுமான அளவு பயன்படுத்தினால் போதும் என்று பிற்போக்குவாதிகள் நம்பத் தலைப்படுகின்றனர் என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டுக் காட்டினார். ட்ரொட்ஸ்கி சுருக்கமாய் விவரிக்கிறார். "தன்னுடைய நாட்களை பாரிஸின் தாசி இல்லங்களை மட்டுமல்லாது மகா புரட்சியின் நிர்வாக-இராணுவ வரலாற்றைப் படிப்பதிலும் செலவிட்டவரான Grand Duke என்றழைக்கப்பட்ட இராணுவத் தளபதி (மகா கோமகன்) விளாடிமிர், லூயியின் அரசாங்கம் புரட்சியின் ஒவ்வொரு முளையையும் எந்தவொரு ஊடாட்டமும் தயக்கமும் இன்றி நசுக்கியிருக்குமானால், அவர் பாரிஸின் மக்களை துணிச்சலான பரந்த ஒழுங்கமைக்கப்பட்ட குருதி கொட்டலின் மூலம் கையாண்டிருந்தாலும் பழைய ஒழுங்கு காப்பாற்றப்பட்டிருக்க முடியும் என்று முடிவு கட்டியிருந்தார். ஜனவரி 9 அன்று, நமது மிகப் பண்பட்ட குடிகாரர் அதனை எவ்வாறு சரியாக செய்ய வேண்டும் என்று காட்டினார்....சாதாரண துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், ரவைகள் எல்லாம் உத்தரவுக்கு அப்படியே கீழ்ப்படிபவை தான், ஆனாலும் அவற்றை பயன்படுத்த ஆள் வேண்டுமே. அதற்கு மனிதர்கள் தானே வேண்டியிருக்கிறது. அந்த மனிதர்கள் படையினர் தான் என்றாலும், அவர்கள் துப்பாக்கிகளில் இருந்து வித்தியாசப்பட்டவர்கள். ஏனென்றால் அவர்களால் சிந்திக்க முடியும், உணர முடியும், அப்படியானால் அவர்களை நம்ப முடியாது. அவர்கள் தயங்குகிறார்கள், தங்களது தளபதிகளின் முடிவெடுக்கா நிலை அவர்களைத் தொற்றிக் கொள்கிறது, விளைவு அதிகாரத்துவத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் ஒழுங்கின்மையும் பீதியும் பற்றிக் கொள்கிறது. [39]

1906ம் ஆண்டில் வெளியான, நிரந்தரப் புரட்சி தத்துவம் குறித்த ட்ரொட்ஸ்கியின் முதல் வரையறையளிக்கும் விரிவான விளக்கம் இடம்பெற்ற முடிவுகளும் வாய்ப்புகளும் (Results and Prospects) இந்த தொகுப்பில் இடம்பெறவில்லை. ஆனால், ட்ரொட்ஸ்கியின் அரசியல் சிந்தனை அபிவிருத்தியை - ரஷ்ய தாராளவாதத்தின் பிற்போக்குத்தனத்தை ஏளனமாய் அம்பலப்படுத்துவது தொடங்கி 'வர்க்கப் போராட்டத்தின் தர்க்கம் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்தை கைப்பற்றத் தள்ளும்' என்று அவர் முடிவு கட்டுவது வரை - விவரிக்கும் ஏராளமான அதி முக்கிய ஆவணங்களை டே மற்றும் கெய்டோ வழங்கியிருப்பதைக் காண முடியும். இந்த முக்கியமான தயாரிப்பு ஆவணங்களில் ட்ரொட்ஸ்கி எழுதிய "நீதியவைக்கு பெர்டினாண்ட் லஸ்சாலின் உரையின் அறிமுகம் (Introduction to Ferdinand Lassalle's Speech to the Jury)", "சமூக ஜனநாயகமும் புரட்சியும்", மற்றும் "கார்ல் மாக்ஸ், பாரிஸ் கம்யூன் படைப்புக்கான அணிந்துரை (Foreword to Karl Marx, Parizhskaya Kommuna)" ஆகியவையும் அடங்கும். இந்த கட்டுரைகள் எல்லாமே ட்ரொட்ஸ்கி செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் சோவியத்தின் தலைவராகி முதல் ரஷ்ய புரட்சியின் மாபெரும் பேச்சாளராகவும் வெகுஜனத் தலைவராகவும் உருவெடுத்த 1905ம் ஆண்டு தொடங்கி எழுதப்பட்டவை.

ட்ரொட்ஸ்கி எழுதிய "நீதியவைக்கு பெர்டினாண்ட் லாஸ்சாலின் உரையின் அறிமுகம் (Introduction to Ferdinand Lassalle's Speech to the Jury) " அவரது ஆரம்ப கால மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். 1848 ஜேர்மன் புரட்சியில் ஜனநாயக சக்திகளின் அதீத இடது பிரிவின் ஒரு பிரதிநிதியாக லஸ்சால் ஒரு பெரிய பாத்திரத்தை ஆற்றியிருந்தார். பிரஷ்யாவிற்கு எதிரான கிளர்ச்சிக்காக கைது செய்யப்பட்ட நிலையில், லாஸ்சால் தனது தரப்பு உரை ஒன்றை எழுதினார். இந்த உரை நீதியறையில் உண்மையில் பேசப்படவேயில்லை என்றாலும் எழுத்துமூலமான உரையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் ஜேர்மனி முழுவதிலும் விநியோகிக்கப்பட்டு ஒரு ஆழமான படிமத்தை உருவாக்கின. டே மற்றும் கெய்டோ குறித்துக் காட்டுவது போல், "ட்ரொட்ஸ்கி வெளிப்படையாக நீதியவைக்கான லஸ்சாலின் மகா உரையைப் போற்றினார்", அத்துடன் 1905 புரட்சியின் தோல்விக்குப் பின்னர் 1907ம் ஆண்டில் ட்ரொட்ஸ்கி மீது விசாரணை சுமத்தப்பட்ட போது அதே அளவுக்கு நினைவு கூரத்தக்க ட்ரொட்ஸ்கியின் உரை வடிவத்தில் இது நிச்சயமாய் தாக்கத்தைக் கொண்டிருந்தது. [40]

தனது "அறிமுக"ப் பகுதியில், ஜாரிச சர்வாதிகாரத்திற்கு எதிரான சமகாலப் போராட்டத்தில் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எதிரி என்கின்ற அத்தியாவசியமான அரசியல் கருத்தை விளங்கப்படுத்த முனைந்தார். முதலாளித்துவ வர்க்கமானது, தனது நலன்களை நனவாக்க புரட்சி எவ்வளவு தான் அதிமுக்கியமானதாய் அமைந்தாலும் அது எதிர்பார்த்திராத பின்விளைவுகளின் அபாயத்தையும் எழுப்பி விடுகிறது என்பதை 1789-95 நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொண்டிருந்தது. தனது சொந்த சமூக மற்றும் பொருளாதார நிலையை உறுதிப்படுத்துவதில் அது வெற்றிபெற்றதால், அந்த அளவுக்கு வெகுஜனங்களின் கோரிக்கைகளை எதிர்ப்பதற்கு அது கூடுதல் உறுதிப்பட்டது. இதனையொட்டிய மோதலில், சமூகத்தின் முன்னர் மறைந்திருந்த தன்மை வெளிப்படையில் வந்து விட்டது. ஒரு மறக்க முடியாத பத்தியில், ட்ரொட்ஸ்கி ஒரு புரட்சிகர சகாப்தம் என்பது "அரசியல் சடவாதத்தின் ஒரு பள்ளி" என விவரித்தார்.

அது அனைத்து சமூக நிர்ணயங்களையும் வலிமையின் மொழியில் மொழிபெயர்க்கிறது. வலிமையை நம்புபவர்களுக்கு, ஒன்றுபட்டு, ஒழுங்கமைந்து, நடவடிக்கைக்குத் தயாராய் இருப்பவர்களுக்கு இது தாக்கத்தை கொடுக்கின்றது. அதன் வலிமை மிகுந்த அதிர்வுகள் வெகுஜனங்களை போராட்டக் களத்திற்கு துரத்துவதுடன் மற்றும் யார் விட்டோடுகின்றார்கள் யார் வந்து சேர்கின்றார்கள் என்று அவர்களுக்கு ஆளும் வர்க்கங்களை வெளிப்படுத்திக் காட்டுகிறது. சரியாக இதே காரணத்தால் தான் அதிகாரத்தை இழக்கின்ற வர்க்கத்திற்கும் சரி அதிகாரத்தைப் பெறுகின்ற வர்க்கத்திற்கும் சரி இது பயமுறுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்தப் பாதைக்கு வந்து விட்ட பின் வெகுஜனங்கள் தங்கள் சொந்த தர்க்கத்தை அபிவிருத்தி செய்து கொள்கின்றனர் என்பதோடு புதிதாய் வந்து சேரும் முதலாளித்துவ வர்க்கத்தின் பார்வையில் அவசியமானதற்கும் அதிக தூரம் போகின்றனர். ஒவ்வொரு நாளும் புதிய முழக்கங்களை சுமந்து வருகிறது, அவை ஒவ்வொன்றும் முந்தையதை விட கூடுதல் தீவிரப்பட்டதாய் இருக்கின்றன, அவை மனித உடலின் இரத்த ஓட்டம் போல் துரிதமாய் பரவி சுற்றி வருகின்றன. முதலாளித்துவ வர்க்கம் புரட்சியை ஒரு புதிய அமைப்புக்கான தொடக்கப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுமானால், வெகுஜனங்களின் புரட்சிகர ஆக்கிரமிப்புகளை எதிர்ப்பதில் சட்டம் மற்றும் ஒழுங்கு கோரிக்கை வைப்பதற்கான எந்த வாய்ப்பையும் அது தனக்கு இல்லாது செய்து கொள்ளும். அதனால் தான் மக்களின் உரிமைகளைப் பலியிட்டு பிற்போக்குவாதத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது தாராளவாத முதலாளித்துவத்திற்கான ஒரு வர்க்க கட்டாயமாக உள்ளது.

புரட்சிக்கு முந்தைய, புரட்சியின் சமயத்தில் மற்றும் புரட்சிக்குப் பிந்தைய நிலைக்கு இது சமமாய் பொருந்துகிறது.[41]

1848 ஜனநாயகப் புரட்சியை ஜேர்மன் பூர்சுவாசி காட்டிக் கொடுத்ததை கவனமாய் மதிப்பாய்வு செய்தபின், ஒரு அரை நூற்றாண்டுக்குப் பின்னர் பூர்சுவாசி எந்த வகையான முற்போக்கு அரசியல் பாத்திரத்தையும் ஆற்றுவதற்கான சாத்தியம் இன்னும் குறைந்து விட்டிருந்தது என்கிற, அவசியமான அரசியல் முடிவிற்கு ட்ரொட்ஸ்கி வந்தார். மேலும் முந்தைய அரை நூற்றாண்டு காலத்தில் முதலாளித்துவத்தின் உலகளாவிய அபிவிருத்தியானது ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தை அரசியல் ஆதிக்கம் மற்றும் பொருளாதார சுரண்டலின் ஒரு உலகளாவிய அமைப்பிற்குள் இழுத்து விட்டிருந்தது. இந்த புள்ளியில் தான் ட்ரொட்ஸ்கி ரஷ்ய புரட்சியின் அபிவிருத்தியில் ஒரு புதிய தீர்மானகரமான காரணிக்கு கவனத்தைக் கோருகிறார்:

தனது சொந்த பொருளாதார வகையையும் சொந்த உறவுகளையும் அனைத்து நாடுகளின் மீதும் திணிக்கும் முதலாளித்துவம் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு ஒற்றை பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பாக மாற்றி விட்டிருக்கிறது. எப்படி நவீன கடன் ஆயிரக்கணக்கான நிறுவனங்களை கண்ணுக்குத் தெரியாத ஒரு திரியினால் இணைத்து மூலதனத்திற்கு திகைப்பூட்டும் நகர்வுதன்மையைக் கொடுத்து ஏராளமான சிறிய மற்றும் பகுதிவாரியான நெருக்கடிகளை எல்லாம் நீக்கி விட்டு அதேசமயத்தில் பொதுவான பொருளாதார நெருக்கடிகளை ஒப்பிடமுடியா அளவுக்கு அதீத தீவிரமாக ஆக்குகிறதோ, அதேபோல் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் அரசியல் செயல்பாடும், அதன் உலக வர்த்தகம், அதன் பிரம்மாண்டமான அரசுக் கடன்களின் அமைப்பு மற்றும் அனைத்து பிற்போக்குவாத சக்திகளையும் உலகளாவிய ஒரு ஒற்றை கூட்டுப் பங்கு நிறுவனமாக ஆக இழுக்கும் சர்வதேச அரசியல் கூட்டணிகள் ஆகியவற்றுடன் இணைந்து அனைத்து பகுதிரீதியான அரசியல் நெருக்கடிகளையும் எதிர்த்திருப்பதோடு மட்டுமன்றி முன்கண்டிராத பரிமாணங்களுடனான ஒரு சமூக நெருக்கடிக்கான நிலைமைகளையும் தயாரித்திருக்கிறது.

வெகு ஆரம்பத்தில் இருந்தே, இந்த உண்மையானது தற்போது கட்டவிழும் நிகழ்வுகளுக்கு ஒரு சர்வதேச தன்மையைக் கொடுப்பதுடன் மற்றும் பாரிய வாய்ப்புகளுக்கு கதவைத் திறக்கிறது. ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான அரசியல் விடுதலை அதனை வரலாற்றுரீதியாக முன்கண்டிராத உயரங்களுக்கு உயர்த்துகிறது. அதற்கு பிரம்மாண்டமான சாதனங்களையும் ஆதாரவளங்களையும் அளித்து உலகளாவிய ரீதியால் முதலாளித்துவத்தின் கலைப்புக்கான முன்முயற்சியாளராக ஆக்குகிறது. இதற்கான அத்தனை புறநிலை முன்நிபந்தனைகளையும் வரலாறு தயாரித்துத் தந்துள்ளது. [42]

இந்த பத்திகள் உலக சோசலிசப் புரட்சிக்கான ஒரு மூலோபாய ஆசிரியராக ட்ரொட்ஸ்கியின் எழுச்சியை அடையாளப்படுத்துகின்றன!

1905ம் ஆண்டின் பிரம்மாண்டமான வேலைநிறுத்தத்தின் தாக்கம் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் சோவியத்தின் உருவாக்கம் இவற்றைத் தாண்டி, ரஷ்யாவின் பொருளாதார பின்தங்கிய நிலைமைக்கும் -மார்க்சிசத்தின் மரபுவழி பொருள்விளக்கத்தின் படி சோசலிசப் புரட்சிக்கு தயாரிப்பு இல்லாது இருந்தது- மற்றும் கட்டவிழும் புரட்சிகர சூழ்நிலையில் தொழிலாள வர்க்கம் தான் தீர்மானகரமான சக்தியாக இருக்கிற மறுக்கவியலா யதார்த்தத்திற்கும் இடையே முன்னெப்போதையும் விட அப்பட்டமாய் நிற்கும் முரண்பாட்டை சமரசப்படுத்தும் அரசியல் சூத்திரத்தைக் கண்டறிவதற்கு மிகவும் முன்னேறிய சோசலிச சிந்தனையாளர்களும் திணறினர். புரட்சி எங்கே சென்று கொண்டிருந்தது? தொழிலாள வர்க்கம் எதனைச் சாதிக்க எதிர்பார்க்க முடியும்?

1905 நவம்பரில் எழுதிய பார்வஸ் இவ்வாறு அறிவுறுத்தினார்:

ரஷ்ய பாட்டாளிகளின் நேரடி புரட்சிகர இலக்கு என்பது தொழிலாள ஜனநாயகத்தின் கோரிக்கைகள் நனவாகத்தக்க ஒரு அரசு அமைப்பு வகையை சாதிப்பது ஆகும். தொழிலாள ஜனநாயகம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அனைத்து அதீத கோரிக்கைகளையும் உள்ளடக்கியிருக்கும், ஆனால் அவற்றில் சிலவற்றுக்கு இது ஒரு சிறப்பு குணாம்சத்தை அளிப்பதோடு திட்டவட்டமாய் பாட்டாளி வர்க்க குணாம்சம் கொண்டதான புதிய கோரிக்கைகளையும் கொண்டிருக்கிறது. [43]

”சமூக ஜனநாயகத்தின் குறைந்தபட்ச வேலைத்திட்டத்திற்கும் அதன் இறுதி இலக்கிற்கும் இடையே ஒரு சிறப்பு தொடர்பை” ரஷ்ய புரட்சி உருவாக்குகிறது என அவர் விளக்கினார். மேலும் கூறினார்: “இது நாட்டில் உற்பத்தி உறவுகளில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொணர்வதைக் கடமையாகக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அர்த்தமல்ல என்றாலும் இது ஏற்கனவே முதலாளித்துவ ஜனநாயகம் என்பதைக் கடந்து செல்கிறது. முதலாளித்துவ புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சியாக மாற்றுகிற பணியை ஏற்கிற அளவுக்கு நாம் இன்னும் ஆயத்தமாகவில்லை, ஆனால் அதே அளவுக்கு முதலாளித்துவ புரட்சியின் முன் மண்டியிடுவதற்கும் நாம் தயாராயில்லை. அது நமது ஒட்டுமொத்த வேலைத்திட்டத்தின் முதலாவது முற்கோள்களை மறுதலிக்கும் என்பது மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க போராட்டம் நம்மை முன் நோக்கி செலுத்துகிறது. முதலாளித்துவ புரட்சியின் வரம்புகளை விரிவாக்கி அதற்குள்ளாக பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைச் சேர்ப்பதும், முதலாளித்துவ அரசியல்சட்டத்திற்கு உள்ளாகவே சமூக-புரட்சிகர எழுச்சிக்கு மாபெரும் சாத்திய வாய்ப்புகளை உருவாக்குவதும் தான் நமது பணியாகும். [44]

ரஷ்ய பொருளாதார அபிவிருத்தியின் பின்தங்கிய நிலைமை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வேகம் ஆகியவை முன்நிறுத்திய பிரச்சினைக்கு முன்னால் பார்வஸும் கூட பின்வாங்குவதாகவே தோன்றியது. ஒரு மாதத்திற்குப் பின்னர், பாரிஸ் கம்யூன் குறித்த மார்க்ஸ் பேச்சுக்கான தனது அணிந்துரையில், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருப்பதாய் ட்ரொட்ஸ்கி உறுதிபடக் கூறினார். ஆனால் அதற்கு, கொடுக்கப்பட்ட ஒரு நாட்டின் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி மட்டத்திற்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு தொழிலாள வர்க்கம் பெற்றுள்ள திறனுக்கும் இடையில் ஒரு உத்தியோகப்பூர்வ மற்றும் எந்திரவகையான உறவு நிலவவில்லை என்கிற புரிதல் அவசியம். புரட்சிகரக் கட்சி மற்ற முக்கிய காரணிகளையும் - அதாவது “வர்க்க போராட்ட உறவுகள், சர்வதேச சூழ்நிலை, மற்றும் இறுதியாக, பாரம்பரியம், முன்முயற்சி, போராடுவதற்கு ஆயத்தமாய் உள்ள நிலை ஆகிய ஏராளமான அகநிலைக் காரணிகள்” - கணக்கில் கொள்ள வேண்டும். இந்த ஆழ்நோக்கில் இருந்து என்ன முடிவு தெரிய வந்தது? ட்ரொட்ஸ்கி அறிவித்தார்: “பொருளாதார ரீதியாக பின்தங்கியதொரு நாட்டில், மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாடு ஒன்றைக் காட்டிலும் விரைவாக பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வர முடியும்.” இந்த முடிவுக்கு வருவதற்கு ஒரு அரை நூற்றாண்டு கால சமூக-பொருளாதார அபிவிருத்தி, பல தசாப்த தத்துவ வேலைகள் மற்றும் ஒரு புரட்சியின் அனுபவம் ஆகியவை அவசியமாய் இருந்தன.

இந்த புள்ளியில் ட்ரொட்ஸ்கி நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படை வெளிவரையை முடிவு செய்திருந்தார். சொல்லப் போனால், லஸ்சால் உரைக்கான அவரது “அறிமுகம்” மற்றும் பாரிஸ் கம்யூன் மீதான மார்க்ஸ் உரைக்கு அவரது “அணிந்துரை” ஆகியவை முடிவுகளும் வாய்ப்புகளும் (Results and Prospects) படைப்பில் மறுபிரசுரம் பெற்றன. ஆயினும், இந்த முக்கிய படைப்புக்கு தயாரித்துக் கொண்டிருந்த வேளையிலும் காவுட்ஸ்கியின் எழுத்துகளில் ட்ரொட்ஸ்கி தொடர்ந்து ஊக்கமும் உத்வேகமும் பெற்றார்.

பிப்ரவரி 1906-ல் காவுட்ஸ்கியால் எழுதப்பட்டிருக்கும் “அமெரிக்க தொழிலாளர்” என்கிற ஏறக்குறைய அறியப்படாத படைப்பு டே-கெய்டோ தொகைத்திரட்டில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஜேர்மன் சமூகவியல் அறிஞர் வேர்னெர் சோம்பார்ட் (1863-1941) அமெரிக்க சமூகம் குறித்து செய்த ஆய்வுக்கு (அமெரிக்காவில் ஏன் சோசலிசம் இருக்கவில்லை? என்கிற குழப்பமானதொரு தலைப்பை தாங்கியிருந்தது) அளித்த பதிலாக இது எழுதப்பட்டது. இது ஒரு முக்கிய கேள்வி ஆகும். அரசியல் பார்வையில் இருந்து, அது பதில் கூறப்பட வேண்டிய ஒன்று என்பது வெளிப்படை. மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாட்டிற்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் பின்னால் வெகுஜனங்களை சோசலிசத்திற்கு ஆதரவாய் திரட்ட முடியவில்லை என்றால் சோசலிசத்தின் எதிர்காலம் என்ன? மேலும், அலட்சியப்படுத்த முடியாத இன்னுமொரு முக்கிய தத்துவார்த்த பிரச்சினையும் இருந்தது. மார்க்சிச தத்துவக் கட்டமைப்புக்குள்ளாக பின்வரும் மெய்மைப்புதிரை ஒருவர் எவ்வாறு விளக்க முடியும்: மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் சோசலிசம் கொஞ்சம் கூட முன்நகர்வதாய் தெரியவில்லை, ஆனால் முதலாளித்துவம் குறைந்த மட்டத்தில் அபிவிருத்தியுற்றிருக்கும் நாடான ரஷ்யாவில் சோசலிசம் தாவிப் பாய்ந்து முன்னேறுகிறது. இந்த புதிருக்கு என்ன விளக்கம்? இன்னொரு கேள்வியும் எழுப்பப்பட்டது. மார்க்ஸ் சுட்டிக் காட்டியதைப் போல, முன்னேறிய நாடுகள் வெளிப்படுத்தும் அபிவிருத்தி ”பாங்கினை” குறைந்த அபிவிருத்தி நாடுகள் அவசியமாய் மறுஉற்பத்தி செய்யும் என்றால், உலகின் மிகவும் முன்னேறிய மற்றும் சக்திவாய்ந்த நாட்டில் ‘சோசலிசம்-அற்ற’ அபிவிருத்தி பாங்கின் தாக்கங்கள் என்னவாய் இருக்கும்? மிகவும் பழமைவாத முடிவுகளை வரைந்த சோம்பார்ட், அமெரிக்கா, ஐரோப்பாவின் வருங்காலத்தை காட்டி வருவதாக வாதிட்டார்.

காவுட்ஸ்கி ஒரு ஆட்சேபம் கிளப்பினார். சோம்பார்டின் கூற்றை ”பெரும் யோசனைகளுடன் தான் ஏற்றுக் கொள்ள முடியும்” என்று அவர் எழுதினார். முதலாளித்துவத்தின் உலகளாவிய அபிவிருத்தியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உறவுகளின் ஒரு சிக்கலான மொத்த வடிவில் இருந்து ஒரு தரப்பான வகையில் அமெரிக்க நிலைமைகளை மட்டும் பிரித்தெடுத்தது தான் இந்த சமூகவியலாளர் செய்த பிழை. மார்க்ஸ் மிகவும் பரிச்சயம் கொண்டிருந்த இங்கிலாந்தின் அபிவிருத்தி பாங்கு மற்ற நாடுகளில் அப்படியே மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதை கவனிக்க சோம்பார்ட் தவறினார். மார்க்ஸ் காலத்து இங்கிலாந்து மிகவும் அபிவிருத்தியுற்ற தொழில்துறையைக் கொண்டிருந்தது. ஆனால் தொழிற்துறை முதலாளித்துவத்தின் முன்னேற்றம் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்ப்பு மற்றும் அதன் அமைப்பு என்ற எதிர்ப்புப்போக்குகளை உருவாக்கியது. இதனால் இங்கிலாந்தில் சார்ட்டிசம் (Chartism), பின்னர் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக சட்டவாக்கங்களின் தோற்றம் நிகழ்ந்தது. ஆனால், முதலாளித்துவ அபிவிருத்தியும் தொழிலாள வர்க்க எதிர்-நடவடிக்கையும் இருந்த இந்த இடைத்தொடர்பு அபிவிருத்தி ஒரு உலகளாவிய “வடிவத்தை” ஸ்தாபிக்கவில்லை.

காவுட்ஸ்கி விளக்கினார்:

இன்று, மொத்த பொருளாதார வாழ்க்கையையும் மூலதனம் கட்டுப்படுத்தக் கூடிய அமைப்புநிலைக்குள் ஏராளமான நாடுகள் தொடர்ச்சியாய் வந்திருக்கின்றன. ஆனால் இவற்றில் எதுவும் உற்பத்தியின் முதலாளித்துவ வகைமுறையின் அனைத்து அம்சங்களையும் அதே அளவுக்கு அபிவிருத்தி செய்திருக்கவில்லை. குறிப்பாக ஒன்றுக்கொன்று எதிரெதிர் முனையில் பார்த்து நிற்கும் இரண்டு அரசுகள் உள்ளன. இரண்டிலும் உற்பத்தி வகைமுறையின் இரண்டு கூறுகளில் ஒன்று விகிதாசாரமற்று வலிமையாக இருக்கிறது, அதாவது அதன் அபிவிருத்தி மட்டத்தின் படி இருக்க வேண்டிய வலிமையைக் காட்டிலும் வலிமையாக இருக்கிறது: அமெரிக்காவில் முதலாளித்துவ வர்க்கம்; ரஷ்யாவில் தொழிலாள வர்க்கம். [47]

அப்படியானால் எந்த நாடு ஜேர்மனிக்கு அதன் எதிர்காலத்தைக் காட்டியது? காவுட்ஸ்கி பதிலளித்தார்:

ஜேர்மனியின் பொருளாதாரம் அமெரிக்காவினுடையதற்கு நெருக்கமான ஒன்று; ஆனால் அதன் அரசியலோ ரஷ்யாவினுடையதற்கு நெருக்கமாய் இருக்கிறது. இந்த வழியில் இரண்டு நாடுகளுமே நமக்கான வருங்காலத்தைக் காட்டுகின்றன. இது பாதி அமெரிக்க பாதி ரஷ்ய குணாம்சத்தைக் கொண்டிருக்கும். ரஷ்யாவையும் அமெரிக்காவையும் குறித்து எந்த அளவிற்கு அதிகமாய் நாம் கற்கிறோமோ, எவ்வளவு மேம்பட்ட விதத்தில் இரண்டு நாடுகளையும் நாம் புரிந்து கொள்கிறோமோ, அந்த அளவிற்கு நம்மால் நமது சொந்த வருங்காலத்தைப் புரிந்து கொள்ள முடியும். அமெரிக்க உதாரணத்தை மட்டும் எடுத்தால் அது ரஷ்ய உதாரணத்தை மட்டும் எடுப்பது போல் தவறாகவே இட்டுச் செல்வதாய் அமையும்.

சரியாக ரஷ்ய பாட்டாளி வர்க்கம் தான் நமது வருங்காலத்தை தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சியை பொறுத்தமட்டிலே, மூலதனத்தின் ஒழுங்கமைப்பு விடயத்தில் அல்ல காட்ட வேண்டும் என்பது நிச்சயமாக ஒரு பிரத்தியேகமான போக்காகும். ஏனென்றால் முதலாளித்துவ உலகின் அனைத்து பெரும் அரசுகளிலும் ரஷ்யா தான் மிகவும் பின் தங்கியதாய் இருக்கிறது. இது பொருளாதார அபிவிருத்தி தான் அரசியலுக்கான அடிப்படையை உருவாக்குகிறது என்கிற வரலாறு குறித்த சடவாத கருத்தாக்கத்திற்கு முரண்படுவது போல் தோன்றுகிறது. ஆனால், உண்மையில், வரலாற்றுச் சடவாதம் என்று நமது எதிரிகளும் விமர்சகர்களும் என்ன கருதிக் கொண்டு நம்மை குற்றம்சாட்டுகின்றார்களோ அந்த வரலாற்றுச் சடவாத வகைக்கு மட்டுமே அது முரண்படுகிறது. அவர்கள் அதனை ஒரு ஆயத்த தயாரிப்பு மாதிரி போல் புரிந்து கொள்கிறார்களே அன்றி ஆய்வுக்கான ஒரு வழிமுறையாகப் புரிவதில்லை. அவர்கள் அதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை, பயனுள்ள வகையில் செயற்படுத்தவும் முடியவில்லை என்பதால் தான் வரலாறு குறித்த சடவாத கருத்தாக்கத்தை அவர்கள் நிராகரிக்கின்றனர். [48]

அமெரிக்காவின் அரசியல் அபிவிருத்தி குறித்த காவுட்ஸ்கியின் விளக்கத்தை ஆராய வேண்டுமென்றால், இந்த திறனாய்வை குறிப்பிடத்தக்க அளவு நீட்டாமல் அது சாத்தியமில்லை. ஐரோப்பாவில் போல் அமெரிக்காவில் சோசலிசம் முன்னேறுவதை அசாதாரணமான சிரமமாக்கிய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலை குறித்த ஒரு வெகு ஆழமான பகுப்பாய்வை காவுட்ஸ்கி வழங்கினார் என்று கூறுவது போதுமானது. அமெரிக்க முதலாளித்துவத்தின் பெரும் செல்வம் புத்திஜீவித் தட்டின் ஒரு முக்கிய பகுதியை சீரழித்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் சமூக தேவைகளுக்கு அது அலட்சியம் காட்டும் வகையில் செய்தது என்பதும் அவர் சுட்டிக் காட்டிய காரணிகளில் ஒன்றாகும். எப்படியிருப்பினும், பல தடைகள் இருந்தாலும் அமெரிக்காவில் இறுதியாக சோசலிசம் அசாதாரண முன்னேற்றங்களை காணும் என்று காவுட்ஸ்கி முடிவு கூறினார்.

காவுட்ஸ்கியின் “அமெரிக்க தொழிலாளர்” ட்ரொட்ஸ்கி மீது ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கை செலுத்தியது. அதனை முடிவுகளும் வாய்ப்புகளும் படைப்பில் அவர் வெளிப்படையாய் ஒப்புக் கொண்டார். அவர் தனது படைப்பில் மேலே கூறப்பட்ட பத்திகளில் இருந்தான மேற்கோள்களை சேர்த்துக் கொண்டார். காவுட்ஸ்கிக்கு தானும் தனது தலைமுறையைச் சேர்ந்த மற்றவர்களும் ஆழமாய் கடன்பட்டிருந்ததை ட்ரொட்ஸ்கி ஒருபோதும் மறுத்ததில்லை. காவுட்ஸ்கியின் பிந்தைய காட்டிக் கொடுப்புகளை ட்ரொட்ஸ்கி மன்னிக்கவில்லை, ஆனால் அவரது சாதனைகளை மறுப்பதற்கோ அல்லது குறைத்துக் காட்டுவதற்கோ அவசியமிருப்பதாய் அவர் கருதவில்லை. 1938-ல் காவுட்ஸ்கி இறந்தபோது ட்ரொட்ஸ்கி அவரை இவ்வாறு நினைவுகூர்ந்தார்: “ஒரு சமயம் நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாய் இருந்த நமது முன்னாள் ஆசிரியர் இவர். ஆனால் பாட்டாளி வர்க்க புரட்சியிடம் இருந்து அவராகவே பிரித்துக் கொண்டார். அதனையடுத்து அவரிடம் இருந்து நாம் பிரித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.” [49]

நிரந்தரப் புரட்சி தத்துவம் குறித்த ட்ரொட்ஸ்கியின் விளக்கத்திற்கு காவுட்ஸ்கி அளித்திருக்கும் முக்கிய பங்களிப்பு குறித்து வலியுறுத்தப்படுவது அவசியமாயிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் காவுட்ஸ்கி எந்த சோசலிசத்தை அபிவிருத்தி செய்வதில் ஒரு பெரும் பாத்திரம் வகித்தாரோ, அந்த சோசலிசத்தின் தத்துவார்த்த பாரம்பரிய்த்தை மதிப்பிழக்கச் செய்ய குட்டி முதலாளித்துவ மார்க்சிச-விரோத இடதுகள் செய்த முயற்சிகளில் ஏராளமான மை வீணடிக்கப்பட்டுள்ளது என்பதால் தான். காவுட்ஸ்கியின் மொத்த பணிகளின் மீதுமான கண்டனங்கள் பிராங்கபேர்ட் பள்ளியால் முன்னெடுக்கப்பட்டு பல்வேறுபட்ட இடது-தீவிரவாத போக்குகளால் உரத்துக்கூறப்படும் தாக்குதல் வலது பக்கமிருந்து வந்திருக்கின்றன. இக்கண்டனங்கள் 1914க்கு முந்தைய சமூக ஜனநாயகக் கட்சியின் பலவீனங்களின் குணாம்சம் மற்றும் புறநிலை மூலங்களைப் பற்றி விளக்குவதற்கு மாறாக அதன் மிகப்பெரும் பலத்தினை நோக்கி, அதாவது அக்கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல்ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் கல்வியூட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது மற்றும் அதற்காக முனைந்தது என்பதை நோக்கி செலுத்தப்பட்டதாக இருந்தது. 1914க்கு முந்தைய சமூக ஜனநாயகக் கட்சியின் மீது சூழ்ந்த அரசியல் அழுத்தங்களுக்கு பலியாகும் முன்னதாக காவுட்ஸ்கி எழுதிய எழுத்துக்களை லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியினுடையது உட்பட கற்பது மார்க்சிச சிந்தனையின் அபிவிருத்தி குறித்த ஒரு ஆழமான புரிதலை சாத்தியமாக்கும்.

இந்த சிறந்த தொகுதிக்கு வழங்கிய அறிமுகத்தை நிறைவு செய்வதற்கு டே மற்றும் கெய்டோ பயன்படுத்தும் வார்த்தைகளை இம்மதிப்புரையாளர் முழுமையாக வழிமொழிகிறார்:

நிரந்தரப் புரட்சி தத்துவம் என்பது, ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது விமர்சகர்கள் இடையே மட்டுமன்றி கல்வியியல் வரலாற்றாசிரியர்கள் இடையேயும், பல தசாப்த காலங்கள் விவாதப் பொருளாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் நீதியவையில், காவுட்ஸ்கிக்கு தீர்ப்பளிப்பதில் ட்ரொட்ஸ்கி நன்கு புரிந்து வைத்திருந்ததைப் போல, பங்கேற்பவர்கள் தங்களுக்கான வாதத்தை எடுத்து வைப்பதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் உறுதி செய்வது தான் நியாயமும் கண்ணியமும் ஆகும். [50]

1903 மற்றும் 1907ம் ஆண்டுகளுக்கு இடையில் மார்க்சிச சமூக மற்றும் அரசியல் சிந்தனையானது ஒரு அசாதாரண அபிவிருத்திக்கு உட்சென்றது. இந்த ஆவணங்களை கற்பதென்பது அரசியல் சிந்தனை இன்றிருப்பதை விட ஒப்பிட முடியாத அளவு உயரத்தில் இருந்த ஒரு காலத்திற்கு திரும்புவதாகும். இந்த மதிப்புரை நீளமானதாய் இருந்தாலும் கூட, நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் செல்வங்களில் ஒரு பார்வையை மட்டுமே வழங்கியிருக்கிறது. இந்த தொகைத் திரட்டில் வழங்கப்பட்டிருப்பது போன்ற சிக்கலான தொலைசிந்தனை ஆவணங்கள் பன்முகப்பட்ட பொருள் விளக்கங்களுக்கு வழிவகுப்பது தவிர்க்கவியலாதது. ரிச்சார்ட் டே மற்றும் டானியல் கெய்டோவின் முடிவுகளுடன் நான் உடன்படாத சில பகுதிகளை சுட்டிக் காட்டியிருக்கிறேன். இருபதாம் நூற்றாண்டில் புரட்சிகரத் தத்துவத்தின் அபிவிருத்தியிலான ஆர்வத்திற்கு புத்துயிரூட்ட அவர்கள் செய்திருக்கும் மிக முக்கிய பங்களிப்புக்கு எனது மிகப் பெரும் பாராட்டுகளை அது கொஞ்சமும் கூட குறைத்து விடாது என்பதை அநேக சோசலிஸ்டுகளும் உணர்ந்து கொள்வார்கள்.

அடிக்குறிப்புகள்:

[1] புதிய பாதை (லண்டன்: நியூ பார்க், 1972), பக். 45

[2] நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: ஆவணப் பதிவு. தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு ரிச்சார்ட் பி.டே மற்றும் டானியல் கெய்டோ (பிரில், 2009), பக். 3

[3] அதே புத்தகம், பக் 9-10

[4] மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுத்து சேகரங்கள், தொகுதி 10 (லண்டன்: லாரன்ஸ் & விஷார்ட், 1978), பக். 280

[5] அதே புத்தகம், பக் 287

[6] டே மற்றும் கெய்டோ, பக். 63

[7] அதே புத்தகம், பக். 181

[8] அதே புத்தகம், பக். 569

[9] அதே பக்கம்

[10] அதே புத்தகம், பக். 223

[11] அதே புத்தகம், பக். 541

[12] அதே புத்தகம், பக். 642-43

[13] அதே புத்தகம், பக். 36

[14] அதே புத்தகம், பக். 376

[15] அதே புத்தகம், பக். 407

[16] அதே புத்தகம், பக். 374

[17] அதே புத்தகம், பக். 375

[18] அதே புத்தகம், பக். 70

[19] அதே பக்கம்

[20] அதே புத்தகம், பக். 133-34

[21] அதே புத்தகம், பக். 121-22

[22] லெனின், எழுத்து சேகரம், தொகுதி 5 (மாஸ்கோ: அந்நிய மொழிகள் வெளியீட்டு நிலையம், 1961), ப. 384

[23] டே மற்றும் கெய்டோ, பக். 70

[24] அதே புத்தகம், பக். 473

[25] “ரஷ்ய புரட்சியின் மூன்று கருத்துருக்கள்”, லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துகளில் 1939-40 (நியூயார்க்: பாத்ஃபைண்டர், 1973). பக். 67

[26] லெனின், எழுத்து சேகரம், தொகுதி. 9 [மாஸ்கோ: பிராக்ரஸ் பப்ளிஷர்ஸ், 1972], பக். 56-57

[27] ”மூன்று கருத்துருக்கள்” பக். 68

[28] டே மற்றும் கெய்டோ, பக். 257.

[29] படைப்பு சேகரம், தொகுதி. 9, பக். 48

[30] டே மற்றும் கெய்டோ, பக். 252

[31] அதே புத்தகம், பக். 261

[32] அதே பக்கம்

[33] அதே புத்தகம், பக். 267

[34] அதே புத்தகம், பக், 267-268

[35] அதே புத்தகம், பக், பக். 282-84

[36] அதே புத்தகம், பக். 247

[37] அதே புத்தகம், பக். 236

[38] அதே புத்தகம், பக். 334

[39] அதே புத்தகம், பக். 347

[40] அதே புத்தகம், பக். 411

[41] அதே புத்தகம், பக். 416

[42] அதே புத்தகம், பக். 444-45

[43] அதே புத்தகம், பக். 493

[44] அதே பக்கம் [அழுத்தம் சேர்ப்பு]

[45] அதே புத்தகம், பக். 502

[46] அதே பக்கம்

[47] அதே புத்தகம், பக். 620-21

[48] அதே புத்தகம், பக். 621

[49] அதே புத்தகம், பக். 58

[50] அதே பக்கம்.

* பூர்சுவா என்ற வார்த்தையை இதிலிருந்து பிரயோகிக்வேண்டியுள்ளது. ஏனெனில் மார்க்சிச உள்ளடக்கத்தில் பூர்சுவா என்பது அதன் வளர்ச்சிப்போக்கில் பின்னர் வந்த முதலாளித்துவம் என்பதை விட வேறுபட்ட உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. ஏனெனில் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளைவிட முற்போக்கான சமூக அமைப்பு முறையை உருவாக்கிய பூர்சுவா என்பது பின்னர் வந்த முதலாளித்துவத்தை விட முற்போக்கான தன்மைகளை உள்ளடக்கியிருந்த்து. இது இரண்டையும் வேறுபடுத்திக்காட்டுவது வரலாற்று விளக்கத்தை இன்னும் இலகுவாக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com