Monday, May 31, 2010

அமரர் அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் இலங்கையில் விடுமுறை.

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அமிர்தலிங்கத்தின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கடந்த 21வருடங்களின் பின்னர விடுமுறை நிமிர்த்தம் இலங்கை வந்துள்ளனர். 1989 ஜூலை மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் இங்கிலாந்தில் குடியேறிய இவர்கள் 21வருடங்களின் பின்னரே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வந்துள்ள அமரர் அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் கேகாலை, அம்பலம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள, அமிர்தலிங்கத்தின் மெய்ப்பாதுகாவலரான டீ.ஏ. நிஸ்ஸங்க என்பவரின் வீட்டுக்கு விஜயம் செய்திருந்தனர , அமரர் அமிர்தலிங்கத்தின் மெய்ப் பாதுகாவலருக்கு நன்றி பாராட்டும் நோக்கில் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். 21 ஆண்டுகளின் பின்னர் குறித்த மெய்ப் பாதுகாவலரை சந்தித்த அமிர்தலிங்கம் குடும்பத்தார், உணர்வுபூர்வமாக தமது நன்றியை தெரிவித்தனர். 1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி புல்லர்ஸ் பிளேஸ் கட்டமொன்றில் அமிர்தலிங்கம் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த மூன்று ஆயுததாரிகளை மேற்படி மெய்ப்பாதுகாவளரான நிஸ்ஸங்க, சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஊடகவியளாளர்களிடம் பேசிய மங்கையர்க்கரசி அவர்கள், நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான திறமை ஜனாதிபதியிடம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் சுதந்திரமானதொரு நடமாட்ட நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இருப்பினும் இனங்களுக்கிடையே சமாதானத்தை நிலைபெறச் செய்வதற்கு மேலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

நாட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முயற்சி பாராட்டுக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாராம்.

வயது முதிர்ந்து விட்டதால் அரசியல் விவகாரங்களில் தமக்கு எவ்வித நாட்டமும் கிடையாது எனவும் அரசியலினால் தமது குடும்பம் சொல்லொனா துயரங்களை அடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசியலில் பிரவேசிப்பதன் மூலம் மட்டுந்தான் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்றில்லை என அமரர் அமிர்தலிங்கத்தின் புதல்வரும் வைத்தியருமான பகீரதன் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியலில் ஈடுபடும் எவ்வித நோக்கமும் தமக்குக் கிடையாது என அவர் மேலும் கூறியுள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com