ஐ.நா சபை கூட்டத்தில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து வெளிநடப்பு
ஹில்லாரி கிளின்டனுக்கும், ஈரான் அதிபர் அகமதி நிஜாத்திற்கும் இடையே காரசார வாக்குவாதம்
ஈரான் அதிபரின் பேச்சை கண்டித்து அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகள் ஐ.நா சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன. நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா. சபைத் தலைவர் பான் கீன் மூன், சபையின் தீர்மானங்களை ஈரான் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தங்கள் நாட்டின் மீதான குற்றச்சாற்றுகளை மறுத்த ஈரான் அதிபர் அகமது, ஐ.நா ஒப்பந்தத்தை தாங்கள் மீறுவதாக சிறு ஆதாரம் கூட இல்லை என்று கூறினார். அமைதியான நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா அணு ஆயுதங்களை காட்டி மிரட்டி வருவதாகவும் அவர் குற்றம்சாற்றினார்.
இதனை கண்டித்து அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். ஈரானின் குற்றச்சாற்றை மறுக்கும் வகையில் 1967 ஆம் ஆண்டு பயன்படுத்தியதைவிட தங்களது அணு ஆயுதங்களை 84 சதவீதம் குறைத்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பின்னர் பேசிய அமெரிக்க அயலுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உண்மையான நிலையை ஈரான் வெளிப்படுத்த வேண்டும் என்றார். அணு குண்டு தயாரிப்பதாக ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குற்றம்சாற்றி வருகின்றன. எனவே அந்நாட்டிற்கு யுரோனியம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பது குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் விவாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டனுக்கும், ஈரான் அதிபர் அகமதிநிஜாத்திற்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. ஐ.நா. சார்பில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்த மாநாட்டில் பேசிய அகமதிநிஜாத், " முதன் முதலில் அணுகுண்டை உருவாக்கி அதை பயன்படுத்தியது அமெரிக்காதான். இன்றும் கூட அது பெருமளவில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளது. அணு ஆயுதப் பரவலை உருவாக்கியதே அமெரிக்காதான்.ஆனால் மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று மிரட்டி வருகிறது.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வரும் அமெரிக்கா, இஸ்ரேல் மீது கவனம் செலுத்தாதது ஏன். இஸ்ரேல் அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை கண்டிக்காதது ஏன்? பிற நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை வைத்து மிரட்டுவதோடு, பயன்படுத்தவும் தயங்காத அமெரிக்கா, தொடர்ந்து ஈரானை மட்டும் சாடி வருவது வருத்தத்திற்குரியது" என்றார்.
தொடர்ந்து பேசிய ஹில்லாரி கிளிண்டன், ஈரான் அதிபர் அகமதிநிஜாத்தின் பேச்சு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், வியப்பளிப்பதாக இல்லை என்றும் கூறியதோடு, ஈரான் தான் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளையே திசை திருப்ப எதை வேண்டுமானாலும் செய்யும் என்றும் கூறினார்.
1 comments :
There is nothing wrong in Iran`s
president's comments.USA and Britain always think that "King do no
wrong"
Post a Comment