Friday, April 16, 2010

22ம் திகதி 7வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு

எதிர்வரும் 22ம் திகதி கூடவுள்ள 7வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் இன்று முதல் 18 ஆம் திகதி வரை எம்.பிக்களின் தகவல்களை திரட்டுவதற்கான விசேட கருமபீடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

இம்முறை கூடுதலான புதுமுகங்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதால் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து தகவல் கருமபீடத்தினூடாக அறிவூட்டப்படவுள்ளதோடு அவர்களது தகவல்களும் திரட்டப்படவுள்ளன.

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு ஏனைய ஒழுங்குகளும் துரிதமாக இடம் பெற்று வருவதாக தம்மிக தசநாயக்க மேலும் கூறினார்.பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்ற செயலா ளர் தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது.

7 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு 22ம் திகதி காலை 8.45 மணிக்கு இடம்பெறவுள்ளது. முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம் பெறும். அடுத்து சகல எம்.பி. க்களினதும் பதவி ஏற்பும் அதன் பின்னர் பிரதி சபா நாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகளும் இடம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதனைத் தொடர்ந்து 7 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com