Wednesday, March 17, 2010

பிரச்சினையின் தீர்வுக்காக ஐக்கியம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகா ணங்களிலிருந்து 34 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வுள்ளனர். இவ்விரு மாகாணங்களிலும் மொத்தம் 1814 வேட் பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். இதற்கு முன் நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் இவ்வளவு பெருந்தொகையான வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் இவ்விரு மாகாணங்களிலும் போட்டியிடவில்லை.

தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கடந்த காலங்களில் மரண அச்சுறுத்தல் நிலவிய பின்னணியில் பார்க்கும்போது, இவ்வளவு கூடுதலான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்துக்கு வந்திரு ப்பது அந்த அச்சுறுத்தல் முற்று முழுதாக நீங்கிச் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பதை வெளிப் படுத்துகின்றது.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நடக்கும் தேர்தல்களில் யார் போட்டியிடலாம், யார் போட்டியிடக் கூடாது என்பதைப் புலிகளே தீர்மானித்தார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இப்போது அச்சமற்ற சூழ் நிலையில் வாழ்கின்றார்கள். அதனால் துணிச்சலுடன் வேட்பாளர்களாக முன்வந்திருக்கின்றார்கள். இது ஜனநாயகத்தைப் பொறுத்த வரையில் ஆரோக்கியமான வளர்ச்சிப்போக்கு.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கூடுதலான வேட்பாளர்கள் கள மிறங்கியிருப்பதை எதிர்மறை நோக்கில் பார்ப்பவர்களும் இல்லா மலில்லை. தமிழ் மக்களின் வாக்குகளைப் பிளவுபடுத்துவதற்காகவே இவ்வளவு எண்ணிக்கையில் வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு எதிராக இக்குற்றச் சாட்டைச் சுமத்துகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளராகத் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் கலாநிதி விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் வாக்குகளைப் பிளவுபடுத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சதி செய்கின்றது என்று குற்றஞ்சாட்டுகின்றார்.

இவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளின் சாராம்சம் தமிழ் மக்கள் ஐக்கிய மாகத் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதாகும். தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வெளிப்படையாகவே இதைக் கூறுகின்றார்கள். தமிழ் மக்கள் இத் தேர்தலில் தங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எல்லாத் தேர்தல் பிரசார மேடைகளிலும் இவர்கள் கூறி வருகின்றார்கள்.

ஐக்கியப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களுக்குப் புதிய தல்ல. அறுபது வருடங்களாக நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் இக்கோரிக்கை பிரதான கோஷமாகத் தமிழ்த் தலைவர்களால் முன்வைக்கப்பட்டது. அடிப்படையில் இடதுசாரிகளுக்கு எதிராகவே இக்கோஷம் முன்வைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் இன உணர்வுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமையின் கீழ் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோஷத்தை ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே.வி. செல்வநாயகம் போன்ற தலைவர்கள் முதல் இன்றைய கூட்டமைப்புத் தலைவர்கள் வரை முன்வைத்தார்கள்.

மக்களும் இக் கோரிக்கையை ஏற்றுச் செயற்பட்ட போதிலும் அவர்களுக்குத் துன்பச் சுமையைத் தவிர எந்த நன்மையும் இதுவரை கிடைக்கவில்லை. தமிழ் மக்கள் இதுபற்றி நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. ஆனால் எதற்காக ஐக்கியப்பட வேண்டும் என்பது முக்கிய மானது.

ஒரு கட்சியை அல்லது குழுவைச் சேர்ந்தவர்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக மாத்திரம் ஐக்கியப்படுவதால் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் இல்லை.

தமிழ் மக்களின் ஐக்கியத்துக் கூடாக இதுவரை பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்திச் செயற்பட வில்லை. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே தங்கள் இலக்கு என்று இத்தலைவர்கள் கூறியபோதிலும் இவர்களின் செயற்பாடுகளால் இனப்பிரச்சினை சிக்கலானதாக வளர்ந்ததே மிச்சம். இந்த நிலை தொடர்வதற்குத் தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

உணர்ச்சியூட்டும் வீராவேசப் பேச்சுகளால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. யதார்த்தபூர்வமான அணுகுமுறையின் மூலமே தீர்வு சாத்தியமாகும்.

இனப் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்பது முடிந்த முடிவு. முழுமையான அரசியல் தீர்வை ஒரே நேரத்தில் அடைவது இன்றைய நிலையில் சாத்திய மில்லை. படிப்படியாக முழுமையான தீர்வை நோக்கிச் செல்ல முடியும். இவ்விடயத்தில் பதவியிலுள்ள அரசாங்கத்துடனான இணக்கப்பாடு அத்தியாவசியம்.

தமிழ் மக்கள் இவற்றைக் கவனத்தில் கொண்டு பிரச்சினையின் தீர்வுக்காக ஐக்கியப்பட வேண்டும்.

தினகரன் ஆசிரியர் தலையங்கம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com