Thursday, February 25, 2010

தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல்.

முன்னாள் எம்.பிக்கள் 9 பேருடன் பல புதுமுகங்கள் களத்தில்.
வடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று (24) தாக்கல் செய்தது. இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

இந்தத் தேர்தலில் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்பது பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். போட்டியிட்டுத் தெரிவான பதினொரு பேருக்குப் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வன்னி மாவட்டத்தில் முன்னாள் உறுப்பினரான செல்வம் அடைக்கல நாதன் முதன்மை வேட்பாளராகவும் மற்றும் நடேசு சிவசக்தி(ஆனந்தன்), சு. வினோ நோகரா தலிங்கம் ஆகியோரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக மாவை சேனாதி ராசாவும் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக தோமஸ் விலியம் போட்டியிட சந்திரநேரு சந்திரகாந்தனும் இடம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டியலில் பா. அரியனேத்திரன் இடம் பெற்றுள்ளார்.

திருகோணமலையில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவளித்த என். ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட 11 பேருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை வழங்கியதாகக் கூறப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர் துரைரெட்ணசிங்கத்தின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை.

அதேபோன்று சிவநாதன் கிஷோர், க. தங்கேஸ்வரி, ச. கனகரட்னம் ஆகியோருக்குக் கூட்டமைப்பு சந்தர்ப்பம் வழங்காததால் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டி யிடுகின்றனர்.

சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வருவதுடன் இம்முறை புதிய இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

பத்மினி சிதம்பரநாதன், கஜன் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சொலமன் சிறில், இமாம், எஸ். ஜெயா னந்தமூர்த்தி, உள்ளிட்ட 11 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் உறுப்பினர் ரி. கனகசபை அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டம்


இலங்கைத் தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச் சந்திரன் ஆகியோரே இடம்பெற்றுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, சிறில், கஜேந்திரன் ஆகியோர் போட்டியிட விண்ணப்பித்திருந்தும் அவர்கள் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.

புதிய முகங்களாக உதயன், சுடரொளி பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் ஈ. சரவணபவன், பேராசிரியர் இரா. சிவச் சந்திரன், சட்டத்தரணி ரெமீடியஸ், முன்னாள் டிறிபேர்க் கல்லூரி அதிபர் அருந்தவச் செல்வம், மாவை சேனாதி ராஜாவின் செயலாளர் குலநாயகம், ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

அகில இலங்கை தமிழ்க் காங் கிரஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய போதும் அதன் தலைவர் அ. விநாயகமூர்த்தியும் முன் னாள் யாழ். மாநகர சபை ஆணையாளர் சி. வி. கே. சிவஞானமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மற்றைய கட்சிகள் நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்.

மட்டு. மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியும் மேலும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் நேற்று காலை நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அரு மைநாயகத் திடம் இந்த நியமனப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பொ. செல்வராசா, பா. அரியநேத்திரன், இ. நித்தியானந்தம், கு. செளந்தரராசா, க. ஆறுமுகன், சீ. யோகேஸ்வரன், த. சிவநாதன், சு. சத்தியநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் பொ. செல்வராசா, பா. அரியநேத்திரன், கு. செளந்தரராசா ஆகிய மூவரும் முன்னாள் எம்.பிக்களாவர்.

வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பட்டியலில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராகவும் ஏனைய வேட்பாளர்களாக நடேசு சிவசக்தி, சு. நோகராதலிங்கம், எஸ். சூசைதாசன், பெ. பழனியாண்டி, து. ஜெயகுலராசா, சி. செல்வராசா, எஸ். பீ. எஸ். பீ. சிராய்வா, கு. லோக செளந்தரலிங்கம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

அம்பாறை மாவட்டம்

தோமஸ் விலியம் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட கே. மனோகரன், சந்திரநேரு சந்திரகாந்தன், செ. இராசையா, எச். வி. விஜேசேன, ரோமியோ குமாரி சிவலிங்கம், வே. தங்கதுரை, எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. வடிவேல், எஸ். பகீரதன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

1 comments :

Anonymous ,  February 25, 2010 at 4:47 PM  

Past is over.Now tamils have the best knowledge to select the best and genuine candidates to the parilament.Dramatic words,old style of cheating,their dramtic rendering of tamils ,cannot a play big role in this election.
New brooms sweep well only for a few days.Old brooms should be thrown away in to the carbage.But think deeply and select the best ones.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com