Wednesday, October 14, 2009

எல்லையை அறிந்து செயற்படு. ஜெனரல் சரத்பொன்சேகா விற்கு மேர்வின் சில்வா.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தின் 60ம் ஆண்டு நிறைவை ஒட்டி இடம்பெற்ற நிகழ்வில் நிகழ்த்திய பேச்சை தொடர்ந்து கிளம்பியுள்ள சர்ச்சைகளை அடுத்து, இராணுவத் தளபதிகளுக்கு தொழில் துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் திலான் சுமதிபால அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதி அபிவிருத்தி திட்டம் ஒன்றை திறந்து வைத்து பகிரங்க மேடையில் பேசிய அமைச்சர் மேர்வின் சில்வா, போரிலே அரசியல் தலைமைத்துவம் என்பது மிக முக்கியமானதாகும். அவ்வாறுதான் துட்டகெமுனு அவர்களது பெயர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் நடந்து முடிந்துள்ள போர் 10 தளபதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் யாரும், வெற்றிக்கு உரிமைகோர முடியாது. காரணம் இப்போர் முப்படைத் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச அவர்களாலும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர்களாலும் திட்டமிடப்பட்டதுடன், கட்டளைகளும் அவர்களால் வழங்கப்பட்டது. களமுனைகளில் நின்ற தளபதிகள் கட்டளைகளை நிறைவேற்றினார்கள். இந்த யுத்தம் இடம்பெற்ற முப்பது வருடங்களிலும் எத்தனையோ தளபதிகள் இருந்திருக்கின்றார்கள். ஏன் அவர்களால் யுத்தத்தை வெற்றி கொண்டிருக்க முடியவில்லை? ஏனென்றால் அப்போது முதுகெலும்பு உள்ள அரச தலைவர்களை நாம் கொண்டிருக்கவில்லை. அவ்வாறிருக்க சில தளபதிகள் தங்களால்தான் போர் வெல்லப்பட்டதாக நினைக்கின்றார்கள். நான் அவர்களுக்கு கூறுகின்றேன் "உங்களுடைய எல்லையை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்" எவராவது எதிர்கட்சியினரின் விருப்பத்திற்கு செயற்பட விரும்புவார்களாயின், நாம் விரும்பத்தகாத முறையில் விடயங்களை கையாள வேண்டிவரும். எனவே நாம் குறிப்பிட்ட தளபதிகளை அவ்வாறான ஒர் நிலைமையை உருவாக்கிக் கொள்ளவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார் டாக்டர் மேர்வின் சில்வா.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com