Thursday, July 30, 2009

தொடர்ந்து தலையிட்டால், இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும்! இது நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கை!! - சோமவங்ச அமரசிங்க

இலங்கை விடயத்தில் தொடர்ந்து தலையிடுமாயின், இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும் எனவும், இது அவர்களுக்கு தாம் விடும் நட்பு ரீதியான எச்சரிக்கையெனவும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடன் பகைமையை வளர்க்க தாம் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழொன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'தற்போது 1,500 இந்தியர்கள் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இங்கு வந்துள்ளார்கள். இந்தியர்கள் எதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு வரவேண்டும். எமது நாட்டவர்களால் இதனைச் செய்ய முடியும். இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள். இந்தியாவுடன் பகைமையை வளர்க்க நாம் விரும்பவில்லை. அதனால்தான் நாம் சொல்கின்றோம் - இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும். இலங்கையின் பிரச்சினை அவர்களைப் பாதிக்கும் என்பதால் இது அவர்களுக்கு நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கையாகும்.'

'எண்ணெய்க் குதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

திருகோணமலை துறைமுகத்தைச் சூழவுள்ள 679 சதுர கிலோ மீற்றர் பகுதி இந்தியாவிற்கான பிரத்தியேக பொருளாதார வலயமாக வழங்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களே செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை மீட்பதற்காக எமது இளைஞர்களே கொல்லப்பட்டனர். இந்த நிலத்தை தற்போது யார் ஆக்கிரமித்துள்ளார்கள்? இந்த நிலத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்வதற்காகவா எமது இளைஞர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து போராடினார்கள்? இந்தியா இன்று எம்மீது மேலாதிக்கம் செலுத்த முற்படுவதுடன், எமது வளங்களைப் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது. அரசியல் ரீதியாக எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் முற்படுகின்றது.' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உச்சக் கட்டப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இந்தியப் புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பின் முகவர்கள் ஐம்பது பேர் வன்னியில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியாமலேயே அவர்கள் வன்னியில் இருந்துள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வரும் நிலையில், அந்த 'றோ' முகவர்களின் பெயர்பட்டியல் ஒன்றை இலங்கை அரசாங்கத்திடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளனர்' எனவும் அவர் கூறியுள்ளார்.

'இவர்கள் ஏன் வந்தார்கள்? இவை இரகசியமானவையல்ல. ராஜீவ் காந்தியின் படுகொலையைக்குப் பின்னரும் 'றோ' இலங்கையில் செயற்பட்டுவந்துள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருந்தனர். இதனால்தான் இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என நாம் கோருகிறோம்' எனவும் சோமவங்ச அமரசிங்க கூறியுள்ளார்.

'விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித்தது. அந்தத் தவறை அவர்கள் உணர்ந்துகொண்ட பின்னரே தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டனர். பிரிவினைவாத சக்திகளால் தற்போதும் அவர்கள், முட்டாள்களாக்கப்படுகின்றார்கள் என்பதுதான் ஆபத்தானது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 1980-களில் இலங்கையில், தமது நலன்களை இந்தியா பெற்றுக்கொண்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com