Monday, April 27, 2009

“தலைவர் சொல்லாமல் அடிப்பதை ஜனாதிபதி சொல்லியடித்தார்” -கிழக்கான் ஆதம்-



“இனி நான் சும்மா இருக்க மாட்டேன்! இந்த ஆண்டு பெப்ரவரி இருபத்தி மூன்றாம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்தைக்குப் பிறகு புலிகள் இருபது குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள் நாற்பத்தேழு இராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள் நூற்றி முப்பத்தொன்பது பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது”

-2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-

நேற்றைய தினம் இருபத்தி ஆறாம் திகதி விடுதலைப் புலிகள் சர்வதேசத்தின் வேண்டுகோள்களை ஏற்று ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பில் அவர்கள் இனி எப்போதும் வலிந்த தாக்குதல் எதையும் மேற்கொள்ள போவதில்லை (முடிந்தால் செய்யமாட்டார்களா? என்ன?) எனவும் காலவரையரையற்ற முறையில் இத்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சார்பு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கு சில நாட்களுக்கு முன்புதான் புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் ஊடகங்களுக்கு மின்னஞ்சல் வழியாக வழங்கியிருந்த செய்திகளில் அவர்கள் எந்தவித யுத்தநிறுத்தத்திற்கும் இனி இடமில்லையெனவும் தவைவர் இறுதிவரை போராடுவார் எனவும் கூறியிருந்தனர்.

இச்செய்தி வெளியிடப்பட்டு ஒரு சில நாட்களிலேயே இந்தச் செய்தியும் வந்திருப்பதானது புலிகள் அவர்களின் பலத்தை மொத்தமாக இழந்திருந்த காரணத்தினால் எந்த முறையடிப்புப் தாக்குதலையும் செய்ய முடியாமல் இருப்பதும். சில நாட்களுக்கு முன்னர் அரசிடம் சரணடைந்த புலிகளின் தளபதிகள் மற்றும் உறுப்பினர்கள் யுத்த பிரதேசத்தில் பிரபாகரனின் நடமாட்டம் தொடர்பாகவும் புலிகளின் தற்போதுள்ள தாக்குதல் திறன் உட்பட்ட பல முக்கிய தகவல்களை இராணுவத்திற்கு வழங்கியுள்ளமையால் தங்களின் இயலாமையையும் தாங்களின் இறுதி போராட்டம் மிகவும் சுலபமாக இரானுவத்தினரால் வெற்றிகொள்ளப்படும் செய்தி புலம்பெயர் ஆதரவாளர்களை சோர்வடையச் செய்திவிடும் என்ற காரணத்தினாலும் தந்திரமாக இவ்வாறான ஒரு லேபலுடன் சரணடைவதை அல்லது இராணுவத்தினரிடம் தோற்றுப் போவதை புலிகள் மறைக்க முற்படுகின்றனர்.

இதற்கு முதலும் சார்க் மகாநாடு நடக்கும்போதும் இவ்வாறான ஒரு அறிவிப்புச் செய்யப்பட்டடது அதனுடாக சார்க் நாடுகள் உட்பட உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்து இன்னுமொருமுறை அவர்களுக்கு காதில் பூ சுற்ற நினைத்தனர் அது கைக்கூடவில்லை.

அதன் பின்னர் புலிகளின் நலன் விரும்பிகள் எனும் புலிக்குடத்திகள் இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதும் யுத்தத்தை நிறுத்துமாறு கோரி உண்ணாவிரதம், கவனயீர்ப்பு, மனிதச் சங்கிலி, தீக்குளிப்பு என தோடர் போராட்டங்களில் ஈடுபட்டபோதும் அது கைக்கூடாத நிலையில் இந்திய தூதரகம், சீனத் தூதரகம், இலங்கைத் தூதரகம் என தாங்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாடுகளின் அமைதிக்கும் நல்வாழ்விற்கும் பங்கமும் அந்தந்த நாடுகளின் கௌரவத்தை கெடுக்கும் வண்ணம் தங்களின் காடைத்தனத்தை காண்பித்து வருகின்றனர்.

இவை அனைத்தையும் பார்த்த சர்வதேச சமூகம் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் அமைதியாக இருந்தாலும் அவர்கள் தாங்களின் நிலைப்பாட்டில் எப்போதும் தெளிவாக இருந்துவருவதுடன் புலிகளை ஆயுதங்களை கீழே வைத்து இலங்கை அரசிடம் சரணடையுமாறே கூறி வருகின்றனர் இது புலிகளுக்குச் சார்பானதாக இல்லாததால் அதை இந்த புலிக்குடத்திகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டிருக்கின்றனர்.

மேற்கில் நாங்கள் வசிக்கும் நாடுகளில் புலிக்குடத்திகள் நடாத்தும் இந்த அராஜகங்களை அந்தந்த அரசுகள் சகித்துக் கொள்வது போல தெரிந்தாலும் அதற்கான எதிர் நடவடிக்கைகள் நிச்சயம் மிகவும் பாரதூரமான அளவில் இதை முன்னெடுப்பதாக இனம் காணப்பட்டவர்கள் மீது அந்த அரசுகளால் மேற்கொள்ளப்படவே செய்யும். தற்போதுள்ள இந்த கொடியும் கோஷமும் அடங்கும் போது சட்டம் தனி நபர்கள் மீது பாயும்.

இவ்வாறான ஒரு நடைமுறையை தற்போதும் மேற்கத்தைய நாடுகள் புலிகள் விடயத்தில் பின்பற்றியே வருகின்றன அதுவே புலிகள் அவர்கள் பலமாக இருந்த காலத்தில் மேற்கத்தைய நாடுகளின் அலோசனைகளை மதியாமல் போனதற்கான பரிசாக இன்று அவர்கள் புலிகளையும் அவர்களின் புலிக்குடத்திகளையும் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசுக்கு தொடர்ந்து அளிக்கும் ஆதரவாகும்.

வன்னியில் வலைஞர்மடத்தையும் இராணுவத்தினரிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்ட புலிகளால் தற்போது தற்காப்பு யுத்த்த்தை நடத்துவது கூட கடினமாக உள்ளமையால் இன்னும் சில நாட்களில் நிகழப்போகும் அந்த விபரீதத்தின்போது “அண்ணன் அடிப்பார், சிங்கள இராணுவம் ஓடும்” என்றெல்லாம் கூறி அடிக்கடி ஜோசியமும் பார்த்து அம்மாவுடன் இணைந்து கூட்டுப் பிராத்தனை செய்துகொண்டிருக்கும் இந்தக் கூட்டதுக்கு தலைவரால் எந்த சந்தோசமான செய்தியையும் கொடுக்க முடியாதுபோனதை மறைக்க இந்த யுத்த நிறுத்த அறிவிப்பைச் செய்திருக்கிறார்.

தற்போது வன்னியில் மீதமிருக்கும் அனைத்தும் படையினர் வசம் செல்லும்போதும் எஞ்சியுள்ள பு(கி)லித்தளபதிகள் சரணடையும் போதும் தலைவர் யுத்த நிறுத்தம் செய்திருந்தபோது சிங்கள இராணுவம் மனிதாபிமானமற்ற முறையில் சிறை பிடித்திருக்கிறது என தங்களுக்கு தாங்கள் சாமாதானம் கூறிக்கொள்ள இந்தப் புலிக்குடத்திகளால் முடியும்.

அதனையே இனிவரும் நாட்களில் புலிகளின் போரியல் ஆய்வாளர்களும் அவர்களின் பணத்திலியங்கும் ஊடகங்களும் கருப்பொருளாக கூறி உலகில் பல போராட்ட இயக்கங்கள் இவ்வாறு சமாதானம் வேண்டி நின்றபோது அடக்கப்பட்டன என்பதை கட்டியம் கூறி தலைவர் தவறிழைக்காதவர் என காப்பாற்றப்போகின்றன. தலைவரை நம்பி உயிர் துறந்த ஏழைப் பிள்ளைகள் மட்டுந்தான் ஏமாந்தவர்கள்.

இவர்கள் ஒருதலைப் பட்சமாக போர்நிறுத்தம் அறிவித்த நாள் மிகவும் முக்கியமான நாளாகும் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஏப்ரல் 25ம் திகதிதான் கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் வைத்து தற்போதைய இராணுவத் தளபதி மீது ஒரு கற்பிணிப் பெண்ணை அனுப்பி உலக மானிட நடைமுறைக்கு அப்பால் தற்கொலைத் தாக்குதலை புலிகள் நடாத்தினர். அன்று இராணுவத் தளபதி எப்படியோ உயிர் தப்பிவிட்டார். அக்காலகட்டத்தில் இராணுவத் தளபதிக்கு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அறிந்த புலம்பெயர் புலிக்குடத்திகள் பின்வருமாறு கூறி குடித்து கும்மாளமடித்தனர்.

“ஐயோ ஐயோ, சரத் பொன்சேகா மாத்தையாவின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் செயற்படவில்லையாம்.

விடுமுறையை கழிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு 2 கால் நடையில வந்து கொண்டாடிப்போட்டு போகக்கை சிங்கன் மாதிரி போனியளே மாத்தையா, எனி அந்த நடையை எப்ப எனி என் தோழர்களுடன் பார்க்கப்போறம்? டக்கிளஸ் நீதாண்டா எனது நாய்குட்டி, ஆனந்தசங்கரி நீதானய்யா என்னுடைய நாய் எண்டு அடிக்கடி சொல்லுவியளே மாத்தையா, இப்ப நீங்கள் முண்டமாகிட்டீங்களே, ஐய்யகொ, சாகிறதிலும் கொடுமையான விடயமாச்சே மோட்டைய்யா சா மாத்தைய்யா சரத் பொன்சேகா இப்பதான் நீர் அவதானமாக இருக்கவேண்டும், கதிர்காமரை திட்டம்போட்டு கொன்று புலிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிராயண வரவேற்பு தடையை போட்டமாதிரி, உம்மை முடிச்சு புலிகளை ஐரோப்பிய ஒன்றியத்தில தடைசெய்ய முயற்சி செய்வார்கள் சிங்கள மரமண்டைகள். (நீர் எனி உதவமாட்டீர்தானே)

பொன்சேகா என்ன ஒரு பெயர், புண்(காயம்)சேகா அட இது கூட நல்லா இருக்கேப்பா?.”

இவ்வாறு தங்களுக்கு தெரிந்த இணையத் தளங்களிலெல்லாம் தங்களின் வக்கிரங்களையும் அவர்களின் நிஜமான தமிழர் நாகரீகங்களையும் வெளிக்காட்டியிருந்தனர். இலங்கை போன்றதொரு நீண்ட கால யுத்தம் நடைபெறுகின்ற நாட்டில் சர்வதேசத்தின் கண்காணிப்பில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுலிலிருக்கும் போது புத்தியில்லாமல் தலைவர் செய்கின்ற கொடுமைகளை ஆதரித்தனர் இந்த இரத்த வெறியர்கள்.

அக்காலகட்டத்தில் சர்வதேசமும் இவர்களுக்கு பல ஆலோசனைகளையும் வேண்டுதல்களையும் விடுத்து சமாதான ஒப்பந்தத்தை பாதுகாக்குமாறு கூறிக்கொண்டிருக்க புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அவலை நினைத்து உரலை இடித்தனர்.

சர்வதேசம் இவர்களை அன்று கெஞ்சிக் கூத்தாடியதற்கு ஒரு பிரதான காரணமிருந்தது அது இலங்கையில் அப்போது ஆட்சிமீடமெறியிருந்த ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதியாகியோர் கடும் போக்குடையவர்கள் மட்டும்ல்லாமல் அவர்களின் தகுதி திறமை என்பனவும் சர்வதேசத்தால் கணிக்கப்பட்டிருந்தது.

மட்டுமல்லாமல் புலிகளை ஓழித்துவிடவேண்டும் என்ற கொள்கை கொண்ட மத்திய அரசு இந்தியாவில் அமைந்திருந்ததாலும் புலிகளை அழிக்க அரசு முற்படும்போது அவர்களுடன் சேர்த்து மாட்டிக்கொள்ளும் அப்பாவி தமிழ் மக்களின் இழப்பையும் நினைத்தே சர்வதேசம் இறுதி சந்தர்ப்பமாக யுத்த நிறுத்தத்தை மீறவேண்டாம் என புலிகளை வேண்டிக்கொண்டது.

அவையணைத்தையும் கண்டுகொள்ளாத பிரபாகரன் தனது ஆதிக்கத்தை மாவிலாறு நீரணையில் காட்டி அதைப் பூட்டி இன்று மாட்டிக்கொண்டார்.

மாவிலாறு அணையை மட்டும் புலிகள் மூடவில்லை பக்கதிலிருந்த மூதூர் பிரதேசமும் புலிகளால் சுற்றிவலைக்கப்பட்டு அங்கு காலாகலமாக வாழ்ந்துவந்த முஸ்லீம் மக்கள் அவ்வூரை விட்டு துரத்தப்பட்டனர். பெரும்பாலான முஸ்லீம் இளைஞர்கள் புலிகளால் சிறைபிடிக்கப்பட்டதுடன் அவர்களனைவரையும் சுட்டுக்கொள்வதற்கும் புலிகள் முற்பட்டனர். இச் சம்பவம் குறித்து புலிகளினால் சிறைபிடிக்கப்பட்டு தப்பித்த ஒரு நண்பர்,

“புலிகள் எங்களின் சுமார் நூற்றி ஐம்பது இளைஞர்கள் அளவில் பிடித்து ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று எங்களை கொலை செய்வதற்காக வரிசையில் நிறுத்திவிட்டு உத்தரவுக்காக காத்திருந்தனர் அச் சமயம் இராணுவம் வந்து அடித்த செல் எங்களுக்கு அருகில் விழ எங்களை விட்டு விட்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர் நாங்கள் வேறு திசையால் ஓடி உயிர் தப்பினோம்” என்றார்.

இவ்வாறு பிரபாகரன் ஒரு தவறைச் செய்ய புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்கள் இன்னொன்றை நினைத்து குடித்துக் கும்மாளம் அடித்ததன் பிரதிபலன் இன்று தெரிகிறது இதைதான் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதோ!

புலிகள் யுத்த நிறுத்தத்தை உண்மையில் மேற்குலக வேண்டுகோளுக்கிணங்க மேற்கொள்வதாக இருந்தால் இன்று அவர்களின் கோவணமும் உறுவப்பட்ட நிலையில் அதைச் செய்திருக்க மாட்டார்கள் அன்றே சர்வதேசத்தின் அலோசனைப்படி நடந்திருப்பர்.

சமாதான ஒப்பந்தம் அமுலிலிருக்கும் காலத்திலேயே புலிகள் தங்களின் தன்னாதிக்க வெறியால் சர்வதேசம் முகம் சுழிக்கும்படியான பாரிய யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களைச் செய்தனர்.

வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மீதான சினேப்பர் தாக்குதல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான தற்கொலைத் தாக்குதல் முயற்சி, இராணுவத் தளபதி மீதான தாக்குதல், கிழக்கில் முஸ்லீம்கள் மீது ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனையில் தாக்குதலும் சொத்துக்கள் அழிப்பும், வெருகல் தறையிரக்கமும் சொந்த தமிழ் உறவுகள் மீதான புலிகளின் வன்முறை, இலங்கை இராணுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதல், கிழக்கில் முஸ்லீம்கள் பூர்வீக நிலங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற துண்டுப் பிரசுர மிரட்டல்கள், மாவிலாறு அணை மறிப்பு மற்றும் மூதூர் மீதான தாக்குதல் என புலிகள் பலமாக இருந்தபோது உலக சமாதான கண்காணிப்பாளர்கள் இலங்கையில் இருக்கும் நிலையில் தங்கள் சர்வதிகார இரத்தவெறியைக் காட்டிவிட்டு இன்று முடியவில்லை எனும் போது அவர்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கும் போது அதை எப்படி உலகமும் இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ளும்.

தற்போதைய கால சூழலில் புலிகள் சொந்த வன்னித் தமிழ் மக்களுக்கும் தூரோகம் இழைத்துவிட்டதாகவே அந்த மக்கள் கருதுகின்றனர். தற்போது இராணுவத்தினரால் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் மக்கள் அதனையே சர்வதேசத்திடமும் அரசிடமும் தெரிவிக்கின்றனர்.

புலிகள் தமிழர் தாயக நிலப்பிரதேசமான வடக்கு கிழக்கு ஆகிய இருபிரதேசங்களில் வாழும் மக்களின் மனங்களில் இருந்தும் தூர தூக்கியெறியப்பட்டுள்ள நிலையில் புலிகளுக்கு தற்போது பூஜை செய்பவர்கள் புலம்பெயர் தேசத்தில் உள்ள கொஞ்ச ஆதரவாளர்கள் மட்டுந்தான். அவர்களின் சுயரூபமும் அந்தந்த நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் வெளிக்க ஆரம்பித்து விட்டது.

வணங்காமண் தொடங்கி பல இறுதிப்போராட்டம் என்ற பெயரில் சுலை சுலையாக சுருட்டியவர்கள் தற்போது இந்தியாவின் தமிழ் நாட்டில் தி.முக. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துரோகிகள் எனக் காட்ட “இறுதியுத்தம்” இறுவெட்டு வெளியிட்டதானது தமிழ்நாட்டு மக்களுக்குள் புலிகளால் நடாத்தப்பட்ட ஆதரவுப் போராட்டங்களை முடக்கவே உதவப்போகிறது.

இவ்வாறு தங்கள் மூலைக்கும் செயற்பாடுகளுக்கும் சம்பந்தமில்லாமல் புலிகளின் பினாமிகள் நடத்திய நிழல் போராட்டங்கள் அனைத்தும் சகல தேசங்களிலும் முறைவுரைக்காவே காத்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.

பி.பி.சி தமிழோசையூடாக வன்னியிலிருந்து இராணுவத்தாரால் மீட்கப்பட்ட ஒரு அவலைப் பெண்ணின் குரல் இவ்வாறு ஒலித்தது.

“ஐயா இவர்கள் (புலிகள்) இப்படி துரோகம் செய்வார்கள் என்று நினைக்கவில்லை ஐயா, எங்கள் குழந்தைகளை மீட்டுக் கொடுங்கள் “ VIII



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com