Tuesday, August 20, 2019

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சிராந்தி ராஜபக்ஷவாம்! ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாராக கோத்தபாயவை அறிவித்திருந்தாலும் தேர்தல் நெருங்கியவுடன் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ரஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திமா கமகே தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாசவினதும் பங்கேற்புடனேயே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் களமிறங்குவோம். இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எந்த முரண்பாடும் கிடையாது.

நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வேட்பாளர் சஜித் பிரேமதாசவாகவோ அல்லது வேறு ஒருவாராக இருந்தாலும் அவருக்கு எங்களின் முழு ஆதரவையும் வழங்குவோம். இருப்பினும் இதுவரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட வில்லை. இவ்வாறானதொரு நிலைமையில் இரண்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆகவே இதுவரை காலமும் சுதந்திரமாக கருத்து வெளியிட்ட வந்த ஊடகங்கள் எதிர்வரும் காலங்களில் கோத்தபாய கூறும் விடயங்களை மாத்திரமே வெளியிட வேண்டிவரும் என்பது உறுதி.

தற்போது அவரின் அமெரிக்க குடியுரிமை தொடர்பிலும் பிரச்சினை எழுந்துள்ளது. கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் இதுபோன்ற சவால்கள் தோன்றியிருக்கும் நிலையில் யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய தற்போது கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவே வேட்பாளராக களமிறங்குவார் என்று தெரியவருகிறது என்றார்.

-ஜ.மு

Read more...

விக்கிக்கு அடுத்து அனந்தி சசிதரனுக்கு நீதிமன்றில் ஆப்படிக்க தயாராகின்றார் டெனீஸ்வரன்.

முன்னாள் பிரதம நீதியரசர் விக்கினேஸ்வரனை நீதிமன்றை அவமதித்த குற்றவாளியாக்கியுள்ள வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் , புலிகளின் தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவிக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பில் அனந்திக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தன்னை அமைச்சரவையில் இருந்து நீக்கியமை தொடர்பில் முதலமைச்சருக்கு எதிரான முறைப்பாட்டுக்கு இறுதித் தீர்ப்பு வந்திருக்கிறது. முதலமைச்சரால் விசாரணைக்குழு அமைத்த பின்னர் 2016ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி தன்மீது முதன் முதல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெலி ஓயாப் பகுதியில் இருக்கின்ற சிங்கள குடும்பங்கள் வாழும் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மீன்குஞ்சு விடப்பட்டமையில் மோசடி செய்ததாகவும், வீதி அபிவிருத்தி நடவடிக்கைளில் பஸ் தரிப்பிடம் அமைக்கும் போது மோசடி இடம்பெற்றதாகவும், மாவீரர் போரளிகளுக்கான வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்ததாகவும் அனந்தி சசிதரன் தம்மீது குற்றம் சுமத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த விசாரணைக்கு சென்றபோது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கான அனைத்து பதில்களையும் வழங்கியிருந்தேன்என்றும் அவர் கூறியுள்ளார்.

மீன்பிடி அமைச்சுக்கு வருடம் தோறும் 30 மில்லியன் தொடக்கம் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 5- 6 இலட்சம் ரூபாய் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற சிங்கள கிராமத்திற்கு வழங்கியதாகவும், குறித்த சிங்கள குடும்பங்கள் எமது வடமாகாணத்தில் இருக்கின்ற மக்கள். நான் வடமாகாணத்தில் இருக்கின்ற மூவின மக்களுக்கும் அமைச்சர் என்றும் அவர் கூறியுள்ளார்.

எமது மாகாணத்தில் சிறுபான்மையாக சிங்கள மக்கள் இருக்கின்ற ஒரு மாவட்டத்தில் ஒரு 100 தொட்க்கம் 200 பேர் வரையில் சிங்கள மக்கள் வசிக்கும் நிலையில் அந்த கிராமத்திற்கு நான் உதவி செய்யக் கூடாது எனில், மத்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ உதவி செய்யவில்லை என்று எப்படி கேட்க முடியும் எனவும் டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தம்மீது சுமத்தப்பட்ட குறித்த குற்றச்சாட்டுகளிற்கு விசாரணை குழுவில் தான் சரியான விளக்கம் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தாம் விளக்கமளித்த பின்னரும் தனக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுக்களை கொடுத்த அனந்தி சசிதரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்தநிலையில், அடுத்த ஒரு வழக்கு அனந்தி சசிதரனுக்கு எதிராக தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனந்தி சசிதரன் செய்த முறைப்பாடு பொய் என்பதை விசாரணை குழு தெரிவித்துள்ள நிலையில் முடிந்தால் அனந்தி சசிதரன் அந்த வழக்கில் வென்று காட்டட்டும் என்றும் டெனீஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.

Read more...

Monday, August 19, 2019

யார் என்னசொன்னாலும் சிங்கள இனம் இரண்டுபட்டே தீரும்.. அது பெரியதொரு துரதிர்ஷ்டமே! தம்மானந்த தேரர்

மகா சங்கத்தினரின் பேச்சைக் கேட்டு, முடிவுகளை எடுத்து நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் புனித மெதகம தம்மனந்த தேரர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மா ஓயா ஸ்ரீ விஜய சுனந்தரமய சிலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் தேரர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இம்முறை சிங்களவர்கள் இரண்டுபடுவார்கள் என்றும் அவர்கள் சிறுபான்மையினரின் உதவியுடன் அரசாங்கம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் தேரர் மேலும் கூறினார்.

அதற்காக தேவையான சட்டங்கள் இப்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குண்டுவெடிப்பு மற்றும் பல்வேறு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், நாங்கள் இன்னும் பாதுகாப்பாக இருக்கிறோமே என்றும் புனித தேரர் சுட்டிக்காட்டினார்.

மதகுருமார்கள் தங்களாலான முழுப் பங்களிப்பையும் நல்கக் காத்திருப்பதாகவும் மகா சங்கத்தின் பேச்சைக் கேட்டு நடக்கும்படியும் மெதகம தம்மானந்த தேரர் வலியுறுத்தினார்.

Read more...

ஆயுதப் பயிற்சிபெற்ற ஸஹ்ரானின் சகாக்கள் இருவர் அம்பாறையில் கைது!

ஸஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சிபெற்ற ஜேஎம்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வுத் துறையினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிமுடன் நுவரெலியப் பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என விசாரணைகளின் போது தெளிவாகியுள்ளது.

Read more...

கோத்தாவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டுபடும் நிலை!

ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்ட திரு.கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு பிரிவுகளுக்கிடையேயான பிளவினால் கட்சி பிளவுபடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து கட்சிக்குள் பல உள் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்து, தமிழ் தேசிய கூட்டணியின் ஏனைய மூத்த உறுப்பினர்களை விமர்சிக்கவும் அவமதிக்கவும் தொடங்கியதால், அவர் இலங்கைக்கு வந்தவுடன் எம்.பி. சம்பந்தனுடன் கலந்துரையாடி, அவர் இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கிறாரா என்று முடிவு செய்வார் என்று கூறியுள்ளார்.

அந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர், பல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு வேட்பாளரையும் சந்திப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளனர்.

பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் சென்று வேட்பாளர்களை ஆதரிப்போம் என்று தலைமைக்கு சொல்லாமல் ஒப்பந்தங்களில் நுழைவது மட்டுமே தவறு என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய மூன்று உறுப்பினர்கள், ஜனாதிபதித் தேர்தலில் கட்சி யாரை ஆதரிக்கும் என்று வேட்பாளர் பரிந்துரைக்கப்பட்டவுடன் முடிவு செய்வது மிகவும் பாதகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

மூன்று எம்.பி.க்களும் வேட்பாளரின் அறிக்கையில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வேட்பாளரின் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கவுள்ள உரிமைகள் முந்தைய ஜனாதிபதித் தேர்தலை மீண்டும் முட்டாளாக்கக் கூடாது என்பதால், அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தனித்தனியாக அல்லது அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்தாலோசிப்பது முக்கியம் என்று மூன்று தமிழா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இந்தியாவிலிருந்து வந்தவுடனேயே கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஒன்றுகூடி கட்சியின் உள் கூட்டத்தை நடாத்தி பல முடிவுகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

Read more...

புதிய இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா! அமெரிக்கா அவதானிக்கின்றார்களாம்!

இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

கெடெட் அதிகாரியாக 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் சேர்ந்த ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமை புரிந்தார்.

புலிகளை தோற்கடித்த வன்னி யுத்தத்தில் 58 ம் பிரிவுக்கு தளபதியாக செயற்பட்டு யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவர் என பிரபல்யமானவர். அவருக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல பல்வேறு முறைப்பாடுகளை செய்துள்ளது என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும்.

குறிப்பாக, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமானதாக காணப்படும் இந்த தருணத்தில், இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலிதற்றதாக்குவதாக அமைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read more...

ரணில் விக்கிரமசிங்க குள்ள நரியாம், தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமாட்டாராம்! கூறுகின்றார் கருணா அம்மான்.

இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த சரத்பொன்சேகாவிற்கு யுத்தம் முடிந்து ஒருவருடத்தில் வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறியிருந்தார்கள். அவ்வாறான இராணுவ தளபதிக்கு வாக்களிக்கலாம் எனின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏன் வாக்களிக்க முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்தியகுழு கூட்டம் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கட்சி காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தலைமையில் நேற்று (18) இடம்பெற்றது

இதில் கலந்துகொண்ட கட்சி தலைவர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) கட்சியின் பெண்கள் அணிதலைவி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், இளைஞர்அணி தலைவர், தேசிய அமைப்பாளாகளுக்கான பதவிகளை உத்தியோக பூர்வமாக வழங்கிவைத்த பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜனபெரமுன கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளோம். அதன் தெளிவாக்கல் கூட்டம் இன்று இடம்பெற்றதுடன் இறுதி தீர்மானமாக வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதாக முடிவு எடுத்துள்ளோம்.

கடந்த 21 ஆம் திகதி முஸ்லிம் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலினால் 200 க்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் முதலாவதாக எங்களுடைய நாட்டினுடைய பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இது போன்ற அச்சுறுத்தலில் இருந்து நாட்டை பாதுகாப்பது எங்களது முக்கிய கடமையாக இருக்கின்றது. இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பல வாக்குறுதிகளை அள்ளிவீசியதால் மக்கள் வாக்களித்தனர்.

ஆனால் வாக்குறுதிகளை வழங்கிய பிரதமர் ரணிலானாலும் ஜனாதிபதி மைத்திரியானாலும் வழங்கிய வாக்குறுதியில் ஒரு அரசியல் கைதியைக்கூட விடவில்லை. ஆனால் மாறாக அரசியல் யாப்பு திருத்தப்படும் வடக்கு கிழக்கிற்கான உரிமைகள் வழங்கப்படும் என கூறிக் கொண்டார்களே தவிர எதுவித வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை

இவ்வாறான அரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து எமது தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளனர். இந்த ஏமாற்றிய அரசாங்கத்திற்கு இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சி இன்று வரை வேட்பாளரை தெரிவு செய்யவில்லை. இருந்தபோதும் சஜித் பிரேமதாஸவை தெரிவு செய்வதாக தெரிவிக்கின்றனர். இந்த சஜித் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான தலைவராக தான் இருப்பார்.

அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று இடம்பெறும் கூட்டங்களிலே பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆகவே தமிழ் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலிலே வெற்றியடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முஸ்லிம் முதலமைச்சரை உருவாக்கினர். இந்த முதலமைச்சர் காலத்தில் தான் கூடுதலான நிலங்கள் பறிபோகியுள்ளது. அதேவேளை தமிழ் மக்கள் வேலைவாய்ப்பையும் இழந்தார்கள்.

அதேபோல இன்றும் ரணில் விக்கிரமசிங்காவுடன் சேர்ந்து கொண்டு மீண்டும் முஸ்லிம்களிடம் கிழக்கு மாகாணத்தை கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கங்கனம் கட்டி நிற்கின்றனர்.

இன்று இதற்கு பல வியாக்கியானங்கள் கூறலாம். கோட்டாபய யுத்ததிலே ஈடுபட்ட யுத்தகுற்றவாளி என கூறலாம். ஆனால் யுத்தம் முடிந்து ஒரு வருடத்தில் இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த சரத் பொன்சேகாவிற்கு எதுவித முன் நிபந்தனையும் இல்லாமல் வாக்களிக்கச் சொன்னவர்கள் இதே தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

அவ்வாறான இராணுவ தளபதிக்கு வாக்களிக்கலாம் என்றால் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க முடியாதா? யாராக இருந்தாலும் ஒரு சிங்களவர் தான் ஜனாதிபதியாக வரப்போகின்றார். எனவே தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்க கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நான் அன்ரன் பாலசிங்கத்துடன் கலந்துகொண்ட காலத்தில் அன்ரன் பாலசிங்கம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டிலே வெளிப்படையாக தெரிவித்தார். ரணில் ஒரு குள்ள நரி என்று எனவே ரணில் ஒருபோதும் தமிழர்களுக்கு எதையும் செய்யமாட்டார்.

அவர் அந்த நரித்தனத்தை தான் தற்போது காட்டிவருகின்றார். அவரின் பின்னால் நாங்கள் அணி திரள்வோமாக இருந்தால் மீண்டும் எங்கள் தமிழ் பிரதேசங்கள் இழந்த பிரதேசங்களாக மாற்றப்படும் முஸ்லிம் அரசியல் ஆதிக்க வெறியாட்டம் அதிகரிக்கும். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து தெளிவாக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

(மட்டக்களப்பு நிருபர் சரவணன்)

Read more...

குற்றவியல் மற்றும் பொலிஸ் நிர்வாகத்துறையில் பிரதேசத்தில் முதன்முறையாக பட்டத்தினை பெற்றுக்கொண்டார் அஷார்.

பொலீஸ் நிர்வாகம் மற்றும் குற்றவியல் துறையில் அம்பாறை பிராந்தியத்தில் முதன்முறையாக பட்டப்படிப்பை சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே.இப்னு அஷார் பூர்த்தி செய்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (17) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழா வைபவத்தில் இப்னு அஷார் இப்பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

இவர் சிம்ஸ் - (CIMS) கெம்பஸ் சாய்ந்தமருது ஊடாக இந்தியா கான்பூர் பல்கலைக்கழகத்தில் இப் பட்டப் படிப்பினை மேற்கொண்டார்.

பாலமுனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் பொலிஸ் துறையில் 1989 ஆம் ஆண்டு இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Read more...

Sunday, August 18, 2019

தாமரை மொட்டினை கையிலேந்த பல்வேறு தரப்புக்கள தயாராகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஆரம்பித்துள்ள பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவுள்ள குழுவினரின் தொகையை அதிகரிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தயாசிரி ஜெயசேக்கர, மஹிந்த அமரவீர, ரோஹண லக்ஷ்மன் பியதாச ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மூவருடன் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிரிபாலா டி சில்வாவையும் மேலும் இருவரையும் சேர்க்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்தக் குழு பேச்சுவார்த்தைகளை விரைவாக முடித்து, அடுத்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன ரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அந்த மாநட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அழைக்க கட்சி முடிவு செய்துள்ளது.

Read more...

வடக்கில் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஆபத்து நேரலாம். மேலதிக பாதுகாப்பு கோருகின்றார் கோத்தபாய.

தேர்தல் பிரச்சாரத்தின்போது வடக்கில் பயங்கரவாதக் குழு ஒன்று தனக்குத் தீங்கு விளைவிக்கத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தான் தகவல் வழங்கியுள்ளதாக தாமரை மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தனக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கருணா அம்மான் ஆகியோருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஸ்னைபர் வகைத் துப்பாக்கியும் வேறு விஷேட வகைத் துப்பாக்கிகளும் இதற்காகப் பயன்படுத்தப்படுத்துவதற்கு ஏற்பாடாகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

கோத்தபாயவின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக பொலிஸ் பயங்கரவாத விசாரணை பணிப்பாளருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டதாகத் தெரியவருகின்றது.

Read more...

தேசியப் பட்டியலில் தனக்கும் இடம் கோருகிறார் சந்திரிக்கா அம்மையார்!

தற்போது காலியாக உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தன்னை தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறும், மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் சந்திரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இருப்பினும், இந்த விஷயத்தில் ஜனாதிபதி ஒரு திட்டவட்டமான முடிவையும் வழங்கவில்லை எனவும் இதுதொடர்பில் எதிர்காலத்தில் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Read more...

மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள்

இலங்கையின் சிலாபம் என்ற பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்ற 13 இலங்கையர்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர்.

மீன்பிடி படகு மூலம் ஆஸ்திரேலிய எல்லை அருகே சென்ற 13 இலங்கையர்களும், சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டு இலங்கை குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதே போல், ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்வதற்காக சிலாபம் பகுதியில் தங்கியிருந்ததாக 12 பேர் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வாழைச்சேனை, தொடுவா, கல்குடா, வெளிக்கண்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற இருவேறு சம்பவங்கள் அடுத்தடுத்த நடந்துள்ள நிலையில், இவ்வாறான படகு பயணங்கள் வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Read more...

ஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி!!

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்னைச் சேர்ந்த சிலரிடம் சஜித்திடம் கூறுமாறு கூறியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க எனத் தெரியவருகின்றது.

அருணா டி சொய்சாவின் ஜனநாயக தேசியவாத இயக்கத்திலிருந்து தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளது என்று கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய ஆகியோரிடையே ஜனாதிபதி வேட்பாளராவதற்கான பூசல்கள் கிளம்பியுள்ளதனால் ஐக்கிய தேசியக் கட்சிச் செயற்குழு மற்றும் பாராளுமன்றக் குழுவிவிலிருந்து ஒருமனதாக வாக்களிக்கும் வேட்பாளரே தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்தத் தேர்வை எதிர்வரும் செப்டம்பர் இரண்டம் வாரத்திற்கு முன்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Read more...

அனைத்து வேட்பாளர்களும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதாக மகாசங்கத்தினர் முன் உறுதிபூண வேண்டும்!

நாட்டின் இறையாண்மையை உறுதி செய்வதற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் மகா சங்கத்தினரிடம் வர வேண்டும் என எல்லே குணவன்ஸ தேரர் கூறுகிறார்.

அவர்கள் அனைவரும் விரைவில் தங்கள் அறிக்கையை வெளியிட வேண்டும்என்று அவர் கூறுகிறார்.

கொழும்பில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்றபோது எல்லே குணவன்சா தேரர் இவ்வாறு கூறினார்.

13 வது திருத்தம் பல உயிர்களை அழித்துவிட்டதாக எல்லே குணவன்சா தேரர் மேலும் கூறினார்.

Read more...

Saturday, August 17, 2019

ராஜபக்சக்கள் இந்நாட்டுக்கு செய்த துரோகம் என்ன? விமர்சிப்பதை நிறுத்துங்கள் என்கின்றார் கோட்டா

“தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை மீட்டெடுத்தது ராஜபக்ச குடும்பம். அப்படிப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று அரசியல்வாதிகள் சிலர் கண்டபடி விமர்சிக்கின்றார்கள். நாம் உண்மையில் என்ன குற்றம் செய்தோம்? எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்துமாறு குறித்த அரசியல்வாதிகளிடம் வேண்டிக்கொள்கின்றேன்.”

– இவ்வாறு அச்சுறுத்தல் பாணியில் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நானே. எனக்கு மாற்றீடாக எமது கட்சியிலிருந்து எவரும் களமிறங்கமாட்டார்கள். வீண் வதந்திகளை எவரும் நம்பவே வேண்டாம். வடக்கு – கிழக்கு – மலையகம் என நாடெங்கிலும் பரந்து வாழும் தமிழ்பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எமது ஆட்சியில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன்.

என்னைத் தமிழ்பேசும் மக்களின் எதிரியாகக் சித்தரித்துக்காட்ட காட்ட அரசியல்வாதிகள் சிலர் முயற்சிக்கின்றார்கள். தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை மீட்டெடுத்தது ராஜபக்ச குடும்பம். இப்படிப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று குறித்த அரசியல்வாதிகள் கண்டபடி விமர்சிக்கின்றார்கள். நாம் உண்மையில் என்ன குற்றம் செய்தோம்? எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்துமாறு குறித்த அரசியல்வாதிகளிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

எந்தத் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து அரச தலைவர் தேர்தலில் நான் வெல்வது உறுதி. இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பாதுகாவலனாக – நல்லதொரு தலைவனாக நான் இருப்பேன்” – என்றார்.

Read more...

புலிகளுக்கு ஆப்படித்ததில் முக்கிய பங்காற்றிய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர இராணுவத் தளபதியாகின்றாரா?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார் என உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்களுக்கு நீடிப்பதா- அல்லது புதிய இராணுவத் தளபதியை நியமிப்பதாக என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னும் சில மணி நேரங்களில் முடிவு செய்யவுள்ளார்.

லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. எனினும், அவருக்கான சேவை நீடிப்பு குறித்து நேற்றிரவு வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே, அவர் ஓய்வுபெறும் வயதை எட்டியிருந்த போதும், சேவை நீடிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

நாவுலவில் நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவ சிறப்புப் படையினரின் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் சிறிலங்கா இராணுவத் தளபதியும், சிறிலங்கா அதிபரும் பங்கேற்றிருந்தனர்.

அது சிறிலங்கா இராணுவத் தளபதி பங்கேற்ற கடைசி அதிகாரபூர்வ நிகழ்வாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாவிடின் நாளையுடன் ஓய்வுபெற வேண்டியிருக்கும்.

அவர் ஓய்வு பெற்றால், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் இராணுவத் தளபதிக்கான போட்டியில் உள்ளனர்.

தற்போது இராணுவத் தலைமை அதிகாரியாக- இரண்டாவது இடத்தில் உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தொண்டர்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே ஆகியோரே அவர்களாவர்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை, இராணுவத் தளபதியாக நியமிக்கப் போவதில்லை என சில அமைச்சர்களிடம் சிறிலங்கா அதிபர் முன்னர் உறுதி அளித்திருந்தார்.

எனினும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே இன்று புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதமே ஓய்வு பெற்றிருக்க வேண்டிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறு மாத சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபரின் மகள் சதுரிக்கா சிறிசேன, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என அதிபர் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன.

அவரது பரிந்துரைக்கு அமைய முடிவு எடுக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இராணுவத்தில் இரண்டாவது நிலை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிப் போரில் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர்.

Read more...

ஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...

ஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ரோஹான குறிப்பிடுகையில்: சந்தேகநபர் குருணாகலை எகுனுகொல்லவில்வசிப்பவர் எனக் குறிப்பிட்டார்.

சந்தேக நபர் தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் ஸஹ்ரானுக்குப் பிறகு இரண்டாவது தலைவனான நெளஃபர் மெளலவியின் இரண்டாவது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் ஸஹ்ரானுடன் சந்தேக நபர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் தனது தந்தையால் நுவரெலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தீ குண்டுகள் தயாரிப்பதில் பயிற்சி பெற்றதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். ஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சந்தேகநபரான முஹம்மது நெளபர் அப்துல்லாஹ் இதனைத் தெரிவித்தார்.

“ எனது தந்தை என்னை சுற்றுப்பிரயாணத்திற்காக நுவரெலியாவுக்கு அழைத்துச் சென்றார். நான் அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்றேன். அங்கே சுமார் நான்கு அல்லது ஐந்து மெளலவிமார் நின்றார்கள். அவர்கள் இரவு முழுவதும் 'துஆச்' செய்தார்கள். பின்னர் அனைவரும் தூங்கிவிட்டார்கள். மறுநாள் காலையில் பிரசங்கம் தொடங்கியது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களுமே பிரசங்கம் நடைபெற்றது.

ஜிஹாத் அமைப்பின் தேவைகள் குறித்து நிறைய பேசினார். அங்கே எனக்கு ஒரு பெரிய துப்பாக்கியும் ஒரு சிறிய துப்பாக்கியும் காட்டப்பட்டது. குண்டுகளை எவ்வாறு தயாரிப்பது என்று எனக்கு கற்பிக்கப்பட்டது.

பின்னர் நான் சத்தியம் செய்தேன். என்னோடு சத்தியம் செய்த அனைவருக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டப்பட்டது. எனக்கு 'அபூ ஹஸம்' என்று பெயர் சூட்டினார். நாங்கள் ஸஹ்ரான் மெளலவியின் முன் சத்தியப்பிரமாணம் செய்தோம். சத்தியப் பிரமாணம் செய்த பின்னரே எங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. ”

Read more...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

திருமதி குமரதுங்க சென்ற 15 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குச் சென்று, தனது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் சிலரை சந்தித்து கட்சியை எடுத்தார் கைப்பிள்ளைக் கட்சியாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

அடுத்த வாரம் முதல் ஸ்ரீ.ல.சு.க. அமைப்பதில் தான் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும், அதற்காகத் தனக்குத் தனி அறை ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். பொது ஜன பெரமுனவின் தலைமையை ஏற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ மீது கட்சி பொதுச் செயலாளர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்திரிகா குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பண்டார அத்துகோரல மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Read more...

ஐமமு தலைவர்கள் ராஜித சேனாரத்னவின் வீட்டில் ஒன்றுகூடல்....

உத்தேச ஜனநாயக தேசிய முன்னணிக் கூட்டணியைக் கட்டியெழுப்புதல் மற்றும் அதன் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் உருவாக்கம் குறித்த சிறப்பு கலந்துரையாடல் இன்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு டாக்டர் ராஜித சேனாரத்ன அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து இலங்கை முஸ்லீம் முற்போக்கு முன்னணியின் சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பி. திகம்பரன், வி ராதாகிருஷ்ணன், ரிஷாத் பதுர்தீன், ஐக்கிய அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கா, கபீர் ஹாஷிம் மற்றும் துணைத் தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இந்த சிறப்புக் கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்மொழியப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவிக்கா அமைச்சர் ராஜிதா சேனாரத்ன முன்மொழியப்பட்டிருந்தார். இருப்பினும், சஜித் பிரேமதாசவின் பிரிவு அதை கடுமையாக எதிர்த்ததாகத் தெரியவருகின்றது. சிறிது நேரத்திற்கு முன்பு கும்பியோ நியூஸிடம் பேசிய கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா. அதிகாரி ஒருவர், பொதுச் செயலாளர் பதவிக்கான திருத்தங்கள் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்று கூறினார். எனவே, பொதுச்செயலாளர் பதவி தொடர்பான விவகாரம் இன்னும் விவாதத்தில் இருக்கும்போது, ​​அமைச்சர் ராஜிதா சேனரத்னவின் இல்லத்தில் விவாதங்கள் நடைபெறும்.

பொதுச் செயலாளர் தொடர்பிலான பிளவுகள் இன்னும் தலைதுாக்கியிருப்பதனால் ராஜித சேனாரத்தவின் வீட்டிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Read more...

நான்தான் ஜனாதிபதி வேட்பாளர் இரண்டு பேச்சுக்கு இடமில்லை - சஜித் அதிரடி

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன். நான்தான் ஜனாதிபதி வேட்பாளர் இரண்டு பேச்சுக்கே இடமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் நாட்டின் தலையொழுத்தை மாற்றும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர் பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தாலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். ஆனால் நான் ஒரு விடயத்தை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.அதாவது இம்முறை ஜனாதிபதித் தேர்த்லில் சஜித் பிரேமதாச ஆகிய நான் நிச்சயமாக வேட்பாளராக களமிறங்குவேன் என்பது மட்டுமே உறுதி. இது தொடர்பாக இரண்டு பேச்சுக்களுக்கு இனிமேல் இடம் கிடையாது.இந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து மக்கள் தீர்மானங்களை எடுக்கும்போது சில விடயங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும். விசேடமாக சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கும் நிலைமை அச்சுறுத்தல் இன்றி வாழும் சூழ்நிலை என்பன தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்.மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதோடு, தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே எமது பிரதான இலக்காகும் என குறிப்பிட்டுள்ளார்

Read more...

ஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு!

கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வழங்கவுள்ளோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நேற்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இதற்கிடையில் மாகாண சபைத் தேர்தல்களும் நடாத்தப்பட வேண்டுமே என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்காக முழு நாடும் தயாராகி இருப்பதாகவும், அதனால் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதே உசிதமானது எனவும் குறிப்பிட்டார்.

எதுஎவ்வாறாயினும், அதனோடு சேர்த்து மாகாண சபைத் தேர்தலையும் நடாத்தினால் எந்தவிதப் பிழையும் இல்லை எனவும், நீதிமன்றத்திற்குச் சென்று அதன் முடிவு வரும்வரை ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட மாட்டோம்... ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடாத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.

இல்லாவிட்டால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எக்காரணம் கொண்டும் எதற்காகவும் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட மாட்டோம் எனவும் அவ்வாறான முடிவினை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணையகத்திற்கும் அதிகாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து!

செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு நியமிக்கப்படாதவிடத்து தான் மட்டுமன்றி கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசியல் செயற்பாடுகளிலிருந்து நீங்கி, அமைதியாக இருப்போம் என இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யக்கூடிய வேறு ஒருவரும் இல்லை எனவும், கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்றக் குழு அவரை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர்கள் 52 பேர் கையாெப்பமிட்ட ஆவணமொன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்காதுவிடின் தேர்தல் நடவடிக்கைகளின்போது, அதிலிருந்து விலகி அமைதியாக இருக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

Friday, August 16, 2019

சஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஜனாதிபதியின் ஆதரவு சஜித்துக்கு கிடைக்குமாம்...

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச களமிறங்கினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவும் கிடைக்கும் எனத் தெரியவருகின்றது.

அதுதொடர்பிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதிக்கும் ஹேமா பிரேமதாசவுக்குமிடையே நடைபெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவதற்கு ஆயத்தமாகவுள்ளதைத் தடுப்பதற்காக ஜனாதிபதி இதன்மூலம் முயற்சி செய்கின்றார் எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Read more...

தீர்வு வேண்டுமென்றால் UNP க்கு மீண்டுமொரு முறை வாக்களிக்கட்டாம். 5 வருடம் போதாதாம்! கூறுகின்றார் அசிட் கலா.

முப்பது வருட பிரச்சினையை 5 வருடத்தில் தீர்க்க முடியாதென்றும் எதிர்வரும் 5 வருடங்களில் சிறந்த தீர்வைப் பெற, ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று வலி.வடக்கில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அவர்:

இன்று ஐக்கிய தேசிய அரசாங்கத்தின் ஊடாக மயிலிட்டி துறைமுகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.யுத்தம் காரணமாக கடந்த அரசாங்கம் 30வருடங்கள் இந்த இடங்களை பாதுகாப்பு வலயமாக வைத்திருந்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், இந்தப் பிரதேசத்தில் இருந்த பாடசாலைகள் தேவாலயங்கள், கோவில்கள், தனியார் காணிகளில் இருந்த வீடுகளை இடித்துடைத்து தமக்குத் தேவையான வற்றை கடந்த அரசாங்கம் அமைத்தது.

கடந்தஅரசாங்கம் சட்டத்திற்கு முரணாக பல கட்டிடங்களை தம்வசம் வைத்திருந்தது. கடல் உணவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஒரு இடம் தான் இந்த மயிலிட்டி துறைமுகம். அவற்றை இழந்து வீதியில் நின்ற மக்களின் எதிர்காலத்தை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மாற்றிக் கொடுத்துள்ளது. யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த,கடந்த கால அரசாங்கம் தமிழ் மக்களை எந்த இடத்திலும் திரும்பிப் பார்க்கவில்லை. முன்னாள் போராளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அவலங்களை அந்த அரசு பொருட்படுத்தவில்லை. எமது அரசாங்கமே இவர்களுக்கு கை கொடுத்தது.

இன்று 5,000ஏக்கர் காணிகளை அரசாங்கம் மக்களிடம் கையளித்துள்ளது. பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. 23,000 சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை உருவாக்க ஒத்துழைத்த, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Read more...

சஜித்தை ஜனாதிபதியாக்க தற்கொலை படையாக மாறப்போகின்றார் நீதி அமைச்சர் தலதா அத்துக்கொறலே!

உயிர்த் தியாகம் செய்தாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்தழைப்புடன் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை எவ்வாறாவது ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் எனத் தெரிவித்துள்ள நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள, அது குறித்து எவரும் கவலையடைய தேவையில்லை என்றும் கூறினார்.

அபிவிருத்தி செய்யப்பட்ட வீதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அமைச்சர் அதுகோரள தலைமையில் இன்று பலாங்கொடையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வெளியாள் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க இந்த முறை ஐக்கிய தேசிய கட்சியில் வாய்ப்பு இல்லை. 2010 ஆம் 2015 ஆம் ஆண்டுகளில் கட்சியின் முட்டாள் தனமான தீர்மானங்களினால் , தோல்வியை நாங்களே ஏற்படுத்திக் கொண்டோம். ஆனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் உயிர்த் தியாகம் செய்தாவது எங்களின் வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் என்றும் அவர் கூறினார்.

Read more...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்கள் 63 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேர் எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு மட்டகளப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.

குறித்த குண்டு தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தையடுத்து சஹ்ரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர், பொலிஸார் , சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதுடன் அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என அந்த பகுதியைச் சேர்ந்த 64 பேர்வரை கைது செய்தனர் .

இதில் கைது செய்யப்பட்ட 64 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் இதனைத் தொடர்ந்து அதில் ஒருவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் ஏனைய 63 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவ்வாறு வியக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 30 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Read more...

மனித கடத்தலில் சிக்கிய மியான்மரிகளை திருப்பி அனுப்ப தாய்லாந்து ஒப்புதல்

மனித கடத்தல்காரர்களால் மியான்மரிலிருந்து தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட 700க்கும் மேற்பட்ட மியான்மரிகள் தாய்லாந்து அரசின் பிடியில் இருக்கின்றனர். இவர்களை திருப்பி அனுப்ப தாய்லாந்து அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்களாக, பிச்சை எடுப்பவர்களாக, பாலியல் அடிமைகளாக இருந்து தாய்லாந்து அரசால் மீட்கப்பட்ட மியான்மரிகள் இதன் மூலம் நாடு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தாய்லாந்து- மியான்மர் இடையே ‘கடத்தலில் சிக்கியவர்களை திருப்பி அனுப்புவது மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைப்பது’ தொடர்பான 23வது கூட்டம் நடைபெற்றதன் பின் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“லாவோஸ், கம்போடியா நாட்டவர்கள் தாய்லாந்துக்கு கடத்தப்படுவதை காட்டிலும் மியான்மரிகள் கூடுதலாக கடத்தப்படுகின்றனர்,” என தாய்லாந்து ஆட்கடத்தல் தடுப்பு பிரிவின் இயக்குனர் சுனே ஶ்ரீசங்கடிராகுல்லர்ட் தெரிவித்திருக்கிறார்.

மியான்மரிகளை திருப்பி அனுப்பும் பணி, மூன்று கட்டங்களாக நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்களுடன் முறையான ஆவணங்களின்றி மலேசியா செல்ல முயன்ற மியான்மரிகளும் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து- மியான்மர் இடையே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், சட்டவிரோதமாக வரும் தொழிலாளர்கள் சிறைத்தண்டனையின்றி மியான்மருக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

கடத்தலில் சிக்கியவர்களை திருப்பி அனுப்புவதை தொடர்பாக ஒவ்வொரு ஆறு மாதமும் இரு நாட்டுக்கு இடையே சந்திப்பு நடைபெறுகின்றது.

இன்றைய நிலையில், தாய்லாந்தில் 49 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் மியான்மரிலிருந்து மட்டும் மாதம் 20 ஆயிரம் தொழிலாளர்கள் சட்டரீதியாக தாய்லாந்துக்கு செல்கின்றனர். அதே போல், தாய்லாந்துக்கு அருகாமையில் உள்ள ஏழ்மை நாடுகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தாய்லாந்துக்கு செல்வது தொடர் நிகழ்வாக இருந்து வருகின்றது.

Read more...

ஜனாதிபதி வேட்பாளருக்கு நிபந்தனைகள் விதிக்கிறது முஸ்லிம் காங்கிரஸ்!

வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்காமைக்கு உறுதிப்பாடு உள்ளிட்ட நிபந்தனைகள் பலவற்றை முன்வைக்கவுள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது தமது கட்சி முன்வைக்கும் என்றும் அதற்கு உடன்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தங்களது ஆதரவு கிடைக்கும் எனவும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் துணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்காமை மட்டுமன்றி கல்முனை, தோப்பூர், வாழைச்சேனை பிரதேசங்களில் உள்ள பிளவுகளை நீக்குவதற்கும் ஒத்தாசை வழங்குகின்ற ஜனாதிபதி வேட்பாளர் உடன்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்னும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளனவென்றும், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கான பிரேரணைகளுக்கு ஒத்துழைப்பு நல்குகின்ற ஜனாதிபதி வேட்பாளரையே முன்னிறுத்துவதாகவும் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அடுத்தவாரம் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்.... தமிழர் கூட்டணிக்கு நெத்தியடி!

வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லுார் கோவிலில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அங்கு சென்றிருந்தார்.

ஆகஸ்ற் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமான நல்லுார்க் கோவிலின் உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் 01 ஆம் திகதி முடிவடையும்.

கோவிலில் இடம்பெறும் மத அநுட்டானங்களில் கலந்துகொள்கின்ற பக்தர்களைப் பாதுகாப்பதற்காக முப்படைகளையும் நியமிக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதுடன், நல்லுார் கோவிலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து அகற்றுமாறும் கோரியுள்ளனர்.

அதுதொடர்பில் நல்லுார் கோவிலின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு வருகைதந்துள்ள இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவிடம் மேற்படி விடயம் தொடர்பில் வினவியபோது,

'பாதுகாப்பு வழங்குவது எங்கள் வேலை.... அது அவர்களின் வேலை அல்ல.... நாங்கள் பொதுமக்களின் நலன் கருதியே பணியாற்றுகிறோம்.... எங்களுக்கு எங்கள் வேலையைப் பார்த்துக் கொள்ள முடியும். கடவுளின் கடாட்சமும் எங்களுக்கு உள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். அவர்களுக்கு கடவுளின் அருளும் கிடைக்காது.. இதற்குப் பின்னரும் கிடைக்காது... '

'உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற நிகழ்வைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் அவ்வாறான நிகழ்வொன்று நடக்காமல் இருக்கும் என்று எவ்வாறு சொல்ல முடியும். தனியாகச் சுற்றுகின்ற சில ஓநாய்களுக்கு அதைச் செய்யவியலும்... இல்லையேல் எந்தவொரு பைத்தியமும் அவ்வாறான காரியத்தைச் செய்ய முடியும். அதற்காகத்தான் நாங்கள் பாதுகாப்பு வழங்குகின்றோம். நாங்கள் இதன் மூலம் உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்த முயலவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தவே முயல்கின்றோம்.' எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய உள்ளிட்ட சிலரும் இதன்போது கலந்து கொண்டனர்.

Read more...

கோத்தாவை கைதுசெய்யும் முயற்சி நடைபெறுகிறதாம்....

குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாணி அபேசேக்கரவினால் கோத்தபாய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன குற்றம் சுமத்துகிறார்.

நேற்று (15) கொழும்பில் இடம்பெற்ற உலகளாவிய இலங்கை மன்றத்தின் நிருவாக சபை ஒன்றுகூடலின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துரைக்கும்போது,

வழக்குகள் பலவற்றுக்காக புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைக் கைதுசெய்து, அவர்களை அரச சாட்சியங்களாக்கி கோத்தபாய ராஜபக்ஷவை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் எதிர்வுகூறினார்.

எக்னெலிகொட வழக்குக்காக மட்டும் 12 இராணுவ அதிகாரிகள் பல்வேறு காலகட்டங்களில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாகவும், கோத்தபாய ராஜபக்ஷவைத் தான் சிறையில் அடைக்கத் தேவை என சாணி அபேசேக்கர நான்காவது சந்தேகநபரான கோப்ரல் ரூபசேனவின் மனைவியிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் அஜித் பிரசன்ன குறிப்பிட்டார்.

அதற்காக உங்கள் கணவனை அனுப்பி, 'கோத்தபாய தனக்குக் கட்டளையிட்டார்' என நீதிமன்றில் கூறுமாறு சாணி அபேசேக்கர கோப்ரல் ரூபசேனவின் மனைவியிடம் கூறியுள்ளார்.

சாணி அபேசேக்கர மற்றும் நிஷாந்த சில்வா இருவரும் தற்போது அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக சகல ஆவணங்களையும் தயார் செய்துள்ளனர் எனவும், அரசாங்கம் கவிழ்ந்தால் தங்களுக்கு எதிராக சாட்சியங்கள் மேலெழும்பும் என்ற அச்சமே அதற்குக் காரணம் என்றும் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன குற்றம் சுமத்தினார்.

Read more...

Thursday, August 15, 2019

ஐயோ! 11 கோடி லஞ்சமா? ஒருபோதும் இல்லவே இல்லை என்கின்றார் செல்வம் அடைக்கலநாதன்.

வவுனியா பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்கு சீனித்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தேவையான அரச காணி மற்றும் பிற அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ரெலோ அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் லஞ்சமாக 11 கோடி ரூபாவினை பெற்றுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

குறித்த செய்தியினை முற்றாக மறுப்பதாகவும் அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு என்றும் செய்தியினை வெளியிட்ட இணையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் சபாநாயகரிடம் முறையிடவுள்ளதாகவும் மிரட்டியுள்ளார் செல்வம் அடைக்கலநாதன்.

இதேநேரம் ரெலோ அமைப்பின் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள், சீனித்தொழிற்சாலை ரெலோ அமைப்பிற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தொழிற்சாலையூடாக அமைப்பு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் வளர்சியடைவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன், அவ்வளர்சியினை சகித்துக்கொள்ள முடியாத நபர்களின் பொய்குற்றச்சாட்டு என்றும் பரப்புரை செய்து வருகின்றனர்.

மறுபுறத்தில் குறித்த சீனித்தொழிற்சாலையானது பிரித்தானியாவிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர் ஒருவரே ஆரம்பித்துள்ளதாகவும், அவர் இத்தொழிற்சாலைக்கான காணி மற்றும் அனுமதிகளை பெற்றுக்கொள்ள அடைக்கலநாதனுக்கு லஞ்சம் வழங்கியே பெற்றுக்கொண்டதாகவும், குறித்த தொழிற்சாலையை ரெலோ தொழிற்சாலை என முத்திரை குத்த முற்படுவது கபட நோக்கம் கொண்ட செயலாகும் என்றும் தொழிற்சாலையின் உரிமையாளர் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

எது எவ்வாறாயினும் அடைக்கலநாதன் அண்மைக்காலமாக தமிழ் மக்களின் தலையினை ஐக்கிய தேசியக் கட்சியிடம் அடகு வைத்துள்ளமை தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது விடயத்தில் ரெலோவின் உட்கட்சி ஒன்றுகூடல்களின்போது பலமுறை நேரடி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

செல்வம் லஞ்சம் வாங்கவில்லையாயின் இவ்வாறான அதி சொகுசு வாகனங்களை கொள்வுனவு செய்ய எங்கிருந்து பணம் வந்தது என்ற கேள்வி மேலெழுகின்றது.


Read more...

பாதாள குழுத்தலைவன் உட்பட இருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை. JMI அமைப்பின் மேலும் மூன்று உறுப்பினர்கள் கைது.

கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (15) மாலை 4.15 மணியளவில் இரு முச்சக்கர வண்டிகளில் வந்த இரு குழுக்களினால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடுத்த முச்சக்கர வண்டியில் வந்த இருவரை மன்னா கத்திகளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினரான ஆனமாலு ரங்க என்பவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையில் சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

கோத்தாவுடன் ஒன்றிணைய பொன்சேக்காவுக்கு அழைப்பு... பார்ப்போம் என்றாராம் பொன்சேகா!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்தினார் என ஐக்கிய தேசியக் கட்சியின் களனிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மனோஜ் பெரேரா தெரிவித்தார்.

களனியிலுள்ள முக்கிய இடமொன்றில்பொன்சேக்கா இருந்தவேளையிலேயே கோத்தபாயாவினால் இவ்வழைப்பு ஏற்படுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பழைய கோபங்களை மறந்து, தன்னுடன் ஒன்றிணையுமாறு கோத்தபாய ராஜபக்ஷ பொன்சேக்காவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோத்தபாயவின் அழைப்புக்கு பொன்சேக்கா பதிலளிக்கையில் உடனே அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல், 'பார்ப்போம்' எனக் கூறியதாகவும் உடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் குறிப்பிட்டார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com