Thursday, September 13, 2018

வாஷிங்டனுடன் சீன-விரோத “மூலோபாய-கூட்டினை” இந்தியா விஸ்தரிக்கிறது. By Keith Jones

வியாழனன்று ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “2+2” மூலோபாய பேச்சுவார்த்தை, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் ஒரு முன்னிலை அரசாக இந்தியாவை உருமாற்றுகின்ற நோக்கமுடைய இன்னுமொரு “அடித்தளமான” இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் புதுடெல்லி கையெழுத்திட்டதுடன் முடிவடைந்தது.

வாஷிங்டன், அதன் பிரதானமான ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் அதன் இராணுவ-மூலோபாய உறவுகளை நிர்வகிப்பதற்கு பயன்படுத்துகின்ற முக்கியமான பொறிமுறைகளில் ஒன்றின் மாதிரியில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற “2+2” பேச்சுவார்த்தை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களை ஒன்றாகக் கொண்டுவருகின்ற ஒரு வருடாந்திர நிகழ்வாக இருக்கும்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ, பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ், இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜ், மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடையிலான வரிசையான பல சந்திப்புகளின் முடிவில் வியாழனன்று அவர்களால் விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கையானது, இந்திய-அமெரிக்க இராணுவ மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை விஸ்தரிப்பதற்கான ஏராளமான முயற்சிகளை கோடிட்டுக் காட்டியது.

இவற்றில் மிகவும் பின்விளைவுகள் கொண்டதாக இருப்பது, வாஷிங்டன் அதன் முக்கியமான நேட்டோ மற்றும் ஒப்பந்த நேசநாடுகளுடன் கொண்டிருக்கும் உடன்பாடுகளை மாதிரியாகக் கொண்ட தகவல்தொடர்பு நிர்ணயஇணக்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Communications Compatibility and Security Agreement — COMCASA) இந்தியா, பத்து வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஏற்றுக் கொண்டிருப்பதாகும். இது இந்திய இராணுவம் அதன் ஆயுத அமைப்புமுறைகளுக்கு முன்னேறிய அமெரிக்க தகவல்தொடர்பு சாதனங்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் என்பதுடன், அமெரிக்கா, அதன் நேசநாடுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றின் இராணுவங்கள் இடையே மறையாக்க தகவல்தொடர்பு (encrypted communication) மற்றும் “பரஸ்பர-இயக்கக்கூடிய தன்மை” ஆகியவற்றை மேம்படுத்தும்.

இந்த ஒப்பந்தமானது அமெரிக்க ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்வதில் —நீர்மூழ்கி-எதிர்ப்பு போர்களுக்கான, ஆயுதமேந்திய கடற்பகுதி ஆளில்லா விமானங்களை கொள்முதல் செய்வதுடன் இது அநேகமாய் ஆரம்பமாகும்— ஒரு முக்கிய பெரும் ஊக்குவிப்புக்கு பாதை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகையதொரு ஒப்பந்தம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை வேவுபார்க்க வழிவகுக்கும் என்ற அச்சத்தில் இந்திய இராணுவம் நீண்டகாலமாய் இதற்கு தயங்கி வந்திருந்தது.

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கமானது வாஷிங்டனின் சீன-விரோத தாக்குதலில் இந்தியாவை ஒருங்கிணைப்பதை ஒரேயடியாக விஸ்தரித்திருக்கிறது, இந்தியப் பெருங்கடலில் கப்பல் மற்றும் நீர்மூழ்கிகளது நடமாட்டங்கள் குறித்த உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புதலளிப்பது மற்றும் தென் சீனக் கடல் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஒப்பிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.

எந்தவொரு உண்மையான இராணுவ-மூலோபாய கூட்டிற்கும், அமெரிக்காவின் “முக்கிய பாதுகாப்புக் கூட்டாளி” என்ற அந்தஸ்தை சமீபத்தில் இந்தியாவிற்கு அது வழங்கியிருப்பதன் முழுமையான பயன்களை —பென்டகன் அதன் கூட்டாளிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிற மிக முன்னேறிய ஆயுத அமைப்புகளுக்கான அணுகல் மூலமாக— இந்தியா பெறுவதற்கும் “அடித்தளமானவை”யாக வாஷிங்டன் வலியுறுத்துகின்ற மூன்று இருதரப்பு ஒப்பந்தங்களில் COMCASA இரண்டாவதாகும்.

2016 இல் கையொப்பமிடப்பட்டு, சென்ற ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த, தடவாளப் பரிவர்த்தனை உடன்பாட்டு ஒப்பந்தத்தின் (Logistics Exchange Memorandum Agreement) கீழ், அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் எரிபொருள்நிரப்பலுக்கும் சரக்குநிரப்பலுக்கும் வழமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்தியா அதன் வான் தளங்கள் மற்றும் கடல் துறைமுகங்களை திறந்து விட்டிருக்கிறது.

COMCASA ஒப்பந்தத்தில் புது டெல்லி கையெழுத்திட்டிருப்பதைத் தொடர்ந்து, “அடித்தளமான” ஒப்பந்தங்களில் மூன்றாவதும் இறுதியானதுமான, புவி-வான் ஒத்துழைப்புக்கான அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Basic Exchange and Cooperation Agreement for Geo-spatial Cooperation — BECA) மீதான பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இராணுவத்தின் முப்படைகளும் பங்குகொள்ளும் முதன்முதல் கூட்டுப் பயிற்சியை அடுத்த ஆண்டில் நடத்தவிருப்பதாகவும் அத்துடன் “வளர்ந்து வரும் அபிவிருத்திகள் குறித்து தொடர்ச்சியான உயர்-மட்ட தகவல்தொடர்பை பராமரிக்க உதவுவதற்காக” இரண்டு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் “நேரடி தொலைஇணைப்புகள்" (hotlines) அமைக்கப்படவிருப்பதாகவும் புதுடெல்லியும் வாஷிங்டனும் அறிவித்துள்ளன.

”2+2” கூட்டு அறிக்கையானது, இருதரப்பு, முத்தரப்பு, மற்றும் நான்கு-தரப்பு இராணுவ-பாதுகாப்பு ஒத்துழைப்பின் அதிகரிப்புக்கும் புதுடெல்லியையும் வாஷிங்டனையும் கடமைப்படுத்துகிறது. அறிக்கையில் அந்நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, இறுதியாக சீனாவுக்கு எதிராய் நேட்டோ பாணியிலான அமெரிக்க-தலைமையிலான ஒரு கூட்டணியை உருவாக்கும் ஒரு நோக்கத்துடன், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்புக்குள் இந்தியாவைக் கொண்டுவருவது தான் அமெரிக்காவின் ஒரு நீண்டகால இலக்காக இருந்து வந்திருக்கிறது.

மோடியின் கீழ் புதுடெல்லி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இருநாடுகளுடனான முத்தரப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தியிருக்கிறது, வருடாந்திர மலபார் கடல்பிராந்திய பயிற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் சேர்த்து ஜப்பானையும் ஒரு நிரந்தரக் கூட்டாளியாக ஆக்கியதும் இதில் அடங்கும். சென்ற நவம்பரில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் ஒரு நாற்தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தையை நடத்தியதன் மூலம், ஒரு தசாப்தத்திற்கு முன்பாக சீனாவிடம் இருந்தான உரத்த குரலிலான எதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்டிருந்த ஒரு கூட்டத்திற்கு புத்துயிர் கொடுத்தனர்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் “சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கினை”யும் “சுதந்திரமான கடற்போக்குவரத்”தையும் —அதாவது, சீனாவின் கரைகளில் ஒரு போர்க்கப்பல் வரிசையைப் பராமரிப்பதற்கு அமெரிக்க கடற்படைக்கு கடிவாளமற்ற உரிமை உள்ளிட்ட அமெரிக்க மேலாதிக்கத்தை— நிலைநாட்டுவதற்கு சமீபத்திய இந்திய-அமெரிக்க அறிக்கைகளில் அளிக்கப்பட்டிருந்த உறுதிப்பாடுகளை இந்த அறிக்கை மறுவலியுறுத்தம் செய்தது. முக்கியத்துவத்தில் சளைக்காத விதத்தில், வடகொரியா எனும் சின்னஞ்சிறிய வறுமைப்பட்ட நாட்டை ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டி வந்துகொண்டிருக்கின்ற நிலைமைகளின் கீழ், இரண்டு நாடுகளும் “வடகொரியாவின் பேரழிவு ஆயுதங்களை எதிர்கொள்வதற்கு இணைந்து வேலைசெய்யும்” என்றும் அது சூளுரைத்தது.

புதுடெல்லிக்கு வரும் வழியில், பொம்பியோ இஸ்லாமாபாத்தில் சற்றுநேரம் தங்கி, பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்திடம் கண்டிப்பு காட்டிவிட்டு வந்திருந்தார், ஆப்கானிஸ்தானில் தலிபான் கிளர்ச்சியை தணிக்க வாஷிங்டனுக்கு உதவுவதில் அது இன்னும் கூடுதல் செயல்பாட்டைக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். பொம்பியோவின் மிரட்டல்கள் முதல்பார்வையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அந்நாட்டின் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தை நோக்கியே செலுத்தப்பட்டதாய் தெரிந்தது. ஆயினும், அவை புதுடெல்லியை —மோடியின் தலைமையின் கீழ் இது எல்லைகடந்த இராணுவத் தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியான போர் மிரட்டல்கள் உள்ளிட, அதன் முன்பிருந்தவர்களை விடவும் பாகிஸ்தானுக்கு எதிராய் ஒரு கூடுதல் மோதல்நிலை போக்கைக் கடைப்பிடித்து வந்திருக்கிறது— பார்த்தும் கூறப்பட்டிருந்தன என்பது தெளிவு.

”2+2” அறிக்கையானது “ஆப்கானிஸ்தானின் அபிவிருத்தி மற்றும் ஸ்திரப்படுத்தலில் இந்தியாவின் மேம்பட்ட பாத்திரத்தை” வரவேற்ற வேளையில், பாகிஸ்தான் “அதன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பிராந்தியம் மற்ற நாடுகளிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காய் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு” அழைப்புவிடுத்தது.

”2+2” கூட்டங்களின் நிறைவில், பாதுகாப்புச் செயலரான மாட்டிஸ் கூறுகையில், “எங்களது நெருக்கமான கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளின் ஒரு மட்டத்திற்கு எங்களது உறவை உயர்த்துவதற்கு” வாஷிங்டன் இந்தியாவுடன் தொடர்ந்தும் இணைந்து வேலைசெய்யவிருப்பதாக தெரிவித்தார். இந்திய அமைச்சரான நிர்மலா சீதாராமன் இன்னும் பரவசம் காட்டினார். “எங்களது பாதுகாப்பு கூட்டிலான உந்துவேகமானது ஒரு மிகப்பெரும் சாத்திய ஆற்றலை நிரப்பியிருக்கிறது, அது இந்திய-அமெரிக்க உறவுகளை முன்கண்டிராத மட்டங்களுக்கு உயர்த்தியிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

அவரது சகாவான வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “ஆப்கானிஸ்தானில் ட்ரம்ப்பின் கொள்கையை” —அதாவது ஆப்கானிஸ்தானில் இரத்தக்களரியை தீவிரப்படுத்துவதற்கும் இந்தியாவின் பரம-வைரியான பாகிஸ்தான் மீது பிடியை இறுக்குவதற்குமான வாஷிங்டனின் திட்டங்களை— இந்தியா வரவேற்பதாக கூறினார்.

இந்தியாவை அமெரிக்காவின் மூலோபாய சுற்றுவட்டத்திற்குள் கொண்டுவருவதும் அதனை சீனாவுக்கான ஒரு இராணுவ-மூலோபாய பிரதிஎடையாக அபிவிருத்தி செய்வதுமே, கடந்த இரண்டு தசாப்த காலத்தின் போது, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களின் கீழ் ஒரேவிதத்தில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு மையமான இலக்காக இருந்து வந்திருக்கிறது. இதனை நோக்கிய விதத்தில், இந்தியாவுக்கு மூலோபாய “அனுகூலங்களை” வாஷிங்டன் அள்ளிக்கொடுத்து வந்திருக்கிறது, உற்பத்திக்கான அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளை கொள்முதல் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்கின்ற —அதன்மூலம் அதன் அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான சொந்தநாட்டு அணு வேலைத்திட்ட்டத்தின் மீது அது கவனம்குவிக்க வழிவகுக்கும் விதத்தில்— 2008 அணுசக்தி ஒப்பந்தமும் இதில் அடங்கும்.

சீனாவை மூலோபாயரீதியாக சுற்றிவளைப்பதற்கும் கீழ்ப்படுத்துவதற்குமான வாஷிங்டனின் திட்டங்களில் இந்தியாவும் இந்தியப் பெருங்கடலும் வகிக்கக் கூடிய இன்றியமையாத பாத்திரம், அமெரிக்க கடற்படையின் பசிபிக் கட்டளையகம் (US Navy’s Pacific Command) எனும் பெயரை இந்திய-பசிபிக் கட்டளையகம் (Indo-Pacific Command) என்று பெயர்மாற்றுவதற்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவில் பிரதிபலிக்கிறது.

சீனாவுடனான உறவுகளில் இந்தியாவின் “மறுஅமைவு” மற்றும் அதன் வரம்புகள்
கடந்த அரையாண்டு காலத்தில், சீன-இந்திய உறவுகளில் “மறுஅமைவு” (reset) குறித்து நிறைய பேசப்பட்டு வந்திருக்கிறது. பெய்ஜிங் உடனான பதட்டங்களை —2017 கோடையில் இமாலயத்தின் ஒரு விளிம்பு மூலையின் (டோக்லாம்) மீதான கட்டுப்பாடு குறித்த ஆயுதபாணியான மோதுநிலை, கட்டுப்பாட்டை மீற அச்சுறுத்தியது— குறைப்பதற்கு புதுடெல்லி ஏராளமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பது நிச்சயம் உண்மையே. ட்ரம்ப்பின் மூர்க்கமான “அமெரிக்கா முதலில்” கொள்கையும் பலசமயங்களிலான தவறான வெளியுறவுக் கொள்கையும் —குறிப்பாக அவரது வர்த்தக யுத்த நடவடிக்கைகள்— சீனாவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான கடைசி விசைக்கு மோடி திடீரென முன்னுரிமை கொடுத்ததில் ஒரு காரணியாக இருந்தன.

“சீனா மறுஅமைவு” இருந்தாலும் கூட, இந்திய-அமெரிக்க கூட்டணி தான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிக்கல்லாக தொடர்ந்தும் இருக்கிறது என்பதை இந்திய-அமெரிக்க “மூலோபாய பேச்சுவார்த்தை” தெளிவாக்குகிறது. முதலாளித்துவ முறிவு நிலைமைகளின் கீழ், விலைபோகும் இந்திய முதலாளித்துவமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி எத்தனை பொறுப்பற்றதாக எத்தனை வெளிப்பட்டதாக ஆகின்றபோதும் கூட, வாஷிங்டனின் பின்னால் தன்னை நிறுத்திக் கொள்வதைத் தவிர்த்து அதன் வல்லரசு அபிலாசைகளைப் பின்தொடர்ந்து செல்வதற்கு வேறெந்த வழியையும் காணவியலாது இருக்கிறது.

எல்லாம் இருப்பினும் கூட, வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, எதிரிகளிடம் இருந்தும் கூட்டாளிகளிடம் இருந்தும் ஒரேபோல “அதிகமாக” எதிர்பார்க்கின்ற, வாஷிங்டனுக்கும் புதுடெல்லிக்கும் இடையில் கணிசமான பதட்டங்களும் இருக்கின்றன.

அலுமினியம் மற்றும் உருக்கு மீதான தண்டவரி விதிப்புகள் உள்ளிட்ட ட்ரம்ப்பின் பாதுகாப்புவாத நடவடிக்கைகள், இந்தியா அமெரிக்காவுடன் அதன் வர்த்தக உபரியைக் குறைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைகள், இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், திறன்பெற்ற தொழிலாளர்களை அமெரிக்காவுக்குள் கொண்டுசெல்ல ஏதுவாக இருந்து வந்திருக்கும் எச்1பி விசா திட்டத்தின் (H1B Visa program) மீதான அவரது கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இந்தியா நிச்சயமாக திகைப்படைந்திருக்கிறது.

மூலோபாயப் பிரச்சினைகள் குறித்த பதட்டங்களும் தலைக்கு மேல் நிற்கின்றன. 2015 ஈரான் அணு ஒப்பந்தத்தின் கீழான தனது கடமைப்பாடுகளை தெஹ்ரான் பூர்த்தி செய்து வந்திருக்கிறது என்றபோதும் கூட, தடைகளை மறுஅறிமுகம் செய்து, போருக்கு நிகரான ஒரு பொருளாதார முற்றுகையை நடத்துவதன் மூலமாக ஈரானியப் பொருளாதாரத்தை சிதைப்பதற்கான தனது முனைப்பின் பின்னால் அணிவகுப்பதற்கு வாஷிங்டன் இந்தியாவிடம் கேட்டு வருகிறது.

இந்தியா ஈரானிய எண்ணெயின் மிகப்பெரும் இறக்குமதி நாடு என்பது மட்டுமல்ல, மூலோபாய செல்வாக்கிற்கும் அந்தப் பிராந்தியத்தின் பாரிய எரிசக்தி கையிருப்புகளிலான ஒரு பங்கிற்குமாய் போட்டிபோடுகின்ற விதத்தில் மத்திய ஆசியாவிற்கான ஒரு போக்குவரத்து பாதையை திறப்பதற்காக ஈரானின் சபார் துறைமுகத்தை இந்தியா அபிவிருத்தி செய்து கொண்டிருக்கிறது.

ஈரான் மீதான தடைகள் நவம்பர் 4 அன்று முழு வீச்சில் அமலுக்கு வந்தபின், ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளை சார்ந்திருக்கக் கூடிய நாடுகளுக்கு, ஒபாமாவைப் போல, எந்த “விலக்கு”ம் அளிக்கப் போவதில்லை என்பதில், வியாழக்கிழமை கூட்டத்திற்கு முன்பாக, ட்ரம்ப் நிர்வாகம் பிடிவாதம் காட்டி வந்திருந்தது. புதுடெல்லியை விட்டு கிளம்பும்போது, பொம்பியோ சற்று விட்டுக்கொடுப்பாகப் பேசினார், இந்தியாவுக்கு ஒரு விலக்கு வழங்கப்படக் கூடும் என்றும் ஆனால் அது ஒரு சிறு காலத்திற்கு மட்டுமே என்றுமாய் அவர் சூசகப்படுத்தினார். “பொருத்தமான இடங்களில் விலக்குகளை நாங்கள் பரிசீலிப்போம்” என்றார் அமெரிக்க வெளியுறவுச் செயலர், “ஆயினும் ஈரானிடம் இருந்தான கச்சா எண்ணெய் கொள்முதல் பூச்சியத்தை எட்ட வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு, இல்லையேல் தடைகள் விதிக்கப்படும்.”

முடிவெடுக்கும் கட்டாயம் வரும்போது புதுடெல்லி, அமெரிக்காவுடனான “கூட்டினை” சங்கடப்படுத்தக் கூடாது என்பதற்காக, புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தின் சமயத்தில் அது செய்ததைப் போலவே, வாஷிங்டனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செல்லும்.

ரஷ்யா விடயத்தில் விடயங்கள் இன்னும் அதிக சச்சரவுமிக்கதாய் இருக்கின்றன. பல தசாப்தங்களாக மாஸ்கோ புது டெல்லியின் மிக முக்கியமான மூலோபாயக் கூட்டாளியாக இருந்து வந்திருப்பதோடு இந்தியாவுக்கு அது இன்றியமையாத போர் சாதனங்களைத் தொடர்ந்தும் வழங்கி வருகிறது, அதன் அணுசக்தி திட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

ரஷ்யாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் நிகழ்முறையில் இந்தியா இருப்பது குறித்து வாஷிங்டன் கோபமடைந்திருக்கிறது, தடைகள் மூலமாக அமெரிக்க எதிரிகளை எதிர்கொள்ளும் சட்டத்தின் (CAATSA) கீழ் இது தடைகளுக்கு இட்டுச்செல்ல முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்ய பிரச்சினையில் பிளவுபட்டு நிற்கிறது, இதற்காக இந்திய-அமெரிக்க கூட்டை சங்கடத்திற்குள்ளாக்குவது ஒரு பிழையாகி விடும் என்று மாட்டிஸ் பகிரங்கமாக வாதிடுகிறார். எஸ்-400 விடயத்தில் இந்தியாவுக்கு விலக்கு வழங்க வாஷிங்டன் முடிவெடுத்தாலுமே கூட, இந்தியாவுக்கான நீண்டகாலத்திற்கான தாக்கம் தெளிவாய் இருக்கிறது: ரஷ்யாவுடனான இந்தியாவின் கூட்டை சீர்குலைப்பதும் இறுதியாக உடைப்பதுமே அமெரிக்காவின் நோக்கமாகும்.

Read more...

தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைக்கு நீதிமன்று இடைக்கால உத்தரவு.

வலி தெற்கு பிரதேசசபை தவிசாளர் தெரிவில் கட்சி கட்டுப்பாடுகளை மீறி பிரதேச சபை உறுப்பினரான ஜி.பிரகாஷ் நடந்து கொண்டிருந்தார் என்றும் கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார் என்றும் அதை தொடர்ந்து அவரிடம் கட்சியினால் கோரப்பட்ட விளக்கத்திற்கு போதிய பதில் அளிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக கடந்தவாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழரசுக்கட்சியினர் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரணானது என வலி தெற்கு பிரதேசசபையின் உறுப்பினர் ஜி.பிரகாஷை யாழ் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கினை இன்று விசாரணை செய்த யாழ் நீதிமன்று அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை தவறானது என்று இடைக்கால தடை விதித்துள்ளதுடன் வரும் 25ம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளது.

தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.பிரகாஷ் சார்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையானார்.

அவ்வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

Read more...

இன நல்லிணக்க மையங்களாக பள்ளிவாசல்கள் மாற்றம் பெற வேண்டும் - முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் போன்றவை இன நல்லிணக்க மையங்களாக மாற்றம் பெற வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன் மேம்பாட்டு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதி அமைச்சர் டாக்டர் அஹமட் பரீட் மீரா லெப்பையின் 33 ஆவது வருட நினைவு தினம் இவரின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் ஏறாவூரில் பரீட்டின் தந்தை சேர்மன் மீரா லெப்பை அவுலியா மையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் விசேட அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

பஷீர் சேகு தாவூத் இங்கு பேசியவை வருமாறு:-

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் அடங்கலான இஸ்லாமிய நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஏனைய இன மக்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து உலக அளவில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற சூழலில் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் ஆகியவற்றுக்கு உள்ளே நடப்பது என்ன? என்று தெரியாமல் இவர்கள் அங்கலாய்க்கின்றார்கள். இவற்றுக்குள் இருந்துதான் இஸ்லாமிய தீவிரவாதம் உருவாக்கப்படுவதாக சந்தேகிக்கின்றனர்.

ஏனென்றால் இவற்றுக்குள் இடம்பெறுகின்ற விடயங்கள் ஏனைய இன மக்களுக்கு மூடிய அறைக்குள் இடம்பெறுகின்ற மர்மங்களாகவே தோன்றுகின்றன. எனவே இஸ்லாமிய நிறுவனங்களின் செயற்பாட்டில் வெளிப்படை தன்மை உருவாக்கப்பட வேண்டும். இதனோடு சேர்ந்ததாக இஸ்லாமிய நிறுவனங்கள் இன நல்லிணக்க மையங்களாக மாற்றம் பெற வேண்டும்.

புதிதாக பள்ளிவாசல்கள் போன்றவை கட்டப்படுவது நல்ல விடயம்தான். ஆனால் இருக்கின்றவை பாதுகாக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் போன்றவை திருத்தி அமைக்கப்படுகின்றபோது அவற்றின் வரலாற்று தொன்மையும் அழிந்து விடாமல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலேயர்கள் வரலாற்று தொன்மையை அழிந்து விடாமல் உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியவாறே அவர்களுடைய கட்டிட நிர்மாணங்களை திருத்தி அமைக்கின்றனர் என்கிற விடயம் முன்னுதாரணம் ஆகும்.

இதே நேரத்தில் சிங்கள பௌத்த பேரினவாத பெருந்தேசிய சக்திகள் இன அழிப்பு அரசியலை பல வடிவங்களிலும் கச்சிதமாக செய்து வருகின்றன. இதற்காக வரலாற்று எச்சங்களை கையகப்படுத்தியும், கைப்பற்றியும், அழித்தும் வருகின்றன. இதற்கு மிக நல்ல அண்மைய உதாரணம் சிவனொளிபாத மலை ஆகும். இது மூவின மக்களுக்கும் சொந்தமாக உள்ளது. முஸ்லிம்கள் பாவா ஆதம் மலை என்றும் தமிழர்கள் சிவனொளிபாத மலை என்றும் சிங்களவர்கள் ஸ்ரீபாத மலை என்றும் அழைத்து வருகின்ற நிலையில் இதை தனியொரு இனத்துக்கு உரித்தானதாக பிரகடனப்படுத்துவது அநியாயம் ஆகும்.

முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் அல்லர், இந்நாட்டில் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர் என்கிற செய்தியை ஏனைய இன மக்களுக்கு உறுதியாக எடுத்து காட்டுகின்ற ஆதாரங்களாக அல்லாஹ்வின் நேசர்களான அவுலியாக்களின் அடக்க ஸ்தலங்கள் காட்சி தருகின்றன. இந்நாட்டின் பல இடங்களிலும் பல பல நூற்றாண்டுகள் பழைமையான ஷியாரங்கள் உள்ளன. இவை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் இவையும் நல்லிணக்க மையங்களாக முகிழ்க்க வேண்டும். சேர்மன் மீரா லெப்பை அவுலியா மையத்துக்கு தமிழ் சகோதரர்கள் தரிசனம் மேற்கொள்வதை நாம் எல்லோரும் மிக நன்றாகவே அறிவோம்.

ஏறாவூர் மண்ணின் மைந்தர் டாக்டர் பரீட் மீரா லெப்பை தலை சிறந்த புத்திஜீவியாக, உயர்ந்த கல்விமானாக, நிறைவான வாசகராக, வாதங்களை முன்வைப்பதில் வல்லுனராக, இன நல்லுறவுக்கான இணைப்பு பாலமாக, மகத்தான மக்கள் சேவையாளனாக விளங்கினார். இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலைமை தாங்க கூடிய ஆளுமையாக மிளிர்ந்தார். எமது இளையோர் சமூகத்தில் இருந்து ஏராளமான பரீட் மீரா லெப்பைகள் வருங்காலத்தில் உருவாகுதல் வேண்டும்.

இதே எமது மண்ணுக்கும், மக்களுக்கும் சேவையாற்றிய பெரியார்களை நாம் மறந்து விடவே கூடாது. அவர்களின் நினைவுகளை சுமந்தவர்களாக வாழுதல் வேண்டும். பரீட் மீரா லெப்பையின் வாழ்க்கை வரலாற்று நூல் நிச்சயம் எழுதப்பட வேண்டும். இவர் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். இதற்காக இந்நாளில் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.

- மல்லிகைத்தீவு நிருபர் -

Read more...

Wednesday, September 12, 2018

தமிழ் மக்களை நாய்கள் என அழைத்த வடக்கு மாகாண கல்வி அமைச்சர்.

கடந்த மாதம் ஒரு கூட்ட உரையில் கலாநிதி வரை படித்த கல்வி அமைச்சர் தமிழ்ச் சொற்களின் அர்த்தம் தெரியாமல் மக்கள் மத்தியில் - மேடைகளில் - இனவாத அடிப்படையில் தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தும் வகையில் விதண்டாவாதம் பேசியது - கவலைக்கும், வேதனைக்கும், வேடிக்கைக்கும், சோதனைக்கும், நகைப்புக்கும், பகிடிக்கும், பரிகாசத்திற்கும் உரிய விடயமாகும்.

தமிழ் அரசியல் தலைமைகள், வட பகுதி மக்களை அரசியல் பற்றி சுயமாக சிந்திக்க விடாமல் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிர் காலத்தில் ஒரு சமூகத்தின் இருப்பைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் இலங்கை தேசியம் பற்றி எண்ணாது தமிழ்த் தேசியம் பற்றி கதைத்தவர்கள். இப்போது தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பற்றி கதைப்பது சிறிது தமிழ் மக்களுக்கு மன சாந்தியைக் கொடுத்தாலும், வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையும் தறுவாயில் கல்வி அமைச்சர் உரிமைக்கான போராட்டம் பொருளாதாரத்திற்கான போராட்டம் இரண்டிலும் சமாந்தரமாக வடக்கு மக்கள் பாண் துண்டுகளைச் சிங்கள இனவாதம் வீசியதாகவும் அங்கு தமிழ் மக்கள் அதை பொறுக்கி எடுப்பதற்கு முண்டியடித்ததாகவும் அந்த உரையில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களை மறைமுகமாக செயற்பாடுகளின் மூலம் நாய்கள் என குறிப்பிட்டு, சாதாரண தமிழ் மக்கள் என்றும் தமிழ் அரசியல் எஜமானிகளுக்கு அடிமைகள் என்பதையும் நாசூக்காக விகடம் பேசியுள்ளார், கல்வி அமைச்சர். இப்போதைய வட மாகாண கல்வி அமைச்சர் தமிழ் மக்கள் கம்பி வேலிக்குள் இருக்கும் போது எங்கேயிருந்தார்?;.

தமிழ் மக்களைக் கம்பி வேலிக்குள் சிங்கள இனவாதம் கொடுமைப்படுத்தும் போது அதற்கு தமிழ் இனவாதமும் துணை புரிந்துவிட்டு, இப்போது தமிழ்த் தேசியவாதிகள் தமிழ்த் தேசியம் கதைப்பது எந்த வகையில் நியாயமானது.

சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சலுகை பற்றியே கதைப்பதாகவும் அந்த உரையில் கல்வி அமைச்சர் குறிப்பிட்டது வெறும் பித்தலாட்டமாகவுள்ளது. ஏனெனில் வரவு செலவு திட்டத்தில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போரால் பாதிக்கப்பட்ட பகுதி என சலுகை அடிப்படையில் பணம் பெறவில்லையா?.

பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் மக்கள் சேவைக்காக மக்கள் பிரதிநிதிகளாக சென்று ஆடம்பர வாகனங்களுக்கான சலுகையைப் பெறவில்லையா?.

மூலதன நன்கொடை நிதியை மாகாண சபை உறுப்பினர்கள், மக்களுக்கு எங்கிருந்து வழங்குகின்றார்கள்?.

மக்களிடமிருந்து அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் முதலியவற்றின் மூலம் கிடைக்கும் வரிப்பணத்தின் ஊடாக அல்லவா?.

ஏன் அரசியல்வாதிகள் சலுகை பெறும் போதுளூ சாதாரண தமிழ் மக்கள் பெறமுடியாது.

தமிழ் இனவாத அரசியல் வாதிகள் தமிழ்த் தேசியத்தாலும் சிங்கள இனவாத அரசியல் வாதிகள் சிங்கள தேசியத்தாலும் முஸ்லிம் இனவாத அரசியல் வாதிகள் முஸ்லிம் தேசியத்திலும் ஊறி வகுப்பு வாதம் பேச எல்லா இனத்திலும் சாதாரண மக்களே பலிக்கடாக்கள். –

புயல் பெ.ஸ்ரீகந்தநேசன் -

Read more...

நுண்கடன்களை பெற்றுக்கொண்டுள்ள பெண்கள் இலங்கையில் எதிர்நோக்கும் சித்திரவதைகள் ஐ.நா வில்

இலங்கையில் நிதி நிறுவனங்களிடம் நுண் கடன்களை பெற்றுக்கொண்ட பெண்கள், அதனை மீளச் செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றனர் என ஐ.நா நிபுணர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தின் முடிவில் ஐநாவின் வெளிநாட்டு கடன் மற்றும் மனித மனித உரிமைகளிற்கான சுயாதீன நிபுணர் ஜூவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி இதனைத் தெரிவித்தார்.

கடன்களை மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நபர்களால், பெண்கள் உளஉடல்ரீதியான வன்முறைகளை சந்திக்க நேர்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 9 நாள்கள் கொழும்பில் தங்கியிருந்து அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார். தனது பயணத்தின் நிறைவில் இன்று (11) ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொண்டார்.

“நுண்கடன் நிறுவனங்கள், தாம் வழங்கும் கடன்களுக்கு 220 வீத வட்டியை அறவிடுகின்றன. கடன்பெற்றவர்கள் அதனை திருப்பி செலுத்துவதற்காக தங்கள் சிறுநீரகத்தை விற்பதற்கு முயன்ற சம்பவங்கள் குறித்து நான் அறிந்துள்ளேன்.

சிலர் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். வேறு சிலர் ஒப்பந்தத்தை மீறியதற்காக வன்முறைகளை சந்தித்துள்ளனர் அல்லது பெற்ற கடனை மீள திருப்பி செலுத்துவதற்காக பல மணிநேரம் வேலை பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடன்பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் இந்த நுண்கடன் பிரச்சினையே காரணமாகவுள்ளது.

நுண்கடன்களைப் பெற்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுமுள்ளன.

எனினும் இலங்கையில் நுண்கடன்களை வழங்கியவர்களின் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தின் தீவிர தன்மையை கருத்தில்கொள்ளும்போது அரசு இதில் தலையிடவேண்டியது அவசியம்.

இலங்கையின் போரால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலவும் பகுதிகளை நுண்கடன் நிறுவனங்கள் இலக்குவைப்பதை நான் அறிந்துள்ளேன்” என்று ஐ.நா. நிபுணர் யுவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி மேலும் தெரிவித்தார்.

Read more...

ரஜீவ் கொலைவழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய பெரும் எதிர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்று கூறியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க கவர்னருக்கு பரிந்துரை செய்வது என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விஷயத்தில், மத்திய அரசும், தமிழக அரசும் அரசியல் செய்து வருகின்றன. அந்த பயங்கரவாதிகள், ராஜீவ் மட்டுமின்றி, அப்பாவி மக்களும், போலீசாரும் கொல்லப்பட காரணமானவர்கள். சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டவர்கள்.

இதுவரை அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. போலி தேசியவாதத்தின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள், இந்த விஷயத்தில் அரசியல் செய்து வருகிறார்கள். மத்திய அரசும், அ.தி.மு.க. அரசும் பயங்கரவாதம் விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கின்றன. இத்தகைய செயல்கள் மூலம் பயங்கரவாதிகளை பாதுகாத்து வருகின்றன. எனவே, பிரதமர் மோடிக்கும், அவரது அரசுக்கும் உண்மையின் கண்ணாடியை காண்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

பரந்த இதயம் கொண்ட அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவருடைய சகோதரி பிரியங்கா ஆகியோர் ராஜீவ் கொலை கைதிகள் மீது விரோதம் இல்லை என்று கூறி இருக்கலாம். ஆனால், ஒரு குடிமகனாகவும், காங்கிரஸ்காரனாகவும் நாங்கள் எளிமையான ஒரு கேள்வி கேட்கிறோம். ஒரு மாநில அரசின் கடமை, பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதா? பாதுகாப்பதா?

அவர்களை விடுவிக்க பா.ஜனதா நியமித்த கவர்னருக்கு பா.ஜனதாவின் கூட்டாளியான அ.தி.மு.க. பரிந்துரை செய்துள்ளது. இதுதான் தற்போது மாநில அரசின் கொள்கையா? அவர்களை விடுவிக்கப்போகிறார்களா? பயங்கரவாதிகளை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்பதுதான் எங்களது தெளிவான நிலைப்பாடு. இவ்வாறு ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.

Read more...

2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வேட்பாளர் என்பதை கட்சியே முடிவு செய்யும் என்கின்றார் மஹிந்தர்!

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம் என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ´த ஹிந்து´ பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எடுத்த தீர்மானம் இந்தியாவின் உள்ளக நடவடிக்கைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றிருப்பின் வேறு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் எனவும் இருப்பினும் இது இந்தியாவின் உள்ளக விடயம் என்பதால் இந்த விடயம் தொடர்பில் தனக்கு எவ்வித கருத்தும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் விரிவுரை ஒன்றை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

தன்னுடைய கட்சி 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவது தொடர்பில் 100 சதவீதம் நம்பிக்கை இருப்பதாகவும் நாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான அனைத்துப் சிக்கல்களையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்றை முன்மொழிவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொறிமுறை 2008 - 2009 யுத்த இடம்பெற்ற காலத்தில் இலங்கை அதிகாரிகள் மூவரும் இந்திய அதிகாரிகள் மூவரும் இணைந்து உருவாக்கிய ட்ரைகா பொறிமுறையை ஒத்ததாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரைகா பொறிமுறையை தயாரிப்பதற்காக இலங்கை சார்ப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்தியா சார்ப்பில் இராஜங்க பாதுகாப்பு ஆலோசகர், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரும் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.

சீன வியாபாரத்தை இலங்கைக்கு எடுத்து வந்து இலங்கையை கடனுக்குள்ளாக்கியதாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் தற்போதைய அரசாங்கம் அதனை சிக்கலான நிலமைக்கு மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் இந்தியாவிற்கும் தனக்கும் இடையில் நிறைய தவறான புரிதல்கள் இருந்ததாகவும் அவற்றை சீர் செய்து கொள்வதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தான் தலைமைத்துவம் வழங்குவதாகவும் 19 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு போட்டியிட முடியும் எனவும் அதற்காக நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அனைவரும் விரும்பும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது அதற்கு மாற்று தீர்வாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி போட்டியிட குறைந்த பட்ச வயதெல்லை 30 முதல் 35 வயதிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தனது மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த முடியாது எனவும் இருப்பினும் தனது சகோதரருக்கு ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக வேட்பாளராக நிற்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னுடைய கட்சி மற்றும் மக்கள் ஒன்றிணைந்து தேவையான நபரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

சட்டவிரோதப் போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது: ட்ரம்ப் குற்றச்சாட்டு.

சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் 21 நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் அமெரிக்க அதிபர் பங்கேற்று பேசும்போது, "சட்டவிரோதமாக போதைப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை பிற நாடுகளுக்கு கடத்தும் 21 நாடுகளில் இந்தியா உள்ளது.

போதை பொருட்கள் கடத்தும் ஆசிய நாடுகளில் பாகிஸ்தான், மியான்மர், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் முக்கிய நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பகாமஸ், பெலிஸ், போல்வியா, கொலம்பியா, கோஸ்டா ரைகா, ஈக்வேடார், எல் சால்வேடார், கவுட்டமாலா, ஹைதி, ஹோண்டுரஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, பனாமா, பெரு, நிகராகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளும் போதை பொருட்களை சட்டவிரோதமாக கடத்து நாடுகளின் பட்டியலில் இடப்பெற்றுள்ளன.

கொலம்பியா, மெக்சிகோ, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து வருவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

மேலும், மெக்சிகோவிலிருந்து வரும் ஹெராயின் மற்றும் கொலம்பியாவிலிருந்து வரும் கோகைன் மூலமும் அமெரிக்காவில் ஆண்டுத்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறி போகின்றன.

அமெரிக்கா தொடர்ந்து சர்வதேச அளவில் போதைப் பொருட் உற்பத்தி மற்றும் போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

Read more...

Tuesday, September 11, 2018

இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாத அரசியல் - இந்ரஜித்

இலங்கையைப் பொறுத்தவரையில் இனவாதம் என்பது புரையோடிப்போன வரலாறாகும். இலங்கை வரலாறு முழுவதிலும் இனவாத அரசியலையே அனைத்துக் கட்சிகளும் முன்னெடுத்து வந்துள்ளன. அதுதமிழ் கட்சியாக இருந்தாலும் சரி,சிங்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகும். அன்று முதல் இன்று வரையில் இது தொடர் கதையாகும். இந்த அரசியலை முன்னெடுப்பவர்கள் யார்? முன்னெடுப்பது ஏன்? என்ற வினாக்களுக்கான பதிலைத் தேடும் போது இந்த சமூகத்தின் தன்மையைப் பற்றிப் புரிதல் இருக்கவேண்டும்.

அதாவது நாம் இன்றுவாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் முதலாளித்துவ அமைப்புடைய சமூகமாகும். இந்த சமூகத்தில் வாழும் அதிபெரும்பான்மையான மக்கள் துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். அதாவது வாழ்க்கை செலவை எடுத்துக் கொண்டால், அதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாத சுமையாக மாறியுள்ள நாடாகும். அதன் காரணமாக இன்று இலங்கையில் வாழும் மக்களில் 42 சதவீதமான மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு டொலருக்கு குறைவான வருமானத்தையே (800 ரூபா) பெறுகிறார்கள் என்று புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது. அதேபோன்று சுகாதாரப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும், கல்விப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் சரி, போக்குவரத்துப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் நிலைமை இதுவேயாகும். பிறக்கின்ற பிள்ளைகளில் நூற்றுக்கு 42 வீதம் போஷhக்கின்மையால், வாடும் நாடாகமாறியுள்ள நிலையில் எமது எதிர்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது,

அதாவது இந்த சமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் வறுமை கூடியநாடாக எமது நாட்டை மாற்றியுள்ளனர். அதில் வயதுக்கேற்ற வளர்ச்சிகுன்றிய பிள்ளைகள் நூற்றுக்கு 17மூ ஆகும். நிறையில்லாத பிள்ளைகளின் வீதம் நூற்றுக்கு 21மூ ஆகும். ஐந்து இறாத்தலுக்கு குறைவான எடையுள்ள பிள்ளைகளின் தொகை நூற்றுக்கு 16மூ வீதமாகும். கர்ப்பிணித் தாய்மார்களில் நூற்றுக்கு 22மூ தினர் இரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டுள்ளனர். இதுவேமக்களின் இன்றைய வாழ்வு நிலையாகும்

உற்பத்திப் பொருளாதாரத்துக்கு என்ன நடந்துள்ளது? அரிசி 2017ஆம் ஆண்டில் 15,23000 மெ.தொன் உற்பத்திச் செய்யப்பட்டு, 7,48000 மெ.தொன் அரிசி இறக்குமதிச் செய்யபப்ட்டது. அரிசி இறக்குமதி செய்யப்பட வேண்டிய நாடா இது? அதுமட்டுமா தேயிலை 32 சதவீதம் இறக்குமதிச் செய்யப்படும் நாடு. பெரியவெங்காயம் 54,000 மெ.தொன் உற்பத்திச் செய்யப்பட்டு 2,32000 மெ.தொன் இறக்குமதிச் செய்யப்படுகின்ற நாடு. சீனி 56,000 மெ.தொன் உற்பத்திச் செய்யப்பட்டு 4,98,000 மெ.தொன் இறக்குமதிச் செய்யப்படுகின்ற நாடாகமாறியுள்ளது. சீனி உற்பத்திக்குத் தேவையான கந்தளாய் சினித் தொழிற்சாலை மூடப்பட்டும் கரும்பு வளர்ப்புக்குத் தேவையான 23,000 ஏக்கர் காணி பாழடைந்துப் போயுள்ளது. உற்பத்தியில்லாத வெளிநாட்டுக் கடனை நம்பி வாழும் நாடாக நமது நாடு மாறியுள்ளது.

அது மட்டுமல்ல ஏற்றுமதியின் மூலமாக 1000 கோடிரூபாய் கிடைக்கின்றபோது நாம் இறக்குமதிக்காக 2000 கோடி செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதேபோன்று இன்று ரூபாவின் மதிப்புமேன் மேலும் வீழ்ச்சியடைந்து டொலரின் மதிப்பு 160 ரூபாவை கடந்துள்ளது. இவைகளிலிருந்து மீள்வதற்கான வழியாக அரசாங்கம் மக்களை மேன்மேலும் வதைத்து வரி, தண்டப் பணம் மற்றும் ஏனைய வரிகள் மூலமாக மக்களை சூறையாடி வருகிறது. அது மட்டுமல்ல தேசிய உற்பத்தித் துறைகள் அனைத்தும் செயலிழந்துப் போயுள்ளன. அதன் காரணமாகக் கடன் மீது தங்கியிருக்க வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு வருமானம் கிடையாது அதன் காரணமாக தண்டம், வரி, பெட்ரோல் விலைச் சூத்திரம் போன்வற்றால் மக்கள் மேன்மேலும் நசுக்கப்படுகிறார்கள். இது கடந்த 70 வருடத்து இலங்கையின் ஆட்சியாளர்களால் கொண்டு சென்ற முதலாளித்துவ முறையின் தன்மையாகும். இன்று இந்த ஆட்சியாளர்களால்

மக்கள் முகம் கொடுக்கின்ற மேற்கண்ட எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது போயுள்ளது. மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாத இவர்களால் முன்னெடுக்கும் ஆயுதமே இனவாதமாகும். அதுமக்களின் எண்ணங்களைத் திசைதிருப்புகிறது. நாட்டை நாசமாக்கிய மோசடிக்காரர்களைப் பாதுகாக்கிறது. அதற்காகத் தமிழ் என்றாலும், சிங்களம் என்றாலும், முஸ்லிம் என்றாலும் அனைத்து அரசியல் கட்சிகளும் இனவாதத்தையே தமது அரசியல் மூலதனமாகக் கொண்டு இயங்குகிறது.

அதுமட்டுமல்ல 10 வருடங்களுக்கு மேலான நாட்டு ஆண்டு நாட்டை இலஞ்ச, ஊழல், மேசடியின் முகட்டுக்கே கொண்டுச் சென்று நாட்டை அராஜக நிலைக்குத் தள்ளிய ராஜபக்ஷாக்கள் இன்று தமது ஊழல் மோசடிகளை மறைப்பதற்காக இனவாதத்தை கையில் எடுத்து மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அத்தோடு தமது கட்சியில் தோன்றியுள்ள உட்கட்சி முரண்பாட்டை மறைப்பதற்கும் தமது கட்சி அங்கத்தவர்களின் நம்பிக்கையீனத்தை மாற்றுவதற்கும், ராஜபக்ஷ குடும்பத்தில் அதாவது பசில், கோத்தபயா முரண்பாட்டை தற்காலிகமாக தணிப்பதற்காக மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இனவாதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

அதே போன்று 2015 ஆட்சிக்கு வந்த மைத்திரி -ரணில் முரண்பாடு இன்று உக்கிர நிலையடைந்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களுக்கு வழங்கியவாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து செயற்படுகின்ற நிலையே இன்று காணப்படுகிறது. அதற்காக அவர்களும் இன்று இனவாதம், மதவாதம், மற்றும் அடக்குமுறை அனைத்தையும் பிரயோகித்து வருகின்றனர். அதே போன்று வடபகுதி தமிழ் அரசியலை எடுத்துக் கொண்டாலும் தென்னிலங்கையில் உள்ள அரசியவாதிகளுக்கு தாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதையே அவர்களின் நடவடிக்கை வெளிக்காட்டுகிறது.

இப்போது வடபகுதியல் சுமந்திரனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது. சமஷ்டியா? இல்லையா? என்ற வாதப்பிரதிவாதங்கள் உக்கிமடைந்துள்ளது. அதில் குளிர்காயும் சுரேஷ் பிரேமசச்ந்திரனும், அத்தோடு புளொட் சித்தார்த்தன், டெலோ அடைக்கலநாதன் இவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் உண்மையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசாது, சமஷ்டியா? இவருடன் கூட்டுவேண்டாம், விக்கியோடு மட்டுமே கூட்டுச் சேருவோம் என்று கூறி மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறக்கடித்து வருகின்றனர்.

இதுவே இன்றைய இலங்கையின் மேட்டுக்குடிகளின் அரசியலாகும். அதற்கு மகிந்தவா, ரணிலா, விக்கியா, சம்பந்தரா, சுமந்திரனா, கஜேந்திரனா என்ற வேறுபாடு கிடையாது. இன்று இவர்கள் அனைவரும் இந்த இனவாத சாக்கடையில் அமிழ்ந்துப் போயுள்ளனர் என்பதை மக்கள் உணரவேண்டும்.

ஆகவே, மக்கள் முன்னால் இன்று பாhரியகடப்பாடு இருக்கிறது. அது, இந்த 70 வருட இனவாத அரசியலிலிருந்து மீள்வதாகும். அதற்காகமக்கள் இந்த அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தை இனங்கண்டு கொள்ளவேண்டும். கடந்த 70 வருட அரசியலைத் திருப்பிப்பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கின்றபோது இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை உணரமுடியும். அதனால் அவர்களிடமிருந்து மீளவேண்டும் என்றால் மக்கள் புதிய வழியில் புதியதோர் அரசியல் பாதையைப் பற்றி சிந்திக்க வேண்டும் இதற்கான காலமே இன்று உதயமாகியுள்ளது.

Read more...

முன்னாள் இந்நாள் இராணுவத்தளபதிகள் மோதல்! பாதுபாப்பு ராஜாங்க அமைச்சர் விசனம்!

கோப்புகளுக்கு பாதுகாப்பாக இருந்த பிரிகேடியர், தனக்கு மற்றவர்களைவிட அறிவு உள்ளது என்று கருதுவாராக இருந்தால், அது தவறான புரிதல். இலங்கை வரலாற்றிலே இவர் ஒருவர்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகமொன்றுக்குச் செல்ல முன்பு இராணுத்தளபதியாகியவர் என முன்னாள் இராணுத் தளபதி சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியைச் சாடியுள்ளார்.

இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகள் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பேசுவது பொருத்மற்றது என்றும் நாடு இன்று யுத்தநிலையில் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டபோதே சரத் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், 40 வருடங்கள் இராணுத்தில் கடமையாற்றி யுத்தம் ஒன்று நடைபெறுகின்றபோது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் விளங்கிக்கொள்ள முடியுமான ஒருவருக்கு யுத்தமொன்று இல்லாத தருணத்தில் பாதுபாப்பு நிலைமமைகள் தொடர்பில் விளங்கிக்கொள்ள முடியாது என தற்போதைய இராணுவத் தளபதி கருதுவாராக இருந்தால், இவர் தவறான புரிதலில் புலம்புகின்றார் என்று என்னால் கூறமுடியும். இந்த இராணுவத் தளபதி நான் யுத்தத்திற்கு ஆணையிடுகின்றபோது, கொழும்பிலிருந்த கோப்புக்களுக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் என்றும் தெரிவித்துள்ளார்.

இக்கருத்துக்கள் தொடர்பில் கருத்துரைத்துள்ள பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, அரசியல் இலாபம் பெறுவதற்காக சிலர் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக வெளியிடும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நபர்கள் கடந்த காலம் முழுவதும் தேசிய பாதுகாப்பு தொடர்பான உண்மைக்கு புறம்பான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு முக்கியமான படை முகாம்கள் அனைத்தும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பான மீளாய்வுகளின் பின்னரே காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

படையினரின் பலத்தை மேலும் அதிகரிக்க நீர்காகம் போன்ற இராணுவப் பயிற்சிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதோடு, வெளிநாட்டு பயிற்சிகளுக்கும் படையினர் அனுப்பப்பட்டு வருகின்றனர் எனவும் ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் சரத் பொன்சேகா இராணுவம் மற்றும் இராணுவ தளபதியை விமர்சித்து அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இராணுவத் தளபதியினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை.

இலங்கை இராணுவமானது 30 வருட காலமாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை வெற்றியோடு நிறைவுக்கு கொண்டு வந்து 09 ஆண்டுகளாகின்றன. அந்த 09 வருட காலத்திற்குள் அனுபவமிக்க நான்கு இராணுவத் தளபதிகள் இராணுவத்திற்கான கட்டளைகளை வழங்கியதோடு இவர்கள் அனைவரும் இராணுவத்தினுள் இராணுவ நடவடிக்கைகளை உயர் தரத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காக பல்வேறுபட்ட மட்டங்களிலான பயிற்றுவிப்பு திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டதுடன் அப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் இன்றுவரை உயர் தரத்திலேயே இடம் பெற்ற வண்ணம் காணப்படுகின்றன.

அத்துடன் புதிய பயிற்சிகள் மற்றும் யுத்தத்தின் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை புதிய தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி யுத்தத்தை எதிர்கொள்ளும் நோக்கில் தேவையான அனைத்து பயிற்றுவிப்பு திட்டங்கள் மற்றும் பயிற்சிகளையும் சகல இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருக்கு தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இனி வருங்காலங்களில் அரசின் அனுசரனையோடு பாரிய அளவிலான அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோருக்கு வெளிநாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் சர்வதேச ரீதியில் யுத்தத்தை கையாளும் முறைகள் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக காணப்படுகின்றது.

மேலும் இராணுவ தரநிலைகளின் கீழ் குறைந்த அளவிலான படையினரை உள்ளடக்கிய படைப் பிரிவினரை பலப்படுத்தியுள்ளதுடன் அதன் மூலம் இப் பிரிவுகள் குழுக்களாக நிகரான முறையில் பிரிக்கப்பட்டு எவ்வாறான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் நோக்கில் தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். யுத்தம் தொடர்பான ஆய்வார்கள் என்று கூறிக்கொண்ட சிலர் இராணுவ முகாம்களை மூடிவிடுவதாக கருதியுள்ளனர்.

தற்போது பாதுகாப்பு படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம்) மற்றும் அனைத்து தலைமையக தரநிலைகளின் கீழ் மறுசீரமைப்புக்குள்ளாக்கப்பட்டு மூடப்பட்டுள்ள அதனுள் யுத்தத்தின் காரணமாக முக்கியப்படுத்தப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் என்னவென சுட்டிக்காட்டுமாறு யுத்தம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு இராணுவம் விடுக்கின்ற சவாலாகும்.

எப்படியாயினும், யுத்தம் முடிவுக்கு வந்த பின் காணப்பட்ட இராணுவ முகாம்கள் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த பின்னர் அச் சூழ்நிலைகளில் காணப்பட்ட பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்ததன் பின்னர் கள கட்டளையாளர்களின் பரிந்துரையைக் கருத்திற்கொண்டு வேறுபடுத்த செயற்பட்டமை தவறில்லை. அதற்கமைய காணப்பட்ட இராணுவத் தளபதிகளால் சில முகாம்கள் அமைந்துள்ள பிரதேசங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் நாட்டில் காணப்படுகின்ற பாதுகாப்பு நிலைமைகளின் காரணமாக தேவையேற்படின் அவை நடைமுறைப்படுத்தப்படும்.

அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளின் தயார் நிலை தொடர்பாக தாங்கள் திருப்தியடைவதில்லை என தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பல வருடங்களின் பின்னர் ஓய்வு பெற்று வேறாக இருப்பவர்கள் இராணுவத்தின் யுத்த பலம் தொடர்பாக விமர்சிக்க இயலாது. அது தொடர்பான தார்மீக உரிமையும் அவர்களிடமில்லை. அத்துடன் தேவையான சூழ்நிலைகளில் முன்னர் இராணுவத்தில் சேவையாற்றிய இராணுவத் தளபதிகள் மற்றும் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனைகளைப் பெற்று கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இராணுவத்தின் பலத்தை மென்மேலும் தொடர்வதற்கு எப்போதும் இராணுவம் செயற்படுவதோடு மேலும் இவ்வாறு செயற்படுவதற்கு பின்நிற்பதில்லையென மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரசு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவம் போன்றன தங்களது தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக தேசிய பாதுகாப்பை விமர்சிப்பதற்கு இராணுவம் தனது கண்டனத்தை தெரிவிப்பதுடன் நாட்டின் அறிவுபூர்வமான மக்கள் இவ்வாறான சந்தர்ப்பவாதிகளின் கூற்றுக்கு செவிசாய்காமல் தமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டை மீண்டும் யுத்தத்திற்கு இட்டுச் செல்லாமல் தொழில்சார் இராணுவமாக செயல்படுவதுடன் இலங்கை இராணுவத்துடனான நம்பிக்கையை மென்மேலும் வைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கின்றோம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

அரச தொழில் பெற்றுத்தருவதாக ஏமாற்றிய 3 பெண்கள் கைது. இவ்வாண்டில் 1968 லஞ்ச முறைப்பாடுகள்.

அரச நிறுவனங்களில் தொழில் பெற்றுத்தருவதாக நபர்களை ஏமாற்றிய 3 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் தம்மை அரச உயர் அதிகாரிகள் என்று காட்டிக்கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு நபரிடமிருந்தும் 12500 ரூபாய்களை மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பில் ஹோமாகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, கொழும்பு, ஹிம்புத்தட்டண மற்றும் ஜம்புமரச்சந்தி ஆகிய பிரதேசங்களிலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம் இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் 1968 முறைப்பாடுகள் தமது ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.

அந்த முறைப்பாடுகளில் 1264 முறைப்பாடுகளை விசாரணைக்காக தெரிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி கூறினார்.

அவற்றுள் மோசடி முறைப்பாடுகள் 900, ஊழல் முறைப்பாடுகள் 254, தவறாக சொத்து சேர்த்த முறைப்பாடுகள் 63 மற்றும் 47 சுற்றிவளைப்புக்கள் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த அண்டின் ஆகஸ்ட் 15 வரையான காலத்தில் 28 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரியந்த சந்திரசிறி கூறினார்.

விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 29 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளை குறித்த காலப்பகுதியில் 74 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்று 57 மேல் நீதிமன்றங்களிலும் 17 நீதவான் நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி கூறினார்.

வடபகுதியிலும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் நெருங்கிய சகாவான முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் இவ்வாறு அரச தொழில் பெற்றுத்தருவதாக பணமோசடி செய்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் மாதம் இறுதிப்பகுதிக்குள் பணத்தை செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மக்களுக்கு குடிப்பதற்கு நீரில்லை. பிரதேச சபை உறுப்பினர்கள் போத்தல் தண்ணி கேட்டு சபையில் அமளி துமளி.

கரைச்சி பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஆளப்படுகின்றது. குறித்த சபையின் ஏழாவது அமர்வின்போது சபை உறுப்பினர்களுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட போத்தல்களில் நீர் நிரப்பட்டு வழப்பட்டமையினால், புதிய போத்தலில் தண்ணி கோரி சபையை முடக்கினர் உறுப்பினர்கள்.

சபையின் தலைவர் அ. வேழமாலிகிதன் தலைமையில் அமர்வுகள் ஆரம்பமானபோதே, இவ்வாறு நடைபெற்றுள்ளது. மக்கள் ஒருநேர உணவிற்காக துயரப்பட்டுக்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் மக்களின் பிரதிநிதிகளாக, அவர்களது தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூடப்பட்ட அமர்வு போத்தல் தண்ணீருக்காக சண்டையிட்டு நிறைவு பெற்றுள்ளது.

அமர்வில் கலந்து கொண்ட சகல உறுப்பினர்களும் கட்சி பேதம் இன்றி தங்களுக்கு புதிய போத்தல் தண்ணீர் வேண்டும்மென்று கூக்குரல் இட்டனர். ஜக்கியதேசிய கட்சியின் உறுப்பினர் மருத்துவர் விஜயராஜன், நாங்கள் சுகாதாரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் , ஆனால் இங்கு சுகாதாரத்திற்கு முற்றிலும் புறம்பான செயற்பாடு இடம்பெறுகிறது என்றும் இந்த போத்தல்கள் ஒரு தடவை மாத்திரமே பயன்படுத்தப்படல் வேண்டும் என்றும் அதற்கேற்ற வகையில்தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அத்தோடு சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அசோக்குமாரும் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இன்று சுகாதாரத்தை பற்றி பேசுகின்ற மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்கப்படுகின்ற கேள்வி யாதெனில், இச்சபையில் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்ற நீர் தொடர்பில் எப்போதாவது பேசப்பட்டுள்ளதா?







Read more...

Monday, September 10, 2018

மக்களை ஏமாற்றியே சிங்கப்பூருடான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது - ஜே.வி.பி.

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட்டுள்plfள சுதந்தர வர்த்தக ஒப்பந்தம், பாராளுமன்றத்தையும் பொது மக்களையும் ஏமாற்றியே கைச்சாத்திடப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துனெத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக எமது நாட்டின் தேசிய தொழில், தேசிய வியாபாரம் மற்றும் உள்ளநாட்டு தொழில் வாய்ப்புக்கள் அற்று போகும். உள்நாட்டு உற்பத்திகளுக்கான கேள்வி குறைவடையும் நிலை ஏற்படும்.

இவ் ஒப்பந்தம் ஜனவரி 23 ஆம் திகதி கைசாத்திடப்பட்டு இன்று வரையில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. நாட்டு மக்களுக்கும் இது தொடர்பில் தெரியாது. எனினும் மே முதலாம் திகதி முதல் இவ்வொப்பந்தம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

Read more...

ஐ.நா வில் இலங்கை அரசு செய்யவேண்டியதை உலக இலங்கையர் பேரவை செய்யும்.

அமெரிக்காவினால் மலக்குளிக்கு நிகரானது என அறிவிக்கப்பட்டுள்ள ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக, இலங்கை அரசினால் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் அரசு அதனை செய்யவில்லை என உலக இலங்கையர் பேரவையின் தலைவர் சுனில் சந்தரகுமாரா தெரிவித்துள்ளார்.

இன்று 10 திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 39 வது அமர்வுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மியன்மாருக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அதே தருஸ்மான் அவர்களாலேயே மியன்மாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களை பௌத்தர்கள் கொல்கின்றனர் என்றும் அவ்வாறே இலங்கையிலும் தமிழர்கள் கொல்லப்படுவதாக புதிய புரளி ஒன்றை புலம்பெயர் தமிழர்கள் கிளப்ப முற்படுகின்றனா் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இக்குற்றச்சாட்டுக்கான பொதுவான காரணி பௌத்தர்கள் என்பதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பாக 39வது அமர்வில் சமர்பிப்பதற்கென மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையானது கடந்த 2015 ஒக்டோபர் 01 ம் திகதி நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளது என்றும் உலக இலங்கையர் பேரவையின் அறிக்கை குறிப்பிடுகின்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்பட்ட சட்டவிரோத கைது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. காணமல்போனோரின் காரியாலயத்தின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படவேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும், பயங்கரவாத தடுப்புச்சட்டம் இல்லாதொழிக்கப்படவேண்டும், பூந்தோட்டம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்பன அறிக்கையில் அடங்கியுள்ள சிபார்சுகளில் சிலவாகும்.

நாட்டை பிரிக்க முற்படுகின்ற புலிகளின் ஆதரவாளர்கள் இவ்வறிக்கையினை பயன்படுத்தி கொள்வார்கள். 1948 இலிருந்து தமிழ் மக்களை சிங்களவர் கொன்றதாக கூறுகின்றார்கள். இலங்கை இராணுவம் தமிழரின் பூர்வீக பூமியை ஆக்கிரமிப்பதாக சொல்லுகின்றார்கள். இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசு பதிலளிக்கவில்லை. இச்சந்தர்பத்தில் நாட்டை மதிக்கின்ற மக்களாக நாம் சுவிட்சாலந்து சென்று இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கின்றோம் என்று உலக இலங்கையர் பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு 17 உறுப்பு நாடுகளிடம் கையொப்பமிட்டு சமர்பித்தால் ஐ.நா அதனை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிர்பதந்தத்திற்கு உட்படும் என்றும் பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு குறித்த தீர்மானத்தில் மாற்றத்தை கொண்டுவந்தால் எமக்கு ஏற்றவாறு சர்வதேச நாடுகளை மாற்றிக்கொள்ள முடியும். எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியுடன் எமக்கு வழங்கப்பட்டுள்ள 2 ஆண்டு கால அவகாசம் முடிவுக்கு வருகின்றது. நாம் இவ்வாறு ஒன்றை செய்யாதவிடத்து எம்மீது ஐ.நா அழுத்தங்களை பிரயோகிக்ககூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

இது தொடர்பில் நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் விலைவாசி ஏற்றம் போன்ற செயற்பாடுகளில் கவனத்தை செலுத்துகின்றபோது, அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு தேவையானவற்றை இங்கு நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றது. புதிய அரசியல் யாப்பை கொண்டுவர முடியாதவிடத்து 20 ம் திருத்தத்தின் ஊடாக அவற்றை நிறைவேற்றிக்கொள்ளவும் முயற்சிக்கின்றது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read more...

இனவாதத்தின் தொடர் நிகழ்வுகள் நாட்டை குழப்பமடையச் செய்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் 39ம் அமர்வுகள் இன்று ஆரம்பமானது. இவ்வாரம்ப நிகழ்வில் பேசிய மனித உரிமைகளுக்கான புதிய ஆணையாளர் மைக்கேல் பெசேல்ட் (Michelle Bachelet) இனவாதத்தின் தொடர்ச்சியான சம்பவங்களால் நாடு தொடர்ச்சியாக குழப்பமடைவதை காணக்கூடியதாக உள்ளது தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு இலங்கை தொடர்பில் குறிப்பிடுகையில் :

இலங்கையில், இடைக்கால நீதித்துறையின் அர்த்தமுள்ள நடைமுறைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் மிக மெதுவாக நகர்வதுடன், காணாமற் போனோர் அலுவலகம் இப்போதுதான் அதன் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் விரைவாக செயல்பட அந்த அலுவலகத்திற்கு நாங்கள் கூறுகின்றோம். காணாமல் போனவர்களுக்கான பதில்களை வழங்க வேண்டும். பொறுப்புணர்வு மற்றும் சத்தியத்தோடும் நாடுகளின் நீண்ட கால ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் பெரும் எடையை கொண்டிருக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
தெரிவித்துள்ளார்.

Read more...

கோட்டா உள்ளிட்ட எழுவருக்கு வீசேட நீதிமன்றில் பிணை.

வீரகெட்டிய மெதமுலனவில் டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை அமைப்பதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான நடைபெற்று வரும் வழக்கு விசாரணை அண்மையில் அமைக்கப்பெற்ற விசேட நீதிமன்றுக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மன்றில் ஆஜராகிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு விஷேட மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தலா 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையின் அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கும் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது கை ரேகைகளையும் பதிவு செய்துகொள்ளுமாறு நீதிமன்று பணித்துள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவர்கள் விஷேட மேல் நீதிமன்றத்தில் இன்று (10) காலை ஆஜராகினர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

Sunday, September 9, 2018

ரஷ்யாவுடன் ரகசிய தொடர்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் கைது

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ரஷ்யாவுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்ததாக புகார் எழுந்ததை யடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ர்ம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா மறைமுகமாக உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில், ட்ரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற் கொண்டவர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த ஜார்ஜ் பபடோ போலஸிடமும் (வெளியுறவு கொள்கை ஆலோசகர்) விசாரணை நடத்தியது. ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் இடம்பெற்றிருந்த ஜார்ஜ், ரஷ்யாவுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள் ளது. இதையடுத்து, ஜார்ஜை கைது செய்து 14 நாட்களுக்கு சிறையில் அடைக்க அமெரிக்க மாவட்ட நீதிபதி ரந்தோல்ப் மாஸ் உத்தரவிட்டார்.

Read more...

கடையடைப்பு மாத்திரந்தான் வழியா? ஏனைய வழிகள் பரிசீலிக்கப்பட்டனவா?

மட்டக்களப்பில் ஒரு கடையடைப்பு நடந்து முடிந்திருக்கிறது. பொதுமக்கள், ஆங்காங்கு தமது தேவைகளுக்காக சில இடங்களில் நடமாடியமை, தனியார் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தமை, பள்ளிக்கூடங்களில் மாணவர் வரத்துக் குறைந்திருந்தமை ஆகியவற்றை கொண்டு பார்க்கின்ற போது இது ஓரளவு வெற்றிதான், அதை நடத்தியவர்களுக்கு.

கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தவர்களை பொறுத்தவரை, புல்லுமலை தண்ணீர் போத்தல் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராக அவர்களால் நடத்தப்பட்ட இந்த கடையடைப்புக்கான காரணம் பொதுவில் மட்டக்களப்பில் உள்ள தமிழர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. காரணம் குறித்து பெரியளவில் விமர்சனங்கள் எதுவும் கிடையாது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என எவரும் இதனை எதிர்ப்பதாக பெரியளவில் கூறவில்லை. ஆனால், ஹர்த்தால், கடையடைப்பு என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை குழப்பும் ஒரு விடயம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதற்கும் வாய்ப்பு கிடையாது.

ஒரு காரியம் சட்டப்படி செய்யப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் நலனுக்கு அது பாதகமாக இருக்கிறது என்ற எதிர்ப்பு கிளம்பினால், அது குறித்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய முடியும். அதுவும் ஒரு மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை மக்கள் அதில் அதிருப்தி அடையும் போது அரசாங்கம் அதனை செய்வதற்கு அதிக கடப்பாட்டை உடையதாக இருக்கிறது. அத்துடன் இந்த விடயத்தின், இனவாதத்துக்கோ ஏனைய வாதங்களுக்கோ இடம்கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை.

ஆனால், இங்கு பிரச்சினை என்னவென்றால், இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் மற்றும் இதற்கு ஆதரவு வழங்கிய ஏனைய அரசியல்வாதிகள் ஆகியோரைப் பொறுத்தவரை, ஒரு கடையடைப்பு என்ற நடவடிக்கையை எடுத்து, பொதுமக்களை சிரமங்களுக்கு உள்ளாக்குமளவுக்கு போக முன்னதாக, இந்த விடயத்தில் எடுப்பதற்கு அவர்களுக்கு எத்தனையோ நடவடிக்கைகள் இருந்திருக்கின்றன. அவற்றை அவர்கள் செய்துவிட்டு, இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்களா, அல்லது ஆதரவு தெரிவித்தார்களா என்பதுதான் இங்கு கேள்வி.

இந்த அரசியல்வாதிகள் பலர் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அரசாங்கத்துடன் நல்ல உடன்பாட்டில் உள்ளவர்கள். தமக்கும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் இடையில் இருக்கும் உறவை, இப்படியான காரியங்களை ஆரம்பக்கட்டத்திலேயே முடிவுக்கு கொண்டு வந்து தீர்வுகாண அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதுதான் அரசியல். அதுதான் அரசியல் இராஜதந்திரம்.

பொதுவாகவே பாராளுமன்றத்தில் ஒரு விடயத்தை உரத்துப் பேசிவிட்டால் தமது கடமை முடிந்துவிட்டது என்ற ஒரு போக்கு அண்மைக்காலமாக அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. அங்கு பேசாமலேயே பல விடயங்களுக்கு அவர்களால் தீர்வு காணமுடியும்.

அவையும் முடியாவிட்டால், சட்ட வழியில் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று பார்த்திருக்க வேண்டும். நாடாமன்ற மட்டத்தில், தமக்கு உள்ள சிறப்பான தொடர்பு, மதிப்பு, செல்வாக்கை இவற்றுக்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். இவை எதுவும் நடந்ததற்கான சமிக்ஞை எதுவும் இல்லாமலேயே ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து மக்களுக்கு சிரமத்தை தருவது அவ்வளவு வரவேற்கத்தக்க விடயமல்ல.

இப்படியான விடயங்களுக்கு மக்கள் தமது ஆதரவைத் தந்ததன் மூலம் அவர்கள் தமது பொறுப்பை, பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு தமது “ஹோம்வேர்க்கை” முடித்துவிட்டு இந்த முடிவுக்கு வந்தார்கள் என்று எண்ணும்போது, இங்கு சங்கடமாகவே இருக்கின்றது.

அடுத்தகட்ட போராட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவாவது, இவை அனைத்தும் முயன்றுபார்க்கப்பட்டதா என்பதையாவது அரசியல்வாதிகள் மக்கள் முன்பாக வெளிப்படைத்தன்மையுடன் விளக்க வேண்டும்.

இல்லாவிட்டால், இந்த பிரச்சினைக்கு எவ்வளவோ போராட்டத்தை நடத்தியும் தீர்வு காணப்படமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடவும் முடியும். இப்படி தீர்வே இல்லாமல் போராட்டம் முடிவுக்கு வந்த மிகச் சமீப அனுபவம் நமக்கு பெரிதாகவே இருக்கிறது. அது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும். போராட்டங்களும் திசைமாறலாம்.


சீவகன் பூபாலரட்ணம் - அரங்கம்

Read more...

புதிய யதார்த்தம். ராஜ் செல்வபதி

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒருவருடத்துக்கு மேலான காலம் இருக்கின்றது. இருந்தாலும் சாத்தியமான வேட்பாளர்கள் போட்டியில் தமக்கான இடத்தை கைப்பற்றுவதில் பெரு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியினர், சுதந்திரகட்சியினர், பொதுஜன பெரமுனவினோர் தத்தமது பிரச்சாரங்களை ஆரம்பித்தும்விட்டனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவதற்காக தனது விருப்பத்தை கோடிட்டுகாட்டியிருக்கின்றார். ஐதேக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது உறுதியாகிவிட்டது. பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சஷ முன்னிலைப்படுத்தபடுகின்றார்.

ஆனால் இலங்கை அரசியல் என்பது ஆச்சரியங்களால் நிரம்பியது. எதிர்பாராத திருப்பமாக கூட்டு எதிர்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஷ மற்றொரு தவனைக்கு போட்டிட முடியும் என பிரகடனப்படுத்துகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட நிபுணர்கள் தத்தமது கட்சி சார்ந்து அரசியல் சாசனத்துக்குள் தலைகளை விட்டு துலாவிக்கொண்டுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சிலர் ஏற்கனவே தமது அபிப்பிராயங்களை கூறதொடங்கியும் விட்டனர்.

19வது திருத்தத்தின் பிரதான நோக்கமே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஷ எதிர்கால தேர்தல்களில் போட்டியிடுவதை தடுப்பதும் ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தை குறைப்பதுவுமே ஆகும் . 19-A ஆதரவாளர்களின் முகத்தில் புன்னகை தவழ்கின்றது. ஐதேக சற்று கவலையுடன் இருக்கின்றது. 19-A மற்றும் ஜனாதிபதி பதவிகாலம் பற்றிய அதன் புரிதல் முற்றிலும் வேறுபட்டுள்ளது. 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதே, நிறைவேற்று ஜனாதிபதியாக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மற்றொரு பதவிக்காலத்தைத் நாடுவதை தடைசெய்வதற்க்குதான் என்கின்ற வகையில் உயர் கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் எந்தவொரு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட முடியாது என்று அறிவிப்பதில் தனது நேரத்தை செலவழித்து கொண்டிருக்கின்ரார். இந்த விவகாரம் தொடர்பில் தற்போதை ஜனாதிபதியை தவிர வேறு எவரும் உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்கமுடியாது எனவும் ஜனாதிபதி வேட்பாளராகும் ஆசையில யாராவது தவறான தகவல்களை வழங்கி அதற்கு முயன்றால் ஜனாதிபதி மாளிகைக்கு செல்வதற்கு பதில் மூன்றுவருடங்களுக்கு சிறையில்தான் இருக்க வேண்டி இருக்கும் என ஜனாதிபதி சட்டதரணியாகவும் முன்னால் நீதி அமைச்சராகவும் தனது கருத்தை விஜயதாச முன்வைக்கின்றார்.

ஆனால் கூட்டு எதிரணி அல்லது பொதுஜன பெரமுனவின் சட்ட வல்லுனர்களோ விஜயதாச ராஜபக்ஷவின் இந்த கருத்தை புறந்தள்ளுகின்றனர். மாவட்ட நீதிமன்றத்தின்வாயிலாக தாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுக முடியும் எனபது அவர்களின் நம்பிக்கை. ஒரு சுவாரஸ்யமான சட்ட போராட்டம் ஒன்று தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. மேலும் உச்ச நீதிமன்றம் 19வது திருத்தத்தை எப்படி உரைபெயர்க்கப்போகின்றது எனபதுவும் ஆவலை தூண்டும் விடயமாக இருக்கின்றது.

மதிப்பு மிக்க கல்வியியலாளர் கலாநிதி நிகால் ஜெயவிக்கிரம உட்பட சட்ட வல்லுனரகள் மகிந்த ராஜபக்‌ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த தடைகளுமில்லை என கருதுவதாக கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்தரும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கமன்பில ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்சஷ ஆகியோர் எதிவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடைகள் எதுவும் இல்லை என்று சண்டே ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் கலாநிதி ஜெயம்பதிவிக்கிரமரட்ண கூறுகின்றார்.

19வது திருந்த்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இந்த தகுதி நீக்கத்திலிருந்து "புத்திசாலித்தனமாகவோ அல்லது கவனமின்றியோ” பாராளுமன்றாம் விலக்களிக்கவில்லை. பாராளுமன்றம் இதனை தெளிவுபடுதி கூறாதவரை இந்த குழப்பங்கள் இருக்கவே செய்யும்.

இதன்படி பார்த்தால் அடிப்படையில் நிறைவேற்றதிகாரம் அற்ற, குறியீடான- சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதவிக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கும் போது அதில் போட்டியிடும் தகுதி தற்போது உயிருடன் இருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுக்காவுக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் கிடைக்கும் என கருதலாம்.

இங்கே கலாநிதி ஜெயவிக்ரம கூறுவதில் ”அடிப்படையில் நிறைவேற்ரதிகாரம் அற்ற, குறியீடான- சம்பிரதாயபூர்வம்,” என்பதாதான் முக்கியனாது. இதனை அவர் தனது முன்னைய கட்டுரைகளில் கற்பனையான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை என குறிப்பிட்டுள்ளார்.

“…நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடரவேண்டும் அல்லது ஒழிக்கப்பட வேண்டும் எனறு அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அரசியல் வாதிகள் கத்தி கூச்சல்போட்டாலும் அவர்கள் உண்மையை கவனிக்க தவறுகின்றனர். 1978 அரசியல் யாப்பின்படி உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இப்போது இல்லை. 19வது திருத்தம் அதனை வினைதிறனுடன் இல்லாது செய்துள்ளது. இப்போது உள்ள ஜனாதிபதியால், தனது சொந்த விருப்பத்துக்கமைய, அமைச்சர்கள் தெரிவு செய்ய முடியாது. தான் விரும்பும் நேரத்தில் பாராளுமன்றத்தை கலைக்கவும் முடியாது. தன்னிச்சையாக செயல்பட்டு, நீதிபதிகளையோ, மூத்த அதிகாரிகள்ளையோ அல்லது சுயாதீன ஆணைக்குழுக்களையோ நியமிக்க முடியாது. ஜனாதிபதியின் இந்த அடிப்படை நிறைவேற்று அதிகாரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது ஜனாதிபதி என்பவர் ஒர் அடிப்படையான அரசு (அரசியலமைப்புச் சட்டத்தின்) தலைவராக மட்டுமே இருக்கிறார். ஜனாதிபதி சட்டதரணிகள் நியமனம், மகாணசபை நிர்வாகம் போன்ற சில அதிகாரங்களை வைத்திருக்கின்றார் என்பதற்காக நாடளாவிய ரீதியில் மிகுந்த பொருட்செலவில் தனியான ஒருதேர்தலை நடாத்தி ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்கின்ற கேள்வியும் எழுகின்றது…”
கலாநிதி ஜெயவிக்ரமவின் இந்த வாதமானது தண்ணீரை பிடித்து வைத்திருப்பது போன்றுள்ளது. இங்கே கேள்வி என்னெவென்றால் கூட்டு எதிர்கட்சியினர் கலாநிதி ஜெயவிக்ரமவின் இந்த வாதத்தை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுதான். கூட்டு எதிர்க்கட்சிதரப்பு சட்டவல்லுனர்கள் கலாநிதி ஜெயவிக்ரமவுடன் கருத்துடன் இணங்குகின்றனர் என்றால் மிகவும் குறைக்கப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே உள்ள தற்போதைய ஜனாதிபதி பதவியை அடைவதற்கு அவர்கள் ஏன மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள தனி குழுவாக இயங்குபவர்கள், அதிர்ப்தியாளர்கள், உட்கட்சி கலகங்களை தோற்றுவிப்பவர்கள் ஆகியோரை துண்டிவிடுவதே கூட்டு எதிக்கட்சியினரின் இப்போதைய அனுகுமுறையாக உள்ளது. சுதந்திர கட்சியின் பழைய உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபசவுக்கு விசுவாசமாகவே இருக்கின்றனர். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயாவை முன்னிறுத்துவதை அவர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. ஒருவேளை அவர்கள் கூட்டு எதிரணியில் இணைந்துகொள்வதாக இருந்தால் மகிந்தவின் “ மஜெண்டா துண்டாகவே” இருப்பார்கள். ஆகையால் மீண்டும் மகிந்தவை ஜனாதிபதி ஆக்குவதற்காகவே தங்களது பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள்.

மகிந்த இன்னும் ஒருமுறை பதவிக்கு போட்டியிடலாம் என்கின்ற கோரிக்கை கூட்டு எதிரணியினரிடம் மட்டுமல்ல அவரின் மீள்வருகையை தடுக்க நினைக்கும் ஐதேகவினரையும் அணிதிரளும் திருப்பு முனைனையாகியுள்ளது. கட்சிதலைமையில் மாற்றத்தை விரும்பும் ஐதேக கட்சியின் அதிர்ப்தியாளர்கள்கூட ஒரு நல்ல நிர்வாகத்தை நோக்கி பிரதமர் ரணில் பின்னே அணிவகுக்கின்றனர். கூட்டு எதிரணிக்கும் பொதுஜன பெரமுனவினருக்கும் மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்பதால் தங்களது இந்த கோரிக்கையை பிரபலயபடுத்ததுவதன் மூலம் பயனடையலாம் என நினைக்கின்றனர்.

மகிந்தவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் முயற்சியில கூட்டு எதிரணி வெற்றி பெற்றுவிட்டால் தேர்தல் வெற்றியை தீர்மாணிக்கும் காரணியாக உள்ள ”மிதக்கும் வாக்காளர்கள்” அதற்கு எவ்வாறு தமது பிரதிபளிப்பை வெளிப்படுத்த போகின்றனர்? அவர்களின் பெரும்பான்மையானோர நல்லாட்சி கூட்டணியை நிராகரிக்கின்றனர். ஒருவேளை சிலர் கூறுவது போன்று கடந்த உள்ளாட்சி தேர்தலின் வெளிப்பாடு ஒரு சமிஞ்சையாக இருக்குமானால் தோற்றுப்போன ஜனாதிபதியாக மகிந்த அவர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இல்லாவிட்டால் அவர் தலைமைதாங்கிய பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரமானது ஐதேகவையும், சுதந்திர கட்சியையும் கடந்த பெபிரவரியில் தோற்கடித்திருக்க முடியாது. ஆனால் பொதுஜனபெரமுனவினர் யாரை தங்கள் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுந்துகின்றனர்? மகிந்தவா அல்லது கோத்தாவா? முதலில் அவர்கள் இதற்கு ஒரு விடையை கண்டுபிடித்தாக வேண்டும். வாக்களிக்கும் பொதுமக்களின் அபிப்பிராயமாகத்தான் அது இருக்க வேண்டும். மாறாக கூட்டு எதிரணியின் அல்லது பொதுஜன பெரமுனவினரின் அபிபிராய செல்வாக்காக அந்த பதில் இருக்க முடியாது.

ஒரு அரசியல்வாதியை காட்டிலும் கோதபாய ஒரு இரக்கமற்ற ஆனால் திறமையான பொது அதிகாரியாக இருப்பதாக பரவலாக கருதப்படுகிறது. அரசியலை தொழிலாகவே கொண்டுள்ள போதுமான அரசியல்வாதிகள் ஏற்கனவே இருக்கும் போது சீர்கேடுகளை துடைத்து அகற்றிவிட்டு கடுமையான ஒழுக்க நெறிகளை அமுழ்படுத்தி நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்ககூடிய ஒரு தலைவனுக்கான தேவை உள்ளதா? பிரிவினைவாதத்தால் விரக்தியுற்ற மக்களின் உணர்வுகள், கொள்கையற்ற அரசியல், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு உயிர்கொடுக்காத அரசியல்வாதிகள், நாட்டின் முன்னேற்றதின் மீதான அக்கறை போன்றன இணைந்து மக்ரோன் வெற்ற பெற்ற போது இருந்த பிரான்ஸ் போன்றதொரு நிலையை இப்போது இலங்கையிலும் தோற்றுவித்திருக்கின்றது. இதனை சீர் செய்ய கோத்தபாயாவே பொருத்தமானவர் என கூட்டு எதிரணியினர் சிலர் நம்புகின்றனர்.

ஆனால் கோத்தபாய சில விடயங்களில் தயக்கத்தையே வெளிபடுத்துகின்றார். அவரது இரக்கமற்ற செயல்திறன் அரசியலில் ஒரு மூலதனமாக இருக்க கூடும். ஒரு மனிதனாக அவர் தனது வழியை புல்டோசஸ் கொண்டு மொழியியல் ரீதியாகவும், தனக்கான அடையாளமாகவும் உருவாக்கி கொள்ள தெரிந்தவர். நகர்ப்புற பகுதிகளில் தனது தூய்மையாக்கல் திட்டங்களை எளிதாக்க கட்டடங்களை எவ்வாறு இடித்து தள்ள உத்தரவிட்டார் என்பது பற்றிய சந்தேகம் தேவையில்லை. எல்லாவற்றையும் இராணுவ துல்லியத்துடன் செய்ய அவர் விரும்புகிறார். கனிவான போக்கு அவரது பண்பு கிடையாது. அவர் ஒரு பொது ஊழியராக செயல்பட்ட விதத்தை பார்க்கும்போது, ஒருவேளை அவர் ஜனாதிபதியாக இருந்திருந்தால் நிலைமை என்னவாக இருக்கும் என்று யாராவது தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள முடியும். இதனை அவர் உணர்ந்துள்ளதாலேயே அவரின் தயக்கம் வெளிப்படுகின்றது. மகிந்த ஆட்சியில் இருந்தது போன்று இனிமேல் ஜனாதிபதி பதவி அதிகாரம் மிக்கதாக இல்லாமல் போகலாம். ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை விட அதிக அதிகாரங்களைக் கொண்டிருப்பது என்னவோ நிச்சயமானது.

ஏமாற்றமடைந்துள்ள முன்னணி பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிலர் கோத்தபாய ஜனாதிபதி பதவியை பாதுகாத்து, நாட்டை இரும்பு கரம் கொண்டு ஆள வேண்டும் விரும்புகின்றனர். மதகுரு ஒருவர் சமீபத்தில் சூடான நீரில் இறங்கி நின்றுகொண்டு கோத்தபாய ஹிட்லரை போன்று நடந்துகொள்ள வேண்டும், தேவைப்பட்டால் தற்போதைய அரசியல் பொருளாதார பின்னடைவுகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும் என கூறினார். ஆனால் கேள்வி என்னவென்றால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் உள்ள சாதாரண மக்கள் பெரும்பான்மையானோர் இந்த சூதாட்டத்தை பங்குகொள்ள விரும்புவார்களா என்பதே?

மஹிந்த என்ன செய்தார் அல்லது குறைந்த பட்சம் அவர் என்ன நினைக்கிறார் என்பதையிட்டு மக்கள் அறிவர்கள். அவர் இன்னும் மக்கள் மத்தியில் செல்வாக்குடையவராக இருக்கின்றார் என்பதற்கு பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றியே சாட்சியாக உள்ளது. அவருக்கு வாக்களிப்பது என்பது திசை தெரியாத ஒரு பயணம் அல்ல என்பது வெளிப்படையான ஒன்று. மக்களின் இந்த எண்ணமே மஹிந்தவின் பலமாகும். ஆனால் 19-A ஐ உச்சநீதிமனறம் மகிந்தவுக்கு சார்பாக உரைபெயர்த்து அவர் மீண்டும் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டால் முன்பு தான் அதிகாரத்தில் இருந்தபோது செய்தவற்றில் இருந்து வித்தியாசமாக நடந்துகொள்ளவார் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் முன்பு செய்ததை விட அதிகமாக செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனரா? மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்க கூடாதா? தனது ”இமேஜை” மீள் உருவாக்கம் செய்துகொண்டு ஒரு ஜனாதிபதி வேட்பாளராக பொதுமக்கள் மத்தியில் மீளவும் தன்னை சந்தைபடுத்தி கொள்வாரா? அவரின் தற்போதைய செல்வாக்கு வாக்குகளாக மாறி ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்குமா? கூட்டு எதிரணியினர் அல்லது பொதுஜன பெரமுனவினரின் முன் வைக்கப்படும் கேள்விகளாக இவை உள்ளன. உண்மையில் இவை அனைத்தும் அவர்கள் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளும் கூட.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை கீழே தள்ளி விழுத்தும் அதிகாரத்தை ஐதேக 2015ல் பெற்றிருந்தது. அதாவது 19வ்து திருத்ததின் மூலம் பிரதமர் பதவியை பலம்பொருந்திய பதவியாக்குவதை தனது குறுகியகால தந்திரோபாயமாக அக்கட்சி கொண்டிருந்தது. உண்மையில் தங்களுக்கு என்ன தேவையாக உள்ளது என்பது பற்றி அறியாதவர்களாகவே அவர்கள் இருந்தது வெளிப்படையாக தெரிந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதவியை அடைவதற்கான ஒரு படிக்கல்லாக பிரதமர் பதவியை பயன்படுத்திகொள்ள ரணில் அப்போது விரும்பினார். அதே வேளை நிறைவேற்று ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை குறைப்பதன் மூலம் தனது பிரதமர் பதவியில் தன்னை பலப்படுத்தியும் கொண்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க

உண்மையில் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி பதவி ஐதேக வின் உத்தரவின் பேரில் இன்னும் அதிக அதிகாரங்களை இழந்துவிடும் நிலையில் இருந்தது. இன்று நடைமுறையில் ஜனாதிபதியை விட பிரதமரே அதிக அதிகாரங்களை கொண்டவராக இருக்கின்றார். ஜனாதிபதியுடன் நேரடி மனவருத்தங்கள் ஏற்பட்டு அது நல்லாட்டசி அரசாங்கம் சீராக இயங்க முடியாத நிலைக்கு வழிவகுக்க கூடும் என்பதால் தனது அதிகாரங்களை பயன்படுத்துவதில்லை என பிரதமர் தீர்மானித்திருக்கின்றார். இந்த அரசாங்கம் கவிழுமாக இருந்தால் ஜனாதிபதி சிறிசேனாவால் ஐதேகவுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படபோவதில்லை. மாறாக சுதந்திரகட்சிக்குள் அவரது பிடிதளர்ந்து போய் ராஜபக்சாவை மேலும் பலபடுத்திவிடும். இதையே தனது ஆயுதமாக சிறிசேனாவுக்கு எதிராக பிரயோகிக்க ஐதேக விரும்புகின்றது.

ஆனால் எதிர்காலத்தில் ஒருபிரதமர் அரசியல்சாசனத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தும் போது ஜனாதிபதி பதவி எவ்வளவு பலவீனமானது என்பது தெரியவரும். ரணில் ஜனாதிபதியாக வெற்றிபெற்றுவிட்டால் பிரதமர் பதவிக்காக அவர் தனக்கு நெருக்கமான ஒருவர் வருவதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி பதவியில் அவர் எல்லாவற்றுக்கும் வரப்போகும் பிரதமருடன் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கும். ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர்தான் பிரதமராவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதுதான் ஐதேகயை கவலையடைய செய்யும் விடயமாகும்.

முரண்பாடாக, பிரதமர் விக்கிரமசிங்க, இந்த புதிய யதார்த்தை புறக்கணித்து, அடுத்த ஜனாதிபதி தேர்தல் போட்டியில் தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளதாகவே தெரிகின்றது. இதற்கிடையில் சிறகுகள் முறிக்கப்பட்ட ஜனாதிபதி பதிவியில் இருக்கும் மைத்ரிபால சிறிசேனா அடுதத பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவியை தொடர்பில் அதிக கவனம் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றார். பதவியில் தொடர இரண்டாவது சந்தர்ப்பத்தை அவர் ஒருவேளை பெற்றுகொண்டால் வரப்போகும் பிரதமரால் அவர் சிறுமை படுத்தப்படகூடும். ஐதேக அல்லது பொதுஜன பெரமுனவில் இருந்து ஒருவர் பிரதமராகிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும்?

இதுதான் மகிந்தவுக்கும் பொருந்தும். மீண்டும் அவர் ஜனாதிபதியாகினால் கூட இப்போது மைத்திரியின் நிலையே அவருக்கும் ஏற்படும். பிரதமரின் நிழலிலேயே காலத்தை கடத்த் வேண்டி இருக்கும். எதிர்கால ஜனாதிபதியால் அரசியல் அமைப்பை மாற்றி தனது பதவியை அதிக பலமுளளதாக மாற்றிவிட முடியும் என்கின்ற நிலை இருப்பதாக தெரியவில்லை.

அதிசயமாக, இந்த 'புதிய யதார்த்தத்தை' ஜனாதிபதி கனவில் மிதப்பவர்களில் கவனிக்காமலேயே உள்ளனர். அல்லது அவர்களை இந்த விடயம் இன்னும் சென்றடையவில்லை. 19வது திருத்தத்தை கவனமாக அவர்கள் படிக்க வேண்டிய நேரம் இதுவே.

Read more...

ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களில் வெற்றிபெற முடியாது.

2030 ஆண்டு வரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களில் வெற்றிபெற முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து அகற்றுவதற்காக கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை எடுத்துவந்தாலும் அவர் பிரதமர் பதவியில் இருந்தும் கட்சித்தலைவர் பதவியில் இருந்தும் விலக மாட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

பொலிஸ் சீருடையில் நடனமாடிய பூஜித. அவமானமாம் கோட்டா

இலங்கை பொலிஸ் மா அதிபரின் நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி எசல பெரேராவின் பொலிஸ் சீருடையில் நடனமாடி தனது பதவிக்கு அவர் இழுக்கு ஏற்படுத்தி விட்டார் என்று கூறினார்.

இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கூறிய அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யுத்தத்தை மட்டுமல்ல யுத்தத்துக்கு பின்னரான அபிவிருத்தியையும் மேற்கொண்டார் என்றும் அதனால் தான் அத்தகைய ஒருவர் நாட்டுக்கு தலைவராக வரவேண்டும் நேரும் அவர் குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்ஷவை எவ்வாறு சிறைச்சாலை சீருடையை அணியவைப்பது என்றே முழு அரசாங்கமும் சிந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டிய கோத்தபாய ராஜபக்ஷ போதைப்பொருட்களும் பாதாள உலக நாட்டை ாலும் நிலையில் இவாறு சுதந்திரம் இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

Read more...

விக்கி அரசியலில் கற்றுக்குட்டியாம்! ரெலோ அவருடன் இணைந்து செயற்படாதாம்! கூறுகின்றார் சிறிகாந்தா

முதலமைச்சர் நேற்று அரசியலுக்குள் வந்தவர். அவருடன் நாம் இணைவோம் என எதிர்பார்த்தால் அது சிறுபிள்ளைத்தனமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும், பேச்சாளருமான சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பனர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், சிறிகாந்தா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலமைச்சருடைய கட்சியில் நாம் இணைவோம் என தெரிவித்திருந்தால் அதையிட்டு நாம் அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் எங்களால் நன்கு அறியப்பட்டவர். நேற்று அரசியலுக்குள் வந்தவர். அவர் விரும்பினால் கட்சி ஆரம்பிக்கலாம். அது அவருடைய உரிமை. ஆனால் நாங்கள் அவருடன் இணைந்து கொள்கிறோம். இணைந்து கொள்வோம் என அவர் எதிர்பார்த்தால் அது என்னைப் பொறுத்தவரை சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டில் நின்று கொண்டிருக்கின்றோம். நாங்கள் கூட்டமைப்புக்குள்ளே பயணிக்கின்றோம். ஆனால் ஒரு விடயத்தை விக்கினேஸ்வரன் அவர்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உங்களை நம்பித் தான் முதலமைச்சராக முன்நிறுத்தினோம். எமது மக்களும் அபரிவிதமான ஆதரவைத் தந்தார்கள். எமது மக்கள் உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பை நீங்கள் தவறாக எடை போட்டு விடக் கூடாது. அவர்கள் எதிர்பார்ப்புக்களுடன் கூடிய ஒரு மதிப்பை வைத்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் கூட்டமைப்புடன் நீங்கள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். யார் உங்களுக்கு எதைச் சொன்னாலும், எந்தப் போதனையைக் கொடுத்தலும் நீங்கள் சரியாக சிந்தித்து அறிவுபுர்வமாக முடிவெடுத்து எமது இனத்திற்கு எது நல்லது என்று தீர்மானத்து கூட்டமைப்பினுடைய ஒற்றுமையை உங்களுடைய எந்தவொரு செயற்பாடும் பாதிக்காத விதத்திலே நீங்கள் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பது தான் எமது மக்களுடைய விருப்பம் எனத் தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் அவர்களது கருத்துக்கள் கூட்டமைப்புக்குள் உடைவை ஏற்படுத்துகின்றதா என கேள்வி எழுப்பிய போது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகந்தா தெரிவித்ததாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உடைவை ஏற்படுத்துவதாக சுமந்திரன் அவர்களை நாம் கருதவில்லை. அப்படி நாம் கருதி இருந்தால் இன்றைக்கு நான் தம்பி சுமந்திரனை ஒரு பிடி பிடித்திருப்பேன். ஆனால் நாங்கள் அப்படி நினைக்கவில்லை. அவருடைய கருத்துக்கள் ஆத்சேவகரமாக இருக்கிற பொழுது நாங்கள் எங்கள் கருத்துக்களை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக ரெலோ தலைமை, புளொட் தலைமைகளைப் பற்றி அவர் கூறிய கருத்துக்களையிட்டு நாம் எங்களுடைய கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்திருக்கிறோம். ஆனால் அதற்காக அவர் வெளியிட்ட கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டவை என்று நாங்கள் கருதவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான சிறிகாந்தா மேலும் தெரிவித்தார்.

Read more...

புல்லுமழை. பசீர் சேகுதாவூத்

மட்டக்களப்பில் தண்ணீர் போராட்டம் பிரவகித்திருக்கும் இந்தக் காலத்தில் பலரும் பல விதமாக இது பற்றி எழுதியும், செயல்பட்டும் வருகிற போதினில் இந்த மண்ணில் வாழும் நான், கருத்துச் சொல்லாதிருப்பது எனது நெஞ்சாங்கூட்டை வாளால் அறுப்பது போல் உணர்வதால் எழுதுகிறேன்.

உலகின் எல்லாப் பாகங்களிலும் குடிநீர் தட்டுப்படத் தொடங்கிவிட்டது.நீர் சூழ் உலகில் 15% மட்டுமே நன்னீர் என்பதை அறிவோம். நன்னீரைப் புதுப்பிக்கும் ஒரே வழியாக மழை மட்டுமே காணப்படுகிறது.மழை நீர் பூமிக்கடியிலும், நீரேந்து நிலைகளிலும் சேமிக்கப்பட்டு மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பனி மலைகள் உருகுவதாலோ, மலை முகடுகளிலிருந்து ஊற்று வீழ்ச்சியாகவோ மட்டக்களப்பு மக்களுக்கு நீர் கிடைப்பதில்லை. நமது மாவட்டத்தில் மழை வீழ்ச்சி குறைவடையத் தொடங்கி நீண்ட காலமாயிற்று என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உலகில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் பொருளாகி பல்லாண்டுகள் கடந்துவிட்டன.

பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் தாதுப் பொருட்களைக் கிண்டி எடுத்து பணமாக்கி வங்கிகளில் முதலீடு செய்தன. இப்போது தாதுப் பொருட்கள் முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டதனால், தண்ணீரைக் கிண்டி எடுத்துப் பணமாக்க கம்பனிகள் முயல்கின்றன.இவ்வாறான பல திட்டங்களில் இலங்கை அரசு பல ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளது.இவ்வாறே உள்ளூராட்சி நிறுவனங்களும் இது விடயத்தில் சோரம் போயுள்ளன. இவ்வாறு மக்கள் நலனுக்கு எதிராக போத்தலில் நீரை அடைத்து விற்கும் கம்பனிக்கு அனுமதி அளித்ததனால் சோரம் போயுள்ள உள்ளாட்சி நிறுவனங்களில் ஏறாவூர் பற்று பிரதேச சபையும் இணைந்துகொண்டுள்ளது.

மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகவே இடம்பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் அரசியல் போர் தண்ணீருக்கானது எனக் காட்ட முற்படும் இரு தரப்பையும் சேர்ந்த பிற்போக்கு அரசியல்வாதிகளையும் மக்கள் இனங்காண வேண்டும்.

1) தண்ணீரைத் தனியார்மயப்படுத்த அனுமதிக்க முடியாது.

2) உலகவங்கி 1997 இல் தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பொலிவியா நாட்டுக்கு நிதியுதவி அளித்ததைப் போல இலங்கையில் செயல்பட அனுமதிக்க முடியாது.

3) தண்ணீர் விற்பனைப் பண்டமல்ல, அது மக்களுக்கான இயற்கையின் கொடையாகும்.

மேலே குறிக்கப்பட்ட மூன்று அடிப்படைகளிலும் இருந்து வழுவுதல் மனுக்குல விரோத செயல்பாட்டுக்கு உதவுதலாக அமையும்.

மேற்சொன்ன அனைத்து உண்மைகளுக்கும் அப்பால் புல்லுமலையில் நீரெடுத்து போத்தலில் அடைத்து விற்கும் கம்பனி ஒன்றின் முன்னைடுப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர் மற்றும் ஆதரவு நிலைப்பாடுகள் காணப்படுவதை அவதானிக்கிறேன்.

இயற்கையை நேசிப்பதாகவும், தமிழர் பூமியைக் காப்பதாகவும், தமிழ் உணர்வாளர்கள் போலவும் காட்டிக்கொண்டு மட்டக்களப்பில் பிரதேசத் தமிழரசியல் குழு ஒன்று, இந்த நீரைச் சுரண்டும் முயற்சியை முஸ்லிம் சமூகம் செய்வதாக தந்திரமாகப் பிரச்சாரம் செய்கிறது.

வழமையான முஸ்லிம் வணிக அரசியலாளர்கள் - புல்லுமலைப் போத்தல் நீர் விவகாரத்தை எதிர்ப்பதை முஸ்லிம் என்ற அடையாளத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் மக்களை உணர்ச்சிக் கொம்பில் ஏற்றி இலாபம் சம்பாதிக்க முயல்கிறார்கள்.

நமது நாட்டில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட கடந்த பல பத்தாண்டுகளாக மூன்று இனத்தவர்களாலும் தீவிர உணர்ச்சி அரசியல் செய்யப்பட்டு வருகிறது. அரசியலில் தானாக உணர்ச்சி வசப்படுதல் நன்மையை நோக்கியதாகவும்- வேறெவராலும் உணர்ச்சிவசப்படுத்துதல் தீமையை நோக்கியதாகவும் அமையும் என்ற அனுபவ ரீதியான எதார்த்தத்தை பெரும்பாலோர் திரிகரண சுத்தியுடன் இன்னும் உணரவில்லை.

இந்த நிலைமையில் புல்லுமலை நீரரசியல் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.புல்லுமலை தமிழ் சிங்கள எல்லைப் பிரதேசமாகும் இங்கே தமிழ் முஸ்லிம் முரண்பாடு ஆழமாவது அப்பகுதியில் அரசின் ஆதரவுடனான சிங்களக் குடியேற்றத்தை இலகுவாக்கும் என்பதை உணர்தல் வேண்டும்.

தமிழரசியல்வாதிகளே!

சமூகத்தளத்தில் வேலை செய்வது என்பதையும், ஆட்சித் தளத்தில் வேலை செய்வது என்பதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். நீங்கள் இந்த நல்லாட்சியில் எதிர்க்கட்சியில் இருந்தவாறே ஆளுங்கட்சி உறுப்பினர்களாகச் செயல்படுகிறீர்கள் என்பதையும் மறக்கவேண்டாம்.ஆகவே, இந்த நீர் கொள்ளையை நிறுத்துமாறு ஜனாதிபதியையும், பிரதமரையும் கோருங்கள். ஏனெனில் இத்திட்டத்துக்கான அனுமதியை அரசாங்கமே வழங்கியுள்ளது. இந்தப் பிரச்சினை ஈழ தேச மக்களுக்கும் ஒரு கம்பனிக்கும் இடையிலான பிரச்சினையே அன்றி தமிழ்- முஸ்லிம் ஈழவர்களுக்கிடையிலான பிரச்சினை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம் குழுநிலை அரசியல்வாதிகளே!

நீங்கள் ஜனாதிபதியையும், பிரதமரையும் ஆராதித்து செய்யும் ஆட்சித்தள அரசியலை ஒத்தி வைத்து சமூகத்தள அரசியலை செய்வீர்களானால் பிரகாசம் பிறக்கும். ஒரு பன்னாட்டு முஸ்லிம் கம்பனிக்கு உதவுவதைவிடவும் தமிழ் முஸ்லிம் உறவை மீளக் கட்டி எழுப்புவதற்கு உதவுவதும், இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதும் பல நூறு மடங்கு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பிளாஸ்டிக் போத்தல்களில் அடைத்த தண்ணீரைக் குடிப்பது மிகப் பெரும் சுகாதாரக் கேடாகும்.இது எங்கும் சொல்லப்படவில்லை. பிளாஸ்டிக் பாவனையை இலங்கையில் தடை செய்துள்ள இந்த அரசாங்கம் எப்படி பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அடைத்து விற்கும் கம்பனிக்கு அனுமதி வழங்கும் என்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் தைரியம் இந்த அரசியல்வாதிகளுக்கு ஏன் வரவில்லை?

மேலும், தியேட்டர் மோகனை இந்தப் போராட்டத்திற்கு முன்னிலைப்படுத்தியது மாபெரும் தவறாகும்.இவரது நடவடிக்கைகள் பலவற்றின் காரணமாக முஸ்லிம்கள் இவரைத் தங்களுக்கு எதிரானவர் என்று கருதுகிறார்கள். இவர் முன்னர் கிழக்கு மாகாணத்தின் ஆழும் தரப்பாக இருந்த சந்திரகாந்தனின் விடுதலைப் புலிகள் மக்கள் கட்சியின் (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி) முக்கிய பிரமுகராக இருந்தார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மத்தியில் ஆட்சியிலமர்ந்த பின் அக்கட்சியின் அமைப்பாளராக உள்ளார்.தன்னை தனது சொந்தத் தேவைக்கேற்ப ஆழுங்கட்சியின் பிரமுகராக மாறிக்கொள்ளும் இவர், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஏறாவூர் பற்றில் கட்சி தொடர்பான விடயங்களில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார். ஆழுங்கட்சிகளை அவாவி நிற்கும் மோகன் ஏன் இந்த வாய்ப்பை மக்கள் நலனுக்காகப் பாவிக்க முயலவில்லை? இவர் பிரதமரிடம் நீர்ப்பிரச்சினையை எடுத்துக் கூறி கம்பனியின் நடவடிக்கைகளைத் தடை செய்திருக்கலாமே! ஏன் அம்முயற்சியைச் செய்யவில்லை?

தமிழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நீர்க் கொள்ளையின் பாதிப்புகளை இரு சமூகங்களுக்குள்ளும் எடுத்துச் சொல்லி ஹர்த்தாலை இரு சமூக மக்களும் ஒன்றித்துச் செய்திருந்தால் அது அரசுக்கான சரியான அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்.

எதிர் காலத்தில் இவ்வாறு ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு தமிழர்களுக்குள்ளும், முஸ்லிம்களுக்குள்ளும் மூன்றாவது அணிகளின் தோற்றமும் இவ்வணிகளின் கூட்டும் அவசியம் என்பதைப் புல்லுமலை நீர் பிரச்சினை நமக்கு உணர்துகிறது. இன்னும் பல தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளில் கிடைத்த பாடமும் இதுதான். ஆனால் நாம் இன்னும் அனுபவங்களில் இருந்து கிடைத்த பாடங்களைக் கணக்கில் எடுக்கத் தொடங்கவில்லையே!

Read more...

Saturday, September 8, 2018

ஐயோ! முழுக்கூட்டமைப்பும் சேர்ந்து எனக்கு அடிக்கிறாங்கள். அழுகின்றார் விக்கி!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசராவார். இவர் வட மாகாண முதலமைச்சராக சபையின் அமைச்சர்களில் ஒருவரான டெனீஸ்வரன் உட்பட சிலரை பதவி நீக்கம் செய்திருந்தார்.

தம்மை பதவி நீக்கியது சட்டத்திற்கு முரணானது என முன்னாள் நீதியரசருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார் டெனீஸ்வரன். பதவிநீக்கம் செய்தது சட்டத்திற்கு முரணனது என்றும் அவர் தொடர்ந்தும் அமைச்சராக நீடிக்கலாம் என்றும் நீதிமன்று தெரிவித்திருந்தது.

குறித்த நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற முன்னாள் நீதியமைச்சர் மறுத்து வந்த நிலையில், முன்னாள் நீதியமைச்சர் நீதிமன்றை அவமதிக்கின்றார் என வழக்கு பதிவு செய்திருந்தார் டெனீஸ்வரன். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முதலமைச்சர் தரப்பு சட்டவாளர் கனகஈஸ்வரன், மேலதிக எதிர்ப்புகளை சமர்ப்பிக்க தமக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியதை அடுத்து, வரும் செப்ரெம்பர் 18ஆம் நாள் வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

வரும் 18ஆம் நாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஏனைய எதிர்மனுதாரர்களான அமைச்சர்கள் அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோரையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை செல்லாது என்று ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஒக்ரோபர் 9ஆம் நாள் வரை நீடிக்கவும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த தவணையின் போது இரண்டு நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

எனினும் இந்த உத்தரவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடைமுறைப்படுத்தாத நிலையில், அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றை டெனீஸ்வரன் தரப்பு சட்டவாளர் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்ற விடயங்களை முடித்துக்கொண்டு வெளியேறிய முன்னாள் நீதியரசர், தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.

இதேவேளை, தன்னூடாக முதலமைச்சர் விக்னேஸ்வரனை எம்.ஏ. சுமந்திரன் பழி வாங்குவதாக கூறப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை எனவும் வடமாகாண சபை உறுப்பினர் பா. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளதுடன் 'விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு தற்போது அமைச்சர்களாக இருக்கும் நால்வரும் துணை போவதாகவம் அவர்; கூறியுள்ளார்

Read more...

இராணு முகாம்களின் எண்ணிக்கை தெரியப்படுத்தினால் அதற்கேற்ப செயற்படுவாராம் ரணில்.

வட-கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை குறைப்பது தொடர்பில் பாராளுமன்றில் பேசப்பட்டபோது, முகாம்களின் எண்ணிக்கையை எமக்குத் தெரியப்படுத்தப்படுமாயின் அதற்கேற்ப நாம் செயற்படுவோமெனப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவியுயர்வு பிரச்சினையில்லை. இது இராணுவத்தின் உள்ளக மறுசீரமைப்பாகும். அதில், ஜனாதிபதியும் நானும் தலையிடவில்லை என்றார்.

இராணுவ முகாம்கள் மற்றும் படைவீர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுந்த சர்ச்சையையடுத்து பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவத் தளபதியின் தீர்மானத்துக்கமையவே, படைகளில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல பதவி நிலைகள் உள்ளன. அவை எச்சந்தர்ப்பத்திலும் குறைக்கப்படமாட்டாது என்று தெரிவித்த பிரதமர், முகாம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. எமக்கு முகாம்களின் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துங்கள். அதற்கேற்ப நாம் செயற்படுவோம் என்றார்.

படைகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது வழமையானதொரு விடயமாகும். அதற்கேற்பவே, தற்போதும் படையினர் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நானும் ஜனாதிபதியும் தலையிடுவதில்லை என்றார்.

இதேவேளை, ஆவாக் குழுவினர் பயங்கரவாதிகள் அல்லர். அவர்களை பொலிஸாராலேயே கையாள முடியும். இதில் சட்டமும் ஒழுங்கும் பிரச்சினையே உள்ளது எனவும் தெரிவித்த பிரதமர், முகாம்கள் மற்றும் படையினர் விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சியினர், இராணுவத் தளபதியுடன் சந்தித்துக் கலந்துரையாடலாம் என்றார்.

Read more...

40000 பேர் கொல்லப்பட்டிருந்தால் உடலங்களை அகற்ற மட்டும் ஒரு படையணி தேவைக்பட்டிருக்கும். பொன்சேகா.

இறுதி யுத்தத்தின்Nபோது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற கூற்று முற்றிலும் பொய்யானது என்றும் அவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இறந்து போயிருந்தால், முன்னோக்கி சென்ற எமக்கு அந்த சடலங்களை அப்புறப்படுத்த தனியான சேவையை ஏற்படுத்த நேரிட்டிருக்கும் என்றும் அப்படியான நிலைமை இருக்கவில்லை என இறுதி யுத்தத்தின்போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறியுள்ள அவர்:

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23 ஆயிரம் உறுப்பினர்களை இராணுவம் கொன்றதாக தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளை சேர்ந்த 23 ஆயிரம் உறுப்பினர்களை இராணுவத்தினர் கொன்றனர். மேலும் 12 ஆயிரம் உறுப்பினர்களை கைது செய்தோம். போர் நடைபெற்ற இறுதி வரையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் செயற்பட்டது. பாதிக்கப்படும் நபர்களை இந்த பக்கம் கொண்டு வர அவர்களின் கப்பலும் இயங்கியது.

போரின் இறுதி இரண்டு வாரங்கள் வரை அந்த கப்பல் இயக்கப்பட்டது. எனினும் 30 ஆயிரம் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அப்போதும் தகவல் வரவில்லை. அப்படி பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால், புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி பிரதேசங்களில் தோண்டும் இடங்களில் எல்லாம் எலும்பு கூடுகள் இருக்க வேண்டும். எனினும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.

சாதாரண மக்கள், புலிகளின் பதுங்கு குழிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நாங்கள் கைது செய்தவர்களில் ஒரு பெண் இருந்தார். அவர் ஒரு ஆசிரியை. விடுதலைப் புலிகளால், அந்த ஆசிரியை மற்றும் மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டு, மன்னாரில் அவர்கள் பதுங்குகுழியில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதனால், 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பொதுமக்கள் இறந்திருக்கலாம்.

40 ஆயிரம் என்ற எண்ணிக்கை பொய்யானது. அவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இறந்து போயிருந்தால், முன்னோக்கி சென்ற எமக்கு அந்த சடலங்களை அப்புறப்படுத்த தனியான சேவையை ஏற்படுத்த நேரிட்டிருக்கும். எனினும் அப்படியான நிலைமை இருக்கவில்லை.

அதேபோல் 2015 ஆம் ஆண்டு 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பாதுகாப்பு குறித்து எங்களுடன் அதிகமாக கலந்துரையாடினர். அதற்கு பின்னர் என்னுடன் பாதுகாப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான போரில் 23 ஆயிரம் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனரா? அல்லது இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டார்களாக என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பொன்சேகா, இறுதிக்கட்டப் போரில் 23 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பில் சுமார் 35 ஆயிரம் பேர் இருப்பதாகவே எமக்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தன. புலிகளின் வானொலி தொடர்புகள் மூலம் தினமும் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை நாங்கள் புலனாய்வு பிரிவினர் ஊடாக பெற்றுக்கொள்வோம்.

தினமும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 23 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்னர். இறுதி போர் இரண்டு வருடங்கள் 9 மாதங்கள் வரை நடைபெற்றன. இந்த காலத்திலேயே 23 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட புலிகளின் உறுப்பினர்கள், அந்த அமைப்பில் குறுகிய கால பயிற்சிகளை பெற்றவர்கள். இவர்கள் பொல்லுகளை வைத்து கொண்டு பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

முதியோருக்கும் புலிகள் பயிற்சிகளை வழங்கியிருந்தனர். இறுதிக்கட்டத்தில் புலிகள் அனைவருக்கும் பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.


Read more...

புலிகளை மீண்டும் அழைத்த விஜயகலாவை அழைக்கின்றது நீதிமன்று.

புலிகளமைப்பு இலங்கையிலிருந்த காலத்தில் இந்நாட்டில் குற்றச்செயல்கள் இடம்பெறவில்லை என்றும் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் கருத்துரைத்ததுடன் அவர் பதவியிழந்தது யாவரும் அறிந்தது.

தெற்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த குறித்த சம்பவம் தொடர்பில் விஜயகலாவிற்கு எதிராக வழக்கு தொடர்பு செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருந்தார் சபாநாயகர்.

இந்நிலையில் விஜயகலாவிற்கு எதிராக வழக்கு தொடருமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுதந்தரவுக்கு சட்டமா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விஜயகலா, குற்றவியல் சட்டத்தின் 120ம் சரத்துக்கு அமைய குற்றமிழைத்துள்ளார் எனவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பின் 157வது அத்தியாயத்தை மீறியுள்ளதாகவும், அது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயின் இனவாதத்தையே மூலதனமாக கொண்டுள்ள அரசியல்வாதிகட்டு இது இருபக்க லாபத்தை கொடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வடக்கில் புலி ஆதரவாளர்களின் அனுதாப வாக்குகளுக்கு விஜயகலாவிற்கு இச்சம்பவம் இடம்விடும் என்றும் மறுபுறத்தில் புலிகள் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்களாக இருந்தாலும் கடும் நடடிவக்கை எடுக்கும் என தெற்கின் வாக்குகளைக் கவரும் அவ் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

Read more...

விக்கி ஒரு இனவாதியே அல்லவாம்! ரெஜினோட் கூரே நற்சான்றிதழ்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரான சீ.வி விக்கினேஸ்வரன் தனது அரசியல் பிரவேசத்தின் பின்னர் படுமோசமான இனவாதி எனப்பேசப்டுகின்றார். இந்நிலையில் நேற்று காலை இந்துக்கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே, இரு பௌத்தர்களை தனது சம்பந்தியாக்கிக்கொண்டுள்ள விக்கினேஸ்வரன் ஒருபோதும் இனவாதி அல்லவே அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய ரெஜினோல்ட கூரே :

வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் இனவாதி அல்ல அதனால்தான் அவரது புதல்வர்களை கொழும்பு பக்கத்தில் புத்தமதம் சார்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் தங்கை நிருபம்மா ராஜபக்ஷ நடேசன் எனும் தமிழரை திருமணம் முடித்து வாழ்கின்றார். மறைந்த வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சிங்கள பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்திருக்கின்றார். இதேபோன்று மைதிரிபால சேனாநாயக்க எனும் பெருந் தலைவர் ஒருவர் தமிழ் பெண் ஒருவரையே மணம் முடித்து இருக்கின்றார்.

இந்த நாட்டினை ஆட்சி செய்த சிங்கள அரசர்கள் இந்தியாவின் மதுராபுரியிலிருந்து தமிழ் பெண்களை திருமணம் முடித்திருக்கின்றார்கள்.

பௌத்த விகாரைக்குள் இந்து தெய்வங்கள் புத்த பெருமானோடு சந்தோசமாக சாந்தியும் சமாதானமுமாக இருக்கின்றபோது புத்தரை கும்பிட போற மக்கள் சண்டை பிடிக்கின்றார்கள். இச்செயலை பார்த்து தெய்வம் சிரிக்கின்றது. தெய்வத்திடமிருக்கும் நல்லவை ஏன் மனிதனிடம் இருக்கக்கூடாது.

வைத்தியசாலையில் நீங்கள் உயிரிருக்கு போராடும்போது வைத்தியர்கள் இரத்தம் ஏற்ற வேண்டும் என்று சொன்னால் அந்த இரத்தம் யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா? இரத்த வங்கிகளுக்கு இராணுவத்தினர் பௌத்த துறவிகள் இரத்தம் வழங்குகின்றார்கள். இந்த சிங்கள இரத்தம் எனக்கு வேண்டாம் என்று யாராவது கூறியிருக்கின்றீர்களா?

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கடமையில் இருப்பவர்கள் சிங்கள மொழி பேசும் பொலிஸார். மிகச்சிறந்த நீதிபதி இளஞ்செழியன் ஐயாவை உயிர் கொடுத்து காப்பாற்றியவர் ஒரு சிங்கள மொழி பேசும் பொலிஸ் கான்ஸ்டபிள். தமிழ் பொலிஸார் யாரையும் ஏன் பாதுகாப்புக்கு உறுப்பினர்கள் வைத்திருப்பதில்லை.

கௌரவ முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஏன் தமிழ் பொலிஸாரை பாதுகாப்பிற்கு வைத்திருக்கவில்லை. அவர் சிங்கள பொலிஸார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார். அவ்வாறு நம்பிக்கையை சிங்கள பொலிஸார் மீது வைத்துக்கொண்டு வெளியே வேறு கதை பேசுகின்றார்.

மக்கள் மத்தியில் விரைவாக தலைவராக வருவதற்கு சுலபமான வழி இருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழிவாதம், குலவாதம் பேசுவது. வேறு ஒன்றும் தேவையில்லை குறுகிய காலத்திற்குள் தலைவராவதற்கு. தேர்தல் காலம் நெருங்கும்போது இனவாதம் மொழிவாதம் குலவாதம் பேசுகிறார்கள். அவை தேர்தல் காலத்தில் மட்டுமேதான்.

வெள்ளவத்தை பக்கத்திலே தமிழ் மக்கள் வீடு கட்ட முடியும் கோவில் கட்ட முடியும் கோவில்களில் விழா கொண்டாட முடியும். அங்கு எங்கும் எந்த தடையும் இல்லை. இங்கே ஒரு சிலை வைத்தால் பாரிய பிரச்சினைகள் எழுக்கின்றன. பௌத்த விகாரைக்குள் நீங்கள் போவதற்கு பெயரை மாற்றத் தேவை இல்லை மதம் மாற வேண்டியதில்லை அதேபோன்று பௌத்த மக்கள் இந்து கோவிலுக்குள் போறதற்கு தடை ஏதும் இல்லை பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் நல்லூர் கோவிலுக்குள் சென்று வழிபடுவதை நான் கண்டிருக்கின்றேன்.

மதங்கள், இனங்களுக்கு மேலே மனிதத் தன்மையை மேலே வைக்க வேண்டும் நாம் அனைவரும் மனிதனாக வாழ வேண்டும்.

அன்பான மாணவர்களே!

படித்தவர்களில் பல யாழ்ப்பாண தமிழர்கள் தலைவர்களாக பெரியவர்களாக இந்த நாட்டில் வாழ்ந்திருக்கின்றார்கள். லக்ஸ்மன் கதிர்காமர் நீலன் திருச்செல்வம் ரஜனி திராணகம ஆனந்தகுமாரசுவாமி சிற்றம்பலம் காடினர் ஜிஜி பொன்னம்பலம் எதிர்வீரசிங்கம் போன்றோர் போல நீங்களும் பெரியவர்களாக அவர்களின் பாதையில் வரவேண்டும்.

இங்கே படித்துவிட்டு பெரிய ஆளாகி பல பதவிகளை வகிக்கின்றவர்கள் தாய் நாட்டிற்கு தாய் தந்தையருக்கு சேவை செய்வது கிடையாது. படித்து பெரியவர்களாக இருந்தாலும் தாய் தந்தை தாய் நாட்டிற்கு திருப்பி சேவை செய்யாது போனால் பிரியோசனம் ஒன்றும் இல்லை.

அரசியல் வாதிகள் அடுத்த தேர்தலை நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் எதிர்கால அடுத்த சந்ததிக்காக சிந்திக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள் என்று தெரிவித்தார்.



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com