Thursday, March 3, 2016

ஆசியாவில் பாரிய இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்துவதற்கு, பெண்டகன் "சீன அச்சுறுத்தலை" ஊதிப் பெரிதாக்குகிறது. By Peter Symonds

இந்தோ-பசிபிக்கில் பெண்டகன் தீவிரப்படுத்தி வரும் இராணுவ கட்டமைப்பை நியாயப்படுத்த மற்றும் இராணுவ வரவு-செலவு திட்டத்தை விரிவாக்குவதற்கு அழுத்தமளிக்க, உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இவ்வாரம் தொடர்ச்சியான பல ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டனர். இதிலிருந்து, சீனாவுடனான போருக்கு முன்கூட்டிய தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன என்ற ஒரேயொரு முடிவுக்கு மட்டுமே வர முடியும்.

வியாழனன்று பிரதிநிதிகள் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழு முன் பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்டர் பேசுகையில், தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவ பிரசன்னத்தால் அங்கே பிராந்திய நாடுகளுக்கு இடையே "தவறான கணக்கீடு அல்லது மோதலுக்கான" அபாயத்தை சீனா அதிகரித்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். “சீனாவின் நடவடிக்கை தன்னைத்தானே தனிமைப்படுத்தும் விளைவை ஏற்படுத்தக்கூடும், மேலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மற்றவர்களையும் அது செயலாற்ற தூண்டுகிறது,” என்று அவர் அறிவித்ததுடன், அமெரிக்காவின் கூட்டாளிகளும் பங்காளிகளும் அதிகரித்தளவில் இணைந்து இயங்கி வருவதாக தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டன் 2010 இன் மத்தியில் அந்த போட்டிமிகுந்த கடற்பிரதேசத்தில் "சுதந்திர கடல் போக்குவரத்தை" உறுதிப்படுத்துவதில் அமெரிக்காவின் "தேசிய நலன்கள்" இருப்பதாக அறிவித்ததில் இருந்து, ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" ஒருங்குவிப்பு மையமாக தென்சீனக் கடல் ஆகியுள்ளது. பெய்ஜிங் மற்றும் அங்கே உரிமைகோரிவரும் அதன் போட்டியாளர்களுக்கு, மிக குறிப்பாக வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் க்கு இடையே ஒரு பிளைவை உண்டாக்க, அங்கே நீண்டகாலமாக நிலவி வரும் கடற்போக்குவரத்து பிரச்சினைகளை கைப்பற்றி வாஷிங்டன் வேண்டுமென்றே பதட்டங்களை தூண்டிவிடுகிறது.

அமெரிக்கா "சீனாவை கீழ்படிய வைக்க முனையாது" ஆனால் "அப்பிராந்தியத்தில் யாரும் மேலாதிக்கம் செலுத்துவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, நிச்சயமாக அமெரிக்காவை யாரும் வெளியே தள்ளுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது,” என்று கார்டர் வாதிட்டார். எவ்வாறிருப்பினும் அந்த "முன்னிலையின்" நோக்கம் துல்லியமாக ஆசியாவில் நடந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைப்பதற்காக ஆகும். அதற்காக சீனாவை வாஷிங்டனின் நலன்களுக்கு அடிபணிய வைப்பது அவசியப்படுகிறது. “நாம் தான் பசிபிக் இன் சக்தி. அங்கே நாம் தங்கியிருக்க வேண்டும்,” என்றவர் ஆணித்தரமாக அறிவித்தார்.

கார்ட்டரின் கருத்து, முப்படைகளது தலைமை தளபதிகளின் தலைவர் ஜெனரல் ஜோ டன்போர்ட்டால் மீளவலியுறுத்தப்பட்டது. “பசிபிக்கிற்குள் செல்வதற்கான அல்லது பசிபிக்கிற்குள் சுதந்திரமாக செயல்படுவதற்கான நமது ஆற்றலை மட்டுப்படுத்தும் விதத்தில்" சீனா அதன் தகைமைகளை அபிவிருத்தி செய்து வருவதாக அவர் அக்குழுவின் முன் தெரிவித்தார். அமெரிக்கா "சீனாவிற்கு எதிராக அதன் போட்டித்தன்மை மிகுந்த அனுகூலங்களைக்" காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது, இதனால் தான் "நாம் [பாதுகாப்பு] துறையின் மிகவும் அதிநவீன இராணுவ தளவாடங்களைப் பசிபிக்கிற்குள் முதலில் நிலைநிறுத்தி வருகிறோம்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த "முன்னிலையின்" பாகமாக, பெண்டகன் 2020 க்குள் அதன் விமானப்படை மற்றும் கடற்படை இருப்புகளில் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக்கிற்குள் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் உடன் புதிய இராணுவத் தள ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டமை, அத்துடன் ஜப்பான், தென் கொரியா மற்றும் குவாம் இல் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை மறுகட்டமைப்பு செய்வது உள்ளடங்கலாக அமெரிக்க இராணுவ கட்டமைப்பு ஏற்கனவே வேகமாக நடந்து வருகின்றன. வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக என்ற சாக்கில், பெண்டகன் கொரிய தீபகற்பத்தில் "மூலோபாய உடைமைகளின்" அடித்தளத்தை, அதாவது அணுஆயுதமேந்த கூடிய விமானம் மற்றும் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புமுறைக்குத் தயாரிப்பு செய்து வருகிறது.

அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் (PACOM) தளபதி அட்மிரல் ஹேரி ஹேரீஸ், செவ்வாய் மற்றும் புதனன்று முறையே, செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவை குழுவிற்கு விளக்கமளிக்கையில், மற்றும் வியாழனன்று பெண்டகனில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், இன்னும் அதிகமாக ஆத்திரமூட்டும் கருத்துக்களைக் கூறினார்.

கடந்த மே மாதம், PACOM தலைவராக பொறுப்பேற்ற ஹேரீஸ், "கடற்போக்குவரத்து சுதந்திர" நடவடிக்கைகளுக்காக என்று கூறி தென் சீனக் கடலில் சீனாவின் கடல்எல்லை உரிமைகோரல்களுக்கு நேரடியாக சவால் விடுக்க ஆக்ரோஷமாக அழுத்தமளிக்கிறார். கடந்த அக்டோபரில் மற்றும் மீண்டும் ஜனவரியில், அமெரிக்க போர்க்கப்பல்கள் வேண்டுமென்றே சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திட்டுக்களை சுற்றி 12 கடல்-மைல் தொலைவுக்குள் ஊடுருவின.

பெண்டகன் பத்திரிகையாளர் கூட்டத்தில், ஹேரீஸ், தென் சீனக் கடலில் சீன நடவடிக்கைகளால் முன்வைக்கப்பட்ட "அச்சுறுத்தலை" ஒட்டுமொத்தமாக ஊதிப் பெரிதாக்கினார். “அவர்கள் தென் சீனக் கடலை இராணுவமயப்படுத்தி வருகிறார்கள் என்பதே என் கருத்து. அவர்கள் தென் சீனக் கடலில் இராணுவ தளங்களுக்காக ஏறக்குறைய 3,000 ஏக்கரை உரிமைக் கோரியுள்ளனர்,” என்றவர் அறிவித்தார். ஒரு விரல்விட்டு எண்ணக்கூடிய ஸ்ப்ராட்லி கடல்குன்றுகள் மீது சீனா பரவலாக நில உரிமைகோரலில் ஈடுபட்டுள்ளது என்றாலும், அது "இராணுவ தளங்களுக்காக 3,000 ஏக்கர்கள்" என்று கூறுவது அர்த்தமற்றதாகிறது.

ஒரு வாரகால காங்கிரஸ் விளக்க உரையை அடுத்து, பாரசீல்களில் சீனாவின் நிர்வாக மையமாக உள்ள வூடி தீவில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு ஏவுகணை கலங்கள் (missile batteries) மற்றும் போர் விமானங்களை, அத்துடன் ஸ்ப்ராட்லி தீவுகளில் அனேகமாக ராடார் நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியமும் இருப்பதாக குறிப்பிடும், கட்டுரைகள் அமெரிக்க ஊடகங்களில் நிரம்பி வழிந்தன. இத்தகைய வெகுவாக-உயர்த்திக்காட்டப்பட்ட கதைகள் கூட ஹேரீஸின் உயர்வு நவிற்சிக்குக் குறைவாகவே இருந்தன.

ஹேரீஸ் சீனாவை எதிர்க்க, அது உரிமைகோரும் கடல் எல்லைகளில் இன்னும் அதிகமாக "கடற்போக்குவரத்து சுதந்திரம்" மீது சவால்களை விடுக்க அழைப்புவிடுத்தார். "அதே எண்ணம் கொண்ட" ஏனைய நாடுகளும் அவ்வாறே செய்ய அவர் வலியுறுத்தினார். தற்போது, அதேபோன்ற அதன் சொந்த நடவடிக்கைகளை நடத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் கணிசமான அளவிற்கு வாஷிங்டனின், மற்றும் அத்துடன் உள்நாட்டில் எதிர்கட்சியான தொழிற்கட்சியின் அழுத்தத்தின் கீழ் உள்ளது.

தென் சீனக் கடலில் சீனா ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை (ADIZ) அறிவிக்கக்கூடும் என்றும் வாதிட்டார், அதை அவர் "ஸ்திரமின்மைப்படுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும்" நடவடிக்கையாக முத்திரை குத்தினார். பெய்ஜிங் மீதான மற்றொரு கணக்கிட்ட அவமதிப்பில், “அவர்கள் கிழக்குச் சீனக் கடல் பகுதியில் கொண்டு வந்த வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை புறக்கணித்ததைப் போல இதையும் நாம் புறக்கணிக்க வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். 2013 இன் இறுதியில் கிழக்குச் சீனக் கடலில் சீனா ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை அறிவித்தபோது, பெண்டகன் அறிவிப்பின்றி இரண்டு B-52 மூலோபாய குண்டுவீசிகளை அனுப்பி, வேண்டுமென்றே ஒரு மோதல் அபாயத்தை உருவாக்கியது.

ஆசிய பசிபிக்கில் அமெரிக்க இராணுவ மேலாதிக்கம் பலவீனப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, ஹேரீஸ், சீனா உடன் போருக்கான தயாரிப்பின் அவசியத்தை வெளிப்படையாக எழுப்பினார். “தென் சீனக் கடலில் அவர்கள் உரிமைகோருகின்ற இடங்களின் சகல இராணுவ தளங்களையும் சீனா தொடர்ந்து ஆயுதமயப்படுத்தினால், அவர்கள் அப்பிராந்தியத்தில் செயல்பாட்டுக் களத்தை மாற்றிவிடுவார்கள். அமெரிக்கா உடனான போர் தறுவாயில், சீனா தென் சீனக் கடலில் நடைமுறையளவில் கட்டுப்பாட்டை பெற்றிருக்கும்,” என்றவர் தெரிவித்தார்.

ஆச்சரியத்திற்கிடமின்றி, பெய்ஜிங் ஹேரீஸின் கருத்துக்களுக்குக் கடுமையாக எதிர் செயலாற்றியது. சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், அட்மிரல் "தென் சீனக் கடலில் சீனாவின் நியாயமான மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு அழுக்குபூச மற்றும் முரண்பாடுகளை விதைக்க" விரும்புகிறார் என்று அறிவித்தார். “அவர் அக்கடல் பகுதியில் அமெரிக்க கடற்போக்குவரத்து மேலாதிக்கத்திற்காக இராணுவ பலத்தைப் பிரயோகிக்க ஒரு சாக்குபோக்கைத் தேடி வருகிறார்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

சீனா மீதான போருக்குப் பெண்டகனின் வான்வழி-கடல்வழி போர் மூலோபாயம், தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது, அது ஒரு கடற்படை முற்றுகையுடன் சேர்ந்து, சீனப் பெருநிலத்தின் மீது ஒரு பாரிய வான்வழி தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலைக் கொண்டு வரும் என்பது சீன ஆட்சிக்கு நன்கு தெரியும். எவ்வாறிருந்த போதினும், பெய்ஜிங்கின் விடையிறுப்பில் அங்கே எந்த முற்போக்குத் தன்மையும் இல்லை. ஒருபுறம் அது வாஷிங்டனுடன் சமரசம் கோருவதில் ஈடுபடுகிறது, மறுபுறம், அமெரிக்காவின் பாரிய இராணுவ கட்டமைப்புக்கு அதற்கு ஒரு போலிக்காரணத்தை மட்டுமே வழங்கும் வகையில், அது ஆயுத போட்டியில் இறங்குகிறது.

செவ்வாயன்று செனட் சபையின் ஆயுதச் சேவை குழுவின் முன்னால் விளக்கமளிக்கையில், ஹேரீஸ் இந்தோ-பசிபிக்கில் ஒரு மிகப்பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கிற்கான அவரது கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்தார். அவர் பாதுகாப்புத்துறை செயலர் கார்ட்டரின் கருத்துக்களை மேற்கோளிட்டார்: “ஆத்திரமூட்டும் நடவடிக்கை எடுப்பதிலிருந்து அவர்களைத் தடுக்க வேண்டும் அல்லது அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் அதற்காக அவர்கள் மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கும் விதத்தில், ஏற்றுக்கொள்ள முடியாதளவில் விலை கொடுக்கச் செய்யும் ஒரு முன்கூட்டிய ஆக்ரோஷ நடவடிக்கைக்கான ஆற்றலை நாம் கொண்டிருக்க வேண்டும், அவ்விதமான ஆற்றலை நாம் கொண்டிருப்பதாக பார்க்கப்பட வேண்டும்,” என்றார்.

“அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும், குறிப்பாக வேகமான, மிகவும் பயங்கரமான, மிகவும் பலமான ஆயுத அமைப்புமுறைகளைக் கொண்ட போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்கள்" PACOM க்கு அவசியப்படுவதாக ஹேரீஸ் வலியுறுத்தினார். “ஒவ்வொரு தளத்திலும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் நமக்கு வேண்டும். இறுதியாக நமக்கு ஒரு வலையமைப்பு கொண்ட படை அவசியப்படுகிறது, இது நடவடிக்கை அல்லது விடையிறுப்புக்கு பெரியளவில் விருப்புரிமைகளை வழங்கும்,” என்றார்.

குறிப்பாக, தாக்கும் திறனுள்ள கண்காணிப்பு நீர்மூழ்கிக் கப்பல்களில் அவருக்கு தேவைப்படுவதில் சுமார் 62 சதவீதத்தை மட்டுமே அமெரிக்க கடற்படை அவருக்கு வழங்குவதாக அட்மிரல் குறைகூறினார். “பற்றாக்குறையில் இருக்கும் அதிமுக்கிய வெடிப்பொருட்கள் முக்கிய முன்னுரிமை மற்றும் கவலைக்குரியதாகும்,” என்றார். “தாக்குதலுக்கான தயார்நிலையினது ஒரு பிரதான கூறுபாடு வெடிப்பொருட்களாகும். வெடிப்பொருள் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, மற்றும் முன்கூட்டிய நிலைநிறுத்தல் ஆகியவற்றில் USPACOM படைகளுக்கு அபிவிருத்தி தேவைப்படுகிறது, ஆனால் நிதிய அழுத்தங்கள் இதை அபாயத்தில் நிறுத்தி உள்ளன,” என்றார்.

பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவை குழுவின் முன்னால் புதனன்று அவரது விடயத்திற்கு அழுத்தமளிக்கையில், ஹேரீஸ், அதிக ஆயுதங்கள் மற்றும் நிதிகளுக்கான அவரது கோரிக்கைகளின் உள்நோக்கத்தை குறித்து பின்னடிக்கவில்லை. “இன்று நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அங்கே சௌகரியமாக இருக்கிறோம், ஆனால் இன்று நாம் போரில் இல்லை, [இது] ஒரு முக்கியமான புள்ளி என்றே நான் கருதுகிறேன்,” என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், துல்லியமாக சீனா உடனான ஒரு போருக்குத் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

Read more...

ரஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது: மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் முருகன் உள்ளிட்ட 7 பேரின் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் கருத்தைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. 7 பேரையும் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

மக்களவையில் இந்த தீர்மானத்தின் மீது மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்யக்கூடாது என்றும், தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தை பரிசீலனை செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் தமிழக அரசின் முடிவு பற்றி உள்துறை அமைச்சர் விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Read more...

ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள இலங்கை முடிவு.

நிலக்கண்ணி வெடி தடை தொடர்பான ஒப்பந்தம் அல்லது ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளதாக, தெரிவித்துள்ளது.

நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவினை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வது குறித்து, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று புதன்கிழமை ஜெனிவாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

1997-ல், ஆட்களுக்கு எதிரான கண்ணி வெடிகளை உபயோகித்தல், சேமித்து வைத்தல், தயாரித்தல், இடமாற்றம் செய்தல் ஆகியவற்றை தடைசெய்து அவற்றை அழிப்பது சம்பந்தமாக உருவாக்கப்பட்டதே ஓட்டோவா ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தம் 1999ம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Thursday, February 18, 2016

பலாலி விமானத்தின் விரிவாக்கத்தையும் எதிர்க்கின்றார் விக்கினேஸ்வரன்.

இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற, பிரேரணையை 2014ம் ஆண்டு வட மாகாண சபை நிறைவேற்றியது.

இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் இலங்கை வௌிவிவகார அமைச்சர்கள் பலாலி விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில், முதலமைச்சரின் இந்த எதிர்ப்பு குறித்து, இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வௌியிட்டுள்ள வட மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கம் மயிலிட்டி மீன்பிடித்துறையை அண்டியுள்ள மக்களின் நலனைப் பாதிக்கும் என்பதாலேயே இவ்வாறு எதிர்ப்பு வௌியிட்டுள்ளதாக, குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது பலாலியிலுள்ள வசதிகளைப் பயன்படுத்தி நேரடியாக தமிழகத்தின் மதுரை மற்றும் திருச்சிக்கிடையில் அல்லது கேரளாவின் திருவானந்தபுரத்துக்கு விமான சேவைகளை ஆரம்பிக் முடியும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விமான நிலையத்தைச் சூழவுள்ள தமது காணிகளை மீளப் பெறும் முயற்சிகளில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தநிலையில் பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகளால் அவர்களது நலன்கள் பாதிக்கக் கூடாது எனவும், வட மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வடக்கில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க விரும்பினால் வேறு இடங்கள் உள்ளது எனவும் குருகுலராஜா மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை நடத்துவது, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களிடம் கையளிப்பது மற்றும் மீள்குடியேற்றம் போன்ற விடயங்களை ஒன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும் என, யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட அரசியல் பொருளியலாளர் அகிலன் கதிர்காமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அரசாங்கம் சரியாக கையாளுமானால் நல்லிணக்கத்தை நோக்கிய மிக முக்கிய நம்பிக்கையை கட்டியெழுப்பும் விடயமாக இது இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தக் கருத்து, குறித்த வேதை்திட்டத்துக்கு தடையாக இருக்காது என, இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு, இந்திய அரசாங்கமும் இதனை அறிவார்ந்த முறையில் கவனத்தில் கொள்ளும் என நான் நம்புகிறேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

Tuesday, February 16, 2016

விசுவமடுவில் விபத்து. முன்பள்ளி ஆசிரியை பலி!

விசுவமடு 12 ம் கட்டைப் பகுதியில் இன்று நண்பகல் நடைபெற்ற விபத்தொன்றில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்தவர் இலக்கம் 222 ஆனந்தநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியையான செல்வி சிவபாலன் கஸ்தூரி என தெரியவருகின்றது.

மேலும் விபத்தில் காயமடைந்தவர் முன்பள்ளி ஆசிரியை செல்வி.உசாநந்தினி(36) என இனம் காணப்பட்டுள்ளார். இவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் மேலதிக சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நண்பகல் சிவில்பாதுகாப்புப் பணியக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடலுக்காக விசுவமடு சிவில்பாதுகாப்புப் பணியகத்திற்கு சென்று திரும்பும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வன்னியிலிருந்து விஜய ராகவி


Read more...

Sunday, February 14, 2016

வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்பு

வடமாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

வடமாகாணத்தின் ஆளுநராகவிருந்த எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார, ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியதையடுத்து, ரெஜினோல்ட் குரே ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

Read more...

Saturday, February 13, 2016

மஹிந்தவை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றிவிட்டேன். மார்தட்டுகின்றார் மைத்திரி. வீடியோ

இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் யாவும் காலாவதியாகியுள்ளதாகவும் மஹிந்த உட்பட இராணுவ வீரர்கள் யாவரையும் மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.

பொலநறுவை மக்களுக்கு நீர்வழங்கல் பொறிமுறை ஒன்றை ஆரம்பிவைக்கும் நிகழ்வொன்றில் மேற்கண்டவாறு கூறியுள்ள அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:

கடந்த வாரம் இலங்கைக்கு வந்து சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான ஆணையாளர் என்னுடன் பேசும்போது, நீங்கள் தங்களுடைய ஒரு வருட காலத்தில் மிகவும் நன்றாக செயற்பட்டிருக்கின்றீர்கள். உங்களுடைய அரசு இன்று செயற்படும் விதத்தில் நாங்கள் மிகவும் திருப்தியும் சந்தோஷமும் அடைந்துள்ளோம். உங்களுடைய அரசாங்கத்திற்கு நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவும் இல்லை அதை செய்யவும் மாட்டோம் என்றும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்கின்றார், நாம் ஐக்கிய நாடுகள் சபை செய்துள்ள முன்மொழிவுகளுடன் சம்மதித்துக்கொண்டமையானது, இந்நாட்டை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயேர்களுடன் நாம் 1815 செய்து கொண்டு ஒப்பந்தத்தைவிட காட்டிக்கொடுப்பானது என. அவர் 1815 ஆண்டின் ஒப்பந்தத்தை வாசித்து பார்த்துத்தான் இவ்வாறு கூறுகின்றாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி நாம் அரசை கைப்பற்ற முன்பு என்ன கூறினார்? மைத்திரி அரசமைத்தால் மஹிந்த ராஜபக்ச உட்பட யுத்தத்தை மேற்கொண்ட இராணுவ வீரர்கள் அனைவரையும் சர்வதேச சமூகம் மின்சார நாற்காலியில் ஏற்றும் என்று கூறினார். மின்சாரா நாற்காலிக்கு கொண்டு செல்கின்றார்கள் , மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்கின்றார்கள் என்று கூக்குரலிட்டார். நான் தெட்டத்தெளிவாக கூறுகின்றேன் ஜனவரி 8ம் திகதிய மாற்றத்துடன் நான் அவர்கள் அனைவரையும் மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியுள்ளேன்.




Read more...

அங்கஜன் கோயில் மேளத்துடன் , விஜயகலா பறை மேளத்துடன். சபாஸ் நல்ல போட்டி.

வடக்கில் மீள் குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு வலயங்களாக இராணுவத்தினரால் இதுவரை விடுவிக்கப்படாக காணிகள் விடுவிப்பு என்பனவற்றில் அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளை தீர்த்தால், சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடுவதுடன் தமிழர் தரப்பின் நியாயமற்ற கோரிக்கைகளை கைவிடுமாறு சர்வதேசத்தை கொண்டே அழுத்தத்தை தமிழ் அரசியல்வாதிகள் மீது கொடுக்க முடியுமென்பது மைத்திரியின் இராஜதந்திரமும் மதிநுட்ப வியூகமும் என்றால் மிகையாகாது.

இதற்கானதோர் சிறந்த உதாரணத்தை கூறுவதானால் , ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் இலங்கைக்கு வர விரும்பியபோது தாராளமாக வாருங்கள் என ஆணையாளருக்கு சிவப்பு கம்பளத்தை விரித்தார் மைத்திரி. சிங்கள மிதவாதிகள் ஆணையாளரை இலங்கைக்குள் நுழையவிடாதே என தலையால் கிடங்கு கிண்டினார்கள். ஆனால் மைத்திரியோ கிஞ்சிதமும் அஞ்சவில்லை. ஆணையாளர் வந்தார். ஐயா இலங்கையை சுற்றி பாருங்கள் மக்களுடன் பேசுங்கள் என பச்சை கொடி காட்டினார்.

யாழ் சென்ற மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்த முன்னாள் பிரத நீதியரசரும் இந்நாள் வடக்கின் முதலமைச்சரும் நாளை தன்னுடைய கதிரை பறிபோகுமோ என்ற கவலையில் நிலவைத்தேடி பரதேசம் சென்று கொண்டிருக்கின்ற விக்கினேஸ்வரன் „முன்னாள் பயங்கரவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டு மூக்குடைபட்டார்' „பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபபட்டிருந்தால் அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து நீதிமன்றிலிருந்து விடுவித்து கொள்வதே நியாயமானது என்று கூறியுள்ளார் ஐ.நா வின் மனித உரிமைகள் ஆணையாளர்.' இதுதான் மைத்திரியின் சாமர்த்தியம். நம்மவர்கட்கு மணிகட்டின மாடு கூறினால்லே புரியும் என்பதை சரியாக புரிந்து கொண்டுள்ளார் மைத்திரி.

இதே விடயத்தைத்தான் உள்ளநாட்டிலும் மேற்கொண்டு வருகின்றார். தீர்க கூடியாதான பிரச்சினைகளை கூடிய சீக்கிரம் தீர்த்து விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிச்சைக்காரன் கை சிரங்கு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற அடிப்படையில் அவர் செயற்பட்டு வருகின்றார்.

இவ்விடயத்தில் இன்று வடக்கில் மைத்திரியின் நல்மதிப்பை சம்பாதித்துள்ளார் என்று பலராலும் நம்பப்படுகின்ற அங்கஜன் ராமநாதன் மைத்;திரிக்கு பக்கபலமாக செயற்பட்டு வருகின்றார் என்பது தெளிவாக தென்படுகின்றது.

மைத்திரி வடக்கிற்கு விஜயம் செய்கின்றபோது, உடனடியாக தீர்க்கப்படவேண்டிய விடயங்களை சரியாக அவருக்கு இனம்காட்டி , குறிப்பிட்ட இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று மக்களின் மனக்குறைகளை மக்களுடாகவே அவருக்கு தெரியப்படுத்தி காரியத்தை கச்சிதமாக நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் அங்கஜன் ராமநாதன்.

இம்முயற்சிகளின் பயனாக 26 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த மைலிட்டி பிரதேசத்தில் மக்கள் விரைவில் மீள்குடியேறுவதற்கான காலம் உருவாகியுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்று மைலிட்டி குளத்தங்கரை அம்மன் ஆலயத்திற்கு மக்களை அழைத்துச் சென்று இன்று ஆயலத்தில் பூசையும் நாடாத்தியுள்ளார்.
இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் ஆலயத்தின் கோயில் மேளம் அடிக்கும் சத்தம் விஜயகலாவிற்கு கேட்டுள்ளது. உசாரடைந்த அவர் பறை மேளத்துடன் சென்று தானும் இம்மீள்குடியேற்ற நடவடிக்கையில் பங்காளி என பறை அடித்துள்ளார்.

எமது மக்களை பொறுத்தவரை யார் செய்கின்றார்கள் என்பது முக்கியத்துவமானது அல்ல. என்ன செய்கின்றார்கள், அதை எப்படி செய்கின்றார்கள், என்ன நோக்கத்துக்காக செய்கின்றார்கள் என்பதே முக்கியமானதாக நோக்கப்படுகின்றது.

மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதை மக்களில் பெயரால் சிறப்புரிமைகளை அனுபவிக்கின்றவர்கள் செய்யவேண்டும் என்றவகையில் விஜயகலா மகேஸ்வரனுக்கும் அந்த பொறுப்பு இருக்கின்றது. எனவே சுயமாக முயற்சிகளை செய்து ஏதாவது ஒரு கடமையை பொறுப்பெடுத்து அவற்றை தனியாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றவேண்டும். அதை விடுத்து பறை மேளத்துடன் அடுத்தவன் நிகழ்வில் நுழைவது நாகரிகமானது அல்ல.

மேலும் விஜயகலா மக்களின் வாக்குகளை பெற வழங்கிய பிரதான வாக்குறுதி ஒன்று உள்ளது. மாவீரர் இல்லங்கள் தொடர்பானவை. முடிந்தால் ரணில் விக்கிரம சிங்காவிடம் அதற்கான அனுமதியை பெற்று நிறைவேற்றி காண்பிக்க வேண்டும் என்ற சவாலுக்கு அசிட் கலா முகம் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Read more...

SLFP உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை. கடிதத்தை தீ மூட்டிய உறுப்பினர்கள்

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக அக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதுடன் அவர்களுக்கு இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவித்துள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டுள்ள உறுப்பினர்கள் இச்செயற்பாட்டிற்று எதிராக கொடிதூக்கியுள்ளனர்.

இன்று இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மாநாடு ஒன்றினை நாடாத்தி தமது எதிர்ப்பினை வெளியிட்ட அவர்கள் கட்சியின் கடிதத்தினை ஊடகவியலாளர் மாநாட்டில் தீமுட்டியுள்ளனர்.

வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உதேனி அத்துகோரல, மகரகம நகரசபையின முன்னாள் தலைவர் காந்தி கொடிகார, பொரலஸ்கமுவ நகர சபையின் முன்னாள் தலைவர் அருண பிரியசாந்த, அத்தனகல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிரியந்த புஷ்பகுமார, கம்பஹா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரஞ்சித் குணவர்தன, மீரிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சனத் நந்தசிறி உள்ளிட்டவர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கல்லாமல் அதனை பாதுகாப்பதற்கு உரமளித்த மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்பது தமது உறுப்புரிமைகள் நீக்கப்படுவதற்கு காரணமா என்று அவர்கள் வினவியிருந்தனர்.

மைத்திரிபால சிறிசேன உறங்கிய பாய்க்கு கூட கூறாமல் சென்று ஐதேக வுடன் இணைந்து கொண்டு கட்சியை இரண்டாக பிளவுபடுத்தியதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதன்போது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக 14 நாட்களுக்குள் விளக்கமளிக்க கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை, வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தீ வைத்து கொழுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுக்கும் முடிவு எதுவோ அதன்பக்கமே தாம் தொடர்ந்தும் இருக்கப் போவதாகவும் மேலும் காலம் தாழ்த்தாமல் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை அரசாங்கம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


Read more...

சரத் பொன்சேகாவிற்கு மனித உரிமை அமைப்பு எதிர்ப்பு.

சரத் பொன்சேகாவின் படைகள் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவரை இலங்கை அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமையானது, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு நேர்மறையானது என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சரத் பொன்சேகாவின் இந்த நியமனமானது பரந்தளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்களை அரசாங்கம் பாதுகாக்கலாம் என்கின்ற சமிஞ்சையையே வௌிப்படுத்துவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர், பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக் கூறல் தொடர்பாக கண்துடைப்பு நடவடிக்கைகளை அன்றி, தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்து, இலங்கை மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும், அர்த்தமுள்ள வகையில் இலங்கை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நியாயத்தைப் பெற்று கொடுக்கும் என்று அரசாங்கத்தின் மீது, பாதிக்கப்பட்டவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் வகையில் பொன்சேக்காவின் இந்த நியமனம் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எல்லா இலங்கையர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டை வௌிப்படுத்த வேண்டிய இந்தத் தருணத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பொறுப்புக் கூறல் விடயத்தில் கவலையளிக்கும் வகையிலான சமிஞ்சையை வௌிப்படுத்தியுள்ளதாக பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

முடியுமாயின் சாகும் வரையில் ஆட்சியில் இருக்கவே முயற்சிக்கின்றனர்!

அரசியல்வாதிகளில் மதிக்கத்தக்க நபர்களும், பெண்களும் 10 வீதமானோரே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலானோர் தமது கொள்கைகளை விற்று, அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாடு ஆகியவற்றை நாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்காக பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டும் செயல்திட்டமொன்று காலி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே சந்திரிக்கா அம்மையார் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அவர்,

''அதிகாரத்திற்கு வந்து களவாடுகின்றனர். தொடர்ந்து களவெடுத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருக்க முடியுமாயின் அதனையும் செய்வார்கள். மனிதாபிமானம் என்பது இதுவல்ல. உயர்ந்த மனித பண்புகளுடன் வாழுமாறு அனைத்து மதத் தலைவர்களும் கூறுகின்றனர். நாம் அனைவரும் ஒரே இனத்தில் சேர வேண்டும். அது மனித இனமாகும். நாம் அனைவரும் ஒரே மதத்தில் சேர வேண்டும். அது மனிதாபிமான மதம்'' என்று சந்திரிக்கா அம்மையார் மேலும் தெரிவித்தார்.

Read more...

கடந்தகால உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்! வெளிவிகார அமைச்சர் மங்கள

கடந்த காலத்தின் துன்­பங்­களும் அவ­லங்­களும் மீண்டும் நாட்டில் நிகழ இட­ம­ளிக்­கப்­ப­டக்­கூ­டாது. அனைவரும் இணைந்து முன்னோக்கி பயணிக்கவேண்டும். அப்­படி முன்­னேறுவதற்கு கடந்த காலத்தில் இடம் பெற்ற உண்­மைகள் கண்டறி­யப்­பட வேண்டும் என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரிவித்தார்.

நல்­லி­ணக்க பொறி­மு­றை­க­ளுக்­கான ஆலோ­ ச­னை­களைப் பதி­வ­தற்­கான இணை­யத் தள அங்­கு­ரார்ப்­பண நிகழ்வும், விசேடசெயலணியின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் ஆரம்ப வைபவமும் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செய­லக கேட்போர் கூடத்தில் நடை­பெற்­ற­ போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நல்­லி­ணக்க பொறி­மு­றை­க­ளுக்­கான ஆலோ­ச­னை­களைப் பதி­வ­தற்­கான இணை­யத்­த­ளத்தை ஆரம்­பித்து வைக்க இங்கு வந்­தி­ருப்­பது எனக்கு மகிழ்ச்சி தரு­கி­றது.

தேசிய ஒற்­றுமை, நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதல் அடிப்­ப­டை­யி­லான ஆணை­யுடன் கடந்த வருடம் ஜன­வரி 8ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரிவு செய்­யப்­பட் டார்.

போர்­க்குற்றம் மற்றும் நீதி வழங்­கலை உறு­திப்ப­டுத்­துதல் தொடர்­பான ரோம் உடன்­பாட்டில் இலங்கை கையெ­ழுத்­தி­ட­வில்லை என்­பதால் அவ்­வா­றான விட­யங்கள் தொடர்­பாக நீதி கிடைப்­பதை உறு­தி­செய்­வதற்கு சுயா­தீ­ன­மான, தேசிய நீதி வழங்கல் பொறிமுறை போதுமான தாக இருக்கும்.

இதனை ஜனா­தி­ப­தி­யி­னு­டைய 100 நாள் வேலைத்­திட்ட விஞ்­ஞா­ப­னத்தின் 93 ஆவது சரத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கிர சிங்க ஆகி­யோரின் அர­சாங்கம் பொறுப்­பேற்­கப்­பட்­டபின் உண்­மையை அறிதல், பொறுப்புக் கூறல் போன்ற விட­யங்­களை ஒரு கட்­ட­மைப்பை உரு­வாக்கி ஆரா­ய­வேண்டும் என்­பதால் இலங்கை தொடர்­பான அறிக்­கையை வெளி­யி­டு­வதை பிற்­போ­டும்­படி மனித உரிமை ஆணை­யா­ளரைக் கேட்டுக் கொண்டோம்.

இந்த முறை­மையை தொட­ரு­வ­தற்­கான மக்கள் ஆணை கடந்த செப்­ரெம்­பரில் மீண்டும் ஒரு­முறை கிடைத்த பின் வர­லாற்றில் முதல் தட­வை­யாக இரண்டு முக்­கிய அர­சியல் கட்­சி­களை இணைத்து அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய பின் நான் மீண்டும் ஜெனிவா சென்று நல்­லி­ணக்கம், சீர்­ப­டுத்தல் மற்றும் பொறுப்புக் கூறலின் அடிப்­ப­டை­யி­லான கட்­ட­மைப்பு தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையில் விளக்­கினேன்.

பின்னர் நான் அங்கு கூறி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இலங்­கையும் ஐக்­கிய நாடுகள் சபையில் பிர­தி­நி­தித்­துவம் கொண்­டி­ருக்கும் நாடு­களும் ஒரு தீர்­மா­னத்தை கூட்­டாக முன்­மொ­ழிந்­தன. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கடந்த வரு­டத்தில் பல முறை நல்­லி­ணக்கம், பொறுப்புக் கூறல் தொடர்­பாக தாங்கள் கொண்­டி­ருக்கும் உறு­திப்­பாட்டையும் ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் தங்­க­ளுக்­குள்ள அசை­யாத உறு­திப்­பாட்­டையும் வலி­யு­றுத்தி கூறி­யி­ருக்­கி­றார்கள்.

யுத்­தத்­தினால் ஏற்­பட்ட ரணங்­களை குணப்­ப­டுத்­தவும் சமா­தா­னத்­தையும் பாது­காப்­பையும் பெற்றுத் தரு­வ­தற்­கு­மான பொறுப்பு என்மேல் சுமத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த சந்­தர்ப்­பத்தின் உச்ச பயனைப் பெற்று ஜன­நா­யக பிர­ஜை­க­ளுக்­கான உரி­மை­களை அனை­வரும் ஒரே­வி­த­மாக அனு­ப­விக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2009 மே 19ம் திகதி யுத்தம் முடிந்த கையோடு அமை­தி­யான சுழ்­நி­லையை நாம் எல்­லோரும் அனு­ப­வித்தோம். ஆனால் நாம் பெற்ற அனு­ப­வங்­களை கொண்டு நாங்­களே செய்­ய­வேண்­டி­ய­தாக இருந்த பணி­களை நாம் செய்து முடிக்­க­வில்லை என்றே நான் நினைக்­கிறேன். அபி­வி­ருத்தி முக்­கி­ய­மென்­றாலும் மக்­களின் மனங்­க­ளையும் உள்­ளங்­க­ளையும் வெல்­லா­விட்டால் நாட்டை முன்­னேற்ற முடி­யாது.

இரு­வா­ரங்­க­ளுக்கு முன் சுதந்­தி­ர­தின விழாவில் ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேனா உரை­யாற்றும் பொழுது, ஜெனிவா தீர்­மா­னத்தில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களை நிறை­வேற்றும் பொறுப்பு எங்­க­ளிடம் வந்­தி­ருக்­கி­றது. இந்த சந்­தர்ப்­பத்­தி­லி­ருந்து உச்ச பயனை பெற­வேண்­டி­யி­ருந்­தாலும் அதனை சர்­வ­தேச அழுத்­தத்­துக்­காக அல்­லாமல் எமது தேசத்தின் எமது மக்­களின் எமது படை­யி­னரின் கௌர­வத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளும் விதத்தில் அதனை செய்ய வேண்டும். அதன் மூலமே சர்­வ­தேச சமூ­கத்­துக்குள் இலங்­கைக்கு அதற்கு உரித்­தாக வேண்­டிய சக்­தி­வாய்ந்த ஜன­நா­யக ரீதி­யான ஸ்தானத்தை மீண்டும் ஸ்தாபிக்க முடியும் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

எங்­க­ளுக்கு பல விருப்பத் தெரி­வுகள் இருந்­தாலும் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் எவ்­வாறு அடை­யப்­பட வேண்­டு­மென்­பது அனைத்து பங்­கீட்­டா­ள­ரோடும் ஆரா­யப்­பட வேண்டும்.

இலங்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை தீர்­மா­னத்தை கூட்­டாக முன்­மொ­ழிந்த பாரா­ளு­மன்ற விவா­தத்தின் போது த.வி.கூ. உள்­ளிட்ட அனைத்து கட்­சி­களும் நல்­லி­ணக்கம் தேவை­யென ஏற்றுக் கொண்­டுள்­ளன. நல்­லி­ணக்­கமும் பொறுப்பு கூற­லும்தான் எமது அணு­கு­மு­றை­யென பிர­தமர் ரணில் கூறி­யுள்ளார். கடந்த காலத்தை உண­ராது விடின் எமது நாட்­டையும் மக்­க­ளையும் அவர்­களின் பொரு­ளா­தார மற்றும் சமூ­க­ரீ­தி­யாக முன்­னேற்ற முடி­யாது.

இங்கு ஒரு தாயை சந்­தித்தேன். அவரின் கண­வரும் அவரை தொடர்ந்து மூத்த மகனும் புலி­க­ளுடன் இணைந்து சண்­டை­யிட்ட போது கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என அவர் அழுதார். இவ்­வா­றான பாதிப்­புக்கள் தெற்­கிலும் உண்டு. படை­வீ­ரர்­க­ளி­னதும் அர­சியல் செயற்­பாட்­டா­ளர்­களின் தாய்­மாரும் இப்­படி அழு­கி­றார்கள்.

எமது அரசு பல விட­யங்­களை மேற்­கொண்­டுள்­ளது. இம்­முறை சுதந்­தி­ர­தின விழாவில் இரண்டு மொழி­க­ளிலும் தேசிய கீதம் பாடப்­பட்­டுள்­ளது. 3ஆயி­ரத்து 300 ஏக்கர் நிலம் மக்­க­ளிடம் விடுவிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 39 கைதிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். மற்­ற­வர்­களும் விரைவில் விடு­விக்­கப்­ப­டு­வார்கள். விசேட நீதி­மன்றம் இதற்­காக அமைக்­கப்­பட்­டுள்­ளது வடக்­கிலும் கிழக்­கிலும் குடிசார் நிர்­வாகம் மீள நிறு­வப்­பட்­டுள்­ளது.

8 புலம்­பெயர் அமைப்­புகள் மற்றும் 429 தனி­ந­பர்கள் மீதான தடைகள் நீக்­கப்­பட்­டுள்­ளன. சட்டம் நீதி­யி­னு­டைய ஆட்சி நிலை நிறுத்­தப்­பட்­டுள்­ளது

கறைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த ஆயு­தப்­ப­டை­களின் நற்­பெயர் தற்­போது சீர்­செய்­யப்­ப­டு­கி­றது.

கறை­பட்ட பெயரை சீர் செய்ய குற்­ற­மி­ழைத்­தோரை தண்­டிப்­ப­தொன்றும் புதிய எண்ணக் கரு அல்ல. 1970களின் மனம்பேரி சம்­ப­வத்­தையும் 1990 களின் கிரு­ஷாந்தி குமா­ர­சு­வாமி சம்­ப­வத்­தையும் இங்கே நினை­வு­கூ­ரு­கிறேன். ஆயு­தப்­ப­டை­களின் நற்­பெ­யரை களங்­கப்­ப­டுத்­திய ஒரு சில குழப்­ப­டி­கா­ரர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.

நாங்கள் நல்­லி­ணக்க முயற்­சியை சர்­வ­தேச அழுத்தம் கார­ண­மாக மேற்­கொள்­ள­வில்லை. எமது நாட்டின் எதிர்­கா­லத்தை உரு­வாக்க வேண்டும். எமது குடி­மக்­களை சமத்­துவம் மேன்மை கௌரவம் கொண்­ட­வர்­க­ளாக ஆக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே அதனை மேற்­கொள்­கிறோம்.

கடந்த காலத்தின் துன்­பங்­களும் அவ­லங்­களும் மீண்டும் நிகழ இட­ம­ளிக்­கப்­ப­டக்­கூ­டாது. எல்­லோரும் இணைந்து முன்­னேற வேண்டும் அப்­படி முன்­னேற கடந்த கால உண்­மைகள் அறி­யப்­பட வேண்டும் தீவி­ர­வாதம் வடக்­கிலோ தெற்­கிலோ எழுப்ப அனு­ம­திக்க கூடாது.

எமது அர­சா­னது நீண்­ட­கால மற்றும் நிலை பேற்­றுத்­தன்மை அடிப்­ப­டையில் நல்­லி­ணக்கம் சமா­தானம் அபி­வி­ருத்தி என்பவற்றை புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிறுவ முயல்­கி­றது. இதன் மூலம் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய அபி­லா­சைகள் பூர்த்தி செய்­ய­மு­டியும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. கலா­நிதி மனோரி முத்து குமா­ர­சாமி தலை­மையில் மான்பு மிக்­க­வர்கள் 25 மாவட்­டங்­க­ளு­குக்கும் சென்றுநேருக்கு நேராக சந்­தித்து கருத்­து­க­கைள பெற்று பகுப்­பாய்பு செய்து ஒரு­அ­றிக்­கையை அரசுக்கு தருவார்கள். அதன் அடிப்படையில்அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

அரசாங்கத்தின் சார்பில் இந்த முயற்சியிலே அனைவரையும் பங்குபற்ற அழைக்கின்றேன். 1940 ஆம் ஆண்டுகளில் இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்தாக இருந்தது. கடந்த காலத்தில் இந்து சமுத்திரத்தின் கண்ணீர்துளியாக மாறிய இலங்கை மீண்டும் முத்தாகமாறவேண்டும்.

வங்குறோத்தாகிவிட்ட அரசியல் வாதிகள் வடக்கிலும் தெற்கிலும் மக்களின் உணர்ச்சிகளை தூண்ட முயற்சிக்கிறார்கள். எமது அரசாங்கம் நாட்டினை பல்லின, பல்மொழி, பல்மத, பல் கலாசாரமாக மாற்றவே முயற்சி செய்கிறது. எமது எதிர்காலத்தை வடிவமைத்து வரையறை செய்து உருவாக்கவே முயற்சிக்கிறோம் . கடந்த செப்ரெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைசபையில் “கனவுகான பயப்படாமலிப்போம் கலந்துரையாடலில் ஈடுபட பயப்படாமலிருப்போம்"என நான் கூறிய வசனங்களை கூறி முடிக்கிறேன் என்றார்.

Read more...

மக்கள் விடுதலை முன்னனியின் யாழ் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு.

மக்கள் விடுதலை முன்னனியின் யாழ் மாவட்டத்திற்காக புதிய அலுவலகம் இன்று காலை இல - 289 கண்டி வீதியில் உத்தியபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னனியின் புதிய அலுவலகம் திறப்பு நிகழ்வு மக்கள் விடுதலை முன்னனியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மக்கள் விடுதலை முன்னனியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கலந்துகொண்டு புதிய அலுவகத்தினை திறந்து வைத்தார்..

இங்கு கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னனியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா,

அரசாங்கத்தின் ஊடாக இவ்வாண்டு சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதம் பாடப்பட்டதை மக்கள் விடுதலை முன்னனி மிகவும் வரவேற்றுள்ளதாகவும் அதனுடாக எமது தமிழ் மக்களின் ஒரு அங்கம் அந்த சுதந்திர தினத்தில் சுதந்திரம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலமாக இருக்கட்டும் நிகழ்காலமாக இருக்கட்டும் எதிர்வரும் காலங்களிலும் இனவாத்தினை தோற்கடிப்பதற்கு அனைவரும் தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.




Read more...

Friday, February 12, 2016

26 வருடங்களுக்கு பின்னர் மயிலிட்டி ஆலயங்களில் நாளை விளக்கேறுகின்றது.

யாழ் மயிலிட்டி பிரதேசத்திலிருந்து இற்றைக்கு 26 வருடங்களுக்கு முன்னர் பிரதேச மக்கள் யாவரும் இடம்பெயர்ந்திருந்தமை யாவரும் அறிந்ததே. இம்மக்களை அங்கு மீள் குடியேற்றுவதற்கு தடையாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த காலங்களில் வடக்கிற்கு சென்ற ஜனாதிபதியிடம் இவ்விடையம் நேரடியாக முறையிடப்பட்டதுடன் இதன் பிரதான தொடர்பாளராக பா.உ அங்கஜன் செயற்பட்டு வந்திருக்கின்றார்.

இம்முயற்சிகளின் பலனாக நாளை அம்மக்களின் மீள்குடியேற்ற நிகழ்வு உத்தியோக பூர்வமாக ஆரம்பமாகவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

பிரதேசத்தை விட்டு 26 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களுடன் நாளை மயிலிட்டிக்கு செல்லவுள்ள பா.உ அங்கஜன் ராமநாதன் , அங்கு பாழடைந்து காணப்படும் செபமாலை மாதா கோயில் மற்றும் கொத்துக்குளம் அம்மன் கோயில் ஆகியவற்றை புனரமைத்து விளக்கேற்றி வைக்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

Read more...

பொது சந்தை போலான வட மாகாணசபை பேரவை கூட்டம்! - ராம் -

2013ல் மலர்ந்தது தமிழர் அரசு என்ற பத்திரிகை தலையங்கத்தை பார்த்து npc meeting-1இது சற்று அதிகப்பிரசிங்கத்தனம் என நினைத்தாலும், மாற்றம் வரும் என நம்பியவர்களில் நானும் ஒருவன். காரணம் எனது சொந்த விஜயமாக நாட்டில் அதுவும் வடக்கில் நின்றபோது போது தான், வட மாகாணசபபை தேர்தல் நடந்தது. கூட்டமைப்பில் இணைத்துகொள்ளப்பட்ட புளட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வவுனியா நகரசபை தலைவர் லிங்கநாதன் போன்றவர்கள், வேட்பாளராக போட்டியிட களம் இறங்கிய அந்த தேர்தலில் மிக பெரிய வெற்றியை த.தே.கூ பெறும் என அப்போதே தெரிந்திருந்தது. பண்ணாகத்தில் கோவில் முன்றலில் நடந்த கூட்டத்தில், அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமித்து மேடையில் இருந்ததை பார்த்தபோது சாதிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் துளிர்விட்டது. ஆனால் அண்மைய நிகழ்வுகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இவர்கள் நடத்திய கூட்டுப்பொறுப்பு என்ற போர்வையில் விட்ட தவறுகள் இன்று வெட்ட வெளிச்சமாகின்றன.

தேர்தல் நாட்களில் நண்பரின் ஊரான கற்சிலை மடுவில் நின்றபோது, ஒட்டுசுட்டானை சேர்ந்த எவரும் வேட்பாளராக நிறுத்தப் படவில்லை என குறைப்பட்ட முக்கிய புள்ளி, இந்த தேர்தலை நாங்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கருத்துப்பட பேசினார். பெரும்பான்மையானோர் அந்த முடிவில் தான் இருந்தனர். ஆனால் அவர்களிடம் அவ்வாறு நீங்கள் செய்வது மகிந்த அரசுக்கு அல்லது அவரின் ஆதரவு கட்சிக்கு தான் ஆசனங்களை அதிகரிக்கும் என முன்னாள் போராளி ஒருவரின் தந்தை கூறி, எமக்குள் இருக்கும் மனதாக்கத்தை விடுத்து தேர்தலில் வாக்களிப்போம் என்ற வேண்டுகோள் தான், இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உள்வீட்டு பிரச்சனை கூத்தாடிக்கு கொண்டாட்டமாக போகக்கூடாது என்பதில், பண்டாரவன்னியன் ஆண்டமக்கள் போலவே சங்கிலியன் ஆண்ட மக்களும் அன்று உறுதியாக இருந்ததால் தான், சம்மந்தர் கேட்ட முப்பது ஆசனங்களும் கூட்டமைப்புக்கு கிடைத்தது. சாதிக்கும் என நம்பிய அந்த சபையில் நடந்ததை, சக்தி டிவியில் பார்த்தபோது அது, பொது சந்தை போல் இருந்தது.

கௌரவ சபையை கண்ணிய குறைவாக எழுதிவிட்டேன் என, எம் ஜி ஆர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு சட்டசபையில் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த சபாநாயகர் பி எச் பாண்டியன் அவர்கள், ஆனந்தவிகடனில் வந்த சட்டசபை உறுப்பினர்கள் பற்றிய கருத்துபடம் காரணமாக, அதன் ஆசிரியர் எஸ் பால்சுப்ரமணித்தை சிறையில் அடைத்தது போல், என்னையும் செய்ய முடியாது. காரணம் முதல்வர் எம் ஜி ஆர் அரசுக்கு அபகீர்த்தி என்பதால், முதல்வரை குளிரவைக்க சபாநாயகர் எடுத்த முடிவு அது. ஆனால் இங்கு மோதலே முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தவிசாளர் சிவஞானத்துக்கும் தான். தங்கள் பதவி கௌரவத்தை விட்டு சபையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இவர்களை எப்படி கௌரவ முதல்வர் என்றும் கௌரவ தவிசாளர் என்றும் எழுதுவது. அதனால் முதல்வர், தவிசாளர் என்றே தொடர்ந்தும் விழிப்பேன். வாக்களித்த மக்கள் போல் மௌனித்திருக்க வேண்டிய சூழ்நிலையில் நான் இல்லை என்பதும் உண்மை.

தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஒரு உறுப்பினர் பேசினால் அதை குறுக்கிடாது, முழுமையாக கேட்டபின் தன் பக்க நியாயங்களை பதிலாக கூறுவது அமைச்சருக்கு அழகு. அதேவேளை அமைச்சர் பேச எழுந்தால் அவரிடம், உறுப்பினருக்கு ஒதுக்கபட்ட நேரத்தை குறிப்பிட்டு, அமைச்சரிடம் உங்களுக்கு பதில் அளிக்க நேரம் தரப்படும், என கூறவேண்டியது தவிசாளர் கடமை. இருவரும் ஒரே நேரத்தில் பேச தவிசாளரும் குறுக்கே தன்னிலை விளக்கம் கூற முற்பட்டது சபை ஒழுங்கல்ல. ஆனாலும் அதுதான் நடந்தது. காரணம் அமைச்சர் தவிசாளரை நேரடியாக குற்றம்சாட்டி, உங்கள் முதுகு சொறியத்தான் இவ்வாறு உறுப்பினர் பேசுகிறார் என கூற, யாருக்கும் முதுகு சொறியும் அவசியம் எனக்கு இல்லை என சொறி, சிரங்கு, படை, மருந்து விற்கும் நடைபாதை கடை போலானது, வட மாகாணசபை. பொது முக்கியம் வாய்ந்த பிரேரணை என்ற அடிப்படையில், அமைச்சர் சம்மந்தமாக அதுவரை தாம் அடக்கி வாசித்த விடயத்தை ஊறுப்பினர்கள் அரங்கேற்றினர் என்பது தான் உண்மை.

பாதீனியத்தில் தொடங்கி மரநடுகை, குளங்கள் திருத்தபடாமை, இரணைமடு நீர், கடல்நீர் சுத்திகரிப்பு, யாழ் நீர் ஏரிகளின் அணைக்கட்டு, கூட்டுறவுதுறை ஊழல், சுண்ணாக நிலத்தடி நீர் நிபுணர் குழு உறுப்பினருக்கு பதவி லஞ்சம் என குற்ற பட்டியல் நீண்டு சென்றது. இதில் வருத்தம் தரும் நிகழ்வு தவிசாளர் தன்பங்கிற்கு சீமெந்து ஊழல் பற்றி குறிப்பட, சினமுற்ற முதல்வர் அதை ஆராய ஒரு குழு நியமிக்கபட்டுள்ளது என கூற, அந்த குழுவை நியமித்தது நானே என தவிசாளர் பதில் கூற, அத்தோடு உங்கள் கடமை முடிந்தது அதனால் அந்த குழுவை அடிமைப்படுத்த முயலாதீர்கள் என முதல்வர் ஆவேசமாக கூறியது, அவர்கள் இருவரும் தங்கள் பதவி கௌரவத்தை சற்றும் எண்ணிப்பார்க்காத செயல் எனவேபட்டது. நடந்திருப்பது ஊழலா இல்லையா என்ற விடயத்துக்கு அப்பால், மக்களால் வழங்கப்பட்ட கௌரவ பதவிகளில் இருந்து கொண்டு சபையின் கௌரவத்துக்கு புறம்பாக, பொறுமை இழந்த இவர்களா மக்களின் பிரச்சனைகளை பொறுமையுடன் தீர்ப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.

எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் பொறுப்புடன் கூறிய விடயம் பாராட்டப்பட்ட வேண்டியது. மக்கள் பிரச்சனை சம்மந்தமாக பேச முற்பட்டால் சுருக்கமாக பேசுங்கள், நேரம் போதாது என தடுக்கும் தவிசாளர், ஆளும்தரப்பு கூடும் கூட்டத்தில் பேசவேண்டிய விடயத்தை இங்கு பேசி, ஏன் சபை நடவடிக்கையின் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என குறிபிட்டு, 1984ல் வெளிவந்த “பாவம் மக்கள்“ எனும் கவிதை தொகுப்பு நூல் பற்றி குறிப்பிட்டு, அதனை தேடி எடுத்து மாகாண சபை நூலகத்தில் வைக்கவேண்டும் என கூறியது, ஆளும்கட்சிஉறுப்பினர்களின் மூக்கில் இரத்தம் வரப் பண்ணியிருக்கும். அவர் கூறிய இன்னொரு விடயம் சற்று நெருடலானது. ஆயுத போராட்ட காலத்தில் பல இயக்கங்கள் இருந்தன, அவை தமக்குள்ள மோதின. இவர்களிடம் தமிழ் ஈழத்தை கொடுத்து பார்க்கவேண்டும் அப்போது தெரியும் என்ன நடக்கும் என்று கூறுவர், அந்த நிலைமையை தான் இந்த சபையில் காண்கிறேன் என்ற அவரின் மனநிலையில் தான், வட மாகாண சபையை உருவாக்கிய மக்களும் இருப்பார்.

பொறுப்புடன் செயல்பட வேண்டிய தவிசாளரை பார்த்து, கடந்த இரண்டு வருடங்களில் இந்த சபையை அரை நாள் தான் பிரதி தவிசாளர் நடத்தினார். அன்று எவ்வளவு கண்ணியத்துடன் இந்த சபை நடவடிக்கை நடைபெற்றது என கூறியதன் மூலம், தவிசாளரின் செயல்பாடுகள் கண்ணியமற்றது என அமைச்சர் குத்திக்காட்டுகிறார். இந்த சபையையும் உறுப்பினர்களையும் முட்டாள்களாக்கிவிட்டார் அமைச்சர் என குற்றம் சாட்டுகிறார் உறுப்பினர். சீமெந்து ஊழல் விசாரணைகள் நடைபெறும்போதே, குற்றம் நடந்தது என கூறுகிறார் தவிசாளர். அதுபற்றி இப்போது பேசாதீர்கள் என்கிறார் முதல்வர். இருவரும் நிதானம் இழந்தவர்களாக தங்கள் உடல் மொழி மற்றும் குரல்களால் மோதலை வெளிப்படுத்துகின்றனர். தொடர்ந்து பேசிய உறுப்பினர்களை குறுக்கீடு செய்த அமைச்சர்சர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தன்வாதத்தை முன்வைக்கிறார். தொலைக்காட்சி தொடர்போல் சபை நடவடிக்கை இடம்பெறுவதாக ஆளும் கட்சி உறுப்பினரே ஆதங்கப்படுகிறார்.


இத்தனையும் பார்க்க முடிந்தால் அதுவும் அவர்கள் விளங்கக்கூடிய மொழியில் ஒளிபரப்பானால், அது போதும் உதய கம்மன்விலவுக்கும் விமல் வீரவன்சவுக்கும், எம்மை பரிகாசம் செய்து எள்ளி நகையாட. கூடவே சிவாஜிலிங்கம் குறிப்பிட்டதுபோல எதிர்வரும் செப்டம்பரில் ஏனைய மாகாணசபைகள் கலைக்கப்படும் போது, குடுமிபிடி சண்டை நடக்கும் வட மாகாணசபையையும் கலைக்கவேண்டும் என உதயவும், வீரவன்சவும் தெற்கில் கொடிபிடித்து, கோசமிட்டு ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தாலும், அது சாத்தியம் இல்லை என்பதால் தமது பங்காளி வாசுதேவ நாணய க்காரவை சீண்டி, இது உங்கள் சம்மந்திக்கு பொருத்தமில்லாத வேலை எனவே அவரே ஆளுநரிடம் வட மாகாணசபைசபை கலைக்கசொல்லி சிபார்சு செய்துவிட்டு, கொழும்பு திரும்பசொல்லுங்கள், நாம் கூடிய விரைவில் அமைக்க முற்படும் அரசில், அவரை ஆளுநர் ஆக்குவோம் எனவும் கூறலாம். கோத்தாவும் தன் பங்கிற்கு இப்படி தமக்குள்ள மோதுவார்கள் என தெரிந்திருந்தால் தேவானந்தா கேட்டபடி மாகாணசபை தேர்தல் காலத்தில், ஆயுதங்களை அவரிடமே விட்டுவைத்திருப்பேன் என ஆதங்கப்படலாம். கமரூன், சமந்தா பவர், சுஸ்மா, ஹுசைன் மட்டுமல்ல ஒபாமா வந்தாலும் எம் உள்வீட்டு சண்டை ஓயவே ஓயாது.

Read more...

இலங்கை அவசரப்படத் தேவையில்லையாம். கூறுகின்றார் ஐ.நா பிரதிநிதி


நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் அவசரப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உண்மை, நீதி மற்றும் வன்முறைகளை தடுத்தல் சம்பந்தமான விசேட பிரதிநிதி பேப்லோ டி கிரிப் (Pablo de Greiff) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் சம்பந்தமாக தேடிப் பார்ப்பதற்கு கடந்த ஜனவரி மாதம் 26ம் திகதி முதல் பெப்ரவரி 01ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த விசேட பிரதிநிதி வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் எந்தவொரு நாடும் குறுகிய காலத்திற்குள் பொறுப்புக்களை நிறைவேற்றியதில்லை என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களுக்கும் போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குதல் மற்றும் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துவதனூடாக அந்த மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

மருத்துவரின் உதவியுடன் தற்கொலை! மனதை பதறவைக்கும் இறுதிவார்த்தைகள். வீடியோ

சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துக்கொண்ட தொழிலதிபர் ஒருவரின் இறுதி நிமிடங்கள் நேரடியாக படமாக்கப்பட்டு வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள சர்ரே நகரில் சைமன் பின்னர்(57) என்ற தொழிலதிபர் டெப்பி(51) என்ற பெயருடைய தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.

திருமணமாகி 15 வருடங்கள் மகிழ்ச்சியாக சென்றபோது, அவரது வாழ்க்கையையே திசை திருப்பும் வகையில் மோட்டார் நியூரான்(motor neurone) என்ற கொடிய நோய் அவரை தாக்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நரம்பு மண்டல் பழுதாவதுடன், தினமும் மரண வேதனையை அனுபவிக்க நேரிடும்.

கடந்த சில மாதங்களாக இந்த நோயின் உச்சக்கட்ட வேதனைக்கு சென்ற சைமன் தனது வாழ்க்கையை தானே முடிவு செய்துக்கொள்ள தீர்மானித்துள்ளார்.

இந்த முடிவை தொடர்ந்து, ‘இந்த மரண வேதனையை எதிர்க்கொள்ள முடியவில்லை. எனது வாழ்க்கையை நானே முடித்துக்கொள்ள முடிவு செய்துவிட்டேன்’ என சில மாதங்களுக்கு முன்னர் தனது நண்பர்களுக்கு கைப்பேசி மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

இதனை அறிந்த அவரது டெப்பி, ‘உங்களை தற்கொலை செய்துக்கொள்ள அனுமதிக்க மாட்டேன். நீங்கள் எங்களோட கடைசி நிமிடம் வரை வாழ வேண்டும்’ என கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.



ஆனால், மரண வலியை தாங்க முடியாத சைமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்துள்ளார்.

கணவனின் நிலையை கண்டு வேதனை அடைந்த டெப்பி, ‘நீங்களே தற்கொலை செய்துக்கொள்ள என் மனம் ஏற்க மறுக்கிறது. சுவிட்சர்லாந்து சென்று, மருத்துவர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்’ என அனுமதி அளித்துள்ளார்.

சைமனின் இந்த முடிவு வெளியானதை தொடர்ந்து, அவரது இறுதி நாட்களை அவரை வைத்து நேரடியாக ஒரு ஆவணப்படத்தை பி.பி.சி செய்தி நிறுவனம் தயாரித்தது.

மனைவி, மகள்களுடன் இருந்த கடைசி நாட்கள் முதல் சுவிட்சர்லாந்து நாட்டில் அவருக்கு மரணம் ஏற்பட்டு அவரது சடலத்தை சவப்பெட்டியில் வைப்பது வரை நேரடியாக படம் பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துக்கொள்ள சட்டப்படி அனுமதி உள்ளது.

இதனை அறிந்து சுவிஸின் பேசில் மாகாணத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் சைமன், அவரது மனைவி டெப்பி மற்றும் 4 நண்பர்கள் தங்கியிருந்தனர்.

தற்கொலை செய்துக்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக அனைவரும் அங்கு மகிழ்ச்சியாக உணவருந்துகின்றனர்.

பின்னர் மறுநாள்(கடந்தாண்டு அக்டோபர் 19ம் திகதி) காலை 9.30 மணியளவில் சைமனை மருத்துவ கட்டிலில் படுக்க வைக்கப்படுகிறார்.



தனது மனைவியின் கைகளை பற்றிய சைமன் ‘டெப்பி, உன்னுடன் வாழ்ந்த இந்த 15 ஆண்டுகளை நான் மறக்கவே மாட்டேன். எனக்கு அமைந்துள்ள அன்பான மனைவி, மகள்கள் போன்று வேறு யாருக்கும் அமைய மாட்டார்கள்.

நான் உன்னை காதலிப்பதை விட என்னை நீ அதிகமாக காதலிப்பது எனக்கு நன்றாக தெரியும்.

திடீரென ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து உன்னிடம் பேசாமலேயே நான் உயிரிழக்கவில்லை. இப்போது, இந்த தருணத்தில் உன் கைகளை பற்றியவாறு நான் இந்த உலகத்தை விட்டு பிரிகிறேன். நமது மகள்களை நன்றாக பார்த்துக்கொள். குட் பை’ என கூறுகிறார்.

முகம் முழுவதும் புன்னகை தழும்ப சைமன் இந்த வார்த்தைகளை பேசிக்கொண்டு இருந்த அதே நேரத்தில் அவருக்கு மரணத்தை தரும் ஊசி செலுத்தப்படுகிறது.

சரியாக 9.38 மணி நேரத்தில் சைமனின் உயிர் பிரிகிறது. பின்னர், அந்த அறைக்கு ஒரு சவப்பெட்டி கொண்டுவரப்பட, அதில் சைமனின் உடல் வைக்கப்பட்டு மூடப்படுவதுடன் இந்த ஆவணப்படம் நிறைவு பெறுகிறது.

நேற்று முன் தினம் பி.பி.சி தொலைக்காட்சிக்கு சொந்தமான சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த ஆவணப்படத்தை இதுவரை சுமார் 11 லட்சம் பேர் பார்த்து உருக்கமான பதில்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால், ’ஒரு மனிதனின் கடைசி நிமிடங்களை நேரடியாக படம் பிடித்து வெளியிடுவது பயங்கரமானது, வேதனையாது’ என சில தொண்டு நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கு சைமனின் மனைவி டெப்பி பதிலளிக்கும்போது, ‘எனது கணவரின் இறுதி நிமிடங்களை படமாக்கியது சிலருக்கு வேதனையை அளித்திருக்கலாம்.

ஆனால், இந்த காட்சிகளை பார்க்கும் அத்தனை மருத்துவர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு இதுபோன்ற கொடிய நோய்களை தடுப்பது எப்படி என்பது குறித்து ஆழமான விவாதங்களுக்கு ஆரம்பமாக அமையும் என்பதால் தான் இது ஆவணப்படமாக்கப்பட்டது’ என பதிலளித்துள்ளார்.








Read more...

Sunday, February 7, 2016

EPRLF, TELO, PLOTE, EPDP ஆகியவற்றின் ஆயுதங்களை களைந்திருக்கா விட்டால் இன்றும் மஹிந்த ஜனாதிபதி. கோட்டா

டக்ளஸிடம் ஆயுதங்களை பறித்திருக்காவிட்டால் அவர் இன்று வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் மஹிந்த இன்றும் ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச. சிலோன் ருடே க்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை இழந்தார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் :

தமிழ் ஆயுதக்குழுக்களான ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் மற்றும் ஈபிடிபி யினரின் ஆயுதங்களைக் களைந்திருக்காவிட்டால் நாம் வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்போம். நான் அவர்களின் ஆயுதங்களை மீள கையளிக்குமாறு வேண்டினேன். ஆனால் அதற்கான காலம் இன்னும் வரவில்லை என டக்ளஸ் , கருணா போன்றோர் மறுத்தார்கள். ஆயுதங்கள் களையப்பட்டால் த.தே.கூ வெற்றி பெறும் , எனது சகோதரன் தோல்வியடைவார் என்று அவர்கள் கூறினார்கள். ஆனாலும் எனக்கு அப்பிரதேசங்களில் அமைதியே தேவையாகவிருந்தது. ஆகவே ஆயுதங்கள் யாவற்றையும் மீளளியுங்கள் எனக் கூறினேன்.

ஆகக்குறைந்தது மாகாண சபைத்தேர்தல் முடியும்வரையாவது ஆயுதங்களை வைத்திருக்க விடுங்கள் என்று டக்ளஸ் கோரினார். நான் இல்லை என்றேன் அத்துடன் ஆயுதங்கள் அற்றதோர் தேர்தலை அங்கு நடத்தவே நான் விரும்புகின்றேன் என்றேன். அவர் ஒத்துக்கொண்டார். த.தே.கூ வெற்றி பெறும் என அவர் என்னை எச்சரித்தார். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் அங்கு ஜனநாயகம் நிலவ வழி விடுங்கள் என்றேன். நான் அவர்களின் ஆயுதங்களை களைந்திருக்கா விட்டால் டக்ளஸ் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார். இன்றும் மஹிந்த ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

Read more...

இரட்டை கோபுர தாக்குதல் சதித் திட்டம் பின்லேடன் மூளையில் உதித்தது எப்படி?- புதிய தகவல்களை வெளியிட்டது அல்-காய்தா

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சதித் திட்டத்தை ஒசாமா பின்லேடன் தீட்டியதற்கு எகிப்தைத் சேர்ந்த விமானி தூண்டுகோலாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்ட 110 மாடி இரட்டை கோபுரங்களைக் கொண்ட உலக வர்த்தக மையத்தை அல்-காய்தா தீவிரவாதிகள் 2001 செப்டம்பர் 11-ம் தேதி விமானங் களை மோதி தகர்த்தனர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் பலியாகினர். 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.

அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சதித் திட்டத்தை அவர் எவ்வாறு உருவாக்கினார் என்பது குறித்து அல்-காய்தாவின் அதிகாரப்பூர்வ இதழான ‘அல்-மஸ்ரா’வில் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 1999 அக்டோபர் 11-ம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இதில் 100 அமெரிக்கர்கள் உட்பட 217 பேர் பலியாகினர்.

இது விபத்து என்று முதலில் நம்பப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையில் எகிப்தைச் சேர்ந்த துணை விமானி அல்-பட்டோடி திட்டமிட்டு விமானத்தை கடலில் மூழ்கடித்திருப்பது தெரியவந்தது.

இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம்தான் இரட்டை கோபுர சதித் திட்டத்தை தீட்ட பின்லேடனுக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது.

விமான தாக்குதல் குறித்து அல்-காய்தா மூத்த தலைவர்களிடம் அவர் பேசியபோது, விமானத்தை ஏன் கடலில் மூழ்கடிக்க வேண்டும், அதற்குப் பதிலாக ஏதாவது கட்டிடத்தின் மீது மோதினால் என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதன் அடிப்படையில்தான் இரட்டை கோபுர தாக்குதல் சதித்திட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தினார்.

இவ்வாறு அந்த இதழில் கூறப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் செல்வாக்கு குறைந்து வருகிறது. அதேநேரம் சிரியா, இராக்கில் பெரும் பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அந்த அமைப்பில் ஆசியா, ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் இருந்து ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருகின்றனர்.

எனவே அல்-காய்தா இயக்கத்துக்கு இளைஞர்களை இழுக்க ஒசாமா பின்லேடன் பெயரை பயன் படுத்த அந்த அமைப்பு திட்டமிட் டுள்ளது. அதற்காக இதுபோன்ற பரபரப்பு தகவல்களை அல்-காய்தா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

அயல் நாடுகளில் இலங்கைக்கே முதலுரிமையாம். சுஷ்மா மைத்திரியிடம் தெரிவிப்பு.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் வாழ்த்துச் செய்தியுடன் ஜனாதிபதியைச் சந்தித்தார். இலங்கை அரசு பின்பற்றும் புதிய செயற்பாடுகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

அனைத்து இன மக்களுக்கும் இடையில் சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை, இந்திய அரசாங்கத்தின் வரவேற்பினைப் பெற்றுள்ளதாக சுஷ்மா சுவராஜ் இங்கு தெரிவித்தார்.

மிக முக்கியமான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

அயல் நாடுகளுடன் சிறந்த உறவுகளைப் பேணுவது இந்தியாவின் கொள்கையாகக் காணப்படுவதாகவும், அதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் “டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் முன்னேற்றம்” எனும் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

இந்தக் கண்காட்சியை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது.

* இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுமங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றது.

* இந்திய வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவிரை இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

* இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

* இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இன்று பிற்பகல் சந்திப்பு இடம்பெற்றது.

* சுஷ்மா சுவராஜூக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களிடையிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Read more...

இத்தாலி தூதரகத்தில் 18 மில்லியனுக்கு ஆட்டையை போட்டவர் யார்?

கடந்த கால ஆட்சியில் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தகவல்களைப் பெற்றுள்ளனர். தூதரக அலுவலகத்திற்கு சொந்தமான 18 மில்லியன் (18,400,000) ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை அவிழ்த்திவிட்டுள்ளனர். அதன்படி தூதரக நிதிப் பிரிவு பொருப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

தூதுவரின் ஆலோசனைபடி குறித்த பணத்தை சில கணக்குகளுக்கு வைப்பிலிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த மோசடியின் பின்னணியில் தூதுவரும் உயர் மட்ட தரப்பினரும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்து தகவல்கள் வௌியாகி கைது செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பணத்தை தனிநபர், அமைப்பின் கணக்கில் வைப்பிலிடுவது குறித்து அதிகாரிகள் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட உத்தரவில் அவர்கள் இவ்வாறு கணக்கில் பணம் வைப்பிலிட்டுள்ளனர். அந்த அரசியல்வாதிகள் மற்றும் உயர்பீடத்தில் உள்ளவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றார்கள். அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

Read more...

கூட்டு எதிர்க்கட்சியினர் சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 9ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் கரு ஜயசூரியடம் இது குறித்து கோரிக்கை முன்வைக்க எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காது, சுயாதீனமாக இயங்க கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தரப்பினர் தம்மை கட்டுப்படுத்துவதனால், சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியின் பாத்திரத்தை தமது தரப்பு வகித்த போதிலும் நாடாளுமன்றில் அதற்கான சந்தர்ப்பங்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Read more...

புலிகள் விடயத்தில் விக்கினேஸ்வரனுக்கு கன்னத்தில் பளார் விட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் இளவரசர் ஹூசைன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றார்.

இந்த வரிசையில் இன்று வட மாகாணத்திற்கு சென்ற அவர் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் சென்றார் என்பது சிறப்பம்சமாகும். அத்துடன் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்தார். இதன்போது முன்னாள் பயங்கரவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என விக்னேஸ்வரன் மனித உரிமைகள் ஆணையாளரை வேண்டியுள்ளார்.

இவ்வேண்டுதலை மிகவும் கடுந்தொனியில் நிராகரித்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர். பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு மனித உரிமைகளை மீறியதாக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களது வழக்கு விசாரணைகளை மூடிவிட்டு அவர்களை பொது மன்னிப்பு என்ற போர்வையில் விடுதலை செய் என இறைமையுள்ள அரசொன்றை கோருவது மனித உரிமைகள் ஆணையாளரகிய எனது செயற்பாடுகளுக்கு முற்றிலும் முரணானதாக அமையும். ஆகவே அவர்கள் நிரபராதிகளாயின் அவற்றை நீதிமன்றில் நிரூபித்து விடுதலை செய்துகொள்ளுங்கள். இதையே நான் சிரியாவிலும் சொல்லியுள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக சிரியர்களுக்கு ஒரு நியாயத்தையும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நியாயத்தையும் என்னால் வழங்க முடியாது என்ற போர்வையில் அவரது பதில் கடுந்தொனியில் அமைந்திருந்தாக சந்திப்பில் கலந்து கொண்ட வட மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

இதேநேரம் வட மாகாண சபை உறுப்பிர் டெனீஸ்வரன், ஐஸ்ஐஸ் பயங்கரவாதிகளை ஐ.நா அடக்கவேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அது மூன்றாம் உலக யுத்தத்திற்கு வழிவிடும் என்றும் ஹூசைனிடம் தெரிவித்துள்ளார்.

Read more...

Thursday, February 4, 2016

தமிழர்கள்: தென் பகுதி நிலமைகளுக்குள் உட்புகுதல் வேண்டும். கோமின் தயாசிறி

தமிழர்கள் வடக்கைவிட அதிகம் தென்பகுதி அரசியலைத்தான் அவதானிக்க வேண்டும்.

பயங்கரவாதம் ஒரு தனிநாடு தேவை என்கிற உணர்வை ஏற்படுத்தும் பாதையைsouthern வடபகுதி தமிழர்கள் மத்தியில் விட்டுச் சென்றுள்ளது, எல்.ரீ.ரீ.ஈ யினால் மூளைச்சலவை செய்யப்பட்ட அந்த உணர்வு புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பிவரும் பணத்தின் மூலம் உயிரோடு வைக்கப் பட்டுள்ளது. மாகாணசபை நிலைப்பாட்டின்படி வடக்கில் பிறந்திருப்பது, காலாவதியான இந்திய மருந்து அதற்கான பதில் இல்லை என்று தேடிப்பார்க்கும் முயற்சி. வடக்கு விரும்பும் தற்போதைய தேவை உள்நாட்டு தயாரிப்பான ஒரு மாற்றீட்டு யோசனை முன்வைக்கப் படுவதை: அதாவது கொழும்பில் தயரிக்கப்பட்டு மற்றும் யாழ்ப்பாணத்தில் சுவை சேர்க்கப்பட்டு விற்பனை செய்யவேண்டிய பதார்த்தமாக இருக்க வேண்டும்.

உள்நாட்டில் வளர்ந்த பயங்கரவாதத்தை இராணுவம் வெற்றி கொண்டதின் பின்னர் தமிழரின் பெருமை காயமடைந்து விட்டது. பாதிக்கப்பட்ட தெற்கு இயல்பாகவே அதில் மகிழ்வடைந்தது. சிறைப்பிடிக்கப் பட்டவர்களின் கரங்களில் அகப்பட்ட வடக்கு அவமானத்தால் கூனிக் குறுகியது என்றாலும் தோல்வியடைந்து சிறைப் பிடிக்கப் பட்டவர்களுக்கு அளவுக்கு மீறி ஆதரவு வெளியிட்டு அதை பெரிதுபடுத்தியது. பயங்கரவாத்திலும் மேலாக ஜனநாயகம் வழங்கும் நலன்களை உணர்ந்து கொண்டது. ஆனால் பின்தங்கிய நிலை காரணமாக அதைப் புரிந்து கொள்ள அதிக காலம் பிடித்தது. கடந்த காலங்களை பின்னோக்கிப் பார்த்தால், பயங்கரவாதத்தை பாராட்டுவது அவர்களின் வாழ்க்கை வழிக்கு ஒத்ததாக இல்லை. தென்பகுதியினரின் லௌகீக வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது வடபகுதியினர் வாழ்க்கை மிகவும் பழமையானது. தெற்கு அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றியாளர்களான தென்பகுதியினர் வடக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் நியாயமான மனக்குறைகளை தீர்த்து வைப்பதில் பரந்த மனதுடன் செயல்பட வேண்டும்.

அரசியலமைப்பு மாற்றங்கள் சமூகங்களை இணைக்கப் போவதில்லை ஆனால் இனவாத அரசியலை தூண்டிவிடுவதன் மூலம் தங்கள் பணிகளை புதுப்பித்துக் கொள்ளுவதற்கு தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எந்த ஆறுதலையும் தராத ஒரு அரசியலமைப்பு பிறப்பதற்கு சாத்தியமில்லை. உள்ளுராட்சி தேர்தல்களுக்குப் பின்னர் தமிழர்கள், பிரதான பகுதி அரசியலுடன் இணைந்து ஒருமித்து வேலை செய்து பரஸ்பர நன்மைகளை பெறுவதை கவனத்தில் கொள்ளவேண்டும். நல்லிணக்க செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) மத்திய அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவையில் கௌரவமான இடங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும், இங்கு குறிப்பிட வேண்டியது, மத்திய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது, மற்றும் அது உயிர்வாழ்வதற்கு ரி.என்.ஏ யினை நம்பியிருக்க வேண்டியதில்லை.

தோற்றுப்போன அரசாங்கம் ஒன்றை தூக்கி நிறுத்த தாமதமாக முன்வருவது, சிங்களவர்களின் மனதில் சந்தேகங்களை உருவாக்கி எதிர்மறையான விளைவுகளைத் தரும். இனி ஒருபோதும் மீண்டும் ஒரு “ஐதேக - ஸ்ரீலசுக” இணைந்த ஆட்சி உருவாக முடியாது. மையத்தின் மதிப்பை பாராட்ட வேண்டுமானால் அதை சுவைத்துப் பார்க்கவேண்டும் மற்றும் சுவை பார்ப்பதற்கு இயலக்கூடியதாகவும் இருக்க வேண்டும். தலைவர் சம்பந்தனின் வாழ்நாளின்போதே எந்த ஒரு இணைப்பும் எளிதானதாக இருக்கும், இங்கு சுமந்திரன் ஒரு பொறியியல் பாத்திரத்தை வகிக்க முடியும். ரி.என்.ஏ யானது ஐதேக அல்லது ஸ்ரீலசுக அல்லது இரண்டுடனும் சேர்ந்து ஒரு கூட்டு அரசாங்கத்தில் வாழும்போதுதான் ஒன்றிணைப்பு என்கிற கருத்து அர்த்தமுள்ளதாக மாறும். ஸ்ரீலங்காவாசி என்கிற அடையாளத்தை முன்னேற்றுவது அவசியம், வித்தியாசமான கலாச்சாரத்தைக் கொண்ட வெவ்வேறு தரப்பினர் ஒரே குடும்பமாக வாழும்போது அதற்கு பாதுகாப்பு தேவைப்படும். யுத்தம் ஒரு கடந்தகால நிகழ்வு என்கிற கருத்தை நிச்சயம் ஏற்படுத்த வேண்டும். இணைப்பு என்பதன் கருத்து ஐதேக - ஸ்ரீலசுக வில் உள்ள பெரும்பான்மை சிங்களவர்கள் ரி.என்.ஏ யில் உள்ள சிறுபான்மை தமிழர்களுடன் ஒன்றிணைவது – கணிசமான அளவு வாக்காளர்கள்.

அது ரி.என்.ஏ பிரிவினைவாதத்தை தூக்கியெறிந்துவிட்டு மத்தியுடன் அதிகாரத்தை பகிர்வதற்கு தயாராக உள்ளது என்பதை வெளிப்படுத்தும். ரி.என்.ஏ மத்தியில் தோற்றுவிக்கப்படும் நன்மைகளைப் பிரித்தெடுத்து தங்கள் வசமுள்ள அதிகாரத்தின் மூலம் அவர்களின் மக்களுக்கு அந்த நலன்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். சமூகங்களக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது நல்லிணக்கத்தின் ஒரு முன்னுரையாகும். ஐதேக மற்றும் சிறிசேன பிரிவிலுள்ள சிங்கள மக்களின் நம்பிக்கையை ரி.என்.ஏ பெறவேண்டும். ஒற்றையாட்சி அரசியலமைப்பில் உள்ள அதிகாரப் பகிர்வின் கீழ் ரி.என்.ஏ அமைச்சர்கள், அவர்களின் மக்களின் நியாயமான மனக்குறைகளை நிவர்த்தி செய்ய முன்வரலாம். யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் புதிய சிந்தனைகள் தோன்றியிருக்கலாம் மற்றும் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பின் கீழ் ரி.என்.ஏ திறமையாக செயலாற்ற இயலக்கூடிய ஒரு சூழ்நிலையை தோற்றுவித்ததுக்கான பாராட்டு மகிந்த ராஜபக்ஸவுக்கே வழங்கப்பட வேண்டும். புலிகள் செயற்பாட்டில் இருக்குமானால் ரி.என்.ஏ உயிர்வாழ்வதற்காக அவர்கள் தாளத்திற்கு ஏற்ப நாட்டியமாட வேண்டி இருந்திருக்கும் இல்லையா? எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்திருந்தால் பலவகையான பலவீனங்களை காண்பிக்கும் தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரனின் தலைமையின் கீழான ஒரு மாகாணசபை தோன்றியிருக்குமா?

மிதவாத அரசியலின் எல்லைகளுக்கு அப்பால் இருப்பதை தீவிரவாதிகள் தேர்வு செய்யும்போது தமிழ் அரசியல்வாதிகளிடத்தில் வேற்றுமைகள் எழக்கூடும். தமிழ் அரசியல்வாதிகளைக் காட்டிலும் தமிழ் மக்களுக்கு நன்மைகள் பாயவேண்டும் என ரி.என்.ஏ உறுதி மேற்கொள்ள வேண்டும். வீணான மாகாணசபை முறை மூலமாக எல்.ரீ.ரீ.ஈயினை ஜனநாயக மடிப்புக்குள் ஈர்ப்பதற்காக இந்தியாவின் தவறான சிந்தனையினால் 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, இதில் வாக்காளர்கள் காரணமாக தெரிவு செய்யப்பட்டவர்கள் நன்மைகளில் பெரும் பகுதியினை பிரித்தெடுக்கிறார்கள். வடக்கு அரசியல்வாதிகள் உண்மையில் ஒரு தீடீர் பயணத்துக்குள் இறங்குவதற்கு முன்னால் தென்பகுதி அரசியலை உற்றுக் கவனிக்க வேண்டும்.

ஐதேக ஒரு சௌகரியமான வலயம் என ஜனாதிபதி சிறிசேன கண்டுகொண்டால், அவருக்கு வெகு தூரம் பயணிக்க வேண்டிய தேவை இல்லை. அவரை இன்றைய நிலைக்கு அவர்கள்தான் கொண்டு வந்தார்கள். மக்களுக்காக ஒரு மனிதன் என்கிற உண்மையை ஐதேக வின் உயர்மட்டம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. ரணில் விக்கிரமசிங்காவின் நடவடிக்கைகளினால், ஐதேகவுக்கு சிறிசேன வரவேற்கத் தக்க ஒரு சொத்தாக மாறியுள்ளார்..

சிறிசேன ராஜபக்ஸ பிரிவினருடன் இணையப் போகிறாரா? உள்ளுராட்சி தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன் அது சாத்தியமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் புதிய கட்சிக்கு தாவுவதை அவர் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க நேரி;டும். அதன் முடிவுகளுக்காக காத்திருப்பது அவர் கடக்கும்போது விரிக்கப்படும் சிவப்புக் கம்பள வரவேற்பை இழக்கவேண்டி இருக்கும் என்று அர்த்தமாகும். அவர் தனது மரியாதையை பாதுகாத்துக் கொண்டு பச்சை மூலையிலேயே இருக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தல்களில் ஒரு மும்முனை போட்டிக்கு வாய்ப்பு இருந்தால் சிறிசேன மிகவும் மோசமான முறையில் மூன்றாவதாகத்தான் வருவார். புதிய வாக்களிப்பு முறையின் மூலம் ஐதேக, சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரியமான மகன்களை தானே தத்தெடுத்துக் கொள்ளும். வாக்கு எண்ணிக்கையில் ஐதேக சிறிசேனவின் வேட்பாளர்களை மழுங்கடிக்கும். புதிய கட்சி ஐதேகவுக்கு ஒரு கடுமையான போட்டியை கொடுக்கலாம் ஆனால் சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடித்துவிடும், அப்போது தேர்தல் முடிவுகளின் பின்னர் வெளியேறும் கதவுகள் விரியத் திறக்கும்.

ஜனாதிபதியால் ஒரு அரசாங்கத்தை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ முடியும்.

சிறிசேன தனது சொந்த மனிதன் என்கிற அந்தஸ்தில்தான் வளர்ந்துள்ளார். அவர் ஒரு சொத்து ஆனால் பாராளுமன்றத்தில் உள்ள அவரது வெறுப்பான மனிதர்களின் வரவால் மங்கலான தோற்றத்தை கொண்டிருக்கிறார். அவரால் தனியாக எதையும் செய்ய முடியாது. அவருக்கு சாய்ந்து கொள்ள ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. ஒரு ஜனாதிபதி என்கிற வகையில் தான் ஆதரவு தெரிவிக்கும் பகுதிக்கு உதவியாக அவரால் திறமையாக செயல்பட முடியும், அவரது வேட்பாளர்கள் பயனற்றவர்களாக இருப்பதினால் அது மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. தற்போது சிறிசேனவின் வேட்பாளர்கள் புதிய எண்ணங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளக் கூடியவர்களாக உள்ளார்கள் இதன் அர்த்தம் ஐதேக தேவையற்றவர்களை தத்தெடுத்துள்ளது, எந்தப் பட்டியலிலும் அவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியால் பொதுவாக உள்ளுராட்சி தேர்தல்களில் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும்.

ஒரு புதிய அரசியலமைப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக ஐதேக பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும். இல்லையெனில் கூட்டணி ஒரு மெதுவான மரணத்துக்கு தள்ளப்படும் மற்றும் அரசாங்கங்களை மண்டியிடச் செய்யும் முட்டாள்தனமான 19வது திருத்தம் காரணமாக மீதமுள்ள மூன்று வருடங்களுக்கும் பலவீனமான ஒரு பாராளுமன்றத்தின் ஆட்சி ஆரம்பிக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெற்றியாளர்களை தெரிவு செய்வதில் மகிந்த ராஜபக்ஸவைபோல ஐதேகவால் தேர்ந்தெடுக்க முடியாது, புதிய கட்சியில் வாக்கு பிடிப்பவர்களுக்கு குறைவு ஏற்படும் சாத்தியம் உள்ளது. சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் பெரும் பகுதியை இழக்க நேரிடும்.

விளம்பரம் தேடுவதற்காக சிறிசேனவின் முகாமிலிருந்து தேவையற்றவர்களை தன்பக்கம் இழுத்து மகிந்த தனது பட்டியலை விரிவு படுத்தமாட்டார், அது நிச்சயமில்லாத மிதக்கும் வாக்காளர்களை அருவருப்பூட்டி தேர்தல் நாளன்று அவர்களை வீட்டிலேயே இருக்கச் செய்துவிடும். பழைய முகங்கள் பலவற்றை ஈடு செய்வதற்கு மகிந்த அணியினருக்கு பல புதிய முகங்கள் தேவைப்படுகிறது, அவர்கள் பதவிக் கவர்ச்சி மற்றும் சலுகைகள் காரணமாக மரணம் வரை பிரிய மாட்டார்கள். சந்தேகமான சக்திகள்;, விருந்தோம்பல் உறைவிடங்கள் வழங்குபவர்கள் தேசியப் பட்டியலில் இடம்பெறுவார்கள். அதிகாரப் படிநிலையான கூட்டங்களில் வழங்கப்படும் உணவு மற்றும் பான வகைகளின் தரம் காரணமாக அவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

சிறிசேனவின் நம்பகமான தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தடுமாற்றத்தில் அவரைக் கைவிட்டு ஸ்ரீலசுக வாக்குகளை திரும்ப பெறுவதற்காக எதிரணிக்கு தாவலாம் - இறுதியாக கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் உள்ளுராட்சி சபையில் ஒரு இடத்தை தக்கவைக்க உதவலாம். ஐதேக அணியில் உள்ள அடிமட்டத் தொண்டர்கள் தங்களுடன் தொடர்பில்லாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். மிதக்கும் வாக்காளர் ஒரு சிந்தனைவாதி பதவி ஆசைக்காக பக்கத்துக்கு பக்கம் தாவும் வேட்பாளருக்கு வாக்களிக்க நிச்சயம் வாக்குச்சாவடிக்கு நடக்கமாட்டார். மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து திரண்டு வரும் வெண்ணையை பெறுவதற்கான காலம் கனியும் மட்டும் காத்திருப்பார், அதேவேளை சிறிசேன அவர்களுக்கு பலவகை சலுகைகளையும் வழங்கி அவர்களை பிடித்து வைப்பதற்காக கடும் முயற்சி செய்வார்.

அரசியலமைப்பு தயாரிப்பது வசதியான ஒரு சாக்கு, நாடு பிளவு படுவதை பாதுகாத்தோம் என்று கூறி அரசியலமைப்புக்கு குழிபறித்து கம்பீரமான போர் வீரர்களாக வெளியேறி எதிர்கட்சி வாக்காளர்களை வசமாக்கி ஹீரோக்களாக மாறலாம். சிறிசேன கொண்டு நடப்பது தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களின் ஒரு கூட்டத்தை, அவர்கள் மகிந்த ராஜபக்ஸவின் ஆதிக்கம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கையால் நியமன பாராளுமன்ற உறுப்பினர்களாகி ஐதேக தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ளார்கள். குறையும் ஸ்ரீலசுக வாக்குகளை ஈடு செய்வதற்கு எத்தனை ஐதேக வாக்குகளை அவர்களால் பெறமுடியும்?

அடுத்த பாராளுமன்றத் தேர்தல் தினத்துடன் பாராளுமன்றத்திற்கு 75 வருடங்கள் பூர்த்தியாகிறது, முகப்புத்தகம் வாயிலாக மகிந்த ராஜபக்ஸ புதிய முகங்களுக்கு விண்ணப்பம் செய்வாரா? மாறாக இரண்டு தடவைகள் தோற்றதினால் அப்படி இல்லையா. எல்லா பதவிகளையும் வகித்த மரியாதைக்குரிய ஒரு மூத்த ஆட்சியாளர் என்கிற வகையில் தலைமை பொறுப்பை ஒரு புது முகத்திடம் கையளித்தால் அது மரியாதைக்குரிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு போதுமானளவு மகிமையை பெற்றுத் தரும் - தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி, கூர்ந்த அரசியல் அனுபவங்கள் மூலம் தங்கள் எல்லைகளை தெரிந்து கொள்ள வேண்டும்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதன் முன்னோர்களால் தூண்டப்பட்ட நிரந்தர தாழ்வு மனப்பான்மையால் பாதிப்படைந்துள்ளது, அதை வழிநடத்த பண்டாரநாயக்கா அல்லது ஒரு ராஜபக்ஸ அவசியம் - அதைத்தவிர ஏனையவர்கள் சாதாரண குடிமகன்களே என்று கூறப்படும் இந்த கோட்பாட்டை ஏற்றுக் கொள்வது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறுபிள்ளைகளுக்கு கழிப்பறையை பயன்படுத்த பயிற்சி அளிப்பதுபோல உள்ளது மற்றும் இந்த போலி வழிபாட்டு மரபினை பொய் என சிறிசேன நிரூபித்துள்ளார். இந்த பிரபல குடும்பங்களுக்குள் மற்றவர்கள் அதை ஏற்பதை தடுக்க மோசமான சண்டை சச்சரவுகள் தோன்றியுள்ளன.

தலைமை தாங்குவதற்கு கச்சிதமாகப் பொருந்துபவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே வளர்ந்த கோத்தபாய ராஜபக்ஸதான், தனி ஒருவனாக தன்னிடம் ஒப்படைக்கப் பட்டதை சிறப்பாகச் செய்தவர், பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததுடன், அலட்சியப் படுத்தப் பட்டதால் விரைவாகவே மங்குவதாகத் தோன்றிய கொழும்புக்கு புதிய வர்ணத்தை பூசிப் பொலிவை உண்டாக்கியவர். யுத்த வர்ணத்தால் அலங்கரிக்கப்பட்ட புதிய முகம், முதல் தடவையாக போட்டியிடுபவர் வெற்றி பெறும் சமிக்ஞையை காண்பிப்பவர். ராஜபக்ஸவின் பெயரை சுமப்பதற்கு மற்றவர்களைவிடத் தகுதியானவர்.

இராணுவ பொருத்தங்களை கொண்டிருப்பது சிங்களவர்களை மற்றும் அதன் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடியது. இருந்தபோதும் சிறுபான்மையினரை திரும்ப முடியாத விளிம்புக்கு விரட்டிவிட முடியும். மிதக்கும் வாக்குகள் மொத்தத்தையும் அவர் பெறுவார், ஆனால் சிறபான்மையினரைப் போலவே ஐதேக வின் தேசப்பற்றுள்ள சிங்கள பெரும்பான்மையினர் வாக்களிக்கும் பாணியிலும் அது தங்கியுள்ளது. தந்திரமான வாக்களிப்பினால் அவர்கள் கோத்தாவை அகற்ற முடியும்.

உள்ளுர் அரசியல் நுணுக்கங்களை கோத்தா சாதாரண மனிதனிடம் இருந்து கற்றுக்கொள்வது அவசியம் இல்லையெனில் அவர் மற்றொரு பொன்சேகாவாக மாறிவிடுவார். அவரத மூத்த சகாக்களிடம் பொறாமையும் பதுங்கியுள்ளது. அரசியலுக்கு அவர் அனுபவமில்லாத புதியவர் என்பதால் அவரது வெற்றி அவர் தெரிவு செய்யும் ஆலோசகர்களிடமே தங்கியுள்ளது.

தமிழர்கள் வடக்கைவிட அதிகம் தென்பகுதி அரசியலைத்தான் அவதானிக்க வேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Read more...

மஹிந்தவின் எடுபிடி சிறிதரனுக்கு இன்று சுதந்திரமற்ற நாளாம்.

சுதந்திர தின விழாக்களை பகிஸ்கரிக்குமாறு மஹிந்த சார்பு சிங்கள இனவாதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்தது. சிங்கள இனவாதிகளின் இனவாத வெறிக்கு வடக்கில் தீனிபோடும் முதலாவது எடுபிடியாக சிவஞானம் சிறிதரன் என்ற முட்டாள் செயற்பட்டு வருவதும் யாவரும் அறிந்ததே. அந்த வகையில் சிங்கள இனவாத கும்பல் காலால் இட்ட கட்டளையை தலையால் நிறைவேற்றியுள்ளான் சிறிதரன்.

இன்றை சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் மற்றும் ஊடக பேச்சாளர் சம்பந்தன் , சுமந்திரன் கலந்து கொண்டிருந்த நிலையில் வடக்கின் சில பகுதியில் சிறிதரன் மக்களை கூட்டி சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்தவிற்கு தனது விசுவாசத்தை காட்டியுள்ளான்.

நாட்டிலுள்ள உள்நாட்டு பிரச்சினைகளுக்கு அப்பால் நாட்டின் தேசிய சுதந்திர தினம் என்பது அனைவருக்கும் பொதுவானதும் புனிதமானதுமாகும். நாட்டில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட நாசகார செயல்களால் கடந்த 3 தசாப்தங்கள் சுதந்திர தினம் இருளில் மூழ்கியிருந்தது. ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பங்காளிகளாக உருவாக்கிய ஒர் அரசின் தலைமையில் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்ட சுதந்திர தினத்தை அக்கூட்டமைப்பின் அங்கத்தினனான கட்டாக்காலி ஊதாசீனம் செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வஞ்சக போக்கினை எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது.

இன்று தமிழ் மக்களுக்கு சுதந்திர தினம் அல்ல என்று தெரிவித்துள்ள சிறிதரன் இலங்கையின் அரசியல் யாப்பை முற்று முழுவருமாக ஏற்றுக்கொள்வதாக சத்தியபிரமானம் செய்து அதனால் கிடைக்கப்பெறும் சிறப்புரிமைகளையும் சொகுசு வாழ்கையையும் அனுபவித்து வருகின்றான்.

ஆகவே சிறிதரன் சத்தியப் பிரமானம் செய்யும் போது எந்த தினத்தை இலங்கையின் சுதந்திர தினமாக ஏற்றுக்கொண்டான் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.



Read more...

சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம். இனவாதத்திற்கு இரையாகப்போகும் சம்பந்தனின் கண்ணீர்.

இன்று காலை கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்த எதிர்கட்சித் தலைவரின் கண்களிலிருந்து தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டபோது கண்ணீர் சொட்டியதாக நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

தேசிய நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடுவது தொடர்பில் கடந்த காலங்களில் பல சர்ச்கைகள் உருவாகியிருந்த நிலையில் இன்று அதற்கு ஓர் முடிவு வந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும், சம்பந்தனின் கண்ணீர் இனவாதிகளால் பல கோணங்களில் விமர்சிக்கப்படலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

அத்துடன் இலங்கையின் சம்பிரதாயத்தை எதிர்கட்சி தலைவர் கடைப்பிடிக்கவில்லை என்ற ஓர் பாரிய குற்றச்சாட்டும் சம்பந்ததன் மீது எழுந்துள்ளது. இலங்கையில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் சுதந்திர தினத்தில் எதிர்கட்சி தலைவருக்கு என்ற ஒரு தனி ஆசனம் ஒதுக்கப்படும். அதே நேரம் எதிர்கட்சி தலைவரும் தனது சுதந்திர தினச் செய்தியை மக்களுக்கு ஊடகங்கள் ஊடாக அன்றில் அறிக்கை ஊடாக வழங்குவார். ஆனால் எதிர்கட்சி தலைவர் காரியாலயத்திலிருந்து இதுவரை சுதந்திர தினச் செய்தி கிடைக்கப்பெறவில்லை என பல ஊடக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் எதிர்கட்சி தலைவரின் ஊடக இணைப்பாளரை ஊடகங்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும் அது கைகூடவில்லை என தெரியவருகின்றது.

தமது மகன் கைது செய்யப்பட்டமை காரணமாக மஹிந்த ராஜபக்ச தம்மீது அவதூறான குற்றங்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகளும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார்.






Read more...

தேசியக் கொடியை ஏற்றாவிடில் புலிக் கொடியையா ஏற்றுவது? ரணில் காட்டம்

சுந்திர தினமான இன்று தேசியக் கொடியை ஏற்ற வேண்டாமென ஐக்கிய எதிர்கட்சி என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் கம்பன்பில மற்றும் விமல் உட்பட்ட குழுவினர் வேண்டுதல் விடுத்திருந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலிக் கொடியை ஏற்றாவிட்டால் புலிக்கொடியையா ஏற்றுவது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

நேற்று சரத் பொன்சேகாவுடன் ஒப்பந்தை செய்து கொண்டதன் பின்னர் ஊடகவியளாளர்கள் மத்தியில் பேசிய அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பினார். அங்கு அவர் தொடர்hந்து பேசுகையில்

பிரபாகரனுக்குப் பிறகு முதற்தடவையாக சிரேஷ்ட சிங்கள வீரர்கள் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டாமெனக் கூறியிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிக்கின்றது என்றார்.

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடிக்குப் பதிலாக புலிக்கொடியை ஏற்றி மாவீரர் தினத்தை கொண்டாட வேண்டுமென்பதா? இவர்களுடைய எதிர்பார்ப்பு என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

வட மாகாண சபையில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ள நிலையில் தேசியக் கொடியை மறுதலிக்கும் புதிய வர்க்கமொன்று நாட்டில் உருவாகி வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தேசியக் கொடியை ஏற்க மறுக்கும் ஒருவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பது பாராளுமன்ற யாப்புக்கு முரணானது எனக் கூறிய பிரதமர் இதுகுறித்த இறுதித் தீர்மானத்தை நாட்டு மக்களே எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனநாயகக் கட்சிக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று மாலை அலரிமாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இதன்போது பிரதமர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்.

பிரதமர் தனது உரையில் மேலும் கூறியதாவது,

தமிழ் கூட்டமைப்பினர் தனி இராஜியம் வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றி 40 வருடங்களுக்குப் பின்னர் இம்முறை தான் நாம் முதற்தடவையாக ஒரு தாய் மக்களாக சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம். இது தேசிய அரசாங்கத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.

தற்போது வட்டுக்கோட்டை தீர்மானம் இல்லை. தமிழ் கட்சிகள் அனைத்தும் எம்முடனேயே உள்ளன. அதேபோன்று தான் முஸ்லிம் கட்சிகளும், ஏனைய அரசியல் கட்சிகளும் ஆகும். நாம் அனைவரும் ஜனநாயகத்தை நோக்கியே செயல்படுகின்றோம்.

தேசிய தினத்தன்று தேசிய கொடியை ஏற்ற வேண்டாமென்றும் தேசிய தினத்தை கொண்டாட வேண்டாமென்றும் கூறும் எமது சிரேஷ்ட வீரர்களை நினைக்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில் அவ்வாறு மக்களிடையே கருத்துக்களை பரப்பி வரும் ஒரு சிலர் இருக்கின்றனர்.

சுதந்திர தினத்தன்று வழக்கம் போல் எமது தேசிய நிகழ்வு நடத்தப்படவுள்ளது. விரும்பினால் அதில் கலந்து கொள்ளலாம். இல்லையேல் கலந்து கொள்ளாமல் இருக்கலாம்.

சுதந்திரதினத்தன்று தேசியக்கொடியை ஏற்றுவதில் உள்ள தவறு என்ன? இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் டி.எஸ். சேனாநாயக்கவினால் ஏற்றப்பட்ட இலங்கையின் தேசியக் கொடியை எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, சேர் ஜோன்கொத்தலாவல ஜி.ஜி. பொன்னம்பலம் உள்ளிட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் யாவரும் எமது தேசியக் கொடியை ஏற்றுக்கொண்டனர்.

இப்போது இந்த கொடியை ஏற்ற வேண்டாம் என்கிறார்கள். பிரபாகரன் தேசியக் கொடியை ஏற்ற வேண்டாமெனக் கூறியதற்குப் பின்னர் முதற்தடவையாக யார் இதனை வேண்டாம் என்கிறார்கள் என்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது.

தேசியக் கொடிக்கு பிரபாகரன் மறுப்பு தெரிவித்திருந்தார். அக்காலத்தில் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எல்.ரீ.ரீ.ஈயினர் இடம் வழங்கவில்லை. நாம் அதற்காக போராடினோம். ஆனால் அன்று பிரபாகரன் கூறியதையே இன்று சிங்களவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் வீரர்களும் கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

அப்படியென்றால் நாம் என்ன புலிக்கொடியையா ஏற்றுவது? தேசியக்கொடியை ஏற்ற வேண்டாம் என்றால் அன்றைய தினம் எந்த கொடியை ஏற்றுவது என்று தான் நாமும் கேட்கிறோம்.

சுதந்திர தினத்தை கொண்டாடாமல் மாவீரர் தினத்தையா நாம் கொண்டாடுவது? மாவீரர் தினத்தை சுதந்திர தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்றா அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?

தேசியக் கொடியை ஏற்க மறுப்பதாக இருந்தால், எவ்வாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியும்? பாராளுமன்ற யாப்பில் இந்த நாட்டை பாதுகாப்பதாக நாம் உறுதி மொழி வழங்கியுள்ளோம். அதன் பின்னரும் தேசியக் கொடியை எவ்வாறு மறுக்க முடியும்.

வட மாகாண சபையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் அனைவருக்கும் சொந்தமானதே இந்த தேசியக் கொடியாகும். தேசியக்கொடியை மறுதலிக்கும் புதிய வர்க்கமே இங்கு உருவாகி வருகின்றது.

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றி இன்றைய நாளை கொண்டாட வேண்டாமென்றால் எமக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. நாட்டு மக்களே இதற்கான சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் இலங்கையர்கள். எமது இந்த பயணமும் ஒன்றானது. முதற்தடவையாக எங்களைப் பற்றி துளியளவும் நினைக்காது உங்களுக்காக நாம் அரசியல் நடத்துகின்றோம். இது உங்களுக்கான அரசியல் ஆகும்.

அரசியல் மூலம் மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள்? அரசாங்கம் ஆட்சியிலிருக்கும் இந்த 05 வருடங்களுக்குள் மக்கள் எம்மிடமிருந்தும் பாராளுமன்றத்திடமிருந்தும் எதனை எதிர்பார்க்கிறார்கள்? அதற்கேற்றவாறு எமது அரசியல் பாதையை நாம் மாற்ற வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை உருவாக்கியதன் பிரதான நோக்கம் அனைவரும் ஒரு தாய் மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய நாம் புதிய அரசியல் திட்ட வரைபு ஒன்றை தயாரிக்க வேண்டும். அதன் பின்னர் வரும் பொதுத் தேர்தலில் எம்மால் அதிகூடிய பலத்துடன் வெற்றிபெற முடியும். விரும்பினால் தனியாகவோ அல்லது இப்போது போன்று கூட்டு சேர்ந்தோ ஆட்சி நடத்த முடியும்.

ஐக்கிய தேசிய முன்னணியும் ஜனநாயக கட்சியும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது. இது குறித்து நாம் கடந்த டிசம்பர் மாதம் கலந்துரையாடினோம். ஜனவரி மாதமே இதற்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதாக இருந்த போதும் சற்று காலதாமதம் ஆகியுள்ளது.

2015 ஆம் ஆண்டு புரட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துக் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு தொடர்ந்தும் பயணிப்பதே எமது இலக்காகும்.

ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்தும் நிலைபெறச் செய்வதே ஐக்கிய தேசியக் முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிலைப்பாடாகும்.

ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான புரட்சியில் முதன் முதலில் தடம் பதித்தவரே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆவார். இதன் காரணமாகவே இவருக்கு சிறைவாசம் அனுபவிக்கவும் நேர்ந்தது. ஊழல் மிக்க ஆட்சிக்கு எதிரான இவரது கொள்கை காரணமாகவே இவரையும் எமது முன்னணியில் இணைத்துக் கொண்டுள்ளோம்.

Read more...

Wednesday, February 3, 2016

அமெரிக்காவில் 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் கடந்த 1979-ம் ஆண்டு ஒரு கடையை கொள்ளையடிக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் கடைக்காரரை கொலை செய்த பிரான்டன் ஆஸ்டர் ஜோன்ஸ் என்பவரை போலீசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து குற்றவாளியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியான நிலையில் கடந்த 36 ஆண்டுகளாக பிரான்டன் ஆஸ்டர் ஜோன்ஸ் இங்குள்ள ஜாக்சன் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 12.46 மணியளவில் டாக்டர்கள் மற்றும் சிறை அதிகாரிகள் முன்னிலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது மரண தண்டனை இது, என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

புலிகளுக்கு நிதிசேகரித்தவருக்கு ஜேர்மனியில் 18 மாத சிறைத்தண்டனை.

பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டுக்காக இலங்கையர் ஒருவருக்கு 18 மாத ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஜேர்மன் ஹம்பேர்க் பகுதியில் வசித்து வரும் 53 வயதான ஜீ.யோகேந்திரன் என்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மனிய பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்ட நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவே கருதப்படுகின்றது.

இந்தநிலையில்இ 2007-2009ம் ஆண்டு காலப் பகுதியில் யோகேந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளுக்காக குறித்த நபர் 81000 யூரோக்களை திரட்டியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாகவும் அவற்றை புலிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் யோகேந்திரன் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.

இதே நேரம் ஜேர்மனில் இவ்வாறு புலிகளுக்கு உதவி செய்தவர்கள் மற்றும் அவ்வமைப்பிற்காக பிரச்சார வேலைகளில் ஈடுபட்டவர்கள் படுகின்றவர்கள் சுமார் ஆயிரம் பேரளவில் ஜேர்மனியிலுள்ளதாக நீதிமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com