Sunday, October 18, 2015

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?- நிலாந்தன்

தனது பல தசாப்த கால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் எல்லையோரக் கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன.

ஒரு செயற்பாட்டாளராக, கைதியாக, நாடு கடந்து வாழ்பவராக முதிய வயதிலும் தேடப்படும் ஒருவராக ஆறுதலின்றி சதா அலைந்த ஒரு பெருவாழ்வு கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அதிகம் பேருடைய கவனத்தை ஈர்க்காமல் அமைதியாக முடிந்து போயிற்று.

அவருடைய இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. அது அண்மைத் தசாப்தங்களில் அங்கு நடந்த இறுதி நிகழ்வுகள் எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டுக் காணப்பட்டது. கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் வேறுபட்டு நிற்கும் எல்லாத் தரப்புக்களும்; பங்குபற்றிய ஓர் இறுதி நிகழ்வு அது. எல்லாக் கட்சிக்காரர்களும், செயற்பாட்டாளர்களும் அந்த நிகழ்வில் போற்றிப் பேசுவதற்கு ஏதோ ஒன்று டேவிட் ஐயாவின் வாழ்க்கை முழுவதிலும் இருந்திருக்கிறது.

பெருமளவில் அரசியல் பிரமுகர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்ட அந்நிகழ்வில் மிகக்குறைந்தளவு பொது ஜனங்களே பங்குபற்றியிருக்கிறார்கள். இந்நிகழ்வு நடந்து இரண்டு நாட்களின் பின் நடந்த மற்றொரு இறுதி நிகழ்வில் ஒப்பீட்டளவில் கூடுதலான பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். அதுவும் ஒரு செயற்பாட்டாளரின் இறுதிக் நிகழ்வுதான். தமிழ் ஐயா என்று அழைக்கப்படும் கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு செயற்பாட்டாளரின் இறுதி நிகழ்வு அது. அவர் அந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அதில் பொதுமக்கள் கூடுதலாகக் கலந்து கொண்டார்கள். ஆனால் டேவிட் ஐயா கிளிநொச்சியில் வசித்திருக்கிறார் என்பது அவர் இறந்தபொழுதே பலருக்கும் தெரியவந்தது.

தனது நாடு திரும்புதலை அவர் பிரசித்தப்படுத்த விரும்பவில்லைப் போலும். கிளிநொச்சியில் உள்ள குருகுலத்தை ஸ்தாபித்த மகா ஆழுமைகளில் ஒன்று. நான்கு மாதங்களாக தங்கள் மத்தியில் சந்தடியின்றி வாழ்ந்து மறைந்திருக்கிறது என்பதை அந்த மக்களுக்கு யார் எடுத்துக் கூறுவது?

அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட எல்லா அரசியல்வாதிகளை விடவும் அவர் அதிகம் ‘ரிஸ்க்’ எடுத்திருக்கிறார். அதிகம் அர்ப்பணித்திருக்கிறார். அந்த அர்ப்பணிப்புக்களுக்குப் பரிசாக எதையுமே பெற்றுக் கொள்ளவில்லை. திருமணம் செய்யவில்லை. சொத்து எதையும் சேர்த்து வைத்திருக்கவில்லை. யாரோடும் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளவில்லை. இப்படிப் பார்த்தால் அவருடைய அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றிய எல்லா அரசியல்வாதிகளை விடவும் அவர் உயர்ந்து நிற்கிறார்.

அரசியல்வாதிகளுக்கும் செயற்பாட்டாழுமைகளுக்கும் அவர் ஓர் அரிதான முன்னுதாரணம். குறிப்பாக ஜனவரி 08 இற்குப் பின் தமிழ் சிவில் வெளியை செயற்பாட்டு இயக்கங்கள் எவ்வாறு கையாளலாம் என்று சிந்திக்கப்படும் ஓர் அரசியல் சூழலில் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் அவரிடமிருந்து குறிப்பாக இரண்டு முக்கிய முன்னுதாரணங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

01. ஒரு மெய்யான சத்தியாக்கிரகி எப்படி மெய்யாகவே ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டி வந்தது? என்பது.

02.ஒரு செயற்பாட்டு இயக்கம் ஆயுதப் போராட்ட இயக்கங்களோடு தொடர்புறுவதால் வரக் கூடிய பின்விளைவுகள் பற்றியது.
இவை இரண்டையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ் மிதவாதிகள் அடிக்கடி கூறுகிறார்கள் சத்தியாக்கிரகத்தில் ஏற்பட்ட தோல்வியே ஆயுதப் போராட்டத்திற்குக் காரணம் என்று. அது ஒரு முழு உண்மை அல்ல என்பது ஏற்கனவே எனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அகிம்சை என்பது சாகப் பயந்தவர்களின் ஆயுதம் அல்ல. அது சாகத் துணிந்தவர்களின் வாழ்க்கை முறையாகும். காந்தியைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்க்கைமுறையாக இருந்தது. அதனால்தான் அவர் “எனது வாழ்க்கையே எனது செய்தி” என்று கூறத் தக்கதாக இருந்தது. ஆனால் எமது மிதவாதிகளைப் பொறுத்தவரை அகிம்சை எனப்படுவது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கவில்லை. அது ஒரு போராட்ட உத்தியாகத்தான் காணப்பட்டது. கடந்த ஆறாண்டுகால அனுபவமும் அத்தகையதே. அதாவது சாகப் பயந்தவர்களின் போராட்ட உத்தியாகவே சத்தியாக்கிரகம் கையாளப்பட்டு வருகிறது.

இத்தகைய ஒரு பின்னணியில் ஈழத்தமிழர்கள் மத்தியில் அகிம்சையை ஒரு வாழ்க்கை முறையாக வாழ்ந்து காட்டிய ஆளுமைகள் மிக அரிதாகவே தோன்றியிருக்கிறார்கள். டேவிட் ஐயா அத்தகைய ஒருவர். மற்றொருவர் மு. தளையசிங்கம். டேவிட் ஐயா ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளார். தளையசிங்கம் ஓர் ஆன்மீக மற்றும் சமூக அரசியல் செயற்பாட்டாளர். இருவரும் சத்தியாகிரகத்தை தமது நடைமுறை வாழ்வில் விசுவாசமாகக் கடைப்பிடிக்க முற்பட்டார்கள். டேவிட் ஐயா காந்தியம் என்ற பெயரிலேயே அமைப்பினை உருவாக்கினார்.

தளையசிங்கம் பூரண சர்வவோதயம் என்ற ஒரு அமைப்பைக் கட்டி எழுப்ப முற்பட்டார். காந்திய இயக்கம் அதன் ஆரம்பக் கட்டங்களில் வெளியிட்ட ஒரு அரிதான சிறிய நூலை அதன் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் பின்னாளில் புளொட் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவருமாகிய ஒருவர் வைத்திருந்தார். . GANDHIYAM : VAVUNIYA-SRILANKA என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்நூலில் காந்திய இயக்கத்தின் குறிக்கோள்களும் செயற்திட்டங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.ஒருங்கிணைந்த பண்ணைகளுக்கூடாக காந்திய விழுமியங்களை கட்டி எழுப்புவதே டேவிட் ஐயா, மற்றும் மருத்துவர் ராஜசுந்தரம் ஆகியோரின் அடிப்படை இலக்குகளாக அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

வாகன வசதிகள் குறைந்த அந்நாட்களில் டேவிட் ஐயா கென் பாம் டொலர் பாம் போன்ற பகுதிகளை நோக்கி கிட்டத்தட்ட பதினைந்து மைல்களுக்கு மேலாக நடந்து சென்று பணிபுரிந்ததாக காந்தியச் செயற்பாட்டாளரகள் கூறுகிறார்கள்.

கிட்டத்தட்ட 45000 பேர்களையாவது இவ்வாறு எல்லைப்புறங்களிலும் வவுனியா மற்றும் கிழக்குப் பிரதேசங்களிலும் காந்தியம் குடியேற்றியது என்று கூறப்படுகிறது. திருமலையில் உருவாக்கப்பட்ட குடியேற்றங்கள் பின்நாட்களில் அகற்றப்பட்டுவிட்டன. மட்டக்களப்பில் சில குடியிருப்புக்கள் மிஞ்சியிருப்பதாகக் கூறப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் குறிப்பிடத்தக்களவு குடியிருப்புக்கள் தப்பிப்பிழைத்துள்ளன.

1977 இல் நிகழ்ந்த இன வன்முறையின் விளைவாக தமிழ்ப்பகுதிகளை நோக்கி வந்த மக்களை குடியமர்த்தும் நோக்கத்தோடு ஒருங்கிணைந்த பண்ணைகள் உருவாக்கப்பட்டதாக மேற்சொன்ன நூலில் கூறப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் காந்தியம் உருவாக்கிய ஒருங்கிணைந்த பண்ணைகளில் அநேகமானவை இன வன்முறையின் விளைவுகளே எனலாம். அவை ஒருங்கிணைந்த பண்ணை வடிவிலான குடியேற்றங்கள் மட்டுமல்ல. அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குடியேற்றங்களுக்கு எதிரான ஒருவித தற்காப்புக் கவசங்களும் தான்.

நாட்டின் பல்லினத் தன்மையை உறுதி செய்வதற்காகவே அரசின் ஆதரவுடனான குடியேற்றங்கள் செய்யப்படுவதாக தென்னிலங்கையில் இருப்பவர்கள் விளக்கம் கூறுவார்கள். இலங்கை தீவின் எல்லா மாவட்டங்களையும் பல்லினத் தன்மைமிக்கவைகளாக உருவாக்க வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் கூறப்பட்டிருக்கிறது. ஆகப்பிந்திய கணக்கெடுப்புக்களின்படி இப்பொழுது இலங்கைததீவின் எல்லா மாவட்டங்களுமே பல்லினத்தன்மை மிக்கவைகளாக ஆக்கப்பட்டுவிட்டன.

ஆனால் மெய்யான பொருளில் பல்லினத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தை ஸ்தாபிப்பது என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை ஏற்றுக் கொள்வதில் இருந்தே தொடங்குகிறது. ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை கரைப்பதில் இருந்து அல்ல. அரசாங்கத்தால் திட்டமிட்டுச் செய்யப்படும் குடியேற்றங்கள் ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை நீர்த்துப் போகச் செய்து கரைத்துவிடும் உள்நோக்கம் உடையவை. நிச்சயமாக அது பல்லினத்தன்மை மிக்க ஒரு சமூகத்தை உருவாக்காது. மாறாக அது எல்லாவற்றையும் ஒன்றாகக் கரைத்துவிடும் அதாவது பெரிய இனத்துள் சிறிய இனத்தை கரைத்தழித்துவிடும் உள்நோக்கம் உடையது.

காந்தியம் கட்டி எழுப்பிய ஒருங்கிணைந்த பண்ணைகள் மேற்சொன்ன அரசின் உதவியுடனான குடியேற்றங்களுக்கு எதிரான ஒருவித தற்காப்புப் பொறிமுறைதான். இவ்வாறு காந்திய விழுமியங்களுக்கூடாகச் சிந்தித்த டேவிட்ரும் ராஜசுந்தரமும் எப்படி ஆயுதப் போராட்டத்தின் ஆதரவாளர்கள் ஆயினர்? அவர்கள் மட்டுமல்ல. மு. தளையசிங்கம் அணியினரும் கூட பின்னாளில் ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பவர்களாகவே மாறினர். ஆயின் ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய மெய்யான சத்தியாக்கிரகிகள் ஏன் ஒரு கட்டத்திற்குப் பின் அதற்கு முற்றிலும் மாறான ஒரு வழிமுறையை தெரிந்தெடுத்தார்கள்?. அவர்கள் தமது நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை. போராட்ட வழிமுறைகளைத்தான் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் தமிழ் மிதவாதிகளில் எத்தனைபேர் அவ்வாறான ஒரு இறந்தகாலத்தைக் கொண்டிருக்கிறார்கள்? காந்தி சொன்னது போல “எனது வாழ்க்கையே எனது செய்தி” என்று கூறத்தக்க எத்தனை மிதவாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.? இது முதலாவது. குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் டேவிட் ஐயாவிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியது.

இரண்டாவது தமிழ் செயற்பாட்டாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.
1998 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு படைநடைவடிக்கையின் போது வவுனியாவில் பாலமோட்டைக் கிராமத்திற்கு ஊடாக இடம்பெயர்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுது மூத்த அசியல் செயற்பாட்டாளர் ஒருவர் பாலமோட்டையில் இருந்த காந்தியப் பண்ணையைக் சுட்டிக்காட்டி பின்வருமாறு சொன்னார். “காந்திய இயக்கத்தை அதன் போக்கிலேயே விட்டிருக்கலாம். ஆயுதப் போராளிகள் அதற்குள் நுழைந்திருக்கக் கூடாது. காந்தியமும் அதற்கு இடம்விட்டிருக்கக் கூடாது. இப்பொழுது அந்த இயக்கமும் இல்லை. காந்தியப் பண்ணைகளும் இல்லை. ஆனால் ஆயுதப் போராட்டத்தோடு நேரடியாக சம்பந்தப்படாது விட்டிருந்திருந்தால் காந்தியப் பண்ணைகள் தனித்துவமான ஒரு வளர்ச்சியைப் பெற்றிருந்திருக்கும்” என்று.

இது தொடர்பில் காந்தியச் செயற்பாடுகளோடு அதிகம் தொடர்புபட்டிருந்த புளொட் இயக்க உறுப்பினர்கள் சிலரோடு உரையாடினேன். அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் டேவிட் ஐயா ‘எழுநா’ இதழுக்கு வழங்கிய நேர்காணலின் அடிப்படையிலும் ஒரு தொகுதி தகவல்களைத் திரட்டமுடிந்தது. ஆனால் அவை முடிந்த முடிவுகள் அல்ல. காந்திய இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பகுதியும் புளொட் இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பகுதியும் ஓரிடத்தில் சந்திக்கின்றன. எனவே இதில் சம்பந்தப்பட்ட இந்த இரண்டு இயக்கங்களையும் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகப் பேசும்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்படும் ஒரு வரலாறே ஒப்பீட்டளவில் முழுமையானதாக இருக்க முடியும்.

டேவிட் ஐயா கூறுகிறார். புளொட் இயக்கத்தைச் சேர்ந்த சந்ததியாருக்கும் தனக்கும் இடையிலிருந்த தனிப்பட்ட உறவு காரணமாகவே காந்தியத்துக்கும் புளொட்டுக்கும் இடையே நெருக்கம் உண்டாகியது என்று. ஆனால் டேவிட் ஐயாவை விடவும் மருத்துவர் ராஜசுந்தரமே புளொட் இயக்கத்தோடு அதிகம் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. டேவிட் ஐயா அதிகபட்சம் திட்டமிடல் பணிகளையே மேற்கொண்டதாகவும் மருத்துவர் ராஜசுந்தரம்தான் அதிகபட்சம் பண்ணைகளில் களத்திலிறங்கி வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ் மிதவாதிகளிடம் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் குறிப்பாக இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்கள் காந்தியத்தில் தொண்டர்களாக இணைந்தார்கள். இவர்களில் பலர் சந்ததியாரின் தொடர்பு காரணமாக பின்னாளில் புளொட்டில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. புளொட் இயக்கத்தைச் சேர்ந்த சுந்தரத்தால் வெளியிடப்பட்ட “புதியபாதை” என்ற பத்திரிகையை காந்தியத் தொண்டர்கள் விநியோகித்திருக்கிறார்கள். சுந்தரம் பிந்நாளில் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுந்தரம் கொல்லப்பட்டதை அடுத்து காந்தியத்துக்கும் புளொட்டுக்கும் இடையிலான உறவு ஓரளவுக்கு வெளியரங்கமாகியது என்று ஒரு மூத்த புளொட் உறுப்பினர் சொன்னார்.

ஆனால், தமது இயக்கத்தில் வினைத்திறன்மிக்க தொண்டர்களாக உள்ள பலரும் புளொட் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பது டேவிட்டுக்கும் ராஜசுந்தரத்துக்கும் நன்கு தெரிந்திருந்தது என்று நம்ப இடமுண்டு. இக்கட்டுரைக்காக நான் சந்தித்த மூத்த புளொட் உறுப்பினர் ஒருவரிடம் கேட்டேன். காந்தியத்தில் புளொட் சம்பந்தப்பட்டிராவிட்டால் காந்தியம் எப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியைப் பெற்றிருக்கும்?என்று. அவர் சொன்னார் – “காந்தியத்தின் வினைத்திறன்மிக்க தொண்டர்களாக இருந்தவர்களில் பலர் எமது இயக்கத்தோடு தொடர்புடையவர்கள்தான். அவர்கள் இல்லை என்றால் காந்தியம் அப்படி ஒரு வளர்ச்சியைப் பெற்றிருக்காது. தவிர எமது இயக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்காவிட்டாலும் அரசாங்கம் காந்தியத்தை நீண்ட காலத்துக்கு அனுமதித்திருக்காது” என்று.

சிறையுடைப்பில் தப்பிச் சென்ற பின் இந்தியாவில் டேவிட் ஐயா புளொட் இயக்கத்தின் தலைமைத்துவத்தோடு முரண்படத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் புளொட் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற தீப்பொறி அணியோடு அவர் சேர்ந்து இயங்கத் தொடங்கினார். அதன் பின் புளொட் இயக்கத்தால் அவருக்கு வழங்கப்பட்ட உதவிகள் எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய போதும் அந்த இயக்கத்திற்கு அறிவித்திருக்கவில்லை. ஆனால் அவருடைய இறுதி நிகழ்வை அந்த இயக்கமே ஒழுங்கு செய்தது.

ஒரு செயற்பாட்டு இயக்கத்தின் ஒழுக்கத்திற்கும் ஆயுதப் போராட்ட ஒழுக்கத்திற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு குறிப்பாக மக்கள் மயப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு இயக்கமானது ஆயுதப் போராட்ட இயக்கத்தோடு நேரடியாக தொடர்புறுகையில் அந்த ஆயுதப் போராட்ட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அந்த செயற்பாட்டு இயக்கத்தின் போக்கையும் தீர்மானிக்கின்றன. அந்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படுமாக இருந்தால் அந்த செயற்பாட்டு இயக்கமும் தோற்கடிக்கப்படுகிறது.

ஈழத்தமிழ் வரலாற்றில் காந்தியம் இயக்கத்தைப் போலவே மற்றொரு உதாரணமும் உண்டு. யாழ். பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு எழுந்த பொங்தமிழ் என்று அழைக்கப்படும் ஒரு பேரரங்கச் செயற்பாடு அது. இலங்கைத்தீவின் வரலாற்றிலேயே முன்னுதாரணமற்ற ஒரு பேரரங்கச் செயற்பாடு அது. முதலிரு பொங்குதமிழ் நிகழ்வுகளும் ஒப்பீட்டளவில் சுயாதீனமானவை என்று கூறப்படுகின்றது.

ஆனால் அதன் பின் நிகழ்ந்தவை ஆயுதப் போராட்டத்தின் அதிகரித்த செல்வாக்குக்கு உட்பட்டுவிட்டதாக ஒரு விமர்சனம் உண்டு. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் கடந்த சுமார் ஆறு ஆண்டுகளிலும் பொங்குதமிழை ஒத்த ஒரு பேரரங்க நிகழ்வை பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு உருவாக்க முடியாமல் போயிற்று. ஒரு செயற்பாட்டு இயக்கமானது ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புறுகையில் அதன் தனித்துவம் மிக்க அடிப்படை ஒழுக்கத்தை இழக்காமல் இருப்பது அவசியம். இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படும் போது அந்த செயற்பாட்டு இயக்கமும் பின்தள்ளப்பட்டுவிடும்.

தமிழ் சிவில் இயக்கங்கள் டேவிட் ஐயாவின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.

ஆயுதப்போராட்டம் கருக்கொண்ட அதே தசாப்தகாலப்பகுதியில் உருவாகிய ஒரு மகத்தான செயற்பாட்டியக்கம் இடையிலேயே தடைசெய்யப்பட்டடு விட்டது. இப்பொழுது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளான பின்னரும் அப்படியொரு செயற்பாட்டியக்கத்தை கட்டியெழுப்ப முடியவில்லை. ஜனவரி எட்டுக்குப் பின் அதிகரித்து வரும் தமிழ் சிவில் வெளியை வெற்றிகரமாகக் கையாளத்தக்க செயற்பட்டியக்கங்கள் எதையும் அரங்கில் காணமுடியவில்லை. தமிழ்மக்கள் செயலுக்குப் போகாமல் கூடுதலாகக் கதைத்துக் கொண்டிருக்கிறார்களா? இறந்தகாலத்திலிருந்து எதையுமே விரைவாகக் கற்றுத்தேற மாட்டார்களா?


Read more...

Wednesday, September 23, 2015

தமிழீழத்தில் ஆங்கிலத்தில் தூள் கிளப்பும் முதலமைச்சர்.

தமிழர் தாயகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது. அந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் காப்பாற்றுவோம் என தமிழ் மக்களின் வாக்கு பிச்சையை பெற்றுக்கொண்ட வடக்கின் முதலமைச்சர் முற்றுமுழுதாக தமிழ் பேசும் மக்களைக்கொண்ட சபையிலே ஆங்கிலத்தில் தூள் கிளப்புவதை கீழ் உள்ள வீடியோவில் காண முடியும்.

ஐநா மனித உரிமைகள் ஆணயத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக சபையில் பேசிய முதலமைச்சர் விசேடமாக அரசு , துணை ஆயுதக்குழுக்கள் மற்றும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.



புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழில் சொன்னால் குந்தியிருக்கும் ஆசனத்திற்கு ஆப்பு இறுகிவிடும் என்ற காரணத்தினால் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கியிருக்கலாம்.

ஆனால் முதலமைச்சர் பேசிய ஆங்கிலம் சபையிலுள்ள எத்தனைபேருக்கு விளங்கியிருக்கும் என்பதுதான் கேள்வி.

Read more...

Tuesday, September 1, 2015

தோழர் வைத்திலிங்கம் அவர்கள் தனது நூறாவது பிறந்த தினமன்று பிரித்தானியாவில் நினைவு கூரப்படுகின்றார்.

அமரர் வைத்திலிங்கம் அவர்களின் 100வது பிறந்த தினத்தை 2015ம் ஆண்டு நினைவு கூருகிறோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவர் ஒரு சிறந்த கல்விமான், மிகச் சிறந்த கணித ஆசிரியர், பலராலும் பாராட்டப்பட்ட ஒரு அதிபர். இவை யாவற்றையும் விட மிக முக்கியமான காரணம் எதுவெனில் அவரது சுதந்திர வேட்கை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பொதுவுடமை அரசியல் என்பனவாகும்.

இவர் 1915ம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் உள்ள வட்டுக்கோட்டை அராலியில் நிலச் சுவாந்தார் குடும்பத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்று மிகச் சிறந்த மாணாக்கர் எனப் பாராட்டப்பட்டார். அங்கிருந்து கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரிக்கு தேர்வானார். அங்கு கணிதப் பாடத்தில் சிறப்புப் பட்டம் பெற்று புலமைப் பரிசிலும் கிடைக்கப்பெற்றார். இதன் காரணமாக பிரித்தானிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இம்மானுவல் கல்லூரியில் தனது உயர் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு கணிதத் துறையில் மிகச் சிறப்பான உயர் விருதினைப் பெற்றார்.

பிரித்தானியாவில் கல்வியைத் தொடர்ந்த வேளையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை அவதானித்தார். குறிப்பாக இந்திய சுதந்திரத்திற்காக போராடும் பல இளைஞர்கள் காலம்சென்ற இந்தியத் தலைவர் கிருஷ்ணமேனன் அவர்களின் வழிகாட்டலில் அணிதிரண்டு செயற்பட்டனர். இந்திய சுதந்திரத்திற்காக, ‘பிரித்தானியா வெளியேறு’ என்ற இயக்கத்தில் மேனன் அவர்களுடன் இணைந்து அவரின் செயலாளராக செயலாற்றினார். இதன் காரணமாக பல புகழ்பெற்ற மாணவர்கள் பலரின் நண்பரானார்.

மேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்தவரும், இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் இருந்த ஜோதிபாசு மற்றும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரார்களாக செயற்பட்ட பூபேஷ் குப்தா, இந்திரஜித் குப்தா, ரேணுச் சக்கரவர்த்தி, பார்வதி கிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம் போன்றோரின் நெருங்கிய தோழனாகவும் இருந்தார். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் இந்தியாவின் முதலாவது பிரதமாரான ஜவகர்லால் நேரு அவர்களின் மகளும், பின்னர் பிரதமாரகவும் பணியாற்றிய இந்திராகாந்தியின் கணவரான பெருஸ் காந்தியின் மிக நெருங்கிய நண்பராகவும், இவர்களின் காதல் திருமணம் இனிதே நிறைவுற உதவியிருந்தார்.

பிரித்தானியாவில் கல்விகற்ற வேளை இலங்கையில் இடதுசாரி அரசியலை, தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு தனது சக நண்பர்களான பொன். கந்தையா, பீட்;டர் கெனமன் ஆகியோருடன் விவாதித்தது மட்டுமல்லாமல், இம் மூவரும் பிரித்தானிய கம்ய+. கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டனர்.

1939ம் ஆண்டளவில் தனது கல்வியை முடித்து தாயகம் திரும்பியதும் ஏனையோர் போல் உயர்ந்த அரச பதவியை அல்லது பல்கலைக்கழக பேராசிரியர் வேலையை நோக்கிச் செல்லாமல் முழுநேர மக்கள் தொண்டனாக, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் கடமைவீரனாக தம்மை அர்ப்பணித்தார்.

ஆரம்பத்தில் இலங்கையின் பிரபல இடதுசாரித் தலைவரான டாக்டர். எஸ். ஏ. விக்ரமசிங்கவுடன் இணைந்து சமசமாஜக் கட்சியில் பணியாற்றினார். இக் கட்சியே இலங்கையின் முதலாவது இடதுசாரி இயக்கமாகும். துர்அதிர்ஷ்டவசமாக சர்வதேச அளவில் எழுந்த தத்துவார்த்த போராட்டங்கள் இலங்கை இடதுசாரிகளையும் பாதிக்கத் தவறவில்லை. இதனால் டாக்டர். விக்ரமசிங்க மற்றும் சிலர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட இவர் அவ் வெளியேற்றத்திற்கு எதிராக கட்சிக்குள் போராட்டங்களை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். முடிவில் இவரும் வெளியேற்றப்பட்டார்.

சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர்கள் பிரித்தானியாவிலிருந்து தாயகம் திரும்பிய தமது நண்பர்களான பொன், கந்தையா, பீட்டர் கெனமன் மற்றும் பலருடன் இணைந்து ஐக்கிய சோசலிசக் கட்சியை 1940 இல் ஆரம்பித்தனர். தொழிற் சங்கங்களை ஸ்தாபித்து, தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியபோது பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர் இப் போராட்டங்களுக்கு அஞ்சி அக் கம்யூனிஸ்ட். கட்சியை தடைசெய்தார்கள். இவ்வாறான தடைகளை அவர்கள் எதிர்பார்த்தே இயங்கியதால் தடைக்குப் பின்னர் சோர்ந்து போய்விடவில்லை. இரகசியமாக இயங்கினார்கள்.

1943இல் தோழர்களான வைத்திலிங்கம், பொன். கந்தையா, பீட்டர் கெனமன், டாக்டர். விக்ரமசிங்கா போன்றவர்களும் வேறு பலரும் இணைந்து இலங்கை கம்ய+. கட்சியை 1943ம் ஆண்டு யூலை மாதம் 3ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்கள். இதன் கீழ் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம் செயற்பட்டது. இதன் செயலாளராக வைத்திலிங்கம், கட்சியின் பொதுச் செயலாளராக பீட்டர் கெனமன் ஆகியோர் தெரிவாகினர்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் மிகவும் உச்ச நிலையை அடைந்திருந்த வேளை பிரித்தானியர்கள் அங்கிருந்து வெளியேறலாம் என்ற நிலமை அதிகளவில் காணப்பட்டது. இதனால் இலங்கையிலிருந்தும் வெளியேறக்கூடும் என்ற நிலை ஏற்பட்டது. இவ் வேளையில் இலங்கைக்கான அரசியல் யாப்பை உருவாக்கும் பொறுப்பு சோல்பரி ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருந்தது. இவ் ஆணைக்குழுவிற்கு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி சில ஆலோசனைகளை முன்மொழிந்து கட்சியின் சார்பில் பீட்டர் கெனமனும், தொழிற்சங்கங்களின் சார்பில் வைத்திலிங்கமும் தனித்தனியே அனுப்பி வைத்தனர்.

அவ் ஆலோசனைகளின் சாராம்சம் பின்வருமாறு அமைந்திருந்தது.
– இலங்கை என்பது பல்லின சமூகங்கள் வாழும் நாடு.
– பல மதங்களைப் பின்பற்றும் நாடு.
– பல மொழி பேசுபவர்கள் வாழும் நாடு.
– பல கலாச்சாரங்களை பின்பற்றுபவர்கள் வாழும் நாடு.
– இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம்.

மேற்கூறிய அம்சங்கள் அதாவது இன்றைய தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளை அன்றே அரசியல் யாப்பில் இணைக்கப்படும் பிரதான அடிப்படைகளாக கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. அத்துடன் தமிழ் மக்களின் பாராம்பரிய பிரதேசங்கள் என அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும், இப் பிரதேசங்களைத் தாமே நிர்வகிக்கும் உரிமை அதாவது சுயநிர்ணய உரிமை வழங்கப்படவேண்டும் எனக் கோரினர். ஆனால் ஆணைக்குழு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் பின்னர் பேரினவாதம் தலைதூக்கியது. இனப் பிரச்சனை உக்கிரமடைந்தது. தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவை மிகவும் தீவிரமாக தொடர்ந்ததால் நாட்டின் எதிர்காலம் கருதி வட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச சுயாட்சி முறையை வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் முன்மொழிந்தது. இத் தீர்மானம் 1955இல் மாத்தறையில் இடம்பெற்ற கட்சியின் தேசிய காங்கிரசில் அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் பிரதேச சுயாட்சியை அன்றே வலியுறுத்திய ஒப்பற்ற ஒருவர் வைத்திலிங்கம் அவர்களாகும்.

கட்சியின் ழுமு நேர ஊழியனாக செயற்பட்ட இவரை கட்சியின் வட பகுதி வேலைகளுக்காக 50 களில் வடபகுதிக்கு அனுப்பினர். கட்சிப் பணிகளுக்காக வடபகுதி சென்ற அவர் யாழ். இந்தக் கல்லூரியின் ஆசிரியராக பணிகளைத் தொடங்கினார். கணித ஆசிரியராக கடமையாற்றிய அவர் சிறந்த மாணாக்கர்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கென தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்க உழைத்து அதன் விளைவாக வடமாகாண ஆசிரியர் சங்கம் தோற்றம்பெற்றது. தொழிற்சங்கமாக ஆசிரியர் சங்கம் பதிவுசெய்யப்பட்டதோடு ஆசிரியர்களுக்கென இடமாற்றசபை ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. ஆசிரியர்களின் அனுபவங்கள் மாணவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், கல்வித் தரம் வளர வேண்டும் என்பதற்காகவும் வடமாகாண ஆசிரியர் சங்கம் பல பரீட்சைகளையும் நடத்தியது. இதன் பின்னணியில் இவரது அயராத உழைப்பு காணப்பட்டது.

யாழ். இந்துக் கல்லாரியின் ஆசிரியராக இருந்த காலத்தில் உரும்பராய் இந்துக் கல்லாரியின் அதிபராக அவர் பதவி உயர்த்தப்பட்டார். இவரது தலைமையில் இயங்கிய அக் கல்லாரி புதுப் பொலிவைப் பெற்றது. அதிகளவிலான மலேசிய ஓய்வூதியம் பெறும் பிரதேசமாக உரும்பராய் கருதப்பட்டது. இதன் காரணமாக அவர் மலேசியா சென்று பணம் திரட்டி புதிய கட்டடிடங்களை நிறுவினார். அவரது நிர்வாகத்தினை பலரும் புகழ்ந்தனர்.

பல சிறந்த பண்புகளின் இருப்பிடமாக காணப்பட்ட இவர் சிறந்த கல்விமான், சிறந்த ஆசிரியர், தொழிற்சங்கவாதி, புகழ்பெற்ற அரசியல்வாதி ஆவார். அரசியல் கட்சிகளில் உள்ளோர் கட்சிகள் தாவும் நிலை இன்று சர்வ சாதாரணமாக ஆகிவிட்ட நிலையில் கட்சியின் ஆரம்ப காலம் முதல் 1984ம் ஆண்டு வரை கம்யூனிஸ்ட் கட்சியின் அதி உயர் பீடமான அரசியல் குழுவில் இருந்துள்ளார். உடல் நிலை காரணமாக ஓய்வு பெற்ற பின்னரே அவரது பணிகள் ஓய்வுக்குச் சென்றன.

இத்தகைய உயர்ந்த மனிதர்களை நாம் நினைவுகூர்வது சாலப் பொருத்தமே. பல சிறப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தோழர். வைத்திலிங்கம் அவர்கள் எமது மத்தியில் இல்லாவிடினும் அவரது நினைவுகள் எம்மை விட்டு அகலாதவை. அந்த வகையில் அவரது 100வது பிறந்த தினத்தை நினைவுகூர்வதில் நாம் மிகவும் பெருமை கொள்கிறோம்.

ரி. குகதாஸ்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வட மாநில செயலாளர்





Read more...

Sunday, August 30, 2015

ISIS இன் அட்டூழியங்களும், அமெரிக்காவின் சமூகப்படுகொலை போர்களும். Bill Van Auken

செவ்வாயன்று சமூக வலைத் தளங்களில் பதியப்பட்ட படங்கள், சிரியாவின் பால்ம்ரா நகரிலுள்ள 2,000 ஆண்டு பழமையான பால் ஷாமின் கோயில் ISIS ஆல் (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசால்) சிதைக்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. ISIS போராளிகள் அந்த பழமையான கட்டிடமெங்கிலும் வெடிமருந்துகளை வைத்து, பின்னர் அவற்றை வெடிக்க செய்வதை அப்படங்கள் எடுத்துக்காட்டுகின்றன, அக்கோயில் வெறும் இடிபாடுகளாக ஆக்கப்படுகிறது.

பண்டைய உலகின் மிக முக்கிய கலாச்சார மையங்களில் ஒன்றும், கிரேக்க-ரோமானிய எஞ்சிய இருப்புகளில் பாதுகாக்கப்பட்டு வந்த சிறந்த ஒன்றுமான அவ்விடத்தை மனம்போனபோக்கில் இடிப்பதற்கு, ஒரு வாரத்திற்கு முன்னதாக பேராசிரியர் கஹலெத் அசாத் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்டார். பால்ம்ராவில் எஞ்சியிருந்தவற்றை அகழ்வதிலும், மீளமைப்பதிலும் பங்கு வகித்து வந்த 82 வயதான சிரியாவின் அந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், அங்கே சுமார் அரை நூற்றாண்டுகளாக தொல்பொருள்துறை தலைவராக இருந்து வந்தவராவார். அவ்விடத்தைச் சூறையாடுவதில் ISISக்கு அவர் உதவ மறுத்தமைக்காக அவரைக் கழுத்தறுத்து கொன்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும் கல்வித்துறை அமைப்பான யுனெஸ்கோ, அந்த அட்டூழியங்களை "போர் குற்றங்களென" நியாயப்படுத்தக்கூடிய வகையில் கண்டித்ததுடன், “அதற்கு பொறுப்பான குற்றவாளிகள் அவர்களது நடவடிக்கைக்காக கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும்" என்பதையும் சேர்த்துக் கொண்டது.

அந்த நடவடிக்கைக்கும் மற்றும் சிரிய மக்களுக்கு எதிராக மிக இரத்தந்தோய்ந்த அட்டூழியங்களுக்கும் பொறுப்பான குற்றவாளிகள், கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும் என்பது கேள்விக்கிடமற்றது. ஆனால் வெள்ளை மாளிகை, பெண்டகன் மற்றும் சிஐஏ இன் முன்னாள் மற்றும் இப்போதைய தலைமை அதிகாரிகள் தான் அதற்கான பிரதான பொறுப்பாளிகள் என்ற உண்மையே அவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கு தடையாகி விடுகிறது.

மதசார்பற்ற அரபு அரசாங்கங்களுக்கு எதிராக அவர்களது தொடர்ச்சியான ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளுக்காக, ISIS உள்ளடங்கிய இஸ்லாமிய சக்திகளுடன் இயங்கி கொண்டே, மத்திய கிழக்கில் அவர்கள் தான் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டை வீணடித்தார்கள்.

ஒரு கலாச்சார பாரம்பரியத்தை ISIS திட்டமிட்டு அழித்தமை, 1975 இல் தொடங்கி 1979 வரையில் கம்போடியாவில் பொல் பொட் ஆட்சி (Pol Pot) மற்றும் கெஹ்மர் றூஜ்ஜின் குற்றங்களில் ஒரு வரலாற்று முன்னுதாரணத்தைக் கொண்டுள்ளது. அந்த ஆட்சி அந்நாட்டின் கலாச்சார பாரம்பரியங்களை அழிக்க துணிந்தபோது, அது மக்களுக்கு எதிராக பாரிய படுகொலைகள் மற்றும் பயங்கரவாத ஆட்சியை நடத்தி கொண்டிருந்தது.

ISIS மற்றும் கெஹ்மர் றூஜ்க்கு இடையிலான பொருத்தங்கள் கலாச்சாரம் மற்றும் மனிதர்கள் மீதான அவற்றின் காட்டுமிராண்டித்தன தாக்குதல்களோடு முடிந்துவிடவில்லை. இரண்டு விடயங்களிலுமே இத்தகைய அட்டூழியங்களுக்கான முன்நிபந்தனைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஒட்டுமொத்த சமூகங்களைச் சீரழித்ததன் மூலமாக உருவாக்கப்பட்டிருந்தன.
கம்போடியாவில், அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கை நான்காண்டுகளில் அந்நாட்டின் மீது சுமார் 532,000 டன் வெடிகுண்டுகளை வீசியது — இது இரண்டாம் உலக போர் முழுவதிலும் ஜப்பான் மீது வீசப்பட்ட டன் கணக்கிலான குண்டுவீச்சை விட மூன்று மடங்கு அதிகமாகும். அதன் விளைவாக ஏற்பட்ட மரண எண்ணிக்கை அதிகபட்சம் 600,000 ஆக மதிப்பிடப்படுகிறது, அதேவேளையில் 7 மில்லியன் மக்கள்தொகையில் 2 மில்லியன் பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டு, அவர்களது பொருளாதார வாழ்க்கை சிதைக்கப்பட்டது.

சிரியா மற்றும் ஈராக் எங்கிலும் இப்போது ஓடும் இரத்தஆறும் மற்றும் ISIS உம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாகமாக நடத்தப்பட்ட அதேபோன்ற சமூகப்படுகொலை நடவடிக்கைகளின் நேரடி விளைபொருள்களாகும். ஈராக்கில், சட்டவிரோத 2003 அமெரிக்க படையெடுப்பும், அதை தொடர்ந்த ஆக்கிரமிப்பும் மற்றும் அரபு உலகிலேயே மிக நவீன சுகாதார மற்றும் சமூக உள்கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கிய அந்நாட்டைத் படிப்படியாக அழித்தமையும், 1 மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கியர்களின் உயிர்களைப் பறித்ததுடன், கூடுதலாக 5 மில்லியன் பேரை அகதிகளாக்கியது. பென்டகனால் பின்பற்றப்பட்ட பிரித்தாளும் மூலோபாயம், ஈராக்கின் ஷியா மற்றும் சுன்னி மக்களிடையே வேண்டுமென்றே பதட்டங்களை தூண்டிவிட்டு, ஒரு வகுப்புவாத உள்நாட்டு போரை மூட்டியது.

இக்கொள்கையின் துணைவிளைவுகள் தான், அதிகரித்தளவில் பேரழிவுகரமான விளைவுகளோடு, அப்போதிருந்து நீண்டகாலமாக, தேசிய எல்லைகளைக் கடந்து பரவியுள்ளது, இவையனைத்தும் எண்ணெய்வளம் மிகுந்த மத்தியகிழக்கு மற்றும் மத்திய ஆசியா மீது மேலாதிக்கம் செலுத்தும் அதன் குறிக்கோளை முன்னெடுக்க வாஷிங்டன், இராணுவவாதத்தில் புகலிடம் தேடியதால் உந்தப்பட்டதாகும்.

சோவியத்-ஆதரவிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்ற போரை சிஐஏ முடுக்கிவிட்டதிலிருந்து தொடங்கி, இதுவரையில், அமெரிக்கா 35 ஆண்டுகளுக்கும் மேலாக போர்களில் ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் அதுவே ஒசாமா பின் லேடன் மற்றும் அல் கொய்தாவின் ஏனைய ஸ்தாபகர்கள் உட்பட இஸ்லாமிய சக்திகளுடன் பிணைந்திருந்தது.

டிசம்பர் 2011 இல் ஈராக்கிலிருந்து கடைசி அமெரிக்க துருப்புகள் திரும்பப்பெறப்படுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர், வாஷிங்டனும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் லிபியாவில் மௌம்மர் கடாபியின் அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் மற்றும் எண்ணெய் வளம்மிக்க அந்த வட ஆபிரிக்க நாட்டின் மீது அவர்களது சொந்த கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கும் தூண்டுதலற்ற மற்றொரு ஆக்கிரமிப்பு போரைத் தொடங்கினர். லிபிய அரசை சீரழித்தமை மற்றும் கடாபியின் படுகொலை அந்நாட்டை குழப்பத்தில் மூழ்கடித்ததுடன், இதுநாள் வரையில் அங்கே இரத்தஆறு ஓடுகிறது. லிபிய போரில், கைப்பற்றப்பட்ட டன் கணக்கான லிபிய ஆயுதங்களோடு சேர்ந்து, இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் அமெரிக்க பினாமிகளாக பயன்படுத்தப்பட்டனர், அதற்கடுத்து அது — சிஐஏ உதவியுடன் — சிரியாவின் உள்நாட்டு போருக்குள் நீண்டது, இது ISIS ஐ பலப்படுத்தியதுடன் ஈராக்கின் மூன்று மடங்கிற்கும் அதிகமான பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு நிலைமைகளை உருவாக்கியது.

முடிவில்லா "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில், ஈராக்கின் சுன்னி மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் வாஷிங்டன் ISIS க்கு எதிராக ஷியா அடித்தளத்தைக் கொண்ட பாக்தாத் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து மற்றொரு இராணுவ நடவடிக்கையை நடத்தி வருகிறது, அதேவேளையில் துருக்கி, சவூதி அரேபியா மற்றும் இதர சுன்னி வளைகுடா முடியாட்சிகளின் கூட்டணியுடன் சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்ற போதினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் போரில் "மிதவாத" சுன்னி இஸ்லாமியர்களையும் அதன் பினாமிகளாக பயன்படுத்தலாமென அவர்களைக் காண முயன்று வருகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் செவ்வாயன்று பிரசுரித்த ஒரு நீண்ட கட்டுரையில், அல் கொய்தாவுடன் பல்வேறு தொடர்புகளைக் கொண்ட ஒரு சுன்னி இஸ்லாமிய போராளிகள் குழுவான அஹ்ரர் அல்-ஷமாம் க்கு அமெரிக்கா மிக நேரடியாக உதவி வழங்கலாமா என்பதன் மீது ஒபாமா நிர்வாகத்திற்குள் ஓர் உள்விவாதம் நடந்துவருவதை எடுத்துக்காட்டியது. இக்குழு ஏற்கனவே முக்கிய அமெரிக்க கூட்டாளிகளான துருக்கி மற்றும் கட்டாரிடமிருந்து பெருகிய ஆதரவைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தசாப்தகால அமெரிக்க போர்களின் பயங்கர விளைவுகள் இப்போது ஐரோப்பாவிற்குள் பரவி வருகின்றன. அதிகரித்தளவில் நூறு ஆயிரக் கணக்கான அகதிகள் மோசமான நிலையில், வாஷிங்டன் கொலைக்களமாக மாற்றிவிட்ட அவர்களது தாய்நாட்டை விட்டு — பலர் அவர்களின் உயிரையே பணயம் வைத்து — வெளியேறி வருகிறார்கள்.

அவர்கள் தொடங்கிய இந்த பல்வேறு ஆக்கிரமிப்பு போர்களால் விளைந்த இந்த சகல குற்றங்களுக்கும், அட்டூழியங்கள் மற்றும் மனிதயின அவலங்களுக்கும் மொத்தமாக, அரசியல்ரீதியிலும் தார்மீகரீதியிலும், அமெரிக்க அரசாங்கமும் புஷ் மற்றும் ஒபாமாவில் தொடங்கி அதன் உயர்மட்ட நிர்வாகிகளுமே பொறுப்பாகிறார்கள்.

அவர்களில் யாருமே கணக்கில் கொண்டு வரப்படவில்லை. பெருநிறுவன பில்லியனர்களின் ஒரு செல்வந்த அடுக்கைப் பாதுகாப்பவர்களும் மற்றும் அவர்களது பிரதிநிதிகளும் தற்போதைய அரசியல் அமைப்பின் கீழ், அமெரிக்க மக்களுக்கு — இவர்களது போர் எதிர்ப்பை வழமையாக மட்டுப்படுத்திவிடும் அவர்கள் — பதில் கூறக் கூடியவர்களாக இல்லை.

இந்த போர் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்து, அடுத்தடுத்த போர்களையும் மற்றும் அதிகரித்துவரும் ஒரு புதிய உலக போர் அச்சுறுத்தலையும் முடிவுக்குக் கொண்டு வரும் பணியைத் தொழிலாள வர்க்கம் தாங்கியுள்ளது. அது முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கான ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட, ஒரு பாரிய சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் அதன் சுயாதீனமான பலத்தை ஒன்றுதிரட்ட வேண்டும்.

Read more...

Saturday, August 29, 2015

"துடைத்தெறியப்ப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் இப்போது நன்கு தெளிவாகியுள்ளது":

பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

"தேர்தல் தினத்திற்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு தரத்திலான அரசியல் தலைமைத்துவங்கள் இருப்பதனை நிரூபித்துள்ளன. அதில் ஒன்று நாகரிகமும் ஒழுக்கமும் நிறைந்த தலைமைத்துவம், மற்றையது காடைதனத்திற்கும் வன்முறைகளுக்கும் வழிகாட்டும் தலைமைத்துவமாகும். இதனைத் தற்போது மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர்" என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்வு காத்தான்குடி NFGG பிராந்திய வளாகத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது...

"நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலானது, இலங்கை வரலாற்றில் மிகவும் சுமூகமாகவும் வன்முறைகள் குறைந்த ஒரு தேர்தலாகவும் பதிவு செய்யப்பட்டு, சர்வதேசத்தின் பாராட்டினையும் பெற்றிருந்தது. ஆனால் கடந்த 21.08.15 வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நியமனங்களில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் பெயரும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்களினால் எமது பிரதேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனமான அரசியல் பழிவாங்கலானது, முழு முஸ்லிம் சமூகத்தினையும் வெட்கித்தலைகுனியச் செய்துள்ளது.

அது மட்டுமல்லாது இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னர் மக்கள் இந்த ஊரில் தம்மை வழிநடாத்துகின்ற இரண்டு வகையான தலைமைத்துவங்கள் எவை என்பதினையும், அவைகளின் தகுதி தராதரம் எவ்வாறானது என்பதினையும் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் தலைமைத்துவத்தின் கீழ் வளர்க்கப்படு வரும் அநாகரீகமான, காடைத்தனமான, வன்முறை மிக்க, அரசியல் பழிவாங்கல்கள் நிறைந்த தலைமைத்துவமாகும். மற்றையது நல்லாட்சி ஒழுக்கங்களைப் பேணி, நாகரீகமாகவும், அமைதியான வழிகளிலும, மார்க்க வறையறைகளை மதித்தும் மக்களை வழிநடாத்துகின்ற நமது நல்லாட்சி தலைமைத்துவமாகும்.

ஆகஸ்ட் 18ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியான போது, எமது கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. அத்தோடு சகோ, ஹிஸ்புல்லாஹ்வும் தோல்வியினைத் தழுவினார். அமோகமான வெற்றியினை நாம் பெற்றுக்கொண்ட அந்த சந்தர்ப்பத்தில் நாம் மிக அமைதியான முறையில் நாகரிகமாகவும் மார்க்க வரையறைகளை மீறாத வகையிலும் எமது வெற்றி உணர்வை வெளிப்படுத்தினோம். எமக்கு எதிராக நின்றவர்கள் மீது ஒரு பிழையான வார்த்தையினைக் கூட பிரயோகிக்காத வகையில் கவனம் செலுத்தி அந்த வெற்றித் தினத்தை நாம் கழித்தோம். இத்தனை ஒழுக்கமும் நாகரிகமும் பண்பாடும் நிறைந்த ஒரு தலைமைத்துவத்தையே நாம் கட்டி வளர்த்து வருகின்றோம்.

ஆனால் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியைச் சேர்ந்த ஹிஸ்புள்ளாஹ்வின் பெயர் தேசியப்பட்டியலில் அறிவிக்கப்பட்ட ஒரு சில மனித்தயாலங்களில் இந்த ஊரில் கட்டவிழ்த்து விடப்பட்ட மார்க்கத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் முரணான அரசியல் காடைத் தனங்களைக் கண்கூடாகக் கண்டோம். புனித இறை இல்லத்தில் மஃரிப் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரத்தில் அங்கு சென்று அட்டகாசம் புரிந்தனர். பள்ளிவாயலுக்கு முன்னால் மானக் கேடான காரியங்களைச் செய்தனர். தொழுகைக்குத் தயாராக இருந்த நமது சகோதரர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டு உயிராபத்துக்கு உள்ளாக்கினர். இந்த ஊரில் ஹிஸ்புளாஹ்வின் காட்டு மிராண்டித்தனமான அரசியல் ஏன் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதினை மீண்டுமொரு முறை இது மக்களுக்கு புரிய வைத்துள்ளது.

மாத்தரமின்றி எமது ஆதரவாளர்களை திட்டமிட்ட முறையில் வேண்டுமென்றே வன்முறைகளுக்கு அழைத்து, அவர்களையும் சட்டத்திற்கு முரணான வகையில் செயற்படுத்துவதற்கு ஹிஸ்புள்ளாஹ் ஆதரவாளர்கள் பல பிரயத்தனங்களையும் மேற்கொண்டனர். இருப்பினும் எமது சகோதரர்கள் காட்டிய பொறுமை, நிதானம், சமயோசிதம், பொறுப்புணர்வு என்பன இப்பிரச்சனையினை விரைவில் முடிவிற்குள் கொண்டு வந்துள்ளது. எமது தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பலரும் சம்பவ தினம் கொழும்பில் இருந்த போதிலும், எமது ஆதரவாளர்கள் இவ்வாறு பொறுமையுடன் நடந்து கொண்டமையானது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதுவே நாம் நமது மக்களை நாகரீக அரசியலுக்கு பயிற்றுவித்திருக்கின்ற முறையாகும்.

எனவே நாம் ஒரு போதும் வன்முறையினை வன்முறையினால் முடிவிற்கு கொண்டு வரமாட்டோம். நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்டியுள்ளோம்.

தேர்தல் தினத்திற்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு தரத்திலான அரசியல் தலைமைத்துவங்கள் இருப்பதனை நிரூபித்துள்ளன. அதில் ஒன்று நாகரிகமும் ஒழுக்கமும் நிறைந்த தலைமைத்துவம், மற்றையது காடைதனத்திற்கும் வன்முறைகளுக்கும் வழிகாட்டும் தலைமைத்துவமாகும். இதனைத் தற்போது மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே நமது எதிர்கால சந்ததியினரின் நலன்களைக் கருத்தில் கொண்டு எமது சமூகத்தில் எவ்வாறான அரசியல் தலைமைத்துவம் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதும், எவ்வாறான தலைமைத்துவம் மேலும் வலுவூட்டி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதும் இப்போது நன்கு தெளிவாகியுள்ளது."

Read more...

Friday, August 28, 2015

நாங்கள் உரிமைக்காக மட்டும் போராடுவோம்.....கடமையை செய்ய காலியில இருந்து காமினி வருவான்....!!!!

இன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பெண்கள் சிறுவர் பிரிவின் மாதாந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன். வழமைபோல கூட்டத்தில் சுவாரசியமான விடயங்கள் (பெண்கள் சிறுவர் சம்பந்தப்படாத) பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டது....அடுத்த கூட்டத்தையும் இதே போல பயனுள்ளதாக(?) இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உறுதி பூண்டு கூட்டத்தை நிறைவு செய்தனர்.

கூட்டம் முடிந்து, வெளி நோயாளர் பிரிவைத் தாண்டி வெளியே வந்து கொண்டிருந்தேன். கணிசமான அளவு கூட்டம் வெளி நோயாளர் பிரிவில் காத்திருந்தது. கூட வந்த அலுவலக நண்பர் வேறொரு நபரை சந்திக்கச் சென்ற படியால் அவருக்காக நானும் OPD இல் காத்திருந்தேன்.

காத்திருந்த வேளை.....வைத்தியரின் அறையில் நடப்பதை கண்ணூடாக காணமுடிந்தது...கண்ட காட்சியில் சற்றே சுவாரசியம் பிறந்தது...ஒரு அறுபது வயது மதிக்கதக்க பெண்மணி, வைத்தியருக்கு என்னத்தையோ நடித்துக் காட்டிக் கொண்டு இருந்தார்.

அவரின் உடல் மொழியால் மருத்துவருக்கு எதையோ அவர் விளங்கப்படுத்த முயல்வது எனக்கு தெரிந்தது....பாவம் அந்த அம்மணி வாய் பேச முடியாதவர் போல..எவ்வளவு கடினமாக தனது நோயை மருத்துவருக்கு புரிய வைக்கின்றார் என்று பெருமூச்சை விடத் தொடங்க...........வந்த பெருமூச்சு பாதியில தங்கி விட்டது. ஏனெண்டா இப்பொழுது மருத்துவரும் நடிக்கத் தொடங்கி இருந்தார்....அட கஷ்டகாலமே டாக்குத்தரும் "மியூட்" போல எண்டு உத்துக் கவனிக்கத் தொடங்கினேன்.

இரண்டு பேரும் கைப்பாஷை தான்....திடீரென்று டொக்டர் எழும்பி தன்ர ட்ரௌசர் பொக்கட்டுக்குள்ள அகழ்வாராய்ச்சி செய்து போனை எடுத்து காதுக்க வச்சு வாயால கதைக்க தொடங்கினார்.

எனக்கு ஆர்வம் தாங்க முடியேல்ல....பிறவி விடுப்புக் குணம் என்னை இருக்க விடேல்ல. வேலை முடிஞ்சு "போவமே" எண்டு வந்த நண்பரை OPD இல் இருக்கச் சொல்லிப்போட்டு எழும்பிப் போய் அறை வாசலில் நின்ற மருத்துவ தாதியிடம் விசாரித்தேன். உள்ளுக்க என்ன நடக்குது ஆருக்கு குறைபாடு எண்டு.

அவ சொன்னா டொக்டரும் கதைப்பாராம்....அம்மணியும் கதைப்பாவாம்....ஆனா டொக்டர் "சீனா"வாம் அம்மணி "தானா"வாம்..

"அப்ப "தானா" வில டொக்டர் இல்லையோ" என்றேன்.

"இருக்கினம்....ஆனா கொஞ்சப்பேர்"

"கொஞ்சமெண்டா எத்தனை?"

"ஆறு"

"இந்த ஆஸ்பத்திரியில் மொத்தம் எத்தினை டொக்டர்ஸ்?" என்றேன் குழப்பத்துடன்.

"முப்பத்துநாலு" எண்டா தெளிவா.

"அப்ப மிச்சம் இருபத்தெட்டும்.....?"

"சீனா"

முப்பத்துநாலு மருத்துவர்களுக்குள்....இருபத்தெட்டு பேர் தென்னிலங்கையிலிருந்து வந்து முல்லைத்தீவில் வந்து தங்கி இருந்து சேவையாற்றுகின்றார்கள்....நம்மவர்கள் வெறும் ஆறுபேர் தான்.

அதிலும் ஐவர் முல்லைத்தீவையும் ஒருவர் கிளிநொச்சியையும் சொந்த இடமாகக் கொண்டவர்கள். அவர்களிலும் மூண்டு பேர் மக்களின்ர வரிப்பணத்தில படிக்காமல் ஆத்தை அப்பன்ர சொந்தக் காசில ரஷ்யாவில படிச்சவையளாம்....

கோபத்தை விட வெட்கம் தான் நிறைய வந்தது எனக்கு...

ஒரு வருடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் ஐந்து அல்லது ஆறு பேர்...அப்ப எப்படி இது சாத்தியம்?

சிலவேளை முல்லைத்தீவை சேர்ந்த டொக்டர்ஸ் படித்து முடித்ததும்...முல்லைத்தீவை விட பின் தங்கிய மாவட்டங்களுக்கு சேவையாற்றப் போயிருப்பினமோ எண்டு...நினைச்சா...முல்லைத்தீவு தானாம் இலங்கையில "அதிகஷ்ட பிரதேசம்" எண்டு கூகிள் சொல்லுது. பிறகு நானென்னத்தை சொல்ல?

ஆரும் எங்கையெண்டாலும் போகட்டும்.......என்ர கேள்வி என்னெண்டா.....

கொக்கிளாயில வயல் காணிய சிங்களவன் பிடிச்சு வயல் செய்தா வரிஞ்சு கட்டிக் கொண்டு போய்...போட்ட கதியாலுகளை புடுங்கி எறியிறம்......நல்ல முயற்சி!

செம்மலையிலையும்...மாத்தளனிலையும் கரைவலையை அவன் கொண்டு வந்து போட்டு மீன் பிடிச்சா...அடிச்சுப் பதறி ஐ.நா வரைக்கும் மனு குடுக்குறம்....மிக நல்ல முயற்சி!!!!

எங்கட வளங்கள் சூறையாட நாங்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது..... எவன் வந்தாலும் விடமாட்டம்.

ஆனா...படிச்சு, டாக்குத்தரா வந்ததும் நாங்கள் நைஸாக கழண்டு கொள்வோம். இதுக்கெண்டு சேவை செய்ய தெற்கில இருந்து அவங்கள் வருவாங்கள்.

கொக்கிளாயிலையும் கொக்குதொடுவாயிலையும் தூக்கிப்பிடிச்ச கொடிய மாஞ்சோலை ஆஸ்பத்திரியிலையும் பிடிக்கிறது தானே?

வளங்கள் எண்டா எங்களுக்கு பௌதீக வளங்கள் மட்டும் தான் கண்ணுக்க தெரியும். மனித வளங்களை மறந்து விடுவோம். அப்படித்தானே?

அந்த இருபத்தெட்டு டாக்குத்தர்மாரும் தாங்கள் கும்பிட, மாஞ்சோலை ஆஸ்பத்திரியில புத்தர் சிலை வச்சா..... அப்ப தூக்கிப் பிடிச்சுக் கொண்டு வாங்கோ பிக்கானையும், மண்வெட்டியையும்!!!!!



Read more...

இலங்கை தேர்தர்களுக்கு பின்னர்: தமிழ் தேசியவாதிகள் அமெரிக்க-ஆதரவிலான கட்சிகளை ஆதரிக்கின்றனர் By K. Nesan

ஆகஸ்ட் 17 இலங்கை பாராளுமன்ற தேர்தல்களையடுத்து, தமிழ் தேசியவாத கட்சிகள் கொழும்பில் ஒரு புதிய அமெரிக்க ஆதரவு ஆட்சியை நிறுவுவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது முயற்சிக்கு முக்கிய முண்டுகோல்களாக சேவையளிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பி., 107 ஆசனங்கள்) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு (ஸ்ரீ.ல.சு.க., 96 ஆசனங்கள்) அடுத்தபடியாக, பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (த.தே.கூ.) மூன்றாவது பெரிய அணியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழர் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மற்றும் கிழக்கின் 29 ஆசனங்களிலிருந்து ஆககுறைந்தது 20 தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பிவிடுத்திருந்தார். அந்நிகழ்வில், அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது. பதினான்கு பேர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஏனைய இரண்டு ஆசனங்கள் அக்கட்சியினது தேசிய வாக்கு விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட்டன.

ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தல்களில் அமெரிக்க-ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையில் நியமிக்கப்பட்ட சிறிசேன, யூ.என்.பி. உடன் ஒரு "தேசிய அரசாங்கம்" அமைக்க ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஒரு பிரிவை வென்றெடுக்க முயற்சிக்கின்ற வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இவரை தீவிரமாக ஆதரிக்கிறது. ஒரு கூட்டத்தில், சம்பந்தன் கூறினார்: “நாட்டில் ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்திற்கான மக்கள் தீர்ப்பை, ஜனவரி 8 அமைதிப் புரட்சியை அங்கீகரிக்கும் தேசிய அரசாங்கத்தை நாங்கள் ஆதரிப்போம்.”

சம்பந்தன், கிழக்கு மாகாணத்தில் உள்ள சம்பூரில் ஆகஸ்ட் 23 அன்று சிறிசேனவுடன் ஒரு மேடையினை கூட பகிர்ந்து கொண்டார். சிறிசேனவை "உண்மை, ஒற்றுமை, நீதி"க்காக போராடுமொரு போராளியாக புகழ்ந்ததுடன், “தாமதமின்றி தமிழர் பிரச்சினையில் கவனம் செலுத்துமாறு அவரிடம் கோருவது என்னுடைய கடமையென நினைக்கிறேன்” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த புதிய அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தின் அரசியல் அச்சாணியாக உருவாகக்கூடும். இப்போதே தெரிவதைப் போல, குறிப்பாக ஸ்ரீ.ல.சு. கட்சியுடன் ஒரு கூட்டணி உருவாக்குவதில் சிறிசேன சிரமப்படுகையில் மற்றும் யூ.என்.பி. ஒரு சிறிய பாராளுமன்ற பெரும்பான்மையுடன் ஆள நிர்பந்திக்கப்படுகையில் அதுவொரு முக்கிய பாத்திரம் வகிக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தொழிற்படத் துடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்வம், தமிழ் தேசியவாதத்தின் திவால்நிலைமையை நிரூபிக்கிறது. பல்வேறு சிறிய தமிழ் தேசியவாத கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, கொழும்பில் ஒரு வன்முறையான பிற்போக்குத்தன அரசாங்கமாக இருக்கப்போகின்ற ஒன்றை ஆதரித்துவருகிறது. அதன் பிரதான பாத்திரம் இலங்கையை முழுமையாக, சீனாவை கட்டுப்படுத்த அல்லது அதனுடன் போர்தொடுக்க நோக்கம் கொண்ட அமெரிக்காவினது "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்குப்" பின்னால் நிறுத்துவதாக இருக்கும். மேலும் சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்படும் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கும் அது பணியமர்த்தப்படும்.

சிறிசேன அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்க்குமென தமிழ் தேசிய கூட்டமைப்பு வாதிட்டாலும், உண்மையில் அது 2009 உள்நாட்டு போர் முடிவில் தமிழர்களுக்கு எதிராக இரத்தந்தோய்ந்த தாக்குதலில் முன்னணிப் பாத்திரம் வகித்த அதிகாரிகளையே நிர்வாகத்திற்குள் அமர்த்தியுள்ளது. அத்தாக்குதல், தமிழ்-தேசியவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.டி.டி.ஈ.) பல அங்கத்தவர்கள் உட்பட பல பத்தாயிரக் கணக்கானவர்களின் படுகொலையில் போய் முடிந்தது.

குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்குள், வெடிக்கவிருக்கும் தீவிர சமூக பதட்டங்களை குறித்து முதலாளித்துவ வர்க்கம் நன்கறிந்துள்ளது. அத்தகைய நிலைமைகளின் கீழ், தமிழ் தேசியவாதிகளின் பாத்திரம், சிறிசேனவிற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை தடுப்பதாகவே இருக்கும்.

ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம், இலங்கையில் ஜனநாயகத்தை உருவாக்கும் ஒரு "புரட்சிகர" சம்பவமாக நப்பாசைகளை ஊக்குவிப்பதில் மையப்பட்டிருந்தது. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் குழு ஒன்றுடன் கலந்துரையாடுகையில், “ஐ.ம.சு. கூட்டணியிலுள்ள மைத்திரிபால சிறிசேன அணி, யூ.என்.பி. உடன் இணைந்து 18ஆம் திகதி ஆட்சி அமைப்பாளர்கள். அந்த ஆட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு நல்க காத்திருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கப்படுமாயின் புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படும். அந்த அரசியல் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படும். வரையப்படவுள்ள அரசியல் யாப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 65 வருடக்கால தமிழ் மக்களின் போராட்டத்துக்கு இதன் மூலம் உடனடி தீர்வு காணப்படுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்” என்றார்.

யூ.என்.பி. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு போன்ற தமிழ் மக்கள் அதிகம் உள்ள சில பகுதிகளில் அதன் சொந்த வேட்பாளர்களை நிறுத்துவதை தவிர்த்துக் கொண்டது. தேர்தலில் யூ.என்.பி. வெல்லும் என்பதில் சம்பந்தன் நம்பிக்கையோடிருந்தார். அவர்கள் அதை அடைந்தால், அது தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வுக்கு "அருமையான சந்தர்ப்பமாக" இருக்குமென அவர் தெரிவித்தார்.

இதுவொரு கொடூரமான அரசியல் மோசடியாகும். பல தசாப்தகால இரத்தக்களரியில் அந்நாட்டை சூழ்ந்துள்ள இனப்பிளவுகளை தீர்க்க இலாயக்கற்றிருப்பதை இலங்கை முதலாளித்துவ வர்க்கமே நிரூபித்துள்ளது. உண்மையில், கொழும்பின் ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே தேசியவாத உணர்வுகளை தூண்டிவிடுவதில் தான் தங்கியிருக்கின்றது.

சிறிசேனவே கூட இராஜபக்சவின் ஒரு நெருக்கமான கூட்டாளியாவார். அவர் 2009 இராணுவ தாக்குதலின் கடைசி இரண்டு வாரங்களின்போது பதில்பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கையில்தான் படுமோசமான போர் குற்றங்கள் நடத்தப்பட்டன. விக்கிரமசிங்கவை பொறுத்த வரையில், அவர் விடுதலை புலிகளுக்கும் அவரது அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்தான 2002 “புரிந்துணர்வு ஒப்பந்தத்தை" முறித்துவிட்டு, 2006 இல் மீண்டும் போர் தொடங்க அனுமதியளித்தார்.

தமிழ் தேசியவாத கட்சிகள், தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சிறிய அடுக்கை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவை சிங்கள முதலாளித்துவ வர்க்கத்துடன் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டால், அது தமது "சொந்த" மக்களையே சுரண்ட அனுமதிக்குமென நம்புகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரைக்கின்ற "தீர்வுகளிலிருந்து" தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் தொழிலாளர்களது நலன்கள், தமிழ் தேசியவாதத்துடன் முறித்துக் கொள்வதோடு, சிங்கள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் ஐக்கியத்துடன் ஏகாதிபத்தியம் மற்றும் சிக்கன திட்டங்களுக்கு எதிரானவொரு கூட்டு போராட்டத்தின் மூலமாக மட்டுமே முன்னெடுக்க முடியும்.

இலங்கை முழுமையிலும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட இயக்கத்திற்கான சாத்தியக்கூறு, யூ.என்.பி. மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியை பீதியூட்டுவது போலவே, அதேயளவிற்கு தமிழ் தேசியவாத கட்சிகளையும் பீதியூட்டுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் தமிழ் தேசியவாதிகள் கணிசமான மக்கள் ஆதரவை இழந்திருப்பதற்கு அங்கே தெளிவான அறிகுறிகள் உள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பால் கடந்தகாலத்தைப் போல கூட்டங்களுக்கு மக்களை ஈர்க்க முடியவில்லை. ஒருசில நூற்றுக்கணக்கான மக்களே கூட்டங்களில் கலந்து கொண்டனர், சில இடங்களில் நூறுக்கும் குறைவானவர்களே இருந்தனர். கொடூரமான உள்நாட்டு போரின் விளைவாக 40,000க்கும் அதிகமான தமிழர்கள் காணாமல் போன நிலையில், 1977 இல் ஸ்தாபிக்கப்பட்ட "வடக்கில் இலங்கை ஆயுதப்படைகளால் கைது செய்யப்பட்ட பெற்றோர்கள், பாதுகாவலர்கள், பொதுமக்களுக்கான அமைப்பு" தேர்தல்களை புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்திருந்தது.

இத்தகைய நிலைமைகளின் கீழ் தான், அதேபோன்ற தமிழ் தேசியவாத வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஏனைய தமிழ் கட்சிகள் குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF), ஜனநாயக போராளிகள் கட்சி (CD) தமிழ் தேசிய கூட்டமைப்பின் திவாலான வேலைத்திட்டத்திற்கு மக்களின் எதிர்ப்பை தடுமாறச்செய்யும் ஒரு முயற்சிக்கு முன்வந்தன. யாழ்பாண மாவட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 15,022 வாக்குகளும் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு 1,979 வாக்குகளும் கிடைத்தன. ஜனநாயக போராளிகள் கட்சி, ஏனைய இடங்களில் தமிழ் தேசிய கூட்டணியின் வாக்குகளை பிரிக்க விரும்பவில்லையெனக் கூறி யாழ்பாண மாவட்டத்தில் மட்டுமே போட்டியிட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக போராளிகள் கட்சியும் பிரதானமாக "சர்வதேச சமூகத்துடனான" அதாவது, ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்துடனான முன்மொழியப்பட்ட அவற்றின் பேரம்பேசும் தந்திரோபாயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வேறுபடுகின்றன. அவை ஏகாதிபத்திய சக்திகளுடனான ஓர் உடன்படிக்கையை கொண்டு ஒரு தனி "பாரம்பரிய தாய்நாட்டை" பெறுவதன் மூலமாக அவர்களது நலன்களைப் பெற முடியுமென அதே நப்பாசைகளை விற்பனை செய்கின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பேரம்பேசல்களில் "தமிழர்களின் நலன்களை முறையாக உயர்த்தவில்லை" என்பதற்காக த.தே.கூட்டணியை குற்றஞ்சாட்டுகிறது.

விடுதலை புலிகளின் 2009ன் மோசமான தோல்விக்கு பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கையின் வட-கிழக்கில் ஒரு சிறிய தமிழ் அரசுக்கான விடுதலை புலிகளின் கோரிக்கையிலிருந்து தன்னை தூர விலக்கிக்கொண்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி, பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவித்துக் கொண்டு, தங்களைத்தாங்களே விடுதலைப் புலிகளை பின்தொடர்வோராக காட்டிக் கொள்கின்றன. இருப்பினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இயைந்து செல்லும் அவர்களது முன்னோக்கு, இன்றியமையாதரீதியில் த.தே.கூ. இல் இருந்து வேறுபட்டதல்ல.

அத்தேர்தல்களுக்கு பின்னர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தலைவர் கஜேந்திரன் பொன்னம்பலம் கூறுகையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை போல, சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வுக்காக உழைக்குமானால்" அவரது கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளிக்குமென தெரிவித்தார். இவ்விதத்தில் அவர் கொழும்பில் அமெரிக்க-ஆதரவிலான அரசாங்கத்தை ஒன்றுசேர்க்கும் முயற்சிக்கு மறைமுக ஆதரவை முன்மொழிகிறார்.


Read more...

Tuesday, August 11, 2015

முன்னாள் போராளிகளா? பயங்கரவாதிகளா? பீமன்

எதிர்வரும் இருவாரங்களில் இலங்கை சனநாயக குடியரசின் 8 வது பாராளுமன்றம் ஆரம்பமாக இருக்கின்றது. நாட்டின் சட்டம் இயற்றப்படுகின்ற இந்த மகா சபையிலே இலங்கை அரசியல் யாப்பின் 6 வது திருத்தச் சட்டத்தின் 7ம் அத்தியாயத்தின் பிரகாரம் :

"..................................... ஆகிய நான் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிப் பாதுகாப்பேன் என்றும், இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ, ஆக்கமளிக்கவோ ஊக்குவிப்பு அளிக்கவோ நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதிசெய்கின்றேன் / சத்தியஞ்செய்கின்றேன்

என அழுத்தம்திருக்தமாக ஓங்கி உரைத்து (உச்சரிப்பில் வித்தியாசம் இருப்பின் repeat please - மீண்டும் ஒருதரம் சொல்லுங்கோ என்றும் சத்தம் குறைவாக இருந்தால் Louder please - உரக்க கத்துங்கள் என்றும் சபாநாயகரால் கூறப்படும்) தங்குதடைகள் ஏற்பாடுத்தாது தெளிவாக எழுதும் என பல தடவைகள் பரீட்சித்துப்பார்க்கப்பட்ட பேனா ஒன்றினால் கையெழுத்திடுவதற்காக வடகிழக்கிலிருந்தும் பல்வேறு சக்திகள் பல்வேறு கோஷங்களுடன் களமிறங்கியுள்ளன.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிப் பாதுகாப்போம் என்றும், இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவே மறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ, ஆக்கமளிக்கவோ, ஊக்குவிப்பு அளிக்கவோ, நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டோம் என்றும் சத்தியம் செய்துகொள்ள இலங்கையின் அரசியல் யாப்பை ஏறிமிதித்து தனிநாடுகோரி, நாட்டை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த முன்னாள் பயங்கரவாதிகளும் முண்டியடிப்பது : "பயங்கரவாதிகள் தாம் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்" என்பதை உணர்த்துகின்றது.

இலங்கை அரசியல்யாப்பு அதன் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கியுள்ள வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்காக மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்கின்றார்கள் முன்னாள் பயங்கரவாதிகள். ஆனால் இவர்கள் இதேமக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை ஆயுதமுனையில் பறித்த கொடிய ஜனாயக உரிமை மீறலுக்கு இதுவரை மக்களிடம் மன்னிப்பு கோரவும் இல்லை அதற்கான எந்த சமிக்கையும் தென்படவில்லை.

இலங்கை பிரஜைகளான முன்னாள் பயங்கரவாதிகளுக்கும் நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உரிமையை அரசியல் யாப்பு அளித்திருக்கின்றது. ஆனால் பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்ட இவர்கள் "புனர்வாழ்வளிக்கப்பட்ட பயங்கரவாதிகளாக" சமூகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களே அன்றி "முன்னாள் விடுதலைப் போராளிகளாக" அல்ல.

மேற்படி பயங்கரவாதிகளால் இந்நாட்டின் மக்கள் சொல்லொண்ணாத்துயரங்களை சந்தித்திருக்கின்றார்கள். மக்கள் விபரிக்க முடியாத வடுக்களை சுமந்து நிற்கின்றார்கள். விலைமதிப்பற்ற உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளார்கள். ஏன் வாழ்நாள் அங்கவீனர் ஆனோர் ஆயிரம் ஆயிரம்பேர். மேற்படி பாதிப்புக்களுக்கு பயங்கரவாதிகள் கூறும் ஒரே நியாயம் போராட்டத்தின் பெயரால் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதாகும்.

இலங்கையிலே புலிகளால் மேற்கொள்ளப்பட்டது போராட்டமும் அல்ல இணைந்திருந்தவர்கள் போராளிகளும் அல்லர். மாறாக இடம்பெற்றது பயங்கரவாதமும் அந்த அமைப்புடன் இணைந்திருந்தவர்கள் பயங்கரவாதிகளுமே ஆவர். இவ்வாறே இலங்கையின் சட்டமும் வரையறுத்துள்ளது. இதை உலகநாடுகளும் வழிமொழிந்து புலிகளை இன்றுவரை பயங்கரவாதப்பட்டியலில் தீண்டத்தகாதவர்களாகவே வைத்துள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் தேர்தலில் குதித்துள்ள முன்னாள் பயங்கரவாதிகள் : தாங்கள் "முன்னாள் போராளிகள்" என்ற முகவரியுடன் மக்கள் மத்தியில் வலம்வர ஆரம்பித்துள்ளனர். இம்முகவரியுடன் இவர்களது நுழைவுக்கான அனுமதி புலிகளின் கடந்தகால பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமைகின்றது. அத்துடன் புலிகளை இன்றும் இத்தேசத்தில் ஏற்க மறுக்கும் மக்களுக்கு அநீதி இழைப்பதாகவுள்ளது. புலிகளால் பாதிக்கப்பட்டோர் தாம் பயங்ரகவாதிகளால் தாக்கப்பட்டோம் என்றே கூறுகின்றார்கள். ஆனால் இன்றைய நிலைமையில் அவர்கள் போராளிகளால் தாக்கப்பட்டோம் என கூறவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படவுள்ளதை நினைத்து ஆத்திரமடைகின்றனர்.

எனவே இச்சொற்பிரயோகம் சமூதாயத்தில் ஒரு தரப்பை மனஉழைக்சலுக்கு உள்ளாக்குகின்றது என்பதை கருத்தில் கொண்டு நாட்டின் சட்டத்தையும், குடிமக்களின் உரிமைகளையும் காக்கவேண்டிய தரப்பினர் விரைவாக செயற்பட்டு குறித்த சொற்பிரயோகத்திற்கு தடையேற்படுத்துதல் அவசியமாகும்.

Read more...

Monday, August 3, 2015

மோசடி அரசியல் . - சுகு-ஸ்ரீதரன்

நெஞ்சு பொறுக்குதில்லையே- பாரதி

சாதாரண வறிய இளைஞர்களை ஐரோப்பாவிற்கும்- வட அமெரிக்காவிற்கும் அனுப்புவதாக அல்லது மத்திய கிழக்கில் சிறந்த வேலை வாய்ப்பை உருவாக்கித்தருவதாக வறிய பெண்களை ஏமாற்றும் முகவர்களைப் போலத்தான,; TNA MPS

“தவித்த முயல் அடித்த” கணக்காக பணம் கறப்பதற்காக இவர்கள் இதனைச் செய்கிறார்கள். ஒருவிதத்தில் இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மோசடி அரசியலும் இந்த வகைப்பட்டதே. இது ஒன்றும் மிகையல்ல.

“பிரிவினையை ஆதரிக்க மாட்டோம்”; என்று வழமையாக சத்தியப்பிரமாணம் செய்யும் இவர்கள், 13 வதை குப்பைக் கூடையில் போடவேண்டும் , அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்று கூறும் இவர்கள் மாகாணசபைத்தேர்தல்களையோ- உள்ளு}ராட்சி மன்றத்தேர்தல்களையோ கைவிடவில்லை.

தமிழ் மக்களை ஏமாற்றுவது- மோசடி செய்வதோடு ,தமிழ் மக்களின் அரசியல் தமது தனிப்பட்ட உரிமை என்று இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆணவம் பிடித்த கனவான்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றபடியே தமிழ்மக்களும் செயற்படுகிறார்கள் -நடந்து கொள்கிறார்கள்.

13 வது மற்றும் சில உரிமைகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது, தமிழ் மக்களின் பிரச்சனைகள் உலகறியச் செய்யப் பட்டிருக்கிறது என்றால் அது பல்வேறு தரப்பு இளைஞர் யுவதிகளின் தியாகத்தால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களால், இந்தியாவின் தயவால் நிகழ்ந்தது.

அது ஒன்றும் சம்பந்தன் விக்கினேஸ்வரன் வகையறாக்கள் நிகழ்த்திய மந்திரவித்தைகளால் அல்ல. இரண்டு தலைமுறைகளின் போராட்டத்தின் பலாபலன்களை இந்த கனவான்களும் அவர்களின் பரிவாரங்களும் அறுவடை செய்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களும் இந்த மோசடிப்பேர்வழிகளிடமே தமது தலைவிதியை ஒப்புவித்திருக்கிறார்கள். யாழ்மையவாத சமூக? சிந்தனைக்கு நன்றியற்ற இயல்பொன்றுண்டு . அது இறந்தவர்கள் தியாகம் செய்தவர்களைப்பற்றி வாய்ப்பந்தல் போடும். ஆனால் தனது தலைவர்களாக திருடர்களையும் போலிக் கனவான்களையே அனேகமாக ஏற்றுக் கொள்ளும்.

புலம்பெயர் கனவான் நிறுவனங்கள் வரிசையாக இறந்தவர்களின் படத்தைப்போட்டு தமது ஊடகங்களில் -கருத்தரங்குகளில் -மனித உரிமைக் கூட்டங்களில் கண்ணீர் விடும் . புகழாரம் சூட்டும் . . ஆனால் “காளாஞ்சியை” உள்ளுர் மற்றும் சர்வதேச திருடர்கள் கனவான்களுக்கே வழங்கும்.

அவர்கள் ஒரு சிறு கல்லைக் கூட தூக்கி போட்டிருக்க மாட்டார்கள். எத்தகைய வேறுபாடுகள் முரண்பாடுகள் இருப்பினும் அனைத்து இயக்கங்களில் இருந்து இறந்தவர்கள் அனைவரும் சாமானியர்களின் பிள்ளைகளே. அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.

ஆனால் இவர்களின் பேரில் தலைவர்களாகி இருப்பவர்கள் லண்டனிலும-; ஒட்டேவாவிலும் பவுண்- டொலர் விருந்தில் திளைக்கிறார்கள். இந்த விருந்து கொண்டாட்டங்கள் நடத்துபவர்கள் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வாழும் யாழ்மையவாத கனவான்கள்.

அவர்கள் தேர்தல் மேடையில் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கப்போவதாக , அந்நிய காலனி ஆதிக்க காரரிடமும் ,பேரினவாதிகளிடமும் இழந்த இறையாண்மையை வென்றெடுக்கப்போவதாக எல்லா மேடைகளிலும் முழங்குகிறார்கள்.

பிரபாகரனால் அடித்தளமிட்டு உருவாக்கபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புகாரார்கள் இப்போதெல்லாம் பிரபாகரன் பற்றி மூச்சு விடுவதில்லை. ஆனால் மேடையில் பாசாங்காக எங்கள் தலைவன் பிரபாகரன் என்று வலிப்பு நோய் கண்டவர்கள் போல் யாராவது கத்தும் போது மேடைக்கு முன்னால் இருப்பவர்கள் உருக் கொண்டவர்கள் போல் ஆடுகிறார்கள்.

“புலிகள் இருந்த காலத்தில் ரொறன்ரோ காசு கலெக்சன் - வடம் கழுத்து சங்கிலி வசூல் ராஜாக்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் ஒரு பெண் தலை விரி கோலமாக இங்கு உள்ளுர் கோவில் வேள்விகளில் ஆடுவது போல மேடைக்கு முன்னால் சுழண்டு சுழண்டு ஆடி வருவா. வந்து மேடைக்கு முன்னால் தாலிக் கொடியை கழற்றி எறிவாவாம். அங்கு கூடியிருக்கும் மகாசனங்கள் -ஏமாளிகள் காசை வாரி இறைப்பார்களாம். அருவரி தொப்பிவியபாரி குரங்குகளின்ர கதைபோல.”

வடம் கழுத்து சங்கிலியுடன் காசு கலெக்சன் செய்யும் திருடர்களால்- வசூல் ராஜாக்களால் அரங்கேற்றப்படும் நாடகம் இது. இது ஐரோப்பா- வட அமெரிக்கா எங்கணும் பரவலாக காணப்பட்டது. இந்த திருட்டுக் கூட்டம், வசூல் ராஜாக்கள் புலிகளின் பணத்துடன் உலகம் முழுவதும் இலங்கை உட்பட சகல ஐசுவரியங்களுடனும் இப்போது வாழுகிறது.

ஆனால் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களிலும் இருந்த பிள்ளைகளின் குடும்பங்கள் தெருவுக்கு வந்ததும் வராத குறையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த திருட்டு கூட்ட வசூல் சக்கரவர்த்திகளின் மொடலில் தான் இங்கு தேர்தல் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

பம்மாத்தாக பாசாங்காக ரிஎன்ஏ மேடைகளில் பிரபாகரனின் பேரைச் சொன்னவுடன் முன்னால் ஐந்தறிவு மந்தை கூட்டம் போல் உட்கார்ந்திருப்பன எழும்பி உருக் கொண்டது போல் ஆடுதுகள். இந்த கபடதாரிகள் இந்த அறியாமையை தமது மூலதனம் ஆக்கியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் மரணித்த போராட்டத்தின் பெறுபேறு மக்களை அருவருக்கும் கபடதாரிகளான கனவான்களின் கையில் தமிழர்களின் தலைவிதி மாட்டுப்பட்டிருக்கிறது.

யாழ்மைய-மத்தியதரவர்க்க மனம் எப்போதும் சேர். பொன் ராமநாதன் பாரம்பரிய அரசியல்தலைமையை நாடுவது. அவர்களைத்தான் கல்வியாளர் எனக்கருதுவது. இவர்கள் கூறும் சுயநிர்ணய உரிமையும் -இறையாண்மை மீட்பும் 2016 இல் இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டிடுவோம் என்பதும் இவர்களின் பாரம்பரியமான ஏமாற்றின் மோசடியின் மறுவார்ப்பே. அடுத்த பொங்கல் தமிழீழத்தில், அடுத்த மேதினம் தமிழீழத்தி என்பதுபோல.

விதிவிலக்கானவர்கள் சிலர் இருக்கலாம்.

குறிப்பாக 1976 வட்டுக் கோட்டை மாநில மாநாட்டு பிரகடனத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்கிறார்கள.; பொய்- பித்தலாட்டம்- போகமுடியாத இடத்திற்கு வழி சொல்கிறார்கள். செப்டெம்பர் ஐ.நா மனித உரிமை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மனித உரிமைக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை ஆழமாக சிந்தித்தால் அதிர்ச்சியான விடைதான் கிடைக்கும்!

இனவாத அடிப்படையிலானதும் ,சகோதரப்படுகொலைக்கானதுமான பாசிச கருத்தியலை இவர்கள் தான் உருவாக்கி கொடுத்தார்கள். இப்போதும் அதன் வழியே தான் செயற்படுகிறார்கள். எனவே ஐ. நா அறிக்கையும் இதன் நதிமூலம் ரிசி மூலத்தையும் உள்ளடக்கவேண்டும்.

பொய்யையும் போகமுடியாத இடத்திற்கு வழி சொல்வதுமான இந்த பாரம்பரியத்தை எல்லாப்பாதையும் ரோமாபுரிக்குகே என்பதுபோல பாராளுமன்றம் புகுவதற்காக பயன்படுத்துகிறார்கள்.

இதுதான் உண்மை

தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கொள்கையற்ற -கபடமும்- -வஞ்சகமும் -குழிபறிப்பும் -களவாணித்தனமும் -அயோக்கியத்தனமும்- சுயநலமும-; மோசடியும் ஏமாற்றுமான ஒரு கதம்ப கூட்டத்தை உலகெங்கும் அவதானிக்கமுடியாது. இதனை தலைமையென ஏற்றிவைத்திருக்கும் தமிழ் சமூகத்தை என்னென்பது

இவர்கள் பேரினவாதத்திற்கு தீனி போட்டு அதனை ஓயாமல் ஊதிப் பெருப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். பேரினவாதத்தை இந்த உணர்ச்சியூட்டும் போதை அரசியல் பேணிப்பாதுகாக்கிறது. டந்த 30 ஆண்டுகளில் லட்சக்கணக்கான மக்களின் மரணங்களுக்கும் இளைஞர் ,பெண்களின் மரணங்களுக்கும் இவர்கள் பொறுப்புச் சொல்லவேண்டும்.

தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மரணித்தவர்களின் தொகையை எண்ணிக்கை கணக்கில் பட்டியிலிட்டுள்ளனர். இவர்களின் ஏமாற்றுமோசடி அரசியல் தான் பேரினவாத அரசியலை பலப்படுத்தியது. தமிழ் பாசிச அரசியலை உருவாக்கியது.

பேரழிவிற்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் பிரதானமாக இவர்களே. இளைய தலைமுறையின் பேரழிவில் தமக்கு சம்பந்தமில்லை, நாம் வன்முறையாளர்கள் இல்லை என கைகழுவி விட்டு இப்போது கனவான்களாக உள்ள+ர் திருடர்களாக அரசியல் செய்ய புறப்பட்டிருக்கிறார்கள்.

காலாகாலத்திற்கு “வாராது வந்துற்ற மாமணிகளாக” இந்த திருடர்களையும் கனவான்களையும் யாழ்மையவாத தமிழ் அரசியல் கண்டு பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் வரலாறு இத்தகைய போக்குகளுக்கு கருணை காட்டுவதில்லை.

இந்த யுத்தமும் அழிவும் நிகழ்ந்த போது அலுங்காமல் நலுங்காமல் தமது கல்வியை மேற் கொண்டவர்கள், எதுவித சமூகப் பிரக்ஞையும் அற்றிருந்தவர்கள் ,கூழைக் கும்பிடு போட்டு கோள் மூட்டிச் சீவித்தவர்கள், நாலாந்தரவழிகளில் பணம் சம்பாதித்தவர்கள் எல்லோரும் இப்போது தமிழர்களின் தலைவர்கள் .

சமூகத்தின் மன நிலை பண்பாட்டு நிலைகளுக்கேற்பவே அவர்களின் தலைவர்களும் இருக்கிறார்கள். மூகத்தின் நேர்மையல்ல இவர்களை தலைவர்களாக உருவாக்குவது. யாழ்மையவாத சமூகத்தில் நிலவும் களவாணித்தனம் தான் இவர்களை தலைவர்களாக உருவாக்குகிறது.

இன்று சகல விதமான நுகர்வுகலாச்சாரத்திற்கும் ஆட்பட்டிருப்பவர்கள் வாய்திறக்கமுடியாத எமது பிரதேசங்களுக்கு சுதந்திரமாக செல்லமுடியாத அன்றாடம் படுகொலைகள் பேரழிவு நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தை “அது ஒரு காலம் அழகிய காலம்” என்கிறார்கள்.

இந்த வேசதாரித்தனத்தை என்னவென்பது. தமது மனச்சாட்சியின் படியா இவர்கள் பேசுகிறார்கள்? இப்போதிருக்கும் ஜனநாயக இடைவெளி- அறத்தை நிலைநாட்டுவதற்கு உதவா விட்டால் பொய்யும் மோசடியும் கோலோச்சுமானால் அதனை மறுதலித்த இந்த போவழிகள் மீது கருணையற்ற இன்னொரு வரலாறு உருவாகும் பாரதியின் பாப்பா பாட்டு “பாதகம் செய்பவரை கண்டால் பயங்கொள்ளலாகாது மோதி மிதித்து விடு முகத்தில் உமிழ்ந்து விடு” என்பது கவிஞனின் சத்திய ஆவேசத்தில் இருந்த தான் வருகிறது.

இவர்கள் கூறும் சுயநிர்ணய உரிமையையும் ,இறையாண்மையையும் வென்றெடுப்பதற்கான பாதை பாராளுமன்றத்தேர்தல் ! ஆனால் இவர்களில் பலருக்கு சுயநிர்ணய உரிமை- திம்பு கோரிக்கைகள் -13 வது திருத்த சட்டமூலம் பற்றி இந்த சொற்களுக்கப்பால் எதுவும் தெரியாதவர்கள் .இந்த கும்பலை தலைவர்களாகத் தெரிவு செய்யும் தமிழர்களை என்ன வென்பது.

இந்த பேர்வழிகள் காலம் காலமாக பாராளுமன்றத்தில் தானே குடியிருக்கிறார்கள். அங்கு குடி இருப்பதற்காக எத்தகைய பேரழிவுப்பாதையைத்திறந்து விட்டார்கள். இது பற்றிய பிரக்ஞை எப்போதாவது இவர்களுக்கு இருந்ததா? இன்று யுத்தத்தின் அவலவாழ்வில் மிச்ச மீதியாக இருக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், இராணுவமயமக்கலில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் , காணாமல் போனவர்கள் , சிறைகளில் வாடுபவர்கள் , புலம் பெயர்ந்து தமிழக அகதி முகாம்களில் வாழ்பவர்கள்

எல்லாரையும் விற்று தமது அதிகாரக் கதிரை கனவுகளை நிறைவு செய்கிறார்கள். அப்பட்டமான சொந்த நலன்களுக்காக இரத்தமும் சதையுமான மக்களின் பிரச்சனைகளுடன் விளையாடுகிறார்கள். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு என்பவற்றுக்காக என்ன செய்திருக்கிறார்கள். ஒரு மில்லியன்; பேரை புலம் பெயர் சமூகமாக கொண்டுள்ள சமூகத்திலிருந்து உள்ள+ர் வளங்களிலிருந்து சர்வதேச உதவிகள் அரச உதவிகளிலிருந்து எதையெல்லாம் செய்திருக்க முடியும்.

அப்படியான ஈடுபாடான மனப்பாங்கு இவர்களுக்கு இருக்கிறதா.

19 வது 20 வது என அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைப்பற்றி பேசப்படும் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு இவர்கள் என்ன முயற்சியை மேற்கொண்டார்கள். தமிழ் மக்கள் சுயமரியாதை -கண்ணியத்துடன் வாழ்வதற்கான வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான திட்டம் ஏதாவது இவர்களிடம் இருக்கிறதா? நிலமற்றவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணல் ,கிராமங்களின் வீதிகளைச் செப்பனிடல் ,சுகாதார வசதிகளை விருத்தி செய்தல், கல்வி இலவசமாக அனைத்துமட்டங்களிலும் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்

தண்ணிர் வளத்தை பாதுகாப்பது ,விருத்தி செய்வது, மாசடைதலில் இருந்து மீட்பது, தடுப்பது சேமிப்பது உள்ளிட்ட விடயங்களில் விரிவான அறிவு கிடையாது. உரிய ஆற்றல் கொண்ட மனிதர்களை இணைத்து வேலை செய்வது பற்றியும் அக்கறை இல்லை.

சமூக அக்கறை மற்றது போராட்டதில் பங்கு பற்றாத கோஸ்டிகள் மாகாண மட்டத்தில் அமைச்சர்களாகியிருக்கும் சூழ்நிலையில் சுயமாக வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்ய முன்வருபவர்களை மனங்குன்றிப்போகச் செய்கிறார்கள். சமூக பிரக்ஞையற்ற இந்த கோஸ்டிகள் தமது சுயலாப நோக்கங்களுக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் சிரேஸ்டர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர்கள். இதனால் யாரும் இங்கு முதலிட ஆர்வமாக இல்லை. உள்ள+ராட்சி சபைகளில் இருந்து மாகாண சபை வரை கோரும் தட்சணைகள் திடக்கிட வைப்பனவாம்.

வழமையான அரசியலில் தட்சணை மாமூலான ஒன்றாக இருப்பதால் பெருமளவு இரத்தம் சிந்தப்பட்ட தமிழ் சூழலில் வெட்கம் அற்று இந்தப்பிரகிருதிகள் இதனை எதிர்பார்க்கின்றனவாம். அது உள்ள+ராட்சி மட்டம் வரையில் விரவிக்காணப்படுகின்றன.

புரையோடிப்போன தீண்டாமை ,வறியவர்களின் நிலப்பிரச்சனை ,பெண்கள் மீதான வன்முறைகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சமூகப்பிரச்சனைகள் பற்றிய பிரக்ஞை ,சமூக நீதி- சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அக்கறை இருக்கிறதா? போதை வஸ்து பாவனை, வன்முறைகள்- ஆடம்பரங்கள் ,உதாரித்தனம் ,இயற்கை சுற்றாடல் அழிக்கப்;படுவது, மீள்சுழற்சி இல்லா குப்பை கிடங்காக எமது பிரதேசங்கள் மாறி வருவது பற்றி எமது கல்வி முறை இதில் சீர் திருத்தம் தேவைப்படுகிறது. அது பற்றிய பிரக்ஞை இருக்கிறதா,

இன உரிமைகள், இனங்களின் சமத்துவம் ,இன சமூகங்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள். பல்லினங்களின் நாடாக இலங்கையை உறுதிப்படுத்துவதில் இவர்களின் பங்களிப்பென்ன. சமூகம் மீள் எழுவதற்கான -சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான- சமூக அநீதிகளைத் துடைத்தளிப்பதற்கான சமூக நல்லெண்ணங்களை உருவாக்குவதற்கான எந்த திட்டமும் இவர்களிடம் கிடையாது. புலம்பெயர் வசதி படைத்தோரின் வேறுநாடுகள் வழங்கும் தனிப்பட்ட தட்சணைகளில் தான் கவனம்.

சாதாரண மக்களின் பிரச்சனைகள் அல்ல. சாதாரண மக்களின் பிரச்சனைகளை விற்று இங்கு பிழைப்பு நடத்தப்படுகிறது. இவர்களை தமிழ் மக்கள் தோற்கடிக்காத வரை- உதைத்து தள்ளாத வரை விமோசனம் இல்லை. விசச் சுழல் போல் ஒரே பொறியிலேயே தமிழ் மக்கள் விழுந்து கொண்டிருக்கிறார்கள். அதுபற்றிய சுரணை எதுவும் யாழ்மையவாத தமிழ் சமூக சிந்தனைக்கு கிடையது.

பரந்த உலக கண்ணோட்டம், நாடு இன சமூகங்கள் ,தமிழ் மக்களின் உரிமைகள் ,சமூகத் தேவைகள் பற்றி பரஸ்பர தொடர்புடன் அறிவார்ந்த முறையில் சிந்தித்து செயற்படுபவர்கள் தேவைப்படுகிறார்கள். சுடர் மிகு அறிவு கொண்டவர்கள் எளிமையான சமூக அக்கறையாளர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு காலமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆவதில்லை. ஆகவும் முடியாது. யாழ்மையவாத தமிழர்கள் பெரும்பாலும் திருடர்களையும் போலிக் கனவான்களையுமே நேசிக்கிறார்கள்.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகபோகத்திற்கெதிரான ஒரு உடைவு தெரிகிறது எவ்வளவு காலம் நீடிக்குமோ தெரியாது அது நல்ல சகுனமே.

சுகு-ஸ்ரீதரன

Read more...

கிண்ணஸ் சாதனை… உலகில் வெகுவேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பம் மகிந்தவின் குடும்பமே….?

உலகில் மிகவும் வேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பமாக இருப்பது மகிந்த ராஜபக்ஷவின் குடும்பமே என பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்.

அது தொடர்பில் கிண்ணஸ் சாதனைப் புத்தகம் குறிப்பிடுவதாக கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் விஷேடமாகத் தெளிவுறுத்தினார்.

எதுஎவ்வாறாயினும் கிண்ணஸ் சாதனைகள் அடங்கிய இணையத்தளத்தில் முழுமையாகத் இவ்வாறான ஒரு குடும்பத்தை தான் உள்ளிட்ட பத்துப் பேர் பலவாறாகத் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை என அவர் அக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

வாசகர்களாகிய உங்களினாலேனும் கண்டுபிடிக்க முடியுமா? எனத் தேடுங்கள்….

இணையத்தள முகவரி
http://www.guinnessworldrecords.com/

(கேஎப்)

Read more...

Wednesday, June 17, 2015

பயங்கரவாதத்திற்கு பால்வார்க்கும் நோர்வேயின் இரட்டை வேடம்! நோர்வேயில் தலிபான்கள்!


உலகின் அதிபயங்கரவாதப்பட்டியலில் இடம்பெறும் தலிபான்களின் உயர்மட்ட மனிதவிரோதிகள் நோர்வேயின் அனுசரணையுடன் லீமுசின் எனும் உயர்தர விலையுயர் கார்களின் அழைத்து வரப்பட்டு லோரன்ஸ்கூ விலுள்ள லொஸ்பி கொட்டேலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்றே ஆப்பாகானிஸ்தான் உயர்மட்டு அரசியில்தலைவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

செவ்வாய் இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் சமாதான உடன்படிக்கைக் கருத்துக்களத்தில் பங்குபற்று முகமாகவே இவர்கள் அழைத்து வரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் போர்க பிரண்ட ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இந்த கருத்துக்களமானது ஓஸ்லோவில் அமைந்துள்ள ஒஸ்லோ போரூமில் நடைபெறுகிறது.

இது உலகிலுள்ள மிகச்சிறந்த சமாதானத்தரகர்கள் இந்தக்கருத்துக்களத்தில் பங்குபற்றுகிறார்கள். இக்கருத்தரங்கு பற்றி ஊடகங்கள் கேள்விகளை முன்வைத்தபோது இக்கருத்துக் களத்துக்கான காரணம் ஒன்றாக இல்லாது வேறு வேறு கோணங்களில் விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இக்கருத்துக்களம் கலந்துரையாடல் கருத்துக்களம் என்பது சரியானது. இங்கே இதுவரை எந்தவிதமான சமாதான உடன்படிக்கைகளும் தயாரிக்கப்படவில்லை என்பதையும் அமைதியான முறையில் இருபகுதியினரையும் ஒரு மேசைக்குக் கொண்டு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வைப்பதற்கான முயற்சியே என்பதை நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் உறுதி செய்தார். இது எமக்கு புலிகளை பொதுமேசைக்கு அழைத்துவந்து கூட்டிவைத்துக் கும்மியடித்தது நினைவுக்கு வருகிறது.

இந்த அதிரடி கருத்துக்களமானது பலநோர்வேயியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எதற்காக பயங்கரவாதிகளை நாட்டுக்குள் விட்டீர்கள் எனவும்> நோர்வேக்கு எதற்கு இந்தத் தேவையில்லா வேலை எனவும்> நாளைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இதுவழி வகுக்கும் எனவும் பலகருத்துக்கள் மக்களிடையே நிலவுகின்றன.

நோர்வேயின் வெளிநாட்டு அரசியல் நடவடிக்கைகளின் பின்னர் ஏற்படும் மிகப்பெரிய தாக்கங்களை அரசியல் அவதானிகள் கண்டிருப்பார்கள். இலங்கை புலிகளின் சமாதானத்துக்கான அனுசரணை எப்படி முடிந்தது என்பதையும்> இந்நடவடிக்கை முற்றுப்பெறமுன்னர் நாம் அனுசரணையாளராக வருகிறேன் என எரிக் சூல்கெய் நேபாளத்தில் மாக்சிஸ்டுக்களின் பிரச்சனையில் மூக்கு நோட்டியதையும். மத்திய கிழக்கு உடன்படிக்கை எப்படி முடிந்தது என்பதையும் நாம் ஒப்பிட்டுப்பார்த்தால் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கப்போகிறது என்பது புரியும்.

நோர்வே மக்களின் இன்றைய கேள்வி இதுதான் " வேலிக்குள் உள்ள ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட்டுவிட்டு குத்துகிறது குடைகிறது" என்றாகாது இருந்தால் சரி



செய்தி
நோர்வே நக்கீரா 16.06.2015.

Read more...

பாலியல் வல்லாயுதமும் அதன் வினைத்திறனும்.

பாலியலைப் பெண்களும் ஆண்களும் தம் விருப்புகளை நிறைவேற்றும் ஆயுதமாகப் காலம்பூராக இன்றுவரை பாவித்து வந்திருக்கிறார்கள். ஆனால் இக்கட்டுரையானது மட்டுப்படுத்துப்பட்டு பாலியல் வல்லுறவுக்காக எப்படி? எதற்கு? ஏன் பயன்படுத்தப்பட்டது படுகிறது என்பது பற்றியதே. போரின பின் ஏற்பட்டுள்ள பாலியல் வன்கெடுமைகளை முன்னிறுத்தியே மட்டுப்படுத்தப்பட்டு எழுதப்படுகிறது.


ஒர் உயிர் உலகில் அனாதையாகி விடக்கூடாது என்பதற்காக இந்த புண்ணிய கருமத்தை இருவரின் மகிழ்வுடன், இன்பமாகக் காதலில் கலந்து பகிர்ந்து உயிர்களை உருவாக்கிறது இயற்கை. இனப்பெருக்கமே இயற்கையின் கருதுகோளாக இருந்தாலும் அதில் இன்பம், அன்பு, உறவு என்பனவற்றைஅது ஏற்படுத்தித் தருகிறது. மிருகங்களின் உலகை எடுத்துக் கொண்டால் தன்னுடலுடனான உறவை தெரிவு செய்யும் உரிமை பெண்ணுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பண்புகளையும், பக்குவத்தையும், வளர்ப்பு முறையையும் இயற்கை வளங்கியுள்ளது. தெரிவை இலகுவாக்க ஆண்ணினத்தை அதிவர்ணம், பலம் கொண்டனவாக அமைத்துள்ளது. மென்மையான பெண்மைக்கு பலத்தின் பாதுகாப்புத் தேவைப்படுவதால் ஆண், பெண் உறவுகள் தங்கிவாழும் தன்மை கொண்டனவாக அமைக்கப்பட்டுள்ளன. அழகில் கவரப்பட்டு காதல் வசப்பட்டாலும் பாதுகாப்பு நம்பிக்கை என்னவே பெண்பாலில் அடிப்படை எண்ணமும் தேவையுமாக இருந்து வந்துள்ளது. உ.ம் மனிதவினத்தில் கூட குடும்பம் உழைப்பு பளக்கவளக்கம் பார்த்து மாப்பிளை தெரிவு நடப்பது இயற்கையின் அடிப்படைக் கொள்கையில் ஒன்றாக அமைந்துள்ளது. மென்மைத் தன்மை கொண்ட பெண்விலங்கு குட்டிபோட்டால் குட்டிக்கு ஆபத்து நேருங்கால் தாய் மிருகத்தின் கோபம் பலமாக வெளிப்படும். இது இயற்கை மூன்று நாலு ஐந்து அறிவுள்ள உயிரினங்களுக்கு இயற்கையாகவே கொடுக்கப்பட்டது. பல மிருகங்களின் உறவுகளையும் பாலியல் பழக்க வளங்கங்களை எடுத்து நோக்கினால் அவை மனிதர்களை விட சிறந்தனவாக சரியான வாழ்வியல் வடிவமைப்புக் கொண்டனவாக இருக்கின்றன.

பெரும்பான்மையான மிருகங்கள், பறவைகள் கேவலங்கெட்ட மனிதர்கள் போல் வன்புனர்வு கொள்வதில்லை. பெண்ணினத்தின் உணர்வுகளுக்குத் மதிப்பழிக்கின்றன. இப்படியான நற்பண்புகள் அற்ற நாம் மனிதர் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

ஆயுதம்
ஆயுதம் வேட்டையில் உணவைத் தேடித் தாக்குவதற்கும், எதிரியை தாக்குவதற்குப் பிரத்தியோகமாகப் பயன்படுத்துப்படும் பொருளாகும். ஆரம்பத்தில் கற்களை ஆயுதமாகப் பாவித்த மனிதன் பின்னர் அக்கற்களை கூர்மையாக வடிமைத்து வெட்டு குத்து ஆயுதமாக்கினார்கள். இக்காலம் கற்காலம் என்று கருதப்பட்டது. கற்கள் தடிகள் மரம் போன்றன கூர்மையாக்கப்பட்டு தாக்கும் கல்லாயுதங்கள் ஆகவும் ஈட்டி போன்ற கூராயுதங்களாகவும் வேட்டைக்குப் பாவிக்கப்பட்டது. இது உணவைத் தேடும் அடிப்படை வாழ்வாதரம் நோக்கிய வளர்ச்சியாக இருந்த போதிலும் தமக்கு விரும்பாதவர்களையும், மிருகங்களையும், எதிரிகளையும் தாக்கவதற்குப் பயன்பட்டது. இதன் பரிணாம வளர்ச்சியில் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு ஆயுதங்கள் இரும்பில் உருவாக்கம் பெற்றன. இன்று இராக்கெட்டுக்கள் துப்பாக்கிகள் ஏவுகணைகள் என ஒரு செக்கனில் உலகத்தை அழிக்கும் அழிவாயுதங்களாக விரிவடைந்துள்ளன. சுருங்கக் கூறின் ஒருவாழ்வின் அடிப்படைத் தேவையும் காரணியும் மனிதனால் உலக அழிவுக்குக் காரணியாக மாற்றப்பட்டது கவலைக்குரியதே.

இவ்வல்லாயுதங்களுக்கு முதலும் மூத்ததுமானது பாலியலாயுதமான வன்புனர்வாகும். இது பல்வேறு பரிணாமங்களின் கலாசார, உறவுரீதியாக பரிணாம் பெற்றாலும், இவற்றில் சில சமூகவந்தஸ்தைப் பெற்றுள்ளன. மாமன் மச்சான் திருமணங்கள், பேசிச்செய்யும் திருமணங்கள் என்பன சமூகக்கட்டுகோப்பை நாடி நல்நோக்குடன் செயற்பட்டன. இவை வல்லுறவு என்று வட்டத்துக்குள் வராவிட்டாலும் பெண்ணின் பாதுகாப்பு நல்லெதிர்கலம் கருதியதாகவும் ஆனால் இயற்கையின் கட்டுக்கோப்பான பெண்ணின் தெரிவு என்ற வட்டத்துக்கு வெளியேயும் நிற்கிறது. இருப்பினும் இதைத்தழுவும் முகமாக அரசபரம்பரைகளில் சுயம்வரம் என்பது நிகழ்த்தப்பட்டது. இது சதாரண மக்களிடையே மாப்பிளைத் தேர்வு என்ற போதாவில் போட்டிகளாக உருவெடுத்தன. இது சமூக இயற்கைக் கோட்பாட்டுகளுடன் இணைந்து இயங்கத் தொடங்கின. பின்னர் ஆணின் பலம் பரீட்சிக்கப்பட்டு பாதுகாப்பு வல்லமை கொண்ட ஆண்கள் தெரிவு செய்யப்பட்டனர். இங்கே பாலியல் பாதுகாப்புடன் கூடிய குடும்பப்பாதுகாப்பும் உழைப்பும் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலே குறிப்பிட்ட கற்காலத்திலும் அதற்கு முன்னராகவும் வன்புனர்வுகள் நடந்திருக்கின்றன. ஒரு ஆண் தான்விரும்பியவளை அடையாதபோது தனது உடல் பலத்தை பாவித்து வல்லுறவு கொண்டுள்ளனர். பின்னர் அவை கூட்டுவாழ்வை மேற்கொண்ட காலத்தில் குழுக்களாகக் கூட நடந்திருக்கிறதுன. இக்குழு வடிவமே கூட்டுவன்புனர்வுக் கொலையாக இன்று வரை புங்குடுதீவுவரை நிலைத்து நிற்கிறது. இக்கூட்டு வன்புனர்வானது மனிதன் குழுக்களாக வாழத்தொடங்கியபோதும் அதற்கு முன்னரும் எதிரிக்குழுவை தாக்கி சிறைப்பிடித்து வந்து பெண்களை வன்புனர்வு கொண்டுள்ளனர்.

ஆபிரிக்காவில் இன்றும் ஆடையின்றி அலையும் சமூகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அங்கே வன்புனர்வுகள் ஏறக்குறைய இல்லை என்றே கருதப்படுகிறது. ஆக மானத்தை மறைக்க மனிதன் என்று உடை உடுத்தானோ அன்றே மாதர் மானமும், மனிதனிதமானமும், மனிதநேயமும் மரணமடைந்தது எனலாமா? தாய்வழிச் சமுகமாக இருந்து வளர்ந்த நாம் தறிகெட்டுப்போனது எப்போது?

வன்புனர்வுகளும் கலாச்சாரங்களும்

இப்படியான வன்புனர்வுகளுக்கு சில கலாசாரங்கள், சட்டங்கள், மதங்கள், ஊக்கமளித்தன, ஊக்கமளிக்கின்றன. இவற்றை மத்தியகிழக்கில் மத இன கலாசார, சமூகப்பின்னணிகளில் இதைக் காணலாம். இந்தியவின் முதற்குடி தமிழ்குடி என்பது மரபணுப்பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பண்டைய நாகரீகப்புரட்சிகள் என்று ஆற்றுப்படுக்கைகளை ஒட்டியே நடந்திருக்கின்றன. இதுபற்றி விபரிப்பதை விடுத்து தமிழர்களின் நாகரீகமும் சிந்துநதிக்கரையோரச் சமவெளியில் நடந்தது என்பது ஆதாராபூர்வமானது. வேட்டையின் ஆபத்தில் இருந்து தன்மைப்பாதுகாத்துக்கோள்ள விவசாயத்தையும் மிருகங்களைப் தேடிக்கொன்று தின்பதை விடுத்து மிருகங்களைப் பிடித்து வளர்ப்பதிலும் ஈடுபட்டனர். இதை வடக்கில் இருந்து வந்து ஆரியர் கூட்டம் கண்டது வியந்தது முயன்றது. இருப்பினும் வேட்டையைக் கைவிடத் தொடங்கிய இனம் பலத்துடன் கூடிய வேட்டையைக் கைக்கொண்ட ஆரியகூட்டத்திடம் நாகரீகம் மண்டியிட்டது. இதன் வடிவத்தை இன்றும் காணலாம். இதன்காரணத்தால் ஆதிகுடி மக்கள் அடிமையாக்கப்பட்டார்கள். சொந்த இடங்களில் இருந்து வந்தேறிகளால் துரத்தப்பட்டார்கள். அக்குடிப்பெண்கள் பாலியல் அடிமைகளாகவும் வன்புனர்வுக்கும் உள்ளானார்கள்.

உடன்கட்டை ஏறுதல்

இந்தியாவை நோக்கிய முகலாயர் படையெடுப்புக்களை உற்றுநோக்குவீர் களானால் இதை இலகுவாகப்புரிந்து கொள்ளலாம். முகலாயர்கள் இந்தியாவை நோக்கிய படையெடுப்புக்களில் அரசனைச் சிறைப்பிடித்துக் கொல்லுவதுடன் நின்று விடவில்லை. அவனுடைய மானம் கௌரவம் அந்த மண்ணில் அடியோடு சிதைக்கப்படவேண்டுமாயின் அரசி அல்லது அரனின் மகளின் கற்பு சூறையாபப்பட வேண்டும். இக்கொடுமையில் இருந்து தப்புவதற்காக அரசி அரசன் இறந்ததும் அரசி தீயில் குதித்து தற்கொலை செய்து கொள்வாள். அரசி கணவனின் அதி அன்பு கொண்டவள் என்பதைப் பறைசாற்றுவதற்கும், பல அரசியரில் தன்னுரிமையை நிலைநிறுத்துவதற்கும், தன்பிள்ளையே பட்டத்துக்குரியவன் என்பதை உறுதியாக்கவும் இந்த உடன்கட்டை ஏறுதல் பயன்படுத்துப்பட்டது. இது பின் சமூகமாக கொடுமையான வன்மையான மனிதநேயமற்ற வளர்ச்சி உடன்கட்டை ஏறுதலாக மாற்றம் பெற்றது. இது பிற்காலத்தில் மனைவியை தீயினுள் தள்ளிவிடும் நிகழ்வாக கௌரவச் செயலாக மதரீதியாகவும் மாற்றம் பெற்றது. இவை அதைத்தும் பாலியல் வன்புனர்வாயுதங்களாலேயே உருவானது.

சட்டமாக்கப்பட்ட வன்புனர்வு

இந்தப்பாலியல் என்பது படுமோசமான ஆயுதமாக மனிதநேயமற்ற முறையில் தண்டிக்கும் ஆயுதமாக, தண்டனையாக இன்றுவரை மதம்சார் கலாச்சாரமாக உருமாற்றம் பெற்றிருப்பது மிக வேதனைக்குரியதே. பெயர் குறிப்பட விரும்பாத நாடுகளில் வன்புனர்வு என்பது சட்டரீதிகாக அனுமதிக்கப்பட்டு அது நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பது இந்த நாகரீக உலகிலே மிருகங்களே கைக்கொள்ளாத கொடு அரக்கத்தனமான, காட்டுமிராண்டித்துனமான விலங்குகள் மனிதர்கள் என்பதை பறைசாற்றி நிற்கிறது. மனிதநேயம் பேசும் நாடுகளே, அமைப்புகளோ, ஐ.நா. சபையோ இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கதே.

பெண்ணிலே மானம் கௌரவம்

இவ்வன்புனர்வுகள் கோவம், குரோதம், பொறாமை, வன்மம், நினைத்ததை அடைமுடியாமை, கௌரவக்கெடுப்பு, அவமதிப்பு என்ற பலநோக்கங்களுக்காக பெண்கள் வதைக்கப்பட்டார்கள், வதைபடுகிறார்கள். இந்த கௌரவ அழிப்பு வன்புனர்வுகள் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டி நிற்கிறது. மனித சமூகத்தில் கௌரவம், மானம், ரோசம், என்பன பெண்களிலேயே அடக்கப்பட்டிருந்தது என்ற பெருமையையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது. பெண்ணைப் போதை பொருளாகக் கருதும் மதங்களும், மார்க்கங்களும் அவள் கௌரவத்துக்குரியவள் என்பதை சொல்லாமலே சொல்லிச் செல்கின்றன. அவள் கௌரவத்துக்குரியவள் என்பதால்தான் கடுமையான கட்டுப்பாடுகள், அடக்கு முறைகள் பெண்ணின் மேல் திணிக்கப்பட்டது என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்பதை உணரமுடிகிறது.

ஐரோப்பிய பாலியல் வன்மம்

அன்று ஐரோப்பாவில் இப்பாலியலை போருக்காகப் பயன்படுத்தினார்கள். அதாவது அழகான வல்லமையுள்ள ஆண்குழந்தைகளை அரசின் உத்தரவின் பேரில் பிடித்து வந்து நலமடிக்கப்பட்டு வெறும் போர் இயந்திரமாகவே வளர்த்து வந்தார்கள். இவை ஆண்களுக்கு எதிராக இயற்கைக்கு மாறாக மனிதர்கள் செய்த மனிதநேயமற்ற செயல். வீட்டுக்கு ஒருபிள்ளை போருக்கு என்ற கொள்கையும் ஐரோப்பாவில் பலநாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டன. இதன் படிமுறை வளர்ச்சியே அனைவருக்குமான தேசியப்பாதுகாப்பு இராணுவப்பயிற்சி என்பதாகும்.

இராணுவத்தில், கிளர்ச்சிக்படைகளில் தற்பாற்சேர்க்ககை வன்புனர்வு சாதாரணமாவே நடந்து வருகிறது. இது கண்டும் காணாமல் பேசாப்பொருளாக்கப்படுகிறது. இதுபற்றி எழுதுவதாயின் இதற்கு என்று இன்னொரு கட்டுரை தேவைப்படும். அதனால் இதை இத்துடன் நிறுத்துகிறேன்

நாட்டின் நன்மை என்று கருதி ஊனமாகப்பிறந்த ஆண்குழந்தைகள் மலைகளில் இருந்து பாதாளத்துக்கு வீசி எறிந்து கொல்லப்பட்டார்கள். நாம் மனிதநேயர்கள் மனிதபுரிசர்கள் என்று வெள்ளையர் நெஞ்சு நிமிர்த்திப் பேசுபதற்கு இலாயக்கற்றவர் களாகவே உள்ளனர். இருப்பினும் அவர்கள் அந்நிலையில் இருந்து மாறிவந்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க இயலாது.

தெய்வீகக்காமம்.

இக்காமத்தின் வன்மை கெடுவதற்காக அதை புனிமாக்கி, காதலாக்கி, அதைக் கடவுளாக்கிய நடைமுறைகளும் உண்டு. இது பாலியலைப் புனிதமாக்கும் முயற்சியாகவும் பாலியலூடு இறைநம்பிக்கையை வளர்க்கவும் வழிவகுத்தது. எது எப்படியாயினும் பாலியல் என்பது உணர்வு மிக்க வன்மையான ஒன்றாகவே ஆத்மரீதியாகவும் உடல் உளரீதியாகவும் பார்க்கப்படுகிறது. காரணம் இது சிலவேளைகளின் மனிதனின் கட்டுப்பாட்டை மீறிய செயலாகவும் அமைந்துள்ளது.

மனிதன் உருவான காலத்தில் சுயவிருப்புக்கு எதிரான பாலியல் வன்புனர்வானது இன்று வரை நாகரீகம் அடைந்த, மனிதநேயத்துக்கு எதிராக உலகில் நின்று நிலைக்கிறது என்றால் இதன் பின்புலத்தில் ஏதோ ஒரு ஆழமான காரணமும், உணர்வும் இருந்தே ஆகவேண்டும். அது என்ன?

இந்தப்பாலியல் வல்லாயுதத்தை மனிதர்கள் மனிதநேயம் கொண்டவர்கள் அகில உலகில் உள்ள பெண்கள் வெறுத்தாலும் இது நிகழ்கிறது, தொடர்கிறது. தன்குழந்தையைக் காக்க வீறு கொண்டெழும் ஒரு பெண்ணால் இந்த வன்புனர்வுகளில் இருந்து மீளமுடியவில்லை ஏன்?

சுரப்புக்கள்

இயற்கை தன்னைச் சமப்படுத்துவதற்காக தன் செயற்பாடுகளை தொடநிலைத் தானியங்கியாக வைத்துள்ளது. உ.ம் நாம் வழி அசுத்தத்தை ஏற்படுத்தி வழிமண்டல வெப்பத்தை அதிகரிப்போமானால் இயற்கை பூகம்பங்களாக அங்காங்கே வெடித்து தன்னைத் தானே குளிவித்துக் கொள்கிறது. இதேபோன்று இனப்பெருக்கம் என்பது தடைப்படாதிருக்க உயிருள்ள அனைத்திலும் சுரப்புகளை வைத்து தானியங்கு தன்மையுள்ள தாக்கியுள்ளது. இச்சுரப்புக்கள் பிறப்பின் போது இருந்தாலும் இயங்குதன்மையையும் சுரப்பு வேகத்தையும் தம் பருவவயதிலே பெறப்படுகிறது. ஒரு உயிர் அல்லது இனம் தான் அழியப்போகிறேன் என உணரும்போது இப்பாலியல் சுரப்புக்கள் அதிவேகமாகச் செயற்படுகின்றன என்பதை பல மனோவியல் ஆய்வுகள் கூறகின்றன. இவை வல்லுறவுகளாகவும் வெளிப்படுகின்றன.

போர் நடைபெறும் நாடுகளைப்பார்த்தால் அங்கே பிள்ளைப்பெறும் வீதமும் அதிகமாக இருக்கும். அதேபோன்று ஐரோப்பா போன்ற அழிவுகளை 3ம் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு அமைதியாக இருக்கும் நாடுகளில் வெள்ளையினம் அழிந்து கொண்டே வருகிறது. இதற்கு உதாரணம் மே.ஜேமனி, நோர்வே, இரஸ்யா. ஆய்வுக்காக புலி சிங்கம் போன்ற கொடுவிலங்குகள் இல்லாத காட்டில் மான்களை வாழவிட்டார்கள். அந்த இனம் வளர்ச்சியடையவோ பெருகவோ இல்லை. அதே மான்களை கொன்று தின்னும் மிருகங்களுடைய பகுதிகளில் வாழவிட்டபோது அவை தன்னினத்தைப் பெருக்கிக் கொண்டன. ஆபத்து என்று வரும்போது தம்மை அறியாமலேயே சுரப்புக்களின் பாதிப்பால் இனங்கள் பெருகிக்கொள்கின்றன. இதுதான் சுரப்புக்களின் சூட்சுமம்.

இதேபோன்றது தான் போர் நடைபெறும் பிரதேசங்களின் பிறப்புவீதமும் வன்புனர்வுகளும் அதிகரிப்பதற்குக் காரணம். தன்னுயிருக்கு ஆபத்து என உள்ளுணர்வு உணரும் பட்சத்தில் சுரம்பு தன்னையறியாமலேயே செய்பட ஆரம்பிக்கும். போர் எதிரி என்று வரும்போது இப்பாலியல் உணர்வு வன்புனர்வாக வெளிப்படும். எதிரி அவலமும்; அலறலும் திருப்தி தரும் என்பதால் வன்புனர்வு இரண்டையும் சேர்ந்து இரட்டிப்பான திருப்தியாகக் கொடுப்பதால், போர்சூழல் பாலியல் வன்புனர்வற்றது என்று என்றும் கருத இயலாது. மகிந்தர் கூறவதுபோல் எமது சிங்களப்படை கட்டுப்பாடுடையது என்று மார்பு தட்டவும் இயலாது. இங்கே பாலியல் இரட்டைத்திருப்தியுடன் எதிரியை இழிநிலைப்படுத்தும் வல்லாயுதமாக பாலியல் பயன்படுகிறது.

வியட்னாம் போரில் உலகின் சிறந்த கட்டுப்பாடான ஒழுக்கமான அவுஸ்ரேலிய இராணுவம் அமைதிப்படையாக நின்றது. போர் முடிந்து அவுஸ்ரேலியப்படை வெளியேறிய பின்னர்தான் தெரிந்தது பல இலட்சம் அவுஸ்திரேலிய கலப்புப்பிள்ளைகள் வியட்னாமில் உருவாக்கப்பட்டிருந்தார்கள் என்பது. சரி காந்தியின் மைந்தர்கள் ஈழத்துக்கு சமாதானப்படை என்று வந்தார்களே காந்திமாதிரியா நடந்தார்கள். காமம் ஆயுதம் தாங்கி நின்றிருந்தது. எதிரியாகப் பார்க்கப்பட்ட ஈராக்கியருடன் அமெரிக்கப்படை வீரர்கள் படைவீரிகள் எப்படி நடந்து கொண்டார்கள். போருக்கும் நிர்வாணத்துக்கும் என்ன தொடர்பு? வட்டுக்கோட்டைக்கும் கொட்டைப் பாக்குக்கும் உள்ள தொடர்புதான்.

போரின் பின்விளைவுகள்

மழைவிட்டபின்னரும் தூவானம் விடாது என்பதுபோல் போர் முடிந்தபின்னரும் வல்லுறவுகள் முடிந்துவிடும் என்று எதிர்ப்பது தவறானது. போரின்போது ஓழுக்கமாக இருந்த சமூக, சமய, கலாசார, ஒழுக்க நெறிமுறைகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு வன்மம், கொலை, கொள்ளை, அதிகாரம், தான்மட்டும் தப்பிவாழும் எண்ணம், வன்புனர்வு போன்றன தலைவிரித்தாடும். ஒரு சமூகமோ இனமோ மனநோய்க்கு உட்பட்டிருக்கும். இது போர் முடிந்த பின்னரும் தொடரும் என்பதில் ஐயமில்லை. 2 ஆவது உலகயுத்தம் முடிந்தபின்னர் ஐரோப்பாவை எவ்வளவோ சிரமப்பட்டே மனோவியல் மாற்றங்களை எற்படுத்தி பின் பொருளாதாரரீதியில் கட்டி எழுப்பினார்கள். இன்று இலங்கையில் நடைபெறும் பாலியல் வன்புனர்வுகளும், வன்கொடுமைகளும் போரின் பின்விளைவுகளே. இது புலிகள் இருந்தாலும் அங்காங்கே நடந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. என்றும் ஒரு சமூகத்தை ஆயுதமுனையில் தொடர்ந்து வைத்திருத்தல் இயலாது. மனனோவியல் மாற்றத்தை ஒழுங்கை ஏற்படுத்தினால் மட்டுமே வன்புனர்வ வன்கொடுமைகளில் இருந்து சமூகத்தைக் காப்பாற்ற முடியும்.

சட்டங்களால் நிலைநிறுத்த முடியாத சீர்திருந்தங்களை அன்று மதங்கள் நம்பிக்கை எனும் மனோவியல் கொண்டு செய்தன. இதனால் ஐரோப்பா மட்டுமல்ல உலகெங்கும் அரசுக்கு நிகரான அதிகாரம் மதங்களுக்கு இருந்தது. அரசன் கூட நம்பிக்கையிலஇ உறுதியான மனநிலை கொண்டு சட்டவாக்கங்களை உருவாக்கினான். இதனால் பிராமணியர் எனும் பாப்பணர் தம்மை உயர்ந்தவர்களாக கடவுளுக்கு அருகிலுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முடிந்தது. இது உலகெங்கும் நடந்த நிகழ்வே.

ஒவ்வொரு குற்றவாளியும் நான் செய்வது குற்றச்செயல் என்பதை அறிந்தே இந்த வன்புனர்வுகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் தான் பிடிபடமாட்டோம் என்ற எண்ணத்துடனே இவற்றைச் செய்கிறார்கள். இதை எந்த அரசு ஆயுதக்கெடுபிடி களுடன் நின்றாலும் இப்படியான வன்புனர்புகளை முற்றிலும் உடனடியாகத் தடுக்க இயலாது. இதற்கு காலம், மனமாற்றம், சமூகமாற்றம், சமூகசீர்திருத்தம், பொருளாதார உயர்வு, தீயபழக்கவளக்கங்கள் எனப்பல காரணிகள் தீர்மானிக்கின்றன.

புங்குடுதீவும்...!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் வன்புனர்வுக் கொலை பாரிய எதிர்வினைகளை உருகாக்கிய பின்னரும் பலவன்புனர்வுகள் இடம் பெற்றிருப்பது எமக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது? எதிர்வினைகள் எதுவுமே மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே. மக்களின் எதிர்ப்புகள் பேரணிகளைக் கட்ட பின்னரும் இப்படியான வன்வுனர்வு தொடர்ந்து நடக்கிறது என்றால் இதைத் தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை சட்ட சமூகவல்லுணர்களை முடுக்கிவிடுவதே சாத்தியமான செயலாகும். இறுக்கமான சட்ட உருவாக்கம், போதைப்பொருள் தடுப்பு போன்றன பக்கக் காரணிகளாக அமைந்தாலும் சமூகச்சீரமைப்பே இப்படியான வன்செயல்களை வெல்வவைக்கும் என்பது திண்ணம். இவ்வன்செயல்கள் அனைத்தும் போரினால் ஏற்பட்ட மனோவியல், சமூகவியல் மனநிலைப் பாதிப்பாகும். இறுக்கமான சட்வன்செயல்கள் நிறைந்த, மலிந்த இருந்த சமூகம் உடனடியாக சீர்திருத்தமுள்ள சமூகமாக மாற்றமடைவது கடினம். இதற்கு மாற்றுவழி என்ன? உடனடி நடவடிக்கைகள் என்ன?

போர் வெற்றி என்பது ஆயுதங்களால் மட்டும் கிளர்தெழுந்த சமூகத்தை அடக்கிப் பணியவைப்பது அல்ல. எழுச்சியுற்ற சமூகத்தின் மனங்களை வென்றால் மட்டுமே போரை வெற்றி கொண்டுதாகக் கருதமுடியும். போரின் பின்னர் பாதிக்கப்பட்ட
சமூகம் பாலியல்வன்புனர்வுக்கு, சட்டம் நடைமுறைகளுக்கு எதிராகவும், சமூகக் கட்டுப்பாடுகள் செயலிழந்தும் இருக்குமாயின் போர்வெற்றி என்பது வெறும் பகடையே. உளநல மருத்துவத்தின் விஸ்தரிப்பும், விரிவாக்கமும், அடிப்படை வாழ்வாதரா உதவிகளும் போர்நடந்த சமூகத்துக்கு அத்தியாவசியமானது. இதை கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. சட்டங்களை இறுக்குவதால் மட்டும் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்திவிட முடியாது. போதை வஸ்துக்களைக் குற்றம் சாட்டிக் கொண்டு தமது பொறுப்பில் இருந்த அரசு தவறிவிட முடியாது. ஐக்கிய இலங்கை எனும்போது தமிழர்களும் அந்நாட்டுப்பிரஜைகளே. பாரபட்சம் கொண்ட பாகுபாடு காட்டும் அரசு ஐக்கிய இலங்கையைப் பற்றிப் பேசுவதற்கு அருகதையற்றது.

வித்தியாவின் சம்பவத்தை வைத்து நாம் பலவிடயங்களை உய்துணர முடிகிறது. ஜனநாயகத்துக்குப் புத்துயிர் கொடுக்க முயல்வது தெரியவருகிறது. காரணம் ஜனநாயக வெளிபடுத்து யுத்திகளான கருத்துரிமை பேரணிகள், ஊர்வலங்கள் எதிர்புகள் இன்றி இயங்க முயல்கின்றன.

ஒரு அப்பாவி மாணவியின் கொலையை வைத்து தம்மரசியல் இலாபம் தேட முயலும் போக்கிலித்தனமான அரசயல் சுயநலங்கள் தலைகாட்டுகிறது. முக்கியமாக தமிழர் தரப்பில் தமிழரின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் இப்படியான விடயங்களில் மூக்கை நுளைத்து தமிழ் இனத்தின் பெயருக்கே களங்கம் கற்பிக்க விளைகிறது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். தமிழினத்தைப் பிரதிபலித்தவர்கள் செய்த சிறு சீர்கேடுகள் கூட எம்முழுச்சமூகத்தையும் எதிர்காலத்தையும் எப்படிப்பாதித்தது என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். இப்படியான அரசியல்வாதிகள் இன்னும் உணராது இருந்தால் தயவு செய்து அரசியலில் இருந்து விலகிக் கொள்வதே எம்மினத்துக்குச் செய்யும் சிறந்த தொண்டாகும்.

முக்கியமாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் யாழ்விஜயமும் அதன் நோக்கமும் தமிழர் மத்தியிலும், வெளிநாடுகளிலும் நற்பெயரை ஏற்படுத்தியுள்ளதுடன். நம்பிக்கைத் துளிகளுக்கு வித்திட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. மாறி மாறிவந்த சிங்கள அரசுகளால் ஏமாற்றப்பட்ட தமிழினம் இதை மறுதலித்தாலும் எதிரிகூட நல்வனாக இருப்பது சாத்தியம் என்பதையும் உணர்வது அவசியம். புலத்திலுள்ள சில அமைப்புக்கள் சுயநலங்களுக்காக நிலத்தில் சீரற்ற நிரந்தமற்ற அரசியல் நிலமைகளை விருப்புவது மிகத் தெட்டத்தெழிவாகப் புலனாகிறது. புலத்துத் தமிழர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரகம் கொடுக்காது இருப்பது இன்றைய தேவையாகி உள்ளது. புலத்துத்தமிழர்களின் ஒரே ஒரு செயல் மட்டுமே உரிமைக்குரியது. நிலத்துத்தமிழனுக்கு என்ன தேவையோ அதை இயற்றவரை அவர்களுக்கு வளங்குவது மட்டுமே. புலத்திலுள்ளவர்களின் அரசியல் முடிவுகளையும் தீர்மானங்களையும் நிலத்தில் வாழும் போரினால் காயப்பட்ட எம்மக்களின் மேல் திணிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. இப்படியான அமைப்புகள் இனங்கண்டு அகற்றப்படவேண்டும். நிலத்துத்தமிழர்களின் கழிவிரக்கத்தின் பால் பணம் சேர்த்து தாம் பருக்;கும் நிலை இன்னும் மாறவில்லை என்பதை அனைவரும் அறிவதும் உணர்வதும் அவசியமாகிறது.

எதையும் கறுப்புக்கண்ணாடி போட்டுப் பார்க்காது. நிதர்சனங்களைக் கிரகிப்பதும், மேலும் தமிழினம் மட்டும்தான் இலங்கையில் ஒரு இனமல்ல என்பதை உணர்வதும் அரசின் கொள்ளவு என்பதை அறிந்து இயன்றவரை இராஜதந்திர ரீதியாக எம்மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதே இன்றை தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் கடமையாக இருந்தல் வேண்டும். அதனால் பெரும்பான்மை இனத்தின் தேவைகளை உதறி எறிந்து விட்டு சிறுபான்மையை மட்டும் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறாகும்.
ஒரு ஜனநாயக அரசியில் கட்டமைப்பை பார்த்தால் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யமுடியாது. ஒரு திட்டமானது பல வகையான அரசியல் இராஜதந்திர செயற்திட்டங்களின் ஊடாகவே வெளிகொணரமுடியும் என்பதை அறிதலும் அவசியமாகிறது.

ஈழத்தமிழனை புலத்துத் தமிழனின் இருந்து இந்தியத் தமிழன் ஈறாக விற்றே இன்றை அரசியல் வியாபாரமும், பணக்கொள்ளையும் நடக்கிறது. நாம் அங்கு அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்று புலுடாவிட்டு தமது பணப்பைகளை நிரப்புவதற்கும், தேனெடுத்துவன் விரல் நக்குவதற்கும் புலத்தாரே நீங்கள் முறிந்துளைத்த பணத்தையா கொடுக்கப்போகிறீர்கள்? நீங்களே இவற்றை நேரடியாகவே செய்யலாம். நிச்சயமாக உங்களின் உறவுகள், தெரிந்தவர்கள் போரினால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்பது திண்ணம். அவர்களுக்கு உங்கள் பங்களிப்பைச் செய்வதனூடாக எம்மிடையே உள்ள கேடிகள் உங்களை ஏமாற்றாது பார்த்துக் கொள்ளலாம். கோடிக்கணக்கில் இறுதிப்போருக்குச் சேர்த்த பணங்களுக்கான கணக்குக்களோ காரணங்களோ கூறப்படாமலேயே மீண்டும் பணம் சேர்ப்ப நடப்பதை அனுமதிக்கப் போகிறீர்களா? தொடர்ந்தும் ஏமாளியாகத்தான் வாழப்போகிறோம் என்கிறீர்களா? கெடுகிறேன் பிடி பந்தயம் என்றால் அது உங்களின் முடிவே.

நேர்மையுடன்
நோர்வே நக்கீரா

Read more...

Sunday, May 17, 2015

பாரம்பரியத்திற்குள் இருக்கும் போதை, ஆக்குமா? அழிக்குமா?

தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது.

பாக்கு, வெத்திலை வைத்து கொடுத்து வரவேற்பது தமிழினத்தின் பண்டைய பண்பாடும், காலாசாரப்படிமம் ஆகும். இது இலட்சுமி கடாச்சமானது என்றும், தெய்வீகமானது என்றும் கருதப்பட்டது. வாக்குச் சொல்பவர்கள் கூட பாக்கு உருட்டியும், வெத்திலை நாடி பார்த்தும் குறி சொன்னார்கள். இப்படி இருந்த பாக்கு இன்று போக்குமாறி, வாக்குமாறி இனத்தையே பலவீனப்படுத்தும் தாக்கு பொருளாக மாறியுள்ளது.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. இதை அரசோ, குற்றத்தடுப்புப்பிரிவோ, அரசவதிகாரிகளோ இதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? சமூக ஆவலர்கள் இது குறித்து விசனப்பட்டு, புகார் செய்தாலும் இதைக் அரசு கண்டு கொள்ளாதிருப்பதும், தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட மறுப்பதும், பெற்றோர், சமூக ஆவலர்கள்,காலசாரக்காவலர்கள், தமிழ் அரசியல்வாதிகள் எனப்பல வேறுபட்ட வகுப்பினர்கள் விசனத்துக்குள்ளாகி உள்ளார்கள்.

அண்மையில் இந்த மாவாப்பாக்கை மல்லாகத்திலுள்ள உயர்தரவகுப்பில் பயிலும் இருமாணவர்கள் பாவித்தமை நேரடியாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மாணவசமூகத்தினுள் இளைஞர், யுவதிகள் மத்தியில் இப்படிப்பட்ட போதைப்பாக்கு வகைகளைப் பாவிக்கும் நிலை சர்வசாதாரணமாகப் புழக்கத்தில் வருகிறது. இது எப்படி வருகிறது? இதன்பின்னணி என்ன? எதிர்கால இலக்கு என்ன? என்பது பற்றி ஆராயவுள்ளோம்.

பாக்கு

பாக்கை சிங்கப்பூர், சில மத்தியகிழக்கு நாடுகள் போதைப் பொருளாகவே பார்க்கின்றனர். விமானநிலையங்களில் பாக்குடன் பிடிபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கையாகவே போதைப் பொருள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இது தமிழ், சிங்கள மக்களிடையோ சர்வசாதராணமாக பாவிக்கும் பாவனைப் பொருளாகவே அன்று இருந்தது. வல்லுவம் என்ற சிறுபையில் பாக்கு வெத்திலை சுண்ணாம்பு போன்றவற்றைக் கொண்டு திரிந்தார்கள். அதில் கொட்டைப்பாக்கு நாறல்பாக்கு எனபலவகையில் பதப்படுத்தி சீவலாக்கிப பயன்படுத்துவார்கள். பல்லும்போனவர்களும் பாக்கை சிறு உரலில் இடித்துத் தூளாக்கிப் பயன்படுத்துவார்கள். இன்று சூவீங்கள் எனும் இறப்பறை சப்புவதுபோல் அன்று பாக்கு வெத்திலை என்பது பொழுதுபோக்காகப் பொருளாக சமூகவிணைப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. இது தேனீர்இ காப்பி போன்ற சமூகதொடர்பு உண்டிகள் போல் இதுவும் பயன்படுத்தப்பட்டது. பழக்கமில்லாதவர்கள் இதை உண்ணும் போது தலைசுற்றும். இமமதில் சிறு போதைத்தன்மை இருக்கிறது என்பதற்கு இந்த உதாரணம் போதுமானது.

போதைப்பொருட்கள்

போதை என்று பார்க்கும் போது தேனீர், காப்பி போன்றவைகளும் போதைப் பொருக்களே. போதையின் அளவை, தாக்கு வீரியத்தை வைத்தே போதைவஸ்து எது என்றும் மென்போதைப் பொருள் எது என்பதும் சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டது. தாக்குதிறன் குறைந்த தங்குதன்மையற்ற காப்பி ,தேனீர் போன்றன ஊக்கம் தரும் சமூகப்பாவனைப் பொருட்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. போதை ஏற்றும், தங்கிவாழப்ப்பண்ணும் பொருக்களான கஞ்சா ,அபின் ,கரோயின், கொக்கோயின் போன்றன தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களாகக் கொள்ளப்பட்டன. இப்போதைப் பொருட்கள் மனிதனை, மனிதமூளையை தாக்கு தங்கிவாழச் செய்வதால் இதை தடைசெய்யப்பட்டன.

வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்து எம்மை தம்மில் தங்கிவாழப்பண்ணினான். இதில் ஒருவடிவமே தேயிலை, காப்பி அறிமுகமாக இருந்தது. எமக்கு அதைப் பழக்கி, எமக்கே விற்றுப் பணம் சம்பாதித்தான். இதனால் பாக்கின் பயன்பாடும் குறையத்தொடங்கியது. இதை புதுமுறையில் உயிர்பிக்க பீடா என்று இதேபாக்கை சீனி, வாசனைப் பொருட்களுடன் கலந்து விற்கத் தொடங்கினார்கள். இது இளைஞர் யுவதிகள் மத்தியில் ஓரளவு வளர்ந்தாலும் அங்கிகரிக்கப்பட்டதும் சமூகவந்தஸ்துப் பெற்ற கோப்பி தேனீருடன் போட்டி போட முடியவில்லை. இன்று கோப்பி தேனீருக்கென்றே பல கடைகள் உருவாயிருப்பதை அனைவரும் அறிவர்.

போதைப்வஸ்துக்கள் மனிதனை அதில் முழுமைகாகத் தங்கி வாழப்பண்ணுகிறது என்பதுடன் அழித்தும் விடுகிறது. இதனால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பாவனையாளர்களையும் விற்பனையாளர்களையும் தண்டிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படடுத்தப்பட்டது. வன்போதைப் பொருட்கள் பாவனை திறனற்ற சமூகத்தை உருவாக்க வழிகோலும் என்பது திண்ணம். உலகிலேயே தடைசெய்யப்பட்ட வன்போதைப் பொருட்கள் சமூகமயப்படுத்துவது அடிப்படையில் தமிழினத்தை அழிக்கும் ஒருசெயலாகவே பார்க்கப்படவேண்டும். இது ஒரினத்தின் அத்திவாரத்தை ஆணிவேரை பிடுங்குவதாக அமையும். இளையவர்களே ஒரினத்தின் எதிர்காலம். இவர்கள் போதையில் தங்கி வாழ்ந்தால் சமூகம் கட்டுப்பாடு இழந்து வன்செயல்களைத் தொடர்ந்து அறிவிலிகளாக, வல்லுறவாளர்களாக வாழத்தொடங்குவார்கள்.

இப்பாக்கப் போதைப் பொருளை யார்விற்பனை செய்கிறார்கள்? எப்படி நாட்டுக்குள் நுளைகிறது? என்ற கேள்விகளுக்கு விடை அரச அனுமதியுடனே இவை புளக்கத்துக்கு வருகிறது என்பதாகும். வன்போதைப் பொருக்களை பாக்கு என்ற சமூகவந்தஸ்துப் பெற்ற சப்புபொருளை போதைப் பொருட்களுடன் கலந்து இராணுவத்தினூடு இலவசமாக முக்கியமாக இளைஞர் யுவதிகளைக் குறிவைத்தே அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகிறது. சுயமாகச் சிந்திக்கும் விவேகமுள்ள இளைஞர்களே நாட்டின் நாடி நரம்பாகவும் இனத்தின் காப்பரண்களாகவும் அமைகிறார்கள். இக்காப்பரண்களைச் சிதைப்பதன் ஊடாக ஒரு இனத்தையே அழித்து புரட்சி, போராட்டம் என்ற சொற்களையே அர்த்தமற்றதாக்கி விடலாம் என்பதில் அரசு குறியாக உள்ளது. இப்போதைவஸ்துக்களால் பாலியல் வல்லுறவுகள், விபச்சாரம், சுயசிந்தனை அழிப்பு, இனவேற்றுமை உடைப்பு, தேசிய அறுப்பு என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வன்போதைப் பொருட்கள் இலகுவாகவும் இலவசமாகவும் கிடைக்கப் பெறும் போது அதன் பாவனை வீதம் அதிகரிப்பதற்கும் வன்செயல்கள் உயர்வதற்கும் ஏதுவாக அமைகியும்.

அரசின் சாதகமான முயற்சியோ, உதவியோ கிடைக்காத பட்சத்தில் இதைத்தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். நாட்டின் சட்டம் என்பது கோட்டில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் காலாசாரச்சட்டம் என்பது மனங்களில் உறுதியாக்கப்படுவது. இதனால் இப்போதை வஸ்துக்கள் பற்றிய விளிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும். இதன் தீமைகளை எடுத்துரைப்பதும், இப்பானையாளர்களை விற்பனையாளர்களை சமூகவிரோதியாக பார்ப்பதற்கு தமிழ்சமூகத்தை உந்துவதும் இப்படியான வன்போதைப் பொருள் பாவனையை முளையிலேயே கிள்ளுவதற்கான யோசனைகளாகும். சட்டத்தால் முடியாதவற்றை சில காலாசாரங்கள் திறமையாகவே செய்யும்.

ஒருவினத்தை அழிக்கவேண்டுமானால் அவ்வினத்தின் மொழி,கலை, கலாசாரம், ஆழ்நிலம், பொருளாதாரம், கல்வி போன்றவற்றை அழிப்பதனூடாகவே மிக இலகுவாக இனவழிப்பை நிறைவேற்றலாம். இதில் இளையவர்களை சுயசிந்தனையற்றவர்களாக உருவாக்கும் போது ஒரினமே தனக்குத் தானே தீயிட்டுக் கொள்கிறது. இதில் இந்த மாவா பாக்கு பெரும்பங்கை ஆற்றுகிறது. காலாசாரம், கல்வி, பொருளாதாரம் என்பற்றை ஒரேநேரத்தில் குறிவைத்துத் தாக்குகிறது. இனவிடுதலை, தேசியம், போராட்டம், விடுதலை பற்றி வாயறக்கத்தும் பெருமக்களே! இப்போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதும் போராட்டமே என்பதை அறியுங்கள். ஆயுதம் எடுத்துப் போராடுவதும், கூட்டங்கள் போடுவதும், மேடையில் பேசுவதும், ஊர்வலங்கள் நடத்துவது மட்டல்ல போராட்டம். ஒரினத்தை அதன் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் போராடுவதும் மனிதநேயத்துடன் கூடி இரட்டிப்பான இனவிடுதலைப் போராட்டம் என்பதை உணர்க. தேசியம் சுயநிர்ணயம் பேசுபவர்கள் அடிப்படையில் சுயமாகச் சிந்திக்க முடியாத மக்களிடம் அது குறித்து எப்படிப் பேசுவீர்கள். சுயமாகச் சிந்திக்கும் மனிதனால் மட்டுமே தன்னினம், மக்கள், தன்னிலம், தேசம் என்று சிந்திக்க முடியும். சுயநினைவுடன் ஆரோக்கியமாக சிந்திக்கும் மனிதனாலும் மக்களாலுமே ஒரு இனவிடுதலையை வென்றேடுக்க முடியும். புலத்தில் இருந்து சுயநலனுக்காக போராட்டம், இனம், சுயநிர்ணயம் என்று பேசுபவர்கள் அம்மண்ணின் மக்களின் நிலையை சிந்திக்கவே மாட்டார்கள். ஏதாவது சாட்டுகச் சொல்லிப் பணம் பறிப்பதே குறியாக இருக்கும். ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியே சுயநலன்களின் விஸ்வரூபமே என்பதை அறிக.

எம்மினத்தை ஆரோக்கியமாகவும், கல்வி, கேள்வி, பொருளாதாரம், கலை, கலாசாரம், உடல் உளநலன்களுடன் வாழவைத்தாலே போதும் விடுதலை, சுதந்திரம் என்பது தானாகவே வந்துசேரும். தமிழ்தேசியம் தானாகவே காப்பாற்றப்படும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்குத்தான். சுயம்பன் கொடியும் பணம் சுருட்டலே நடப்பு. எம்மினம் சிந்திக்குமா? இதற்கான முதலடியை எடுத்து வைக்குமா? கால் முழுமையாக முறிவதற்குமுன் பத்தைக் கட்டிவிடுங்கள். சமூகம் தானாகவே நடக்கும்.

Read more...

Saturday, May 16, 2015

மலைகத்தில் ஜனநாய புரட்சிக்கு ஆயத்தம்!

20 ஆவது திருத்தச்சட்டம் மலையக மக்களை பாதிக்குமாயின் அதற்காக மலையகத்தில் 'ஜனநாயக புரட்சயை' ஏற்படுத்தவும் சாத்வீக ரீதியிலான போராட்டங்களை அண்ணல் மகாத்மாகாந்தி அமரர் சௌமியமூரத்தி தொண்டமான் வழியில் மேற்கொள்ள சௌமிய இளைஞர் நிதியம் முன்வந்துள்ளது. இதன் முதற் கட்டமாக வரும் 19ம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரஅடையாள சத்தியாகிரகம் மௌனவிரதத்துடன் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்தூல் அனுஸ்டிக்கவும் இம்மாதம் 30 ம் திகதிக்கு முன்பு நல்ல முடிவு கிடைக்காவிடின் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் சாகும் வரையிலான சத்தியாகிரகத்தை அந்தோனிமுத்துவின் தலைமையிலான பலர் மேற்கொள்ள உள்ளதாக நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கண்டி பன்விலை மாவட்டத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சொல்லால் மாத்திரமின்றி செயலாலும் இந்த ஜனநாய புரட்சியை நடாத்தி மலையக மண்ணில் ஜனநாயத்தை நிலைநாட்ட தமது அமைப்பு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதியம் 19ம் திகதி நிகழ்வு எட்டியாந்தோட்டையிலும் ஜுன் முதல் ஆரம்பமாகும் நிகழ்வு பன்விலையிலும் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்பும் காலனித்துவ காலந்தொட்டு மலையக மக்களது உரிமைகளுக்காக உருளவள்ளி போராட்டம் , அல்கொல்லை வலையல் போராட்டம் போன்ற பல போராட்டங்களை நடாத்தி வெற்றிக்கொண்ட எட்டியாந்தோட்டையில் 19ம் திகதி ஆரம்பிக்கப்புடும் போராட்டம் ஜுன் மாதம் மலையக மெங்கும் மட்டுமின்றி தமிழகத்திலும் சர்வதேச சுதந்திர தொழிற்சங்க சம்மேளனத்தினதும் பல சிவில் அமைப்புக்களினது ஒத்துழைப்புடன் உலகின் பல பகுதியிலும் ஆதரவு அலைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com