Showing posts sorted by relevance for query புன்னியாமீன். Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query புன்னியாமீன். Sort by date Show all posts

Wednesday, March 13, 2013

இலங்கையில் நிகழ்ந்த சாதனைமிகு தமிழ் நூல் வெளியீட்டு விழா: என். செல்வராஜா

இலங்கையின் புகழ்பூத்த ஹிப்னாட்டிச- மனோதத்துவ -உளவளவியலாளர்களுள் ஒருவரான யூ.எல்.எம்.நௌபரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளையும் உளவியல் அடிப்படைகளையும் உள்ளடக்கிய நூலொன்றினை கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் அண்மையில் எழுதியிருந்தார். யூ.எல்.எம்.நௌபரின் வாழ்க்கை வரலாற்றின் பின்னணியில் அவர் வாழ்வில் கண்ட அரிய பல அனுபவபூர்வமான உளவியல் கருத்துக்களை அனுபவரீதியில் இந்நூலில் புன்னியாமீன் விளக்கியுள்ளார்.

கலாபூசணம் புன்னியாமீன் எழுதிய ‘ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா’ என்ற இந்நூல் வெளியீட்டுவிழா கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தில் 2013 பெப்ரவரி 25ல் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பொதுவாக இலங்கையில் நடைபெறும் தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களைப் பொறுத்தவரையில் ஒரு கூரையின்கீழ் நூறு பேரைத் திரட்டுவது என்பது பெரிய காரியம். ஆயின் இவ்விழாவில் நாடளாவிய ரீதியில் 550 பேருக்கும் மேல் கலந்து கொண்டமை சிறப்பான விடயமாகும். கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் 400 ஆசங்களே உள்ளன. வெளியில் இருந்து 150 கதிரைகள் வாடகைக்குப் பெறப்பட்டு பிரதான மண்டபத்துடன் இணைந்த மண்டபத்திலும் போடப்பட்டதாகப் புன்னியாமீன் எனக்குத் தெரிவித்திருந்தார். மண்டபத்தில் பாரிய தொலைக்காட்சித் திரையிலும் நிகழ்வுகள் பெருப்பித்தும் காட்டப்பட்டன. விழாவிற்கு வந்த அனைவருக்கும் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா– சுவடுகள் எனும் 48 பக்க நூல் ஒன்றும் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி நிரலுடன் சிந்தனை வட்டத்தினதும் அதன் தாபகர் புன்னியாமீனினதும் பணிகளை சுவடுகள் உள்ளடக்கியிருந்தது. பொதுவாக நூல் வெளியீட்டு விழாக்களின் போது முதல் பிரதி சிறப்புப் பிரதி என்று நூல் பெறுவோர் பட்டியல் நீண்டிருக்கும். ஆனால் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா வெளியிட்டு விழா அழைப்பிதழில் இத்தகைய பட்டியல்களைக் காணமுடியவில்லை. இருப்பினும் விழா நடைபெற்ற நேரத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் நூலின் பிரதிகளை முண்டியடித்துக்கொண்டு வாங்கியமையும் நூலின் அச்சிடப்பட்ட பிரதிகளின் அரைவாசிக்கும் மேல் அன்றைய விழாவிலேயே விற்பனையானதும் ஈழத்து வெளியீட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க ஒன்று.

கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழா சர்வதேச குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்று இலங்கைக்குப் பெருமை தேடித்தந்த மொஹமட் ரிஸ்வானின் கிராத்துடன் ஆரம்பமாகியது. இலங்கையில் உளவியல் துறையில் மூத்த பேராசிரியர் ரோலன்ட் அபேபால, இலங்கையில் சிரேஸ்ட மனோ வைத்திய நிபுணர் நிரோஸ மென்டிஸ் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு எந்தவொரு அரசியல்வாதியும் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது. பேராசிரியர்களும் கல்விமான்களுமே அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.

விழாவில் நூலாய்வு இடம்பெறவில்லை. இருப்பினும் இலங்கையில் முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவரான அல்ஹாஜ் என்.ஏ.ரஷீட் சிறப்புரையையும் நூலாசியர் புன்னியாமீன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தியதுடன் திருமதி மஸீதா புன்னியாமீன் கவி வாழ்த்திசைத்தார்.

மனோதத்துவ நிபுணரான யூ.எல்.எம்.நௌபர் அவர்கள் தன்னலமற்ற ஒரு உளவளவியலாளராவார். சுமார் நான்கு தசாப்த காலமாக இலங்கையில் இன மத பேதம் பாராது சுமார் 2500 மேற்பட்டோரை உளவியல் சிகிச்சை மூலமாக குணப்படுத்தியுள்ளார். சுனாமி அனர்த்தத்தின் பின்பும் வடக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்பும் வடமாகாணத்திலும் இவர் கணிசமான சேவையாற்றியுள்ளார். இவர் சேவைக்காக ஒரு சதமேனும் பணமோ அல்லது அன்பளிப்புகளோ பெறுவதில்லை என்பது வியப்புக்குரிய உண்மை. இத்தகைய சேவைகளை மிகத் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் புன்னியாமீன் இந்நூலில் தெளிவுபடுத்தியிருந்ததுடன் பொதுவாக உளவியல் பற்றியும் விரிவாகவும் சுவையாகவும் அனுபவ வெளிப்பாட்டுடன் எழுதியுள்ளார். இவ்விழாவிற்கு அதிகளவில் பார்வையாளர் கலந்து கொண்டமைக்கு இன மத வேற்றுமையற்ற தன்னலம் பாராத யூ.எல்.எம்.நௌபர் அவர்களது சேவைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த விழாவின் போது நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீன் உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபர் அவர்களை பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் வாழ்த்தினார். உலகிலேயே அச்சுப்பதிவில் சிறிய அளவு கொண்டதாக 1998 கின்னஸ் சாதனைவரிசை நூலில் இடம்பெற்றிருந்த முக்கியத்துவமான குர்ஆன் பிரதியொன்றை தேடிப்பெற்று அன்பளிப்பாக வழங்கியும் அவரை மகிழ்வித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வில் மேலும் சிரேஷ்ட பிரஜைகள் அறுவரும் கௌரவிக்கப்பட்டனர். எழுத்தாளரும் திறனாய்வாளருமான கே.எஸ் சிவகுமாரன் -இருமொழி வித்தகர் என்ற பட்டம் வழங்கப்பெற்றார். தொழிலதிபரும் பரோபகாரியுமான ஏ.ஆர்.எஸ். அரூஸ் ஹாஜி, தொழிலதிபரும் பரோபகாரியுமான அல்ஹாஜ் எஸ்.எம். அனீப் மௌலானா ஆகியோர் – சேவைச்செம்மல்கள் என்று பட்டம் வழங்கப்பட்டனர்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன் – இதழியல் வித்தகர் என்ற பட்டத்தையும், உளவியல்துறை விரிவுரையாளரான திருமதி யமுனா பெரேரா மற்றும் ஜனாப் எம்.எஸ்.எம்.அஸ்மியாஸ் ஆகியோர் சீர்மியச் செம்மல்கள் என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டனர்.

‘ஓர் ஈர நெஞ்சனின் உலவியல் உலா’ நூலானது, நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீனை முகாமைத்துவப் பணிப்பாளராக கொண்டியங்கும் உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தின் 350ஆவது வெளியீடாகும் என்பதும் புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட 185 வது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 572 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 880 ஆகும்.



Read more...

Friday, October 15, 2010

இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம் : செல்வி எம்.ஐ.எப் நபீலா தமிழ்த்துறை இறுதியாண்டு,
சப்பிரகமுவை பல்கலைக்கழகம்.

இணையத்தள பாவனை சர்வதேச அளவில் வெகு தீவிரமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும்கூட, எமது இலங்கையில் அதன் வேகம் மந்தகரமான நிலையிலேயே அமைந்துள்ளது. இலங்கையில் இணையத்தளம் பற்றிய அறிவு அல்லது விளக்கம் மக்கள் மத்தியில் குறைவாக காணப்படுவதும் இணையத்தள சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகரித்துக் காணப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக 20ஆம் நூற்றாண்டுகளில் இறுதிக்கட்டங்களில் ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் இணையத்தள இணைப்புகள் வழங்கப்பட்ட போதிலும்கூட, டவுண்லோட் - தரவிரக்கத்திற்கேற்ப கட்டணங்கள் அறவிடப்பட்டமையினால் பாவனையாளர்களுக்குப் பெருந்தொகையான பணத்தினை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக புரோட்பேண்ட் இணையத்தள இணைப்பு வசதியை ஸ்ரீலங்கா டெலிகொம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பிரதான நகரங்களை மாத்திரம் மையப்படுத்தியிருந்த இவ்விணைப்பானது தற்போது அகில இலங்கை ரீதியில் வியாபிக்கப்பட்டு வருகின்றது. புரோட்பேண்ட் இணையத்தள சேவைக் கட்டணம் நிலையான கட்டணத்தைக் கொண்டிருப்பதினால் தரவிரக்க பரப்பளவில் கவலை கொள்ளத் தேவையில்லை. இதன் காரணத்தினால் தற்போது படிப்படியாக இணையத்தள பாவனையாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் இத்தொகை பல மடங்குகளாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்க முடியும். அதேநேரம், இலங்கையில் போட்டியாக செயல்படும் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் எஸ்.எல்.ரி. சிட்டிலிங்க், மொபிடெல், மற்றும் சன்டெல், லங்காபெல், டயலொக், எடிசலாட், எயாடெல், ஹட்ச், டயலொக் சீ.டி.எம்.எ. போன்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் இச்சேவையினை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருவதை அவதானிக்கின்றோம்.

மத்திய காலத்தில் உருவான அறிவியல் எழுச்சியுடன் படிப்படியாக ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால் அச்சுத் தொழில்நுட்பம் (Printing Technology) தோன்றியது. அதற்கு தமிழ்மொழியும் ஈடுகொடுத்தது, அதன் விளைவாகவே இன்றைய தமிழ் உயர்ந்த நிலையில் உள்ளது. தொடர்தேர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சியில் 20ம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றம் இன்றைய கணனியுகம் (Age of Computer) ஆகும். இந்த யுகத்தையும் தமிழ் மொழி மிகவும் நுட்பமான முறையில் எதிர்கொண்டு வருகிறது.

இன்று தட்டச்சு செய்தல், கணக்குகள் பதிதல், விபரங்களை சேகரித்தல் போன்ற சிறிய தேவைகள் முதல், விண்வெளியில் செயற்படுகிற ஏவுகணைகளை மாத்திரமல்லாமல் விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கூட பூமியிலிருந்து கட்டுப்படுத்தி, செயற்படுத்தக்கூடிய உயர்மட்டப் பணிகள் வரை இயக்கும் கருவியாக கணனி மாறிவிட்டது. இன்றைய கணனி யுகத்தில் தனி மனிதராக இருக்கட்டும் அல்லது பன்னாட்டுத் தொழில் நிறுவனமாக இருக்கட்டும் கணனியின்றி அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான தகவல்களைத் தரவுகளாகச் சேமித்துவைத்தல் (Database Development), தேவைப்படும்போது தகவல்களைத் தேடியெடுத்தல் (Information Extaction and Retrieval), மின்னஞ்சல் அனுப்புதல் (e-mail)வினாடிகளில் உலகெங்கும் இணையத்தளம் (Internet and Web) மூலம் தொடர்பு கொள்ளுதல், இணையத்தளம் மூலம் தொழில் மற்றும் வணிகத் தொடர்புகளை மேற்கொள்ளுதல் (E-commerce) என்று கணனியின் பயன்பாடுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இன்றைய காலகட்டத்தில செய்திப் பரிமாற்றத்திலும் இணையம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.

இலங்கையில் பெரும்பாலான பிறமொழி தேசிய அச்சு ஊடகங்கள் இணையங்களை பயன்படுத்துவதைப் போல தமிழ்மொழி மூல தேசிய பத்திரிகைகளும், இணையத்தில் தமிழ் தளங்களினூடாக செய்திகளை உடனுக்குடன் தரவேற்றம் செய்கின்றன. உதாரணமாக இலங்கையின் முன்னணித் தேசிய தமிழ் பத்திரிகைகளான தினக்குரல், வீரகேசரி, தினகரன், சுடர் ஒளி போன்ற (தேசிய நாளிதழ்களும், வாராந்த இதழ்களும்) தத்தமது இணையத்தளங்களினூடாக செய்திகளை தரவேற்றம் செய்து வருகின்றன. இங்கு செய்திகளை கள எழுத்துருவில் மாத்திரமல்ல பத்திரிகைகளை முழுமையாக (ஈ - பேப்பர்) மின் பத்திரிகை மூலமாகவும் வாசிக்கக்கூடியதாக இருக்கும். அச்சு ஊடகங்களை விட இணைய ஊடகங்கள் ஒலி, ஒளி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதினாலும் அவை வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வருகின்றன.

இணையங்களில் செய்திகள் மாத்திரமல்ல, இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற இலக்கியப் படைப்புகளையும் பிரசுரித்து வருகின்றன. இதற்கென தனி வளையமைப்புக்களும் உள்ளன. திரட்டிகளின் உதவி கொண்டு தேடல்கள் மூலம் எமக்குத் தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும். மேலும், குறித்த ஆக்கங்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கூட, வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீன தொழில்நுட்ப மாற்றத்துடன் இணையங்களும் பல புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இணையத்தளத்தின் மூலம் மின்னணுக் கல்வி (E-learning) மின்னணுக் கருத்தரங்கம் (E-conference) ஆகியவைகூட இன்று நடைமுறையில் உள்ளன. பல்லூடகக் கருவியாகவும் (Multi media) கணனி இன்று பரிணமித்துள்ளது. எனவே எழுத்து, பேச்சு, படம் என்று பலவகைப்பட்ட ஊடகங்கள் வழியே ஒருவர் உலகெங்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிரமாண்டமான வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம்மினது பதிவுகளுக்கமைய உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2010 முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையில் இணையத்தள பாவனையாளர்கள் 1,776,200 என அறிய முடிகின்றது. இது மொத்த சனத்தொகையின் 8.3% ஆகும். 2000ஆம் ஆண்டு முதல் இலங்கையின் இணையத்தளப் பாவனை குறித்த அறிக்கை பின்வருமாறு

ஆண்டு பாவனையாளர்கள். சனத்தொகை வீதம்
2000 121,500 19,630,230 0.5 %
2007 428,000 19,796,874 2.2 %
2008 771,700 21,128,773 3.7 %
2009 1,163,500 21,324,791 5.5 %
2010 1,776,200 21,513,990 8.3 %
http://www.internetworldstats.com/asia/lk.htm


மேற்படி அறிக்கையின் பிரகாரம் 2007 ஆம் ஆண்டின் பிறகு இணையத்தள பாவனை வேகமாக அதிகரித்துள்ளமைக்கான பிரதான காரணியாக புரோட் பேண்ட் இணையத்தள இணைப்பு அறிமுகமானதை குறிப்பிடலாம். 2015 ஆம் ஆண்டு ஆகும் போது இணையத்தளப் பாவனை 30% மாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் இன்று இணையத்தளப் பாவனையாளர்கள் தொகை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இணையங்களின் துணையினையே நாடியுள்ளனர். ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இணையப் பாவனை செய்திப் பரிவர்த்தனை இலக்கிய பரிமாற்றம் என்பவற்றை விட கல்வித் துறை அபிவிருத்திற்கும் விசாலமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. உலகளாவிய இணையத்தள பாவனைப் பற்றிய கணிப்பீட்டுப் புள்ளி விபரம் வருமாறு

WORLD INTERNET USAGE AND POPULATION STATISTICS

உலக வலயங்கள் சனத்தொகை டிச.31, 2000 நிகழ்காலம் வீதம்
Africa 1,013,779,050 4,514,400 110,931,700 10.9 %
Asia 3,834,792,852 114,304,000 825,094,396 21.5 %
Europe 813,319,511 105,096,093 475,069,448 58.4 %
Middle East 212,336,924 3,284,800 63,240,946 29.8 %
North America 344,124,450 108,096,800 266,224,500 77.4 %
Latin America
/Caribbean 592,556,972 18,068,919 204,689,836 34.5 %
Oceania
/ Australia 34,700,201 7,620,480 21,263,990 61.3 %
WORLD TOTAL 6,845,609,960 360,985,492 1,966,514,816 28.7 %


இங்கு சனத்தொகை எனும் போது 2010 ஆம் ஆண்டின் உத்தேச சனத்தொகையாகும்.
டிச.31, 2000 வரை இணையத்தளப் பாவனையாளர்கள். நிகழ்காலம் எனும் போது செப்டம்பர் 2010 வரை கணிப்பிடப்பட்டுள்ளது. http://www.internetworldstats.com/stats.htm

உலகில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் முகவரி info.cern.ch அதன் சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். 2010 செப்டெம்பர் மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்தப் பாவனையாளர்களின் எண்ணிக்கை 1966,514,816 ஆகும். இணையதளங்கள் உருவாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட ஒரு முக்கிய காரணமாய் அமைவது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது. ஆனாலும் அன்றைக்கு Tim Berners-Lee; முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். அதன் முகவரி வருமாறு http://www.w3.org/history/19921103-hypertext/hypertext/ www/theproject.html

உலக அளவில் 28.7 வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதே நேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே இணையப்பாவனையே காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் இணையப்பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட வெகுவாகக் குறைந்திருக்கலாம். செப்டம்பர் 2010இல் இலங்கையின் வட பகுதிக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் புரோட் பேண்ட் இணைய இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்பகுதிகளிலும் இணையப்பாவனை அதிகரிக்கப்படலாம் எனக் கருத இடமுண்டு.

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே அதிகளவில் நாட்டம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் விட்டால் வேறு ஊடகங்களில்லை என்று கூறுமளவிற்கு மரபு ரீதியான அணுகுமுறைகளிலேயே இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக மரபு ரீதியான வழிமுறைகளைப் பேணி வந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இன்றும் அதே முறைகளை கடைபிடித்து வருவதினால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மாத்திரமே எழுத்துலகில் சோபித்து வர முடியும். இணையத்தள ஊடகங்களின் வளர்ச்சி ஏற்படும்போது இத்தகைய கட்டுப்பாடுகள் தகர்த்தப்படுவதினால் புதிய எழுத்தாளர்கள் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உருவாகின்றது. சிலநேரங்களில் எழுத்துக்கள் தரமின்றிப் போய் விடலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட, இதுவொரு புரட்சிகரமான மாற்றமாக அமைய இடமுண்டு.

இத்தகைய பின்னணிகளின் மத்தியில் இலங்கையில் இணையத்தளங்களின் ஊடாக தமது படைப்புகளை முன்வைப்பதில் இலங்கை தமிழ் எழுத்தாளர் புன்னியாமீனின் பங்களிப்பு விசாலத்துவமிக்கதாக அமைகின்றது. இதுவரை இவரின் 300க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் சர்வதேச ரீதியிலான இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன. இதனால் சர்வதேச ரீதியில் தமிழ் இணையத்தள வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு பெயராகவே இவரின் பெயர் பிரபல்யம் பெற்றுள்ளது. அண்மையில் புன்னியாமீன் இணையத்தளங்களில் பிரசுரமான 70 கட்டுரைகளை தொகுத்து சர்வதேச நினைவு தினங்கள் எனும் பெயரில் 03 பாகங்களை வெளியிட்டிருந்தார். இம்முயற்சி பற்றி இந்தியாவில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “…உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் (புன்னியாமீன்) இணையத்தளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்…". இதிலிருந்து இணையத்தளங்களில் புன்னியாமீனுக்குள்ள ஈடுபாடு பற்றி எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களின் பெயர் பதிந்திருப்பதற்கு இணையத்தளங்களில் வெளிவரும் அவரது ஆக்கங்களே ஒரு பிரதான காரணியாக அமையலாம். இலங்கையில் அரசியல் பற்றிய ஆய்வுகள், இலங்கை அரசியல் சிறுபான்மை இனத்தவர்கள் பற்றிய ஆய்வுகள், விஞ்ஞானம், வரலாறு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கலாக சர்வதேச நினைவுதினங்கள் பற்றி விரிவான ஆய்வுக்குறிப்புகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் என பல்வேறு துறைகளிலும் இவரின் எழுத்துக்கள் முத்திரை பதித்து வருகின்றன. இலங்கை எழுத்தாளர்களிடையே இணையங்களில் எழுதுவதில் தற்போதைய நிலையில் இவர் முதன்மை இடத்தில் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.

இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் இந்த காலகட்டங்களில் இவரின் ஆக்கங்கள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, நோர்வே, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ் தீவுகள் போன்ற நாடுகளை தளமமைத்துக் கொண்டு இயங்கும் நூற்றுக்கணக்கான இணையத்தளங்களில் இவருடைய பல ஆக்கங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. கூகூல் http://www.google.lk, Yahoo http://www.yahoo.com, எம்.எஸ்.என்.http://www.msn.com திரட்டிகளிலிருந்து இணையத்தள தேடல்களின் அடிப்படையில் இதுவரை 183 இணையத்தளங்களில் இவரின் ஆக்கங்களையும், இவர்பற்றிய ஆக்கங்களையும் காண முடிகின்றது. இவரின் ஆக்கங்கள் பிரசுரமான இந்த இணையத்தள முகவரிகளின் ஆங்கில அகரவரிசைப்படி கீழ்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

www.24dunia.com/tamil, www.360news.in, www.abc.net,www.ads.clicksor.com, www.alaai.co.cc, www.alaikal.com, www.amalathaselroy.blogspot.com, www. andamansaravanan.blogspot.com, www.anonasurf.com, www.aruvi.com, www. asafardeen.blogspot.com, www.athirady.info, www.bestestsite.info, www. Best queen12.blogspot.com, www.bit.ly, www.blogcatalog.com, www.blogcop. com, www.blogger-index.com, www.blogs.oneindia.in, www.bogy.in, www. bname.ru, www.chat.oneindia.in, www.cmr.fm, www.comedy fans.wordpress. com, www.content.usatoday.com, www.dazy.sk, www. deccannetwork.com, www.de-de.facebook.com, www.dekrizky.us, www.dillee pworld.blogspot.com, www.thedipaar.com, www.eelamtoday.com, www.eera anal.org, www.encyk. fotelikisamochodowe.net, www.engaltheaasam. com, www.en.wordpress. com,www.ethamil.blogspot.com www.facebook.com, www. faroo.com, www. fetna.org ,www.firmy24.podhale.pl, www.flexalution. com, www.freer.info, www. friendfeed.com. www.google.com, www.geotamil. com, www.groups. google.co.in, www.groups.google.com, www.groups. google.dk, www.groups. google.fr, www.groups.google.ge, www.groups. google.gr, www.groups. google.to, www.ikmahal.com, www.ilakkiyainfo.com, www.ilankainet.com, www.ilayamalar.blogspot.com, www.ilbts.org , www.india everyday.com, www. indiantoday.com, www.infokarirterkini.co.cc, www.inioru. com, www.kalai mahan.blogspot.com, www.kalanjiam.com, www.kannadi puthagam.blogspot. com, www.karuthurimai.net, www.kattankudi.info, www.kavi mathy.wordpress. com, www.kevins.nl, www.kingwebnewspaper .blogspot.com, www.komsc. com, www.koodal1.blogspot.com, www.kopi-welcomemyblog.blogspot.com, www.kulantamil.com, www.lakehouse.lk, www.lankamuslim.org, www.linux 24web.info, www.live.athirady.org, www. maatru.net, www.manitham.net, www.masdooka.wordpress.com, www.meel parvai.net, www.meettal.blogspot. com, www.mixx.com, www.mnmanas. blogspot.com, www.muelangovan. blogspot.com, www.mulaggam.com, www.mullivikkaal.com, www.mykathi ravan.com, www.mytoday.com, www.namathu.blogspot.com, www.nayanaya. mobi, www.nerudal.com, www.neruppu.com, www.newathirady.com, www. news.writeka.net, www.news.thiratti.com, www.nkl4u.in, www.noolaham.org/, www.ns3.greynium.com, www.onlineinet.com, www.oodaru.com, www.ottran. com, www.penniyam.com, www.puhali.com, www.push2check.com, www. puzha.com, www.radio.ajeevan.com, www.ragil.info, www.rammalar. wordpress.com, www.ramnadinfo.com, www.rasigancom.blogspot.com, www. rizardview.blogspot.com, www.sangamamlive.com, www.search.webdunia.com, www. singakkutti.blogspot.com, www.sitedossier.com, www.shaseevanweblog. blogspot.com, www.shakthienews.com, www.space2world.com, www.spider. com.au, www.srisagajan.blogspot.com, www.sumanasa.com, www.supperlinks. blogspot.com, www.surfblocked.net, www.sri.lanka.asia, www.ta.indli.com, www.tamil10.com, www.tamilalai.org, www.tamilauthors.com, www.tamil. bingra.com, www.tamil.com, www.tamilalai.org, www.tamilexpress. webnode.com, www.tamilkudumbam.com, www.tamilnirubar.org, www.tamil newsnetwork.com, www.tamilnews.cc, www.tamil.net, www.tamilsguide.com, www.tamilish.com, www.tamilmanam.net, www.tamilsguide.com, www.tamil velibkp.blogspot.com, www.tamil.webdunia.com, www.ta.wikipedia. org, www. taweet.com, www.ta.wordpress.com, www.techtamil.in, www. teleindia. comm, www.thakval.info, www.thatstamil.oneindia.in, www.thaynilam. com, www.thedipaar.com, www.theendlessinfo.com, www.thenee.com, www.thenee. eu, www.thesamnet.co.uk, www.thinakaran.lk, www.thinakaran. lk/vaaraman jari, www.thinakkural.com, www.thiru2050.blogspot.com, www. thoora.com, www.tmpolitics.net, www.twitter.com, www.twurl.nl, www.ubervu. com, www. udaru.blogdrive.com www.usa-learning.blogspot.com, www.ustamil. blogspot. com, www.valaipookkal.com, www.vallinam.com, www.viyapu.com, www. wap.orlingo.com, www.webjosh.com, www.webmanikandan.blogspot.com, www. worldub.blogspot.com, www.xna.no, www.yarl.com

செப்டம்பர் 26. 2010இல் சுவிஸ் அரசின் கலாசார வானொலியான கனல்கா சர்வதேச வானொலி நிகழ்ச்சியில் குறுந் திரைப்பட இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான அ. ஜீவன் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலின் போது “…தான் இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா இணையத்தளத்திலும், சங்கமம் லைவ் இணையத்தளத்திலும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற், தமிழ்நிரூபர் போன்ற இணையளத்தளங்களிலும், பிரான்ஸை மையமாகக் கொண்டியங்கும் இலங்கைநெற் இணையத்தளத்திலும் மூலமாக எழுதுவதாக குறிப்பிட்டார். அதேநேரம், அதிரடி, புதிய அதிரடி, முழக்கம், எங்கள் தேசம், நெருப்பு, கண்ணாடி, ஊடரு, பெண்ணியம் போன்ற பல இணையத்தளங்களும் இவரின் ஆக்கங்களை முதன்மையாக பிரசுரித்துள்ளன.

இணையத்தளங்களிலுள்ள ஒரு பொதுவான பண்பு ஒரு இணையத்தளத்தில் வெளிவரக்கூடிய தரமான ஆக்கங்கள் வேறும் இணையத்தளங்களில் மீள் பிரசுரம் செய்யப்படுவதனை குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீனின் அண்மைக்கால சில ஆக்கங்கள் 20 தொடக்கம் 30 வரையிலான இணையத்தளங்களில் மறுபிரசுரமானதை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக 2010 செப்டம்பரில் பிரசுரமான அன்னை தெரேசா நூற்றாண்டுவிழா எனும் கட்டுரை 24 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல 14 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த உலகிலே தரையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் எனும் கட்டுரை 20 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. 24 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம் எனும் கட்டுரை மொத்தம் 16 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல சர்வதேச இளைஞர் ஆண்டைப் பற்றி இவரால் ஆகஸ்ட் 2010ல் எழுதப்பட்ட கட்டுரையும் 34 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன.

இவ்வாறாக ஒரே ஆக்கம் உலகளாவிய ரீதியில் காணப்படக்கூடிய பல நாடுகளை தளமாக அமைத்து இயங்கும் இணையத்தளங்களில் பிரசுரமாகும்போது எழுத்தாளரின் முக்கியத்துவம் அதிகமாகின்றது. அதேநேரம் மேற்குறிப்பிட்ட உதாரணப்படி மீள்பிரசுரம் செய்துள்ள இணையத்தளங்கள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளை தளமாகக் கொண்டு இயங்குபவை என்பதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

இணையத்தளங்களில் காணப்படக்கூடிய மற்றுமொரு சிறப்பம்சமாக வாசகர்களின் பின்னூட்டங்களைக் குறிப்பிடலாம். குறித்த கட்டுரை தொடர்பில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலமாக இணையத்தளத்துக்குத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கும். இந்த அடிப்படையில் புன்னியாமீனின் ஆக்கங்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள பின்னூட்டங்களை அவதானிக்குமிடத்து இவரது எழுத்துக்குக் சர்வதேச மட்டத்தில் காணப்படும் வரவேற்பினை அவதானிக்க முடிகின்றது.

அதேநேரம், தற்போதைய நிலையில் இலங்கை எழுத்தாளர்களிடையே இணையத்தள பயன்படுத்தல்கள் குறைவாகக் காணப்பட்ட போதிலும்கூட, 2007 முதல் 2010 வரை தமிழ் மொழி மூல இணைய எழுத்துக்களை ஆராயுமிடத்து புன்னியாமீனின் பெயர் தனியிடத்தில் முன்னணியில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உசாத்துணை:

கலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 1, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-43-6

கலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 2, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-44-3

கலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 3, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-45-0

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை சிறப்பு மலர் 2010. தமிழ் நாட்டு அரசு


Read more...

Wednesday, November 16, 2011

பீ.எம்.புன்னியாமீன்: மௌனமாய்ப் பெய்யும் பெருமழை! : என்.செல்வராஜா.

உலகெங்குமுள்ள ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் விபரங்களைத் திரட்டித் தனது சொந்த முயற்சியினால் நவமணி, தினக்குரல் போன்ற ஊடகங்களிலும், பின்னர் அவற்றைத் தொகுத்து பல்தொகுதிகளாக நூலுருவிலும் வெளியிட்டு வந்தவர் பி.எம்.புன்னியாமீன். அண்மையில் மற்றுமொரு சாதனையாளராக அவர் தன்னை இனம்காட்டிக் கொண்டிருக்கிறார். கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளிலும், பெரியதும் சிறியதுமான 7500 கட்டுரைகளை எழுதி அவற்றைத் தமிழ் விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்து புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். இச்சாதனை 2010ம் ஆண்டு, நவம்பர் 14ம் திகதி முதல் 2011ம் ஆண்டு, நவம்பர் 13ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவரால் நிகழ்த்தப்பட்டது. இதனை உலகளாவிய ரீதியில் தமிழ் மின்-ஊடகமொன்றில் தனியொரு மனிதனால் நிகழ்த்தப்பட்ட சாதனையாகக் கருதுகின்றேன்.

1970ம் ஆண்டுகளில் இலக்கியத்துறையில் ஈடுபாடுகொள்ள ஆரம்பித்த திரு பீ.எம்.புன்னியாமீன் இதுவரை 166 சிறுகதைகளையும், ஒரு நாவலையும், கல்வி, கலை, இலக்கியம், ஆய்வியல், அரசியல், விளையாட்டு, சமூகவியல்; ஆகிய பல்வேறு துறைகளில் 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவராவார். இவர் இதுவரை 176 தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

ஆரம்ப காலங்களில் இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் வெளிவரும் தமிழ் இதழ்களிலும், பத்திரிகைகளிலும் எழுதிவந்த இவர் அண்மைக்காலமாக இலத்திரனியல் ஊடகங்களில் அதிகமாக எழுதி வருகின்றார்.

அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ்த்துறையின் இறுதியாண்டு மாணவியான செல்வி எம்.ஐ.எப் நபீலா என்பவர் “இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களும் இணையப் பாவனையும்” எனும் தலைப்பில் தமிழ் ஜேர்னலிஸ்ட் எனும் இணையத்தில், 2010 டிசம்பர் 29ம் திகதி எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையில் உலகளாவிய ரீதியில் செயல்படும் 183 இணையத் தளங்களில் பீ.எம்.புன்னியாமீனின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்துடன், திரு புன்னியாமீனது கட்டுரைகள் இடம்பெற்ற அந்த 183 இணையத்தளங்களின் முகவரிகளையும் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு இறுதியிலிருந்து விக்கிப்பீடியாவுடன் திரு புன்னியாமீனுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. உலகளாவிய ரீதியில் விக்கிப்பீடியா 282 மொழிகளில் வெளிவருவதும், அதிக வாசகர்களால் வாசிக்கப்படும் இணையத் தளங்களின் வரிசையில் 5வது இடத்திலிருப்பதும் தெரிந்ததே. விக்கிப்பீடியா குழுமத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் இவர் 2010 நவம்பர் 14ம் திகதி இணைந்து ஆரம்பகாலத்தில், இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் ஆகியோரை அங்கு அறிமுகம் செய்துவந்தார். பின்னாளில் தொடர்ந்து இலங்கை அரசியல், பொருளாதாரம், வரலாறு, கலைத்துவ அம்சங்கள் மற்றும் இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் ஆகியவற்றை பதிவு செய்ததுடன், அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் வீரர்களைப் பற்றியும் எழுதிவருகின்றார். மேலும் இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா (மியன்மார்) போன்ற நாடுகளில் உள்ள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள்; பற்றியும் தமிழ்பேசும் முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட சிற்றிதழ்கள் பற்றியும் எழுதிவருகின்றார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரின் கட்டுரையாக்கம் தொடர்பான பதிவில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14, 2010 முதல் மார்ச்சு16, 2011 வரையிலான காலகட்டத்தில் இவர் முதலில் 500 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொடர்ந்து இவரால் நவம்பர்14, 2010 முதல் ஏப்ரல் 5, 2011 வரையிலான காலப்பகுதியில் 1000 கட்டுரைகளும், ஏப்ரல் 6, 2011 முதல் மே 5, 2011 வரையிலான காலப்பகுதியில் 2000 கட்டுரைகளும், மே 6, 2011 முதல் ஜுன் 22, 2011 வரையிலான காலப்பகுதியில் 3000 கட்டுரைகளும், ஜுன் 23, 2011 முதல் ஓகஸ்ட் 22 2011 வரையிலான காலப்பகுதியில் 4000 கட்டுரைகளும், ஓகஸ்ட் 23, 2011 முதல் செப்டம்பர் 30 2011 வரையிலான காலப்பகுதியில் 5000 கட்டுரைகளும், அக்டோபர் 1 , 2011 முதல் அக்டோபர் 19 2011 வரையிலான காலப்பகுதியில் 6000 கட்டுரைகளும் அக்டோபர் 20 2011 முதல் நவம்பர் 6 2011 வரையிலான காலப்பகுதியில் 7000 கட்டுரைகளும் நவம்பர் 07, 2011 முதல் நவம்பர் 13, 2011 வரையிலான காலப்பகுதியில் 7500 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

பல்வேறு சமூக, பொருளாதாரப் பணிகளுக்குள்ளும், இடைக்கிடையே வலிந்து வாட்டி வைத்தியசாலை வரை கொண்டுசென்ற நீரிழிவின் பாதிப்புகளுக்குள்ளும் தடம்புரளாமல், மனம் சோர்வடையாமல், இவருக்கு இத்தகைய சாதனைகளைத் தொடர்ந்து செய்யும் மன வலிமையையும், தன்னம்பிக்கையையும் வழங்கிய இறைவனின் அருளை மேலும் வேண்டி அவரை உளமார வாழ்த்திமகிழ்வோம்.

அவரது மின்னஞ்சல் முகவரி: pmpuniyameen@gmail.com
14.11.2011

என்.செல்வராஜா,
நூலகவியலாளர்,
லண்டன்.

Read more...

Wednesday, December 24, 2014

சிறுகதைப் போட்டியில் மஸீதா புன்னியாமீன் முதலிடம்!

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் ​இற்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் செத்சிறிபாய நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் எச்.டி..எஸ்.மல்காந்தி, அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரபல சிங்கள எழுத்தாளர் மடுலுகினிய விஜேரத்ன, தமிழ், சிங்கள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழ், சிங்கள மொழிகளில் சிறுகதை, பாடல், கவிதை, சிறுவர் கதை, சித்திரம், குறுநாடகப் பிரதியாக்கம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு விருதுகள், சான்றிதழ்கள், புத்தகப் பரிசுகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் மொழி மூல தமிழ் போட்டியில் உடத்தலவின்னையைச் சேர்ந்த மஸீதா புன்னியாமீன் சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் ஆக்கங்களின் தொகுப்பாக 'பிரகாசம்' என்ற நூலும் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Monday, April 19, 2010

இலங்கை இராணுவத்தின் வரலாறு ஒரு தமிழரால் எழுதப்பட்டது. என்.செல்வராஜா.

இலங்கையிலிருந்து 1991இல் புலம்பெயர்ந்து சென்று லண்டனில் வசித்துவரும் நூலகவியலாளர் திரு. என். செல்வராஜா அவர்கள் தற்போது குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இதுவரை 25 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ள இவரின் எழுத்துலக பணியில் ‘நூல்தேட்டம்’ எனும் ஆவணவாக்கல் நூற்றொகுதி முக்கிய இடத்தைப் பெறுகின்றது. நூல்தேட்டம் தொகுதியில் இதுவரை 06 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 06 தொகுதிகளினூடாகவும் இலங்கையைச் சேர்ந்த மொத்தம் 6000 தமிழ் நூல்களை பதிவாக்கியிருப்பது பெரும் சாதனையாகும். இலங்கை எழுத்தாளர்களின் இத்தனை நூல்களை ஒரே பார்வையின் கீழ் வேறு எந்த தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ இதுவரை பதிவாக்கவில்லை என்று துணிவாகக் குறிப்பிடலாம். தற்போது நூல்தேட்டம் தொகுதி 07க்கான தேடல் முயற்சிகளை பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் மேற்கொண்டுவரும் நூலகவியலாளரும், எழுத்தாளரும், வெளியீட்டாளரும், பன்னூலாசிரியருமான திரு. என். செல்வராஜா அவர்களுடன் ஞாயிறு தினக்குரல் வாசகர்களுக்காக புன்னியாமீன் அவர்களால் மேற்கொண்ட நேர்காணல் கீழே தொகுத்து தரப்படுகின்றது.

கேள்வி: நூல்தேட்டம் என்றால் என்ன? இந்த நூல்தேட்ட நூல் வெளியீட்டின் மூலமாக நீங்கள் இதுவரை எதனை சாதித்துள்ளீர்கள்?

என்.செல்வராஜா: நூல்தேட்டம் இலங்கையில் இதுவரை அச்சில் வெளிவந்த தமிழ் நூல்களையும், இலங்கையரால் தமிழாக்கம் செய்யப்பட்ட பிறமொழி நூல்களையும் உள்ளடக்குகின்றது. இலங்கை எழுத்தாளர்கள் தமது நூல்களை இலங்கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும், ஐரோப்பாவிலும் வேறும் புலம்பெயர்ந்த நாடுகளிலிலிருந்தும் வெளியிட்டு வருகிறார்கள். இவற்றின் இருப்பை ஓரிடப்படுத்தி பதிவு செய்து கொள்வதற்காகவும், ஆய்வாளர்களின் விரிவான ஆய்வுத் தேவைகளுக்காகவும் நூல்தேட்டம் உருவாக்கப்பட்டது. இதுவரை காலமும் துறைசார்ந்த சிறு பட்டியல்களாக மட்டுமே அறியப்பட்டு வந்த இத்தகைய நூல்விபரங்கள் நூல்தேட்டத்தின் வாயிலாகவே விரிவான பதிவுக்குள்ளாகியுள்ளமை ஒரு சாதனை என்று நான் கருதுகின்றேன்.

கேள்வி: அப்படியென்றால் இதுகால வரை இலங்கையில் இதுபோன்றதோர் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்று கருதுகின்றீர்களா?

என்.செல்வராஜா: ஆரம்பத்தில் எப்.எக்ஸ்.ஸி நடராஜா, கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராஜன் போன்றோர் சிறு நூல்களாகவும் நூல்களின் பின்னிணைப்புகளாகவும் இலங்கையில் வெளிவந்த தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியை அவ்வப்போது மேற்கொண்டிருந்தார்கள். இவை சிறு பட்டியல் வடிவிலேயே அமைந்திருந்தன. நூலின் தலைப்பு, ஆசிரியர் பெயர், சிலவேளை வெளியிட்ட ஆண்டு போன்ற விபரங்களே அவற்றில் இடம்பெற்றிருந்தன. இவை எவற்றிலும் முறையான நூலியல் பதிவுகளோ, அந்த நூல்கள் பற்றிய குறிப்புகளோ இடம்பெற்றிருக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் இலக்கியத்துறை தொடர்பான நூல்களையே பதிவுக்குள்ளாக்கியிருந்தார்கள்.

கேள்வி: இலக்கியத்துறைக்குப் புறம்பாக வேறு துறைசார்ந்த நூல்களையும் நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா? அவ்வாறு பதிவு செய்திருப்பின் அது பற்றி சற்று விரிவாக குறிப்பிட முடியுமா?


என். செல்வராஜா: இலங்கையின் நூலியல் பதிப்புத்துறை வரலாற்றில் இலக்கியத் துறைசார்ந்த நூல்களே பெருமளவில் வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன. இருப்பினும் இவை மட்டும்தான் இலங்கையின் நூலியல் வரலாறாகாது. உளவியல், சமயம், சமூகவியல், மொழியியல். விஞ்ஞானம், தொழில்நுட்பம், கவின்கலைகள், வரலாறு…. என்று பல்வேறு துறைகளிலும் இலங்கையில் நூல்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. நூல்தேட்டம் இவையனைத்தையும் பதிவு செய்யும் ஒரு பெரும் பணியிலேயே ஈடுபட்டிருக்கின்றது. இதன் மூலமே இலங்கையின் நூலியல் வரலாற்றை முழுமையாக தரிசிக்க முடியும்.

கேள்வி: இத்தகைய பதிவிற்கு ஏதேனும் சிறப்பான வகுப்புத் திட்டமொன்றை நீங்கள் கைகொள்கின்றீர்களா?

என். செல்வராஜா: நூல்தேட்டத்தின் நூல்கள் யாவும் 10 பிரதான வகுப்புகளுக்குள் அடங்குகின்றன. இது நூலகங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் டூவி தசாம்ச பகுப்பு முறையை (Dewey Decimal Classification) அடிப்படையாகக் கொண்டது. இப்பகுப்பு முறையின் கீழ் எமது எழுத்து வளங்கள் அனைத்தையும் பொது விடயங்கள், உளவியல், சமயம், சமூகவியல், மொழியியல், தூய விஞ்ஞானம், தொழில்நுட்பம், கவின்கலைகள், இலக்கியம், வரலாறு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு பிரிவும் மேலும் 10 உப பிரிவுகளாக வகுக்கப்படுகின்றன. உதாரணமாக சமூகவியல் என்ற பிரிவுக்குள் புள்ளிவிபரவியல், அரசியல், பொருளியல், சட்டம், பொதுநிர்வாகம் போன்ற அறிவுத்துறைகள் உப பிரிவுகளாக உள்ளடங்கும். நூல்தேட்டத்தின் பகுப்பு இவ்வாறே அமைகின்றது.


கேள்வி: இலங்கை தமிழ் நூல்களின் ஆவணவாக்கல்களை தனிப்பட்ட நபர்கள் தவிர்ந்து நிறுவனங்களோ அல்லது அரசாங்கமோ பதிவுகளுக்கு உட்படுத்தவில்லை எனக் கருதுகின்றீர்களா?

என். செல்வராஜா: இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை உருவாக்கப்பட்ட காலகட்டங்களில் தேசிய நூற்பட்டியல் என்று ஒன்று தொடங்கப்பட்டது. அதில் இலங்கையில் அச்சிடப்பட்ட மும்மொழி நூல்களில் பதிப்பகச் சட்டத்தின் கீழ் அச்சகங்களால் வழங்கப்படும் நூல்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து இப்பட்டியல் பதிவுசெய்யப்பட்டது. இது காலாண்டுக்கொரு முறையும் பின்னர் மாதாந்தமாகவும் இலங்கையில் இன்றளவில் வெளியிடப்பட்டு வருகின்றது. இன்று இப்பணியை இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கொழும்பிலிருந்து மேற்கொள்கின்றது. இப்பட்டியலில் தமிழ் நூல்களும் இடம்பெறுகின்றன. ஆனால், அவை பெரும்பாலும் அரச வெளியீடுகளையும், ISBN இலக்கம் பெறப்பட்ட நூல்களையுமே உள்ளடக்கி வருகின்றன. இதில் இலங்கைத் தமிழரின் அனைத்து நூல்களும் என்றுமே முழுமையாக உள்ளடக்கப்படாது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

கேள்வி: எந்த அடிப்படையினை வைத்து நீங்கள் இவ்வளவு உறுதியாக குறிப்பிடுவீர்கள்?

என்.செல்வராஜா: இலங்கைத் தமிழர்களின் வெளியீடுகளை நீங்கள் அவதானிப்பீர்களாயின் அவற்றில் கணிசமான அளவு தமிழகத்தில் அச்சிடப்படுகின்றன. இவை இலங்கை ISBN
இலக்கம் பெறப்பட முடியாதவை. மணிமேகலை போன்ற தமிழகப் பதிப்பாளர்களால் வெளியிடப்படும் இலங்கையர்களின் நூல்களில் பெரும்பாலும் ISBN இலக்கங்களை காணமுடிவதில்லை. இவை இலங்கை தேசிய நூற்பட்டியலில் இடம்பெறும் தகுதியற்றவையாகி விடுகின்றது. மேலும், இலங்கை தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்து பரந்து வாழும் சூழலில் அங்கெல்லாம் வெளியிடப்படும் மிகத் தரமான பல நூல்கள் இலங்கை மண்ணை அடைவதே இல்லை. இந்நிலையில் அவை பற்றிய அறிதலை தேசிய நூலகம் கொண்டிருக்குமா என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது.

கேள்வி: தேசிய நூலக ஆவணவாக்கல் சபையில் வெளியிடப்படும் நூற்பட்டியலில் ISBN
இலக்கம் பெறப்பட்ட நூல்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், இலங்கையைப் பொறுத்தமட்டில் நூல்களுக்கு ISBN இலக்கம் வழங்கும் முறை 1980 களிலே அறிமுகஞ் செய்யப்பட்டது. இதற்கு முன்புள்ள நூல்களின் பதிவு நிலை குறித்து நிறுவன ரீதியான அமைப்புகளின் செயற்பாடு பற்றி எத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளீர்கள்?


என்.செல்வராஜா: ஆரம்பத்தில் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அச்சகம் தான் அச்சிடும் எந்தவொரு நூலிலும் குறிப்பிட்ட சில பிரதிகளை தேசிய நூலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது சட்டபூர்வமானதாகும். ஆனால், தமிழ் பதிப்பாளர்களைப் பொறுத்தவரையில் இது அன்று முதல் இன்று வரை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. இதனை அரசாங்கமும் உறுதியாக நடைமுறைப்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக தேசிய நூலகப் பதிவுகளில் ஆரம்ப காலம் முதல் தமிழ் நூல்கள் இடம்பெறுவது குறைவாகவே இருந்தது. இன்று கூட ISBN இலக்கமிடப்படுவதும் அச்சகங்கள் தமது நூல்களை தேசிய நூலக ஆவணவாக்கல் சபைக்கு அனுப்பி வைப்பதும் ஒழுங்காக நடப்பதில்லை. இதை நாங்கள் கண்கூடாகக் கண்டும் வருகின்றோம். இதனை கட்டாயமாக்கும் அரசாங்கத்தின் இறுக்கமான கொள்கைகள் எதுவுமில்லை.

கேள்வி: இலங்கை எழுத்தாளர்களால் இலங்கையிலோ அல்லது உலகளாவிய ரீதியிலோ வெளியிடப்படக் கூடிய நூல்கள் யாதோ ஒரு அமைப்பின் கீழ் பதிவு செய்யப்படாமையினால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுமெனக் கருதுகின்றீர்கள்?

என்.செல்வராஜா: நூல் வெளியீடு என்பது மிக பணச் செலவானதும், காலச் செலவானதுமான ஒரு முயற்சியாகும். ஒரு சமூகத்தின் அறிவின் அளவுகோலாக அச்சமூகத்தினால் வெளியிடப்படும் நூல்கள் அமைகின்றன. இவை வெளியிடப்படும்போது எங்காவது ஓரிடத்தில் பதிவு செய்யப்பட வேண்டியது முக்கியமானதாகும். புள்ளிவிபரத்துக்காக மட்டுமன்றி எதிர்காலத்தின் வரலாற்றுத் தேவைக்காகவும் இத்தகைய பதிவுகள் முக்கியமாகும். இத்தகைய பதிவுகளின் காரணமாக ஒரு நூலின் வரவை உலகளாவிய ரீதியில் மற்றவர்கள் அறிந்து கொள்கின்றார்கள். குறிப்பாக ஒரு ஆய்வாளர் தனது ஆய்வுத் தேடலுக்காக முனையும்போது நூலின் இருப்பை, தனது ஆய்வுத் தேவைக்குப் பொருத்தமான நூல்களின் வரவை இத்தகைய பதிவு ஆவணங்களின் ஊடாக இலகுவில் அடையாளம் கண்டு கொள்கின்றான். இன்று இலக்கியத்துறையை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் தமிழில் இலங்கையரால் எத்தனை நூல்கள், எத்தனை நாவல்கள், எத்தனை சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன என்று உறுதிபட கூற முடியாதுள்ளது. இன்றைய ஆய்வாளர்கள் இலங்கை தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும்போது ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள இத்தகைய முழுமையடையாத பட்டியல்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இருட்டு அறைக்குள் கருப்புப் பூனையைத் தேடும் இந்நிலை மாற வேண்டுமானால் அந்த அறைக்கு படிப்படியாக ஒளியூட்ட முனையும் நூல்தேட்டம் போன்ற பாரிய தொகுப்புக்கள் மேற்கொள்வதன் அவசியத்தை படைப்பாளிகள் உணர வேண்டும்.

கேள்வி: இத்தகைய அவசியத்தினை தற்போதைய தமிழ் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் எவ்வளவுதூரம் உணர்ந்திருக்கிறார்கள்

என்.செல்வராஜா: என்னைப் பொறுத்த வரையில் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் எனது பணியை எனது சுய தேவையின் நிமித்தமும் வர்த்தக நோக்கம் கருதியதாகவும் மேற்கொள்வதாகவே பலரும் இன்றளவில் கருதுவதாக நான் உணர்கின்றேன். இப்பணிக்கு உலகெங்கும் திரிந்து நான் தேடலில் ஈடுபடுவதில் உள்ள பொருளாதார கால செலவை கணிப்பிட்டால் அது என் வாழ்வின் பெரும்பகுதியை விழுங்கி விட்டதை நான் உணர்கின்றேன். இவ்வளவு தனிப்பட்ட இழப்பின் பின்னர் ஆறு தொகுதிகளை உருவாக்கி அதில் இலங்கை எழுத்தாளர்களின் 6000 நூல்களை பதிவு செய்து எனது இனத்திற்கு வழங்கியுள்ள இந்நிலையிலும் நூல்தேட்டம் பற்றிய உணர்வினை படைப்பாளிகள் கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகமே எனக்கு எழுகின்றது. அண்மையில் கொழும்பில் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு பேசிய பிரபல எழுத்தாளர் ஒருவர் ஈழத்து இலக்கியத்தை ஆவணப்படுத்தியவர்களாக சில்லையூர் செல்வராசன், கனக செந்திநாதன் ஆகியோரையே சிலாகித்து குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அன்று ஆவணப்படுத்தல் பற்றிப் பேசிய எவருமே தங்கள் கண்ணெதிரில் விரிந்து கிடக்கும் நூல்தேட்டத்தின் 6000 நூல்களின் தொகுப்பைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாதது எனது சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தது.

கேள்வி: ஆய்வாளர்கள் மத்தியில் நூல்தேட்டம் எவ்வளவுதூரம் உள்வாங்கப்பட்டுள்ளது.


என்.செல்வராஜா: நூல்தேட்டம் பிரதிகள் ஐரோப்பிய நூலகங்களின் தமிழியல் பிரிவு, அல்லது தென்னாசியப் பிரிவு இயங்கும் நூலகங்களில் இடம்பெற்றுள்ளதால் அங்கு ஓரளவு அறியப்பட்டதாக உள்ளது. லண்டனில் என்னுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொலைபேசி உரையாடல்களிலிருந்து இதை அறிந்து கொள்ள முடிகின்றது. இலங்கையில் நிலைமை தலைகீழாக உள்ளது. நூல்தேட்டம் பிரதிகளை பிரதான நூலகங்கள் இருப்பில் கொண்டிருக்கின்றன என்று அறிகின்றேன். ஆயினும் ஆய்வாளர்கள் இதனை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை. ஏனெனில் அண்மையில் வெளிவந்த எந்தவொரு ஆய்வு நூலிலும் தமது உசாத்துணை பதிவுகளாக ஆய்வாளர்களினால் நூல்தேட்டம் குறிப்பிடப்பட்டதை நான் அறியவில்லை.

கேள்வி: நூல்தேட்டத்தை அடிப்படையாக வைத்து ஏதேனும் ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

என்.செல்வராஜா: உடத்தலவின்னையிலிருந்து கலாபூஷணம் பி.எம்.புன்னியாமீன் நூல்தேட்டம் முதல் நான்கு தொகுதிகளை விரிவாக ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘நூல்தேட்டம்- இலங்கைத் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டிய ஒரு பெருநதி” என்ற தலைப்பில் இது 2007இல் ஒரு நூலாகவும் வெளிவந்திருந்தது. அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவின் நூலகர் திரு. மகேஸ்வரன் இலங்கை தமிழ் நூல்களை தேசிய நூற்பட்டியலில் ஆவணப்படுத்துவது பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார். இதில் தேசிய நூற்பட்டியலுடன் நூல்தேட்டம் பதிவாக்கத்தையும் ஒப்பீட்டு அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றார். விரைவில் அவரது ஆய்வு நிறைவுபெரும் என்று அறிகின்றேன். ஈழத்தமிழர் நூல்களை பீ.டீ.எப். வடிவில் இணையநூலகமாகப் பதிவேற்றிவரும் நூலகம் இணையத்தளத்தின் நூல் தேடுகையின் ஆரம்பப்பதிவுக்குறிப்பாக நூல்தேட்டம் பதிவுகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியிருக்கிறேன். அதிலும் நூல்தேட்டம் விரிவான பாவனையில் உள்ளது. பல்கலைக்கழகங்களில் இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் நூல்தேட்டத்தை பெருமளவில் பயன்படுத்தித் தமக்கு வேண்டிய ஆய்வுத் தேவைக்கான நூல்களின் இருப்பினை அறிந்து அந்நூல்களை தேடுவதில் ஆர்வம் கொள்வதையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் தங்கியிருந்த மூன்று வார காலத்தில் நேரில் கண்டு புளங்காகிதம் அடைந்தேன்.

கேள்வி: ஆறு தொகுதிகளை வெளியிட்டுள்ள நீங்கள் சில வருடங்களுக்கு முன்னர் முதலாவது தொகுதியின் வெளியீட்டின் பின்னர் வழங்கிய ஒரு நேர்காணலில் ஆறுதொகுதிகளில் நூல்தேட்டத்தை பதிவுசெய்ய தீர்மானித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய நிலையில் இன்னும் எத்தனை தொகுதிகளில் பதிவுசெய்வதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?

என்.செல்வராஜா: ஆரம்பத்தில் எனது தேடலின் வேகத்தை அனுமானித்து ஆறு தொகுதிகளுக்குள் ஈழத்து நூல்களை அடக்கலாம் என்று கனவு கண்டிருந்தேன். இன்று அந்த எண்ணம் மேலும் பல தொகுதிகளை நூல்தேட்டத்தில் காண முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளது. இன்றளவில் நூல்தேட்டம் ஏழாவது தொகுதிக்கான பதிவில் 80சதவீதமான பதிவுகளை சேகரித்துக்கொண்ட திருப்தியுடன் லண்டன் திரும்புகின்றேன். விரைவில் ஏழாவது தொகுதியும் முடிவடைந்து விடும். இன்றளவில் இலங்கையில் எததனை நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்ற உறுதியான கணிப்பினை வழங்கும் ஆவணங்கள் எதுவுமே இல்லை. அதனால் எத்தனை தொகுதிகளை நான் வெளியிடலாம் என்ற எதிர்வுகூரலை மேற்கொள்ளமுடியாது.

கேள்வி: இலங்கையில் 1800களின் முன்னரைப் பகுதியிலிருந்து தமிழ் நூல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்த ஆரம்பகால நூல்களைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றீர்களா?

என்.செல்வராஜா: நூல்தேட்டம் ஈழத்துத் தமிழ் நூல்களின் முழுமையான ஆவணமாக அமையவேண்டும் என்பதே எனது அவா. அவ்வகையில் புராதன அச்சு நூல்களையும் பதிவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது. எனது தேடலின் போது 1895ம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட சில நூல்கள் அண்மையில் பேராதனையில் கிட்டியது. இதற்கு முன்னரும் மலாயாப் பல்கலைக்கழகத்திலும் சிலநூல்கள் கிடைத்து பதிவாக்கியிருக்கிறேன். தற்போதுள்ள நூல்தேட்டம் பதிவுகள் யாவும் கண்ணால் கண்ட நூல்களையே பதிவு செய்வதாக உள்ளது. இன்று அழிவடைந்துவிட்ட நூல்களையிட்டு இலங்கை சுவடிகள் ஆவணக்காப்பகத்தில் தேடலை மேற்கொள்ளவிருக்கின்றேன். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. முதலில் கைக்கெட்டும் நூல்களில் கவனம் செலுத்தி பதிவுகளை மேற்கொண்டபின் ஒரு கட்டத்தில் இந்த எட்டாக் கனிகள் பற்றிய தேடலுக்குள் நுழைவேன். இன்று எளிதில் பெறக்கூடிய நூல்களைப் பெற்றுக்கொள்வதிலேயே அதிக உழைப்பையும், நேரத்தினையும் ஒதுக்கவேண்டியுள்ளது.

கேள்வி: தங்கள் முயற்சிகள் வெற்றியடையப் பிரார்த்திக்கின்றோம். அதே நேரம் சமகால எழுத்தாளர்கள் இம்முயற்சிக்கு எந்தளவு ஆதரவு நல்குகின்றனர். உங்கள் பணிக்கு அவர்களது உதவிகளை எந்தவழியில் எதிர்பார்க்கின்றீர்கள்?

என்.செல்வராஜா : இன்று சமகால வெளியீடுகளை அச்சிடும் இலங்கைப் பதிப்பகங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றேன். குமரன் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, ஞானம் பதிப்பகம், மலையக வெளியீட்டகம் ஆகியவை தாம் அச்சிடும் அல்லது வெளியிடும் நூல்களில் ஒவ்வொரு பிரதியை எனக்காக ஒதுக்கிவைத்து காலத்துக்குக் காலம் என்னிடம் சேர்ப்பிக்கிறார்கள். இதற்கான ஒழுங்குகளை கொழும்பிலுள்ள எனது சகோதரியின் வாயிலாக நான் மேற்கொண்டு வருகின்றேன். சில எழுத்தாளர்கள் தபால்மூலம் நேரடியாகவே எனக்கு லண்டனுக்கு அனுப்பிவைக்கிறார்கள். இவர்களது அக்கறையின் பயனாகவே நூல்தேட்டத்தின் தொகுப்பினை நான் நம்பிக்கையுடன் துரிதப்படுத்த முடிகின்றது. இந்தப் பணியை எனது காலத்திலேயே முடித்துவிடவேண்டும். அதற்கான பாதையை நான் உருவாக்கி, அனுபவங்களின் வாயிலாக அதனைச் செப்பனிட்டு அதில் பயணித்து வருகின்றேன். எனக்குப் பின்னர் இப்பணியைத் தொடர்பவருக்கு இலகுவாக இருக்கவேண்டும் என்பதே என் சிந்தையில் நிரந்தரப் பதிவாக உள்ளது. நூல்தேட்டம் தொகுப்பு என்பது என்னுடன் தொடங்கி என்னுடனே முடிவடையும் ஒன்றல்ல.


கேள்வி: இலங்கை நூல்தேட்டம் தவிர மலேசிய நூல்தேட்டம், இலங்கைத் தமிழருக்கான ஆங்கில நூல்தேட்டம், சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி ஆகியவற்றையும் வெளியிட்டதாக அறிகின்றோம். இவை பற்றி சுருக்கமாக குறிப்பிட முடியுமா?

என்.செல்வராஜா: மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களின் நூலியல் வரலாறு இலங்கைத் தமிழருடன் பின்னிப் பிணைந்தவை. அந்நாடுகளில் ஆரம்பகால தமிழ் நூல்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டவையாகும். இந்நூல்களைத் தேடி அந்நாட்டுக்குச் சென்றபோதுதான் முழு உலகத்தாலும் மறக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு இருந்த மலேசிய தமிழர்களின் ஆழமான பல நூல்கள் பற்றி அறியமுடிந்தது. இவர்களது படைப்புக்கள் பற்றி இலங்கைத் தமிழர்கள் அறிந்திராதது துரதிர்ஷ்டம் என்றே கருதினேன். இதன் பயனாக 2200 பதிவுகளுடன் எழுந்ததே மலேசிய, சிங்கப்பூர் நூல்தேட்டமாகும்.

இலங்கைத் தமிழரின் பல நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இலங்கை இராணுவத்தின் வரலாறு ஒரு தமிழரால் எழுதப்பட்டது. கொழும்பு மாவட்டத்தின் வரைபடம் (ளுவசநநவ யுவடயள) ஒரு தமிழரால் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் சனத்தொகைக் கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு தமிழராலேயே மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய பல வரலாற்று முக்கியத்துமான நூல்களை தந்த அந்த தமிழர்களையோ, அவர்களது நூல்களையோ அண்மைக்காலத்தில் ஆங்கிலத்தில் வெளிநாடுகளில் வெளிவந்த இலங்கை தொடர்பான நூல் விபரப்பட்டியல்கள் உள்ளடக்கியிருக்காதது எனது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக எழுந்ததே ஆங்கில நூல்தேட்டமாகும். இது முற்றிலும் தமிழர் அல்லாதவர்களுக்காக ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு நூல்தேட்டம்.

இலங்கைத் தமிழரின் நூலியல் பாரம்பரியத்தில் முக்கிய இடம் வகிப்பது சிறப்பு மலர்களாகும். பல தமிழ் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பு மலர்களில் வந்து குறுகிய வட்டத்திற்குள் தங்கி விடுவதாலும் குறுகிய கால வரலாற்றைக் கொண்டதாலும் ஆய்வு மாணவர்களால் கண்டு கொள்ளாமல் போய்விடும். இதைத் தவிர்க்கும் நோக்குடன் தேர்ந்த 150 தமிழ் மொழியிலான சிறப்பு மலர்களை எடுத்து அவற்றிலிருந்த 2000க்கும் அதிகமான கட்டுரைகளை கண்டறிந்து அவற்றிற்கான ஒரு வழிகாட்டியை (சுட்டி) தயாரித்திருந்தேன். இதனை நூலுருவிலும் கொண்டுவந்து பிரதான நூலகங்களுக்கு வழங்கியிருந்தேன். இது இன்றளவில் நல்லதொரு உசாத்துணை வழிகாட்டி நூலாக பயன்படுத்தப்படுவதை அறிகின்றேன்.

கேள்வி: இலங்கைக்கு வந்து கடந்த மூன்று வாரங்களாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் நூல் தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நீங்கள் எதிர்வரும் வாரம் மீளவும் லண்டன் செல்லவுள்ளீர்கள். நூல்தேட்ட தேடல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாக இக்காலகட்டத்தில் வேறு ஏதாவது இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டீர்களா?

என். செல்வராஜா: கடந்த மூன்று வாரங்களாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் எனது பெரும் பொழுதை கழித்த வேளையில் தமிழ் துறையின் அழைப்பின் பேரில் பல்கலைக்கழக தமிழ்துறை மாணவர்களுடனும், விரிவுரையாளர்களுடனும் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றேன். புலம்பெயர் வாழ்வியல் தொடர்பான பல கருத்துப் பரிமாற்றங்களை அந்நிகழ்வில் மேற்கொள்ள முடிந்தது. எதிர்வரும் 12ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி மகாவித்தியாலயத்தில் ஆசிரியை சுதாகரி மணிவண்ணன் எழுதிய ‘அரங்க அலைகள்’ என்ற நாடக நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருக்கின்றேன். அதன் போது 11ஆம் திகதி கிழக்கிலங்கை எழுத்தாளர்களை சந்திக்கும் ஒரு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 16ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் உரையாற்றவும் இருக்கின்றேன். இவற்றை தவிர முடிந்தவரையில் எழுத்தாளர்களையும், நூல் வெளியீட்டாளர்களையும், பதிப்பகங்களையும் தொடர்பு கொண்டு நூல்தேட்டத்திற்கான நூல் சேகரிக்கும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபடவுள்ளேன். எனது உரையாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் நூல்தேட்டத்தையும், அதன் தேவையையும், எமது சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதாகவே அமையும் என்று நம்புகின்றேன்.

கேள்வி: மிக்க நன்றி திரு செல்வராஜா அவர்களே. தங்கள் பணிகள் தற்போதைய நிலையில் இலக்கிய ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படாவிடினும் கூட நிச்சயமாக எதிர்காலத்தில் இதுவொரு விலைமதிக்க முடியாத ஒரு ஆவணமாக திகழும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இறுதியாக ஞாயிறு தினக்குரல் வாசகர்களிடம் நூல்தேட்டம் தொடர்பாக நீங்கள் ஏதாவது விசேட செய்தியை தெரிவிக்க விரும்புகின்றீர்களா?

என். செல்வராஜா: ஞாயிறு தினக்குரல் வாசகர்கள் எனக்கு புதியவர்கள் அல்ல. எனது கட்டுரைகளையும், எனது பணிகள் தொடர்பான செய்திகளையும், நேர்காணல்களையும் தினக்குரல் நிறுவனம் எப்பொழுதும் வெளியிட்டு வருகின்றது. அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நிலையில் எம்மக்கள் மத்தியில் நூல்தேட்டம் தொகுப்பு பற்றிய செய்தி தீவிரமாக வலியுறுத்தப்பட வேண்டும். நூல்தேட்டத்தின் இருப்பை அறிந்து கொள்ளும் எந்தவொரு ஆய்வாளரும் தனது தேடலில் செலவிடும் பெரும் பங்கு நேரத்தை சேமித்துக் கொள்ள முடியும். இலங்கையிலுள்ள படைப்பிலக்கிய வாதிகளும் உலகெங்கும் பரந்து வாழும் தமது சகோதர படைப்பாளிகள் என்ன செய்கின்றார்கள் என்பதை நூல்தேட்டத்தின் பதிவுகள் வாயிலாக எளிதில் அறிந்து கொள்ள முடியும். நூல்தேட்டத்தின் உருவாக்கத்தின் வெற்றி அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது. இந்த தொடர்பாடலை தினக்குரல் வாயிலாக எமது படைப்புலக சகோதரர்களுக்கு விடுப்பதினூடாக அவர்களது பங்களிப்பினையும் நான் எதிர்பார்க்கின்றேன். நூல்தேட்டம் செல்வராஜா என்ற ஒரு தனி மனிதனுடைய ஆய்வு நூலல்ல. அவனது புகழையோ, பொருளாதார வளத்தையோ மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் ஒரு சாதனமுமல்ல. இது அர்ப்பணிப்புடன் தனி மனிதனால் முழுச் சமூகத்துக்குமாக மேற்கொள்ளப்படும் ஒரு வாழ்நாள் முயற்சி. இதனால் உலகில் அடையாளப்படுத்தப்படப் போவது படைப்பாளிகளும், அவர்களது படைப்புக்களுமேயாகும். இதை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு படைப்பாளி தனது உளமார்ந்த பங்களிப்பாக எதைச் செய்திருக்கின்றான் என்ற கேள்வியை ஒவ்வொருவரது மனதிலும் தினக்குரல் வாயிலாக எழுப்ப வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

Read more...

Thursday, August 6, 2009

கல்வி நிவாரண செயற்றிட்டம். - புன்னியாமீன் -

இலங்கையில் யுத்த நிலமை காரணமாக இடம் பெயர்ந்து தற்போது வவுனியா நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக இலங்கையில் சிந்தனை வட்டம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை குறித்து அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் விடுத்;திருந்த பத்திரிகை அறிக்கை வருமாறு

வடக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்விநிலையை மேம்படுத்த சிந்தனைவட்டம் திட்டமிட்ட செயற்றிட்டங்களை வகுத்து விளம்பர நோக்கமின்றி உணர்வுபூர்வமாக செயற்படுத்தி வருகின்றது.

தற்போது செயற்படுத்தப்பட்டு முடிவுறும் கட்டத்திலுள்ள முதற்கட்ட செயற்றிட்டத்துக்கு லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற் இணையத்தளத்தினதும், மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியத்தினதும், லண்டன் அகிலன் பவுண்டேஷன் மற்றும் லிட்டில் எய்ட் போன்ற அமைப்புகளினதும், சில பரோபகாரிகளினதும் உதவிகள் பெறப்பட்டு சுமார் இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும்: நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி வருகின்றது. தொடர்ந்து க.பொ.த (சாதாரண தரம்) மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்காக வேண்டிய திட்டமொன்றையும் வகுத்து வருகின்றது.

இலங்கையில் கல்வியால் உயர்ந்து உலகளாவிய ரீதியில் தடம்பதித்த ஒரு சமூகத்தை உருவாக்கிய இலங்கையில் வடபுலத்து மண் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இன்று சொல்லொனாத் துயரங்களை சுமந்து 'பூஜ்ய கல்வி அலகை” எதிர்நோக்கக் கூடிய ஒரு சமூகமாக மாறிவிட்டது. வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலை மாணவர்களும், அதேபோல முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் இன்று அகதிகளாக நலன்புரிநிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மைக்கால யுத்தத்தில் மாத்திரம் வடபுலத்து மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அகதிமுகாம்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அண்மையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பாராளுமன்றத்தில் வாய்மூலக் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் உள்ளனர் எனத் தெரிவித்தார். 60ஆயிரம் மாணவர் எனும்போது நாளைய சமூகத்தை கட்டியெழுப்பக் கூடிய சக்திகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நலன்புரிநிலையங்களில் ஆரம்பப் பிரிவு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்பித்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களாலும் உரிய கல்வியினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இடம் பெயர்ந்துள்ள மாணவர்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையப் பாடசாலைகளுள் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய சூழ்நிலை இல்லை. இதனை இரண்டு கோணங்களில் தெளிவு படுத்தலாம்.

ஒன்று இடம்பெயர்ந்த மாணவர்களை அவதானிக்குமிடத்து, அவர்களில் அதிகளவிலான மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்து அல்லது பிரிந்து வந்த துயரசூழ்நிலை ஒரு புறம். ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இத்தகைய காரணிகளால் உளவியல் ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இம்மாணவர்கள் கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.

இரண்டாவதாக இவர்கள் கற்கும் சூழ்நிலை. வசதியான பாடசாலைகளில் வசதி வளங்களோடு கற்று விட்டு தற்போது நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் அல்லது மர நிழல்களில் கற்க வேண்டிய நிலை. இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு மேசை, கதிரைகள் கிடையாது, சீருடை கிடையாது. நிலங்களில் அமர்ந்து கொண்டே கற்கின்றனர். இவர்கள் கற்கும் இடங்களை ஊடருத்துக் கொண்டு முகாம்களில் உள்ள பெரியவர்கள் செல்லக்கூடிய நிலையும் உண்டு. இவர்கள் கற்கும் இடங்களுக்கு அண்மையில் சீட்டாடுவதும், வம்பலப்பதும் உண்டு. எனவே மாணவர்களின் உள நிலைப்பாதிப்பும், கற்கும் சூழ்நிலையும் தொடர்புபடுத்திப்பார்க்கும் போது முறைசார் கல்வியை மேற்கொள்ளக்கூடிய சூழலொன்று இல்லாதிருப்பதை அவதானிக்க முடியும். அதேநேரம், இங்குள்ள பாடசாலைகளில் பெரும்பாலானவை முழுநேரப் பாடசாலைகளாக அன்றி பகுதிநேரப் பாடசாலைகளாகவே இயங்குகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நலன்புரிநிலையங்களிலுள்ள மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய ஒரு அவசியப்பாடு அனைவருக்கும் காணப்படுகின்றது. அரசாங்கத்தினால் இலவசப் பாடநூல்கள், சீருடைகள் போன்றனவும் சில அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மாணவர்களின் நலனைப் பேணும்முகமாக பல்வேறுபட்ட தொண்டர் நிறுவனங்களும் உதவிகளைச் செய்து வருகின்றன. ஆனால், இம்மாணவர்களின் கல்வி நிலையை பேணக்கூடிய வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளை நலன்புரி அமைப்புகள் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மாணவர்களின் தேவை குறித்த உபகரணங்கள் போன்றவற்றை வழங்குவதுடன் தமது பணியினை அவை வரையறுத்துக் கொள்கின்றன.

மேற்குறிப்பிட்ட நிலைகளைக் கருத்திற்கொண்டு ஒரு செயற்றிட்டத்திற்கமைய சிந்தனைவட்டம் முதற் கட்டமாக தரம் 05 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கல்வி அபிவிருத்திற்காக வேண்டி திட்டமிட்ட செயற்பாடொன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. குறிப்பாக அரசாங்க பரீட்சையொன்றை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டுமென்ற எண்ணத்திற்கமையவே முதற் கட்டமாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை சிந்தனைவட்டம் தேர்ந்தெடுத்தது.

இலங்கையில் மாணவர்களை மையப்படுத்தி அரசாங்கத்தால் 03 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலாவது பரீட்சை தரம் 05 மாணவர்களை மையமாகக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையாகும். ஏனைய பரீட்சைகள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பனவாகும். தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதல் அரசாங்கப் பரீட்சையாகும். அதேநேரம் இது ஒரு போட்டிப் பரீட்சையுமாகும். இந்தப் பரீட்சையில் சித்தியடையும் மாணவனுக்கு உயர்தரக் கல்வி வரை கற்பதற்கு அரசாங்கம் ஆண்டுதோறும் 5000 ரூபாய் பெறுமதிமிக்க புலமைப்பரிசில் பணம் வழங்கும். அத்துடன் இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பும் அம்மாணவர்களுக்குக் கிட்டுகின்றது.

தரம் 5ஐச் சேர்ந்த சிறிய மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் பரீட்சை என்ற அடிப்படையிலும் இப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளமையினாலும் முதற் கட்டமாக தரம் 05ஐ எமது செயற்றிட்டத்துக்காக தேர்ந்தெடுத்தோம்.

வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்களின் 2009.06.01ஆம் திகதியிட்ட அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆகும். இம்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வட பகுதியில் யுத்த நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம், வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மடு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் போன்ற கல்வி வலய மாணவர்கள் ஓராண்டு காலங்களுக்கு மேல் பாடசாலை வாசனையை அறியாமலே உள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்வரும் ஆகஸ்டில் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுப் பரீட்சை என்பதனால் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப்படமாட்டாது. எனவே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆகஸ்ட் பரீட்சையை எழுதியேயாக வேண்டிய நிலையில் உள்ளனர்.

பாடத்திட்டத்தின் பிரகாரம் தரம் 4, 5 வகுப்புகளில் இம்மாணவர்கள் பல பாட அலகுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை துரிதமாக வழிநடத்தக்கூடிய வகையில் நாங்கள் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி மாணவர்களின் துரித வழிகாட்டலுக்கான ஏற்பாட்டினை செய்கின்றோம். எமது 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி நலன்புரி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் பல்வேறுபட்ட சிரமங்கள் மத்தியில் மிகவும் திறன்பட வழிநடத்துகின்றனர்.

இந்தத் திட்டத்திற்கான அடிப்படை நிதியுதவியினை லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற்” இணையத்தளத்தினர் மற்றும் 'மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்' உட்பட லண்டனில் “அகிலன் பவுண்டேஷன்” மற்றும் “லிட்டில் எய்ட்” நிறுவனம் ஆகியவற்றுடன் சில பரோபகாரிகளும் வழங்கினர்.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் இலங்கை நாணயப்படி 2,777,040 ரூபாவாகும். இதில் மூன்றிலொரு பங்கான ரூபாய் 925,680 சிந்தனைவட்டம் நேரடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டது. இச்செயற்றிட்டத்துக்கு 7 இலட்சம் ரூபாய்களை “மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்” வழங்கியது. மீதித் தொகையில் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற் இணையத்தளத்தின் முயற்சியின் பிரகாரம் தேசம்நெற் இரண்டு லட்சம் ரூபாய்களையும், லண்டன் அகிலன் பவுண்டேஷன் மூவாயிரம் பவுண்களையும், லண்டன் லிட்டில் எய்ட் நிறுவனம் ஆயிரம் பவுண்களையும் பொறுப்பேற்றன. லண்டனைச் சேர்ந்த வேறும் சில பரோபகாரிகள் மீதமான ஆயிரம் பவுண்களையும் தர முன்வந்துள்ளனர். எனவே, மிகவும் ஒரு குறுகிய வட்;டத்திற்குள்ளே நிதியுதவி பெறப்பட்டு இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தரம் 05 பாடத்திட்டத்திற்கு அமைய மாதிரி வினாத்தாள்களையும் வழிகாட்டிப் புத்தகங்களையும் தயாரித்தல், அச்சிடல், முகாம்களுக்கு நேரடியாக விநியோகித்தல் போன்ற சகல கருமங்களையும் சிந்தனை வட்டமே நேரடியாக பொறுப்பேற்று நடத்துகின்றது.

சிந்தனைவட்டத்தின் இத்திட்டத்திற்கு வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றார்.இதன் காரணமாக எம்மால் அனுப்பப்படும் மாதிரிவினாத்தாள்களும் வழிகாட்டிப் புத்தகங்களும் நேரடியாக கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாணவர்களை சென்றடைகின்றன. இவை வலயம் 0, வலயம் 1, வலயம் 2, வலயம் 3, வலயம் 4,வலயம் 5 நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் மேலும் சுமதிபுரம், தரம்புரம், வீரபுரம் நலன்புரி நிலைய மாணவர்களுக்கும் நகர்ப்புறங்களிலுள்ள 07 பாடசாலையில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் நேரடியாக வழங்கப்படுகின்றன. எம்மால் வழங்கப்படும் மாதிரிவினாத்தாள்களை நலன்புரி நிலையங்களிலுள்ள ஆசிரியர்கள் கூடிய கரிசனை செலுத்தி மாணவர்களுக்கு வழங்கி வழிநடத்தி வருகின்றனர். சில பாடசாலைகளில் மாதிரிவினாத்தாள்கள் பரீட்சையாக நடத்தப்பட்டு புள்ளிகள் பதியப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிந்தனைவட்டம் ஆரம்ப கட்டமாக 1057 மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்களையும் வழிகாட்டி நூல்களையும் வழங்கியது. ஏப்ரல் மாதம் மத்தியில் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தையடுத்து நலன் புரிநிலையங்களுக்கு இடம்பெயர்ந்த மேலதிக 3800 மாணவர்களுக்கும் அடுத்த கட்டமாக இச்செயற்றிட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது மொத்தமாக 4872 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தரம் 05 மாணவர்களின் பரீட்சை இம்மாதம் 23ஆந் திகதி நடைபெறவுள்ளது. இப்பரீட்சை முடிவடைந்த பின்பு க.பொ.த. (சா/தர) மாணவர்களுக்கான துரித மீட்டல் திட்டமொன்றினை செப்டம்பர் ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டு வருகின்றது.

இலங்கைத் தமிழன் கல்வியால் தலைநிமிர்ந்தவன். ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொட்டே கல்வித்துறையில் இவர்களின் பங்களிப்பு மிகவும் விசாலமானது. கல்வித் துறையில் தமிழ் சமூகத்தினர் பெற்ற வெற்றிகள் சர்வதேச ரீதியில் தமிழினத்தின் ஒரு தனித்துவத்திற்கு சான்று பகன்று நிற்கின்றது என்பதை யாராலும் மறுப்பதற்கியலாது. அண்மைக்கால யுத்த சூழ்நிலை வட புலத்தைச் சேர்ந்த தமிழர்களின் கல்வியில் பாரிய பின்னடைவொன்றை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அறிக்கையொன்றில் “வட தமிழர்களின் கல்வி பதினைந்தாண்டுகளுக்கு பின்தள்ளப்பட்டு விட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வார்த்தையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

எனவே, தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக போராடும் அதேநேரத்தில் தற்போதைய சமூகத்தின் கல்வி வீழ்ந்துவிடாமல் காக்க வேண்டியதும் கடமையாகவே உள்ளது. வடபுலத்து அகதிமுகாம்களில் கல்வி பயிலும் மாணவர்களைப் பொருத்தமட்டில் அவர்களின் கல்வி அபிவிருத்தி என்பதைவிட கற்றவற்றை மறந்துவிடாது சாதாரண நிலையில் பரீட்சைகளை எதிர்கொள்ளக்கூடிய வசதிகள், வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது படித்த ஒவ்வொரு தமிழனின் கடமை என்று துணிந்து கூறலாம். அரசியல் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டபோதிலும்கூட, வட புலத்து மாணவர்களின் கல்வியில் கட்சி, இயக்க பேதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஒருமைப்பாடு காணப்பட வேண்டும். ஏனெனில், கல்வித்திட்டம் பொதுவானது. இதற்கான முயற்சிகள் செயல்திட்டங்கள் என்பன புத்திஜீவிகளின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சு கல்வித்திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து போலித்தனமாக அன்றி உணர்வுபூர்வமான முறையில் வகுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்..

Read more...

Monday, May 31, 2010

இன்று மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் - புன்னியாமீன்

‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான். இன்று மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் - புன்னியாமீன்

உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் World Health Organization உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. 1988ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் WHA 40.38 தீர்மானப்படி ஏப்ரல் 07ஆம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும்கூட, அதேயாண்டில் WHA 42.19 தீர்மானப்படி மே 31ஆம் திகதி அனுஸ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

உலகில் காணப்படும் மெல்லக் கொல்லும் நச்சுத் தன்மை மிக்க தாவரங்களில் புகையிலையும் ஒன்றாகும். இத்தாவரத்தின் தண்டுப் பகுதியைவிடவும், இலைப் பகுதியிலேயே அதிக இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இது மருத்துவ, விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இற்றைவரையும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் படி புகையிலையில் சுமார் நாலாயிரம் இரசாயனப் பதார்த்தங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஐதரசன் சயனைட், அமோனியம், ஆசனிக், டி. டி. ரி, மெத்தனோல், காபன்மொனக்சைட், பென்சின், தார், நிக்கடின் போன்றன சுட்டிக்காட்டத் தக்கவை.

இன்றைய காலகட்டத்தில் மனிதன் புகையிலையை வெவ்வேறு விதமாகப் பாவிக்கிறான். அதாவது இந்த நச்சுத் தன்மை மிக்க புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து மெல்கிறார் தூள் புகையிலையை பொடியாக மூக்கில் போட்டுக்கொள்கிறார்கள். மற்றும் குழாய்களை பாவித்து புகையை உறிஞ்சுதல், பீடி, சிகரட், சுருட்டு, பைப் என்று பல்வகையாக புகையிலையை கோடிக்கணக்கானோர் பாவித்து வருகிறார்கள்.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் புகைத்தலால் தமக்கும் பிறருக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து தவிர்ந்து கொள்வதை வலியுறுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான இறப்புகளைக் குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கிறது.

உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையிலைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர்பாக வலியுறுத்தப்படுகிறது.

பொதுவாக உலகில் சுமார் 100கோடி மக்கள் புகைப்பிடிக்கின்றார்கள் எனவும், இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 35 வீதமும், அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 50 வீதமும் நுகரப்படுவதாகவும் தினமும் 250 மில்லியன் பெண்கள் புகைப்பிடித்து வருவதாகவும், இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 22%. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 09% அடங்குவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். உலகில் சிகரட்டின் மொத்த உற்பத்தியில் 37% த்தை சீனர்களே நுகர்கின்றனர்.

புகைப்பிடித்தலில் ஈடுபடக்கூடியவர் பற்றி சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் பிரகாரம் கௌரவமான நிலையிலுள்ளோர் 31.7% அறிவின்மையால் 0.6% , விசேட காரணங்களின்றி 8% , பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில் 24%, மனக்கசப்புக்குள்ளானோர் 16%, பிரச்சினை காரணமாக 4.4%, தொழில் காரணமாக 2.8%, விருந்துபசாரங்களின் காரணமாக 6.1%, மற்றைய காரணங்களினால் 5.5% வீதத்தினர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் முன்னையநாள் பணிப்பாளர் ‘வில்லியம் பொலின்’ வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் குறிப்பிட்ட விடயங்கள் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியதே. ‘புகையிலை மதுவைவிட ஏன் ஹெரோயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடிமைப்படுத்தக்கூடியது. அடிமையானவர்களில் 60% – 90% வீதமானவர்கள் தம் பழக்கத்திலிருந்து மீட்சி பெற முடியாதவர்களாக உள்ளனர்.

வளைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப்பொருட்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) வளைகுடா நாடுகளில் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங்களை தந்திருந்தது. வளை குடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த கொதிப்பு நோய் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவர் அப்துல்லா அல் பாதாஹ் (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti – Smoking Programme at the Health Ministry) தன்னுடைய ஆய்வின் படி, தற்போது வளைகுடா நாட்டைச்சார்ந்த 600,000 பெண்கள் புகை பிடிக்கிறார்கள். இவற்றில் யுவதிகள் தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அத்துடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

‘பகையைக் கூட புகையாய் ஊதித் தள்ளிவிடும் மனிதன் இந்தப் புகை என்னும் பகையை பகைக்க முடியாமல் திணறுகிறான்’. உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது? புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது? இவ்விடத்தில் சிறிதேனும் ஆராய்தல் வேண்டும். புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. புகையிலையில் நிக்கோடின் எனும் நச்சுப் பொருளுடன் வேறும் 700 வகையான இரசாயனக் கூட்டுப்பொருட்கள் சேர்ந்துள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் சில மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அதி சக்தி வாய்ந்த நச்சுப் பொருட்களாகும். இவற்றைத் தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர். மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றது. இந்த மாயையினால் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சினைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். அதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.

இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.

ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன: புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன. பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன. புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புகையிலை பாவனையால் பலவிதமான நோய்களுக்கு உள்ளாக நேரிடும். அவற்றில் கண்களில் வெள்ளை படருதல், நியூமோனியா, வயிற்று புற்றுநோய், சதையீ புற்றுநோய்இ சிறுநீரக புற்றுநோய், கழுத்து புற்றுநோய் மூத்திரபையில் கட்டி, நுரையீரல் புற்றுநோய், சுவாசத் தொகுதிப் பாதிப்புக்கள், உணவுக் குழாயில் புற்றுநோய், குரல் வளையின் மேற்பகுதியில் பாதிப்பு, வாய் புற்றுநோய், வாயிலும், தொண்டையிலும், பாதிப்பு, இருமல், சளி பாரிசவாதம், இருதய அழுத்தம், இதய நோய்கள் போன்றன குறிப்பிடத்தக்கவை.

அத்தோடு புகையிலை பாவனை காரணமாக இனவிருத்தி ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக புகையிலை பாவிக்கும் ஆண்கள் மத்தியில் பாலியல் பலவீனத்தை அதிகரிக்க உதவலாம். அதேநேரம் நிறைகுறைந்த குழந்தை பிறப்பும், குறைமாதக் குழந்தை பிறப்பும், கர்ப்பப் பையினுள்ளே சிசு இறந்து பிறப்பதும் புகையிலைப் பாவனையாளர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும்.

இதேவேளை புகைபிடிப்போர் வெளியிடுகின்ற புகையை புகைபிடிக்காதோர் தொடர்ச்சியாக சுவாசிப்பதால் ஆஸ்துமா, இருதய நோய்கள், காசநோய், காதுகளில் தொற்று, சுவாசத் தொகுதி நோய்கள், திடீர் சிசு மரணம் போன்றவாறான பாதிப்புக்களுக்கும் உள்ளாக நேரிடும். அவுஸ்திரேலிய சிட்னி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, புகைப்பழக்கமுடையவர்கள் முதுமைப் பருவத்தை அடையும்போது சிலருடைய பார்வை முழுமையாகவே இழக்கப்படுகிறது. முற்றும் சிலருடைய பார்வை குறைந்தவிடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.

ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன். நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி ஹிப்னோற்டிக் (Hypnotic) முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. ஆயினும் சிறிது காலத்தின் பின் இச்சிகிச்சை பெற்றவர் பிரச்சினைகள் அல்லது வேறு காரணங்களால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும். படிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி. யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார்.

புகைத்தலுக்கு எதிராக நீண்டகாலமாக அறிவுறுத்தலும் பிரச்சாரமும் செய்யப்பட்டு வந்தபோதிலும் ஆக்கபூர்வமான பலன் பெரியளவில் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவறுத்தலுக்கமைய அநேகமான நாடுகள் புகை பிடிப்பவர்களை எச்சரிப்பதற்காக சிகரெட் பெட்டிகளில் அபாய எச்சரிக்கை வாசகங்களை அச்சிட்டு வருகின்றன. சில நாடுகளில் புகைத்தலை தடுப்பதற்காக சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய முடியாது.

பொது இடங்களில் புகைத்தல் முடியாது என்றெல்லாம் சட்டமியற்றப்பட்டுள்ளன. அதேநேரம் பொது இடங்களில் புகைபிடித்தால் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்றும் விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறமாக சில நாடுகள் புகைத்தல் தொடர்பான விளம்பரங்களையும் தடை செய்துள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சுகாதாரப் பகுதி புகைப்பாவனையால் வரும் தீங்குகளைப் பிரச்சாரம் செய்யும் அதேவேளை, சிலநாடுகளில் புகையிலையும், மதுபானமும் அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளாக அமைந்தன. இந்த முரண்போக்கே இந்நிலை நீடிப்பதற்குக் காரணமாக இருந்தது. குறிப்பாக புகைத்தலின் தீங்குகளைப் பற்றி பிரசாரம் செய்யும் சுகாதாரப் பகுதியினர் அல்லது நிறுவனங்கள் புகைத்தல் தொடர்பான உற்பத்திகளை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது வேதனைக்குரியதே. இவற்றால் புகையிலை உற்பத்திகளை தடுக்க முடியாது. ஏனெனில், புகையிலை உற்பத்திகள் மூலமாக அரசாங்கத்துக்கு பெருமளவுக்கு வருமான வரியை ஈட்டுகின்றன.

1988ல் பின்லாந்தும், 1994ல் பிரான்சும் மதுபான, புகைத்தல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தின. ஐரோப்பிய யூனியன், நியூஸிலாந்து போன்றவையும் நாட்டில் மதுபான, சிகரட் பாவனையைக் குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் இந்நிலையை துரிதப்படுத்துகின்றன. எவ்வாறிருந்தபோதிலும் பாவனையாளர் தாமாகவே உணர்ந்து செயல்படுவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது மாத்திரமே உண்மை.

ஒரு நபர் புகைப்பிடிப்பதினால் அவருக்கு ஏற்படும் கெடுதலைவிட அவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார். புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக ‘நாட்டிங்காம்’ பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி நுரையீரல் புற்றுநோய் 16வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு புகைப்பிடிப்பவர்களிடத்திலன்றி பக்கத்தில் இருப்பவர்களிடமே ஏற்பட்டுள்ளது.

இலங்கையை மையமாகக் கொண்டு எத்தகையோர் புகைப்பிடிக்கின்றார்கள் என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து பழக்கவழக்கங்கள் காரணமாக 21 %, மகிழ்ச்சிக்காக 21.1% , புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 22.7% , நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதற்காக 8.2%, தனிமையிலிருந்து விடுபடுவதற்காக 7.5% , ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி 3.3%, பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் 7.6% , நண்பர்களின் அழுத்தம் காரணமாக 7.6 % , பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நோக்கில் 3.3% த்தினரும் புகைப்பிடிப்பதாக தெரிய வருகின்றது. மேலும், இலங்கையில் புகைப்பாவனையாளர்கள் குருநாகல் மாவட்டத்தில் 17.1% , கொழும்பு மாவட்டத்தில் 20.4%, கேகாலை மாவட்டத்தில் 24.5% , அநுராதபுர மாவட்டத்தில் 27.9% , கம்பஹா மாவட்டத்தில் 29.8%, காலி மாவட்டத்தில் 44.2% இருப்பதைக் காணமுடிகின்றது. ஏனைய மாவட்டங்கள் இதற்கு இடைப்பட்ட விகிதத்திலே இருப்பதை அவதானிக்கலாம். மேற்படி தகவல் சிகரட் விற்பனையை மையமாகக் கொண்டு பெறப்பட்டதாகும்.

உலக சுகாதார நிறுவனத்தினால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் குறித்து ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளினை முன்வைக்கின்றது. அவை வருமாறு:

1990 - Childhood and youth without tobacco: growing up without tobacco
1991 - Public places and transport: better be tobacco free
1992 - Tobacco free workplaces: safer and healthier
1993 - Health services: our windos to a tobacco free world
1994 - Media and tobacco: get the message across
1995 - Tobacco costs more than you think
1996 - Sport and art without tobacco: play it tobacco free
1997 - United for a tobacco free world
1998 - Growing up without tobacco
1999 - Leave the pack behind
2000 - tobacco kills, don’t be duped
2001 - second-hand smoke kills
2002 - tobacco free sports
2003 - tobacco free film, tobacco free fashion
2004 - tobacco and poverty, a vicious circle
2005 - health professionals against tobacco
2006 - tobacco: deadly in any form or disguise
2007 - smoke free inside
2008 - tobacco-free youth
2009 - tobacco health warnings

Read more...

Monday, June 14, 2010

உலக இரத்ததான தினம் World Blood Donor Day - புன்னியாமீன்

உலக இரத்ததான தினம் World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இரத்ததானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும், பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள்.

விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.

அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே இரத்ததானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக இரத்ததானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையை இரத்ததானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் இரத்ததானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.

2009ஆம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் ‘இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொண்டு செய்யும் நோக்குடன் இரத்ததானத்தை ஊக்குவிப்பதாகும்’. வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை இரத்ததானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே இரத்ததானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக்கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்தி வழங்க இரத்ததானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உலக மக்கள் வழங்கும் இரத்ததானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக சனத்தொகையின் 82வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

அன்று முதல் இன்றுவரை இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் இரத்ததானமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 - 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் இரத்ததானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும்.

இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது. இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக பின்வருவன அமைகின்றன:-

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்ததானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை இரத்ததானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் இரத்ததானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

இரத்ததானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக இரத்ததான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் இரத்ததானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

எனவே, இது விடயமாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இரத்ததானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

Read more...

Sunday, January 3, 2010

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 03

புன்னியாமீன் B.A (cey), Dip in Journ (Ind), S.L.T.S

கடந்த வாரத் தொடர்ச்சி….

1 ஆவது ஜனாதிபதித் தேர்தல்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982.10.20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணி வரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

திரு. ஜே.ஆர். ஜயவர்தன (ஐக்கிய தேசியக் கட்சி)
திரு. ஹெக்டர் கொப்பேகடுவ (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி)
திரு. ரோஹன விஜயவீர (மக்கள் விடுதலை முன்னணி)
திரு. கொல்வின் ஆர்.டி. சில்வா (லங்கா சமசமாஜக் கட்சி)
திரு. வாசுதேவ நாணயக்கார (நவ சமசமாஜக் கட்சி)
திரு. குமார் பொன்னம்பலம் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்)


இத்தேர்தலில் 1) ஹேவாலயாகே கீர்த்திரத்தின 2) முதியான்சே தென்னகோன் 3) திருமதி நீனா கெதரின் ஏஞ்சலா பெரேரா விஜேசூரிய ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாக நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தனர். இருப்பினும் சட்ட ஏற்பாடுகளுக்கமைய இவர்களின் நியமனப் பத்திரங்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.

1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையே போட்டி நிலவியபோதிலும்கூட மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலையே மிகைத்திருந்தது. காரணம்:

1) இக்கால கட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் முன்னாள் பிரதமருமான திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை நீக்கப்பட்டிருந்தது. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவ நிறுத்தப்பட்ட போதிலும் தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் பரிச்சயமற்றவராகவே இவர் இருந்தமை.

2) 1970-77க் கிடைப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட சோஸலிசப் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் எதிர்நோக்கப்பட்ட பஞ்சநிலையின்போது பாதிப்புற்ற மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மீது அதிருப்தி நிலையில் இருந்தமையும், 1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். அரசாங்கம் இலங்கையில் முன்வைத்திருந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கவர்ச்சி நிலைமையும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் பதவிக்கு வருமிடத்து 1970-1977க்கிடைப்பட்ட கால பஞ்சநிலை மீண்டும் தொடரலாம் என்ற மக்களின் பய உயர்வும், (1982 ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சியினர் தமது பொருளாதாரக் கொள்கைகளை திட்டவட்டமான முறையில் முன்வைக்காமையும் ஒரு குறையாகவே கூறல் வேண்டும்)

1982-10-20ம் திகதி நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 8, 144, 995 ஆகும். (ஜனாதிபதித் தேர்தலின்போது இலங்கை பூராவும் ஒரு தொகுதியாகவே கருதப்படும்) இவர்களுள் 6, 602, 612 (81.06 %) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும்கூட, 6, 522, 147 (79.84 %) வாக்குகளே செல்லுடியான வாக்குகளாக இருந்தன. யாப்பு விதிகளுக்கிணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 3, 261, 074 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவர். திரு. ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் 3, 450, 811 வாக்குகளை அதாவது 52.91 சதவீத வாக்குகளை பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1983 பெப்ரவரி 04ம் திகதி மீளவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

1982 ஜனாதிபதித் தேர்தலில் 50சதவீதமான வாக்குகளை விட (3, 261, 074) மேலதிகமான 189, 737 வாக்குகளையும், தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற திரு. ஹெக்டர் கொப்பேகடுவையை விட 902, 373 மேலதிக வாக்குகளையும் திரு. ஜயவர்தனா அவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மாகாண ரீதியில் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 436,290 (57.71%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 276,476 (36.57%)
ரோஹன விஜயவீர (J.V.P) 28,580 (3.78%)
குமார் பொன்னம்பலம் (T.C) 3,022 (0.40%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 9,655 (1.28%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 2,008 (0.26%)

பதியப்பட்ட வாக்குகள் 972,196
செல்லுபடியான வாக்குகள் 756,031 (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,990 (1.04%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 764,021 (78.59%)

கம்பஹா மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 365,838 (52.50%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 301,808 (43.31%)
ரோஹன விஜயவீர (J.V.P) 23,701 (3.40%)
குமார் பொன்னம்பலம் (T.C) 534 (0.88%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 3,835 (0.55%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 1,122 (0.16%)

பதியப்பட்ட வாக்குகள் 835,265
செல்லுபடியான வாக்குகள் 696,838 (99.15 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,992 (0.85 %)
அளிக்கப்பட்ட வாக்குகள் 702,830 (84.14 %)

களுத்துறை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 211,592 (50.15%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 185,874 (44.06%)
ரோஹன விஜயவீர (J.V.P) 14,499 (3.44%)
குமார் பொன்னம்பலம் (T.C) 443 (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 8,613 (2.04%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 871 (0.20%)

பதியப்பட்ட வாக்குகள் 499,215
செல்லுபடியான வாக்குகள் 421,892 (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,548 (1.07%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,440 (85.42%)

கண்டி மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 289,621 (59.82%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 178,493 (36.87%)
ரோஹன விஜயவீர (J.V.P) 12,493 (2.58%)
குமார் பொன்னம்பலம் (T.C) 562 (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 2,256 (1.46%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 718 (0.15%)

பதியப்பட்ட வாக்குகள் 564,767
செல்லுபடியான வாக்குகள் 484,143 (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,702 (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 488,845 (86.6%)

மாத்தளை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 94,031 (58.11%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 59,299 (36.66%)
ரோஹன விஜயவீர (J.V.P) 7,169 (4.43%)
குமார் பொன்னம்பலம் (T.C) 253 (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 866 (0.54%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 196 (0.12%)

பதியப்பட்ட வாக்குகள் 187,276
செல்லுபடியான வாக்குகள் 161,814 (99.13 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,414 (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,228 (87.1%)

நுவரெலியா மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 109,017 (63.10%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 57,093 (33.05%)
ரோஹன விஜயவீர (J.V.P) 4,069 (2.35%)
குமார் பொன்னம்பலம் (T.C) 558 (0.32%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,201 (0.70%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 831 (0.48%)

பதியப்பட்ட வாக்குகள் 201,878
செல்லுபடியான வாக்குகள் 172,769 (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,048 (1.17%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 174,817 (86.6%)

காலி மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 211,544 (50.23%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 180,925 (42.96%)
ரோஹன விஜயவீர (J.V.P) 20,962 (4.98%)
குமார் பொன்னம்பலம் (T.C) 425 (0.10%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 6,301 (1.50%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 981 (0.23%)

பதியப்பட்ட வாக்குகள் 512,489
செல்லுபடியான வாக்குகள் 421,138 (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,198 (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,336 (83.19%)

மாத்தறை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 164,725 (49.32%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 144,587 (43.29%)
ரோஹன விஜயவீர (J.V.P) 22,117 (6.63%)
குமார் பொன்னம்பலம் (T.C) 474 (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,571 (0.47%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 509 (0.15%)

பதியப்பட்ட வாக்குகள் 399,888
செல்லுபடியான வாக்குகள் 333,983 (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,091 (0.92%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 337,074 (84.29%)

அம்பாந்தோட்டை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 90,545 (45.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 76,402 (38.73%)
ரோஹன விஜயவீர (J.V.P) 28,835 (14.62%)
குமார் பொன்னம்பலம் (T.C) 275 (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 877 (0.44%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 344 (0.17%)

பதியப்பட்ட வாக்குகள் 241,956
செல்லுபடியான வாக்குகள் 197,278 (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,804 (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 199,082 (82.28%)

யாழ்ப்பாண மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 44,780 (20.54%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 77,300 (35.46%)
ரோஹன விஜயவீர (J.V.P) 3,098 (1.42%)
குமார் பொன்னம்பலம் (T.C) 87,263 (40.03%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 3,376 (1.55%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 2,186 (1.00%)


பதியப்பட்ட வாக்குகள் 493,705
செல்லுபடியான வாக்குகள் 218,003 (95.36%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,610 (4.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 228,613 (46.30%)

வன்னி மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 32,834 (46.42%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 23,221 (32.83%)
ரோஹன விஜயவீர (J.V.P) 2,286 (3.23%)
குமார் பொன்னம்பலம் (T.C) 11,521 (16.29%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 584 (0.82%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 292 (0.41%)

பதியப்பட்ட வாக்குகள் 119,093
செல்லுபடியான வாக்குகள் 70,739 (96.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,447 (3.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 73,186 (61.5%)

மட்டக்களப்பு மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 48,094 (40.05%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 21,688 (18.06%)
ரோஹன விஜயவீர (J.V.P) 1,287 (1.07%)
குமார் பொன்னம்பலம் (T.C) 47,095 (39.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,294 (1.08%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 618 (0.52%)

பதியப்பட்ட வாக்குகள் 172,480
செல்லுபடியான வாக்குகள் 120,076 (97.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,876 (2.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 122,955 (71.29%)

திகாமடுல்லை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 90,772 (56.39%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 53,096 (32.98%)
ரோஹன விஜயவீர (J.V.P) 7,679 (4.78%)
குமார் பொன்னம்பலம் (T.C) 8,079 (5.02%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 967 (0.60%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 377 (0.23%)

பதியப்பட்ட வாக்குகள் 204,268
செல்லுபடியான வாக்குகள் 160,970 (98.71%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,101 (1.29%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,071 (79.83%)

திருகோணமலை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 45,522 (48.63%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 31,700 (33.87%)
ரோஹன விஜயவீர (J.V.P) 5,395 (5.76%)
குமார் பொன்னம்பலம் (T.C) 10,068 (10.76%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 635 (0.69%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 276 (0.29%)

பதியப்பட்ட வாக்குகள் 133,646
செல்லுபடியான வாக்குகள் 93,596 (98.12%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,795 (1.88%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 95,391 (71.37%)

குருனாகலை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 345,769 (55.77%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 248,479 (40.08%)
ரோஹன விஜயவீர (J.V.P) 21,835 (3.52%)
குமார் பொன்னம்பலம் (T.C) 509 (0.08%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 2,594 (0.42%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 792 (0.13%)

பதியப்பட்ட வாக்குகள் 717,505
செல்லுபடியான வாக்குகள் 619,978 (99.13%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,431 (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 625,409 (87.16%)

புத்தளம் மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 128,877 (59.12%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 80,006 (36.70%)
ரோஹன விஜயவீர (J.V.P) 7,001 (3.22%)
குமார் பொன்னம்பலம் (T.C) 817 (0.37%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,040 (0.48%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 239 (0.11%)

பதியப்பட்ட வாக்குகள் 267,675
செல்லுபடியான வாக்குகள் 217,980 (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,995 (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 219,975 (82.18%)

அனுராதபுர மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 117,873 (49.84%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 102,973 (43.54%)
ரோஹன விஜயவீர (J.V.P) 13,911 (5.88%)
குமார் பொன்னம்பலம் (T.C) 222 (0.09%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,148 (0.48%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 396 (0.17%)

பதியப்பட்ட வாக்குகள் 278,594
செல்லுபடியான வாக்குகள் 236,523 (99.04%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,294 (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 238,817 (85.72%)

பொலநறுவை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 59,414 (56.24%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 37,243 (35.26%)
ரோஹன விஜயவீர (J.V.P) 8,138 (7.70%)
குமார் பொன்னம்பலம் (T.C) 228 (0.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 451 (0.43%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 141 (0.13%)

பதியப்பட்ட வாக்குகள் 127,624
செல்லுபடியான வாக்குகள் 105,615 (99.00%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,064 (1.00%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 106,679 (83.59%)

பதுளை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 141,062 (58.62%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 88,642 (36.84%)
ரோஹன விஜயவீர (J.V.P) 7,713 (3.20%)
குமார் பொன்னம்பலம் (T.C) 625 (0.26%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 2,115 (0.89%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 463 (0.19%)

பதியப்பட்ட வாக்குகள் 280,187
செல்லுபடியான வாக்குகள் 240,620 (98.85%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,802 (1.15%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 243,422 (86.88%)

மொனராகலை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 51,264 (49.38%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 44,115 (42.49%)
ரோஹன விஜயவீர (J.V.P) 7,171 (6.91%)
குமார் பொன்னம்பலம் (T.C) 163 (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 882 (0.84%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 226 (0.22%)

பதியப்பட்ட வாக்குகள் 126,558
செல்லுபடியான வாக்குகள் 103,821 (98.53%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,553 (1.47%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 105,374 (83.26%)

இரத்தினபுரி மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 175,903 (50.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 152,506 (44.13%)
ரோஹன விஜயவீர (J.V.P) 11,283 (3.26%)
குமார் பொன்னம்பலம் (T.C) 422 (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,996 (0.58%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 3,494 (1.01%)

பதியப்பட்ட வாக்குகள் 402,202
செல்லுபடியான வாக்குகள் 345,604 (99.02%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,407 (0.98%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 349,011 (86.8%)

கேகாலை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 195,444 (57.02%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 126,538 (36.92%)
ரோஹன விஜயவீர (J.V.P) 13,706 (4.00%)
குமார் பொன்னம்பலம் (T.C) 376 (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 6,184 (1.80%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 514 (0.15%)

பதியப்பட்ட வாக்குகள் 406,548
செல்லுபடியான வாக்குகள் 342,762 (98.69%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,537 (1.31%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 347,299 (85.4%)

முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982 இறுதித் தேர்தல் முடிவுகள்


ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 3,450,811 (52.91%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 2,548,438 (39.07%)
ரோஹன விஜயவீர (J.V.P) 273,428 (4.19%)
குமார் பொன்னம்பலம் (T.C) 173,934 (2.67%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 58,531 (0.90%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 17,005 (0.26%)

பதியப்பட்ட வாக்குகள் 8, 144,995
செல்லுபடியான வாக்குகள் 6, 522,147 (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 80,470 (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 6,602,617 (81.06%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளின் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
3,261,074

குறைந்த பட்ச வாக்குகளை விட ஜே. ஆர். ஜயவர்தனா அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
189,737

இரண்டாம் இடத்தைப் பெற்ற திரு ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களைவிட திரு ஜே. ஆர் அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
902,373

தொடரும்.........

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com