Showing posts with label Manoranjan. Show all posts
Showing posts with label Manoranjan. Show all posts

Monday, February 12, 2024

இந்தியாவிற்கு ஜேவிபி சென்றது இதுதான் முதற்தடவை அல்ல. இந்திய விரிவாக்க கொள்கை கைவிடப்பட்டு தசாப்பதங்கள்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோருடன் பேச்சுவார்த்தைக்காக இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்விஜயத்தின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் ஆகியவை தொடர்பாக கவனம் செலுத்தும் வகையிலான நேர்மறையான மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடத்தப்பட்டதாக கலாநிதி ஜெய்சங்கரின் சமூக ஊடகப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு அனுராவுக்கு என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதா?

தோழர் அநுரகுமார ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) தலைவராகவும் உள்ளார். அவரின் இந்த சமீபத்திய விஜயமானது அரசியல் ஆய்வார்களால் பெரிதும் விவாதிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டாலும், ஜனதா விமுக்தி பெரமுன இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு செயற்பட்டது இதுதான் முதல் தடவை அல்ல. தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யுடன் தொடர்புடையவர்களின் சமூக ஊடகப் பதிவுகள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அநுரவின் வெற்றியின் சாத்தியப்பாட்டிற்கு இந்தியா அளித்த அங்கீகாரமாக இந்த விஜயத்தை அர்த்தப்படுத்துகின்றன. இதற்கு முன்னர் ஜே.வி.பி.யானது போதுமான அளவு பலமான ஒரு அரசியல் சக்தியாக காணப்படாததாலேயே இராஜதந்திரிகள் அதனுடன் பெரிதாக ஈடுபாட்டைக் காட்டவில்லை. தேசிய மக்கள் சக்தியானது குறிப்பாக கீழ் நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகளவு கவனத்தையும், புகழையும், நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளதால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

ரோஹன விஜேவீரவும் நரசிம்மராவை சந்தித்தார்.

நான் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளராகவும் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான பொலிட்பியூரோ உறுப்பினராகவும் இருந்தபோதுதான் இந்திய அரசாங்கத்துடன் ஜே.வி.பி.யின் முதல் தொடர்பு ஏற்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் நாங்கள் நல்லுறவைப் பேணி வந்தோம். எண்பதுகளின் தொடக்கத்தில் திரு.நரசிம்மராவ் இலங்கை வந்தபோது, ​​தோழர் ரோகண விஜேவீரவும் நானும் அவரைச் சந்திக்கச் சென்றோம். அந்தக் காலத்தில் "இந்திய விரிவாக்கம்" என்ற கொள்கையை நாம் கைவிட்டிருந்தோம். அது 1972 இலேயே கைவிடப்பட்ட அக்கருத்து 1984 க்குப் பிறகு ஜனதா விமுக்தி பெரமுனாவால் புத்துயிர் அளிக்கப்பட்டது.

பின்னாளில் ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கிய சோமவன்ச அமரசிங்க போன்ற முன்னணி தோழர்கள் கடும் இந்திய விரோதிகளாக இருந்ததோடு, இலங்கைக்கான இந்திய இறக்குமதிகளை தடை செய்யும் அளவிற்கு சென்றனர். ஆனால் நகைப்பிற்கிடமான காரணம் யாதெனில், தோழர் ஹென்றி விக்கிரமசிங்கவின் தலையீட்டின் மூலம் சோமவன்ச அமரசிங்க இலங்கையை விட்டு தப்பி இந்தியாவிற்குடாவே வெளியேறினார். மிக அண்மையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த தூதர்கள் தேசிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைவர்களை சந்தித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், புவியியல் ரீதியாக இலங்கை இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதால் குறிப்பிடத்தக்க கலாச்சார, பொருளாதார, வரலாற்று, அரசியல் மற்றும் புவிசார் மூலோபாய உறவுகளைப் பேணிவருகிறது. இலங்கை சமூகத்தின் பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது. இன்று, இலங்கைத் தீவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேசத் துறையிலும் இது ஒரு சக்திவாய்ந்த நிலையாக மாறியுள்ளது. இந்தியா வல்லரசாக உருவெடுத்ததைக் கருத்தில் கொண்டு, தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் இந்த யதார்த்தத்தை அங்கீகரித்து, இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதில் அர்த்தமுள்ளது.

"இந்திய விரிவாக்கம்" என்ற கருத்து இனி இல்லை.

அண்மைய ஆண்டுகளில் ஜேவிபி புத்துயிர் பெற்று தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த முன்னணியை ஸ்தாபித்த பின்னர், "இந்திய விரிவாக்கம்" என்ற அரசியல் கோஷத்தை அவர்கள் பயன்படுத்துவதை நான் செவிமடுக்கவில்லை. ஒரு அரசியல் ஆர்வலராக, எனது மாவோயிஸ்ட் காலத்திலிருந்தே தோழர் மாவோ சேதுங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தபோது அவர் முன்வைத்த "இந்திய விரிவாக்கம்" என்னும் கொள்கையுடன் நான் உடன்பட்டேன்.

எனினும், அக்கருத்து இந்திய தொழிலாள வர்க்கத்திற்கோ அல்லது இலங்கையில் வாழும் மலையக தொழிலாளர்களுக்கோ எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக இந்திய முதலாளித்துவத்தினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல், இலங்கையில் உள்ள தமது முதலாளித்துவ சகபாடிகளுடன் சேர்ந்து மலையக மக்கள் என்னும் காரணியையும் வைத்துக்கொண்டு இலங்கையின் மீது அவர்கள் ஏற்படுத்த முனையும் தாக்கங்கள் என்ன என்பதை பற்றி இலங்கையின் உழைக்கும் மக்களுக்கு போதிக்க நாங்கள் விரும்பினோம்.

இந்திய அமைதி காக்கும் படைகள்

1980 களில், குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோதும், இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு ​​ஜே.வி.பி.யின் பலத்த எதிர்ப்பின் பிரதிபலிப்புகள், மற்றும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த பெரும்பாலான பெரிய, சிறிய அரசியல் அமைப்புகள் இலங்கையில் இந்திய தலையீட்டிற்கு எதிரான கருத்தில் இருந்தன என்பதும் இவ்விடத்தில் நினைவுகூரப்படுவது முக்கியமாகும். பௌத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மத பிரதிநிதிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் தற்போதைய பிரதமரின் மக்கள் ஐக்கிய முன்னணி (MEP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் அனைத்து மாவோயிஸ்ட் குழுக்களும் இருந்தன.

அதற்கு ஆதரவாக ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.சி.எஸ் ஹமீட் மற்றும் காமினி திஸாநாயக்க, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி (SLMP), மற்றும் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி (CPC) போன்றவர்கள் இருந்தனர். மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி (LSSP). வடக்கு கிழக்கில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) மற்றும் பல சிறிய அரசியல் குழுக்களும் இருந்தன.

அன்றைய அரசின் பிரதமர் ஆர் பிரேமதாச மற்றும் அவரது கட்சியில் உள்ள ஏனையவர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய அமைதி காக்கும் படையை (IPKF) இலங்கைக்கு அழைத்தவர் ஜனாதிபதி ஜெயவர்த்தன. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த அமைச்சர் காமினி ஜயசூரிய, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவையில் இருந்து விலகினார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு, பிரதமர் ஆர்.பிரேமதாச இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான இயக்கத்தின் தலைவராக ஆனார். அவர் IPKF படைகளை எதிர்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார், இறுதியில் இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தார். பிரேமதாச ஆட்சியின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையின் தலைவராக இருந்தார். கொழும்பில் புறக்கோட்டை போதி மரத்துக்கு அருகில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் IPKF இராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

13வது திருத்தம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் மாறவில்லை.

விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் போரை நடத்திக் கொண்டிருக்க, ஜனதா விமுக்தி பெரமுனா தெற்கில் ஆயுதமேந்திய எதிர்ப்பை ஆரம்பித்த நிலையில், ஜனாதிபதி ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க ஆட்சி தனது அரசியல் பிழைப்புக்காக போராடிக் கொண்டிருந்தது. தேசியப் பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரத் தீர்வை உருவாக்கும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம், இலங்கை அரசின் ஒப்புதலுடன் இலங்கையில் ஏற்பட்டிருந்த மோதல் நிறைந்த சூழ்நிலையில் இந்திய அரசு இராணுவ ரீதியில் தலையிடும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் நாட்டின் ஒற்றையாட்சி அந்தஸ்து மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அங்கீகரித்ததுடன், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டது. ஆனால் இந்திய- இலங்கை ஒப்பந்தம் இலங்கையின் தேசியப் பிரச்சனையை மேலும் மோசமாக்கியது.

ஆயினும்கூட, அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு தேசிய பிரச்சினையில் இந்தியாவின் முக்கிய நிலைப்பாடு மாறாமல் உள்ளது.

இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக மேலிருந்து திணிக்கப்பட்ட ஒன்றாகும். இது இலங்கை மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆலோசனை செயல்முறையின் விளைவாக கொண்டுவரப்பட்டதொன்றல்ல. IPKF இராணுவத்தின் வருகை மற்றும் இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் இந்தியா மேற்கொண்ட தலையீட்டிற்கு எதிராக பல அரசியல் ஸ்தாபனங்கள் காட்டிய எதிர்ப்பை இந்த வகையிலலேயே நாம் புரிந்து கொள்ள முடியும். அதேவேளை இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் நீண்டகால நோக்கிலான ஒரு தீர்வை உருவாக்குவதற்கும் அதனை அமுல்படுத்துவதற்கும் எந்தவொரு உண்மையான, நேர்மையான முயற்சிகளையும் எடுக்காததற்காண பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் நிறுவனங்களும் ஏற்க வேண்டும்.

அறுபதுகளில் இருந்த காலம் இப்போது மாறிவிட்டது .

1983 - 1987 காலப்பகுதியில் "இந்திய விரிவாக்கம்" மற்றும் "இந்திய எதிர்ப்பு" போன்ற அரசியலை புரிந்துகொள்ள அக்காலத்தின் உலகளாவிய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் சொல்நிலைமைகள் பற்றி விவாதிக்காமல் புரிந்து கொள்ள முடியாது. கடந்த காலத்தை மீளப் பார்க்கும் போது அவற்றை நேர்மையாகவும் விமர்சனரீதியாகவும் பார்க்க வேண்டும் எனக் கூறுவதானால், அக்காலத்தில் இருந்த அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளையும் அதே அடிப்படையில் ஆராய வேண்டும். இன்று நாட்டில் நிலவும் விரும்பத்தகாத சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமானது. இருப்பினும், இந்த அத்தியாவசியமான பணியைச் செய்யத் தொடங்குவதற்கு எந்த ஒரு அரசியல் நிறுவனமும் அதற்குரிய தைரியத்துடனும் நேர்மையுடனும் இருப்பதாகத் தெரியவில்லை.

1960 களில், ஜே.வி.பி மட்டுமல்ல, ஏனைய அனைத்து மாவோயிஸ்ட் குழுக்களும் 'இந்திய ஆதிக்க விரிவாக்கம்' என்ற கருத்தை ஏற்றுக்கொண்டன. அந்தக் காலங்கள் மாறிவிட்டன. நவதாராளவாதத்திற்கே உரித்தான இயல்பான அகவயமான இயல்பு காரணமாக, அதன் முக்கிய பங்காளிகள் அனைவரும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஒருவித் ஆதிக்க விரிவாக்க நிகழ்ச்சி நிரலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அத்ததுடன் நடைமுறை அரசியலில், 1960கள், 1980கள் மற்றும் குறிப்பாக 1987 முதல் 2024 வரையிலான பிராந்திய மற்றும் சர்வதேச அதிகார சமநிலையில் ஏற்பட்ட மாற்றங்களை இப்போது கருத்தில் கொள்வது அவசியம்.

சோவியத் யூனியன் தலைமையிலான 'சோசலிச' முகாம் 1989ல் சரிந்தது. சீனா ஒரு புதிய உலகளாவிய இராணுவ மற்றும் பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது. இந்தியாவும் ஒரு பொருளாதார வல்லரசாக மாறி, சர்வதேச அரங்கில் ஒரு முக்கிய சக்தியா மிளிர இருக்க விரும்புகிறது. எனவே, இப்பகுதியில் சீன, இந்திய தலையீடும், சகிப்புத்தன்மை அற்ற நிலையம் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக ஜே.வி.பி எதனை முன்வைக்கிறது என்பது மேலும் தெளிவுபடுத்தபட வேண்டும்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் மாகாண சபைகள் என்பவற்றுக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) எதிர்ப்பு தணிந்துள்ளதாகத் தெரிகிறது. புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் வரை இலங்கையின் அரசியலமைப்பு தளத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக அந்த 13ம் திருத்தத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்தகைய கட்டமைப்புரீதியான, யாப்பியல் ரீதியான மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் எதுவும் செயல்படுத்தப்படுமா என்பது இன்னமும் விவாதத்திற்கு உரியதாகவே உள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அப் பிராந்தியத்தில் இந்தியா வகிக்கும் முக்கிய பங்கை ஜே.வி.பி அங்கீகரித்துள்ளது. எனது பார்வையில், இந்த முற்போக்கான நடவடிக்கைகள் 1980களின் பிற்பகுதியில் அவர்கள் எடுத்த நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. இருந்தபோதிலும், தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக ஜனதா விமுக்தி பெரமுன முன்வைக்கும் விடயம் மேலும் விருத்தி செய்யப்பட்டு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் ஆட்சிக்கு வர விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும் முடிந்தவரை பல நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக உயிர் பிழைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, குறிப்பாக இலங்கை அரசியலில் இந்தியாவும் சீனாவும் வகிக்கும் சக்திவாய்ந்த பாத்திரத்தின் காரணத்தினால் இந்து சமுத்திரத்தில், இலங்கை மக்களின் நலன்களுக்கு ஆதரவான அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றும் அதே வேளையில், இந்த இரண்டு வல்லரசுகளின் போட்டி நிகழ்ச்சி நிரல்களை எவ்வாறு நிர்வகிப்பது, கையாளுவது என்பதை ஆட்ச்சிக்கு வரும் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது கூட்டணியோ கணத்தில் எடுக்க வேண்டும்.

இது அசாதாரணமானத சூழ்நிலைமை அல்ல.

ஒரு தேர்தல் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி பிரபலமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இந்திய வருகையை அந்த அடிப்படையிலேயே கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய மத்திய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியையும் அதன் தலைவரையும் அழைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய அரசாங்கத்தின் கடந்தகால நடைமுறைகளைப் பொறுத்தவரை இது அசாதாரணமானதும் அல்ல. ஒரு ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, தேசிய மக்கள் சக்தியானது தமது கொள்கை உருவாக்கம், சமூக அணிதிரட்டல் மற்றும் பிரச்சாரம் போன்ற துறைகளில் நேரடியாக நுழைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும், ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. பிரச்சனைகள், குறைகள், தவறுகள், கடந்த காலத்தை பார்ப்பதை தவிர்த்தல் போன்றவற்றை தமக்குள் கலந்துரையாடல் செய்து நிவர்த்தி செய்துக்கொள்ளல் வேண்டும். எவ்வாறாயினும், இந்த முக்கியமான வரலாற்று சந்தியில், இலங்கையில் உள்ள முற்போக்காளர்கள் மத்தியில் எந்த ஒரு அரசியல் நிறுவனமும் ஒட்டுமொத்தமாக முழுமையானவை என்று சொல்வதற்கில்லை.

இப்பிராந்தியத்தில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டியைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியை கையாளுவதற்கு சீனாவும் அவர்களை அணுகினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கலாநிதி லயனல் போபகே - Dr. Lionel Bopage
ஜேவிபி இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும்1971ம் ஆண்டு நடத்தப்பட்ட இடதுசாரி ஆயுத கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவருமாவார்.

தமிழில் மனோரஞ்சன்


Read more...

Saturday, September 2, 2023

உழைக்கும் மக்களின் சேமிப்பான EPF/ETF ல் கை வைக்காதே! அவை முதலீட்டுக்கான நிதியங்கள் அல்ல! 28 தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போற்றவறிலுள்ள நிதியினை கடன் மறுசீரமைப்பு என்ற கோதாவில் உறுதியற்ற முறையில் முதலிட்டு, அரசு உழைக்கும் மக்களின் இறுதிகாலத்தை கேள்விக்குள்ளாக்கும் ஆபத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அரசினால் முன்னெடுக்கப்படும் முன்னெச்சரிக்கையற்ற இச்செயற்பாட்டுக்கு தனது எதிர்ப்பினை காட்டும்பொருட்டு நாடுதழுவிய ரீதியில் இயங்கும் 28 தொழிற்சங்கங்கள் கடந்த 28ம் திகதி பாரிய எதிர்பு ஆர்ப்பாட்டத்தினை கொழும்பில் நடாத்தியிருந்தது.

அரச இயந்திரத்தின் பலத்த அடக்குதல்களை தாண்டி இடம்பெற்ற இப்போராட்டத்தின் இறுதியில் 28 தொழிற்சங்கங்களும் இணைந்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை அரசுக்கு வெளியிட்டிருக்கின்றது. அவ்வறிக்கை கீழ்கண்டடவாறு கூறுகின்றது.

கடனை செலுத்தப் போவதாகச் சொல்லி மக்களை ஏமாற்றும் இலங்கை மத்திய வங்கி; எம்முடனான பேச்சுவார்த்தையில் இருந்து அது தப்பியோடியது.

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு என்ற பெயரில் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிகை நிதியம் (EPF/ETF) மற்றும் பிற ஓய்வூதிய நிதிகளுக்கு, அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் சேர்ந்து கூட்டாக செய்யும் நாசகார மக்கள் விரோத செயல் முயற்சிகளுக்கு எதிராக தொழிற் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் என நாம் ஆகஸ்ட் 28 திங்கட்கிழமை நண்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அணிதிரண்டோம்!

எமது கடும் எதிர்ப்பையும் தெரிவித்தோம்!!

எங்கள் கோரிக்கையானது....

EPF/ETF என்பன உழைக்கும் மக்களின் சேமிப்பு நிதியே அன்றி முதலீட்டுக்கான நிதியங்கள் அல்ல...

01. EPF/ ETF மற்றும் பிற ஓய்வூதிய நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு (DDR) என்னும் செயற்பாட்டிலிருந்து முற்றாக விலக்கி வைக்க வேண்டும். உழைக்கும் மக்கள் தமது முதுமைக் காலத்தில் பயன்படுத்த வேண்டிய சேமிப்புப் பணமாக இருப்பது இந்த ஓய்வூதிய நிதிகள் மட்டுமே. அவை இலாபத்தைப் பெருக்கி கொள்வதற்கான சொத்துக்களோ, அல்லது சொத்துக்களைப் பெருக்கிகொள்ளுவதற்காக முதலீடுகளைச் செய்யும் நிதிகளோ அல்ல. ஓய்வூதிய நிதிகள் என்பன ஊழியர்கள் தமது சம்பளத்தில் இருந்தும் உழைப்பில் இருந்தும் சேமிப்பாக மீதப்படுத்திய நிதிகளேயன்றி, தனியார் கடன் வழங்குபவர்களின் முதலீட்டு சொத்துக்களுக்கு சமமானவையாக கருதப்பட முடியாதவை.

வரி ஏய்ப்பாளர்களுக்கு சொந்தமான பிணைப் பத்திரங்களை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்...

02. பெரும்தொகை வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகைககளின் தற்போதைய மதிப்புக்கு ஒப்பீடாக, வரி ஏய்ப்பாளர்களின் பிணைப் பத்திரங்களை வெட்டிக் குறைத்தல் வேண்டும். அவர்களின் வைப்புகளை அரச பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் செலுத்தப்படாத வரிகளின் மொத்தப் பெறுமதி 904 பில்லியன் ரூபாவாகும். பிணைப் பத்திர பதிவுதாரர்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்பட்ட காலத்தின்போதே பெருமளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளதால், அவ்வாறு செலுத்தப்படாத வரிகளின் தற்போதைய மதிப்பு மட்டும் 2 டிரில்லியன் ரூபாய்களைத் தாண்டியுள்ளது. என்வே அரசாங்கமானது EPF மற்றும் ETFகளை இரத்து செய்வதன் மூலம் மீதப்படுத்த எதிர்பார்க்கும் தொகையை விட மூன்று மடங்கு தொகையை, அவ்வாறு வரி செலுத்தாதவர்களின் பிணைப் பத்திரங்களை இரத்து செய்வதன் மூலமும், அவர்களின் வைப்புத் தொகையைப் பறிமுதல் செய்வதன் மூலமும், அடுத்த 16 ஆண்டுகளில் அரசாங்கம் சேமிக்க முடியும். இதன் மூலம் இலங்கையின் வங்கி கட்டமைப்பை பாதிக்காமல் இந்தக் கடன் மறுசீரமைப்பை அவர்களால் செயல்படுத்த முடியும். எனவே EPF, ETF மற்றும் ஓய்வூதிய நிதிகளை தொடாமல் கடன் மறுசீரமைப்புச் செய்ய முடியாது என மத்திய வங்கியும் ரணில் ராஜபக்ச அரசாங்கமும் கூறியிருப்பது அந்த ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதற்காக இட்டுக்கட்டப்பட்ட பொய்க் கதையாகும்.

பொய்யான இன்வொயிஸ்கள் (விலைச்சிட்டை, விற்பனைச்சிட்டை) போட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட 53 பில்லியன் டாலர்களை திரும்பப் பெறுங்கள்.
03. சர்வதேச வர்த்தகத்தில் பொய்யான இன்வொயிஸ்கள் போட்டதன் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட $53 பில்லியன் நிதியை திருப்பி பெறுவதற்கான தடயவியல் கணக்காய்வை (Forensic Audit) நடத்த வேண்டும். 2009 மற்றும் 2018 க்கு இடையில், சர்வதேச வர்த்தகத்தில் பொய்யான இன்வொயிஸ்கள் மூலம், 40 பில்லியனுக்கும் அதிகமான தொகை நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக Global Financial Integrity என்னும் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது. இதன் உண்மையான பெறுமதி 53 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக இந்த நிதியை திருப்பி நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக மத்திய வங்கியானது தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

வாங்கிய கடனை கொள்ளையிட்டவர்கள் இடமிருந்தே அவை மீள அறவிடப்படவும் வேண்டும்.

04. அரசாங்கத்தினால் பெறப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன்கள் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட வேண்டும். மற்றும் அந்தக் கடன்களில் நெறிமுறைகளுக்கு விரோதமாக கொடுக்கப்பட்ட கடன்கள் (Odious Debt) எவை என பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும். 2017ஆம் ஆண்டு வரை அரசாங்கம் பெற்றுள்ள வெளிநாட்டு திட்டக் கடன்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் எஞ்சிய உள்நாட்டு சொத்துக்களின் பெறுமதி கணிசமான அளவு குறைந்துள்ளதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊழல் நிறைந்த ஒரு அரசியல் கட்டுமானத்தையும், அரச அதிகாரத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட கூட்டுக் களவாணி வணிக பிரபுக்களையும் வளப்படுத்தி சொகுசுப் படுத்துவதற்காகவே வெளிநாட்டுக் கடன்கள் பெருமளவில் கையாடப்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய இராட்சியத்தின் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுக் கடனைத் தங்கு தடையின்றி துஷ்பிரயோகம் செய்ததற்கான பரவலான சான்றுகள் இருக்கும்போது, அவற்றை நிரூபிப்பதற்கான பொறுப்பும் அந்த கடன் வழங்கியவர்களுக்கே உரியது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் கடன் பணத்தை முறைகேடாக கையாடிய அல்லது முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்தே அவற்றை திரும்பப் பெற வேண்டும், மாறாக அவர்களின் ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து அல்ல. உலகெங்கிலும் உள்ள 182 புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் கையெழுத்திட்டு அண்மையில் வெளியிடப்பட்ட இது தொடர்பான விஞ்ஞாபனமும் இலங்கையின் கடன் இரத்து தொடர்பான எங்களின் நிலைப்பாட்டை மேலும் ஆதரிக்கிறது.

BOI நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் நீக்கப்பட வேண்டும்.

05. முதலீட்டு சபையின் கீழ் இயங்கும் (BOI) நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளை உடன் இரத்து செய்ய வேண்டும். இந்த வரிச் சலுகைகளை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிக்கை விடுத்த போதிலும் முதலீட்டு சபையின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிரவும், அனைத்து BOI நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட வரியில்லா இறக்குமதி சலுகைகளை திரும்பப் பெறுமாறு அரசை நாம் வலியுறுத்துகின்றோம். 1990களின் நடுப்பகுதியில் இருந்து வரி விகிதமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22% இலிருந்து தற்போதைய 9% ஆக வீழ்ச்சியடைவதற்கு இந்த நிலைமையே நேரடியாக பங்களித்துள்ளது. எனவே, முதலீட்டு சபையின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள இந்த வரிச்சலுகைகளை நீக்கினால், அரசின் வரி வருவாய் கணிசமாக அதிகரிக்கும்.

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை மத்திய வங்கிக்கு எந்த அக்கறையுமில்லை ... கடந்த சில மாதங்களாக எம்மைப் போலவே பல தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் இலங்கை மத்திய வங்கியுடன் உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றது. ஆனால், ஓய்வூதிய நிதியை உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தும் முடிவு எடுக்கப்பட்ட தருணத்திலிருந்து, இலங்கை மத்திய வங்கி உழைக்கும் மக்களுடனோ அல்லது அவர்களது பிரதிநிதிகளான தொழிற்சங்கங்களுடனோ பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. அத்துடன், ஜூலை 25ஆம் திகதி, நாங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் போது, தொழிற்சங்கத் தலைவர்கள் மத்திய வங்கியைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

மத்திய வங்கி இந்த மோசடியை இனிமேலும் தொடர அனுமதிக்க முடியாது...

இலங்கை மத்திய வங்கி ஆரம்பத்தில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு பற்றிய விவாதத்தை துறைசார் (டெக்னிகல்) கரணங்களுக்குள் மறைத்து மக்களை தவறாக வழிநடத்தி அந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தது. நாங்கள் உட்பட பல தரப்பினரின் எதிர்ப்புகள், கருத்துக்கள் மற்றும் ஆவண அதாரங்கள் காரணமாக மத்திய வங்கியால் அந்த மோசடியை மேலும் தொடர முடியாமல் போய்விட்டது.

எமது போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 28ம் தேதி, பழைய பாணியிலேயே, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கவும், கலைக்கவும் நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டது. இந்த தடை உத்தரவின்படி, மத்திய வங்கி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்குகூட பல தொழிற்சங்க தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு, எங்கள் மீது தண்ணீர் பீரங்கி, தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீச போலீசார் அழைக்கப்பட்டனர். அதற்கும் மேலதிகமாக ஆயுதப்படைகளும் அழைக்கப்பட்டிருந்தன.

எம்மில் 40 அமைப்புகள் இருந்தபோதும் 5 பிரதிநிதிகளை மட்டுமே உள்ளே வரச் சொன்னார்கள்.

எவ்வாறாயினும், மத்திய வங்கியுடன் நீண்டகாலமாக நாம் கேட்டிருந்த கலந்துரையாடலுக்கான கோரிக்கையை மீண்டும் ஒருமுறை முன்வைத்தோம். இதன்படி, ஆர்ப்பாட்டத்தின் போது ஐந்து பிரதிநிதிகளுக்கு மாத்திரமே கலந்துரையாடலுக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பொலிஸ் அதிகாரிகள் ஊடாக அறிவித்தனர். அதன் முலம், 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் பரந்துபட்ட தன்மையை அது புறக்கணித்தது.

20 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினருடன் கலந்துரையாடலுக்கு அனுமதி கோரினோம். மத்திய வங்கி அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

அதன் பிரகாரம், நாங்கள் கலந்துரையாடலுக்குத் தயாராக உள்ளோம் என்றும், எமது பிரதிநிதிகள் 20 பேர் மத்திய வங்கி ஆளுநரை சந்திப்பதற்கு வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். அதனை ஏற்றுக்கொண்ட மத்திய வங்கியின் பிரதிநிதிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரை உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடலை கூட்டுவதாக உறுதியளித்தனர். அந்த கலந்துரையாடல் நடத்தப்படும் வரை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து முடிவு எடுக்கப்படாது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, எங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ள நாம் ஒப்புக்கொண்டோம்.

அந்த கலந்துரையாடலுக்கு நாம் தயாராக இருக்கிறோம்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக மட்டுமே நாம் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்பதல்ல. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மூலம் நாட்டிலிருந்து பெருமளவிலான நிதி மூலதனம் வெளியேறுவது குறித்தும் நாங்கள் எழுப்பிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் நாங்கள் கடந்த ஆண்டு மத்திய வங்கியிடம் அவகாசம் கேட்டிருந்தோம். ஆனால் மத்திய வங்கி அதைத் தவிர்த்தது. அத்துடன் ஊழியர்களின் சேமலாப வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினையில் உழைக்கும் மக்களுடன் இணைந்து பணியாற்றுமாறு மத்திய வங்கியை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம்.

ஆனாலும் மத்திய வங்கியானது, ஓய்வூதிய மற்றும் சேமலாப நிதிகளைப் பயன்படுத்தி கடன் மறுசீரமைப்பினைச் செய்வதன் மூலம் ஏற்படப் போகும் மோசமான தாக்கம் குறித்து பெரும்பாலான உழைக்கும் மக்களை இருட்டில் வைத்திருக்க அது மிக சிக்கலான டெக்க்னிகல் காரனங்களை முன்வைக்கும் ஒரு அணுகுமுறையை தொடர்ந்தும் பின்பற்றுகிறது. நமது சேமிப்பை அழிக்கும் மத்திய வங்கியின் முயற்சிகளுக்கு சவால் விடும் வகையில் தொழிற்சங்கங்கள் போராட எழுந்தபோது மத்திய வங்கி பொலிஸை அழைத்தும், நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றும் மிக கோழைத்தனமான அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொழிற்சங்கங்களுக்கு தீங்கு விளைவித்து, போராட்ட நடவடிக்கைகளை அவமானப்படுத்தியது மிக வெட்கக்கேடானது.

எம்மை ஏமாற்றவும், கொள்ளையடிக்கவும் இடமளியோம்!

எங்களின் சேமிப்பை கொள்ளையடிக்கும் இலங்கை மத்திய வங்கி மற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்க தொழிற்சங்கங்களைச் சுற்றி அணிதிரளுமாறு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிய உறுப்பினர்கள், மற்றைய ஓய்வூதிய நிதி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை அழைக்கிறோம்!

ஏமாற்றவும் கொள்ளையடிக்கவும் இடமளிக்க மாட்டோம்!

வெற்றி உழைக்கும் மக்களுக்கே!

ஆகஸ்ட் 28 போராட்டத்தை ஏற்பாடு செய்த தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூடமைப்பு.

தமிழில் மனோரஞ்சன்



Read more...

Monday, June 6, 2022

வெடிக்கும் நிலையிலுள்ள எரிமலைமீது வீற்றிருக்கின்றோம். 10 வருடங்களுக்காவது வரப்பிரசாதங்களை தியாகம் செய்யுங்கள்.

இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையில், அரச சேவையின் சுமையினை தாங்க முடியாத நிலைக்கு நாடு வந்துள்ளதாகவும், எதிர்கால சந்ததியினராவது இந்நாட்டில் வாழக்கூடியதோர் நிலை உருவாக வேண்டுமாகவிருந்தால் இன்று நாட்டிலுள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து அரச ஊழியர்கள் வரை அனைவரும் தாங்கள் அனுபவித்து வருகின்ற வரப்பிரசாதங்களை குறைந்தது 10 வருடங்களுக்காவது தியாகம் செய்ய முன்வரவேண்டுமென வேண்டுதல் விடுத்துள்ளார், திவால் என தன்னை அறிவித்துக்கொண்டுள்ள இலங்கையின் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக பதவியேற்றுள்ள மாயாதுன்ன.

கடந்த 29 ம் திகதி இடம்பெற்ற அரச சேவையாளர்கள் சங்கத்தின் நிகழ்வொன்றில் பேசிய அவர், மொத்த அரச சேவையாளர்களின் எண்ணிக்கை 15 லட்சங்களை தாண்டிச் சென்று விட்டதென்றும் இலங்கையின் அரச சேவையாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திலிருந்து 8 லட்சத்திற்கு மேலே செல்லும் பட்சத்தில் ஏற்படக்கூடிய ஆபத்தினை 2004 ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியின் செயலாளருக்கு தான் எழுதிய கடிதத்தில் எச்சரித்ததாக நினைவுகூர்ந்த அவரது பேச்சின் மொழிபெயர்ப்பு கீழே தரப்படுகின்றது.

இந்த நாட்டில் உங்களுக்கு வாழமுடியாத வகையிலான அரச நிர்வாகமொன்றை உருவாக்கித்தந்த முன்னோர்கள் என்ற வகையில், நான் உங்களிடம் முதலில் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும். இன்றைய நிலையில் எமது அரச நிர்வாகத்தில் இருக்கின்ற இடைநிலை ஊழியர்களிலிருந்து அதற்கு கீழுள்ள சகல ஊழியர்களும் நாளாந்தம் வேலைக்கு வருவதே பாரிய பிரச்சினையாகியிருக்கின்றது. தை மாதத்தில் போக்குவரத்திற்கு பத்தாயிரம் செலவழித்தவர்கள் மார்ச்மாதமளவில் 15000 ரூபா செலவுசெய்யவேண்டியாகி இன்று அது இருபது இருத்திஐயாயிரம் வரை உயர்ந்துள்ளது.

40 ரூபா கொடுத்து பொதுப்போக்குவரத்தில் வந்த எமது காரியாலயங்களிலுள்ள சிற்றூழியர்கள் இன்று 120 லிருந்து 150 ரூபா வரை கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களது போக்குவரத்து செலவினையும் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் வருடத்திற்கு ஒருமுறையாவது தொழிலுக்கு வருவதற்கு ஒரு புதிய ஆடையையோ, பாதணியையோ கொள்வனவு செய்யமுடியுமா என்பது சந்தேகமே.

இது இவ்வாறிருக்கும் சூழ்நிலையிலும்கூட நான் நேற்று சில அமைச்சர்களுடன் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தபொழுது, அரச சேவையில் இருப்பவர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படுவதாக பேசப்பட்டது. இந்த செய்தியை வெளியிட்டு இன்று நாட்டில் எவ்வித சம்பளமும் எடுக்க முடியாமல் இருப்பவர்களிடம் எங்களையும் அடிவாங்க செய்யாதீர்கள் என்று அவ்விடத்தில் நான் கூறினேன். அத்துடன் முடிந்தால் அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து செலவிற்கு உதவும் வகையில் ஏதாவது சலுகையை பெற்றுக்கொடுக்கமுடிந்தால் உதவியாக இருக்குமென்றும் கூறினேன்.

எங்கள் எல்லோருடைய மனச்சாட்சியின் உணர்வுகளில் ஏற்றத்தாழ்வுகள் பலவாறு இருக்கலாம். ஆனால் முப்பது வருடங்களோ அதற்கு மேலோ அரச நிர்வாக சேவைகளில் நாங்கள் இருந்திருப்போமேயானால் நாங்களும் ஏதோவொரு வகையில் இன்றைய நிலைக்கு பொறுப்புக்கூறியேயாக வேண்டும். அதிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும். நாங்கள் இங்கே பேசுகின்ற விடயங்கள் எல்லாவற்றையும் விரும்பியோ விரும்பாமலோ, இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தியேயாகவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

ஏனென்றால் அடுத்துவரும் ஓரிரு மாதங்களில் இந்த நாடு அதாள பாதாளத்தை நோக்கி விழத்தான் போகின்றது. ஏனெனில் இம்முறைக்கான சிறுபோக விளைச்சல் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையிலிருந்து சாதரண நிலைக்கு தூக்கி நிறுத்த முடியும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் எம்மிடமில்லை. வேறுகாலங்களாக இருந்தால் ஆகக்குறைந்தது பக்கத்து நாடுகளிலிருந்தாவது உணவை பெற்றுக்கொண்டிருக்க முடியும். கடனாகவோ அல்ல பிச்சையாகவே பெற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் இன்று எமது நிலை அப்படியில்லை. பங்களாதேஷ; போன்ற ஒரு நாட்டின் உபரி உற்பத்தியாக இருக்கின்ற ஐந்து வீத உற்பத்தியானது, எமது நாட்டின் மொத்த உற்பத்திக்கு சமன் என்ற நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.

இன்று உலகத்தின் எல்லா நாடுகளிலும் உணவுற்பத்தி விகிதாசாரம் வீழ்சியடைந்துவருகின்ற காலம். நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே உணவுத்தட்டுப்பாட்டு நிலை உருவாகியிருக்கின்றது. இன்னும் பல நாடுகள் அதை நோக்கி பயணித்துக்கொண்டும் இருக்கின்றது. எமது நாட்டில் சிறுபோக உற்பத்தியாளர்கள் 50-55 வீதத்தினரே தற்போது வயலில் சேற்றுக்குள் காலை வைத்திருக்கின்றார்கள். ஆகவே எமது உணவு நெருக்கடி என்பது மிக கடுமையாக இருக்கப்போகின்றது என்பது வெள்ளிடைமலை.

இந்த நெருக்கடி நிலையை இன்று இந்த மண்டபத்தில் அமர்ந்திருக்கின்ற இளம் சமூகத்தினாரால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் எம்மை போன்ற 50 களிலும் 60 களிலும் பிறந்தவர்களுக்கு ஒரு றாத்தல் பாணை வாங்குவதற்கு பேக்கரிகள் முன்பாகவும் , புதிய ஆடையொன்றை தைப்பதற்கு துணிவாங்குவதற்கு கூட்டுறவு சங்ககடைகளின் முன்னால் பங்கீட்டு அட்டையுடனும் வரிசைகளில் நின்றது நினைவிருக்கின்றது. இதற்கு பிற்பட்ட இன்னொரு காலமிருந்தது, சிவில் யுத்தம் நடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் ஒருபோத்தல் மண்ணெண்ணை 800 -1000 ரூபாவிற்கு வாங்க வேண்டிய நிலையும் சாப்பிடுவதற்கு மூன்று நேர உணவு இல்லாத நிலையும் நிலவியது. நாம் இன்று எமது கையிலிருக்கும் கடனட்டைகளுக்கு கூட எந்தவித பெறுமதியுமற்றுப்போகும் நிலையை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இன்னும் சில நாட்களில் எரிபொருளுக்காக வரிசையிலே நின்று எரிபொருள் கிடைக்காமல் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு நடந்துவரும்காலம் எம்முன்னேயுள்ளது. எம் எல்லோரினது வீட்டிலும் ஆகக்கூடியது 10 கிலோ அரிசி மட்டுமே வைத்திருக்கக்கூடிய நிலை உருவாகும். அப்படி அரிசி முடிகின்ற நேரத்தில் ஒன்று இரண்டு மூன்று என ஒவ்வொரு கடையாக சென்று அங்கும் அரிசி கிடைக்காமல் திரும்பி வரவேண்டிய நிலை உருவாகும். மேல் மாகாணத்திற்கு தேவையான அரிசி பாவனையில் 10 வீதம் கூட மேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. 90 வீதமான அரிசி வெளியிலிருந்துதான் வந்தாகவேண்டும். நாம் அமர்ந்திருப்பது வெடிக்க தயாராக இருக்கும் எரிமலையில் மீது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த வகையில் நேற்று அமைச்சர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் அரச ஊழியர் சங்கத்தினால் முன்மொழியப்பட்டு முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் அச்சங்கமானது முழுமூச்சாக தன்னை ஈடுபடுத்திக்கொள்வற்கு தயார் என அறிவித்தனை நான் இங்கு மகிழ்சியுடன் அறியத்தருகின்றேன்.

எனவேதான் 15 லட்சத்திற்கு மேற்பட்டிருக்கின்ற அரச ஊழியர்கள் அனைவரும், தாம் இருக்கும் உத்தியோகபூர்வ இல்லங்களிலோ அல்லது சொந்த இல்லங்களியோ ஒரு சிறுதுண்டு மரவள்ளித்தண்டையும் வற்றாளைக்கொடியின் சிறுதுண்டையும்கூட வீணாக்காமல் குறுகியகாலப்பயிராக ஊண்டுவோமென உறுதியெடுக்கவேண்டும். அப்படியானால் மட்டுமே எதிர்வரும் நெருக்கடியின்போது மூன்று நேர உணவு அல்லது இரண்டுநேர உணவு அதுவும் முடியாவிட்டால் ஒரு நேரத்திற்கு ஒரு கறியும் சோறுமாவது உண்ணும் நிலையில் இருப்போம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதுதான் நாம் முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்ற நெருக்கடியின் உண்மையான நிலைமையாகும்.

இந்த நிலைமை புரியவில்லையானால் அவர்கள் எந்தவிதமான அறிவாற்றலும் அற்றவர்களென்றே கணிக்கப்படவேண்டும். மூன்று நான்கு மாதங்களுக்கு முன் அல்லது ஒரு வருடத்திற்கு முன்னர் காலையில் ஒரு கோப்பை பால்குடித்த நாம், அதை இன்று எமது பட்டியலிலிருந்து நீக்கியுள்ளோம். பாண் எமது பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. மாலையில் வேலைமுடிந்து போகும்போது சிற்றுண்டியொன்றை வாங்கிச்செல்வது எமது பட்டியலிலிருந்து நீங்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியானது படிப்படியாக நெருக்கி கசக்கி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு எம்மை கொண்டுவந்துள்ளது. இது இதையும் தாண்டி இன்னும்போகும். வரவர நெருக்கடி கூடியே தீரும். எனவே நாம் இவ்விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

ஆனால் எங்களைப்போன்றவர்களுக்கு இது புத்தியில் உறைக்கவேண்டுமென்றால், இவ்வாறான அனர்த்தம் நிகழவே வேண்டும். இல்லாவிட்டால் ஒருபோதும் திருந்தாத நாடு இது. இந்த மிக நெருக்கடியான காலகட்டத்தில் ஆகக்கூடியது 15 அமைச்சர்களுடன்கூடிய ஒரு நிர்வாக கட்டமைப்பில் அடுத்த ஆறு மாதத்திற்கு முன்நோக்கி போகலாம் என்பதுதான் எனது நம்பிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. எங்களைப்போன்றவர்கட்கு மேலதிக செயலாளர்கள் நிலைக்குப்போவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆறு மாத காலமோ அல்லது ஒரு வருடகாலமோ அல்ல 6 வருடகாலமாயினும் இந்நாடு திருந்துமாக இருந்தால் எம்மால் அதனை தாங்கிக்கொள்ள முடியும்;. இந்த நாட்டை தூக்கி நிறுத்த முடியுமாக இருந்தால் நாம் இந்த பதவிகளை விட்டுப்போய் இதற்கு வேறுயாராவது வந்தாலும் பிணக்குகள் இல்லை. எது எப்படியோ, இந்த சிக்கலான அவசரமான சூழ்நிலைக்கு முகம்கொடுப்பதற்கென்றே ஒரு அவசரகால திட்டத்தை நாம் தயாரித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் எம்மால் இதற்கு முகம்கொடுக்க முடியாது. சகல வரப்பிரசாதங்களையும் பின்போடத்தயாராக வேண்டும். உதாரணத்;திற்கு நேபாளத்தில் பின்பற்றப்பட்டதுபோல் தனிநபர் வருமானம் வருடமொன்றுக்கு பத்தாயிரத்தை எட்டும்வரை எவருக்கும் சம்பள உயர்வுகளோ நலன்களோ வழங்கப்படமுடியாது, கேட்கப்படமுடியாது என்ற நிலைக்கு நாம் வந்தேயாகவேண்டும்.

இன்று உங்கள் கையியுள்ள சொத்துக்களின் பெறுமதி வெறும் கடதாசித்துண்டுகளே. எனவே நாட்டின் தனிநபர் வருமானம் வருடமொன்றுக்கு பத்தாயிரம் என்ற நிலைக்கு கொண்டுவந்ததன் பின்பே இவை வழங்கப்படலாம் என்பதே ஜதார்த்தம். எனவே இந்த மீள்சீரமைப்பு நிகழ்சிநிரலின் கீழ் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் , பாராளுமன்றத்தில் தொடங்கி பிரதேச சபை மந்திரிகள் வரை மற்றும் அமைச்சின் செயலாளர்களில் தொடங்கி அவர் கீழிருக்கும்; சகல ஊழியர்கள் வரைக்கும் நீங்கள் ஏதாவது வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள மனதில் நினைத்திருந்தால் அதனை பத்துவருடங்களுக்கு பின்போட்டுக்கொள்ளுங்கள். அது மட்டுமன்றி சகலரும் இந்த பொது நிகழ்சிநிரலுக்குள் பணியாற்ற தயாராகவேண்டும். அதாவது அரச பணியில் எந்த தரத்திலிருக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் தங்களுக்குரிய வரிகளையும் , தங்களுடைய மின்சாரம்-நீர் பாவனைக்குரிய கட்டணங்கள் வரை சகலவற்றையும் உரியநேரத்தில் தவறாது செலுத்தவேண்டும்.

இது கேளிக்கைகளுக்கு செலவுசெய்யும் காலமும் அல்ல. சகல தொழல்சார் நிறுவனங்களும், நிபுணர்களும், சங்கங்களும் இந்த நிலைமையை இதயசுத்தியோடு திரும்பி பார்த்து இந்த அர்ப்பணிப்பை செய்யத்தாமாகவே முன்வருவதாக முன்மொழியவேண்டும். அப்படி இல்லாவிட்டால், அரச சேவையில் இருக்கின்ற நாமும் தெருவிலே மக்களிடம் உதை வாங்கவேண்டிவரும். இன்று நாடு ஓலமிட்டு வேண்டி நிற்கும் மீள்சீரமைப்பைப்பற்றித்தான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கின்றேன். இதை இந்த நாடு நீண்டகாலமாக வேண்டி நிற்கின்றது.

எம்மளவுக்கு படித்த , விடயங்கள் தெரிந்த ஆனால் எம்மளவுக்கு பொறுத்துப்பொறுத்துப்போகும் வழும்பல் சமூகத்தை வேறெங்கும் காணமுடியாது. எனவே நாங்கள் பொறுத்திருந்தது போதும்! தொழில்சார் நிபுணர்கள் என்ற வகையில் நாம் இன்று கடுமையாக அழுத்திக்கூறவேண்டியது யாதெனில், உடனடியாக இந்த சீரமைப்பு திட்டங்கள் யாவும் சட்டமாக்கப்படவேண்டும். ஏனென்றால் இலங்கையில் வாய்கிழியப்பேசி உருவாக்கப்படுகின்ற தேசிய கொள்கைகத்திட்டங்கள் யாவுமே இறுதியில் குப்பைக்கூடத்தில் வீசப்படுவதைத்தான் நாம் பார்த்து வந்திருக்கின்றோம், பொறுத்து வந்திருக்கின்றோம். எனவே, இவை சட்டமாக்கப்படவேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளின் நலன்கள் சலுகைகள் அனைத்தும் பாராளுமன்ற சட்டத்திற்கூடாக வரையறுக்கப்படவேண்டும். அரசாங்கத்தால் அனைத்து சட்டங்களும் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்றப்படமுடியாதவாறு கொள்கையாக பிரகடனப்படுத்தப்படவேண்டும். படுமோசமான, எந்தவித பொறுப்புமற்று அபிவிருத்தித்திட்ட கொள்கைவகுப்புக்கள், நிர்வாக கட்டமைப்பு , ஆட்சேர்ப்பு போன்ற நீண்டகால அதிகார துஷ்பிரயோகத்தின் பிரதிபலனையே நாங்கள் இன்று அனுபவிக்கின்றோம். இன்று அரச சேவையின் சுமையினை தூக்க முடியாத நிலைக்கு இந்த நாடுவந்திருக்கின்றது. இதற்கு பரிகாரம்தேடுவதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டியதில்லை.

2004ம் ஆண்டளவில் அரச நிர்வாக சேவை அதிகாரியாக இருந்த பொழுது பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குக்கும் விடயத்தில் அன்றிருந்திருந்த ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் , இவர்களுக்கு பத்தாயிரம் ரூபாவினை மாதமொன்றுக்கு வழங்கி அவர்களை வேறெங்காவது தொழில்புரிய பணிக்குமாறு அலோசனை வழங்கினேன் என்பது இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது . அதற்கு காரணம் அன்று அறுபது ஆயிரம்பேரை அரசசேவையில் இணைத்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சியானது நான் ஓய்வுதியம் செல்லும்போது எனக்கு ஒய்வூதியம் கிடைக்காது என அச்சப்பட்டேன். அது இன்று நிஜமாகி, நேரடியாக முகம்கொடுத்து நிற்கின்றேன். இந்த அரச வேவையானது ஐந்து லட்சத்திலிருந்து ஆகக்கூடியது எட்டு லட்சமாக இருந்தால் மட்டுமே சாத்திமாக இருக்கும் என்பது அன்றே எனக்கு புரிந்துகொள்ளக்கூடியாதாக இருந்தது. இன்று எம்கண்முன்னே அந்த ஆபத்து நிதர்சனமாகியுள்ளது.

இன்று ஓய்வூதியம் பெறும்ஒருவர் வெறுமனே ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் எதுவுமின்றி வெறும் ஓய்வூதியம் பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். இன்று இந்த ஊக்குவிப்பு பணத்தை யாரிடம் போய்க்கேட்கப்போகின்றீர்கள். அங்கே அலுவலகத்தில் அமர்ந்திருக்கின்றவர்களிடம் ஊக்குவிப்பு பணம் கொடு என்றா கேட்கப்போகின்றீhகள்? வெளியே தொழிற்சங்கங்கள் கோஷமிடுகின்றார்கள் என்பதற்காக பணத்தை கொடுப்பதற்கு அந்த ஊழியரிடம் பணமேதுமில்லை. சம்பளஉயர்வு கோரிக்கை வந்தவுடன் வங்கிகளில் ஓவர்ட்றாப்பில் பணத்தை பெறுவது, பின்னர் வங்கிகளின் பணத்தை கொடுப்பதற்காக பணத்தை அச்சடிப்பது போன்ற கோமாளித்தனத்தை தொடர்ந்து செய்யமுடியாது. எனவே இந்த தசாப்பதம் என்பது அனைவரும் தியாகங்களை மேற்கொள்ளவேண்டிய தசாப்தமாகும்.

இன்று சகல பன்சலைகளும் , கோவில்களும், பள்ளிகளும் , தேவாலயங்களும் வழிபாடுகளை நிறுத்திவிட்டு நிலத்தை கொத்தி விவசாயம் செய்யவேண்டும். சகல பாடசாலைகளும் சகல ஆசிரியர்-பெற்றோர் சங்கங்களும் விவசாயம் செய்யவேண்டும். சுகல அரச நிறுவனங்களும் விவசாயம் செய்யவேண்டும். கடந்த காலத்தில் தலைக்குள் கொண்டுதிரிந்த பாழாய்ப்போன எண்ணங்களை தூக்கி வைத்துவிட்டு நேரமில்லை , எரிபொருள்இல்லை , உடலை வளைக்க முடியவில்லை என்று சொல்லிக்கொண்டிராமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். இதை உங்களால் செய்ய முடியாது விட்டால் உங்களுக்கு அருகிலுள்ள ஒருவருக்கு அந்த நிலத்துண்டை கொடுங்கள் எதாவது விதைக்கட்டும்.

அடுத்ததாக தங்களுக்கான மேலதிக நலன்களை 10 வருடங்களுக்கு பின்போடுமாறு எல்லோம் இணைந்து முன்மொழியுங்கள். தொழிற்சங்கங்கள் உட்பட சகல சங்கங்களும் முழுமையாக ஒரு றாத்தல் இறைச்சியைத்தாருங்கள் என கோரிக்கை வைக்கக்கூடிய காலமல்ல இது. எனவே இந்த நாட்டை சீரமைத்து தூக்கி நிறுத்த வேண்டுமென்றால், தூக்கிநிறுத்திய மாபெரும்பணியில் பங்காளர்கள் ஆகவேண்டுமென்றால் ஆகக்குறைந்தது பத்துவருடங்களுக்கு எமது நலன்களையும் நேரத்தையும் தியாகம் செய்யவேண்டியவர்களாகவுள்ளோம். அப்படியானால் மட்டுமே ஆகக்குறைந்தது எதிர்காலசந்ததியினராவது இந்த நாட்டில் தலை நிமிர்ந்து சுயகௌரவத்துடன் வாழமுடியும். எனவே நாம் இன்று ஆரம்பித்திருக்கும் இந்த நற்பணியில் கைகோர்த்து கொள்வோம்.

தமிழாக்கம் மனோரஞ்சன்


Read more...

Saturday, May 7, 2022

யார் அவர், அவர் என்ன செய்கிறார்...? Who is she, What is he doing...?

பெயரால் அவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். இலங்கையில் ஐந்து முறை பிரதமராக இருந்த அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராவார். மிக விரைவில் அவர் ஆறாவது பிரதமராகி தனது உலக சாதனையை தானே முறித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

2020 பொதுத் தேர்தலில் இலங்கையின் முதலாவதும் மிகப் பெரியதும் என்று அறியப்பட்ட அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியை சுடுகாட்டை நோக்கி வழிநடத்திய புகழிழந்த தலைவர் என்ற கண்டனத்துக்கு உள்ளாகிய தலைவரும் ரணில் விக்ரமசிங்கவே ஆவார். .

ஏதோ தட்டுத்தடுமாறி தேசியப் பட்டியல் மூலம் தேர்தல் முடிந்து சில மாதங்கள் கழிந்த பின்னரே பாராளுமன்றத்திற்குள் நுழைந்து கொண்டார் அவர். அவரது புதிய டீல் பற்றிய சில விஷயங்களை பேசுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

ரணில் விக்ரமசிங்கதான் ஆசியாவிலே இருக்கும் மிகத் திறமையான அரசியல் டீல்காரன் என்பது அவரை நன்கறிந்த பலருக்கும் தெரிந்த விடயம். பசில் ராஜபக்சவும் ஒரு நல்ல டீல்காரன் தான். ஆனால் வித்தியாசம் யாதெனில் அவருடைய டீல்கள் எவ்வளவு டாலர்கள் கைமாறுகின்றது என்பதைப் பொறுத்தே நிறைவேறும். ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் டீல்கள் அதிகாரத்திற்காகவே நிகழும். அவரது புதிய டீல் ஆனது பலருக்கு தெரியாது ஆனால் மிகவும் ஆபத்தான டீல் ஆகும்.

இக்குறிப்பிட்ட டீல் இல் நான்கு தரப்பினர்கள் உள்ளனர். அமெரிக்கா, இந்தியா, மிலிந்த மொரகொட மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உள்ளடங்குவர். இந்த நகர்வுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு. இந்த டீலுக்கான நகர்வு முதலில் ஆரம்பமானது 2002ம் ஆண்டிலாகும். அப்போது அதை Regaining Sri Lanka (இலங்கையை மீட்டெடுப்போம்) என்ற பெயரில் அது அழைக்கப்பட்டது.

ஆனால் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு இதனைச் நோக்கி செயற்படுவதற்கு போதிய காலம் அன்று இருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா தன்னிடமிருந்த அதிகாரத்திக்கொண்டு அவரது அரசாங்கத்தை 2004 கடைசியில் கலைத்து தேர்தலொன்றை நடத்தினார். அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க சிறிதளவான ஆசனங்களின் எண்ணிக்கையில் தோல்வியடைந்ததால் எதிர்க்கட்சிக்கு தள்ளப்பட்டார். எனவே Regaining Sri Lanka (இலங்கையை மீட்டெடுப்போம்) திட்டத்தை அப்போது அவர் செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தார்.

2005ல் மகிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்ததும் Regaining Sri Lanka (இலங்கையை மீட்டெடுப்போம்) திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டமானது 2015-2019 ஆண்டு மைத்ரீபால - ரணில் ஆட்சிக்க் காலகட்டத்தில் MCC ஒப்பந்தம் என்ற பெயரில் மீண்டும் களத்தில் இறக்கப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக அரசியல் கட்சிகள் , சிவில் அமைப்புகள், தொழில்சார் அமைப்புகள் கடுமையாகக் குரல் கொடுத்ததால் அதனை மீண்டும் கிடப்பில் போட நேர்ந்தது.

எனினும் 2019 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் உடதும்பர காஸ்ஸப்ப என்ற ஒரு பெளத்த பிக்கு சுதந்திர சதுக்கத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததோடு, அப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்த கோத்தாபய ராஜபக்சவிடம் அந்த MCC ஒப்பந்தத்தில் கையொப்பமிட மாட்டேன் என்ற எழுத்துமூல வாக்குறுதி ஒன்றையையும்கூட பெற்றுக்கொண்டார். அது அவர்களின் தேர்தல் அரசியலுக்கான சுத்துமாத்து வேலையாக இருந்தாலும் பெளத்த பிக்கு தெரிந்தோ தெரியாமலோ அதற்குள் அகப்பட்டார். அவருக்கு நாம் சொல்லக்கூடியது அன்று நிறுத்திய இடத்திலிருந்து உண்மையான உண்ணாவிரதத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகுங்கள் என்பதாகும்.

ரணில் விக்ரமசிங்க மட்டுமே இன்று அரசாங்கத்தின் ஒரே ஒரு மீட்பராக இருக்கின்றார். கடந்த சில நாட்களில் பாராளுமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் உற்று நோக்கும்போது அவரே இன்று அரசாங்கத்தின் ஆலோசர், கொள்கை வகுப்பாளர் மற்றும் இடைத்தரகர் ஆகிய மூன்று பாத்திரங்களையும் வகிப்பது தெளிவாகின்றது.

மே 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பொய்யாக சுயாதீனமாக இயங்கப்போவதாக கூறியவர்களுள் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உதவி சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்படும்போது அவருக்கு வாக்களிக்கும்படி பா.உறுப்பினர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுத்தார் என பா.உறுப்பினர் இராசமாணிக்கம் வெளிப்படையாக கூறினார். இந்த இடத்தில் ரணில் ஒரு இடைத்தரகர் வேலையைச் செய்தார். ஆனால் அவரால் அதை வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி என்னும் சமகி ஜன பலவேகய இனரால் கொண்டுவரவிருந்த நம்பிகையில்லாப் பிரேரணை பின்போடப்படுவதற்கு ரணில் தன் தலையீட்டை சய்தார். எவ்வாறாயினும் பல வாரங்களாக பின்போடப்பட்டு பின்போடப்பட்டு அது சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டாலும், அது பற்றிய விவாதம் பின்போடப்பட்டதன் பின்னணியிலும் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். அவர் ஒரு காலமும் மகிந்த ராஜபக்ச ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தோற்கடிக்கப்பட அவர் அனுமதிக்கமாட்டார்.

MCC ஒப்பந்தத்தின் புதிய திட்ட வடிவம் 2021 ஆண்டு தொடக்கத்தில் மீளமைக்கப்பட்டது. Path Finder ( பாத்ஃபைண்டர்) நிறுவனத்தின் உரிமையாளரான, மிலிந்த மொரகொட இந்தியாவின் ஸ்ரீ லங்கா தூதுவராக நியமிக்கப்பட்டமை இந்த ரணில், அமெரிக்க இந்தியத் திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையாகும். மிலிந்த மொரகொட என்பவர் அமெரிக்காவிற்கு மிகவும் நெருங்கியவர் என்பதோடு Regaining Sri Lanka (இலங்கையை மீட்டெடுப்போம்) திட்டத்தை உருவாக்கியவருமாவார்.

இத்திட்டத்தை நடைமுறப்படுத்துவதற்கான களத்தையும் சூழலையும் உருவாக்கிக்கொள்ளுவதற்கு ஏதுவாக, பாத்ஃபைண்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற முன்னாள் கடற்படை தளபதியான ஜெயநாத் கொலொம்பகே என்பவரை வெளியுறவு அமைச்சின் செயலாளராக பணியமர்த்தினர்.

அதன் பின்னர் இந்தியா திரை மறைவில் இருந்தபடி மிக்க கவனத்துடன் அமெரிக்க குடியுரிமை பெற்றவரான பசில் ராஜபக்சவை நிதி அமைச்சர் பதவிக்கு கொண்டுவருவதற்கு பெரும்பங்காற்றி அதை நிறவேற்றியது. இதன் மூலம் அவர்களின் எதிர்பார்ப்பு இலங்கையை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விலத்துவதாகும். ஆனால் இதற்கிடையே இலங்கை பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து கிடக்கிறது என்பதை இந்தியா நன்றாக புரிந்தே இருந்தது.

இப்போது இலங்கை பெரும் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது. இலங்கையின் மொத்தக் கடன் தொகை 51 பில்லியன் டாலர்களாகும். அதில் 18.5 பில்லியன்கள் 2015-2019 ஆம் ஆண்டுக் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் வாங்கிய கடன்களாகும். அதில் இறையாண்மைப் பத்திரக் கடன்கள் (Sovereign bond loans) 51 பில்லியன் டாலர்களாகும். ஏனைய 6.5 பில்லியனானது இருதரப்பு அல்லது பல்தரப்பு (Bilateral and multilateral loans) கடன்களாகும்.

ஆனால் யாருமே இந்தக் கடன்கள் பற்றி பேசுவதில்லை. சஜித் பிரேமதாஸ , லக்ஷ்மன் கிரிஎல்ல, மற்றும் பொருளியல் கலாநிதி ஹர்ஷ த சில்வா, எரான் விக்ரமரத்ன போன்றவர்கள் சொல்லும் கதைகளின்படி இக்கடன்கள் அனைத்தும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தவறுகளால் குவிந்தவை என்பதாகும். இவர்கள் எல்லோரும் அன்றைய ரணில் அரசாங்கத்தில் இருந்த முக்கிய அமைச்சர்களாவர். அவர்கள் எல்லோரும்கூட இன்றைய இந்த பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களே. அதே போல் 2015-2019 ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பாரிய நிதி ஊழலும் கூட இன்றைய நெருக்கடிக்கு பங்கு வகித்துள்ளது என்பதயும் கூறிவைக்க வேண்டியுள்ளது.

தற்போது இலங்கை கழுத்துவரை கடனில் மூழ்கிப்பொயுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு தேவையானதை நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக சகலதும் தயாராகி உள்ளது. ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவத்ற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கக்கூடும். அதில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி ஏனைய சில கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டு ஒரு அமைச்சரவையை உருவாக்கலாம்.

பின்னர் வழக்கறிஞர்கள் சங்கம் முன்மொழிந்துள்ளத மாதிரியை ஒத்த வடிவிலான கட்டமைப்பில் அரசாங்கத்தின் எஞ்சிய இரண்டாண்டு காலத்தை கொண்டு நடத்தலாம். இலங்கைக்குள் அமெரிக்காவிற்கு அவசியமானவைகள் இவ்வளவு காலம் இந்தியாவுக்கு ஊடாக செயற்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், இனிமேல் ரனில் விக்கிரமசிங்கவுக்குவுக்கு ஊடாக நேரடியாக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும்.

நாட்டின் அடிப்படைப் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான சில பணப் பங்கீடுகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவினால் வழங்கப்பட்ட, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நாட்டில் தற்போதுள்ள எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படலாம்.

அந்த வகையில் அவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எப்படியோ முன்னகர்திச் செல்லக்கூடும் . அதன்பிறகு, 2002 ஆம் ஆண்டு தன்னால் செய்ய முடியாமற் போனதை ரனில் விக்கிரமசிங்க 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்காக வெற்றிகரமாக அவர் செய்து முடிப்பார். அதன் பின்னர் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்பது என்ற பெயரில் இந்திய அமெரிக்க ஆதிக்கமானது இலங்கையை விழுங்கிக் கொள்ளும். ரணில் விக்ரமசிங்க இலங்கையை மீழ முடியாத ஒரு பொறிக்குள் சிக்க வைத்துவிட்டு அவர் ஒய்வு பெறுவார். இனி இலங்கையை கோடானகோடி தேவர்கள்தான் காப்பாற்ற வேண்டும்.

சாந்த ஜெயரத்ன
முன்னாள் சிரேஷ்ட ஆலோசகர்
ஸ்ரீ லங்கா அபிவ்ருத்தி நிர்வாக நிறுவனம்
Sri Lanka Institute of Development Administration (SLIDA)

தமிழில் மனோரஞ்சன்

Read more...

Thursday, April 28, 2022

நாடு பொருளாதார சிக்கலிலிருந்து மீள நடுவழிப்பாதை என்று ஒன்று உண்டா? Galle Face போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தே ஆகவேண்டும். சஞ்ஜீவ பட்டுவத்த - தமிழில் மனோறஞ்சன்

கடந்த ஆறு மாதங்களில் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரம், ஏப்ரல் கடைசி வாரத்தில் பெரும் பாதாளத்தின் விளிம்பை அண்மித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், அதிகபட்சமாக மே 15 ஆம் தேதி ஆகும்போது, அது எத்திசையை நோக்கி நகரும் என்று கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இந்திய கடன் சலுகைகளின் கீழ் எரிபொருள் நெருக்கடியானது நீறுபூத்த நெருப்பாக மறைக்கப்பட்டிருந்தாலும், தற்போது நடைபெறும் எரிவாயு விநியோகம் இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ள நிலையிலும், மற்றும் டொலரின் பெறுமதி இலங்கை ரூபாயுடன் ஒப்பீட்டளவில் கணிசமாக அதிகரித்துள்ளதாலும் பருமட்டாக ரூ.2000 நட்டத்தில் லிட்ரோவின் எரிவாயு இருப்பும் வினியோகமும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இச்சூழ்நிலையில் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் அழிவுக்கும்கூட இது வழிவகுக்கலாம். பொருளாதார நெருக்கடியின் வெளிப்படையாக தெரியும் தாக்கம் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரத்தின் அடிப்படைத் தேவைகளின் தட்டுப்பாடுகள் என்றாலும், இன்னும் மூன்று வாரங்களில் உற்பத்தித் தொழிலின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அத்துடன் நீண்டகால பயிர்களின் அழிவுகள் என்பதோடு இந்தச் சிக்கல் மீள முடியாத நிலைக்கு செல்வதன்மூலம் இப்பொருளாதார நெருக்கடியின் இன்னொரு முகமும் திறக்கப்படும்.

நாம் எங்கே தவறு செய்தோம்?

1977 ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் இலங்கைப் பொருளாதாரம் தொடர்பில் முறையான உரையாடல்களும் விவாதங்களும் இடம்பெற்ற போதிலும், பின்னர் தொடர்ச்சியான அல்லது தரமான விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. 2004 சுனாமியின் பொருளாதார தாக்கம் மற்றும் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட மோதலின் முடிவில் நாட்டை ஒரே பொருளாதார வலயமாக திட்டவட்டமாக வடிவமைக்கும் இரண்டு பெரும் வாய்ப்புகளை நாம் வேண்டுமென்றே தவறவிட்டோம். 1994 தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் அடிக்கடி பேசப்பட்டது இனம், மதம், கலாச்சாரம், அரசியல் மற்றும் ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு போன்ற விஷயங்கள்தான். பொருளாதாரம் அல்லது பொருளாதார வளர்ச்சி பற்றி எதுவும் பேசப்படவில்லை. .

1994 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில் இருந்து 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் வரை சுதந்திரம், ஜனநாயகம், அரசியலமைப்பு சீர்திருத்தம், திருட்டு, ஊழல் என்று வெறும் அலங்காரக் கதைகளைச் சொல்லி பொருளாதாரப் பிரச்சினை ஒத்திப் போடப்பட்டதே தவிர நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சரியான நாடித்துடிப்பை பதவியைக் கைப்பற்றிய எவரேனும் முனைந்தார்களா என்பது சந்தேகமே.

இப்போது செய்யப்பட வேண்டியது என்ன?

தற்போதைய நெருக்கடியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் (Crisis Control ) சக்தி இலங்கைக்கு இல்லை. விரும்பியோ விரும்பாமலோ நெருக்கடியை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் நெருக்கடி நிலையை நாம் சரியாகப் புரிந்திருக்குறோமா என்பது சந்தேகமே. பாராளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்களிடையே சம்பிக்க ரணவக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவர் மட்டுமே இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் விருப்பத்தையும் அதற்குத் தயார் என்னும் கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். மற்ற அனைவரும் களம் எப்படி உருவாகுகின்றதோ அதற்கு ஏற்றாற்போல் பந்தை எதிர்கொள்ளலாம் என்ற வகையிலேயே காலத்தைக் கடத்துபவர்களாக இருக்கிறார்கள். பல கட்சிகள் IMF இடம் செல்லும் யோசனைக்கும் தீர்மானத்திற்கும் தனியாக செல்ல தயாரற்ற தயக்க நிலையிலேயே உள்ளன.

கிரீஸ் அப்படி செய்தாலும் நம்மால் முடியுமா?

IMF இடம் சென்று மீட்சி பெற்றது பற்றி பேசும்போது கிரீஸ் என்பது பொதுவாக பேசப்படும் நாடாகும். ஏதென்ஸ் ஒலிம்பிக் விழாவிற்கு பெறப்பட்ட மிகப் பெரும் கடன் தொகையின் சுமையைக் கட்டுப்படுத்த முடியாமல் கிரேக்கப் பொருளாதாரம் திவாலானது. கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த நேரத்தில் [இன்றைய இலங்கையைப் போல], அன்றைய இலங்கை அரசு கிரீஸ் நாட்டிடம் Treasury bond பத்திரங்களை விலைகொடுத்து வாங்கியதால், சில மணிநேரங்களுக்குள் 20 பில்லியன் ரூபாய்களுக்கு மேல் இலங்கை அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. ராஜபக்சேவின் பொருளாதார கொள்கை ஆலோசகர் அஜித் நிவார்ட் கப்ரால் அந்த மோசமான கொடுகல் வாங்கலிற்கு வழிசமைத்தார். அந்த நடவடிக்கையானது எவருமே தண்டிக்கப்படாத மாபாதக தேசிய குற்றமாகும். உடூ சொல்லப்பட வேண்டிய இந்த உபகதை ஒரு புறமிருக்க;

திவாலாகி கிடக்கும் கிரேக்க நாட்டை கடைசியாகக் காப்பாற்ற வந்தது IMFதான். அவர்கள் பல ஒப்பந்தங்களுடனேயே வந்தார்கள். IMF என்பது ஒரு நாட்டை விழுங்க வரும் அரக்கன் அல்ல. கடனை மீள அடைப்பதற்கு பொறுப்புச் சொல்வதற்கு அவர்கள் பல கட்டாய முன்மொழிவுகளைச் செய்வார்கள். இன்று இலங்கையைப் பாதித்துள்ள அரச சேவைகளுக்கான செலவினங்களில் வெட்டு, நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களை மூடுவது அல்லது தனியார்மயமாக்குவது, சில சமயங்களில் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரப் பாதுகாப்புக்கும் கூட சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். மேலும், நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையும் கணக்காய்விற்கு உட்படுத்தப்படும். அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அர்ஜுன் அலோசியஸ் போன்றவர்கள் பொருளாதாரத்தை தன் விருப்பப்படி கையாள முடியாத நிரந்தர கணக்காய்வு செயல்முறை தவிர்க்க முடியாததாக இருக்கும். இதனால்தான் பல கட்சித் தலைவர்கள் IMF க்கு செல்ல தயங்குகிறார்கள், பயப்படுகிறார்கள். ஒரு வேளை இவையெல்லாம் போராட்டக் கோஷங்களாக மாறி எதிர்கால போராட்டத்தில் மக்களிடமிருந்து தமக்கெதிராக ஏவப்படும் கனகல் ஆகலாம் எனவும் அரசியல்வாதிகள் நம்பக்கூடும்.

கடனில் மூழ்கியிருந்த கிரீஸ் அதன் முழு IMF கடன்களை கடந்த ஏப்ரல் 5ம் திகதி அன்று செலுத்தி முடித்தது. அதாவது குறித்த காலத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவற்றை கட்டி முடிப்பதற்கு ஐரொப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதை அடுத்தே இது நிகழ்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கடண்களை திருப்பிச் செலுத்தியதன் காரணமாக அவர்கள் 230 மில்லியன் யூரோக்களை தப்படுத்தியும் கொண்டனர்.

260 பில்லியன் யூரோக் கடனில் சிக்கித் தவித்த கிரீஸ், அரசியல்வாதிகளும் மக்களும் மீண்டு வரவேண்டும் என்ற அதே ஆசையில் அதிலிருந்து மீண்டு வந்தது.

கிரீஸும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஒரேயடியாக உறுதியான அரசியல் அடித்தளத்தை அமைக்கவில்லை. இது பல முரண்பாடுகள் மற்றும் தியாகங்களின் பயணம். இது அனைவருக்கும் பொதுவான உண்மை. அரசியல் கொள்கைக்கும் IMF தீர்மானத்திற்கும் இடையே ஒரு முரண்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த முரண்பாட்டை குறைக்க முடியும். இருப்பினும், மே 2010 இல் திறக்கப்பட்ட கடன் கோப்பை மூடிய கிரேக்க நாட்டின் நிதியமைச்சர் Christos Staikouras, நாம் இந்த அத்தியாயத்தை மூடிவிட்டோம் என மகிழ்சியுடன் கூறினார்.

காலிமுகத்திடல் உரையாடல் இரண்டாவது கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

கிரீஸுக்குக் கிடைக்காத வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. நாம் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு முன், அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு தளம் இப்போது உள்ளது. உண்மையில், காலிமுகத்திடல் மைதானம் அதன் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைவதற்கான நேரம் இது. அது ஒரு பொருளாதார நோக்கில் இருக்க வேண்டும். ஆதற்கான அழுத்தம் எமது அரசியல் தலைமைகளை நோக்கி காலிமுகத்திடலில் நிற்கின்ற அறிவுள்ள இளம் தலைவர்களிடமிருந்து வரவேண்டும். இரண்டு நாட்களுக்கு இப்போராட்டத்திற்கு ஆதரவளித்த தீவின் முன்னணி முதலீட்டாளர்கள் சங்கமும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப் பின்னணியில் நிற்கின்றமை சிறப்பம்சமாகும்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல பயந்து, முன்கூட்டியே தேர்தல், இடைக்கால அரசாங்கம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் கோரி காலத்தை இழுத்தடிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒரு மேசைக்கு கொண்டுவர காலிமுகத்திடல் இளம் தலைமை முயற்சிக்க வேண்டும். அதை எப்படியாவது செய்தே ஆக வேண்டும். பொருளாதாரத்தின் தலைவிதி அவ்வாறு எழுதப்படுகின்ற அதேவேளை, அரசியல் காலாச்சார , கல்வி , யாப்புச்சீர்திருத்தம் போன்றவற்றுக்கான சிறப்புக்குழுக்களை உருவாக்கி இப்போராட்டத்தை ஒரு சாதகமான தளத்தை நோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு தமக்கு இருக்கின்றதென்பதை போராட்ட களத்தின் இன்று நிற்கின்ற எழுச்சி மிகு இளம் போராட்டக்காரர்கள் புரிந்து கொள்வார்களாயின், அது அவர்கள் எதிர்பார்க்கும் SYSTEM CHANGE ன் உடைய முதலாவது படிக்கல்லாக அமையும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com