Showing posts with label Jegan. Show all posts
Showing posts with label Jegan. Show all posts

Friday, January 2, 2026

டக்ளஸ் கைதின் உள்ளும் புறமும்.. ஜெகன்

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் எனக்கூறப்பட்ட ஆயுதப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கடந்த சுமார் 30 வருடங்கள் இலங்கை அரசியலில் வடக்கு மக்களின் பிரதிநிதியாக, இலங்கை பாராளுமன்றின் 225 ஆசனங்களில் ஒரு ஆசனத்திற்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த கதிரவேலு நித்தியானந்த தேவானந்தா, கடந்த 26.12.2025 அன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அரச சொத்துக்கள் மற்றும் ஆயுத கட்டளைச் சட்டத்தின் சரத்துக்களை மீறியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மஹர சிறைச்சாலையில் எதிர்வரும் 09.01.2026 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் தேவானந்தா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, எந்தச் சட்டத்திற்கு ஆதரவாக டக்ளஸ் தனது பாராளுமன்ற காலம் முழுவதும் கை உயர்த்தி வரவேற்று அச்சட்டத்தினை நாட்டில் அமுல்படுத்த உறுதுணையாக இருந்தாரோ, அதே சட்டத்தின் கீழ் கைது செய்;யப்பட்டுள்ளார் என்று எக்காளமிட்டவர்களுக்கு விழுந்த முதலாவது அடி அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அரச சொத்துக்கள் மற்றும் ஆயுத கட்டளைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளமையாகும்.

டக்ளஸ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை. அவை நீதியான முறையில் விசாரணை செய்யப்படவேண்டும். டக்ளஸ் தனது தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த ஆயுதத்தை அல்லது ஆயுதங்களை வன்செயல்கும்பல்களுக்கு வழங்கி இந்நாட்டு மக்களின் உயிருக்கோ உடமைகளுக்கோ சேதம் ஏற்படுத்தியிருந்தாலோ , அன்றில் அவ்வாயுதங்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்கெடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலோ அதற்கான தண்டனைகளை அவர் அனுபவிக்கவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், இக்கைதினை தொடர்ந்து சமுக வலைத்தளங்களில் வலம்வருகின்ற பதிவுகளை – குறிப்பாக ஆதாரமற்ற சேறடிப்புக்களை கடந்து செல்வதென்பது – அநியாயம் ஒன்று இடம்பெறும்போது மௌனம் காத்து அடக்குமுறையாளர்களுக்கான பாதையை சீர் செய்து கொடுப்பதாக அமையுமென்பதால் டக்ளசின் கைதுக்கு பின்னர் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக பேச வேண்டியுள்ளது.

வுழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னரே தீர்பெழுதியுள்ள விட்டோடிகளும் தமிழீழ வியாபாரிகளும் டக்ளஸை துரோகி என்கின்றனர். டக்ளஸை துரோகி என்கின்ற தியாகிகளிடம் நான் கேட்கின்ற முதலாவது கேள்வி யாதெனில், நீங்கள் ஒருவனை துரோகி என்பதற்கும் தியாகி என்பதற்கும் பயன்படுத்துகின்ற பொதுவான அளவுமானி யாது?

இலங்கை அரசிடம் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை பெற்றுக்கொண்டதற்காக டக்ளஸ் துரோகி என்றால், பிறேமதாஸ அரசிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்ட பிரபாகரன் யார்? டக்ளஸை துரோகி என அளவீடு செய்த அளவுமானி பிரபாகரனின் ஆசனவாயினுள் நுழைய மறுப்பதேன்?

அரசிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்டமைக்காக டக்ளஸ் துரோகி என்றால் அவரை நான் ஒழுக்கமான துரோகி என்பேன், என்னென்றால் அவர் இலங்கை சனநாயக சோசலிஸ குடியரசின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு இவ்வாயுதங்களுக்கான சகல பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்கின்றேன் என நெஞ்சை நிமிர்த்தி துணிவுடன் கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டிருக்கின்றார். ஆனால் பிரபாகரன் இவ்விடயத்தில் ஒர் ஒழுக்கமற்ற துரோகி. அவன் இலங்கை அரசிடமிருந்து ஆயுதங்களை பின்கதவால் மோசடியாக பெற்றுக்கொண்டுள்ளதுடன் அதுதொடர்பான எவ்வித சாட்சிகளையும் விட்டுவைக்க வில்லை. காரணம் பிரபாகரன் ஒருபோதும் பொறுப்புக்கூறலுக்கு தயாராக இருக்கவில்லை.

டக்ளசிற்கு , ஏன் சகல ஏனைய ஆயுதகுழுக்களுக்கும் முன்னோடியாக வழிகாட்டியாக ஆயுதங்களையும் சலுகைகளையும் இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டது பிரபாகரனும் அவனது புலிகள் அமைப்புமேயாகும். ஆனால் குறிந்த ஆயுதங்கள் பெற்றுகொள்ளப்பட்ட நோக்கங்களை ஆய்வு செய்கின்றபோது, தனதும் சக தோழர்களதும் உயிர்களை தற்காத்துக்கொள்ள டக்ளஸினால் ஆயுதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பது ஆவணங்கள் ஊடாக தெளிவாகின்ற அதே நேரத்தில், தமிழ் மக்களுக்கான தீர்வுக்கு முதற்படி என ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய – ஒப்பந்தத்தையும் (ஜேவிபி யின் மொழியில் தமிழீழத் தனியரசு) அதனூடாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பின் 13ம் திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கென அமைதி காக்கும் படை எனும் பெயரில் இலங்கையில் இறங்கியிருந்த இந்திய படையினரை வெளியேற்றுவேன் என்ற பிறேமதாஸவின் தேர்தல் உறுதி மொழியை நிறைவேற்றுவதற்கான கூலிப்படையாக பிரபாகரன் இலங்கை அரசிடமிருந்து ஆயுதங்களை களவாக பெற்றுக்கொண்டுள்ளார். அவை உலங்குவானூர்திகளிலும் பாரஊர்திகளிலும் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் வந்திறங்கியமை யாவரும் அறிந்த இரகசியம்.

யார் துரோகி?

உயிர்வாழ்தல் ஒவ்வொரு ஜீவராசிகளினதும் பிறப்புரிமை. அரசியல் ஒவ்வொரு பிரஜைக்குமான யாப்புரிமை ( ஊழளெவவைரவழையெட சiபாவ) இந்த இரு உரிமைகளும் பிரபாகரனால் மறுக்கப்பட்டபோதுதான், டக்ளஸ் உட்பட பல்வேறு அரசியல் அமைப்புக்களும் தலைமைகளும் தனி நபர்களும் தங்களுக்குரித்தான பாதுகாப்பினை இலங்கை அரசிடம் பெற்றுக்கொண்டார்கள். தங்களது வாழ்வுரிமையை பாதுகாக்க ஆயுதங்களை பெற்றுக்கொண்டமை துரோகம் என்கின்ற மேதாவிகள், தமிழ் மக்களது அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவந்த இந்தியப்படையை விரட்டியடிக்க கூலிப்படையாக இலங்கை அரசிடம் பிரபாகரன் ஆயுதம் பெற்றுக்கொண்டதை தியாகம் என்கின்றனர்.

பிரபாகரனை பயங்கரவாதி, போதைப்பொருள் கடத்தல்காரன் என்று இலங்கை பாராளுமன்றிலே பேசியதற்காக டக்ளஸ் தேவானந்தா துரோகி என்கின்றனர். பாரத பிரதமர் ரஜீவ் காந்தியை புலிகள் கொலை செய்ததை தொடர்ந்து 1992ம் ஆண்டு புலிகள் அமைப்பு முதல்முறையாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா உட்பட உலகின் பலம்வாய்ந்த 32 க்கு மேற்பட்ட நாடுகள் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்தது.

இந்நாடுகள் வெறுமனே ஆதாரங்கள் இன்றி புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யவில்லை. நாடுகள் அமைப்பொன்றை தடை செய்கின்றபோது, உலக அரங்கில் பயங்கரவாத செயற்பாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை, அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதனை சந்தேகங்களுக்கப்பால் உறுதிப்படுத்தியே தடை செய்யமுடியும். ஓவ்வொரு நாடும் அமைப்பொன்றை பயங்கரவாத அமைப்பென தடை செய்யும் போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகளை சட்டமாக்கி வைத்திருக்கின்றது.

அச்சட்ட ஒழுங்குகளின் பிரகாரம் கீழ்க்காணப்படும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அமைப்புக்களை தடை செய்யும்:

மனித குலத்திற்கு எதிரான வன்செயல்கள் - (பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடல், சிவிலியன் மற்றும் நிராயுதபாணிகளை இலக்கு வைத்தல், மக்களை அச்சுறுத்துவதற்கு வன்செயலை பயன்படுத்தல்.) தமது இலக்கினை அடைவதற்காக பயங்கரவாக செயற்பாடுகளை மேற்கொண்டு அரசினை கட்டாயப்படுத்தல், பொதுமக்களை அச்சுறுத்தல், தமது அரசியல் கொள்கைகளை வலுக்கட்டாயமாக திணித்தல் கட்டளைக் கட்டமைப்பினை கொண்ட அமைப்பாக இருந்து செயற்பாடுகளை மேற்கொள்ளல், தொடர்சியான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதுடன், செயற்பாட்டு திட்டங்களை கொண்டிருத்தல்

பயங்கரவாத-நிதிச் செயற்பாடுகள் - பங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதியினை சேகரித்து அவற்றை பராமரித்தலும் பயன்படுத்துதலும். பினாமி அமைப்புக்களை இயக்குதலும் அவற்றினூடாக குற்றச் செயல்களை புரிதலும். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளிப்பதற்காக மிரட்டி பணம் பறித்தல், ஆட்களை கடத்தி பணம் பறித்தல், கள்ளக்கடத்தலில் ஈடுபடுதல், போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுதல்.

சர்வதேச ரீதியில் அவ்வியக்கம் செயற்படுகின்றதா என்பதையும் அதற்கு பல்வேறு நாடுகளில் செயற்பாடு உள்ளதா என்பதையும் புலிம்பெயர்ந்த மக்களின் வலையமைப்பை பயன்படுத்துகின்றதா என்பதையும் பிறநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றதா என்பதையும் நாடுகள் நுணுக்கமாக அவதானிக்கும்.

தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக செயற்பட்டு, இறையாண்மையை சீர்கெடுக்க முயல்வது, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதிப்படைய செய்வது, ஆயுத கிளர்ச்சி அல்லது உள்நாட்டுப் போரை ஊக்குவிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடல்,

புலனாய்வு அமைப்புக்களின் தகவல்கள், நீதிமன்ற தீர்ப்புக்கள், நட்பு நாட்டு தகவல்கள் மற்றும் ஐநா வின் பாதுகாப்பு ஆய்வறிக்கை பயங்கரவாத செயற்பாடுகளில் குறித்த அமைப்பு ஈடுபடுகின்றது என்பதை உறுதி செய்தால் அரசுகள் அமைப்புக்களை தடை செய்வதற்காக சட்ட அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

அந்த அடிப்படையில் மேற்கூறப்பட்டுள்ள சகல செயற்பாடுகளையும் கொண்டுள்ள அமைப்பான புலிகள் அமைப்பு உலகின் 32 க்கு மேற்பட்ட நாடுகளால் தடை செய்யப்பட்டு பயங்கரவாத அமைப்பு என உலகப்புகழ் பெற்றிருக்கின்ற நிலையில், அவ்வமைப்பின் தலைவனை பயங்கரவாதி எனக் குறிப்பிடும் தனிநபர் ஒருவர் எவ்வாறு துரோகியாக முடியும்? அவ்வாறாயின் பிரபாகரனை துரோகி என்றதற்காக டக்ளஸை துரோகி என்போர், பிரபாகரனையும் அவனது அமைப்பையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ள 32 க்கு மேற்பட்ட நாடுகளையும் அதன் தலைவர்களையும் மக்களையும் துரோகிகள் என்கின்றனரா? மாறாக அந்நாட்டு தலைவர்களின் பாதங்களை கழுவிக்குடித்து அவர்களுக்கு சேவகம் புரிகின்றனர்.

2019 ம் ஆண்டு டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னணி பாதாள உலக கோஸ்டி தலைவனும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான மாக்காந்தர மதுஸ் என்பவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து அவன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் வெலிவேரிய பிரதேசத்தில் 2019.05.16 ம் திகதி கைப்பற்றப்பட்ட இரு கைத்துப்பாக்கிகளில் ஒன்று டக்ளஸ் தேவானந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி என்ற வகையில் டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இலங்கையில் இயங்கும் இயங்கிய ஒரே ஒரு கொலைக்கும்பல், கொள்ளைக்கும்பல் மாக்காந்தர மதுஸ் அல்ல. இதற்கு முன்னரும் தற்போதும் நூற்றுக்கணக்கான கிறிமினல்கள் இயங்கினார்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட முதலாவது ஆயுதம் மாக்காந்தர மதுஸிடமிருந்து கைப்பற்றப்பட்டதுதான் என்பதும் இல்லை. ஆகையால் டக்ளஸ் மீது வழக்கு தொடரப்படக்கூடாது என்பதும் எனது வாதம் அல்ல மாறாக அவர் மீது கருணை காருணியம் இன்றி வழக்கு தொடர்ப்படவேண்டும் அவை நியாயமாக விசாரணை செய்யப்படவேண்டும் என்பதுதான் இங்கு மேலான விடயம்.

சட்டத்தின் முன் சகலரும் சமம் , சட்டத்தின் சம பாதுகாப்பிற்கு சகலரும் உரித்துடையவர்கள் என இலங்கை அரசியல் யாப்பின் 12 சரத்து கூறுகின்றது. இதன் பிரகாரம் நாட்டு மக்கள் சகலரையும் சமமாக நாடாத்துவோம் சட்டத்தின் பாதுகாப்பை சகலருக்கும் சமமாக வழங்குவோம் என்ற உறுதி மொழியை வழங்கி ஆட்சியை கைப்பற்றிய அரசு அதன் பிரகாரம் அவ்வாக்குறுதியை பிசகாமல் பேணுகின்றதா என்பது அடுத்த கேள்வி.

சொத்தி உபாலி, நாவல நிஹால், ஹோனவல சுனில், தொட்டலங்க கனகு, பத்தேகான சஞ்சீவ வில் ஆரம்பித்து இறுதியாக மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்ற ஹெகெல்பத்தர பத்மே எனப்படுகின்ற ஹொரலாகமகே மன்டினு பத்மசிறி பெரேரா முதலான நூற்றுக்கணக்கான பாதாளஉலக புள்ளிகளிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. அவ்வாயுதங்கள் எவ்வாறு குறித்த நபர்களிடம் சென்றது என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் தொடர்பாக இலங்கை அரசியல் யாப்பின் 12ம் சரத்தின் மீது அக்கறை கொண்டுள்ள மக்கள் அறிய ஆவலாக உள்ளனர்.

அத்துடன் இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது ஜிஹாடில் ஆ ரம்பித்து இறுதியாக புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த குழுவினர் வரைக்கும் இலங்கை இராணுவம் ஆயுதங்களை வழங்கியிருக்கின்றது. அந்த ஆயுதப்பரிமாறல்களில் இன்றைய அரசின் பிரதான கட்சியான ஜேவிபி யினரும் பங்கெடுத்திருக்கின்றனர் என்ற அரசல்புரசலான விடயங்களும் உண்டு. எனவே அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்கள் யாவும் அரசின் ஆயுதக்களஞ்சியத்தை வந்தடைந்து விட்டதா? எத்தனை ஆயுதங்கள் ஜனநாயகத்துடன் சங்கமித்து மக்களுடன் உரையாடுகின்றது என்பதையும் பரிசுத்தமான அரசிடமிருந்து மக்கள் எதிர்பார்கின்றனர்.

இறுதியாக இலங்கை அரசிடம் நான் முன்வைக்கின்ற கோரிக்கை யாதெனில், டக்ளஸ் தேவானந்தவிடமிருந்து பாதாளக்குழுக்களிடம் சென்றடைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகின்ற ஆயுதங்களைவிட பல நூறு மடங்கு ஆயுதங்கள் புலிகளிடமிருந்து பாதாளக்குழுக்களிடம் சென்றிருக்கின்றது. அவ்வாறு அக்குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கிய முக்கிய புலிகள் பலர் இன்றும் உயிருடன் நாட்டிலும் புலம்பெயர்ந்தும் வாழ்வதுடன் அவர்கள் இந்நாட்டின் அமைதியை சீர்குலைக்கவும் தங்கள் எதிரிகளை இலக்குவைக்கவும் இப்பாதாள உலகக்கும்பல்களுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்பதுடன் அவ்வாறன சில நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டும் உள்ளதை பாரதூமாக எடுத்து, புலிகளுக்கும் பாதாளக்குழுக்களுக்குமுள்ள தொடர்பினையும் விசாரணை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


Read more...

Sunday, November 27, 2022

600 பொலிஸாரும் ரணில் ன் ஹன்சார்ட்டும். அவர் கொலையாளி என்றால், அவர்கள் யார்? சுமத்திரனின் இரட்டை வேடம். ஜெகன்

2023 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முரண்பட்டு நிற்கும் இருவேறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் ராசமாணிக்கமும் பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனும் ஒருவர் மேல் ஒருவராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அரச வளங்களை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி சூறையாடியுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுக்கள் எவையும் வெறுமனே அரசியல் காழ்ப்புணர்சியில் கூறப்படுகின்ற விடயங்கள் என்று என்னால் கடந்து செல்லமுடியாது. அவை தொடர்பான ஒரு விரிவான உரையாடலுக்கு இருதரப்பினரையும் அழைத்துள்ளதுடன் , இரு தரப்பாலும் உலாவ விடப்பட்டிருக்கின்ற ஆவணங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் போதிய ஆய்வின் பின்னர் பேசுவது பொருத்தமாகும் என எண்ணுகின்றேன்.

மேற்படி இருவருக்குமிடையேயான குற்றச்சாட்டுக்களின்போது பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் தனது கட்சியின் உறுப்பினரின் பெயர் „சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் ராசமாணிக்கம்" திரிவுபடுத்தப்படுகின்றது என சிறப்புரிமைக் கேள்வியை எழுப்பியதுடன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு கொலையாளி என்றும் அதனை ரணில் விக்கிரமசிங்கவே தனது 06.05.2022 திகதிய உரையில் கூறியுள்ளமை ஹன்சார்ட் ல் பதிவாகியுள்ளதாகவும் ஆத்திரமும் ஆவேஷமும் அடைந்தது தொடர்பில் நிறைய புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன், இதுவரை இருந்துவந்த சந்தேகங்கள் பலவற்றுக்கும் விடையையும் தந்துள்ளது.

இலங்கை சோசலிஸ சனநாயக குடியரசின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் ஆங்கிலத்தில் „Shanakiya Rahul Rajaputhiran Rasamanickam „ என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள தகவலின் பிரகாரம் இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் அவரது பெயர் ஆங்கிலத்தில் „Shanakiyan Rajaputhiran Rasamanickam" என பதிவிடப்பட்டுள்ளது. இந்த இரட்டை பெயர் தொடர்பில் சாதாரணமான சந்தேகங்கள் காணப்படும்போது, அப்பெயர்கள் வெளிப்படுவது தொடர்பில் சுமந்திரன் ஆத்திரமடைந்தவிதம் பலத்த சந்தேகங்களை கொடுக்கின்றது.



பிறப்பத்தாட்சிப் பத்திரத்தின் பிரகாரம் வழங்கப்படும் கடவுச்சீட்டில் காணப்படும் „சாணக்கிய" „சாணக்கியன்" ஆகியமையும் அங்கே காணப்பட்டும் „ராகுல்" நீக்கப்பட்டுள்ளமையும் தமிழ் மக்களிடம் வாக்குகளை வசூலிக்கும்போது, அவர் பிறப்பால் யார் என்ற கேள்வி எழுவதை தவிர்ப்பதற்காகவும் தமிழ் மக்களை வழமைபோல் ஏமாற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட திருகுதாளமாக இருக்க முடியும் என இத்தனை காலமும் யாவரும் கடந்து சென்றபோதும், இன்று இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளவர்கள் இலங்கை பாராளுமன்றில் அங்கத்தவர்களாக இருக்க முடியாது என்ற சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துவரும் நிலையில் சுமந்திரனின் தடுமாற்றம், இங்கே ஆள்மாறாட்டம் இடம்பெற்றுள்ளதா? அவ்வாறு இடம்பெற்றிருந்தால் கட்சியின் தலைமையும் அதற்கு பொறுப்புக்கூறவேண்டுமாகையால், சுமந்திரன் பதறுகின்றாரா? என்ற கேள்விகளுடன் சுமந்திரனின் இரட்டை வேடத்திற்கு செல்வோம்.

600 பொலிஸாரைக் கொன்ற கொலையாளியே பிள்ளையான் என்றும் இவ்விடயத்தை பாராளுமன்றிலே இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 06.05.2022 தெரிவித்துள்ளமை ஹன்சார்ட்டில் பதிவாகியுள்ளதாகவும் சுமந்திரன் கூறுகின்றார். 1990 ம் ஆண்டு கிழக்குப் பகுதியில் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் பகுதியில் வைத்து கோழைத்தனமாக புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். ஆனால் 1990ம் ஆண்டு ஆனி மாதம் 11 அல்லது 12 ம் திகதி இப்படுகொலை இடம்பெற்றபோது, பிள்ளையான் அவ்வியக்க உறுப்பினராக இருக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை.

குறித்த கொலை இடம்பெற்றபோது அவ்வியக்க உறுப்பினராக இருந்திராதபோதும், பிள்ளையானை அக்கொலைகளின் கொலையாளியாக எடுத்துக்கொள்ளலாமா என்பதுதான் விடயம். சரணடைந்து நிராயுதபாணிகளாகவிருந்த மேற்குறித்த 600 பொலிஸாரையும் உலக யுத்த நியதிகளை மீறி கொலை செய்து அது ஒரு பயங்கரவாத இயக்கம்தான் என புலிகளியக்கம் மீண்டும் தன்னை நிரூபித்து நின்றபோது, அவ்வியக்கத்தின் கொள்கையை ஏற்று 1991 ம் ஆண்டு புலிகளியக்கத்தில் பிள்ளையான் இணைந்து அவ்வியக்கத்தை பலப்படுத்தியிருக்கின்றார் என்றால் அவ்வியக்கத்தின் சகல குற்றங்களுக்கும் கூட்டாக பொறுப்புக்கூறவேண்டியவர்தான் என்ற தர்க்கத்தை சுமந்திரன் முன்வைப்பாரானால், அத்தர்க்கத்தை நான் ஏற்றுக்கொள்வதுடன் பிள்ளையான் 600 பொலிஸாரைக் கொன்ற கொலையாளிதான் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அவ்வாறாயின், 600 பொலிஸார் கொல்லப்பட்ட விடயத்தில் பிள்ளையான் கொலையாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டால் அங்கு தவிர்கமுடியா அடுத்த கேள்வியாதெனில், அவ்வியக்கத்தின் அங்கத்தினர் அனைவரும் 600 பொலிஸாரையும் கொன்ற கொலையாளிகள் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே மாவீரர்கள் , முன்னாள் போராளிகள் என்பவர்கள் யார்? அவர்களும் கொலைக்குற்றவாளிகளாகத்தானே இருக்கவேண்டும். கொலையாளிகளை மாவீரர்கள் எனப்போற்றுவது நகைப்புக்குரியதல்லவா?

ஆகவே கொலைக்குற்றவாளிகளை மாவீரர்கள் மற்றும் போராளிகள் என்று போற்றுவது எந்த விதத்தில் நியாயம் என சுமந்திரனைக் கேட்கின்றேன். அதாவது தங்களது அரசியல் பித்தலாட்டங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்போரை முன்னாள் போராளிகள் என்பார்கள், தங்களது வாக்குவங்கியை நிரப்புவதற்காக கொலையாளிகளை மாவீரர்கள் என விளக்கேற்றி அர்ச்சிப்பார்கள், தங்கள் அரசியல் பாதைக்கு குறுக்கே செல்வோரை கொலையாளிகள் என்பார்கள். இது அயோக்கியத்தனமான இரட்டை வேடம் இல்லையா?

Read more...

Sunday, November 20, 2022

மகாவலி , LRC காணி அதிகாரங்களை பி. செயலாளர்களுக்கு வழங்குவது கோழியை பிடித்து நரியிடம் கொடுப்பதற்கு ஒப்பானது.

பா.உ ஹேஷா வித்தானகே சீற்றம்! அமைச்சர் அஷோக பிரியந்த அந்தரத்தில் !! 

  வரவு செலவு திட்டு விவாதத்தின்போது பிரதேச செயலாளர்களின் ஊழல்களை போட்டுடைத்த பாராளுமன்ற உறுப்பினரிடம், குறித்த பிரதேச செயலாளர்களுக்கு எதிராக நடவடிக்க எடுப்பதாக உறுதியளித்தார் இராஜாங்க அமைச்சர்.

அப்பட்டியலில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ. வாசுதேவனையும் இணைத்துக்கொள்ளும் அமைச்சரே!


நேற்றுமுன்தினம் 18.11.2022 பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே, மகாவலி அபிவிருத்தி மற்றும் எல்ஆர்சி எனப்படுகின்ற காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் இருக்கின்ற காணிகள் குறித்த நிறுவனங்களால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் முறைமைக்கு அப்பால் அக்காணிகள் பிரதேச செயலாளர்களால் பகிர்ந்தளிக்கப்படக்கூடியவாறு, பிரதேச செயளார்களுக்கு அதிகாரங்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகின்றது. இவ்விவகாரங்களுக்கு பொறுப்பான எனது நண்பரும் அமைச்சரும் இச்சபையிலே அமர்ந்திருக்கின்ற நிலையிலே, இம்முயற்சியானது கோழியை பிடித்து நரியிடம் கொடுக்கும் முயற்சியாகும் என்பதுடன் நான் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன்.

நான் அம்பிலிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவன். நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்ற விடயத்தை முழு அம்பிலிப்பிட்டியும் இரத்தினபுரியும் அறியும், ஆனால் கௌரவ அமைச்சருக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியாது. அம்பிலிப்பிட்டி பிரதேச செயலகம் என்பது முழு இலங்கையிலுமிருக்கின்ற ஊழலுக்கு பெயர்போன பிரதேச செயலகங்களில் முன்னணி வரிசையில் முதல் நான்காம் ஐந்தாம் இடங்களில் இருக்கக்கூடும். அம்பிலிப்பிட்டி பிரதேச செயலகத்தில் பகிரங்கமாக லஞ்சம் பெறப்படுகின்றது. மண் எடுப்பதானாலும் , கல் எடுப்பதானாலும் ஏன் எந்த சேவையை பெற்றுக்கொள்வதானாலும் பிரதேச செயலாளருக்கு லஞ்சம் வழங்கவேண்டும். இந்த பிரதேச செயலாளருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ அமைச்சர் அவர்களை இந்த சபையிலே கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

அதன்போது சபையிலே எழுந்த உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த, நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவீர்களாயின் குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்பதை இவ்விடத்தில் உறுதி கூறுகின்றேன் என்றார்.

மேலும் அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், பிரதேச செயலாளர்கள் மற்றும் எமது அமைச்சுக்குட்பட்ட உத்தியோகித்தர்களின் ஊழல், மோசடிகளை தெரிவிக்கும் பொருட்டு நான் அமைச்சராக பாரமேற்றதன் பின்னர் 1905 என்ற இலக்கத்தை உருவாக்கியிருக்கின்றோம். மோசடி புரிகின்றவர்கள் தொடர்பில் இந்த இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குங்கள், நாங்கள் தாமதமின்றி விசாரணைகளை மேற்கொள்வோம் என்றார்.

இலங்கையில் இவ்வாறான பல்வேறு இலக்கங்கள் காலத்திற்கு காலம் அறிவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இவ்வாறான இலக்கங்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளுக்கு என்ன நடைபெற்றது , நடைபெற்று வருகின்றதென்பதையும் நாட்டு மக்கள் நன்கறிவர். இலங்கை வரலாற்றில் இன்றும் TELLIGP என்று ஒரு முறைப்பாட்டுக்கான வழி இருக்கின்றது. ஒரு காலத்தில் Tellpresident , Tellprimeminister என்றும் முறைப்பாட்டு வழிகள் இருந்தது. மேலும் எத்தனையோ முறைப்பாட்டு வழிமுறைகள் இருந்தது. ஆனால் அங்கு கடமையாற்றுகின்றவர்களும் குற்றஞ்சுமத்தப்படுகின்ற அரச ஊழியர்களும் நண்பர்கள். இவ்வாறான நிறுவனங்களிடம் முறையிட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பவங்கள் எதுவும் வரலாற்றில் பாதிவாகவில்லை என்பதையும் அவர்கள் அனைவரும் கூட்டுக்கொள்ளையர்கள் என்பதையும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

2020 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச தேர்தலில் குதித்தபோது, பலர் நம்பிய விடயம் யாதெனில், ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதாகும். கோத்தபாய ராஜபக்ச கடமையேற்று சிறிது நாட்களில், அரச அலுவலகங்களில் கடமை தவறுகின்ற ஊழியர்களை புலனாய்வுத்துறையினர் சிவில் உடையில் உளவு பார்த்து வருகின்றனர் என கோத்தபாய தரப்பால் கூறப்பட்டது. இப்பிரச்சாரத்தை நம்பியவர்கள், பிலிப்பீன் ஜனாதிபதியாகவிருந்த Rodrigo Duterte (ரொட்றிகோ டுரேர்ரே) ஊழலை ஒழிப்பதற்காக ஊழலுக்கு துணைபோன அரச உயர் அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோரை கொன்றொழித்தது போன்றதொரு நிகழ்வு நிறைவேறப்போகின்றது, இலங்கையில் மக்கள் பணத்தை மோசடி செய்து தங்களது வயிற்றை வழர்த்துள்ள அரச ஊழியர்களின் வண்டி கிழிக்கப்பட்டு அவர்களது கழுத்துப்பட்டியால் கம்பத்தில் கட்டப்படப்போகின்றார்கள் என மக்கள் ஆவலுடன் எதிர்பாத்திருந்தனர். ஆனால் இலங்கையில் துருப்பிடித்துக்கிடக்கும் அரச இயந்திரத்தின் ஒரு நட்டைக்கூட கழட்டி பூட்ட கோத்தபாயவாலும் முடியாது போனது.

இந்நிலையில் அமைச்சர் புதிதாக உருவாக்கியிருக்கும் 1905 என்ற இலக்கத்திற்கு தகவல் கொடுத்து மாற்றம் நிகழப்போகின்றது என்றோ நீதிகிடைக்கப்போகின்றது என்றோ மக்கள் நம்பப்போவதில்லை. அவ்வாறு அமைச்சருக்கு அதிசயம் ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், மட்டக்களப்பு மண்முனை-வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் என்பவனின் காணி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில், இங்கே வைக்கப்படுகின்ற பகிரங்க முறைப்பாட்டினை வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை செய்து அவனுக்கு தண்டனை வழங்கி தாங்கள் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகின்ற பொறிமுறை இத்தனை காலமும் கூறப்பட்டு மறைந்த பத்தோடு ஒன்று பதினொன்றுதான் இல்லை என்பதை உறுதிசெய்யுமாறு இலங்கைநெட் கோருகின்றது.

ஆரையம்பதி பிரதேசத்தில் நபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜெயபூமி அளிப்பொன்றை அந்த அளிப்பின் நிபந்தனைகளை மீறி தனது சகோதரனின் பெயருக்கு மாற்றி பின்னர் காத்தான்குடி வர்த்தகர் ஒருவருக்கு பலகோடி ரூபாய்களுக்கு விற்பதற்கு வ. வாசுதேவன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மோசடி புரிந்திருக்கின்றான் என பிரதேச மக்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இம்முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் விசாரணைப் பிரிவிலிருந்து சென்ற விசாரணையாளர்கள் (!) வாசுதேவனுடன் விருந்துண்டு மகிழ்ந்துவிட்டு விசாரணையை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திடம் பாரம்கொடுத்துவிட்டு திரும்பியுள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் குறித்த விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆதாரங்களுடன் நாம் கடந்த வருடம் கேள்வி எழுப்பியிருந்தபோதும் எமது கேள்வி அமைச்சின் விசாரணைப் பிரிவின் காதுகளுக்கோ அன்றில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கருணாகரின் காதுகளுக்கோ கேட்கவில்லை. எனவே அமைச்சரின் புதிய விசாரணைப் பிரிவினரின் காதுகளுக்கு கேட்கும் என்ற நம்பிக்கையில் குறித்த மோசடி தொடர்பான ஆவணங்களுடனான கட்டுரையை மீண்டும் இங்கு இணைத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்.

அரச காணிகளை தம்பியின் பெயரில் ஆட்டையை போடும் பிரதேச செயலர். ஆதன உறுதியுடன் ஆதாரங்கள் இதோ!

மேலும் 2018.07.24 ம் திகதி அன்றைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய குணநாதன் என்பவன், காணிகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், „தமது பிரிவில் 2011 ம் ஆண்டு தொடர்க்கம் 2017 ம் ஆண்டு வரை இடம்பெற்ற காணிக் கச்சேரிகளில் காணி அற்றோராக பலர் தோற்றி அவற்றிலிருந்து 3247 பேர் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் காணி வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக காணி அற்றோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவித்திருக்கின்றான்.

தற்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமை புரியும் வ. வாசுதேவன் என்பவன் அவனுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற முறைப்பாடு ஒன்றுக்கு விளக்கமளித்துள்ள 2022.01.28 ம் திகதிய கடிதத்தில், „இதுவரை நடைபெற்ற காணிக் கச்சேரிகள் மூலம் காணியற்றவர்களாக 3247 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்திருக்கின்றான்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக வாசுதேவன் கடமையேற்றதிலிருந்து இன்றுவரை நூற்று மேற்பட்ட நபர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளபோதும் காணியற்றோராக இனங்காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3247 ஆகவே காணப்படுகின்றது. எனவே எவ்வாறு பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்? காணிகள் வழங்கப்படும்போது முன்னுரிமை வழங்குவதற்கு என ஏற்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து ஏன் பயனாளிகள் தெரிவு செய்யப்படவில்லை? என்ற விசாரணை இங்கு அவசியமாகின்றது. (விசாரணைக்கு தேவையான சகல ஆவணங்களும் வழங்கப்படும்)

அம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகம் இலங்கையில் காணப்படும் ஊழல்மிகு பிரதேச செயலகங்களில் நான்கு அல்லது ஐந்தாம் இடத்தில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சுமத்தியபோது குறித்த பிரதேச செயலாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்றேன் என உறுதி வழங்கிய அமைச்சரின் அந்த ஆர்வத்தின் மீது நம்பிக்கை கொண்டு இலங்கையில் ஊழல் மிகு பிரதேச செயலகங்களில் முதலாவது இடத்தில் காணப்படும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதே செயலாளரின் மோசடிகள் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அது தொடர்பான மேலதிக தகவல் வேண்டின் இலங்கைநெட் இன் ஆசிரியர் குழுவினை ilankainet@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

ஜெகன்

Read more...

Thursday, November 10, 2022

கஜேந்திரனின் கதிரைக்காக தமிழினமே தன் எதிர்காலத்தை இழக்க வேண்டுமா? விஜயதாஸ வை எதிர்த்ததன் இலக்கு என்ன? ஜெகன்

வெற்றியின் முதற்படி நம்பிக்கையாகும். ஆனால் இலங்கை வரலாற்றில் சந்தித்து வந்திருக்கின்ற சகல இடர்களுக்கும் அவநம்பிக்கையே பிரதான காரணமாகின்றது. இந்த அவநம்பிக்கையானது மக்களிடையே உருவாகின்றதா? அன்றில் உருவாக்கப்படுகின்றதா? எதற்காக? என்பது விளங்கிக்கொள்ளப்படவேண்டியதாகும். அர்ப்ப அரசியல் லாபங்களை அடைந்து கொள்வதற்காக செயற்திறனற்ற, தன்னநம்பிக்கையற்ற அரசியல்வாதிகளால் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களிடையே சூட்சுமமாக அவநம்பிக்கை தொடர்ச்சியாக பெரு விலை கொடுத்து விதைக்கப்படுகின்றது என்பது எவராலும் மறுக்கப்படமுடியாத உண்மையாகும்.

அந்த வகையில் மக்களிடையே அவநம்பிக்கையை விதைப்பதற்கு அரச எதிர்ப்பு மற்றும் உணர்ச்சி பொங்கும் கோஷங்களுடன் அலைந்து திரியும் தெருக்கோமாளியாக செல்வராசா கஜேந்திரன் அடையாளம் காணப்படுகின்றார். பிரபாகரனின் ஆசீர்வாதம் பெற்ற புலித்தூதராக இவர் தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தபோதும், தமிழ் மக்களால் கடந்த 3 தேர்தல்களில் (2010, 2015 மற்றும் 2020) நிராகரிக்கப்பட்டநிலையில், பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் அழுக்கு காவுவதற்காக பின்கதவால் பாராளுமன்று கொண்டு செல்லப்பட்டதன் ஊடாக மக்களின் தீர்ப்பு கிழித்தெறியப்பட்டுள்ளது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட இத்தெருக் காடையன், காணாமலாக்கப்பட்டோர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் சில டொலர் காடையர்களை, தன் கைப்பாவைகளாக கொண்டு மக்களின் இயல்பு வாழ்வினை சீர்குலைத்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் 1983 ஆண்டின் இனக்கலவரத்தினூடாக வீறுகொண்டெழுந்த விடுதலைப் போராட்டத்தின் பெயராலும் அதனை ஒடுக்கும் பெயராலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் காணாமலாக்கப்பட்டிருக்கின்றன என்பது மறைக்கப்படமுடியாத உண்மையாகும்.

விடுலைப் போராட்ட இயக்கங்களில் இணைந்த இளைஞர்கள் இயங்கங்களின் உள்வீட்டு பிணக்குகள் காரணமாக காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். இயக்க மோதல்களின்போது ஒவ்வொரு இயக்கங்களாலும் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டு தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். புலிகள் சகோதர இயக்கங்களை தடை செய்து அவர்களை சரணடையுமாறு அறிவித்தபோது, பெற்றோர் உறவினர்களால் புலிகளின் முகாம்களில் பாரமளிக்கப்பட்ட தமிழ்ப் போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள் காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். புலிகளின் கொள்கையை, செயற்பாட்டை ஏற்காதவர்கள், அதனை விமர்சித்தவர்கள் அவர்களது பெற்றோரால் உறவினர்களால் புலிகளின் முகாம்களில் விசாரணைக்கென பாரமளிக்கப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். வன்னியில் யுத்தத்திற்கு தயாரான காலத்திலிருந்து அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்த பல்வேறு இளைஞர்கள் யுவதிகளை புலிகள் காணாமலாக்கியிருக்கின்றார்கள்.

ஆனால் புலிகளின் கொடுங்கோலாட்சி நடைபெற்ற காலத்தில் புலிகளால் காணாமலாக்கப்பட்டோரின் நீதிக்காக சங்கமமைத்து நீதி கோரக்கூடிய உரிமை எவருக்கும் அந்த கோர ஆட்சியில் வழங்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அவ்வாறானவர்களுக்கு உரிமைகோருவது தேசத்துரோகமாக சித்தரிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில்தான் இன்று காணாமலாக்கப்பட்டோருக்கான சங்கம் ஒன்று இயங்குகின்றது. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் என்ன? இந்த அமைப்பினர் உண்மையிலே காணாமலாக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடுகின்றனரா? இல்லை, அவர்கள் புலம்பெயர் புலிப்பினாமிகளின் நிகழ்சிநிரலின் கீழ் செயற்படும் பொன்னம்பலம் கம்பனியின் வாக்கு வங்கியை தக்கவைக்க வைத்துக்கொள்வதற்காக கூலிக்கு மாரடிக்கும் வெறும் கூலிகள்.

இந்த கூலிகள் இன்று வடகிழக்கெங்கும் இயல்பு வாழ்வை சீர்குலைப்பதற்கு கங்கணம்கட்டி நிற்கின்றனர். இக்கூலிகளின் விசமத்தனமான செயற்பாடுகள் தொடர்பில் சாமானிய மக்கள் தங்களுக்குள்ளே புழுங்கிக்கொண்டாலும், அதனை வெளிப்படுத்த தயங்குகின்றனர். இந்த தயக்கம் சமூக அபிவிருத்தியை, நீதிக்கான பாதையை முடக்குமேயன்றி அப்பாதையில் தங்குதடையின்றி பயணிப்பதற்கு வழிவிடப்போவதில்லை.

கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அவர்களை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினை மேற்கொண்ட குழுவினருக்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் தனது சேவைக்காலத்தில் மேற்கொண்டுள்ள கடின உழைப்பு தொடர்பில் தெரியாமல் இருக்கலாம். எனவே ஒரு அமைச்சராக தனது அறிவை ஆற்றலைக் கொண்டு அவர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றார் என்பதை நினைவூட்டுவது பொருத்தமானதாகும்.

அரசியல் யாப்பின் 19 திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தையும் சட்டம்-ஒழுங்கையும் மேம்படுத்த அயராது உழைத்திருக்கின்றார்.

தகவல் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி, அந்த உரிமையை மக்களின் அடிப்படை உரிமையாக அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்ள அயராது உழைத்திருக்கின்றார்.

பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்ட மூலத்தை நிறைவேற்ற அயராது உழைத்திருக்கின்றார்.

ஆட்சியுரிமைச் சட்டத்தில் காணப்படும் 10 வருடங்களுக்கு காணியொன்றை ஆட்சி செய்தால் உடமை கொள்ளக்கூடிய உரிமை தொடர்பில் யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட விடுப்பு அளிக்கப்படும் சட்டமூலத்தில் திருத்தத்தை கொண்டுவந்து விடுப்பு காலத்தை 2015ம் ஆண்டுவரை நீடிக்க அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்கு மக்களின் காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக விசேட இணக்க சபை சட்டமூலத்தை நிறைவேற்ற உழைத்திருக்கின்றார். இவ்விணக்க சபைகள் வெற்றிகரமாக செயற்பட்டமையால் அத்திட்டம் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் உத்தியோக பூர்வமாக நிறுவப்பட்டிருந்தபோதும், கடந்த நான்கு வருடங்களில் விசாரணை செய்யப்படவேண்டியிருந்த 7500 கோப்புகளில் 65 கோப்புக்களே விசாரணை செய்து முடிக்கப்பட்டிருந்த நிலையில், விஜயதாஸ ராஜபக்ச அமைச்சராக கடமையேற்ற கடந்த நான்கு மாதங்களில் 2000 கோப்புக்கள் முற்றாக விசாரணை செய்து முடிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் நவீன நீதிமன்ற வளாகங்கள் அமைக்க அமைச்சர் அயராது உழைத்திருக்கின்றார்.

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கல்வியமைச்சராக செயற்பட்ட காலத்தில் வவுனியா வளாகத்தினை பல்கலைக்கழக தரத்திற்கு தரமுயர்த்த ஆவன செய்துள்ளார்.

ஆறுக்கு மேற்பட்ட கலாச்சார நிலையங்கள் வடகிழக்கு பிரதேசத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

இலங்கையில் காணப்படும் மிக முக்கியமான சட்டப்புத்தகங்கள் முதற்தடவையாக அமைச்சர் பதவியிலிருந்தபோது தமிழில் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பெரும் எண்ணிக்கையான சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கு ஆவன செய்ததுடன், அவர்கள் சம்பந்தமான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து நிறைவு செய்யும்பொருட்டு கொழும்பில் இரு விசேட உயர் நீதிமன்றங்களும் அனுராதபுரத்தில் ஒரு விசேட உயர் நிதிமன்றும் அமைக்க அயராது உழைத்துள்ளார்.

வடகிழக்கில் கடமை புரிகின்ற பொலிஸார் தமிழ் மொழியில் கடமை புரிவதற்கு ஏதுவாக அவர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்க பல்வேறு வேலைத்திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றார்.

வடக்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தனது அமைச்சின் செயலாளர் தலைமையில் பணிக்குழு ஒன்றை நிறுவியிருக்கின்றார்.

வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு வட மாகாண ஆழுநர் தலைமையில் பணிக்குழு ஒன்றை கடந்த 31.10.2022 ம் திகதி நிறுவியிருக்கின்றார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைமை காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக சென்று நாட்டிருக்கு திருப்பியிருக்கின்ற 11792 மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் தங்கள் அடையாள அட்டைகள், பிறபத்தாட்சிப் பத்திரங்கள், காணி உறுதிப்பத்திரங்கள் என சகல ஆவணங்களையும் தொலைத்துள்ளனர். அம்மக்கள் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு அலுவலகங்களுக்கு சென்று அலைந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அமைச்சரின் ஏற்பாட்டில் இரண்டு நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டு, குறித்த மக்களின் 80 வீதமான பிணக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

அத்துடன் இந்தியாவில் கல்வி கற்று இலங்கை திரும்பியுள்ளவர்களின் கல்விச் சான்றிதழ்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்படாத நிலையில் காணப்பட்டதுடன், அச்சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் விஜயதாஸ ராஜபக்ச அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதுடன், சட்ட விவகாரங்கள் தொடர்பாக தெளிவான விளக்கம் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் விக்னேஷ்வரன் போன்றோர், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் செயற்பாட்டில் பூரண திருப்தி அடைந்துள்ளதாகவும், அவர் யாழ்பாணம் சென்றிருந்தபோது அவர்கள் தங்களது புரண ஆதரவை வழங்கியதாக அவர் பாராளுமன்றில் தெரிவித்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

மக்கள் தங்களது அதிருப்தியை வெளிக்காட்டும் உரிமையை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பு அடிப்படை உரிமையாக அங்கீகரித்திருக்கின்றது. ஆனால் அதிருப்தியை காட்டுகின்றோம் என்ற பெயரில் தனி ஒருவரின் வாக்கு வங்கிக்காக மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்துவது குற்றமாக காணப்படவேண்டும் என்பதுடன் அவ்வாறானவர்களை கடினமான தண்டனைக்குட்படுத்துகின்ற சட்டத்திருத்தத்தின் தேவையை கஜேந்திரன் போன்றோரின் செயற்பாடு மேலும் உறுதி செய்கின்றது.

நீதி கோருகின்றோம் என்ற பெயரில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதி கிடைப்பதை தடுப்பது எந்த வகையில் நீயாயமாகின்றது? யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நாட்டை விட்டு அயல் நாடொன்றில் பல தசாப்தங்கள் அகதிகளாக வாழ்ந்துவிட்டு நாடு திரும்பியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களது அடையாளத்தையே தொலைத்தவர்களாக காணப்படுகின்றார்கள். அவர்களது அடிப்படை தரவுகள் தகமைகள் உறுதி செய்யப்படக்கூடிய நிலைகூட காணப்படாத நிலையில், அரசு அதனை அவர்களது காலடிக்கு சென்று செய்து கொடுக்கும்போது, அக்கருமங்களை நிறைவேற்ற வந்திருப்பவர்களை வெளியேறு என கோஷமிடுவது மக்கள் விரோத செயற்பாடே அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஆயிரக்கணக்கான உயிர்களை எவ்வித இலக்குமின்றி காவுகொண்டு பயங்கரவாதமாக மாற்றமடைந்தபோது, கை கட்டி வாய்மூடி நாம் யாவரும் மௌனமாக நின்றதன் விளைவுதான் இன்று ஆகக்குறைந்தது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்களாலும், முன்னாள் ஆயுததாரிகளாலும் நாம் ஆட்சிசெய்யப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

எனவே கஜேந்திரன் போன்ற தெருக்காடையர்கள் தொடர்ந்தும் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பது முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்பதுடன் மக்களின் இயல்பு வாழ்வுக்கும் இன நல்லிணக்கத்திற்கும் எதிரான இச் சமூகவிரோதிகளை சட்டத்தின் முன்நிறுத்தி கூண்டில் அடைப்பதை தவிர மாற்றுவழி கிடையாது என்பதே எனது கருத்தாகும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com