Saturday, September 28, 2019

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தைத் தோற்கடிக்க ரணில், நவீன், சம்பிக்க சூழ்ச்சி!

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவைத் தோற்கடிப்பதற்கு ரணில், ரவி, நவீன், சம்பிக்க ஆகியோர் சூழ்ச்சி செய்துகொண்டிருப்பதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார். நேற்று (27) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையிலிருந்து சில கருத்துக்கள்...

நாங்களும் ஏன் சஜித் வேட்பாளராவதற்கு விரும்பினோம்?

கடந்த மூன்று மாதங்களாக சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேட்பாளராக நியமிக்கும்படி நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்து குரல் கொடுத்தோம். சஜித் பிரேமதாச வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் ஏன் அவரை நாங்கள் வேட்பாளராக நியமிக்கக் குரல் கொடுத்தோம் என்பதைத் தெளிவுறுத்தியாக வேண்டும்.

நாங்கள் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கோரியதற்கான காரணம், அவரை எங்களால் இலகுவாகத் தோற்கடிக்க முடியும் என்பதனாலேயே. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே இருமுறை நாமல் ராபஜபக்ஷவினால் அவர் தோற்கடிக்கப்பட்டார். திஸ்ஸமகாராம தேர்தல் பிரிவில் டீ.வி. சானக்கவினால் தோற்கடிக்கப்பட்டவர். அவர் வசித்துவருகின்ற லுணுகம்வெகர பிரதேச சபையில், அப்பிரதேச சபையின் தலைவராக இருந்த ரஸிக்க தினேஷினால் தோற்கடிக்கப்பட்டவர். அதனால் சஜித் பிரேமதாசவைத் தோற்கடிக்கச்செய்ய எங்களுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அவசியமில்லை, லுணுகம்வெகர பிரதேச சபையின் ரஸிக்க தினேஷினால் அதனைச் சாதிக்க இயலும்.

சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டையின் தலைவராகி 2001 ஆம் ஆண்டு போட்டியிடும்போது ஐதேக 40% வாக்குகளையே பெற்றுக் கொண்டது. அவரது தலைமையின் கீழ் ஐதேக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொடர்ந்தேர்ச்சியாக பின்னடைவையே சந்தித்தது. 2001 ஆம் ஆண்டு 40% வாக்குகள் 2010 ஆம் ஆண்டாகும்போது 30% வீதமாக வீழ்ச்சியடைந்தது. சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரானால் நாடு தழுவிய ரீதியில் ஐதேக ஹம்பாந்தோட்டையில் தழுவிய வீழ்ச்சியைப் போன்ற வீழ்ச்சியையே சந்திக்கும்.

சஜித்தின் ஆளுமையை மட்டிட நாங்கள் புதிதாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ரவி கருணாநாயக்க சொல்வதைப் போல, க.பொ.த (சா.த) பரீட்சையில் கூட சித்தியடைய முடியாத - தனது தேர்தல் பிரிவில் வெற்றியீட்ட முடியாத ஒரு வேட்பாளரே சஜித். சரத் பொன்சேக்கா சொல்வதைப் போல, பெட்டி வீடுகளைக் கட்டுவதைப் போல நாட்டை ஆட்சி செய்யலாம் என நினைப்பவர். பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறுவதைப் போல குடும்பத்தையே கருதுகோளாய்க் கொண்ட வேட்பாளர். லக்ஷ்மன் கிரியல்ல சொல்வதைப் போல சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறவியலாத வேட்பாளர். துாரநோக்கு இன்றிய கையாலாகாத வார்த்தை ஜாலங்களைக் கக்குகின்ற ஒருவராகவே நாங்கள் காண்கின்றோம்.

சஜித்தைத் தோற்கடிக்கும் சூழ்ச்சியில் ரணில், ரவி, ரணவக்க

சஜித் பிரேமதாசவைத் தோற்கடிப்பதற்காக நாங்கள் புதிதாகக் கஷ்டப்படத் தேவையில்லை. அதனை ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க, பா.ச. ரணவக்க, நவின் திசாநாயக்க ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மிகவும் கச்சிதமாக நிறைவேற்றுவார்கள். சஜித்தை ஜனாதிபதியாக்குவதென்பது ரணில் விக்கிரமசிங்கவை அரசியலிலிருந்து ஓரங்கட்டச் செய்யும் செயலாகும். அதேபோன்று தங்களை விட வயதில் குறைந்த சஜித் ஜனாதிபதியாவதென்பது ரவி கருணாநாயக்க, நவின் திசாநாயக்க, பா.ச. ரணவக்க போன்றோரின் ஜனாதிபதி அபிலாசையை இல்லாதொழிப்பதாகும். சஜித் தோற்றால் 2024 இல் மீண்டும் ஒரு சிறந்த வேட்பாளர் தேவைப்படுவார். அப்போது ஜனாதிபதியாவதற்கு கனவு காண்பவர்களுக்கு அது ஒரு சந்தர்ப்பமாக அமையும். அதனால் இவர்கள் தற்போது சஜித்தைக் காலால் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இறுதியில் நடப்பது என்னவென்றால், ஜனாதிபதியாவது எப்படிப் போனாலும் பிரதித் தலைவர் என்ற நிலையும் இல்லாமலாவதே.

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டது அவரது கெட்ட காலத்திற்கே. சஜித் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் தற்போது இருக்கின்ற கட்சியின் பிரதித்தலைவர் என்ற நிலையும் இல்லாமலாகும். நவம்பமர் மாதம் 17 ஆம் திகதி சஜித் பிரேமதாசவை ரணில் விக்கிரமசிங்க அழைத்து என்ன சொல்வார் தெரியுமா?

"நான் தோல்வியைத் தழுவினால் இராஜினாமாச் செய்யவே இருந்தேன். ஆயினும் நீங்கள் தோற்றதனால் நான் இராஜினாமாச் செய்ய வேண்டியதில்லையே. அதனால் கட்சியில் தலைமைப் பொறுப்பில் என்றும் நானே இருப்பேன். நீங்கள் அவசரமாக பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுங்கள். மீண்டும் 2024 இலும் கோத்தபாயவே ஜனாதிபதியாவார். ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலில் தோற்ற உங்களை மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவியலாது. அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரை நாங்கள் தெரிவுசெய்து அவருக்குப் பயிற்சியளிக்க வேண்டும். அவருக்கு நாங்கள் பிரதித் தலைவர் பதவியை வழங்க வேண்டும். அதனால் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்"

முடியுமானால் ஐந்தையும் செய்யாதிருங்கள்... சஜித்திற்குச் சவால்!

கட்சி வேட்பாளராவதற்காக சஜித் ஆற்றிய உரைகளால் முழு நாடுமே வயிறு குலுங்கச் சிரித்தது. நானே ஜனாதிபதியாவதற்குப் பொறுத்தமானவன், 21 மணி நேரம் பணிபுரிவேன், பிச்சைக்காரனைப் போல நடுத்தெருவில் யாசகம் கேட்டுச் சீவிப்பதைப் போல சுவையான கதைகள் பல அவர் சொன்னார். அது எங்களுக்கு சுவையான கதைகளாக இருந்தபோதும், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவராக நின்று உரையாற்றும் ஒரு மடையன் கூறும் கதையாகவே அவை இருந்தன. அதனால் நான் சஜித் பிரேமதாசவுக்கு ஒரு சவால் விடுகிறேன். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சரியாக 50 நாட்களே இருக்கின்றன. முடியுமானால் 50 நாட்களுக்குள் எருமை மாட்டுக் கதைகள் ஐந்து சொல்லாமலிருங்கள். நாங்கள், நீங்கள் ஆற்றிய எருமை மாட்டுக் கதைகளைக் கணக்கிட்டு, 'சஜித்தின் சுவைமிகு கதைகள்" எனும் தலைப்பிட்டு புத்தகமொன்று வெளியிடுவோம். அதேபாேல கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் 'அரச மாளிகை விகடகவி"ப் பதவியையும் உங்களுக்கு நாங்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

-"கலைமகன் பைரூஸ்"

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com