Saturday, March 2, 2019

இலங்கை விமானப்படையின் பணிகள் குறித்து, ஜனாதிபதி பாராட்டு

68 வருட காலமாக தாய் நாட்டின் இறைமையையும், பௌதீக ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக, இலங்கை விமானப்படை மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டத்தக்கதாகுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் ஹிங்குரக்கொட விமானப் படை முகாமில் கோலாகலமாக இடம்பெற்ற இலங்கை விமானப் படையின் 68வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இவ்வருடம் விசேட கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுடன் இடம்பெறும் இந்த ஆண்டு நிறைவு விழாவில், இலங்கை விமானப் படைப் பிரிவினர், தாய்நாட்டிற்காக மேற்கொண்ட முக்கிய பணிகளை பாராட்டி ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

தொழில் திறன்கள், தொழிநுட்ப அறிவு, ஒழுக்க பண்பாடு, அர்ப்பணிப்பு ஆகிய உயர்ந்த பண்புகளுடன் உலகின் முன்னணி விமானப் படைகளுக்கு நிகராக செயற்படும் இயலுமையும், தொழிநுட்ப திறன்களும் எமது விமானப் படையினரிடம் உள்ளதென்று ஜனாதிபதி; நிகழ்வில் வைத்து தெரிவித்தார்.

அத்துடன் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படையினருக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது அனுதாபத்தையும், நன்றியையும் தெரிவித்தார்.

இன்று முற்பகல் ஹிங்குராக்கொட விமானப்படை முகாமுக்கு சென்ற ஜனாதிபதியை, விமானப் படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு விசேட அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com