Thursday, January 31, 2019

கோட்டாவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு, பெப்ரவரியில் - மேல் நீதிமன்றம்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிக்கு எதிரான வழக்கை, விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது தொடர்பான தீர்ப்பை, எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி அறிவிக்க கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிர்க்கி எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தலைமை நீதிபதி சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த வழக்கை விசாரிக்க கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று, பிரதிவாதிகள் தரப்பில் எதிர்ப்பு வாதங்கள் வௌியிடப்பட்டன.

இந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி இரண்டு தரப்பும் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை கருத்தில் கொண்டு, பெப்ரவரி 11ம் திகதி விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது தொடர்பான தீர்ப்பை மேல்நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com