Wednesday, July 16, 2014

ஒபாமாவா உளவுத்துறையா—யார் வாஷிங்டனை நடத்துவது? Bill Van Auken

பேர்லினில் நடந்து வரும் கைது நடவடிக்கைகள், தேடுதல் வேட்டைகள், அடுக்குமாடி கட்டிடங்களில் சோதனை நடவடிக்கைகள் மற்றும் ஒரு பரந்த உளவு வலையத்தைக் குறித்த விவாதங்கள் என இவையனைத்தும், ஒருபுறம் KGB க்கும், மறுபுறம் அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் உளவுத்துறை சேவைகளுக்கும் இடையே அந்நகரம் ஒரு மூடிமறைக்கப்பட்ட யுத்தகளமாக இருந்த ஒரு காலக்கட்டத்தை விளக்கமாக சித்தரித்த ஜோன் லு கரே இன் பனிப்போர் காலத்திய நாவல்களை நினைவூட்டுகின்றன.

ஆனால் இன்றோ, ஜேர்மன் பொலிஸ் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளின் உட்பொருளாக இருப்பது சோவியத் உளவாளிகள் அல்ல, மாறாக அமெரிக்க உளவாளிகளாவர். அந்நாட்டின் முக்கிய உளவுத்துறை அமைப்பான BNDஇன் ஒரு பணியாளர் CIAக்கு நூற்றுக் கணக்கான இரகசிய ஆவணங்களை வழங்கியதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு காரியாளரும் விசாரணையின் கீழ் உள்ளார். இன்னும் ஏனையவர்களும் கைது செய்யப்படலாம்.

இந்த விவகாரத்தின் முக்கியத்துவமானது, CIA இன் பேர்லின் நிலைய தலைவரை, சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் வியாழனன்று வெளியேற்றியதாலும் மற்றும் அத்துடன் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் முதல்முறையாக வாஷிங்டன் மீது பேர்லின் செயலூக்கத்துடனான உளவுவேலைகளைத் தொடங்கும் என்ற ஜேர்மன் அதிகாரிகளிடமிருந்து வந்த கருத்துக்களாலும் அடிக்கோடிடப்படுகிறது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னால் நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்க-ஜேர்மன் உறவுகளில் ஏற்பட்டிருக்கும் மிக ஆழமான நெருக்கடியை இந்த அத்தியாயம் குறிக்கின்றது.

இருந்த போதினும், ஜேர்மனியில் அமெரிக்காவின் உளவுவேலைகள் குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு முற்றிலுமாக ஒன்றும் தெரியாது என்றும், சான்சிலர் மேர்க்கெல் உடன் அவர் ஒரு தொலைபேசி கலந்துரையாடலை நடத்தியபோது அன்றைய தினம் கூட, அவருக்கு அந்த கைது நடவடிக்கை குறித்து கூறப்பட்டிருக்கவில்லை என்றும், நமக்கு கூறப்படுகிறது.

உளவுவேலை விவகாரத்தின் மீது ஒபாமாவும் CIAவும் இருதரப்பும் மவுனமாக இருக்கின்ற போதும், அவருக்குத் தெரியாது என்ற கதை வெளிப்படையாக வெள்ளை மாளிகையால் கசிய விடப்பட்டதாகும். அது குடியரசுக் கட்சியினரிடம் இருந்தும் மற்றும் உளவுத்துறை சமூகத்தின் சில பிரிவுகளிடமிருந்தும் தாக்குதலைத் தூண்டிவிட்டுள்ளது. அந்நடவடிக்கைகளுக்காக "CIA பலிகொடுக்கப்படுவதாக" என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அவருக்கு ஒன்றுமே தெரியாது என்ற வாதங்களின் மீது ஒபாமாவின் நோக்கம் என்னவென்பது தெளிவாக தெரியவில்லை. ஜேர்மனியில் இந்த புதிய அமெரிக்க உளவு மோசடியானது, அமெரிக்க உளவு நிறுவனங்கள் மில்லியன் கணக்கான ஜேர்மானியர்களின் மின்னணு தகவல் தொடர்புகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என்பதை NSA இரகசியங்களை வெளியிட்டவரான எட்வார்ட் ஸ்னோவ்டனின் ஆவணங்கள் வெளியாகி ஒரு ஆண்டுக்குப் பின்னர் வருகிறது. மேலும், ஒற்றுக் கேட்கப்பட்ட பலருடைய கை தொலைபேசிகளில் மேர்கெலினதும் ஒன்றாக இருந்தது என்பது அம்பலப்படுத்தப்பட்ட ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் வெளிவருகிறது.

அப்போதிருந்தே, அமெரிக்க நிர்வாகம் உக்ரேனிலும் மற்றும் கிழக்கின் வேறு இடங்களிலும் வாஷிங்டனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளோடு பேர்லினை நெருக்கமாக அணிதிரட்ட முனைந்துள்ள போதினும் மற்றும் ஜேர்மனியின் உளவுத்துறை சேவையோடு நெருக்கமாக கூடி வேலை செய்து வருகின்ற நிலையில், அமெரிக்க நிர்வாகம் ஜேர்மனியில் இந்த வெளியீடுகளின் மீதான பொதுமக்களின் கோபத்தைத் தணிக்க முனைந்துள்ளது. ஜேர்மன் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகள் அதிகளவில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பிரத்யேக மூலோபாய நலன்களை முன்னெடுக்க இன்னும் மேலதிகமாக சுதந்திரமான வெளியுறவு கொள்கைகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்ற நிலையில், இந்த புதிய வெளியீடுகள் ஜேர்மனிய மக்களின் குரோதத்திற்குப் புத்துயிரூட்ட அச்சுறுத்துகின்றன.

54 ஆண்டுகளுக்கு முன்னர், பிரான்சிஸ் கேரி பவர்ஸால் செலுத்தப்பட்ட ஒரு உயர்மட்ட இரகசிய U-2 உளவு விமானம் சோவியத் ஒன்றியத்தின் மீது பறக்கையில் சுட்டு வீழ்த்தப்பட்ட போது, ஜனாதிபதி டுவைட் டி. ஐசன்ஹோவர் எதிர்கொண்ட சில முக்கிய அம்சங்களை ஒபாமா முகங்கொடுக்கும் இந்த குழப்பமும் பகிர்ந்து கொள்கிறது. அந்த சம்பவமும் அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கை நோக்கங்களோடு சம்பந்தப்பட்ட ஒரு மோசடியாக உருவாகி இருந்தது.

ஒரு கிழக்கு-மேற்கு உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, மே 1, 1960இல் அந்த U-2 வீழ்த்தப்பட்ட நிலையில், தட்பவெப்ப நிலையை ஆய்வு செய்வதற்கான அந்த விமானம் வெடித்து சிதறிவிட்டதாக கூறி, அந்த விவகாரத்தை மூடிமறைக்க—ஒரு அவமானகரமான விளைவோடு—ஐசன்ஹோவர் நிர்வாகம் தொடக்கத்தில் முயற்சித்து இருந்தது. இருந்த போதினும், சோவியத்களால் அந்த விமானியை சிறைபிடித்து, அமெரிக்க வாதத்தை உடனடியாக பொய்மையென்று நிரூபிக்க முடிந்திருந்தது. அதே சமயத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் "சமாதான சகவாழ்வு" கொள்கையின் அடிப்படையில், அந்த உளவு விமானத்திற்காக CIAயும் மற்றும் அதன் அரசியல்ரீதியாக சக்திவாய்ந்த இயக்குனர் ஆலன் டுல்லஸூம் தான் முழுவதுமாக குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்கள், ஐசன்ஹோவர் அதற்கு பொறுப்பாக மாட்டார் என்று மாஸ்கோவ் அதிகாரத்துவம் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

அந்த விவகாரத்தின் மீதான வெள்ளை மாளிகையின் மவுனம், செனட் தளத்தில் ஐசன்ஹோவர் மீது விமர்சனங்கள் எழுவதற்கு இட்டுச் சென்றது. U-2 உளவுவேலை குறித்து ஐசன்ஹோவருக்கு தெரியாது என்ற செய்திகள் "பெடரல் அதிகாரத்துவத்தின் மீது இந்த நிர்வாகம் ஏதேனும் நிஜமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறதா இல்லையா" என்ற கேள்வியை எழுப்புவதாக அப்போதைய பெரும்பான்மை பெற்ற ஜனநாயகக் கட்சியின் சபாநாயகர் மைக் மான்ஸ்பீல்ட் தெரிவித்தார். அமெரிக்க பத்திரிகைகளும், உளவுத்துறை அமைப்பின் மீது அமெரிக்க ஜனாதிபதி கட்டுப்பாட்டைச் செலுத்த தவறிவிட்டதாக விமர்சித்து அதே கருத்துருவிற்கு குரல் கொடுக்க தொடங்கி இருந்தன. அந்த விமானம் வீழ்த்தப்பட்ட பத்து நாட்களுக்குப் பின்னர், அந்த உளவுத்துறை திட்டத்திற்கு பொறுப்பேற்பதாக கூறி ஒரு பொது அறிக்கையை வழங்க ஐசன்ஹோவர் நிர்பந்திக்கப்பட்டார்.

சில மாதங்களுக்குப் பின்னர், அவர் எதை "இராணுவ-தொழில்துறை கூட்டமைப்பு" என்று அழைத்தாரோ அதன் வளர்ச்சியில் உள்ளடங்கி இருந்த ஆபத்துக்களைக் குறித்து எச்சரித்து, அவரது நிறைவுநாள் உரையை வழங்கி இருந்தார். “அரசாணை பெறுவதன் மீதான அதன் செல்வாக்கு" “அதிகார துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்கான பேரழிவுகரமான" அபாயத்தை முன்னிறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் இன்று, ஜேர்மன் விவகாரத்தில் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் மீது ஒபாமா "ஏதேனும் நிஜமான கட்டுப்பாட்டைக்" கொண்டிருக்கிறாரா இல்லையா என்பது குறித்து காங்கிரஸில் இருந்தோ அல்லது பெருநிறுவன ஊடகங்களில் இருந்தோ எவரொருவரும் கேள்வி எழுப்பவில்லை, அவை, இராணுவத்துடன் இணைந்து, ஐசன்ஹோவர் கூட ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திராத அளவுக்கு எல்லாவற்றையும் கடந்து வளர்ந்துள்ளன. தொடர்ச்சியான மற்றும் உயிர் பறிக்கும் வன்முறை, ஆத்திரமூட்டல்கள் மற்றும் பாரிய உளவுவேலைகளை உலகம் எங்கிலும் நடத்தி வருகின்ற நிலையில், வாஷிங்டனில் நிஜமான அதிகாரத்தைச் செயல்படுத்தி வருகின்ற ஒரு பரந்த, இரகசிய இராணு-உளவுத்துறை எந்திரம் வளர்ந்திருப்பதில் ஐசன்ஹோவரின் எச்சரிக்கை முற்றிலுமாக உணரப்பட்டுள்ளது.

அவ்விடயத்தைப் பொறுத்த வரையில், CIA, NSA மற்றும் பெண்டகன் மீது அவர் தமது அதிகாரத்தை செலுத்த வேண்டிய அவசியமிருப்பதாக கூட ஒபாமா உணரவில்லை. அவற்றின் பெயரளவிலான "தலைமை தளபதியாக" சேவை செய்து கொண்டு, அவருக்கு அவற்றிடம் எந்தவொரு தனிப்பட்ட நலன்களும் இல்லை. இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவரது வேலையாக இல்லை, மாறாக ஒட்டுமொத்த உளவுவேலைகள், டிரோன் படுகொலைகள்—இவற்றின் இலக்குகளை வெள்ளை மாளிகையின் "பயங்கரவாத செவ்வாய்கிழமைகளில்" தேர்ந்தெடுப்பதற்கு அவர் உதவுகிறார்—மற்றும் இராணுவ படுகொலைகள் இவையனைத்தும் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு" அவசியமான கருவிகளாகும் என்றும், மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் ஆட்சி முறைகளோடு ஒத்திணைந்திருப்பதாகவும் அமெரிக்க மக்களையும் மற்றும் உலக மக்களையும் சாந்தப்படுத்தும் முயற்சியோடு, பொதுதொடர்பு சேவைகளை வழங்குவதே அவர் வேலையாக இருக்கிறது.

இரகசிய சிஐஏ முகவர்களுக்கான ஒரு முன்அமைப்பாக சேவை செய்து கொண்டே அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு தேவையான உளவுத்துறை தஸ்தவேஜூகளை வழங்கி வந்த வணிக சர்வதேச பெருநிறுவனங்களுக்கு, பட்டப்படிப்பை முடித்து வந்ததும் ஒரு "பகுப்பாய்வாளராக" அவரது முதல் வேலையைத் தொடங்கிய ஒபாமா, இந்த இராணுவ-உளவுத்துறை கூட்டமைப்பிற்கு உருவகமாக திகழ்கிறார். அதிமுக்கிய உளவுத்துறை கடிதங்கள் மற்றும் இரகசிய தஸ்தாவேஜூகளை மீளாய்வு செய்வதில் அவர் மிகவும் சௌகரியமாக இருக்கிறார் என்பதே இப்போதும் நிலவும் சூழலாக இருக்கிறது.

இந்த ஜேர்மன் உளவுத்துறை அத்தியாயமானது, அமெரிக்க ஜனநாயகத்தின் இறுதி நெருக்கடியையும் மற்றும்—இருபதாம் நூற்றாண்டில் அவை இரண்டு முறை செய்திருந்ததைப் போல—ஒரு புதிய உலக யுத்தத்தை வளர்த்தெடுக்க அச்சுறுத்தும் வகையில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான அதிகளவிலான பதட்டங்களையும் இரண்டையும் அடிக்கோடிட சேவை செய்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com