Friday, June 6, 2014

எமது மகளின் சாவுக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என சந்தேகமாக உள்ளது! சட்டத்தரணி மீது எமக்கு நம்பிக்கை இல்லை!

எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் ஆனால் அது கிடைக்காமல் போய்விடுமோ என்று தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொன்சலிற்றாவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். யாழ். குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த ஏப்பிரல் மாதம் 14ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா தொடர்பிலான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் முன்னிலையில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது வழக்கினை விசாரணை செய்த நீதவான் மீண்டும் வழக்கினை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார். இன்றைய விசாரணையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பாரிய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மன்றில் சாட்சியமளித்திருந்தார்.

வழக்கு விசாரணைகளின் பின்னர் கொன்சலிற்றாவின் பெற்றோர்களிடம் இன்றைய வழக்கு விசாரணை தொடர்பாக கேட்ட போது, இன்று எங்களை விசாரணைக்கு அழைக்கவில்லை பொலிசாரே சாட்சியம் அளித்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைகளில் எமக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என தற்போது எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எமது மகளின் மறைவுக்கு பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது தானாக முன்வந்த யாழில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவர் தான் இந்த வழக்கில் ஆஜராகி உங்களுக்கு நீதியை பெற்று தருவேன் என்று கூறினார்.

அதனை நாங்கள் நம்பி அவரை ஏற்றுகொண்டோம். அதன் பின்னர் அவர் கடந்த இரண்டு தவணைகளுக்கும் மன்றுக்கு சமூகமளிக்க வில்லை. நாம் அவரை தொடர்பு கொண்டபோது தனக்கு வேறு வழக்கு இருபதாகவும் தான் இந்த வழக்குக்கு சட்ட தரணியையும் ஒழுங்கு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவரால் ஒழுங்கு செய்யப்பட சட்டதரணியே கடந்த தவணைகளில் எமக்காக மன்றில் ஆஜராகியிருன்தனர். குறித்த சட்டத்தரணி எமக்காக வாதாடுவது தொடர்பில் எமக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த தவணையின் போது வழக்கு விசாரணை முடிந்த பின்னர் எம்மை அழைத்த அவர் ஊடகங்களுக்கு இந்த வழக்கு தொடர்பாக எதனையும் தெரிவிக்க வேண்டாம் என மிரட்டும் பாணியில் எமக்கு கூறி இருந்தார்.

அது மட்டுமின்றி நீங்கள் இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்தால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும் அதன் பின்னர் எதிராளிகள் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்ய கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். அதனை நம்பி நாம் கடந்த தவணை விசாரணைகள் முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் நீதிமன்றின் மற்றைய வாசலால் வெளியேறி சென்றோம்.

அதன் பின்னர் நேற்று இன்றைய தினம் வழக்கு இருக்கிறது நீங்கள் நாளை நீதிமன்றில் எமக்காக ஆஜராகுவீர்கள் தானே என குறித்த பிரபல சட்டத்தரணியுடன் தொடர்பு கொண்டபோது தனக்கு வழக்கு இருபதாகவும் தான் முதலில் ஒழுங்கு செய்த சட்டத்தரணி இன்றும் உங்களுக்காக ஆஜர் ஆவார் எனவும் தெரிவித்தார்.

அவரால் ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி மீது எமக்கு நம்பிக்கை இல்லாதா காரணத்தால் நாம் வேறு ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்திருந்தோம். அதனை அடுத்து அவரால் ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி ஏன் வேறு ஒருவரை ஒழுங்கு செய்தீர்கள் என எம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் எமக்கு அவர் மீது இன்னும் அதிகமாக நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த தவணை வழக்கு விசாரணைகளின்போது கொன்சலிற்றாவின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாக அறிக்கை சமர்பிக்கும் படி பொலிசாருக்கு நீதவான் உத்தரவு இட்டு இருந்தார். அதன் பிரகாகரம் இன்றைய தினம் பொலிசாரால் கொன்சலிற்றாவின் இறப்புக்கு முன்னரான ஒரு மாத கால தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

அது தொடர்பில் கொன்சலிற்றாவின் பெற்றோரால் இன்று ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி கொன்சலிற்றாவின் இறப்புக்கு முன்னரான 3 மாத கால தொலைபேசி அழைப்பு தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்பிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

ஏனெனில் கொன்சலிற்றாவின் இறப்புக்கு ஒரு மாத காலத்திற்கு முதலே கொன்சலிற்றாவின் பெற்றோரால் அவருடைய தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. அதன் பிறகு அவருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வரவில்லை என கூறியதை ஏற்றுக்கொண்ட நீதவான் கடந்த 3 மாத கால தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவு இட்டார்.

கொன்சலிற்றாவின் இறப்புக்கு யாழ். ஆயர் இல்லத்தை சேர்ந்த இரு பாதிரிமார்கள் தான் காரணம் என கொன்சலிற்றாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com