Wednesday, June 18, 2014

தர்காநகருக்குள் பிரவேசித்த எந்தவொரு பௌத்தனும் கையில் தடிகூட வைத்திருக்கவில்லை…!

மாத்தறை ஆனந்த தேரர் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றார் என்கின்றனர் முஸ்லிம்கள்!

நேற்று முன்தினம் தர்காநகரில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு சென்றிருந்த எந்தவொரு பௌத்தனின் கையிலும் ஒரு தடி கூட இருக்கவில்லை எனவும், ஆயுததாரிகளில் ஒருபகுதியினர் அங்கு வந்து பௌத்த துறவிகளைத் தாக்கியதாகவும் தேசிய சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் மாத்தறை ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டிருக்கின்றார்.

“எத்தனை பேர் இறந்தார்கள்… எத்தனை பேர் காயப்பட்டார்கள் என்று சரியாகக் கணிப்பிடக்கூடிய சூழ்நிலை இல்லை. குறித்த நிகழ்வு தொடர்பில் ஊடகங்களில் உண்மை வெளியாகவில்லை. சிங்கள பௌத்தர்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்துள்ள ஆட்சியாளர்கள்தான் சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக நிற்கின்றார்கள்” என அவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், குறித்த தேரரின் கூற்று விசனிக்கத்தக்கதும், நகைப்புக்குரியதுமாகும். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படுகின்ற செயலாகும்.

சமூக வலைத்தளமான முகநூலில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து உடனுக்குடன் வெளியான படங்களும், காணொளிகளும் பகிரப்பட்டிருந்தன. “வட்ஸப்” தொலைபேசி மென்பொருள் மூலம் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

ஸீஸீ கமெராக்களில் பதியப்பட்டிருந்த காணொளிக் காட்சிகள் தொழிநுட்ப வசதியைக் கொண்டு சோடிக்கப்பட்டவை அல்ல.

இந்த சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் தொடர்பில் தனக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனாவின் தலைவர் குறிப்பிட்டிருப்பதும், அவர் தலைமைப் பதவியிலிருந்து விலகுவது தொடர்பிலும் தகவல்கள் மாத்தறை தேர்ருக்கு மறைக்கப்பட்டிருக்கின்றது போலும்… அல்லது மறைக்கின்றார் போலும் என பல தரப்பினரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்…

தற்போது சர்வதேச ஊடகங்களில் இலங்கையில் நடைபெற்ற இந்த இனச்சுத்திகரிப்பு விடயம் தொடர்பிலான செய்திகள் பதியப்பட்டு வருகின்றன. அவற்றில் வெளிவந்துள்ள செய்திகளும், ஆசிரியத் தலையங்களும் முஸ்லிம்களுக்கு மன ஆறுதலைத் தந்துகொண்டிருக்கின்றன எனவும், இது தொடர்பில் நாடெங்கிலும் கவனயீர்ப்புப் போராட்டங்களும், இலண்டன் முதலான சர்வதேச நாடுகளில் கவனயீர்ப்புப் போராட்டங்களும், இந்தியாவில் இலங்கைத் தூதுவராலயத்தின் முன்பாக தௌஹீத் ஜமாஅத் ஒழுங்கு செய்திருந்த பாரிய ஆர்ப்பாட்டமும் தற்போது மூடி மொழுகுவதற்குக் வழிவகுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மாத்தறை ஆனந்த சங்கர தேரர் எந்தவொரு பௌத்தனின் கையிலும் தடி இருக்கவில்லை என்கின்றார். என்றாலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பௌத்த துறவிகளின் கைகளில் தடி மற்றும் இரும்புக் குழாய்கள் இருந்தமை படங்களில் தெளிவாக இருக்கின்றன. முஸ்லிம்களின் பாரிய வியாபார நிலையங்களுக்குள் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் உள்நுழைந்து அங்குள்ள பொருட்களை நாசம் செய்வதும், பொருட்களைச் சூறையாடுவதும் ஸீஸீ கமெராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

நேற்றைய (17) திகதி கூட தென் மாகாணத்தில் உள்ள ஹம்பாந்தோட்டை பள்ளிவாசலுக்கு முன்பாகஉள்ள சிறிய கடைக்கு சிங்களக் காடையர்களில் ஒருசிலர் தீவைத்துள்ளனர். அது பாரிய அளவில் பரவாமல் இருப்பதற்கு ஊர்மக்கள் உடனடியாக ஆவன செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை, பேருவளை, தர்காநகர் சம்பவம் இவ்வாறு தீப்பற்றி எரியும் நிலையில் அரசாங்கத்துக்கு “அரோஹரா” போடும் சிவப்புத் தொப்பிகளும், எல்லாம் தெரியும் என்று துதிபாடும் பெரும்பாலான முஸ்லிம் தலைமைகளும் பேசாமடந்தையாக இருப்பதில் நாடெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்கள் மீது அதிருப்தி தெரிவித்தும், அர்த்தமில்லாத அசிங்கங்கள் எனவும் விசனப்படுகின்றனர்.

பல்லாயிரம் கோடிக்கணக்கான இழப்புக்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருப்பது தொடர்பில் மாத்தறை ஆனந்த சங்கர தேரர் பேசாதிருக்கின்றார் என்பதும், தற்போதும் சில வீரப்புடைய பௌத்த துறவிமார்கள் இனவாதத்தைக் கக்கிவருவதும் இன்னும் புகையைக் கிளப்பும் எண்பதே திண்ணம். முஸ்லிம்களின் வணிகத்தை முற்று முழுதாக வேறோடு சாய்ப்பதற்கே இந்த அடாவடித்தனம் என்பதை சகல முஸ்லிம்களும் தற்போது நன்கு புரிந்து கொண்டுள்ளனர் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

மாவனல்லையில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடக்காமல் இருப்பதற்காக பொலிஸார் தக்க நடவடிக்கை எடுத்திருந்ததும், நீதிமன்றம் பேரணி நடாத்துவதற்கு இடம் கொடுக்காமை தொடர்பிலும், வெலிகமவில், மாத்தறையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் முஸ்லிம்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் தாங்கள் பாதுகாப்பளிப்பதாக உத்தரவாதமளித்திருப்பதும் முஸ்லிம்களிடையே சற்று மன அமைதியைத் தந்திருப்பதாக முஸ்லிம்கள் பேசிக் கொள்கின்றனர்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com