Saturday, January 18, 2014

ஆசியா: யுத்தத்திற்கான 21ஆம் நூற்றாண்டு வெடிஉலை! Peter Symonds

ஓராண்டிற்கு முன்னர் Foreign Policyஇல் எழுதுகையில், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரூட் எச்சரித்தார்: “கிழக்கு ஆசியாவில் இப்போது சாதாரண காலகட்டம் இல்லை. கிழக்கு சீன மற்றும் தெற்கு சீன கடலில் பிராந்திய உரிமைகோரல் மோதல்களினால் அதிகரித்துவரும் பதட்டங்களோடு சேர்ந்து, 21ஆம் நூற்றாண்டில் இந்த பிராந்தியத்தில் மீண்டெழுந்திருப்பவை—கடல் பிரதேசத்தின் மீது ஒரு வெடிஉலையாக—ஒரு நூற்றாண்டிற்கு முந்தைய பால்கன்களின் கடல் எல்லை பிரச்சினைகளைப் பாரியளவில் ஒத்திருக்கின்றன.

இன்னும் ஓராண்டிற்குப் பின்னர், முதலாம் உலக யுத்தம் வெடித்ததில் இருந்து 100'ஆம் ஆண்டை உலகம் குறிக்கின்ற வேளையில், ஆசியாவில் எழுச்சி பெற்றுவரும் மற்றொரு உலகளாவிய பேரழிவிற்கான ஆபத்துக்கள் குறைந்து விடவில்லை, மாறாக அதிகளவில் கூர்மையாக உள்ளன. ரூட்டால் அவரது கட்டுரையில் பரிந்துரைக்கப்பட்ட எளிய இராஜாங்க நிவாரணிகள் ஒன்று கூட எடுக்கப்படவில்லை. அவர் குறிப்பிடும்—குறிப்பாக சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான—பதட்டங்கள் குறிப்பிட்ட அளவிற்கு சீரழிவுகளை உண்டாக்கி உள்ளன. அனைத்திற்கும் மேலாக, சீனாவை இராஜாங்கரீதியிலும், பொருளாதாரரீதியிலும் மற்றும் இராணுவரீதியிலும் குழிபறிப்பதற்காக திருப்பி விடப்பட்ட, ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு", ஆசிய வெடிஉலைக்கு கூடுதலாக நெருப்பூட்டி உள்ளது.

வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்ட ஷின்ஜோ அபேயின் வலதுசாரி ஜப்பானிய அரசாங்கம், இந்த ஒரு தசாப்தத்தில் முதல்முறையாக இராணுவ செலவினங்களை அதிகரித்து, மீள்-இராணுவவாதத்தை நோக்கி திரும்பி உள்ள நிலையில், டோக்கியோ மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான உறவுகள் முற்றிலுமாக இல்லையென்றாலும் உடைந்து போயுள்ளன. கடந்த மாத இறுதியில், அபேயின் இழிபெயர்பெற்ற யாசூகூனி நினைவுமண்டப விஜயம், அமெரிக்காவிற்கான சீன தூதர் நேற்று வாஷிங்டன் போஸ்டில் கருத்துக்களை வழங்க தூண்டி இருந்தது. அவர் கூறியதாவது, யுத்த குற்றவாளிகளுக்கு அஞ்சலி செலுத்தியதன் மூலமாக ஜப்பானிய பிரதம மந்திரி "சீனாவுடனான உறவுகளை இடருக்கு" உட்படுத்துகிறார் என்று அவர் தெரிவித்தார்.

கிழக்கு சீன கடலில் ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை சீனா கடந்த மாதம் அறிவித்த போது, சர்ச்சைக்குரிய தீவுகள் மீது அதிகரித்துவரும் பதட்டங்கள் அப்பிராந்தியத்தில் ஓர் அபாயகரமான புள்ளியை எட்டியது. அமெரிக்கா அணுஆயுதமேந்தக் கூடிய B-52 ரக குண்டுவீச்சு விமானங்களை அப்பிராந்தியத்திற்குள் முன்னறிவிப்பின்றி பறக்கவிட்டதன் மூலம் உடனடியாக சீன அதிகாரத்திற்கு சவால் விடுத்தது. ஒரு பிழையோ அல்லது தவறான மதிப்பீடோ ஒரு மோதலுக்கு இட்டு செல்லும் அபாயங்களை அது உயர்த்தியது. நிலைமையை இன்னும் பதட்டமாக்கும் விதமாக டோக்கியோ இந்த வாரம் தொலைவில் உள்ள 280 தீவுகளை "அரசு உடைமையாக" பதிவு செய்யும் அதன் விருப்பத்தை அறிவித்தது. செப்டம்பர் 2012இல் சென்காயு/தியாவு தீவுகுன்றுகளை "தேசியமயமாக்கிய" ஜப்பானின் முடிவு மிக வேகமாக சீனாவுடனான பிராந்திய முரண்பாட்டை தீவிரப்படுத்தியது.

செல்வாக்கிற்காக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை சீனாவுடன் போட்டிபோட்டு வருகின்ற நிலையில் தென்கிழக்கு ஆசியா ஓர் இராஜாங்கரீதியிலான யுத்தகளமாக மாறியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் (ASEAN) ஒவ்வொரு அங்கத்தவர்களையும் அபே சந்தித்துள்ளார். இந்த ஆண்டின் ASEAN மாநாட்டில் ஜனாதிபதி ஒபாமா பங்கேற்கவில்லை, ஆனால் அமெரிக்க அதிகாரிகள் சீனாவிற்கும் அதன் அண்டைநாடுகளுக்கும் இடையே ஒரு பிளவை உண்டாக்க தெற்கு சீன கடலின் கடல்பிரதேச பிரச்சினைகளை மீண்டும் சுரண்டிக் கொண்டனர். புதிதாக அறிவிக்கப்பட்ட சீன கடல்பிடிப்பு நெறிமுறைகளை "ஆத்திரமூட்டும் முக்கிய அபாயங்களாக" கண்டனம் தெரிவித்ததன் மூலமாக, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸை ஆதரித்து, அமெரிக்கா இந்த வாரத்தில், தெற்கு சீனக்கடல் வெடிஉலையில் மீண்டுமொருமுறை தலையீடு செய்தது.

ரூட்டின் கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை என்றபோதினும், கொரிய தீபகற்பம் ஒரு வெடிப்பார்ந்த பிராந்திய வெடிப்பு புள்ளியாக நிற்கிறது. கடந்த ஏப்ரலில், வடக்கு கொரியா அமெரிக்கா தலைமையிலான கட்டுப்பாடுகளுக்கு ஆக்ரோஷமாக, ஆனால் பெரிதும் வெற்று அச்சுறுத்தல்களோடு, விடையிறுப்பு காட்டிய பின்னர், யுத்த பதட்டங்கள் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. பதட்டங்களைத் தணிப்பதில் இருந்து விலகி நின்று, பியாங்ன்யாங்கைப் பின்வாங்க செய்ய அல்லது யுத்தத்தை முன்னெடுக்க செய்ய நிர்பந்திக்கும் நோக்கத்தோடு, அமெரிக்கா தென்கொரியாவிற்கு B-52 மற்றும் B-2 குண்டுவீச்சு விமானங்களை அனுப்பியது உட்பட, பல மிரட்டும் நடவடிக்கைகளை எடுத்தது. வடகொரியாவை இரக்கமின்றி தனிமைப்படுத்தும் வாஷிங்டனின் நடவடிக்கை அந்த ஆட்சியை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி வருகிறது, மேலும் அந்நாட்டை பொறிவின் விளிம்பிற்கும் கொண்டு வந்துள்ளது—கடந்த மாதத்தின் இரத்தகளரியான கழித்தொக்கல் நடவடிக்கை அதற்கு சான்றாக மாறி இருந்தது. இந்த முற்றிலும் இரக்கமற்ற கொள்கை, சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் நலன்களின் குறுக்கீடுகளைக் கொண்ட உலகின் ஒரு மூலோபாய பிராந்தியத்தில் கணிக்கவியலா மற்றும் அபாயகரமான விளைவுகளைக் கொண்டுள்ளது.

அதிகரித்துவரும் யுத்த அபாயத்திற்கு பின்னால் உந்துசக்தியாக இருப்பது ஆழமடைந்துவரும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியாகும். 2008-09 நிதியியல் பொறிவிற்கு ஐந்து ஆண்டிற்குப் பின்னர், மந்தநிலைமை மற்றும் "பணத்தைப் புழக்கத்தில் விடும்" கொள்கையால் சிக்குண்டிருக்கும் உலக பொருளாதாரம் ஒரு புதிய நிதியியல் நெருக்கடிக்கு களத்தை அமைத்துள்ளது. உலகளாவிய முதலாளித்துவம், முதலாம் உலக யுத்தம் வெடிப்பதற்கு எரியூட்டிய—உற்பத்தி கருவிகளின் தனியுடைமைக்கும் மற்றும் சமூகரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்திக்கும் இடையிலான; மற்றும் உலக பொருளாதாரத்திற்கும் மற்றும் காலங்கடந்த தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான—அதே அடிப்படை முரண்பாடுகளில் இன்னமும் சிக்கி உள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் "முன்னெடுப்பு", கடந்த மூன்று தசாப்தங்களில் உலகளாவிய உற்பத்திக்கான பிரதான மலிவு உழைப்பு களமாக எழுந்துள்ள ஆசியாவின், அனைத்திற்கும் மேலாக சீனாவின், உயர்வை பிரதிபலிக்கிறது. நெருக்கமான சர்வதேச பொருளாதார ஒருங்கிணைப்பானது யுத்தத்தை சாத்தியமில்லாமல் ஆக்கிவிடும் என்று வாதிடும் விமர்சகர்கள், அதே ஒருங்கிணைப்பு தான் பெருமளவிற்கு புவி-அரசியல் போட்டியை உயர்த்தி உள்ளது என்ற உண்மையை புறக்கணிக்கின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒப்பீட்டுரீதியில் அதன் வீழ்ச்சியை இராணுவ பலங்கொண்டு சரிகட்ட செய்யும் முயற்சி, உலக அரசியலில் மிக வெடிப்பார்ந்த காரணியாக உள்ளது. அமெரிக்க "முன்னெடுப்பு", அனைத்திற்கும் மேலாக, சீனாவிற்கு மட்டுமல்ல, மாறாக அதன் ஐரோப்பிய மற்றும் ஆசிய போட்டியாளர்களுக்கும் விதிமுறைகளை கட்டளையிட ஆசிய பொருளாதார அதிகாரமையத்தின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தைத் தொடர செய்யும் நோக்கம் கொண்டதாகும். சீனா பிரதான இலக்காக இருக்கிறதென்றால், அது 20ஆம் நூற்றாண்டு ஜேர்மனியைப் போன்று ஓர் ஏகாதிபத்திய சக்தியாக மாறி உள்ளது என்பதால் அல்ல, மாறாக அதன் விரைவான பொருளாதார விரிவாக்கமும், எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களுக்கான தேவைகளும் நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள அமெரிக்க மேலாதிக்க ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பை இடர்படுத்தி வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "முன்னெடுப்பின்" மேலோங்கிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகையில், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் 2011இல் Foreign Policyஇல், “ஆசியா-பசிபிக் உலகளாவிய அரசியலின் ஒரு பிரதான உந்துசக்தியாக மாறி உள்ளது," என்று விவரித்தார். “ஒரு பரந்த மற்றும் நீடித்த அட்லாண்டிக் வலையமைப்பிற்கு அப்பாற்பட்ட அமைப்புகளைக் கட்டுவதற்கான எமது இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய பொறுப்புறுதிக்கு எத்தனையோ மடங்கு விலை கொடுக்கப்பட்டுள்ளது ... ஒரு பசிபிக் அதிகாரமாக மாறுவதற்கும் அதேபோன்ற ஒரு விலையை கொடுக்க வேண்டிய காலம் அமெரிக்காவிற்கு வந்துள்ளது," என்று அவர் வலியுறுத்தினார். வேறு வார்த்தைகளில், ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தைத் தக்க வைக்க, அரை நூற்றாண்டிற்கும் மேலான ஒரு காலகட்டத்திற்கு முன்னர், யுத்தத்திற்குப் பிந்தைய ஐரோப்பாவில் செய்யப்பட்ட மார்ஷல் திட்டம் போன்ற தலையீடுகளை செய்ய வேண்டியது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இன்று ஒரு கட்டாயமாக உள்ளது.

ஆசியாவில் அமெரிக்க இராஜாங்க உறவுமுறையும் மற்றும் பொருளாதார முனைவுகளும் வேகமான இராணுவ ஆயத்த வேலைகளால் மற்றும் சீனாவிற்கு எதிரான ஒரு யுத்தத்திற்கான தயாரிப்பில் அமெரிக்க படைகளை மற்றும் தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் வேலைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், அமெரிக்க "முன்னெடுப்பானது" சீனா-விரோத குழுவைக் கொண்ட ஒரு அச்சாணியாக குறிப்பாக ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் மீது ஒருமுனைப்பட்டிருந்ததோடு, அது ஆசியா முழுவதிலும் கூட்டுறவுகளைப் பலப்படுத்துவதற்கும் மற்றும் மூலோபாய உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் இட்டு சென்றுள்ளது. இவ்வாறு செய்ததன் மூலமாக, தனது சொந்த இராஜாங்க பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ள ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் அபிலாஷைகளுக்கு, அது கடிவாளமில்லா சுதந்திரதை வழங்கி உள்ளது. இதனோடு இணைந்த விதத்தில், மிக சமீபத்தில் இந்தியா மற்றும் பிரான்சுடன் நெருக்கமான மூலோபாய உறவுகளை மேற்கொள்வதற்காக ஜப்பானிய பாதுகாப்பு மந்திரி விஜயம் செய்திருந்தார்.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிக்கலான இராஜாங்க தந்திரங்கள், இரகசிய உடன்படிக்கைகள் மற்றும் இராணுவ ஏற்பாடுகள், வியத்தகு முறையில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவைகளை ஒத்திருக்கின்றன. பதட்டங்கள் மற்றும் போட்டிகள் தொடர்ந்து அதிகரிக்கின்ற அதேவேளையில், கிழக்கு சீன கடலில் ஜப்பானிய அல்லது சீன முன்னெடுப்பால் ஏற்படக்கூடிய ஒரு தவறான மதிப்பீடோ அல்லது கொரியாக்களைப் பிரித்திருக்கும் எல்லையில் ஏற்படக்கூடிய ஒரு சிறிய சம்பவமோ, ஒரு மோதலுக்கு இட்டு சென்று, ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் ஏற்பட்டதை விட பெரும் அதிக விகிதத்திலான ஒரு பேரழிவிற்குள் ஒட்டுமொத்த உலகையும் இட்டு செல்லக் கூடும்.

யுத்த உந்துதலைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். முதலாளித்துவ அமைப்புமுறையை மற்றும் அதன் தேசிய அரசு அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதில், மற்றும் ஒரு சிறிய நிதியியல் செல்வந்த தட்டின் பாரிய இலாபங்களுக்காக அல்லாமல் மனிதயினத்தின் அத்தியாவசிய சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய உலகளவிலான ஒரு திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் ஒரு பொதுவான வர்க்க நலனைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com