Friday, November 15, 2013

பிரதிப் பொலிஸ் அத்தியட்சகரின் மகள் இராணுவ வீரரால் துஷ்பிரயோகம்;கொழும்பு மாநகர சபை அறையில் சம்பவம்!

கொழும்பு மாநகர சபையின் அறையொன்றுக்குள் வைத்து பிரதி பொலிஸ் அத்தியட்சகரொருவரின் எட்டு வயது புதல்வியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்ப டுத்தியதாகக் கூறப்படும் இராணுவ வீரரொருவரை நேற்று முன்தினம் 13 ஆம் திகதி கறுவாக்காட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் கொழும்பு மாநகர சபைஆணையாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையொன்றுக்கு இந்த பிரதி பொலிஸ் அத்தியட்சர் தனது புதல்வியுடன் வந்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடைபெற்ற அறைக்கு அடுத்த அறையிலிருந்த இரண்டு பெண்களிடம் புதல்வியைப் பார்த்துக் கொள்ளும்படி கூறி ஒப்படைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளார்.

சந்தேக நபரான இராணுவ வீரர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இராணுவ கேர்ணலின் பாதுகாப்பு வீரரெனவும் கேர்ணல் பேச்சுவார்த்தைக்கு சென்ற பின்னர் இந்த வீரரும் சிறுமி இருந்த அறையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அன்று மாலை அந்த அறையிலிருந்த இரு பெண்களும் கடமை முடிந்து வெளியேறியவுடன் அறையில் இராணுவ வீரரும் பொலிஸ் அத்தியட்சகரின் புதல்வியுமே இருந்துள்ளனர்.

பேச்சுவார்த்தை முடிவடைந்து இரவு 7.00 மணியளவில் பிரதி பொலிஸ் அத்தியட்சர் புதல்வியுடன் வீடு சென்றுள்ளார். வீடு சென்றதும் புதல்வி தனது தாயிடம் நடந்த சம்பவங்களை விபரித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பிரதி பொலிஸ் அத்தியட்சர் கறுவாகாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து கடந்த 12 ஆம் திகதி பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

(எஸ்.கே.)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com