Thursday, August 8, 2013

2012 ஆம் ஆண்டின் சூழலியல் செய்தியாளருக்கான விருது ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ. காதருக்கு!


மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் 2012ஆம் ஆண்டின் சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருதை வென்றெடுத்துள்ளார்.மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் 'விலேஜ் விசிட்' என்ற பகுதியில் எழுதிய கட்டுரைகளுக்காகவே இந்த விருது கிடைத்தது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய 14வது 'சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கல் 2012' நிகழ்வு அண்மையில் (30.07.2013) கொழும்பு கல்கிசை மௌண் லெவண்யா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட இருதின பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மோகன்லால் பியதாச ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதருக்கான விருதையும் சான்றிதழையும் வழங்கினார்.

பி.எம்.எம்.ஏ.காதர் 1988ஆம் ஆண்டு 'அன்னை' என்ற தலைப்பில் எழுதிய கவிதை ஒன்று மித்திரன் வாரமலர் பத்திரிகையில் பிரசுரமானது முதல் இவர் எழுத்துத் துறைக்குள் நுழைந்தார்.

இலங்கையில் வெளியாகுகின்ற அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் ஊடகவியலாளராக பணி புரியும் இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளதோடு 200க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்தங்கி கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும்,பாதிப்புக்களையும் கிராமங்களின் பின்னடைவுகளையும் வெளிக் கொண்டு வரும் வகையில் இவரது எழுத்துக்கள் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருட இறுதியில் ஊடகப் பணியில் 25 வருடத்தைப் பூர்த்தி செய்யும் இவர் 2010ஆம் ஆண்டிலும் தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக சுப்ரமணிய செட்டியார் விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த அரசியல் கட்சியையும் சாராது நடுநிலையாக நின்று மக்களுக்காக இவரது எழுத்துக்கள் முன்னெடுக்கப்படுவது சிறப்பம்சமாகும்.மேலும் பல இணையதளங்களிலும் இவரது எழுத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com