Tuesday, July 9, 2013

சிறுபான்மையினருக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் நிகழக்கூடாது! - சிராஸ் மீரா ஸாஹிப்

சிறுபான்மை இனத்தவரின் நலன் கருதி உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் இடம் பெறக்கூடாது என அரசாங்கத்தை கோருகின்ற பிரேரணையொன்று கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் இன்றைய (09) சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்டது.

ஜேஆர்- ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தின்மூலம் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதே 13வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம் ஆகும். இதில் கைவைப்பது என்பது சிறுபான்மை இன மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும். ஆகவே இந்த 13வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதில் எடுக்கும் நடவடிக்கையினை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி இந்த பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இப்பிரேரணை மீதான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் மாத்திரம் எதிர்த்து வாக்களித்தார். ஏனைய மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்து இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com