Tuesday, July 24, 2012

ஊடகங்கள் பொறுப்பற்று செயற்படும் போது நாட்டு க்கும், மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களில் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளது எனவும், இலங்கையில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்ற போதிலும் பொலிஸாரின் கணிப்பீட்டில் குற்றச் செயல்கள் வெகுவாக குறைவடைந்து செல்வது தெளிவாக தெரிவிதாக நகர மற்றும் பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற "குற்றச் செயல் - ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பு" என்ற தலைப்பிலான ஊடக கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் குற்றச் செயல்களை தடுக்கும் விடயத்திலேயோ, அல்லது குற்றவாளிகளை கைது செய்யும் விடயத்திலேயோ அரசியல் தலையீடுகளுக்கும் இடமளிக்கப்படுவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதுடன் இதுசம்பந்தமாக பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்த அரசாங்கத்துடனும் பொலிஸாருடனும் இணைந்து ஊடகங்கள், பொதுமக்கள், சமயத் தலைவர்கள், பெற்றோர் ஆகியோரின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் எனவும் இவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

2011ல் 54,521 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. எனினும் இந்த ஆண்டில் இதுவரை 30,328 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 1990ம் ஆண்டு 48,264 சம்பவங்களும் 2006ம் ஆண்டு 60,161 குற்றச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 1993 ஆம் 1994 ஆம் ஆண்டுகளில் குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்பட்டதுடன் 2009 ஆம் ஆண்டு அது 13.7 வீதமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் பொலிஸ் மா அதிபரினால் எனக்கு தரப்பட்ட 1990 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரையிலான புள்ளி விபரத்தை ஒப்பிட்டு பார்க்கையில் வெகுவாக குறைந்துள்ளதை காணமுடிகின்றது. அதேபோன்று வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் படையினரால் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று வெளிநாட்டு தூதுவர் ஒருவரும் கூறினார். அந்த தகவல்களின் அடிப்படையில் தகவல்களை திரட்டினேன். பொலிஸாரின் தகவல்களின் அடிப்படையில் அல்ல, நலன்புரி நிலையங்களின் தகவல்களின் அடிப்படையில் அது உண்மைக்கு புறம்பானது என்பது தெரியவந்துள்ளது.வவுனியாவில் இவ்வாறான துஷ்பிரயோகச் சம்பவம் மூன்று பதிவாகியுள்ளன. அது இராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களினால் அதுவும் சிங்கள கிராமத்திலாகும்.

ஆய்வுகளின்படி நான்கு விடயங்களின் அடிப்படையில் வடக்கு, கிழக்கில் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. உறவினர்கள், அண்டை வீட்டார்கள், தெரிந்தவர்கள் இவற்றில் அடங்குவர். 'தந்தை, மாமா, சகோதரர், மைத்துனர், நண்பர்கள், வளர்ப்பு தந்தை ஆகியோரினாலேயே இந்த துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கணிப்பீட்டின் இறுதியான தகவல்களின் அடிப்படையில் பாதுகாவலர்கள் என்று பொறுப்பு சாட்டப்பட்டவர்களினாலேயே இந்த துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அடிப்படையற்ற நிலையில் ஊடகங்கள் பாதுகாப்பு படையினர் மீது சுமத்துகின்றன என்றார்.
கொலை, கொள்ளை, பாதாள உலகம், போதைப் பொருள் பாவனை போன்ற விடயங்களில் பொலிஸார் செயற்பட முடியும். துஷ்பிரயோகம் விடயத்தில் நூறு வீதம் பொலிஸாரினாலோ, பாதுகாப்பு படையினராலோ தடுக்க முடியாது. பெற்றோர்கள், சமய தலைவர்கள், கிராம தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டியதுடன், பொறுப்பு கூற வேண்டும் என்றார்.
எந்த ஒரு குற்றவாளிக்கும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்காது. குற்றம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கிலிருந்து ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளன.

பலவந்த குடியேற்றம் தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவைகளில் பெரும்பாலானவற்றுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. அதேபோன்று பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடுகளை முறியடிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சட்டத்திலுள்ள சில குறைபாடுகளினால் குற்றம் செய்யக்கூடியவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகளை, குற்றச் செயல்களை செய்ய முற்படுகின்றனர்.

பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக பொலிஸாரிடம் சரணடைந்து நீதித்துறையிலுள்ள சலுகைகளை பயன்படுத்தி பிணை பெற்று வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர் அங்கிருந்து தமது பழைய நடவடிக்கைகளை வழிநடத்துகின்றனர்.

குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுவதாக கூறுகின்றவர்கள் 3 தசாப்தங்களாக நிலவிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே பஸ்ஸில் செல்வதற்கு அச்சம் கொள்வர் குண்டு வெடிப்பு காரணமாக. ஆனால் தற்போது இந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது.

குற்றச் செயல்கள் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடக் கூடாது என்று நான் கூற முற்படவில்லை. மாறாக செய்திகளை வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். பிடிவிறாந்து விடுக்கப்பட்டவர்களை ஏன் தேடி கைது செய்வதில்லை என்று சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. அதனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்ததில் அதிகமானவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த முடிந்தது. அதுபோன்ற நல்ல விடயங்களும் ஊடகச் செய்திகளின் ஊடாக இடம் பெறுகின்றன. எனவே குற்றச் செயல்களை தடுக்க அரசாங்கமும், பொலிஸாரும் பாரிய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர்.

பயங்கரவாதத்தை திட்டமிட்ட அடிப்படையில் முறியடித்தது போன்று குற்றச் செயல்களும் திட்டமிட்ட அடிப்படையில் முறியடிக்கப்படும் என்றார். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடும் பட்சத்தில் அது நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மக்களை குழப்பத்தில் ஆழ்த்தாமல் தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அப்போது சிறந்த பெறுபேறுகளை காண முடியும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இக் கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையத்தின் பொதுப் பணிப்பாளர் திரு.லக்ஷ்மன் {ஹலுகெல்ல, அரச தகவல் திணைக்களத்தின் பொதுப் பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரத்தின அதுகல்ல, ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட பல ஊடகவியலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com