Sunday, August 2, 2009

தேர்தல் பிரசாரமாகியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம்

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் முகாம்களிலுள்ள உறவினர்கள் விடுவிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் உறுதியளித்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முகாம்களிலிருக்கும் மக்களை விரைவில் விடுவிப்பது தொடர்பாக விண்ணப்பப்படிவமொன்றும் விநியோகிக்கப்படுவதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. முகாம்களிலுள்ளவர்களின் பெயர் விபரங்கள், எந்த முகாமில் உள்ளார்கள், முகாம்களிலிருந்து விடுவிக்கப்படுபவரைப் பொறுப்பேற்கும் நபர்களின் விபரங்கள் உள்ளிட்ட விடயங்கள் அந்த விண்ணப்பப்படிவத்தில் கோரப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாநகரசபைத் தேர்தல் வேட்பாளர் ராஜதுரை ரட்ணேஸ்வரன் என்பவரே இவ்வாறான விண்ணப்பப் படிவங்களை விநியோகிப்பதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com