Monday, June 15, 2009

கூட்டமைப்பினர் யோசனைத் திட்டத்தை முன்வைக்கலாம்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தமது யோசனைத் திட்டமொன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைக்கலாமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், கூட்டமைப்பினரால் முன்வைக்கப்படும் யோசனைத் திட்டமானது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றாக இருக்கவேண்டுமென மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்திலேயே அந்தத் தீர்வுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

“எதிர்க்கட்சியோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எந்தவொரு கட்சியும் தீர்வுக்கான யோசனைத் திட்டங்களை முன்வைக்கலாம். ஆனால், அது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகவிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா சென்று அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துள்ளனர். முதலில் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தே பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்” என அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி இரண்டு தடவைகள் விடுத்த அழைப்பு எந்தவிதமான பிரதிபலிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், அவர்கள் முன்வைக்கவிருக்கும் யோசனைத் திட்டம் எவ்வாறு மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com