Thursday, April 23, 2009

தமிழரின் தாகம் தமிழீழ தாயகமா? -கிழக்கான் ஆதம்-

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும் பானை பொங்குமோ மேல்! (நல்வழி, ஓளவையார்)


இலங்கையின் தமிழர்கள் வரலாற்றையும் புலிகளின் போராட்ட யுக்தியையும் நாம் நோக்குவோமானால் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்றிருக்க அதுவே தமிழரின் தாகமா என்றால் “இல்லை” என்றுதான் சொல்ல முடியும்.

தமிழரின் தாகம் என்னவாக இருந்தது என்று நீங்கள் அறிய முற்படுவீர்களானால் நீங்கள் தமிழ்பேசும் அனைத்து சமூகங்களும் ஒன்றினைந்து அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் பிரதேசத்தில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் அவர்களின் வாழ்வியல் வரலாற்றையும் வைத்தே அதனை அறிய முடியுமே தவிர தனியே புலிகள் எனும் ஒரு பயங்கரவாத அமைப்பின் சுயநலக் கோட்பாடுகளையும் கோரிக்கைகளையும் அதற்குள் அடக்கிவிட முடியாது.

இதுரை காலமும் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று அவர்கள் சொன்னார்களே தவிர அவர்கள் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று சொல்லவில்லை. இது சாதாரணமாக பார்ப்பதற்கு பெரிதாக தெரியாவிட்டாலும் கூர்ந்து நோக்குவோமாயின் அன்று சகோதர படுகொலை முதல் இன்று வன்னிமக்கள் சிறை பிடிக்கப்பட்டிருப்பது வரை அனைத்தும் இக்கோஷத்துக்குள் அடக்கப்பட்டிருப்பதை காண முடியும்.

புலிகளின் கொடி ஈழத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சமூக கலாச்சார விழுமியங்கள் எதனையும் பிரதிபலிக்காது தனியே புலிகள் எனும் அமைப்பையும் அவர்களின் சர்வாதிகார போக்கையும் பிரதிபலிப்பது போலவே புலிகளின் கோஷமும் அந்த அமைப்பின் சுயேற்சை அதிகாரத் தன்மையை மட்டுமே வெளிக்காட்டுகிறது. காரணம் அவர்களின் கொடியாயினும் சரி மற்றும் அவர்களின் கோஷமாயினும் சரி எதுவும் ஈழப் பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரதிபலிப்பாக எப்போதும் இருக்கவில்லை.

உலகில் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனமாக கறுப்பு இன மக்கள் இருக்கின்றனர். சில தசாப்தங்களுக்கு முதல் நாங்கள் நோக்குவோமானால் உலகில் எல்லாத் திசைகளிலும் இம்மக்கள் தங்கள் தோலின் நிறம் கறுப்பு என்பதற்காக மிகவும் கீழ்தரமாக நடத்தப்பட்டனர்.

அப்படிப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடியவர்களில் “வண.மாட்டின் லூதர் கிங்கும்” தற்போதைய நமது காலத்தில் “நெல்சன் மன்டேலாவும்” உள்ளனர். வண.மாட்டின் லூதர் கிங் மறைந்துவிட்டாலும் அவரின் கனவு அமெரிக்காவில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

அதேபோல் இருபத்தேழு வருடங்கள் கறுப்பர்களின் உரிமைகளுக்காக ரோபன் தீவிலுள்ள (Robben Island) சிறையில் தனது வாழ்கையின் இளமைக்காலத்தை கழித்த மதிப்பிற்குரிய நெல்சன் மன்டேலாவும் கறுப்பர்களை வட அபிரிக்காவில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

நெல்சன் மன்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்ட காலத்திலும் சரி அவர்களின் அரசியல் முன்னெடுக்கப்பட்ட காலத்திலும் சரி தங்களின் கொடியில் போராட்டத்தின் தன்மையினையும் தங்களின் தனிப்பட்ட ஆளுமையும் பிரதிபலிக்காத வண்ணம் மிகவும் நேர்த்தியாகவே அமைத்திருந்தனர். ஜொன் டூபி(John Dube) உற்பட முன்னால் தலைவர்களின் வழிகாட்டல்களில் அமைந்திருந்த சில அமைப்புக்கள் 1923ம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸாக மாற்றம் பெற்று ஒரு விடுதலை இரானுவ அமைப்பாகவே (Umkhonto we Sizwe) “தேசத்தின் ஈட்டி” என்ற பெயரில் 1961ம் மாற்றம் பெற்றிருந்தது.

இவ்வாறான காலப் பகுதியிலும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதன் பழைய தலைவர்களால் கண்டறியப்பட்ட மூன்று நிறங்களைக் கொண்ட கறுப்பு(மக்களின் நிறம்) பச்சை(வளமிக்க மண்) மஞ்சல் (நாட்டின் செல்வம்) என அப்படியே பேணப்பட்டு வந்தது.

ஆனால் தமிழீழத் தேசிய கொடியை நோக்கினால் அதிலுள்ள மஞ்சல்- நிறம் தமிழீழ தேசிய இனம் தன்னாட்சி அமைத்துக் கொள்ள விழைவதும் நடத்தும் போராட்டம் அறத்தின்பாற்பட்டது நியாயமானது என்பதை குறிப்பதாகவும்

சிகப்பு- தேசியம் அமைத்தால் மட்டும் போதாது தங்களுக்கு எதிரான அனைவரையும் பழிவாங்குவதுடன் சாதிய வகுப்புவாத முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பதையும்
கறுப்பு- விடுதலைப்பாதை கரடு முரடானது அதில் தலைவரும் அந்த அமைப்பும் செய்யும் தீங்குகளையும் மக்கள் மீது செய்யத் தூண்டிவிடும் தீங்குகளையும் மக்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்பதையும்

வெள்ளை- விடுதலை அமைப்பும் தலைவர்களும் மக்களும் உண்மையையும் நேர்மையையும் கடைப்படிக்க வேண்டும் என்பதையும் குறிக்கின்றது.

அதனால்தானோ என்னவோ! மக்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த காலத்தில் பல சிக்கலான நடைமுறைகளுடன் அடிமைகளைப்போல நடத்தப்பட்டனர். மட்டுமல்லாது புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் தாயக்திற்கு தமது உறவுகளுடன் சில நாட்களை கழிக்க வந்தபோதுகூட பல சாட்டுப் போக்குகள் சொல்லி சிறையிடப்பட்டு பின்னர் சுளையாக பணம் பறிமாறப்பட்டபோது விடுதலை செய்யப்பட்டனர்.

போதாக்குறைக்கு தமிழீழ தேசிய கொடியில் பிரதிபலிக்கும் வெள்ளை நிறத்தின் கொள்கைக்கு சாட்சியாக வன்னியில் தங்களை மட்டும் நம்பி வாழ்ந்த மக்கள் சிறைப்படிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

ஒரு தேசியக் கொடி என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக தாய்நிலத்தில் வாழும் சமூகங்களை பிரதிபலிக்க கூடியதாக இருக்கவேண்டும். ஆனால் புலிகளின் தமிழீழ தேசியக் கொடியோ நிறத்திலும் அதில் வரையப்பட்டுள்ள இலட்சனையிலும் தனியே புலிகளின் நலனைத்தான் கூறி நிற்கின்றது.

உலகில் எந்த சமூக வரலாற்றிலும் இவ்வகையான போர்குணத்தையும் அடக்கு முறையையும் பிரதிபலிக்கின்ற தேசிய கொடியை காண முடியாது என்பதுடன் அது பிரதிபலிக்கும் தன்மையையும் நிஜத்தில் சொந்த மக்கள் மீது பிரயோகித்துக் காட்டிய பெருமையும் புலிகளையும் அவர்களின் தேசிய கொடியையும் சாரும்.

அதற்கமையவே பிரபாகரன் தன்னை சர்வதிகாரியாக அமைத்துக் கொண்டதற்கான அடயாளமாக அவர்களின் கோஷத்திலும் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என வைத்து பேணிக்காக்க முற்பட்டுவந்தார். அதற்காகவே புலிகளும் அவர்களின் புலம்பெயர் முகவர்களும் செயற்படுகின்றனர்.

தொன்மைமிகு இலங்கைத் தமிழர் வரலாற்றை நோக்குவேமேயானால் இலங்கை சுதந்திரத்திற்கு முன்னால் பல சுதேச தமிழ் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்டிருந்தாலும் அக்காலங்களில் அத்தகைய சுதேச தமிழ் சிங்கள மன்னர்கள் சகல நாடுகளுக்கும் பொதுவான தங்கள் ஆட்சி அதிகாரத்திற்கான சண்டைகள் சிலவற்றில் ஈடுபட்டுள்ளார்களே தவிர அங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் ஒற்றுமையுடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.

இத்தகைய ஒற்றுமையை வலியுத்துகின்ற பல வரலாற்றுப் பதிவுகள் இன்று புலிகளின் கையாடல்களால் மறைக்கப்பட்டு அவர்களின் சர்வதிகாரத்திற்கு வாய்ப்பாக திரித்திக் கூறப்படுகின்றது.

இவ்வாறானா இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின் காரணமாகவே இலங்கையை காலாதிக்கம் செய்த பிரித்தானியா சுதந்திரம் வழங்கும்போதும் பிரித்தானிய முடியரசோ அல்லது இலங்கையின் சுதந்திரப் போராளிகளோ தமிழர்கள் தனியாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவுமில்லை அவ்வாறான தேவையும் அவர்களால் உணரப்படவும் இல்லை.

தற்போது புலிகளால் நடத்தப்படுகின்ற மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற பிரச்சாரங்களை கேட்டு புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து கொண்டு சின்னப் பிள்ளைத்தனமான கருத்துக்களை புலிகளின் ஆதரவாளர்கள் கூறும்போது தமிழர் அறிவின்(அறிவிலி) உச்சநிலை உலகின் கண்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.

இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் இங்கு வாழ்ந்துவருகின்ற தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என அனைவரும் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளையாகவே காணப்படுகின்றனர். சில சிங்கள அரசியல் வாதிகளின் இனத்துவேசப்போக்குடன் சில தமிழ் ஏகாதிபத்திய வாதிகளின் சீரற்ற சிந்தனைகளால் தமிழினம் மிகப் பெரும் சீரழிவுக்கு முகம்கொடுத்ததோடு தற்போது மீண்டு கொண்டிருக்கிறது.

இன்று உலகிலுள்ள அனைத்து ஊடகத் தரப்பாரும் புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் துரோகிகளாகிவிட்டனர். அந்த வரையறைக்குள் லன்டன் பி.பி.சியின் தமிழோசையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நேற்று புலிகளின் பிரச்சார ஊடக இணையத்தளமொன்றில் “தமிழினத்துரோகி பிபிசி தமிழோசைக்கு ஒரு பகிரங்க கடிதம்” என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் இன்று உலகிலுள்ள சகல நடுநிலையான ஊடகங்களும் புலிகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு துரோகிப்பட்டம் இந்த உலகலாவிய மிகப்பெரிய ஊடகத்துறைக்கு சாட்டுவதன் மூலம் அவர்களுக்கு எந்தத் தீமையுமில்லை அவர்கள் தங்களின் பணியை செவ்வனவே செய்வர் ஆனால் தீமை யாருக்கு என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பொறுத்தவரை அவர்களின் ஊதுகுழலாக செயற்படுபவை மட்டுமே நடுநிலையான ஊடகம் என அவர்கள் நினைக்கிறார்கள். காரணம் தாங்கள் செய்த ஊழ்வினையால் விளைந்தவற்றை வைத்து மற்றவரைக் குற்றங்காண்பதன் மூலமாகவோ அல்லது கடவுளைக் குற்றம் சொல்வதன் மூலமாகவோ எதுவும் நடக்கப்போவதில்லை. இவைகளை தவிர்த்து அவர்கள் அவர்களாக மாறிக் கொண்டால் அல்லது தங்களின் ஏகாதிபத்தியவாதத்தில் இருந்து இறங்கி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதை மட்டும் உணர மறுக்கின்றனர்.

புலிகளின் தாகமும் தமிழர்களின் தாகமும் எப்போதும் வேறான இரு திசைகளிலேயே காணப்பட்டுள்ளது. புலிகளின் ஆயுத அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ்பாணத்தில், கிழக்கிலென்று பல அரசியல் கட்சிகள் புலிகளை எதிர்த்து வெற்றிவாகை சூடிவந்திருக்கின்றன.

கிழக்கின் விடுவிப்பின்போது அங்கு சென்ற ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த இந்து மத குருவை புலிகள் சுட்டுக் கொன்றனர். இது எதனைக் காட்டுகிறது எனறால் புலிகள் எவ்வளவுதான் அவர்களின் அடாவடித்தனங்களை பாமர மக்கள் மீது பிரயோகித்தும் சகோதர படுகொலைகள் புரிந்தும் இன்னும் மக்கள் மனதார புலிகளை ஆதரிக்கவில்லை என்பதையும், அவர்கள் அமைதியான சுபீட்சமான வாழ்வையே விரும்புகின்றனர் என்பதையுமே காட்டுகிறது.

அல்பிரட் துரையப்பா முதல் இன்று சிறைபிடித்து சுட்டுக்கெல்லப்படுகின்ற வன்னி பாமர மக்கள்வரை அனைவர் மீதும் புலிகள் தொடர்ந்து தங்கள் ஆயுதங்களால் மட்டும் தமிழ் மக்களை ஆண்டு வந்திருப்பது "புலிகளின் தாகம் தமிழரின் தாகமல்ல" என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

புலிகளின் தாகமே மக்களின் தாகமாகவும் இருந்திருப்பின் இலங்கை இராணுவம் புலிகளை நோக்கி முன்னேறும் போது மக்கள் இராணுவத்தை எதிர்த்து அணிதிரண்டு அரணாக நின்றிருப்பரே தவிர இராணுவத்திடமும் சர்வதேசத்திடமும் தங்களை புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றும்படி கோரியிருக்க மாட்டார்கள்.

இலன்டனில், பிரான்ஸில், நோர்வேயில், கனடாவில் என புலம்பெயர் தேசங்களில் வீதிமறியல்கள் செய்வதைவிட புலிகளுடன் மக்களிருந்திருந்தால் இலங்கை இராணுவத்திற்கு எதிராக இலங்கையிலும் வன்னிலும் வீதிமறியல் மக்கள் செய்திருப்பர். அவ்வாறு செய்திருப்பின் நிச்சயம் இலங்கை அரசு அடிபணியவேண்டிவந்திருக்கும்.

புலிகளின் வால்களுக்கு தெரியாத ஒன்று இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியும். அதுதான் தமிழ் மக்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்பது. அதனால்தான் பெயரளவாயினும் ஒரு சமாதான சூழலை கிழக்கில் அரசால் உருவாக்க முடிந்துள்ளது. இல்லையேல் இவ்வளவு உயிரிழப்புக்களுடன் சொந்த பந்தங்களைப் பிரிந்து வடக்கிலும் கிழக்கிலும் அகதியாக மக்கள் வாழாமல் ஒன்றாக இணைந்து அரசுக்கு எதிராகவும் அவர்களின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் அரண் அமைத்திருப்பின் இலங்கை இராணுவம் ஒரு அங்குலம் கூட நகர்திருக்க முடியாது என்பதே உண்மை.

புலிகள் தங்கள் மக்கள்மீதும் தமிழ் பேசும் சமூகத்தார்மீதும் மற்றும் சகோதர போராட்ட குழுக்கள், அரசியல் தலைவர்கள், புத்திசாலிகள், கூட வாழ்ந்த முஸ்லீம் சமூகத்தினர் உட்பட சகல தரப்பார்மீதும் தங்கள் ஆயுத வன்முறையை கட்டவிழுத்து விட்டு அராஜகமாக உயிர்களைக் கொன்று, தூக்கத்திலிருந்த சிங்கள, முஸ்லீம் மக்களை கொலை செய்து சிறார்களை வெட்டிக் கொலை செய்து பெற்ற தாயின் வயிறு பத பதக்க பிள்ளைகளை பிடித்துச் சென்று பலியாக்கிய பாவத்திற்கான பிரதிபலனே இன்று அவர்கள் அனுபவிப்பதாகும். இதில் விதியையும் கடவுளையும் நொந்துகொள்வதில் எவ்வித பயனுமில்லை

தமிழ்பேசும் தரப்பாரது தேவையென்பது எப்போதும் புலிகளின் பாசிச தேவையிலிருந்து வேறுபட்டிருந்திருக்கிறது. 2004ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கச் சொன்ன புலிகள் மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள் என்று தெரிந்தே அன்றிரவு வீதிகளின் துப்பாக்கிகளால் சத்தவேட்டுகளை தீர்த்து மக்களை பயமுறுத்தினர். மட்டுமல்லாது அதையும் மீறி வாக்களித்த ஒரு வாக்காளரின் கையையும் வெட்டி தங்களின் இறுதி தலைவிதியை நிர்ணயித்துக் கொண்டனர்.

தற்போது புலிகள் முற்றாகத் தோல்வியுற்ற நிலையில் இறுதி முயற்சியாக வன்னியில் அவர்களால் கட்டாயமாக ஆட்சேர்ப்புக்கு உள்ளாகப்பட்டு பலிகொடுக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பத்தினரையும் மற்றும் புலிகளின் தலைமைபீடத்துக்கு விசுவாசமான குடும்பங்களையும் இணைத்து நாங்கள் அனைவரும் மாவீர்ர் குடும்பத்தினர் எங்களுக்கு அரச கட்டுப்பாட்டில் பாதுகாப்பில்லை. ஆகவே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் வழித்துணையுடன் தாங்கள் வேறு நாடுகளில் தஞ்சம் புக வழிவிடப்படவேண்டும் என்று மக்களின் பெயரால் கோரிக்கை விடுத்து புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தப்பிக்க முயற்சிப்பார்கள் போலத் தெரிகிறது.

காரணம் அத்தகைய சூழலில் புலிகளுக்கு பாமரமக்களின் உயிர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாததினால் யாரை பலிகொடுத்தேனும் தாங்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு நிச்சயம் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களின் குடும்பத்தவர்களை தவிர எவரும் இணங்கப்போவதில்லை.

சர்வதிகாரி கிட்லர் தன்னைத்தான் சுட்டு மாய்த்துக் கொண்டபோதுகூட அவருடன் கூடயிருந்த சில சகாக்கள் குடும்பங்களுடன் தங்களை மாய்த்துக் கொண்டனர். அதற்கு அவர்கள் கிட்லர் இல்லாத உலகில் தாங்கள் வாழ விரும்பவில்லை என்று இறுதியாக கூறியிருந்தனர். இந்த சம்பவமும் மீண்டும் ஒரு முறை உலக வரலாற்றில் வன்னியில் நிகழும்போல் தெரிகிறது. இதையும் புலம்பெயர் புலிகள் இலங்கை அரசின் கொடுமையென கணக்குக் காட்டலாம்.

இவ்வாறு புலிகளின் சுகபோகத்தை அனுபவித்த விசுவாசிகளைத் தவிர எந்த மக்களும் இன்று புலிகளுடனில்லை அவர்கள் அனைவரும் எஞ்சியிருக்கும் தங்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறைப்படுவதை காணமுடிகிறது.

இந்த சம்பங்களை உன்னிப்பாக அவதானித்து சிந்திப்பீர்களானால் புலிகள் என்றும் மக்களின் மனங்களின் இடம் பிடித்திருக்கவில்லை என்பதும் அவர்கள் செய்த ஊழ்வினை அவர்களை சூழ்ந்துள்ளதையும் காண்பீர்கள்.

மக்களின் ஜனநாயகரீதியான சுதந்திரப் போக்கை நேசிக்க, புலிகளோ சர்வதிகார சுயாட்சிப்போக்கை கடைபிடித்தே வந்துள்ளனர். எனவே எப்போதும் புலிகளின் விருப்பு மக்களின் விருப்பாக ஈழத்தின் வரலாற்றில் இருந்ததில்லை.

“சமூக அநீதிகளை விதைத்த காலம் கடந்த காலத்துக்கு உரியது! சமூக நீதியைக் கட்டியெழுப்புகின்றவர்களுக்கே எதிர்காலம் உரியது!” -மேதகு ஜனாதிபதி. மகிந்த ராஜபக்ச சுதந்திர தின உரை 2009- VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com