Friday, February 9, 2018

காந்தி இறக்கவில்லை, கொல்லப்பட்டார்! விஷ்ணு வரதராஜன்

ஜனவரி 30ம் நாளை காந்தியின் நினைவு தினம் என்று சொல்லிக் கடந்து போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காந்தி கொல்லப்பட்ட தினம் என்றே அதை நாம் வலியுறுத்தி சொல்லவேண்டும்.

வேறுபட்ட அடையாளங்களும் முக்கியத்துவங்களும் முன்னே துருத்திக்கொண்டு மோதல் களமாகி பிணக்காடு ஆகியிருக்க வேண்டிய ஒரு மிகப்பெரும் நிலப்பரப்பு இது. அதில் உயிர்பிழைத்தவர்களின் வாரிசுகள் காந்தியைக் கண்டடைவது மிகவும் முக்கியம். அவர்களிடம் நாம் காந்தி இறக்கவில்லை, சுடப்பட்டார், கொலை செய்யப்பட்டார் என்று மீண்டும் மீண்டும் நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. முக்கியமாக மதவாதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தலைதூக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில்.

அதென்ன எதற்கெடுத்தாலும் மதவாதம் என்கிறீர்கள், என்ற குரல்கள் இன்றும் உண்டு. மதவாதம் எங்கே இல்லை? என்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் என் மதத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்படுகிறார் என்பதற்காக எனக்கு நண்பராக இருக்கும் மாற்று மதத்தவரோடு என்னால் பகையுணர்ச்சியை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற நிலையை ஒரு இயக்கம் தன் மத அரசியலுக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஏற்படுத்துகிறது என்றால், அதன் பெயர் மதவாதம் இல்லாமல் வேறு என்ன? மதவாதம் இருக்கிறது என்று அதை ஒரு பிரச்னையாக முதலில் ஏற்றுக்கொண்டால்தால் அதற்கான தீர்வு குறித்து விவாதிக்க முடியும். மதவாதம் இருக்கிறது என்பதை உணர மறுப்பவர்களோடு மதவாதத்திற்கெதிரான தீர்வுகளை விவாதிக்க முடியாது. அதற்காக அவர்களை விவாதத் தளத்தில் நிராகரித்துவிட்டு அரசியல் பேசுவதென்பதும் ஒரு உள்ளடக்கிய அரசியலாக இருக்காது. அது காந்தியத்திற்கும் எதிரானது. இந்தியா அடிமைப்பட்டிருக்கிறது என்ற பிரச்னையை ஏற்க மறுத்த ஆங்கிலேயர்களிடம்தான் காந்தி உரையாடினார். பிரச்னை இருக்கிறது என்பதை மாற்றுத்தரப்பினரை அங்கீகரிக்க வைப்பதே தீர்விற்கான முதல்படி. அதன் விவாதங்களில் ஏன் என் தரப்பு நியாயமானது என்பது முன்னே நிற்கக்கூடாது. மாறாக உன் தரப்பு ஏன் நியாயமற்றது என்று புரிய வைக்க முயலவேண்டும். ஏன் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவிற்குத் தேவையில்லை என்ற திசையிலேயே காந்தியின் உரையாடல் சென்றது. இந்துத்துவ அணுகுமுறை இதில் வேறுபடுகிறது. ஏன் இந்து தேசம் அமைய வேண்டும் என்ற லட்சியவாத நோக்குடனே அதன் குறிப்புகள் செல்லுமே தவிர, மாற்றுத் தரப்பினரின் குரல்களுக்கு அது செவிமடுக்காது. அது தன்னை மட்டுமே பாதிக்கப்பட்ட தரப்பாகக் கருதிக்கொள்ளும். எதிர்கருத்துகளை எதிர்கொள்ள அச்சப்படும், அதனால் முடிந்தவரை அக்குரல்களை அமைதிப்படுத்தவே முயலும்.

அனைத்து கருத்தியல்களும் அவரவருக்கான ஏதோவொரு தேவையின் பொருட்டே எழுகின்றன, அது அறத்தின் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் சரி. இன்று காந்தியைத் துணைக்கழைப்பது என்பது அவர் எழுத்துகளின் லட்சியவாதக் கூறுகளைப் பரப்புவது மட்டுமல்ல. இந்த சமூகம் இன்று மதவாத நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. அதன் தீர்வாக காந்தியை முன்னிறுத்துவது என்பது மருந்தின் மகிமையைச் சொல்வது மட்டுமல்ல. அதோடு நிறுத்திவிட்டால் நோய் நீங்கியதும் மருந்து மறக்கப்பட்டுவிடும். மாறாக, காந்தியைத் துணைக்கழைப்பது என்பது, காந்தியத்தின் எதிர்ப்புறத்தில் இருக்கும் மதவாதத்தின் ஆபத்துகளை உணர்த்துவதும்தான். அகிம்சையை போதிப்பது மட்டும் காந்தியம் அல்ல, இப்புறத்திலிருந்து மதவாதத்தையும் அதன் வன்முறையையும் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருப்பதும்தான்.

ஏன் காந்தி கொல்லப்பட்டார்? காந்தியின் இந்தியாவிற்கும் இந்து தேசத்திற்கும் இடையேயான ஒரு முக்கியமான வேறுபாடு, இந்து தேசியம் அடிப்படையிலேயே ஒரு இறுக்கமான லட்சியவாதம். ஐரோப்பிய தேசியவாதங்களிலிருந்து நேரடியாக ஈர்க்கப்பட்டு மதம் சார்ந்த தேசியத்தை அது முன்வைத்தது. ஐரோப்பிய தேசங்கள் போன்று ஒற்றை அடையாளத்தை இந்தியாவிற்கு எளிதாக ஏற்படுத்த முடியாது. விளைவு, தத்துவத்தின் இறுக்கத்தினால் ‘மத எதிரிகள்’ உருவாக்கப்பட்டார்கள். இந்த மத எதிரிகளால் இந்து மதம் ‘திட்டமிட்டு அழிக்கப்பட்டது’ என்ற வரலாற்றுப் புனைவு கட்டப்பட்டது. இந்திய நிலப்பரப்பில் நூற்றாண்டு காலமாக ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களை ஒரு பரிணாமமாக இந்துத்துவம் பார்க்க மறுத்தது. மாறாக, பண்டைய நூற்றாண்டுகளை ஒற்றைப் பண்பாட்டுத் தொடர்ச்சியாகக் கட்டமைத்து, அதில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை இந்து தர்மத்தின் அப்போதைய உச்சமாக வரையறுத்து, அதன் பிறகு நடந்தவைகளைப் பண்பாட்டு சீரழிவாக முன்மொழிந்தது. அந்த நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி செல்ல வேண்டும் என்பதைத் தீர்வாக முன்வைத்தது.

எந்த ஒரு தேசியத்திற்கும் வரலாற்று அங்கீகாரம் வேண்டுமே? இந்து தேசியம் சிவாஜிக்கும் அவுரங்கசீப்பிற்கும் இடையே நிகழ்ந்த அதிகார மோதலை மதச்சண்டையாக மாற்றியது. அக்பருக்கும் ராணா பிரதாப்புக்கும் இடையே நடந்த சண்டையில் ராணா பிரதாப்பைத் ‘தியாகி’ ஆக்கியது. அனைத்து மன்னர்களுக்கும் எதேச்சதிகாரம் என்பது பொதுப்பண்பு. அதில் திப்பு சுல்தானும் விதிவிலக்கல்ல, ஆனால் அவர் இந்துக்களைத் திட்டமிட்டுக் கொன்றார் என்ற பிம்பத்தை இந்துத்துவம் ஏற்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய நிலப்பரப்பின் வரலாற்றை இந்து மதம் எதிர்கொண்ட சவால்கள் என்று ஒற்றைப்படையாக சுருக்கியது.

காந்தியின் இந்தியம் அடிப்படையில் லட்சியவாதமல்ல. காந்தியின் உள்ளடக்கிய தேசியவாதம் ஏதோ இந்திய தத்துவ ஞான மரபில் ஊறியவருக்குத்தான் தோன்றும் என்றும், உலகில் வேறெங்குமே அது சாத்தியமல்ல என்றுமெல்லாம் இல்லை. ஒரு தேசம் எவ்வாறு உருவாகும் என்று காந்தி சிந்தித்தார். ஐந்திற்கும் மேற்பட்ட மதங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள், என்ன இனம் என்றே கண்டுபிடிக்க முடியாதபடி பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்டக் கலப்புகளினால் உருவான பல்வேறு கலப்பினங்கள், இவற்றை வைத்து என்ன நாட்டை உருவாக்குவது? மொழி சார்ந்தும் மதம் சார்ந்தும் இங்கு தேசியவாதம் கட்டமைக்கப்பட்டால் அது நிச்சயமாக ஏதேனும் ஒரு சாராரை விலக்கிய தேசியவாதமாகவே அமையும். இங்குள்ள அனைவருக்கும் இங்கு வாழ சம உரிமை உள்ளது, ஒரு சாராரை விட மற்றொருவர் எந்த விதத்திலும் உரிமைக்குப் பாத்தியதையற்று இருக்க முடியாது என்று காந்தி புரிந்துவைத்திருந்தார். விடுதலைப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றாக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தனர், எனவே சுதந்திர இந்தியா அனைவருக்குமானது என்ற முடிவுக்கு வந்தார். இல்லாத இந்தியா எதையும் காந்தி உருவாக்கவில்லை. இந்த நிலப்பரப்பு என்றுமே கலவையான பண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது, எனவே அதில் வசிக்கும் அனைத்து பண்பாட்டினருக்கும் அது உரிமையானது என்று நிலம் சார்ந்த, நெகிழ்வுத்தன்மையுள்ள தேசியவாதத்தை அவர் முன்வைத்தார், அவ்வளவே.

ஆனால் காந்தியின் இந்த உள்ளடக்கிய தேசியம் இரண்டு முக்கிய கட்டங்களில் ஒரு உயரிய லட்சியமாக மாறுகிறது. ஒன்று நமக்கான பொறுப்பு, மற்றொன்று இந்த உலகத்திற்கான செய்தி. பிரிவினை காலத்தில் பாகிஸ்தானில் இந்துக்கள் விரட்டப்பட்டபோது இங்கு இஸ்லாமியரை விரட்டவேண்டும் என்று குரல்கள் வலுத்தன. இந்தியா ஒரு இந்து பாகிஸ்தானாக மாறக்கூடாது என்று காந்தியும் நேருவும் உறுதியாக நின்றனர். நவகாளியிலும் தில்லியிலும் காந்தி ஒற்றை ஆளாக மனிதம் போதித்து, அடையாளங்களைக் கடந்த அரவணைப்பே இந்தியா என்ற கருத்தை ஒரு உயரிய பண்பாக மக்களிடம் முன்வைத்தார். ‘இங்கு அனைவரும் வாழ்கிறார்கள், எனவே இந்நாடு அனைவருக்கும் சொந்தம்’ என்று காந்தி யதார்த்தத்துடன் முன்வைத்த தேசியம், இவ்வாறு பிரிவினை காலத்தில் மனிதத்தை வலியுறுத்தும் லட்சியமாக மாறியது. காந்தியின் மரணத்தால் மனசாட்சிகள் உலுக்கப்பட்டு, பன்முகத்தன்மையும் சிறுபான்மை நலனும் பெரும்பான்மையின் அடிப்படைப் பொறுப்பானது.

இரண்டாவது முக்கியக் கட்டம், இரண்டாம் உலகப்போர். ஃபிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக அரசியல்மயமான தேசியவாதம், சிறிது சிறிதாக ஐரோப்பா முழுவதும் பரவியது. மன்னரின் குடிகள் என்பதிலிருந்து விடுபட்டு, பொது அடையாளங்களை மக்கள் தேட ஆரம்பித்தனர். அது மொழி சார்ந்தும், மதம் சார்ந்தும், இனம் சார்ந்தும் நாட்டுக்கு நாடு கட்டமைக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எல்லைக்கோடுகளின் அரசியலாக வந்து நின்றது. தேசியவாதம் மக்களை ஒருபுறம் ஒன்றிணைத்தது என்றால் மறுபுறம் அது சக மக்கள் மீது வெறுப்புணர்வையும் கொள்ளச் செய்தது. போட்டிகள் சூழ் உலகில் அந்தக் கண்ணுக்குத் தெரியாத எல்லைக்கோட்டைப் புனிதப்படுத்தி ‘தன்னுடைய நாட்டுக்காக’ சக மனிதனைக் கொல்வது நடந்தது. இரண்டாம் உலகப்போர் மனித நாகரிகத்தின் இருண்ட அத்தியாயம். இந்த உலகத்திற்கு விடிவே கிடையாதா, அமைதியே வராதா, ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழவே முடியாதா என்று கேள்விகள் அலைக்கழிக்க, மொத்த உலகமும் விக்கித்துப்போய் நின்ற காலகட்டம் அது. அப்பொழுது அகிம்சை வழியில் அனைவரையும் உள்ளடக்கி அடைந்த இந்திய சுதந்திரம் மானுடவியலாளர்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது என்கிறார் வரலாற்றாசிரியர் மனு பகவான். உலகம் புத்தருக்கும் இயேசுவுக்கும் அடுத்தபடியாக காந்தியை வைப்பது அதனால்தான்.

மனித நாகரிகம் சண்டைச் சுழலில் சிக்கி அதிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்து நிற்கும்போது, இதோ ஒரு வழி இருக்கிறது என்று கைப்பிடித்து காந்தி அழைத்துச் செல்ல முற்பட்ட அந்த கணம் இருக்கிறதே, அந்தக் கணத்தில் இந்திய தேசியம் ஒரு உயர்ந்த லட்சியமாக மாறியது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா சுக்குநூறாக நொறுங்கிவிடும் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். அத்தனை பேரின் கணிப்புகளையும் பொய்யாக்கி இன்றுவரை உடையாமல், பன்முகத்தன்மையைப் பெரும்பாலும் அனுமதிக்கும் தேசமாகவே இந்தியா உயிர்த்திருக்கிறது. ஒன்றுபட்ட உலகின் மாதிரி வடிவமாக இன்று இருக்கும் இந்தியா, ஒரு மகத்தான மானுடவியல் பரிசோதனை. வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை ஏற்படுத்த முனைந்த தேசங்களுக்கு மத்தியில், இந்தியா வேற்றுமைகளை அங்கீகரித்தது. ஒருமித்த கருத்தில் எதிர்காலம் தேடிய தேசங்களின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை இந்தியா தொடராமல், வேறுபட்ட கருத்துகள் இணையும் புள்ளிகளில் தன் எதிர்காலத்தைத் தேடியது. புண்ணிய பூமிக்காகப் போரிடாமல், புண்ணிய மனிதர்களை உருவாக்க முனையும் பெருந்தவத்தை காந்தி சுமந்து சாதித்தார். வெவ்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள், உடைகள், உணவுகள், அடையாளங்கள், இவையனைத்தும் ஒரு இடத்தில் ஒன்றாக இருக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டுவது எளிதான காரியமல்ல. ஆனால் அதன் செய்தி, பல்வேறு அடையாளங்களைக் கொண்ட 120 கோடி மக்கள் ‘இந்தியர்’ என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணையும்போது, உலக மக்களாலும் ஒருவரோடு ஒருவர் போரிடாமல் ஒற்றுமையாக வாழ முடியும், என்பதே.

ஒரு புதிய நாட்டின் உருவாக்கத்தில் இருப்பதிலேயே வன்முறை குறைவாக நிகழ்ந்து உருவான நாடு இந்தியா. பிரிவினையில் இறந்து போன பஞ்சாபி மற்றும் வங்காளக் குடும்பங்களின் முகத்தைப் பார்த்து மனிதாபிமானம் இல்லாமல் சொல்வதற்காக அல்ல இந்தக் கருத்து. மாறாக மானுட வரலாற்றின் கோரங்களை நாம் மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்திக்கொண்டு, சகோதரத்துவத்தின் மீது இந்தியாவின் உருவாக்கம் எத்தகைய நம்பிக்கையை விதைக்க முயல்கிறது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதற்காகவே இது.

இவையாவும் இந்து தேசியத்திற்கு முரணானவை. காந்தி தொடர்ந்து தன் அற விழுமியங்களை சுயபரிசோதனை செய்துகொண்டே இருந்தார். அமைப்பிற்குள் இருந்துகொண்டே சாதி குறித்து சங்கடமான கேள்விகளை எழுப்பினார். சிறுபான்மையினரின் பக்கம் நின்றார். விளைவு, காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஏனோ தெரியவில்லை, தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்கக் கொலை செய்பவர்கள் நல்ல பேச்சாளர்களாகவும் இருக்கிறார்கள். கோட்சேவும் அப்படித்தான்.

இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜெர்மனி தோற்றபோது கார்ல் பாப்பர் என்னும் தத்துவ அறிஞர் ‘சகிப்புத்தன்மையின் முரண்பாடு’ என்றொரு கருத்தை முன்வைத்தார். அதாவது, சகிப்பின்மையோடு இருப்பவர்களிடம் சகிப்புத்தன்மையோடு இருக்கக்கூடாது என்றார். சகிப்பின்மையை சகித்துக்கொண்டால் அது சகிப்புத்தன்மையை அழித்துவிடும். எனவே சகிப்புத்தன்மைக்குக் குரல் கொடுப்போர் சகிப்பின்மையை சகித்துக்கொள்ளக்கூடாது என்றார். இந்திய சமூகம் அத்தகையதொரு கட்டத்தை இன்று அடைந்திருக்கிறது. வளர்ந்துவரும் மதவாதத்திற்கு எதிராக நாம் காந்தியை வலுவாகப் பிடித்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் கோட்சேக்கள் மிக எளிதாக உருவாகிவிடுவார்கள். காந்தியின் கொலை நமது மனசாட்சியைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கவேண்டும். அதை இயல்பானது என்று கடந்து போகும் கணத்தில் காந்தியம் தோற்றுப்போகும். கோட்சேக்களிடம் தோற்பதில் காந்திக்கு சிக்கலே இல்ல. நாம் அவரைக் கைவிடுவதைத்தான் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று.

ஜனவரி 30 நாள் Tamil.Thehindu வில் பிரசுரமாகியது

Read more...

Sunday, February 4, 2018

அதிபர் ட்ரம்ப்- எப்பிஐ மோதல் முற்றுகிறது.

அமெரிக்க புலனாய்வு போலீஸ் பிரிவான எப்பிஐ அமைப்புக்கு எதிராக அந்த நாட்டு அரசு தரப்பில் குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அதிபர் டொனால்டு ட்ரம்ப், எப்பிஐ அமைப்பு இடையிலான மோதல் முற்றியுள்ளது.

கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். இதில் டொனால்டு ட்ரம்பை வெற்றி பெறச் செய்ய ரஷ்ய உளவு நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து எப்பிஐ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற பிறகும் இவ் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இந்த விசாரணையை நீர்த்துப்போகச் செய்ய அரசு தரப்பு தீவிர முயற்சி செய்வதாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாணை வெளியீடு

அமெரிக்க உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை நாடாளுமன்ற புலனாய்வு கமிட்டி கண்காணித்து வருகிறது. இதன் தலைவராக ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டெவின் நூன்ஸ் உள்ளார். எப்பிஐ போலீஸாருக்கு எதிராக நேற்றுமுன்தினம் அவர் குறிப்பாணையை (மெமோ) வெளியிட்டார்.

அதில், “டொனால்டு ட்ரம்பின் பிரச்சார குழுத் தலைவர் கார்ட்டர் பேஜை எப்பிஐ உளவு பார்த்தது. அவரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. இதற்காக ‘எப்ஐஎஸ்ஏ’ நடைமுறை தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க மக்களின் தனிநபர் சுதந்திரத்தை ‘எப்ஐஎஸ்ஏ’ நடைமுறை பறிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பாணை மூலம் துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசன்டைன், ரஷ்ய தலையீடு தொடர்பான வழக்கை விசாரிக்கும் எப்பிஐ முன்னாள் இயக்குநரும் சிறப்பு அதிகாரியுமான ராபர்ட் முல்லர் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறிப்பாணை வெளியிட்டதற்கு எப்பிஐ மற்றும் நீதித்துறை வட்டாரங்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. எப்பிஐ போலீஸாரின் நம்பகத்தன்மையை அரசு கேலிக்கூத்தாக்கி இருப்பது வேதனையளிக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற புலனாய்வு கமிட்டியில் உறுப்பினராக உள்ள ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் ஆடம் கூறியிருப்பதாவது: எப்பிஐ விசாரணை விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படுவதில்லை.

அந்த மரபை மீறி அரசு செயல்படுகிறது. குறிப்பாணையை வெளியிட்டு எப்பிஐ அமைப்புக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. மக்களை குழப்ப அரசு முயற்சி செய்கிறது. அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது தொடர்பான விசாரணையை முடக்க சதி செய்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

Read more...

இன, மத, பேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை நம் நாட்டில் உறுதிசெய்யவேண்டுமாம்!!

இன, மத, பேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை நம் நாட்டில் உறுதிசெய்யவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன மோதல்கள் அற்றவகையிலும் மக்கள் வாழக் கூடிய வகையிலும் நாம் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 70ஆவது ஆண்டு சுதந்திர தின வைபவத்தில் நாட்டுமக்களுக்காக கொழும்பு காலிமுகத்திடலில் இன்று ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் ,

இன, மத, பேதமற்ற சூழ்நிலையை உருவாக்குவதுடன் சமதானம் சகவாழ்வை மக்களுக்கு உறுதி செய்வதுடன் மத நல்லிணக்கத்தையும் நம்பகத்தன்மையுடன் வாழும் சூழ்நிலை உறுதிசெய்யப்படவேண்டும் இவை அத்தியாவசியமானது என்று நாம் கருதவேண்டும். இதனை கருத்தில் கொண்டு இந்த நாட்டில் உள்ள புத்திஜீவிகள் கல்விமான்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் செயற்படவேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் நான் கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.

எல்.ரீ.ரீ பயங்கரவாதத்தின் காரணமாக 30 வருட காலத்திற்கு பல்வேறு துன்பங்களுக்கு மக்கள் உள்ளானார்கள் . இதன்காரணமாக நாட்டின் முன்னேற்றத்திலே ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

எல். ரீ. ரீ. பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து படைவீரர்கள் பொலிசார் மற்றும் சிவில் இராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்கள் யுத்தத்தின்போது பாரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் பலர் கைகால்களை இழந்து ஊனமுற்ற நிலையில் குடும்ப வாழ்க்கையையும் இழந்து தவிக்கின்றனர். இன்றைய 70ஆவது ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடும் நாளில் இவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இவர்களது குடும்பங்களின் நலனில் நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும்குறிப்பிட்டார்.

எமது நாட்டின் அபிமானத்தை எமது நாட்டின் பெருமையை எமது கடந்தகால அனுபவங்களை பாடமாக வைத்து நாங்கள் செயற்படவேண்டும். படித்தவர்கள் புத்திஜீவிகள் முக்கியமாக தமது பங்களிப்பை இதற்காக வழங்க வேண்டும் . இன்று எங்களுக்கு இருக்க கூடிய முக்கியமான சவால் என்ன? நாம் செய்யவேண்டியது என்ன ? எதிர்காலத்தில் நன்மைக்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டும். அதுதான் முக்கியமான சவாலாக இருக்கின்றது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருளாதார ரீதியிலே எதிர்நோக்குகின்ற எல்லா பிரச்சனைகளுக்கும் நாங்கள் சிறப்பாக முகங்கொடுக்கவேண்டும். ஏழ்மை எங்களுக்கு இருக்க கூடிய பெரிய சவாலாக இருக்கின்றது. அந்த ஏழ்மையை , வறுமையை போக்க கடந்த காலத்தில் பணியாற்றிய போதிலும் நாம் நம் கடமைகளை இன்னும் இன்னும் சரியாக செயற்படுத்தவேண்டும். ஏழ்மை வறுமை இவற்றிலிருந்து நாம் விடுதலைபெறவேண்டும் .அதேபோன்று இங்கே இருக்க கூடிய நமது நாட்டு மக்கள் தேசிய அபிவிருத்தி பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது.

சில செயற்பாடுகள் எமது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேசிய ரீதியான முக்கிய பிரச்சனைகளை அறிந்து தெரிந்து நாம் சரியாக செயலாற்ற வேண்டும். எங்களுடைய கல்வித்துறையில் இருக்கக்கூடிய கல்விமான்கள் புத்திஜீவிகளை இன்னும் இன்னும் அதிகரிக்கவேண்டும்.எமது கல்விமுறையிலே இன்னும் பல மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். தொழில்நுட்பம் , இயற்கை வளங்கள் இவை எல்லாம் மேம்படுத்தப்படவேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டிலே ஒரு அபிவிருத்தியை நாம் இன்னும் காணக்கூடியதாக இருக்கும்.

எமது நாட்டின் பல நிதிப்பிரமாணங்கள் பழைய நிதி தொடர்பான விதிகள் மிகவும் பழமை வாய்ந்ததாகும். காலத்திற்கேற்ற வகையில் இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். ஒழுக்க விதிமறைகளுக்கு முக்கியத்துவமளித்து நாம் செயற்படவேண்டும். தூய்மையான அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்படவேண்டும். அபிவிருத்தி வேலைகள் சிறப்பாக செய்யப்படவேண்டும். அபிவிருத்திக்கு அரசியல்வாதிகள் மக்களோடு இணைந்து நேர்மையாக செயற்படவேண்டும். அர்ப்பணிப்பு நம்பிக்கை இவைதான் காலத்தின் தேவை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.



Read more...

அன்று ஆங்கிலேயர்களுக்கும், இன்று சிங்களவர்களுக்கும் அடிமையாக இருக்கும் நாங்கள் உண்மையான சுதந்திரத்தை அடைந்துள்ளோமா ?

1948 ஆம் ஆண்டின் இன்றைய தினத்தில் எமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாக உத்தியோக பூர்வ பிரகடனம் செய்யப்பட்டது. அதனாலேயே இத்தினத்தினை நாங்கள் கொண்டாடுகின்றோம்.
சுதந்திரத்துக்காக இலங்கயர்களைவிட இந்தியர்களே பாரியளவில் போராட்டம் நடாத்தினார்கள். இந்தியர்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் பணிந்து இரண்டாவது உலகமகா யுத்தம் முடிவடைந்த நிலையில் 1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களினால் சுதந்திரம் வழங்கப்பட்டது.

அதன் தாக்கத்தினாலேயே இலங்கைக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. இந்தியர்கள் போராட்டம் நடத்தாதிருந்திருந்தால் அவர்களது சுதந்திரம் மட்டுமல்ல இந்நாட்டின் சுதந்திரமும் தாமதமடைந்திருக்கும்.

சுதந்திரம் என்னும்பொழுது நாங்கள் அன்று ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தோம் என்பதுதான் பொருள்படும். இங்கே ஒரு விடயத்தினை நாங்கள் சிந்திக்க வேண்டும். அதாவது ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை கைப்பேற்றி ஆட்சி செய்யாது விட்டிருந்தால் இந்நாட்டின் உட்கட்டமைப்பு இன்றுள்ள நிலையிலும் பார்க்க எவ்வளவோ பின்னோக்கி இருந்திருக்கும்.

எம்மை அடிமைப்படுத்தி எமது நாட்டின் வளங்களை ஆங்கிலேயர்கள் சுரண்டிச் செல்வதனை தடுப்பதுடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற சிந்தனை மட்டுமே அப்போது மக்களிடம் இருந்தது.
சிறுபான்மயினர்களான தமிழ் முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில் சுதந்திரத்துக்கு பின்பு நாங்கள் ஒரு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம் என்று பெருமைப்படுகின்றோமே தவிர, சுதந்திரத்தினால் சிறுபான்மை சமூகங்கள் அடைந்த உரிமைகள் என்ன என்று சிந்திக்கவில்லை.

ஆங்கிலேயர்களினால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து பாதைகளும், புகையிரதப்பாதைகளும், மற்றும் நிருவாக முறைமைகளுமே இன்றும் நடைமுறையிலிருந்து வருகின்றது.

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் என்ற போர்வையில் இந்நாட்டின் முழு அதிகாரத்தினையும் பெற்றுக்கொள்ளும் வரைக்கும், தமிழ், முஸ்லிம் தலைவர்களை திருப்தி படுத்தும் வகையில் அவர்கள் விருப்பத்துக்கேற்ப சிங்கள தலைவர்கள் தலைசாய்த்தார்கள்.

அத்துடன் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள், சிங்கள பிரதேசங்களையும் விட கூடுதலாக அபிவிருத்தி செய்யப்பட்டது. இதனால் சிங்கள தலைவர்களை சிறுபான்மை தலைவர்கள் நம்பினார்கள். ஆனால் சுதந்திரம் என்ற போர்வையில் இந்நாட்டின் ஏகபோக முழு அதிகாரங்களும் சிங்களவர்களின் கைகளுக்கு கிடைத்த பின்பு அனைத்தும் தலைகீழாக மாறியது.

சுதந்திரத்துக்கு முன்பு சிறுபான்மை பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளும் சுதந்திரத்துக்கு பின்பு இடைநடுவில் கைவிடப்பட்டது. அத்துடன் மலையக தமிழ் மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டது.

அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளை குறிவைத்து அவர்களது இனப்பரம்பலை சிதறடித்து, அரசியல் அநாதைகளாக்கும் நோக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மணலாறு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் விகிதாசாரத்துக்கு போட்டியாக சிங்களவர்களின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட்டது. அதேபோல அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு சமனாக சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டது.

தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டம் இல்லாதிருந்திருந்தால் வடகிழக்கில் இன்று தமிழ், முஸ்லிம் மக்களின் இனவிகிதாசாரம் இன்றைய நிலையிலும் பார்க்க அதிகமான வேறுபாட்டை கொண்டிருக்கும். அதாவது வடகிழக்கில் சிங்களவர்களே பெரும்பான்மையினராக இருந்திருப்பார்கள்.

அனைத்து துறைகளிலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாரபட்சம் காட்டப்பட்டதனால் தமிழ் தலைவர்கள் அரசியல் போராட்டத்தினை மேற்கொண்டார்கள். அது அடக்கப்பட்டதனால் வேறு வழியின்றி தங்களது உண்மையான சுதந்திரத்தினை வேண்டி ஆயுதப்போராட்டத்தினை மேட்கொண்டார்கள்.

இந்த பாரபட்சம் தமிழர்களுக்கு மட்டுமல்ல. முஸ்லிம் மக்களுக்கும் இருந்தது. தமிழ் தலைவர்கள் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடினார்கள். ஆனால் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் சிங்கள தலைவர்களை எஜமானர்களாக நினைத்து அவர்களுக்கு அடிமைகளாக இருந்துகொண்டு பதவிகளை மட்டும் அனுபவிக்கும் நோக்கில் பேசாமடந்தைகளாக இருந்தார்கள். இதனால் இந்நாட்டின் முஸ்லிம் சமூகம் அரசியல் அனாதைகளாக சிங்கள கட்சிகளிலும், தமிழ் கட்சிகளிலும் சிதறிக்கிடந்தனர்.

இன்று கொண்டாடப்படுகின்ற சுதந்திரமானது அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ள சிங்கள மக்களுக்குரியதே, தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரான நாங்கள் ஆங்கிலயர்களது ஆட்சியியையும், சிங்களவர்களது ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஆங்கிலயர்களது ஆட்சி பருவாயில்லை என்ற நிலையே காணப்பட்டது.

எனவே சிறுபான்மையினரான எங்களுக்கு அரசியல் உரிமைகளுடன் கூடிய அதிகாரங்கள் எப்பொழுது வளங்கப்படுகின்றதோ, அன்றிலிருந்துதான் உண்மையான சுதந்திரத்தினை நாங்கள் கொண்டாட முடியும். இது இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரமே அன்றி எங்களுக்கல்ல. அன்று ஆங்கிலயர்களுக்கு அடிமையாக இருந்ததுபோன்று, இன்று சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்கின்றோம். இதில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது




Read more...

Saturday, February 3, 2018

மக்களை குழப்புவதற்காக வெளியிடுகின்ற எந்தவொரு ஆய்வறிக்கைகளும் தேர்தல் பெறுபேறுகளுடன் ஒத்துப்போனதில்லை.

தேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்புக்களும், ஆய்வறிக்கைகளும் வெளிவருவது ஒரு சாதாரண நடைமுறையாகும். ஆனால் எந்தவொரு ஆய்வறிக்கையினையும், கருத்துக் கணிப்புக்களையும் அண்ணளவாக ஆய்வு செய்யலாமே தவிர நூறுவீதம் துல்லியமாக கூறமுடியாது.

கடந்தகால வரலாற்றில் வெளியான எந்தவொரு ஆய்வறிக்கைகளும் தேர்தல் பெறுபேறுகளுடன் ஒத்துப்போனதில்லை. அதிகமான ஆய்வறிக்கைகள் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரானதாகவே இருப்பது வழமையாகும். ஆனால் மக்களின் தீர்ப்புக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது.

தேர்தல் வந்தால் அரசியல்வாதிகளிடம் பணம் அறவிடுவதற்காக சிலர் பலவகையான உபாயங்களை மேற்கொள்வார்கள். அந்தவகையில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சக்திகளிடம் சென்று பணத்தினை பெற்றுக்கொண்டு ஆய்வு செய்கிறோம் என்ற போர்வையில் பணம் வழங்கியவர்களுக்கு சார்பாக ஆய்வறிக்கைகளை வெளியிடுவார்கள்.

இவ்வாறு அறிக்கை வெளியிடுவதன்மூலம் தளம்பல் நிலையில் உள்ள வாக்காளர்களை கவர முடியும் என்பது பணம் வழங்குகின்ற அரசியல் வாதிகளின் கணிப்பாகும்.

அதேநேரம் குறித்த அரசியல் கட்சிக்கு சார்பாக ஆய்வறிக்கைகளை வெளியிடுவதாக கூறி பணம் சம்பாதிக்கமுடியும் என்பது ஆய்வாளர்களின் சிந்தனையாகும்.

இங்கே நடுநிலையாக ஆய்வு செய்கின்றவர்களின் பொதுப்படையான ஆய்வினை நாங்கள் குறை கூற முடியாது. அவ்வாறு பொதுப்படையாக ஆய்வு செய்கின்றவர்களின் அறிக்கையானது செல்வாக்கில்லாத கட்சி ஒன்றுக்கு அதிகம் ஆசனம் கிடைக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் இருக்காது.

தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கின்ற நிலையில், மக்கள் மனதில் மாற்றங்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புக்கள் உள்ளது. மதில் மேல் பூனையாக இருக்கின்ற வாக்காளர்களும், வாழ்வாதார உதவியினை எதிர்பார்த்து வாக்களிக்கின்றவர்களும் இறுதி நேரத்தில்தான் எந்த கட்சிக்கு அல்லது எந்த சின்னத்துக்கு வாக்களிப்பது என்று தீர்மானிப்பார்கள்.

எனவே ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், BBC, CNN என எந்த நிறுவனம் ஆய்வறிக்கையினை துல்லியமாக வெளியிடுகின்றோம் என்று அறிக்கை வெளியிட்டாலும், அதில் எந்தவித உண்மையும் இல்லை. மாறாக தாங்கள் பணம் பெற்றுக்கொண்ட கட்சிக்கு சார்பான நிலைமையை ஏற்படுத்துவதற்காக மக்களை குழப்புகின்ற ஓர் தந்திரோபாயமாகும்.

முகம்மத் இக்பால்



Read more...

Friday, February 2, 2018

நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 2) வ.அழகலிங்கம்.

எப்படி உயிர்வாழ்வுக்குப் பிராணவாயு அவசியமோ அதேபோல உயிர்வாழ்வுக்கு அரசியலும் அத்தியாவசியமாகும். அசுத்தமான காற்றைச் சுவாசித்தால் எப்படி நோய்வாய்ப் படுகிறோமோ அப்படியே பிழையான அரசியலைக் கிரகிக்க நிர்பந்திக்கப்பட்டால் வாழ்வே நரகமாகி விடும். எப்படி நச்சு உணவை உட்கொண்டால் உடல் நலம் கெட்டுவிடுமோ அதே மாதிரியே நச்சு அரசியலை உட்கொண்டால் வாழ்வு கெட்டுவிடும். அரசியலை விட்டு மக்கள் ஓடலாம். ஆனால் அரசியல் மக்களை விட்டு ஓடாது. எப்படி ஊழ்வினையை விட்டு மக்கள் தப்ப முடியாதோ அதேபோல் அரசியலை விட்டும் மக்கள் தப்ப முடியாது.

'மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்லெனத்
துன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்த
நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்கு,,

மழைவளம் மாறுபடுமானால் மிகப் பெரிய அச்சம், யாதானும் ஒரு காரணத்தால் உயிர்கள் வருத்தமுறின் அதனினும் பெரிய அச்சமுண்டாகும், குடிகளை அறத்துடன் காத்து வரும் செயலை மேற்கொள்ளும்போது, தட்டித் தவறிக் கொடுங்கோன்மை ஆகிவிடுமோ என்று அஞ்சியும், மக்களைக் காத்துவரும் நல்ல மன்னர் குடியிலே பிறத்தல் என்பது என்றும் துன்பமேயல்லாது போற்றத்தக்கதன்று, என்று மனம் உளைந்து, பாண்டியனுக்கு உற்ற துன்பத்தினைத் தெளிவாக அறிந்துவந்து உரைத்த நன்நூற் புலவரான சாத்தனாருக்கு, மிக வருத்தத்தோடு கூறினான் சேரன் செங்குட்டுவன்.

இதைப்போலத் தன் பொறுப்பை உணர்ந்ததுபோல் எத்துணைப் பேர் உணரமுடியும்? மன்னர்கள் தம் கடமைகளை உணராமல் உரிமையை நிலைநட்ட முயன்ற பொழுதுதான் 'குடியாட்சி என்ற வித்து இந்த மானிலத்தில் ஊன்றப் பெற்றது. பண்டைய அரசர்கள் தம் பொறுப்புகளையும் கடமைகளையும் பெரிதும் உணர்ந்திருந்தமையால் புறநானூற்றுப் புலவர் மோசி கீரனார், நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்-186 என்று பாடினார். மன்னன்தான் நாட்டின் உயிர் என்று அக்காலக் கொள்கையை வெளியிட்டார். காலப் போக்கில் மக்கள் குரலுக்கு மதிப்பு ஏற்பட்டது.

பாடல் பின்னணி: இவ்வுலகிற்கு மன்னன் இன்றியமையாதவன் என்பதை அறிந்து நடப்பது மன்னனின் கடமை என்று இப்பாடலில் புலவர் மோசிகீரனார் வலியுறுத்துகின்றார்.

'நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,
அதனால், யான் உயிர் என்பது அறிகை,
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.||

பொருளுரை: நெல்லும் உயிர் இல்லை. நீரும் உயிர் இல்லை. இந்த உலகம் மன்னனையே உயிராகக் கொண்டது. அதனால், தானே உயிர் என்பதை அறிவது வேல்களுடன் கூடிய படைகளைக் கொண்ட வேந்தனின் கடமை.

புறநானூற்றுக் காலத்தில் மன்னனை உயிராகவும். மக்களை உடம்பாகவும் காட்டப் பெற்றது. காரணம், இக்கருத்து அக்காலத்தில் நிலவி வந்ததால், கம்பன் காலத்தில் இக்கருத்து மெல்ல மெல்ல மாறி வந்து மக்கள் உயிராகவும் மன்னன் உடம்பாகவும் மாற்றப்பெற்றிருப்பதால் மக்களாட்சிக்கு வித்திட்டது போன்ற ஒரு புதுக் கருத்தைக் காண முடிகின்றது. தசரதச் சக்கரவர்த்தி நாட்டைப் பாதுகாத்தல் சிறப்பைப்பற்றிக் கூற வந்த கம்ப நாடன்,

'வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.,,

ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பன் மக்கள் குரலுக்கு மதிப்பு இருந்ததை, வையம் மன்னுயி ராக அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடல்அன்ன மன்னவன்:
வயிரம் பதித்த அணிகலன்களை அணிந்த, ஆண் சிங்கம் போன்ற வலிமையுடைய தசரதன் மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிராகக் கருதிக் காப்பான். எனவே குற்றம் அற்ற அவனது நாட்டிலே உள்ள நடமாடும் உயிர்கள், நடமாடாமல் நிலைத்து நிற்கும் மரம், செடி போன்ற உயிர்கள் ஆகிய அனைத்தும் ஒன்றாகத் தங்கியிருக்கும் ஓர் உடம்பு போல இருந்தான்.

வையம் மன் உயிர் ஆக அம் மண் உயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி அறம் கடவாது அருள்
மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ?

தன் நாட்டு மக்களே தனக்கு நிலைபெற்ற உயிராக, அம் மக்களை நல்வாழ்வு பெறும்படி அவற்றைத் தாங்கும் உடம்பைப் போன்ற மன்னனுக்கு, அறநெறி தவறாமல், அருளிலும் சத்தியத்திலும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நின்ற பின்பு, வேள்வி செய்தலும் வேண்டுமோ? வேண்டாம். அப்படியான மன்னன் முத்தியடைவது திண்ணம். எவன் தன் தொழிலைச் சிரத்தையோடு செய்கிறானோ அவன் கட்டாயம் முத்தியடைவான். செய்யும் தொழிலே தெய்வம்.

இம்மாதிரியான மன்னர் குடிப்பிறப்பு மிகவும் துன்பமானது. அரச பதவி என்பது, முட்களால் சூட்டப்பட்ட முடி என்று சொல்லுகிறான்.

இதையெல்லாம் கேட்பது ஒரு கனவாக இருக்கிறதா? இப்படி ஒரு அரசா? இப்படி ஒரு காலம் இருந்ததா? மன்னர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களா? இன்று போல குடியாட்சியில் அல்ல, ஜனநாயகக் காலத்தில் அல்ல, மன்னர் ஆட்சியில். அப்படி அறம் சார்ந்த அரசோச்சியவர்கள் தமிழ் மன்னர்கள்.

அரசன் என்ற ஆணவம் இல்லாமல், அரசன் என்பது ஒரு தொழில் என்ற அடிப்படை உண்மையைப் பேசும் இந்த சேரனின் நேர்மையான இந்த சொல் தமிழனின் நாகரீகம் சொல்கிறது! பண்பாடு பகர்கிறது.

ஒரே காலகட்டத்தில் வேற்று நாடுகளை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரன் செங்குட்டுவனும் நேர்மையின் திறன் சொல்வது தமிழர்களின் சங்ககால நற்பண்பாட்டிற்குச் சான்றுபகர்வதாகும்!

சந்திரபாபு நாயுடு ஒருதடவை சொன்னார் 'நான் இந்த மாநிலத்தின் தலைமை அலுவலன்' தலைமைக் கூலிக்காறன் என்று சொன்னால் புளகாங்கிதம் அடையும் நாம், நம்மைத் தேட மறுக்கிறோம்! அவர் ஆட்சியில் பெங்களுர் உலகின் கணணி நகரமாகியது.

பதினெட்டு நூறு ஆண்டுகட்கும் முன்னாலேயே 'நான் அரசன் என்ற தொழிலாளி' என்று சொன்ன சேரனை மறந்து விடல் ஆகாது!

சங்ககால அரசப் பண்பாட்டைக் கடமையுணர்வையும் அறிந்து கொள்ளல் அவசியம்! வரலாறற்ற தேசங்கள் என்ற அரசியற் கலைச் சொல்லை பிடெறிக் ஏங்கல்ஸ் கையாண்டுள்ளார். வரலாறு என்பது மாபெரும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறே என்று கார்லைல் என்ற ஆங்கில அறிஞர் சொன்னார்.

மாமனிதக் கோட்பாடு 19 ஆம் நூற்றாண்டின் கருத்தாகும், இவற்றின் அடிப்படையில், மாமனிதர்களின் அல்லது ஹீரோக்களின் தாக்கத்தால் வரலாற்றை பெரும்பாலும் விளக்க முடியும்;. அவர்களின் செல்வாக்கு, உளவுத்துறை, பரஞானம் அல்லது அரசியல் திறமை ஆகியவற்றின் காரணமாக, ஒரு சக்திவாய்ந்த வரலாற்றுத் தாக்கத்தை ஏற்படுத்தித் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி வரலாற்றைப் படைப்பார்கள். இந்த கோட்பாடு 1840 களில் ஸ்கொட்டிஷ் எழுத்தாளர் தாமஸ் கார்லைல் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. ஆனால் 1860 ஆம் ஆண்டில் ஹெர்பெர்ட் ஸ்பென்சர் இந்த வாதத்தை எதிர்த்தார். ஸ்பென்சர் சொன்னார்: 'இத்தகைய பெரியவர்கள், அவர்கள் வாழ்ந்த சமுதாயங்களின் படைப்புக்களே. அவர்கள் வாழ்த காலத்திற்கு முன்பு இருந்த சமூக நிலைமைகள் இல்லாவிடில் அவர்களது நடவடிக்கைகள் இயலாது.,, ஒரு பெரிய மனிதனின் தோற்றத்தை அவரைத் தோற்றுவித்த இனம், மற்றும் அந்த இனம் மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த சமூக நிலைமைகள், அவரை உருவாக்கிய சமூகத்தின் நீண்ட சிக்கலான செல்வாக்கின் தாக்கத்தை சார்ந்துள்ளது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் .... அவர் சமுதாயத்தை உருவாக்க முன், அவரது சமுதாயம் அவரை உருவாக்கியது.,,- ஹெர்பர்ட் ஸ்பென்சர், சமூகவியல் பற்றிய ஆய்வு. பிடெறிக் ஏங்கல்ஸ் எழுதிய டூறிங்குக்கு மறுப்பு என்ற புகழ்பெற்ற புத்தகத்தில் 'அரசியல் என்பது ஒட்டுமொத்த மனிதர்களின் சிந்தனையின் கூட்டுத்தொகையின் சராசரிப்; பாதையிலேயே நடைபோடும். எந்த மாமனிதனின் தாக்கமும் பங்களிப்பும் வரலாற்றைப் பொறுத்த வரை மிக மிக அற்பமும் விலக்கற்பாலதுமாகும். வரலாற்றில் ஏற்பட்ட பெரிய பெரிய சம்பவங்களுக்கிடையே நிலவிய இடைத் தொடர்புகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கத் தெரிந்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்கள், என்கிறார். எது எப்படி இருந்தாலென்ன, நாட்டின் தகுதிக்கேற்ற அரசே அமையும் என்பது வெளிப்படை.
பனையளவு பண்பாடு தினையளவாய் ஆகிப்போய், பயனற்ற சமுதாயமாய் ஆகிவிடுமோ என்ற ஐயத்தில் இன்றையத் தமிழ்ச் சமுதாயம்!
சிறப்புற்ற வாழ்வில் இருந்து சிதைவுற்றுப் போகுமோ இந்த தமிழ்க் குடி? சிரிப்பாகிப் போவரோ தமிழர்? என்ற ஐயம் தோன்றாமலில்லை!

சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம்.
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமொடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
-பாரதிதாசன்

புதுவினை செய்க அஃது
பொதுநலம் ஆதல் வேண்டும்
இதுசெய்க போர்கள் இல்லை
இன்ப நல்லுலகைக் காண்பாய்
– பாரதிதாசன்

புதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சீரிய கருத்தைச் சொன்னார் பாரதிதாசன்.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம் என்றான் பாரதி. என்ன மிடுக்கு. இந்தச் சரியைப் பற்றிப் பாராதிக்கு ஒரு சின்ன ஊசலாட்டமும் இருக்கவில்லை.

'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்.,,-(1062)

மனிதர்கள் பிச்சை எடுத்துத்தான் வாழுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பாயானால் நீ கடவுள் அல்லவே அல்ல. எவ்வளவு கெதியாக நீ சாக முடியுமோ அவ்ளவு கெதியாகச் செத்துப் போ! இதுதான் தமிழர் காட்டிய நன்நெறி.

தசரதன் வேண்டுகோளை ஏற்று, இராமனின் மனை புகுந்த வசிட்டன், முடி சூடுவதற்கு முன் இராமனுக்கு சில புத்தி மதிகளை கூறுகிறார்.

உயர் அறங்களை அவனுக்கு ஓதத் தலைப்படுகிறார். அங்ஙனம் அவன் ஓதும் உயர் அறங்களில், இன்றுவரை கற்றோர் உலகம், உச்சிமேல் வைத்து உவக்கும் செய்தியாய்க் கொள்வது,
'யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது,, எனும் கருத்தினையேயாம்.

நட்டார், பகைவர், நடுநிலையார் எனும் முத்திறத்தாரோடும், பகை கொள்தலை ஒருவன் தவிர்ப்பானானால், புகழ் ஒடுங்காது நிற்கப் போர் ஒடுங்கும் என, கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்க, வசிட்டன் வழியுரைக்கிறான் பாரதிதாசன்.

போர் ஒடுங்கிய புத்துலகைக் காணும் வழியினை, வசிட்டன் வாயால் வழிமொழிகிறான் கம்பன்.
'யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன்
தார் ஒடுங்கல் செல்லாது அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ.

-அயோத்தய காண்டம், மந்தரை சூட்சிப் படலம் பாடல் 106.(குறிப்பு:- இந்தப் பாடலே தமிழ் இலக்கியத்தில் அதிக தடவை மேற்கோள் இடப்பட்ட பாடல்.)

ஓர் அரசன் எவரிடமும் பகை கொள்ளாதவன் என்னும் நிலை உண்டான பின்பு அவன் நாட்டில் போர் இல்லாமல் போகும். ஆனால் அவனுடைய புகழ் குறையாது. அவனது படையும் அழியாது. அழியாத பெரிய படையை கண்டு மற்றவர்கள் உன் மீது போர் செய்ய மாட்டார்கள். அப்படி அன்பால் பகைவர்களை வென்ற பின் அவர்களை அழிக்கும் எண்ணம் தோன்றாது ..'அத்தகைய நன்மை உண்டான பின்பு, அந்த அரசன் வேரோடு அழியும் நிலை உண்டாகுமோ ? உண்டாகாது.,,

எல்லாரிடமும் அன்பு செய்தல் ஆக்கம் தரும் என்ற கருத்தினை 'பலத்தால் வெல்லப் பட்டபகைவன் சமயம் வாய்த்தபோது கேடு செய்வான். அன்பால் வெல்லப் பட்ட பகைவன் எப்போதும் கெடுதல்
செய்யான்' என்னும் புத்த பகவான் மொழியோடு இணைத்துப்பா ர்க்கலாம்.

'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்' என்னும் (கொன்றை வேந்தன் கருத்தையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம். அரசியல் என்பது இரத்தம் சிந்தாப் போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். உலகம் முழுவதும் முன்பு நடந்தேறிய பேர்கள்கள் பற்றியும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிற போர்கள் பற்றியும் ஸ்தூலமான அறிவில்லாத அரசியல்வாதிகள் மக்களை வழிநாடத்துவார்களே ஆனால் அழிவொளிய ஆக்கம் வரப் போவதில்லை. அரசியல்வாதிகளை அளந்தறியும் உரைகல்தான் அவர்கள் ஒவ்வொரு போரின்போதும் எடுக்கும் நிலைப்பாடுகள். ஏனெனில் நவீன அரசியல் என்பது தொண்ணூறுவீதமும் சர்வதேச இரகசிய இராஜதந்திரமாகும். அரசியல்வாதிகள் மேடைகளிலே முணுமுணுப்பதும் புலம்புவதும் மக்களின் கண்களிலே மண்ணைத்தூவும் கைங்கரியங்களாகும். உப்புச் சப்பற்ற உலுத்தர்களின் உளறல்கள்.

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும் என, வசிட்டர் உரைத்த அரசநீதியில், தன் அனுபவப் பதிவேற்று, மாற்றம் செய்துரைக்கிறான் இராமன்.

முன் சொன்ன போர் பற்றிய தனது கருத்தினை, சுக்கிரீவனுக்கான அறிவுரையில், அவன் தெளிவுறப் பதிவு செய்கிறான்.

'நாயகன் அல்லன்; நம்மை நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் என, இனிது பேணி, தாங்குதி தாங்குவாரை
ஆயது தன்மையேனும், அற வரம்பு இகவா வண்ணம்,
தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை.,,

குடிமக்களிடத்து அன்பு காட்டி ஒழுகுதலும், அவ்வாறு நடக்கையில்எ வரேனும் தவறு செய்தால் குற்றத்திற்கேற்ற படி தண்டித்தலும் அரசர்க்கு ஏற்ற முறையாகும் என்பது கருத்தாம்.

'குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்,
வடுவன்று வேந்தன் தொழில்',
'கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்ட தனொடு நேர்',
'தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால்,
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து';
'கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்' (குறள் 549, 550, 561, 567) என்னும் கருத்துக்கள் இங்கு காணத்தக்கன.

மேற்பாடலில், வசிட்டனின் கருத்தினை உள்வாங்கி, அனுபவத்தால் இராமன் செய்த மாற்றங்கள், தெளிவுற வெளிப்படுகின்றன. இப்பாடலின் முதல் இரண்டு அடிகளில், அன்பினால் உலகைக் காக்கும் அவசியத்தை உரைக்கும் இராமன், அதே நேரத்தில் அவ்வன்பினை உணர்வார்க்கே, சமூகம் பற்றிய உயர்ந்த உணர்மையடைந்தவர்க்கே, அந்நடைமுறை சரியாம் என்பதையும் தெளிவு பட உரைக்கின்றான்.

யாரொடும் என, வசிட்டன் வகுத்த வரம்பினைச் சற்று மாற்றி, தாங்குதி தாங்குவாரை என, இராமன் புதிய வரைவு செய்கிறான்.

அது மட்டுமன்றி தீமை வலிந்து தாக்கவரின், அற வரம்பு சிதையாவண்ணம், அதனைத் தாக்குதலும் தர்மமே என அழுத்தி உரைக்கிறான். தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை.

அற வரம்பினைக் காக்கச் செய்யும் போரில், காட்ட வேண்டிய வலிமையையும், இராமன் குறிக்கத் தவறினானில்லை. சுடுதியால் எனும் இராமனின் உத்தரவில், அக்கருத்தை நாம் உணருகிறோம்.

அரசன் நாட்டின் காவலனே அன்றித் தலைவன் அல்லன் என்பதைக் கம்பன் வற்புறுத்துகிறான்.

தேவரும் வெஃகற்கு ஒத்த
செயிர்அறு செல்வம் அஃது உன்
காவலுக்கு உரியது என்றால்,
அன்னது கருதிக் காண்டி.(4124)

நாட்டின் செல்வம் குடிமக்களுக்கே உரியது என்ற புரட்சிக் கருத்தையும் கம்பன் எடுத்துக் கூறுகின்றான். நாட்டின் செல்வத்தைக்காக்கும் காவலாளியே அரசன் ஒளிய அதன் உரிமைக்காரனல்ல.

'கலம் சுரக்கும் நிதியம், கணக்கிலா
நிலம் சுரக்கும் நிறைவளம், நல்மணி
பிலம் சுரக்கும், பெறுதற்கு அரிய நம்
குலம் சுரக்கும் ஒழுக்கும் குடிக்கு எலாம்.(69)

கப்பல்களும், நிலமும், சுரங்கங்களும் தரும் செல்வம் எல்லாம் குடிமக்கள் அனைவருக்கும் உரியவை என்பதையே கம்பன் இப்பாடல் மூலம் கூறுகின்றான். எந்த மக்கள் விரோதக் கொள்கையையும் கம்பன் ஏற்றவன் அல்லன். அரசன் எவ்வகையிலும் பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்பக் கூடாது. மேவின வெஃகல் இன்மை(4125) என்று சொல்வதன் மூலம் அச்செல்வம் மக்கள் தங்கள் உரிமையால் பெற்றது என்பதையும் உணர்த்துகிறான்.

அரசன் என்று நிருவாக வசதிக்காக ஆட்சித்தலைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று கம்பன் விரும்பினாலும் இறையாண்மை முழுவதையும் அவனிடம் ஒப்படைக்க வில்லை. அவனுடைய அதிகாரம் வரம்புக்கு உட்பட்டது.

Read more...

மு.கா கோட்டையை கைப்பெற்ற முயற்சிக்கையில், தனது இதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளால் அவதிப்படும் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.

முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு அதன் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் தனது அத்தனை பலத்தினையும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் பிரயோகித்து அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவரது கட்சியின் இதயமாக கருதப்படுகின்ற ஒரே ஒரு சபையான முசலி பிரதேச சபையினை முற்றாக இழந்துகொண்டு வருகின்ற நிலைமையை அங்கு உள்ள களநிலவரம் கூறுகின்றது.

முசலி பிரதேச சபையானது வன்னி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் சபையாகும். அங்கு சுமார் பன்னிரெண்டாயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளார்கள். இப்பிரதேசம் நீண்டகாலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2008 இல் அரசபடைகளினால் மீட்கப்பட்டதன் பின்பு முதல் முறையாக 2௦11 ஆம் ஆண்டிலேயே உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ரிசாத் பதியுதீனின் ACMC மற்றும் EPDP, SLFP ஆகிய கட்சிகள் கூட்டுச்சேர்ந்து 5௦52 வாக்குகளை பெற்று ஆறு உறுப்பினர்களுடன் முசலி பிரதேச சபையை ஆட்சி செய்தது. அப்போது ஒன்பது உறுப்பினர்களை கொண்டிருந்ததனால் ஏனைய இரண்டு உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கும், ஒரு உறுப்பினர் தமிழரசு கட்சிக்கும் இருந்தது.

புதிய தேர்தல் முறையில் பத்து வட்டாரங்களைக் கொண்ட முசலி பிரதேச சபையில் அரிப்பு மேற்கு, அரிப்பு தெற்கு ஆகிய இரண்டு சபைகளும் தமிழர்களுக்குரியது. ஏனைய எட்டு வட்டாரங்களான வேப்பங்குளம், பொற்கேணி, பண்டாரவெளி, புதுவெளி, அகத்திமுறிப்பு, சிலாவத்துறை, கொண்டச்சி–கரடிக்குளி, மரிச்சிக்கட்டி–பாலக்குழி ஆகியன முஸ்லிம் வட்டாரங்களாகும். இதில் தற்போதைய களநிலவரப்படி வேப்பங்குளம், பண்டாரவெளி, மரிச்சிக்கட்டி-பாலக்குழி ஆகிய மூன்று வட்டாரங்கள் மாத்திரமே அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சாதகமாக உள்ளது. அதிலும் மரிச்சிக்கட்டி-பாலக்குழி பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஒரு கூட்டத்தையேனும் நடாத்த முடியாத நிலைமை முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்தது. இன்று அங்கு ஓய்வுபெற்ற கிராம் உத்தியோகத்தர் தாஜூதீனின் செயல்பாட்டினால் அதிக வாக்குகளை மு.கா க்கு பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பண்டாரவெளி வட்டாரமானது வடமாகானசபை உறுப்பினராக புதிதாக பெயர் பரிந்துரைக்கப்பட்ட நியாஸ் அவர்களின் பிரதேசமாகும். அங்கு தேர்தல் பணிக்காக இன்னும் நியாஸ் அவர்கள் களம் இறங்கவில்லை என்ற காரனத்தினால் அந்த வட்டாரம் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சாதகமாகவே உள்ளது.

அவைகள் தவிர்ந்த ஏனைய ஐந்து வட்டாரங்களான பொற்கேணி, புதுவெளி, அகத்திமுறிப்பு, சிலாவத்துறை, கொண்டச்சி-கரடிக்குளி ஆகிய வட்டாரங்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகம் சாதகமாகவே உள்ளது.
சில நேரங்களில் முஸ்லிம் காங்கிரசுக்கு சாதகமாக உள்ள வட்டாரங்களில் வாழுகின்ற மக்களின் வறுமை நிலையின் காரணமாக, அவர்களது வாக்குகள் அமைச்சர் ரிசாத்தினால் விலைக்கு வாங்கப்பட்டாலும், ஆட்சி அமைக்கின்ற அளவுக்கு வாக்குகளை பெறமுடியாது.

இறுதி நேரத்தில் இரு கட்சிகளும் சரிசமமான நிலைக்கு வந்தாலும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பே இருக்கும். எது எப்படி இருப்பினும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரசினால் முசலி பிரதேச சபையை இந்த தேர்தலில் கைப்பெற்ற முடியாது என்பதுதான் அங்குள்ள களநிலவரமாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

Read more...

Wednesday, January 31, 2018

13 வயது மாணவனின் ஆண்குறியில் இந்திரியப்பரிசோதனை செய்த ஆசிரியர் கைது ..

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 13 வயது மாணவன் ஒருவன் வீங்கிய தனது ஆண்குறியுடன் அழுகையை நிறுத்தமாட்டாதவனாக வதங்கிப்போய் அவமானத்தில் குறுகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் படுத்துக் கிடக்கிறான்.

அவனது இந்த நிலைக்கு பள்ளி ஆசிரியர் காரணமாக இருந்தார் என்கின்ற செய்தி தரக்கூடிய அயர்ச்சியிலிருந்து மீளமுடியாமலும், காலையிலிருந்து எந்தவொரு பணியையும் ஒழுங்காகச் செய்யமுடியாமலும் பதட்டமாக இருக்கிறேன்.

ஏறாவூர் றகுமானியா பாடசாலையிலிருந்து விலகி அலிகார் தேசிய பாடசாலைக்கு பெரும் விருப்பத்துடன் மாறியுள்ளான். ”அலிகாரியன்” என்று தானும் பெருமையாகச் சொல்லவேண்டும் என்ற விருப்பம் அவனுக்குள்ளும் உண்டாகி வீட்டில் சண்டைகள் புரிந்து பள்ளியை மாற்றக் காரணமாக இருந்திருக்கலாம். எது எப்படியோ பள்ளி மாறிய சிறுவனுக்குப் புதிய பள்ளியின் சூழலும் புதிய நண்பர்களும் ஆசிரியர்களும் பழக்கமாகுவதற்கு முன்பே, அலிகாரில் கற்பிக்கும் ஆசிரியர் அலி முஹம்மது (55) அவனது ஆண்குறியில் இந்திரியம் வருவதைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டுவிட்டது.

சென்ற சனிக்கிழமை, ”நீ கணிதப் பாடத்தில் வீக்காக இருக்கிறாய். உனக்கு விசேஷட வகுப்புத் தருகிறேன்” என்று தனியாக அழைத்து இரண்டு மணி நேரமாக பாலியல் சேஷ்டைகள் புரிந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் எல்லோரையும் போல பாதிக்கப்பட்ட சிறுவனில் எனக்கும் அதிக அக்கறை இருந்தபோதும், அவனை பாதிப்புக்கு உள்ளாக்கிய ஆசிரியரின் முகத்திரையை கிழிப்பதும் முக்கியம் என்று தோன்றுகிறது.

இந்த ஆசிரியர் கடந்த முப்பது வருடங்களாக பணியில் உள்ளவர். இவரால் பல சிறுவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாடசாலை நிர்வாகம் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று முறைப்பாடு செய்யும் பெற்றோர்களிடம் ”அல்லாஹ்வுக்காகச் ஸபூர் செய்யுங்கள். இனி இப்படி நடக்காது” என்று மன்றாட்டங்கள் செய்து இவரைக் காப்பாற்றி வந்துள்ளது. இந்த ஆசிரியர் மீது 20 வருடங்களுக்கு முன்பும் பொலிஸில் இதே விவகாரத்துக்காக முறைப்பாடு செய்யப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்டதும் நடந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு என்றால் இன்று வரைக்கும் இந்த ஆசிரியர் எத்தனை சிறுவர்களின் ஆண்குறியில் இந்திரியப் பரிசோதனை நடாத்தியிருப்பார்?

இன்றைக்கும் இவரைக் காப்பாற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தருகிறோம் என்றும் ஏறாவூரிலுள்ள உலமாக்களும் ஆலிம்களும் ஆசிரியர்களும் ஓடித்திரிவதைப் போல ஒரு வெட்கங்கெட்ட செயல் வேறென்ன இருக்கமுடியும். பள்ளி நிர்வாகம் முன்பே இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் பல சிறார்களை இவரிடமிருந்து காப்பாற்றியிருக்கலாம். ”அடுத்தவனின் மானத்தைக் காப்பாற்றினால் உனது மானத்தை அல்லாஹ் காப்பாற்றுவான்” என்பதற்கான அர்த்தத்தை பிழையாகக் விளங்கிக் கொண்ட தற்குறி உலமாக்கள், ஆலிம்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் தகுந்த பாடம் புகட்டவேண்டிய தருணம் இது. இது ஆசிரியரின் மானம் சார்ந்ததோ, பாடசாலையின் மானம் சம்பந்தப்பட்டதோ இல்லை. சிறுவனின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. சிறுவர்களின் உளவியலைச் சிதைக்கும் காரியங்கள் எதிர்காலத்தில் உண்டாக்கும் விளைவுகள் பாரதூரமானவை.

இந்த ஆசிரியர் நஜ்மில் உலும் என்ற பெயரில் அரபிக் கலாசாலை ஒன்றையும் நடத்தி வருகின்றார். இந்த அரபிக் கலாசாலையில் 100 வரையிலான மாணவர்கள் உள்ளார்கள். பள்ளி வாசல்கள் சம்மேளனத்தில் இவர் ஒரு உறுப்பினர் என்றும் தெரியவருகிறது. பள்ளி வாசல்கள் சம்மேளனத்தில் தலைவராக இருந்தவரே ஒரு பெண்ணைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு ஓடி ஒழித்தவர்தான் ஒரு காலத்தில். இப்படி வேலியே பயிரை மேய்ந்தால் எப்படித்தான் இந்த சமூகம் உருப்படும்?

பாதிக்கட்ட சிறுவனை நஷ்ட ஈடுகொண்டு தேற்றிவிட முயல்கிறவர்கள் அத்தனை பேர் மீது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினூடாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமிழைத்த ஆசிரியர் பெரும் செல்வாக்குப் பெற்றவர் என்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகூட கொஞ்சம் அப்படி இப்படித்தான் நடந்து கொள்கிறார் என்றும் அறிந்தேன். நியாயமாக இந்தப் பொலிஸ் அதிகாரி மீதும், ஏறாவூர் பள்ளி வாசல்கள் சம்மேளனம், அலிகார் பாடசாலை நிர்வாகம் அனைத்தின் மீதும் வழக்குத் தொடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த ஆசிரியரை பதவி நீக்கம் செய்து, ஓய்வூதியம் பெறமுடியாதபடி ஒரு தீர்ப்பை கொண்டு வரமுடியுமாக இருந்தால் நாடுபூராகவும் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக மாறும்.

சிறுவர்கள் நமது சொத்து. நாளைய நமது செல்வங்களைச் சுரண்டும் இந்தக் கயவர்களை எதிர்த்துப் போராட முடியாத நமது அறச்சீற்றத்தையும் எழுத்தையும் குப்பையில் தான் போடமுடியும்.

1929 என்ற இலக்கத்திற்கு (Child Help Line) அழைத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு உங்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பியுங்கள். ஏறாவூரில் மனிதாபிமானம் கொண்ட இளைஞர்கள் இருப்பீர்களாக இருந்தால் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கொழும்பு அலுவலக இயக்குநருக்கு ஒரு கடிதத்தை உடனடியாகப் பெக்ஸ் மூலம் அனுப்புங்கள். பலர் கூடிக் கையெழுத்திட்ட மனுவாக அது இருந்தால் நன்று. பெக்ஸ் இலக்கம் தேவைப்படுகின்றவர்கள் உள்பெட்டியில் கேட்டுப் பெறலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளரான Sharmila Seyyid அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என நம்பப்படுகின்றது.

என மனித உரிமைச் செயற்பாட்டாளரான அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என நம்பப்படுகின்றது.

கைதினைத் தொடர்ந்து அவர் Sri Lanka Thowheed Jamath இற்கு கீழ்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்:

சட்டநடவடிக்கைக்கு ஏறாவூரின் SLTJ (Sri Lanka Thowheed Jamath) உறுப்பினர்கள் தான்காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள்.

தவிர்க்க முடியாமல் உம்மம்மாவின் சொலவடை ஒன்று துருத்திக் கொண்டு நினைவுக்கு வருகிறது. அது, "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்ற சொலவடை.

SLTJ க்கு ஏது சிறுவர் துஷ்பிரயோக அக்கறையெல்லாம்? அப்படியொரு அக்கறை SLTJக்கு மெய்யாகவே இருக்குமெனில், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தில் பெண்களின் திருமண வயதை 18 ஆக திருத்தப் போராடியிருக்கவேண்டும். இந்தப் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவனின் வயதுச் சிறுமிகளைத் திருமணம் செய்வதைச் சட்டமாக வைத்துக் கொண்டு அதனை மாற்ற ஆதரவளிக்காதவர்களின் சிறுவர் அக்கறை என்பது நகைப்புக்கிடமானது. அத்தோடு தாருநுஸ்ராவில் 18 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தச் சிறுமிகளின் நீதிக்காக குரல் உயர்த்தி இருக்கவேண்டும். மதரஸாக்களில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து வாய் திறந்திருக்கவேண்டும். அரபிக் கல்லூரிகளில் நிகழும் ஓர்பால் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.

இப்படி சுற்றி நிகழும் சமூகச் சீர்கேடுகள் ஒன்றைப் பற்றியும் வாய் உசுப்பாத SLTJ, இப்படியான சமூக அவலங்களுக்காக ஒரு துரும்பைத்தானும் தூக்கிப்போடாத SLTJ இன் ஏறாவூர் உறுப்பினர்கள் மட்டும் இந்த ஒரு விடயத்தில் பொங்கிக் கொண்டு புறப்பட்டது ஏன்? மருத்துவமனையில் இரவு பகலென்று பாதிக்கப்பட்ட சிறுவனுக்குக் காவல் இருந்தது ஏன்?

சம்பந்தப்பட்ட ஆசிரியர் / அவர் சார்ந்த மத நிறுவனத்திற்கு எதிரான ஒரு பழிவாங்கும் உட்பூசல் நடவடிக்கையாக இதனைப் பார்க்க முடியுமே தவிர சமூக அக்கறையாக கொள்ளவேண்டியதில்லை.

ஏறாவூர் SLTJ மட்டும் ஒரு முன்மாதிரியாக ரோசம் சூடு சுரணை உள்ள உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் அதனைப் பாராட்டுவதில் தவறில்லை. எங்கே அண்மையில் ஏறாவூரில் பதிவு செய்யப்பட்ட நான்கு பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளைப் பொலிசிலிருந்து தூசு தட்டி எடுத்து நீதி கிடைக்கச் செய்யட்டும் பார்ப்போம்.

Read more...

Monday, January 29, 2018

நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 1) வ.அழகலிங்கம்.

உலகிலுள்ள ஒவ்வொரு தாயும் ஓர் அதி அழகான குழந்தையைப் பெறுகிறாள். தமிழ்த் தாயும் தமிழ் என்ற அழகான குழந்தையைப் பெற்றாள். வழமான சமூகவாழ்க்கை என்பது அரசியற் கோரிக்கைகள், சமூகநலக் கோரிக்கைகள், பொருளாதாரக் கோரிக்கைகள் என்ற மூன்று ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த கோரிக்கைகளால் ஆனது.

* பிரஜாவுரிமை, வாக்குரிமை, மொழியுரிமை, சுயநிர்ணயவுரிமை போன்றன அரசியற்கோரிக்கைகளாகும்.

* இலவசவைத்தியவசதி, இலவசக்கல்வி, வதிவிடவசதி, வயதானகாலத்து ஓய்வூதியம், பிரசவகாலத்து ஓய்வு என்பன சமூகநலக் கோரிக்கைகளாகும்.

* சம்பளஉயர்வு, வரிகுறைப்பு, பணவீக்கத் தடுப்பு, 8 மணி வேலை, அதிக பணப்புழக்கமும் சந்தையில் பற்றாக்குறை ஜீவனப் பொருட்களும், பற்றாத பணப்புழக்கமும் உபரி வினியோகப் பொருட்களும் ஏற்காமை போன்றன பொருளாதாரக் கோருக்கைகளாகும்.

இந்த மூன்று கோரிக்கைகளில் ஒன்றின் அழிவில் மற்றொன்றை வெல்வது அல்லது ஒரு கோரிக்கையை மாத்திரம் உயர்த்திப் பிடிப்பது அரசியற் பிழையாகும்.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று" என்றது சிலப்பதிகாரம். இங்கு சொல்லப்படும் "அறம்" என்பது என்ன?

ஏன் சிலகாலங்களில் அணைகடந்த காட்டாற்று வெள்ளம்போல ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான பொறுமையிழந்த மக்கள் ஒன்று திரண்டு அரசுகளுக்கு எதிராகத் தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள் என்று சிந்திக்கக் கார்ல் மாக்ஸ் தலைப் பட்டார். ஈற்றில் மக்களின் வாழ்நிலமைகளே மக்களின் சிந்தனையைத் தீர்மானிக்கின்றனவே ஒழிய மனிதர்களின் சிந்தனைகள் மனிதர்களின் வாழ்நிலமைகளைத் தீர்மானிப்பவை அல்ல என்று முடிவுக்கு வந்தார். சிந்தனைகள், போதனைகள், சட்டங்கள் என்பன வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று மனோமூலவாதிகளே எண்ணுவார்கள்.

பசி, பட்டினி, பஞ்சம், கடன்சுமை, கொடியவரிச்சுமை, வீடின்மை வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்தியின்மை, நோய்கள், பயம், எதிர்காலத்திற்கான உத்தரவாதமின்மை, இயற்கை அனர்த்தங்களிலிருந்தும் மீள வழியின்மை, பகைவர்களின் பயம், யுத்தம் போன்றன நாட்டில் நிலவும் தருணங்களிலே மக்கள் சட்டத்திற்கோ, வாழையடி வாழையான வழக்கங்களுக்கோ கட்டுப்பட மாட்டார்கள். சட்டம,; நீதி, நானாவித மனிதஉரிமைகள் எல்லாமே மக்களை ஏதோ ஒரு விதத்தில் வாழ வழிவிட்டால் மாத்திரம்தான் செல்லுபடியாகும். எல்லா உரிமைகளுமே பொருளாதாரத்திற்குக்; கட்டுப்பட்டது. ஜனனாயகமோ சர்வாதிகாரமோ வாழ வழிவிட்டால் மாத்திரமதான்; செல்லுபடியாகும். இல்லையேல் மக்கள் கிளர்ந்து எழுவார்கள். இதுவே சிலப்பதிகாரம் சொன்ன அரசியல் பிழைத்தோர்க்கு ஷஅறம்| கூற்று என்பதுவாகும்.

அரசியல் என்பது பொருளாதாரத்தின் செறிவாகும். திரட்சியாகும். ஒட்டுமொத்தமாகும். சிலகாலகட்டங்களில் வெகுசனங்கள் ஓரிரு பிரச்சனைகளுக்கு எதிராக மட்டும் போராட மாட்டார்கள். ஒட்டுமொத்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் எதிராகவும் போராடுவார்கள். ஒடுக்குமுறைகள் எல்லாவற்றிற்றிற்குமெதிராக அவை எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் அவைகளுக்கு எதிராகப் போராடுவார்கள். இதுவே வெகுசன எழுச்சி வடிவத்தை எடுக்கிறது. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் திரண்ட சமூகமூரண்பாடுகளைத் தீர்க்க வேண்டிய காலங்கனிந்ததால் எழுவதாகும். இந்த எழுச்சிகளின் போது புதியதொரு சமுதாயம் ஏற்படாவிட்டால் நாட்டில் காட்டுமிரண்டித்தனம் முந்தயதிலும் பலமடங்கு கொடூரமாக நடந்தேறும். இதுவே வாழையடி வாழையான வரலாறுகளின் பொதுமைப் படுத்தலாகும்.

சிலப்பதிகாரம் என்னும் காவியம் ஏன் எழுந்தது? அதற்குக் காரணம், இளங்கோவடிகளே சொல்லுகிறார்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

எனும் மூன்று உண்மைகளை நிலைநாட்டுவதற்காக 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்' என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

"பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென
ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென்." என்று மணிமேகலை கூறிற்று.
ஆதிரை நல்லாள் ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை நிலவுலகம் முழுவதும் பசி நோய் அறுக என்று கூறி இட்டனள். ஆருயிர் மருந்து இட்டனள்.

உணவு என்பது உயிர்க்கு அமுது. பசி என்பதோர் பிணி. முதலிற்பசி என்ற பிணியை அகற்ற வேண்டும். வள்ளலாரோ, 'வீடு தோறும் இரந்து பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்' என்கிறார்.

ஒளவையோ, 'ஈயென பல்லைக் காட்டி இரந்து தின்பது இழிவானது, ஆனால் அவர்க்கு இல்லை என்று சொல்வது அதனைவிட இழிவானது' என்கிறார். உணவைப் பாழாக்குகிறவர் பெரும் பாவிகள். உணவை அனுபவிப்பதற்கு பசியே முக்கியமான தேவை. உலகம் பசியாமலே சாப்பிடும் நாடுகளாகவும் சாப்பிட்ட பின்பும் பசிக்கும் நாடுகளாகவும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

'வறியோர்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து'| என்கிறார் வள்ளுவர். இல்லாதவனுக்குக் கொடுப்பதே ஈகை. மற்றெல்லாக்; கொடுப்பனவும் பிரதிபலன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது. கைம்மாறு கருதாத உதவியே உதவி. மற்றெல்லாம் றால் போட்டுச் சுறா பிடிப்தாகும.

'பசிப்பிணி, ஒருவரின் குடிப்பிறப்பினால் வந்த தகுதியை அழித்துவிடும். நற்குணங்களைச் சிதைத்து விடும். வாழ்வுக்குப் பற்றுக்கோடாகப் பற்றிக்கொண்ட கல்வியாகிய நல்லாண்மையைப் போக்கிவிடும். நாணமாகிய அணிகலனையும் நீக்கிவிடும். மேன்மைபொருந்திய அழகினை எல்லாம் சீர்குலைக்கும். மனைவியோடு சென்று பிறரிடம் பிச்சை எடுக்க வைக்கும். அத்தகைய பசி என்ற பாவியாகிய கொடுமையை முதலிற்போக்க வேண்டும். அங்ஙனம் போக்கியவர்களது புகழை அளவிட்டுக் கூற எந்த நாவாலும் முடியாது.

கடன்பட்டார் நெஞ்ஞம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்
-என்றான் கம்பன்.

கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்கள் படும் கஷ்டத்தை இராவணனுக்கு உவமையாகச் சொல்கிறார் கம்பர். கடன் காலைச் சுற்றிய பாம்பு போல என்பார்கள். காலைச் சுற்றிய பாம்பிடம் இருந்து தப்புவது சிரமம்.

'விடம்கொண்ட மீனைப்போலும் வெந்தழல் மெழுகு போலும்
படம்கொண்ட பாந்தள்வாயிற் பற்றிய தேரை போலும்
திடம்கொண்ட இராமபாணம் செருக்களத் துற்ற போது
கடன்கொண்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.'

கம்பன் உயர்வு நவிர்ச்சி அணியின் உச்சக் கட்டத்திற்குப் போபவன். பெற்றோரை இழந்த கலக்கம், பிள்ளைகளை இழந்த கலக்கம், தாரத்தை இழந்த கலக்கம,; காதலை இழந்த கலக்கம், தாய் நாட்டை இழந்த கலக்கம் என்பனவெல்லாம் சின்னக் கலக்கங்கள். இந்தியாவிலே வருடாவருடம் முப்பதுனாயிரத்திற்கு மேலான விவசாயிகள் வங்கிக் கடனைக் கட்ட வக்கில்லாததால் தற்கொலை செய்து கொண்டார்கள். இலங்கையிலே சில வருடங்களுக்கு முன்னர் கேகாலை என்ற ஒரேயொரு மாவட்டத்திலேயே 380 விவாசாயிகள் வங்கிக் கடன் கட்ட வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டார்கள். கம்பனுக்கு உலகிலேயே பெரிய கலக்கம் கடன் பட்டவர்க்கே உண்டு என்பதாகும்.

இன்றய யதார்த்தம் மக்கள் மட்டும் கடனால் நசிபடவில்லை. அரசாங்கங்கள், வங்கிகள் போன்றன எல்லாமே கடனில் அமிழ்ந்தியுள்ளன. உலகின் பெரிய கடனாளி ஐக்கிய அமெரிக்கா. இலங்கையின் மொத்தக் கடன் வருடாந்த உற்பத்தியிலும் மூன்று மடங்கு. பட்டகடனுக்கான வட்டியைக் கட்ட வரியாற் கிடைக்கும் அரச வருமானம் போதாது. கஜான எப்பொழுதுமே காலி. அதனோடு கூட அரசாங்கம் அச்சடித்து விற்ற 'பொண்ட்" என்று சொல்லப்படும் உறுதிப் பத்திரங்கள் (தரலாம் கடன்)ஒரு கொள்ளை. சிறீலங்கா எப்போது பட்டகடனை இறுக்கமாட்டேன் என்று சொல்கிறதோ ஆரறிவார் பராபரமே. ஓர் அரசு கடனாளியாகி விட்டால் அந்த நாட்டை அழிக்க வெளியில் இருந்து ஒரு பகை வரவேண்டிய அவசியமில்லை. கறையான் பிடித்த வேலிபோலத் தானே அந்த அரசு அழிந்துவிடும்.

'...நீணிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ, பிறபுரை தீர்த்தற்கு!
..அறமெனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள்ளூ மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும் அல்லது
கண்டதுஇல்| எனக்-,,(மணி 24-225-230).

பெரிய நாட்டை ஆளும் பொறுப்புடைய அரசர் தாமே அருளற வொழுக்கத்தினை மேற்கொண்டால், உலகின் பிற குறைபாடுகள் போவதற்கு ஏற்றன செய்யுமோர் வேறு வழியும் உளதாமோளூ அறம் என்று சொல்லப்படுவது என்னவென்று கேட்பாயாயின், மறந்துவிடாமல் யான் சொல்லும் இதனைக் கேட்பாயாக: மன் உயிர்களுக்கெல்லாம் உணவும், உடையும், தங்கும் இடங்களும் அளிப்பதன்றி, வேறு அறமென எதனையும் ஆன்றோர்கள் கண்டதில்லை.,,

'இதுவேதான் மேற்குலக நவீன பொருளியலின் அத்திவாரமாகும்.,, நவீன அரசாட்சிகளின் முக்கியமான அரசியற்கோட்பாடுகள் என்று சொல்பவைகளைத் தமிழிலக்கியங்கள் 2000 வருடங்களுக்கு முன்னரே சொல்லி வைத்தன. தமிழர் ஆட்சிகள் கடைப் பிடித்தன.

சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம் என்பதைக் கண்டறிய வேண்டுமானால் தமிழுக்குள்ளேயே தேடவேண்டும்.

'தன் நிலமை தாழாமை தாழ்ந்த பின் வாழாமை,, என்பதே தமிழர் மூலதர்மம்.

நடந்த இடத்தில் தவழக் கூடாது என்பது பழந்தமிழர் சம்பிரதாயம்.

தங்களது கடந்த கால வரலாறு, தோற்றம், கலாச்சாரம் ஆகியவற்றை அறியாத மக்கள் வேரற்ற மரம் போன்றவர்கள் என்று மூதறிஞர் மார்க்கஸ் கார்வே கூறியுள்ளார்.

நடந்துவந்த பாதை தெரியாதவர்களுக்கு நடக்கப் போகும் பாதை தெரிய வராது. நடந்துவந்த பாதையை மறந்த தமிழர்கள் ஐரோப்பாவிலே அர்த்தராத்தியிற் குடைபிடிக்கிறார்கள்.

'அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு,,-என்கிறான் வள்ளுவன்.

ஒருவனுக்கு இல்லாமை எல்லாவற்றுள்ளும் மிகப்பெரிய இல்லாமை அறிவில்லாமையே ஆகும். மற்றப் பொருளில்லாமயை உலகத்தார் இல்லாமையாகக் கொள்ளமாட்டார்கள்.

பெரும்பாலான தமிழ் மக்களின் வாழ்வையும் வாழ்வியல் பண்புகளையும் நிகழ்வுகளையும் தன்னிடத்தே கொண்டதால்தான் சிலப்பதிகாரம், மகாகவி பாரதி சொன்னதுபோல இன்னும் நெஞ்சை
அள்ளிக்கொண்டிருக்கிறது. அது உலகிற் தோன்றிய முதலாவது குடிமக்கள் காப்பியம்.

ஞானம்பெற மிக எளிதான வழி ஒன்று உண்டு. அது நம் தாய்மொழியை மனம் படிந்து பயில்வதுதான். தெளிந்த மெய்ப்பொருள்களைக் கொண்ட தமிழ் ஞானத்தமிழ் ஆகும். நல்ல ஞானம், நல்ல காட்சி, நல்ல ஒழுக்கம் என்ற மும்மணிகளை வாழ்க்கை முன்நோக்காகக் கொண்டது தமிழர் பண்பாடு.

தமது தாய்மொழியை ஐயம்திரிபறக் கல்லாதவரிடம் கலாச்சாரமோ நாகரீகமோ இருக்கும் என்று சொல்லுவது கடினம். எம்தாய்மொழியாம் தமிழ் ஒரு வாழ்க்கை வழிகாட்டி. அரசியல் வழிகாட்டி. அறவியல் வழிகாட்டி. அந்தக்கால அறிவியல் வழிகாட்டி.

'அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.,,(503) என்கிறது குறள்.

சிறந்த அருமையான நூல்களைக் கற்றறிந்த குற்றங்கள் எதுவும் இல்லாதவர்களிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அறியாமையென்பது இல்லாதிருப்பது அருமையோயகும்.

கற்றிந்த பேரறிஞர்களிடத்தும் ஏதாவாதொரு பலவீனம் இருக்கும். அதிமுட்டாளிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஏதாவது ஒன்றிருக்கும். உலகில் எந்த மனிதனும் உதவாக்கரையாகவோ பெறுமதியற்றவனாகவோ இல்லை. இயற்கையின் அதியுயர் படைப்பு மனித மூளை என்று ஹேகல் சொல்லுவார். உலகில் அதிஉயர் அழகான படைப்பு மனிதப் படைப்பே என்று உலகம் மெச்சிய ஓவியக் கலைஞர் பிக்காசோவின் கருத்தென்று கூறுவார்கள்.

திட்டினாலும் தமிழிலே திட்டு. அது தேவகானமாக எனது காதில் ஒலிக்கும் என்று அருணகிரிநாதர் கூறுவார்.

'அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே'' என்று கொங்கணகிரி திருப்புகழ் கூறுகிறது.

மன வெம்மையை மாற்றித் தணிக்கும் மழைத்துளிகள்போல் குளிர்ந்த சொல் முத்துக்கள் தமிழில் நிரம்ப உள்ளன. "தண் தமிழின் மிகுநேய முருகேசா" என்று சிறுவாபுரி திருப்புகழிலும் "தண்தமிழ் சேர் பழனிக்குள் தங்கிய பெருமாளே" என்று பழனித் திருப்புகழிலும் வருகின்றன.

தமிழ்ச் சொற்கள் அமிழ்தினும் இனியன. பொருள் வளமும் அழகு நலமும் பொலிவன. அருணகிரிநாதர் நிம்பபுரம் திருப்புகழில் "வந்த சரணார விந்தமதுபாட வண்தமிழ் விநோதம் அருள்வாயே" என்று முருகனிடம் வேண்டுகிறார். வண்தமிழில் அற்புதக் கவிபாட அருள்செய்.

தமிழ் மொழியை ஆய்ந்து மெய்மை காணும் வழியை, அதன் நுட்பத்தைத் தந்து அருளு என்று அருணகிரிநாதர் வேண்டுகின்றார்.

ஆதி சிவன் பெற்ற தமிழ் அகத்தியன் வளர்த்த தமிழ் மொழிகளில் முற்பட்டது முதன்மையானது.

"முந்துதமிழ் மாலைக் கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி" என செந்தூர்த் திருப்புகழில் பாடியுள்ளார்.

தித்திக்கும் தமிழ் - இன்பத்தமிழ், இனிய தமிழ் எனப்படும். பொதியமலை முனிவனின் மனம் நனிமகிழ, அவர் புகழ், செவி குளிர இனிய தமிழை குமரன் பேசுகிறான்.

'சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே'

தமிழிலே பொதிந்துள்ள, அரசியற்கோட்பாடுகள், அரசியற்பொருளாதாரக் கோட்பாடுகளைக் காட்ட முனைவதுவே இந்தக் கட்டுரையின் நோக்குநிலையும் குறிக்கோளுமாகும்.


தொடரும்.....


Read more...

‘நடக்காதென்பார் நடந்துவிடும்!’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உங்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும். எதனால் என்று கேட்கிறீர்களா? உண்மை நோக்கியும் இன நன்மை நோக்கியும், நம் தலைவர்களை நான் விமர்சிக்க, விமர்சிக்க, தலைவர்கள் மீதான உங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பொறுத்து, நீங்களும் ‘டென்ஷ’னாகி, ‘டென்ஷ’னாகிக் களைத்துப் போனதைத்தான் சொல்கிறேன்.

எனது நியாயபூர்வமான கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல், சில (அப்)பிராணிகள் என்னையும் கம்பனையும் திட்டித்திட்டி, தமது ‘தினவு’ அகற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நான் தொட்டதால் கம்பனுக்கு வந்த வினை!

தர்க்கபூர்வமாக சான்றுகளோடு நான் முன் வைக்கும் விமர்சனத்தை, எதுவித நியாயபூர்வமான பதில்களும் கூறாமல் மறுதளிக்கும், இவர்களை நினைக்கச் சிரிப்புத்தான் வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமே உரிய,
ஆறாவது அறிவான சிந்திக்கும் திறனை இழந்த இவர்களும் பாவம்தான்! எத்தனை நாட்களுக்குத்தான் இல்லாதவற்றைச் சொல்லி என்னைத் திட்டித்தீர்ப்பது. அவர்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும்.

அதுமட்டுமா? கேட்பாரில்லாத சிந்திப்பாரில்லாத திருந்துவாரில்லாத, இந்தச் சமுதாயத்தை எத்தனை நாட்களுக்குத்தான் இடித்துரைப்பது என்று, எனக்கேகூட அலுத்துத்தான் போய்விட்டது. தீர்க்கதரிசனமற்ற தலைவர்கள், சிந்தனையில்லா மக்கள், புத்திசாலிகளான எதிரிகள் என, எம் இனத்தைச் சூழ்ந்து கிடக்கும் ஆபத்துக்களைப் பார்க்க, என்னாகப் போகிறதோ எம் இனம்? என்று மனம் பதறுகிறது. அந்த வருத்தத்தோடும் சிந்தனையோடும் படுக்கையில் கிடந்தேன்.

➤➤➤

‘ட்றிங்’ ‘ட்றிங்’ ‘ட்றிங்’……. திடீரென தொலைபேசி அழைத்தது. எதிர் முனையில் எனக்கு நெருக்கமான ஒரு ஊடக நண்பனின் குரல். ‘ஜெயராஜ் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது. மிகப்பெரிய மாற்றம் நிகழப்போகிறது. உங்கள் கடிதத்தால் நம் தலைவர்கள், இன நன்மை நோக்கிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இனித் தமிழர்களுக்கு நல்லகாலம்தான்’ என்று பரபரத்தான் அவன். வழக்கமாக நிதானமாகப் பேசும் அவன் குரலில், புதிதாய்த் தெரிந்த பரபரப்பு ஆச்சரியப்படுத்த, ‘என்ன சுந்தர்? (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ன நடந்தது?’என்றேன். ‘என்ன நடந்ததா? பெரிய ஆச்சரியம் நடந்திருக்கிறது. நீங்கள் இன்னும் கேள்விப்படவில்லையா?’ என்று, செய்தி சொல்லாமல் என்னையும் பதற்றப்படுத்தினான்.

➤➤➤

‘சரியப்பா விஷயத்தைச் சொல்லாமல் இதென்ன பரபரப்பு’ என்று சினந்தேன். அவன் நிதானமாகச் சிரித்தபடி தொடர்ந்தான். ‘உண்மை அறிந்த உற்சாகத்தில் எதைச் சொல்வதென்று தெரியவில்லை, நீங்கள் சொன்னாற்போல நம் தலைவர்களெல்லாம் ஒன்றுபட்டு, இனப்பிரச்சினை பற்றி பேரினத்தாரோடு பேச முடிவுசெய்து விட்டார்கள். எதிர்காலத்தை மனதில் கொண்டு இனி செயல்படுவதென்று, மிக ஆச்சரியமாக அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.’ என்றான். நானும் சற்று ஆச்சரியத்துடன், ‘அதென்ன எதிர்காலத்திட்டம்?’என்றேன்.

➤➤➤

அவன் விபரித்ததைக் கேட்க எனக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. ‘நான் காண்பது என்ன கனவா? அல்லது நனவா?’ என்று, பழைய படமொன்றில் சிவாஜிகணேசன் ஒரு வசனம் பேசுவார். நண்பன் சொன்னதைக் கேட்டதும் அந்த வசனம் தான் ஞாபகத்திற்கு வந்தது. என் எழுத்திற்கு இவ்வளவு சக்தியா? என்று மனம் மமதைகொள்ள முயல, ‘சீச்சீ’ அது சத்தியத்திற்கான சக்தி என்று புத்தி சொல்லிற்று. அப்படி என்ன அவன் சொன்னான் என்று கேட்கிறீர்களா? அந்த அதிசயத்தை ஏன் கேட்கிறீர்கள் போங்கள்! கடவுளின் பார்வை தமிழினத்தின்மேல் விழத் தொடங்கிவிட்டது போலும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவின் அழைப்பின் பேரில், நம் தமிழ்த்தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடி நீண்ட நேரம் கலந்துரையாடி, அற்புதமான சில முடிவுகளை எடுத்திருக்கிறார்களாம். அவர்கள் எடுத்த முடிவுகளை விபரமாய் நண்பன் சொன்னான். அவன் சொன்னவற்றை இங்கே எழுதுகிறேன். பொறுமையாகப் படியுங்கள்!

➤➤➤

அன்று கூட்டப்பட்ட கூட்டத்தில்,
➧ தமிழரசுக்கட்சி.
➧ தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி
➧ தமிழ் காங்கிரஸ் கட்சி
➧ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
➧ தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
➧ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - சுரேஸ் அணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)
➧ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - வரதராஜப்பெருமாள் அணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)
➧ ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
➧ ஜனநாயக போராளிகள் கட்சி

என்பவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டனராம். ‘என்னது? தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியும், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும், வரதராஜப் பெருமாளும் கூடவா அழைக்கப்பட்டனர்?’ என்று, ஆச்சரியத்துடன் நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. ‘ஐயா பொதுமகனாரே! தயவு செய்து உங்கள் திருவாயைச் சற்று மூடுங்கள். என்னவோ ஏதோ! அவர்களும் தமிழ்மக்கள் பிரதிநிதிகளாய் அங்கீகரிக்கப்பட்டவர்கள்தானே. குற்றம் என்று பார்த்தால் மேற் சொன்ன எல்லாரிடமும் ஏதோ ஒரு குற்றத்தைச் சொல்லலாம்தானே. ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்று நம் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். பிரிவுக்கான காரணம் தேடும் நேரமில்லை இது. உறவுக்கான காரணம் தேடும் நேரம். முதலில் எல்லோரும் ஒன்றுபடட்டும். தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றபின், மக்கள் மன்றில் அவரவர் தம்மை நிரூபித்துக் கொள்ளட்டும். ஒற்றுமையின் உன்னதத்தை அவர்களே விளங்க முற்படும் போது, பொதுமகனாராகிய நீர் தயவு செய்து அதைக் குழப்பாதேயும்’, ‘சரி சரி மேற்கொண்டு விடயத்தைச் சொல்லும் என்கிறீர்களா?’ இதோ உங்கள் உத்தரவுக்குப் பணிகிறேன்.

➤➤➤

அன்றைய கூட்டத்தில் மேற்படி கட்சியினர் ஒன்றிணைந்து, ஏகமனதாக சில முடிவுகளை எடுத்துள்ளார்களாம். நண்பன் சொன்ன அவர்தம் முடிவுகளைக் கீழே செய்திகளாய்த் தருகிறேன். ஆச்சரியத்தில் நீங்கள் மயங்கி விழும் வாய்ப்புண்டு. எதற்கும் ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து படியுங்கள்.

➤➤➤

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி நண்பன் சொன்ன விடயங்களைச் சுருக்கித் தருகிறேன்.

➧➧ முதலில் மேற்படி கட்சிகள் பத்தாண்டுகால அடிப்படையில் தமது கட்சிகளை கலைத்து விடுவதாய் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் கட்சிப் பிரிவுகள் இருக்குமாயின் எப்படியும் தத்தமது கட்சியின் வளர்ச்சி நோக்கியே தலைவர்கள் இயங்க முயற்சிப்பர். எனவேதான் இக் கூட்டமைப்பில் இணையும் கட்சிகள் தத்தமது சொந்தக்கட்சிகளை கலைத்துவிடுவது எனும் முடிவு எடுக்கப்பட்டதாம்.

➧➧ அடுத்ததாய், இனி ஒருவரையொருவர் ‘துரோகிகள்’ என்று குற்றம் சாட்டுவதில்லை என தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனராம். முடிந்த வரலாற்றுப்பாதையில் எல்லாக் கட்சிகளிலும் அமைப்புக்களிலும் குற்றச்சாட்டுகள் பதிவாகி இருப்பது நிதர்சனமாகும். சந்தர்ப்பத்திற்கேற்ப தத்தம் குற்றங்களை மறைத்து மற்றவர்களது குற்றங்களை விரிவித்து சுயலாபம் காணும் எண்ணம் இருந்தால் கட்சிகளுக்கிடையிலான பகையுணர்வு நிலைத்தே நிற்கும். எனவேதான் மற்றவர் குற்றத்தில் தத்தமது தகுதியை நிரூபிக்க முயலாமல் பழைய வரலாறுகளை மறந்து, மன்னித்து ஒற்றுமையாய் இருப்பதற்காயும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

➧➧ தத்தமது கட்சியின் வளர்ச்சி அடிப்படையிலன்றி இனவளர்ச்சி அடிப்படையில் ஒருமித்துச் செயல்படுவதாகவும், நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தத்தம் கட்சிக்கு வாய்ப்பாகச் செயற்பட முனைவதில்லை எனவும் தமது கட்சி ஆதரவாளர்களையும் தொண்டர்களையும் கூட கட்சி மனப்பான்மையிலிருந்து வெளிவரச் செய்து இனநலன் நோக்கி ஒருமித்து இயங்கச் செய்வது எனவும் தலைவர்கள் உறுதி பூண்டனர். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்புக்கள் பெயரளவில் கூட்டமைப்புக்களாய் இருந்தனவேயன்றி இனநலன் நோக்கிய ஒருமைப்பாட்டுணர்வோடு அவை இயங்கவில்லை. அந்த ஆபத்து தொடராமல் இருக்கவே தலைவர்கள் அனைவரும் மேற்படி உறுதியைப் பூண்டுள்ளனராம்.

➧➧ ‘தமிழ் இன உரிமை மீட்புக் கூட்டமைப்பு’ என இக்கூட்டமைப்புக்குப் பெயரிடுவது எனவும் தமிழர்தம் ஒற்றுமையை உணர்த்துமுகமாகவும், அவர்கள் தம் வாழ்வொளியைக் காக்க ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதைக் குறிக்குமுகமாகவும் பல கைகள் ஒன்றிணைந்து ஒரு ஜோதியை காப்பதான சின்னத்தை இக் கூட்டமைப்பின் சின்னமாக ஏற்றுக்கொள்வது என்றும் தலைவர்கள் ஏகமனதாய் முடிவு செய்துள்ளனராம்.

➧➧ இவ்வமைப்புக்கான தலைமையகக் கட்டிடத்தை வடக்கு, கிழக்கு எனும் பிரிவு ஏற்படாவண்ணம் இரு பிரதேசங்களுக்கும் பொதுவான ஒரு இடத்தில் தமிழர்தம் பாரம்பரியத்தையும் ஒற்றுமையின் பலத்தையும் மற்றவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் நம் கலாசார முறைப்படி பிரமாண்டமாக அமைப்பதென்றும் முடிவு செய்தனராம்.

➧➧ இவ்வமைப்புக்கான உறுப்பினர் படிவங்கள் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வது எனவும் மாதந்தோறும் இவ்வுறுப்பினர் எண்ணிக்கையில் வளர்ச்சியைக் கண்காணிப்பது எனவும்  வருடத்தில் ஒருதரம் அத்தனை உறுப்பினர்களையும் ஒரு பொது இடத்தில் திரட்டிப் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்துவது எனவும் அப் பொதுக்கூட்டத்திற்கு இலங்கையில் இருக்கும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் விருந்தினர்களாய் அழைப்பதோடு ஒரு வெளிநாட்டுத் தலைவரை சிறப்பு விருந்தினராகவும் அழைப்பித்து நம் இனஒற்றுமைப்பலத்தை உலகறியச் செய்வதெனவும் தலைவர்கள் முடிவு செய்தார்களாம். நமது தாயகத்தில் இன்று இருபத்திரண்டு இலட்சத்து எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாகவும் அவர்களுள் பதினைந்து இலட்சம் பேர் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும்; புலம்பெயர் நாடுகளில் எட்டரை இலட்சம் ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. (2012 கணக்கெடுப்புப்படி) இப்புதிய கூட்டமைப்பை ஆரம்பித்து ஒரு வருட எல்லைக்குள் நம் தாயகத்தில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்களையும் புலம்பெயர் நாடுகளில் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்டவர்களையும் இக்கூட்டமைப்பின் உறுப்பினர்களாக்குவது என்றும் தலைவர்கள் ஏகமனதாய் முடிவு செய்தனராம்.

➧➧ அரசியல் சார்ந்து வரும் பதவிகளை வழங்குவதில் தகுதிக்கு முதலிடம் கொடுத்த பின்பு அத்தகுதி பெற்ற, இனவளர்ச்சிக்கு உண்மையாய்ப் பாடுபடும் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்குவது என்றும், அச்செயல் மூலம் இனநலன் நோக்கி இயங்குவோரை ஊக்குவிப்பது என்றும் மேற்படி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாம்.

➧➧ மேற்படி கூட்டமைப்புக்கென பெரிய அளவிளான நிதித்தளம் ஒன்றை உருவாக்குதல் அவசியம் என்பதால் மாதந்தோறும் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் உறுப்பினர்களால் திரட்டப்படும்  நிதியை, ‘ஈழத் தமிழர் நல்வாழ்வு நிதியம்’ என்னும் பெயரில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கி அந்நிதியத்தில் அதனைச் சேமித்து  தமிழ்ப் பிரதேசங்களின் அவசியமான மக்கள் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற அந்நிதியைப் பயன்படுத்துவது எனவும் தலைவர்கள் முடிவெடுத்தனராம்.

➧➧ மேற்படி அமைப்புக்காக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்பதான ஊடக அமைப்புக்களை உருவாக்குவது எனவும் அதன் மூலம் இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பி, எதிர்ப்பரப்புதல் செய்வோரை முறியடித்து வெற்றி கொள்வதெனவும் தமது ஊடக பலம் கொண்டு கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைவோரைப் புறந்தள்ளி செயல்படுவதெனவும் அவ் ஊடகங்களின் மூலம் மாற்றினத்தாரும் தமிழர்தம் நியாயபூர்வமான கோரிக்கைகளை அறியும் வண்ணம் பரப்புதல் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டதாம்.

➤➤➤

‘என்னையா பொதுமகனாரே! இந்த விழி விழிக்கிறீர்கள். கவனம் விழி வெளியே விழுந்துவிடப்போகிறது! நம் தலைவர்களின் இனநலன் நோக்கிய, இத்திடீர் மாற்றங்களைக் கேட்டால் யாருக்குத்தான் வியப்பு வராது.
இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டால், இனி நாங்கள் யாரைத்திட்டி இணையங்களில் எழுதுவது என்று யோசிக்கிறீர்கள் போல, யார் தப்புகிறார்களோ இல்லையோ நானும் கம்பனும் தப்பினோம். இவர்களை புலி கலைத்தது எலி கலைத்தது என்று, இனி நீங்கள் கற்பனைக் கதைகளை எழுத முடியாதாக்கும். பகைமையை ஒழிப்பதென்று தலைவர்களே முடிவு செய்தபிறகு, நீங்களும் பகையை ஒழித்துத்தானே ஆகவேண்டும்.

ஒற்றுமையை விடப் பகைதான் சுவையானது என்று நினைக்கிறீர்களோ? உங்களது இந்த மனநிலையால்த்தானே தலைவர்களும் பிரிந்து கிடந்தார்கள். இனியாவது திருந்த முயலுங்கள். எதற்கும் ஒரு ‘பிளேன்ரீ’ குடித்து நிதானித்த பின் வாருங்கள். இவ்வளவத்தோடு விஷயம் முடிந்து விடவில்லை. இன்னும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. என்ன அதற்குள் ‘ரீ’ குடித்துவிட்டீர்களா? அத்தனை ஆர்வமாக்கும்? சரிசரி மேலும் படியுங்கள்

➤➤➤

இதுவரை தன்னாதிக்கப் போட்டி போட்டுக்கொண்டிருந்த நம் தலைவர்கள், இனி அதிகாரங்களைப் பரவலாக்குவது என்று முடிவு செய்து, நிர்வாகத்தினுள் உண்மையான ஜனநாயக முறையைக் கொண்டு வரப்போகிறார்களாம். எத்துணை அதிசயமான செய்தி! முன்பு போல் தனிமனிதர்களிடம் அதிகாரங்களைக் குவிக்காமல், நிர்வாகப் பரவலாக்குதலுக்காக சரியான ஜனநாயக முறைப்படி, பதினைந்து சபைகளை அவர்கள் அமைக்கப்போகிறார்களாம்.

அந்த சபைகள் பற்றிய விபரங்களைக் கீழே தருகிறேன்.

➤➤➤


01. அரசியல் வழிகாட்டுனர் சபை

மேற்படி சபையில் அரசியல் அனுபவமிக்க மூத்த தலைவர்கள் அங்கத்தினர்களாய் நியமிக்கப்படுவார்களாம். இவர்கள் வேறேதும் பதவிகளை ஏற்காமல் தமது அரசியல் அனுபவங்களைக் கொண்டு மற்றைச் சபையினருக்கு வழிகாட்டுதல் செய்வதிலும் பிரச்சினைகள் உருவாகும் போது அவற்றை நிதானமாய்க் கையாள துணை புரிவதிலும் உதவி நிற்பராம். இச்சபையில்  தமிழினத்தின் உரிமைபற்றி அக்கறையுடைய பிற இனத்தலைவர்கள் ஓரிருவரும் இணைத்துக் கொள்ளப்படுவராம்.

02. பாராளுமன்ற உறுப்பினர் சபை

மேற்படி சபையில் பாராளுமன்ற உறுப்பினர்களாய் உள்ள அங்கத்தவர்கள் அனைவரும் இடம்பெறுவர். பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வில், தகுதியின் அடிப்படையில் தக்கவர்களை  ஒன்பது தலைவர்களும் ஒன்றுகூடி சிபாரிசு செய்வராம். இச்சிபாரிசு மக்கள்சபையில் (இச்சபை பற்றிய விபரம் பின்னே தரப்படுகிறது.) அங்கீகரிக்கப்பட்ட பின்பே மேற்படி உறுப்பினர்கள் தேர்தலில் நிறுத்தப்படுவார்களாம். இவ்  உறுப்பினர்கள் இன உரிமை பற்றிய விடயங்களைப் பாராளுமன்றத்தில் முன்னெடுப்பதிலும் இன நலன் பற்றிய விடயங்களை பாராளுமன்ற அதிகாரம் கொண்டு நடைமுறைப்படுத்துவதிலும் உரிமை பெற்றிருப்பராம்.

03. மாகாண, உள்ளூராட்சி உறுப்பினர் சபை

மாகாண, உள்ளூராட்சி சபைகளின் அங்கத்தவர்கள் அனைவரும் இச்சபையின் உறுப்பினர்களாய் இயங்குவராம். உறுப்பினர்களின் தேர்வும் முன் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்வைப் போலவே அமையுமாம். இவர்கள் பிரதேச முன்னேற்றம் பற்றிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை மட்டும் பெற்றிருப்பராம். இன உரிமை பற்றிய விடயங்களில் இவர்களுக்கு அதிகாரம் இருக்காதாம்.


04. சட்ட ஆலோசகர் சபை

இச்சபையில் தமிழினத்தைச் சேர்ந்த ஆற்றல் மிக்க சட்டத்துறைசார் அறிஞர்களும் புலம்பெயர்ந்து வாழும் சட்டத்துறை அறிஞர்களும் அங்கத்தவர்களாய் சேர்த்துக் கொள்ளப்படுவராம். மேற்படி கூட்டமைப்பினால் தீர்மானிக்கப்படும் புதிய விடயங்களை சட்டமயமாக்கும் பொறுப்பும், உலக அரங்குகளில் தமிழர் உரிமை பற்றி முன்வைக்கப்படும் விடயங்களை சட்ட நெறிப்படுத்தும் பொறுப்பும், மத்திய அரசாங்கத்தினால் தமிழர் நலன் நோக்கிய திட்டங்களுக்கு இடையூறு ஏற்படும் வேளைகளில் அவற்றை நீதிமன்றத்தில் சந்திக்கும் பொறுப்பும் மற்றும் இன்னபிற சட்டம் சார்ந்த விடயங்களைக் கையாளும் பொறுப்பும் இக்குழுவினருக்கு உரியதாகுமாம்.

05. பொருளாதார ஆலோசகர் சபை

இச்சபையில் தமிழினத்தைச் சார்ந்த பொருளாதார அறிஞர்களும், வெற்றி பெற்ற வர்த்தக  நிறுவனங்களின் தலைவர்களும், நிதி அமைச்சில் பணியாற்றிய, பணியாற்றும் தமிழ் அதிகாரிகளும் அங்கம் வகிப்பராம். வடகிழக்கில் அமைந்த பிராந்தியங்களின் தகுதிகளுக்கேற்ப பொருளாதார வளர்ச்சி பற்றி திட்டமிடும் பொறுப்பும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் ‘தமிழர் நல்வாழ்வு நிதிய’ நிர்வாகத்தினை முன்னெடுக்கும் பொறுப்பும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.

06. கல்வி ஆலோசகர் சபை

தமிழர் பாரம்பரிய கல்வி முறையை உட்படுத்தி, உலக கல்வி நிலையைச் சமப்படுத்தும் புதிய கல்வி நெறியை அறிமுகப்படுத்தும் பொறுப்பும் தொழில் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கல்விப் பாதையில் மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பும், மத்திய கல்வி அமைச்சின் ஆலோசனைகளுக்கப்பால் கல்லூரி, பாடசாலை முதலியவைகளை செம்மையுறச் செய்யும் திட்டங்களைத் தீட்டி அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் ஆராய்ச்சித் துறையில் மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.

07. கலை, பண்பாடு, கலாசார ஆலோசகர்கள் சபை

தமிழினத்தின் பாரம்பரியமான கலை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை சீர்குலைக்காத வகையில், அவற்றை நவீனமயப்படுத்தி ஈழத்தவர்க்கான தனிப்பாணிகளை உருவாக்குதலும் இளையோர் மத்தியில் அவ்வாற்றல்களைப் புகுத்தலும் அவர்தம் ஆற்றல்களை உலகளாவி வெளிக்கொணர வழி செய்யதலும் ஒழுக்கயீனங்களால் சமுதாய சமநிலை தவறும் இடங்களில் அவற்றைச் சீர்செய்தலுமான பொறுப்புக்களும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.

08. வெளிநாட்டுத்தொடர்பாளர்கள் சபை


இனப்பிரச்சினையில் அக்கறை கொண்டுள்ள வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணலும் தமிழர் சார்பான நிலைப்பாட்டால் அந்நாடுகள் பெறக்கூடிய ஆதாயங்களை அவர் தமக்கு இனங்காட்டுதலும் தமிழ்ப் பிரதேசங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் ஆதரவினையும் அந்நாடுகளிடம் பெறுவதற்கான வழிகள் சமைத்தலும் சமத்துவ வாழ்வுக்கான அந்நாடுகளின் அரசியல் நெறிகளை அறிந்து கொள்ளுதலும். நமது அரசோடு அந்நாடுகளைப் பேசச்செய்து அந்நெறிகளை புதிதாய் ஆக்கப்படும் அரசியல் அமைப்பில் இணைத்துக்கொள்ளச் செய்தலும் இவர்தம் கடமைகளாய் இருக்குமாம்.

09. பிராந்தியத் தொடர்பாளர்கள் சபை


வடக்கு, கிழக்கிற்கு உள்ளேயும் இலங்கை முழுவதினுள்ளும் இருக்கும் தமிழர்தம் பிராந்திய வேறுபாடுகளைக் களைதலும் அவற்றிற்கான ஒருமைப்பாட்டை உருவாக்குதலும் இப்பிராந்தியங்களில் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றால் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைதலும் மக்கள் நலன் நோக்கிய பொதுத்திட்டங்களில் பிராந்திய வேறுபாட்டுப் பாதிப்புக்கள் நுழையாமல் பார்த்துக் கொள்வதும் இவர்தம் கடமைகளாய் இருக்குமாம்.

10. இன நல்லுறவுத் தொடர்பாளர்கள் சபை

நாடு முழுவதும் பிரிவுற்றிருக்கும் இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் களைதலும் ஏற்கனவே விழைந்த இனப்பகை பற்றிய விடயங்களை நீக்க முயலுதலும் எல்லா இனத்திலும் உள்ள நல்லவர்களை ஒன்றிணைத்து அவர்தம் குரலை ஓங்கச் செய்தலும் இளையோர் மத்தியில் இன ஒற்றுமையை உருவாக்க முயல்தலும் இவர்தம் கடமைகளாகுமாம்.

11. சமய நல்லுறவுத் தொடர்பாளர்கள் சபை
பிராந்தியங்களில் பலம் பெற்றிருக்கும் சமயங்கள் மற்றைய சமயங்களில் நலன்களைப் பாதிக்காவண்ணம் பார்த்துக்கொள்ளுதலும் மக்கள் தத்தம் சமயத்தைப் பேணுவதோடு மாற்றுச்சமயத்தை மதிக்கும் பண்பாட்டை உருவாக்குதலும் சமயச் சண்டைகளை நீக்க முயல்தலும் இவர்தம் கடமைகளாகுமாம்.

12. புலம்பெயர் இன அக்கறையாளர்கள் சபை

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் தொகை இன்று எட்டரை இலட்சத்தையும் தாண்டி விரிந்திருப்பதாய் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இப்புலம்பெயர் தமிழர்கள் தத்தம் புகழ் நோக்கி தாய்மண்ணில் சில நற்காரியங்களை ஆற்றுகின்றனரேயன்றி ஒருமித்த அவர்களது ஆதரவுப்பலத்தை இன்னும் நம் இனம் பெறவும் பயன்படுத்தவுமில்லை. அதற்கான ஓர் புதுத்திட்டம் அமைக்கப்படல் வேண்டும் என்றும் முன் சொன்னாற்போல ஈழத்தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மேற்படி கூட்டமைப்பின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு நேர்மையான நிர்வாகிகள் அங்கு நியமிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் மூலம் வாரத்திற்கு ஒருதரம் புலம்பெயர் தமிழர் ஒருவர் தாயகத்திற்காக ஒரு பிரித்தானியப்பவுண் வழங்கும் முறைமையை கொணரவேண்டும் என்றும் தலைவர்கள் தீர்மானித்துள்ளனராம். ஒரு பவுண் என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு மிகச் சிறிய தொகையேயாகும். (அவர்கள் ஒரு ‘பேகர்’ சாப்பிடுவதை விட குறைந்த தொகை) புலம் பெயர்ந்து வாழும் எட்டரை  இலட்சம் பேரில் குறைந்தது ஏழு இலட்சம் பேரையாவது இத்திட்டத்தில் இணைத்தால் மாதம் ஒருதரம் 7 இலட்சம் பவுண் நிதியாகக் கிடைக்கும். அது கிட்டத்தட்ட இலங்கைப் பணத்தில் பதினைந்து கோடி ரூபாவாகும். இப்பணத்தை நம் மண்ணுக்கு முறைப்படி கொண்டுவருவது பற்றி அரசுடன் பேசி வழி செய்யவேண்டும். இப்பணத்தைக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலுமாக ஒவ்வொரு மாதமும் சில பொருளாதாரக் கல்வித்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் அரசைச் சாராமலே நம் தாய்மண்ணை நாம் வளப்படுத்தலாம் என முடிவு செய்துள்ள தலைவர்கள் மேற்படி திட்டங்களை வகுத்து செயற்படுத்தும் அதிகாரத்தை இச்சபைக்கு வழங்கவுள்ளனராம்.

13. தாயகக் கட்டமைப்புத் திட்ட ஆலோசகர் சபை

இச்சபையில் நம் தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் பொறியியளாலர்களும் வரைபடக்கலைஞர்களும் அங்கம் வகிப்பராம். கடந்த பல ஆண்டுகளாக நமது தாயகப் பிரதேசம் கட்டமைப்புத் திட்டங்களுக்கு உட்படுத்தப்படாமல் பல்லாண்டுகளுக்கு முன் இருந்த நிலையிலேயே மீண்டும் மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றது. நவீன வளர்ச்சிக்கேற்பவும் உலக நாடுகளை சமப்படுத்தும் வகையிலும் நம் தாயகக்கட்டமைப்புத் திட்டம் நவீனமயப்படுத்தப்படுதல் வேண்டும். இத்தகு பொறுப்புக்களை நிறைவேற்றும் அதிகாரத்தை இச்சபை பெறுமாம்.

14. விவசாய முன்னேற்ற ஆலோசகர் சபை

நவீன விவசாய முறைகளை அறிமுகஞ் செய்தல், பிராந்திய நீர்வளங்களைப் பெருக்குதல், கால்நடை வளர்ப்பிலும் அவற்றின் பயன்களை சேமித்து விநியோகத்திலும் நவீன முறைகளைப் புகுத்துதல், விவசாயப் பயன்பாடுகளை சேகரித்துப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்தல், வடக்கு கிழக்கில் வெறுமையாய் உள்ள நிலப்பரப்புக்களைக் கையகப்படுத்தி விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், வீட்டு விவசாயத்தை ஊக்கப்படுத்துதல் முதலிய விடயங்களை நிறைவேற்றும் அதிகாரத்தை இச்சபை பெற்றிருக்குமாம்.

15. போர் பாதிப்பாளர் நல்வாழ்வுத் திட்ட ஆலோசகர் சபை

நடந்து முடிந்த போரினால் பாதிப்புற்ற அங்கயீனர்கள், விதவைகள், அனாதைகள், சொத்திழந்தோர் போன்றோரின் நல்வாழ்வு மீட்புத்திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தினை கொண்டிருக்கும் இச்சபை, புலம்பெயர் இன அக்கறையாளர் சபையினூடு பெறப்படும் நிதியத்தின் ஒரு பங்கை இப்பணிகளுக்கு பயன்படுத்துதல் பற்றி ஆராய்ந்து இச்சபை செயல்படுமாம். அரசியற்சபையின் பெரும்பான்மை அபிப்பிராயம் பெறப்பட்டே, இச்சபைகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

➤➤➤

இதையெல்லாம் ஊடக நண்பன் சொல்லச்சொல்ல, என் உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது போங்கள். உங்கள் நிலையும் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவும்தானா? என்றேன் நண்பனிடம். என்ன அவசரப்படுகிறாய் கொஞ்சம் பொறு என்றவன், மேலும் சில செய்திகளைச் சொன்னான். அவன் சொன்னவற்றைக் கேட்டு, இத்தனை ஆற்றல்களையும் வைத்துக் கொண்டா, நம் தலைவர்கள் இதுவரை சும்மா இருந்தார்கள் என ஆச்சரியப்பட்டேன். அவன் சொன்னவற்றையும் சொல்லி முடித்துவிடுகிறேன்.

➤➤➤

மேற்படி சபைகளைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மொத்த சபை அங்கத்தவர்களை உள்ளடக்கி, அரசியற்சபை, மக்கள்சபை என இருவகையான சபைகளை, இக்கூட்டமைப்பினுள் உருவாக்குவார்களாம். இவற்றுள் அரசியற்சபை, இன முன்னேற்றம் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்குமாம். மக்கள் சபை அரசியற்சபையை சரியாக வழிநடத்தும் பொறுப்பினைக் கொண்டிருக்குமாம். அரசியற்சபையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், மக்கள் சபையால் ஏகமானதாகவோ பெரும்பான்மையாகவோ அங்கீகரிக்கப்பட்ட பின்பே,
நடைமுறைப்படுத்தப்படுமாம்.

மேற்படி அரசியற்சபையில் 9 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சிசபை உறுப்பினர்களும் அங்கம் வகிப்பார்களாம். முரண்பாடுகள் ஏற்படின் வாக்களிப்பில், பாராளுமன்றத் தலைவர்களுக்கு ஐந்து வாக்குகளும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு மூன்று வாக்குகளும், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு ஒரு வாக்கும் வழங்கப்படுமாம். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, ஏகமனதாக அல்லது பெரும்பான்மையாக எடுக்கும் முடிவுகள், மக்கள்சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பான்மை பற்றி அங்கீகரிக்கப்பட்ட பின்பே, அவை நடைமுறைப்படுத்தப்படுமாம்.

➤➤➤

மக்கள்சபையில் மேற்படி பதினைந்து குழுக்களிலும் உள்ள ஒவ்வொருவர் அங்கம் வகிப்பார்களாம். அங்கம் வகிக்கும் உறுப்பினரை அந்தத்தச் சபையினரே தேர்ந்தெடுத்து, மக்கள்சபைக்கு அனுப்பி வைப்பார்களாம். அரசியல்சபை, மக்கள்சபை ஆகியவற்றின் கூட்டங்களும், அவ்விரண்டு சபைகளும் இணைந்து நடத்தும் கூட்டமும் மாதம் ஒருதரம் நடாத்தப்படுமாம். மக்கள்சபையில் அமைந்துள்ள பதினைந்து குழுக்களும், வாரந்தோறும் தனித்தனி சந்தித்து, தத்தம் துறை சார்ந்த மக்கள் நலம் பற்றிய திட்டங்களை வடிவமைக்குமாம். அங்ஙனம் அவர்களால் வடிவமைக்கப்படும் திட்டங்கள், அரசியல்சபை, மக்கள்சபை ஆகியவை இணைந்து நடாத்தும் கூட்டங்களில், பெரும்பான்மை பற்றி அங்கீகரிக்கப்பட்ட பின், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை, அரசியல்சபை ஏற்றுக்கொள்ளுமாம்.

மாகாணசபை, உள்ளூராட்சிசபை ஆகியவற்றில், எதிரணிகள் இருக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இல்லாமல் போவதால், மேற்படி கூட்டமைப்பின் உறுப்பினர்களே, கொண்டு வரப்படும் திட்டங்களை திறந்த மனதோடு விவாதித்து, மக்கள் நலம் நோக்கி அத்திட்டங்களை நெறிப்படுத்தவேண்டும் என்றும், தலைவர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.

➤➤➤

உங்கள் மனநிலை எப்படியோ தெரியவில்லை. மேற்சொன்ன செய்திகளை ஊடக நண்பன் விபரித்ததும், என் கால்கள் தரையிலிருந்து மேலே கிளம்பிப் பறப்பதாய் உணர்ந்தேன். இனி என்ன? ஈழத்தமிழினத்தை எவராலும் அசைக்க முடியாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று தலைவர்கள் உணர்ந்து கொண்டார்கள். தலைவர்கள் உணர்ந்தால் இனி மக்களும் உணர்வார்கள். ‘அவன் கெட்டவன்’, ‘இவன் நல்லவன்’ என்று பிரிவுகள் பேசி, நம்மை நாமே பலயீனப்படுத்தும் துன்பம் இனி தொலைந்து போகும். ஆளுக்கொருவராய் அறிக்கைகள் விட்டு சீர்குலைந்த நம் இனம், இனி எதிரிகள் உள் நுழையாவண்ணம் இறுக்கமுறும். ஒற்றுமைப் பலத்தை எவர்தான் மதிக்காமல் இருக்கமுடியும்? தமிழர்கள் தலைநிமிரப் போவதை எவராலும் இனி தடுக்க முடியாது, என்றெல்லாம் எண்ணி என் மனம் துள்ளியது. ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்று, உரக்கக் கூவியபடி உற்சாகத்தில் ஒரு துள்ளுத்துள்ளினேன்.

➤➤➤

‘தொப்படீடீடீடீர்’ என்று ஒரு சத்தம். முதுகு கையெல்லாம் ஒரே வலி. என்ன நடந்தது என்று நிதானிப்பதற்கு முன்? வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் அறைக்குள் ஓடி வந்தார்கள். தரையில் இழுத்துப் போடப்பட்ட திமிங்கலம் போல, கட்டிலால் நிலத்தில் விழுந்து கிடக்கும் என்னைப் பார்த்து, ‘என்ன?’, ‘என்ன?’ என்று எல்லோரும் பதறினார்கள். அரைத்தூக்கத்தில் இருந்த நான், ‘ஆர் விழுந்தால் என்ன? தமிழினம் இனித் தலைநிமிர்ந்து விடும், நம் தலைவர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள், வாழ்க! தமிழ் இன உரிமை மீட்புக் கூட்டமைப்பு’ என்று உரத்துக் கூவ, எல்லோரும் என்னைக் கவலையாய்ப் பார்த்தார்கள்.

‘தலையில் அடிபட்டிருக்கும் போல, ஆளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவம்’ என்று டாக்டர் நண்பர் சொல்ல, ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருவராய்ப் பிடித்து என்னைத் தூக்க முனைகிறார்கள். முழுமையாய்த் துயில் கலைய, அப்போதுதான் நான் கண்டது கனவு என்பதும், கனவில் துள்ளிய துள்ளலில் கட்டிலால் விழுந்திருக்கிறேன் என்பதும் தெரிகிறது.

கண்ணோரத்தில் கண்ணீர். விழுந்த வலியால் அல்ல. இனிய கனவு முடிந்த வலியால். கனவிலாவது நல்லதைக் கண்டேனே! கனவுதான் வெற்றியின் முதல்படி என்றார் அப்துல்கலாம். யார் கண்டது? தமிழர்க்கு நல்ல காலம் வரும் போது, என் கனவும் நனவாகும் போல!.



Read more...

Friday, January 26, 2018

இலங்கை பாராளுமன்ற மோதல் முதலாளித்துவ வர்க்க ஆட்சி நாற்றமெடுப்பதன் வெளிப்பாடு. By Saman Gunadasa and K. Ratnayake

ஜனவரி 10 புதன் கிழமை, இலங்கை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினதும் எதிர்க் கட்சியினதும் அமைச்சர்களும் உறுப்பினர்களும் அடிபட்டுக்கொண்டமை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் உச்சகட்ட நெருக்கடியையும் நாற்றமெடுப்பையும் பொது மக்கள் கண்டுகொள்வதற்கு சந்தர்ப்பமாக அமைந்தது. இலங்கையில் “பாராளுமன்றத்தின் உயர்ந்த பண்பு” மற்றும் நாட்டின் ஆட்சியை நடத்துவதில் உள்ள “மகா சக்தி” பற்றியும் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் ஆய்வாளர்களும் விடுக்கும் வாய்ச்சவடால்களுக்கு அடியில் அபிவிருத்தியடைந்து வரும் உண்மையான நிலைமையை இது அம்பலத்துக்கு கொண்டுவந்துள்ளது.

2015 பெப்பிரவரி மாதம் மத்திய வங்கி பிணை முறி வெளியீடு ஒன்றின் மூலம் நடந்த பெரும் நிதி மோசடி சம்பந்தமாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கையை கலந்துரையாடுவதற்காகவே பாராளுமன்றம் கூட்டப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஊழல் மற்றும் ஜனநாயக-விரோத ஆட்சியை தூக்கி வீசி, நல்லாட்சியை ஏற்படுத்துவதாகக் கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவந்து ஒரு மாதத்துக்குள்ளேயே, அந்த பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் முன்னணியில் இருந்தவர்களே இந்த நிதி மோடிக்கு உடந்தையாக இருந்தமை ஆச்சரியத்திற்குரியதாகும். பேர்பச்சுவல் டெசரீஸ் கூட்டுத்தாபனம் செய்த இந்த மோசடிக்கு ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் நபர்களும், மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன மஹேந்திரன் மற்றும் அதிகாரிகளும், குறைந்த அல்லது கூடிய பட்சம் நேரடியகாவோ அல்லது மறைமுகமாகவோ இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

டிசம்பர் 30 அன்று தனக்கு கிடைத்த அறிக்கை பற்றி, ஜனவரி 3 அன்று ஜனாதிபதி சிறிசேன விடுத்த அறிக்கையின் படி, ஐந்து மாத குறுகிய காலத்துக்குள் பர்பச்சுவல் டெசரீஸ் நிறுவனம் சுரண்டிக்கொண்ட நிதி குறைந்த பட்சம் 11 பில்லியன் ரூபாய்களை விட அதிகமாக இருப்போதடு ஊழியர் ஓய்வூதிய நிதி உட்பட, அரச நிறுவனத்தால் பேணப்படும் ஓய்வூதீய நிதிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நட்டம் 8.5 பில்லியன்களை விட அதிகமாகும். இதற்கு முன்னர் இராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியில் இருந்த 2008-2014 இடைப்பட்ட காலத்தில், மத்திய வங்கி ஊடாக மேற்கொள்ளப்பட்ட பிணை முறி வெளியீடுகளுடன் சம்பந்தப்பட்ட இந்த பில்லியன் கணக்கான “நிதி மோசடி” பற்றி சரியானமுறையில் தெரிந்துகொள்வதற்கு, “தடயவியல் விசாரணை ஒன்றை” நடத்த வேண்டும் என ஆணைக் குழு சிபாரிசு செய்துள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன், அவரது மருமகனான பேர்பரசுவல் டெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் மேலும் பலபேருக்கு எதிராக, இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்டு இடம்பெற்றுள்ள கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக, சட்ட ரீதியாக தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு பிரேரித்துள்ளது.

கொள்ளையடிப்பின் விஸ்தீரணம் மற்றும் உண்மையான திருடர்கள் சம்பந்தமான சமிக்ஞைகள் மட்டுமே அம்பலத்துக்கு வந்துள்ளன. அலோசியஸின் நிறுவனம் சுரண்டிக்கொண்டதாக அம்பலத்துக்கு வந்துள்ள பிரமாண்டமான நிதித் தொகை மட்டுமே கூட முழுமையான வைத்தியசாலை ஒன்றை அல்லது பல பாடசாலைகளை கட்டியெழுப்புவதற்கு போதுமானதாகும். அதற்கு முன்னர், இராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பெரும் நிதி மோசடி சம்பந்தமாகவும் செய்தி வந்தது. மத்திய வங்கி பிணை முறி ஊடாக இடம்பெற்ற மோசடிகளுக்கு மேலாக, மேலும் எத்தனையோ சுரண்டல்கள் பற்றி தமக்கிடையேயான மோதல்களுக்கு மத்தியில் ஆளும் வர்க்கத்தின் கும்பல்கள் ஒன்றுக்கு ஒன்று குற்றம் சாட்டிக்கொள்கின்றன.

பட்டப்பகல் திருட்டு அம்பலத்துக்கு வருகின்ற நிலைமையில், அரசாங்கத்தின் மற்றும் எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் கூடியபோது, ஒருவருக்கு ஒருவர் “திருடன் திருடன்” என அசிங்கமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டு தமது அம்மணத்தை மூடிக்கொள்வதற்கான சண்டையை வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொண்டனர். அவர்கள் தம்மை நேர்மையானவர்களாக காட்டிக்கொள்ளும் நோக்கத்திலேயே இவ்வாறு குற்றம் சாட்டிக்கொண்டனர். கொள்ளையடிப்புகளை நசுக்குவதாக கூட்டங்களில் சபதம் செய்யும் சிறிசேன, கடந்த மூன்று ஆண்டுகள் பூராவும் திருட்டுக்கள் நடக்கும்போது தான் அரசாங்கத்தின் தலைவராக இருந்தது எப்படி என்பது பற்றி எதுவும் கூறுவதில்லை.

அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் எதிர்க் கட்சி குழுக்கள், தத்தமது நேர்மையைப் பற்றி இந்தளவு பொய் கூறுவது, அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்தமுடியாது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த மோசடி சம்பந்தமாக கிளர்ந்தெழும் சீற்றத்தை திசை திருப்பிவிடுவதற்கும் அதில் இருந்து தப்புவதற்குமே ஆகும். வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து அதிகாரத்திற்கு வந்துள்ள ஆட்சியாளர்கள், யதார்த்தத்தில் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை நசுக்கித் தள்ளி முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ச்சி காணும் போராட்டம், அரசாங்கத்தின் ஊழல் அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில், மேலும் மேலும் உக்கிரமடையும் என ஆளும் வர்க்கம் பீதி அடைந்துள்ளது.

இந்த அம்பலப்படுத்தல்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அணிதிரண்ட போலி-இடதுகள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் எனச் சொல்லப்படுபவை அச்சம் அடைந்துள்ளன.

முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்க போலி கட்டுக் கதைகளை பின்னும் ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ஜனவரி 14 ஞாயிறு வெயீட்டுக்கு, பிணை முறி மோசடி நடந்தது ஏன்? என்பது பற்றி, கண்களுக்கு மண் தூவும் “விவரணம்” ஒன்றை வழங்கியுள்ளார். பிணை முறி மோசடியில் மத்திய வங்கியும் நாட்டின் அரசியல் கட்சிகளும் அழுகிப் போயுள்ள அளவு புரிந்துகொள்ள முடியும் என கூறும் ஐவன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இத்தகைய பிழைகளை செய்வதற்கு தூண்டப்பட்ட “என்னுடைய நம்பிக்கைக்கும் காரணமான அர்த்தப்படுத்தல் இதுவே” என விவரித்துள்ளதாவது: “கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பெரும் செலவுகளைச் செய்யவேண்டி ஏற்பட்டதால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதில் ஏற்பட்ட பெரும் கடன் சுமையை தீர்த்துக்கொள்வதற்காக, ’மத்திய வங்கிக்கு சாதகமான ஆளுனரை நியமித்து, கட்சிக்கு இருந்த நிதி நெருக்கடியை மத்திய வங்கி மூலமாக தீர்த்துக்கொள்வது சிறந்த வழி என நினைத்திருக்கலாம்’. இராஜபக்ஷ காலத்திலும் அப்படி நடந்திருப்பதால், இரகசியமாக அப்படிச் செய்ய முடியும் என ஐ.தே.க. தலைவர்கள் நினைத்திருந்தாலும், ’திட்டம் பிசகிவிட்டது’”.

தெற்காசியாவின் அரசியல் பண்டிதராக ஊடகங்களில் கூறப்படும் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, “அரசியல் உடலில் பற்றிக்கொண்டுள்ள பெருமளவிலான இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகிய புற்று நோயை அகற்றுவதற்கு எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்புகின்றார்.

இந்த முரண்பாட்டை தீர்த்துக்கொள்வதானது “சரத் விஜேசூரிய தலைமைத்துவம் வகிக்கும் பிரஜைகள் இயக்கமும், ஐவன் ஐயா தலைமைவகிக்கும் புனருத்தாரண இயக்கமும், அனுர குமார திசாநாயக்க ஐயா தலைமை வகிக்கும் ஜே.வி.பி.யும் ஆழமாக கலந்துரையாட வேண்டிய விடயமாகும்” என உயன்கொட பிரேரித்துள்ளார். எனினும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஊழல் எதிர்ப்பு என அரசாங்கத்தை அரவணைத்துக்கொண்ட உயன்கொட உட்பட இந்த கும்பல், அதன் செயற்பாடுகளுக்கு அரசியல் ரீதியில் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

இன்னொரு ஆய்வாளராக ஊடகங்களுக்கு கட்டுரைகள் எழுதும் குசல் பெரேர என்பவர், டெயிலி மிரர் பத்திரிகைக்கு பின்வருமாறு விவரித்துள்ளார்: “நாம் வாழ நேர்ந்துள்ள மேலும் மேலும் ஆழமடைந்து வரும் நெருக்கடிகளுக்கு, தேசிய ரீதியில் [ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டிய] தீர்வுகள் சம்பந்தமாக, ஆழமான கலந்துரையாடல்கள் இல்லை,.” சில சட்டங்களை திருத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதே கடும் தீர்வு என ஜே.வி.பி. உட்பட ஊழல்-எதிர்ப்பு குழுக்கள் கோருகின்றன. எனினும், பாராளுமன்றமே சட்டத்துக்கு முரண்பாடானது என்றும் தற்போதைய அரசியல்வாதிகள் சம்பந்தமாக நம்பிக்கை இல்லை என்பதையும் கூறும் குசல் பெரேராவின் பிரேரணை பின்வருமாறு உள்ளது: “நாம் துணியை நன்கு துவைத்து காயவிடும் எதிர்பார்ப்புடன் அடிக்கடி லோன்றிகளுக்கு செல்லாமல், பாராளுமன்றத்தை அன்றாடம் துப்புரவுபடுத்தி வைக்கின்ற புதிய மற்றும் மாற்றீட்டு நடவடிக்கை ஒன்றை வழங்குவது அவசியமாகின்றது”. அவர், “இந்த சமூகம் சிதறுண்டு போவதற்கு முன்னர், சிறந்த நடவடிக்கையைக் கொண்ட புதிய அபிவிருத்தி மாதிரி ஒன்றைப் பற்றி உடனடியாக கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரே தோள் கொடுத்த “நல்லாட்சி மாதிரி” அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில், இந்த ஊழல்கள் உச்சத்திற்கு செல்வதைத் தடுப்பதற்காக, புதிய அபிவிருத்தி மாதிரி பற்றிய கலந்துரையாடல்கள் மூலம் முட்டுச் சந்து ஒன்றை உருவாக்கி விடுவதற்கு பெரேரா பிரேரிக்கின்றார். தாம் காலூன்றிக்கொண்டுள்ள முதலாளித்துவ அமைப்புமுறை சிதறிப்போகக்கூடிய நெருக்கடி உருவாகியிருப்பதால், தலையில் இருந்து பாதம் வரை தமது நாற்றமெடுப்பை பல்வேறு வழியில் காட்சிப்படுத்துகின்ற ஆளும் வர்க்கத்தின் பகுதியினரதும் அவர்களுக்கு கூலி வேலை செய்பவர்களதும் தொடைகள் நடுங்கத் தொடங்கியிருக்கின்றது. ஊழல்களுக்கு எதிராக கண்டனம் செய்யும் இவர்களின் கட்டுரைகளில், ஊழல் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை க்கும் இடையிலான உறவு பற்றி, ஒரு சொல் கூட இல்லாமல் இருப்பது தற்செயலானது அல்ல. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு வெளியில் ஒரு உலகம் அவர்களுக்கு கிடையாது.

ஆளும் வர்க்கத்தின் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஊழல் குணாம்சத்தை வெட்டி அகற்றி, முதலாளித்துவ அமைப்புமுறையை துப்புரவு செய்து பாதுகாக்க முடியாது. முதலாளித்துவத்தின் உச்சத்தில் இருக்கும் ஊழல் மற்றும் சூறையாடல்கள், முன்னேறிய நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரையும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் சீரழிவினால் தோன்றியுள்ளது. முதலாளித்துவ வர்க்க ஆட்சியை முன்னெடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் சீரழிந்து, ஜனநாயக-விரோத அமைப்புகளாக மாறியுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளால் அவற்றை தமது உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனங்களாக பயன்படுத்த முடியாது.

நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே நிதி மூலதனம் மேலாதிக்கம் செய்யும் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய யுகத்தின் ஒட்டுண்ணி பண்பு பற்றி ஆராய்ந்த லெனின், நிதி பிரபுத்துவ தட்டின் எழுச்சியை ஆராய்ந்தார். நிதி மூலதனத்தின் எழுச்சியுடன் சம்பந்தப்பட்ட “பிரமாண்டமான ஊழல், இலஞ்சம் மற்றும் எல்லா வகையிலுமான மோசடிகள்” அதன் குணாம்சங்களாகும். “இந்த அமைப்புமுறைக்குள் ஜனநாயக, குடியரசு மற்றும் பிற்போக்கு மன்னர் ஆட்சிகள் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான வேறுபாட்டை மூடி மறைத்து, அவர்கள் இரு தரப்பினருமே அழுகிக்கொண்டு வாழ்கின்றனர்,” என லெனின் குறிப்பிட்டார்.

அக்காலத்தில் இருந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், உலக முதலாளித்துவ அமைப்புமுறையை இந்த ஊழல் பற்றிப் படர்ந்துள்ளது. இந்த நிலைமையில், உற்பத்தி பொருளாதாரத்தில் இருந்து மேலும் மேலும் தூர விலகி, நிதி ஊகம் மற்றும் சூறையாடலில் பணம் சம்பாதிப்பதை எல்லா நாடுகளிலும் காணக் கூடியதாகிருப்பது தற்செயலானது அல்ல. அதற்கு சமாந்தரமாக உலக அளவில் ஒரு மூலையில் நிதி குவிவதும், மறு மூலையில் வறுமை குவிவதும் இடம்பெறுகின்றது.

தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களும், முதலாளித்துவ அமைப்புமுறையை துப்புரவு செய்து பேணிக் காப்பது பற்றிய அதன் கள்வர்களின் வஞ்சத்தனமான திட்டத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டும். தற்போதைய சமூக நோய்கள் அனைத்திற்கும் அழுகிப்போன முதலாளித்துவமே தோற்றுவாயாகும். தற்போதைய அமைப்புமுறையை மாற்றியமைப்பதன் மூலமே அதை இல்லாமல் ஆக்க முடியும். பிரதான முதலாளித்துவ தொழிற்துறைகள், வர்த்தகங்கள் பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர் ஆட்சியின் கீழ் சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இது சர்வதேச சோசலிசத்துக்காக முன்னெடுக்க வேண்டிய போராட்டத்தின் பாகமாகும்.

பெப்பிரவரி மாதம் நடத்தப்பட உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஊழலை அகற்றும் விடயத்தையே சகல கட்சிகளும் மோசடித்தனமாக முன்வைக்கின்றன. சோசலிச சமத்துவக் கட்சி, இந்த சகல கட்சிகளுக்கும் முற்றிலும் மாறான சோசலிச வேலைத் திட்டத்தை முன்வைத்து தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அவசியமான புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றது. அது வட இலங்கையில் யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்துறை, மத்திய பெருந்தோட்ட பிரதேசமான அம்பகமுவ, கொழும்பு கொலன்னாவை ஆகிய ஊள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடுகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com