வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரவால், ஆசிரியை ஒருவர் முழங்காலில் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியையுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன், குறித்த ஆசிரியை எதிர்கொண்ட பிரச்சினை தொடர்பில் நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
இதேவேளை, ஆசிரியை முழங்காலில் வைத்த உறுப்பினருக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதையடுத்து நவகத்தேகம நவோதய பாடசாலை நேரகாலத்துடன் மூடப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய வடமத்திய மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரவை, இன்று திங்கட்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபரான மாகாண சபை உறுப்பினருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த போதிலும் பொலிஸார் அதற்கு தமது ஆட்சேபனையை வெளியிட்டனர். சம்பவத்தை நேரில் கண்டதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த ஒருவர் அந்த வாக்குமூலத்தை வாபஸ் பெறறுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த வாக்குமூலம் வாபஸ் பெறப்பட்டமை ஏதேனும் அழுத்தத்தின் பேரில் இடம்பெற்றிருக்கலாம் என சுட்டிக்காட்டிய நீதிபதி, அத்தகைய அழுத்தங்கள் தொடர்பில் சாட்சியாளர் கட்டளை சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் இதுவரை தமது வாக்குமூலங்களை வாபஸ் பெறவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தோடு சம்பவத்தை எதிர்நோக்கியாக கூறப்படும் ஆசிரியையின் வீட்டுக்கு அருகில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
நவகத்தேகம இசுறு பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் வடமேல் மாகாணசபை உறுப்பினரின் மகள் பாடசாலைக்கு அணிந்துவந்த சீருடை கட்டையாக இருந்தனால் அம்மாணவியை எச்சரித்துள்ளார். இதனை அம்மாணவி தன் தந்தையான வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரிடம் தெரிவித்ததையடுத்து, பாடசாலைக்குச் சென்ற வடமேல் மாகாண சபை உறுப்பினர் குறித்த ஆசிரியயை ஏசி, எச்சரித்து பின்னர் முழங்காலில் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...