கிழக்கு மாகாணத்தில், மட்டக்கிளப்பு, தாளங்குடாவில் கல்விக்கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். இதில் முஸ்லிம் மாணவர்களும் உள்ளனர். அண்மையில் இங்கே பகிடிவதை (றாக்கிங்) என்ற பெயரில் கல்லூரிக்கு புதிதாக வந்த முஸ்லிம் மாணவிகளின் ஸ்காபை (முஸிலிம் பெண்கள் தலையில் அணியும் சீலை) கழற்றி பகிடி பண்ணி உள்ளார்கள். (அது முஸ்லிம்களின் மானம்) இதனால் முஸ்லிம்இ தமிழ் மாணவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டு இறுதியில் மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவரொருவர் தமிழ் மாணவர்களால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது சம்மந்தமாகக் கலந்தாலோசித்து இப்பிரச்சினைக்கு ஒரு முடிவைக்காண மட்டக்கிளப்பு 'அனைத்துப் பள்ளிவாசல்கள் சபை' கல்லூரியின் அதிபர் பாக்கியராஜாவை சந்தித்துப் பேச விரும்பி இருந்தது. அவரின் பதில் ஆச்சரியமாக இருந்தது 'அங்கே ஒன்றும் நடக்கவில்லை, என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைத்து உங்களை சந்திக்க எனக்கு நேரமில்லை என்று கூறி மறுத்து விட்டார். பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத, தெரியாத, ஆளுமையற்ற இந்த அதிபர் வளமையாக இப்படித்தான் பேசி சமாளித்து வருகிறார் என்று அங்குள்ள மாணவர்கள் கூறுகின்றனர்.
இங்கே படிக்கும் முஸ்லிம் மாணவிகள்இ தங்களுக்கு ஸ்காப் அணிய அனுமதி வேண்டி கல்லூவியின் பி(ரி)ன்சிப்பல்லுக்கு எழுத்து மூலம் அனுமதி கோரி இருக்கின்றார்கள். இதில் இருபதுக்கும் மேற்பட்ட பிரதிகளை முஸ்லிம் அமைச்சர்களுக்கும், இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் அனுப்பியிருக்கின்றார்கள், அதில் அவர்கள் இந்த விடயம் எங்களின் அடிப்படை உரிமை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆனால் எந்த மேதைகளும், நிர்வாகத்தில் இருப்பவரும் இதைக் கவனத்தில் கொள்ள வில்லை. இம்மாணவிகள் நிலத்தையோ, வளத்தையோ, நாட்டையோ, தேசத்தையோ கேட்கவில்லை. பாவம் தனக்குச் சொந்தமான தலையில் ஒரு துண்டு துணியைத்தானே போடக் கேட்கிறார்கள்.
ஒரு நல்ல எழுத்தாளர், பொது நோக்கம் கொண்டவர், பிரச்சினையைத்தீர்க்க வேண்டும். இன முரண்பாட்டை முளையிலேயே கிள்ளி வீச வேண்டும் என்ற நல் நோக்குடனும் இது விடயமாக அமைச்சர் முரளிதரனின் பேச்சாளர் எம்.பி. ஜிவியன் அவர்களிடம் பேசிய போது அவர்: முஸ்லிம் மாணவிகள் ஸ்காப் அணிய அனுமதிக்கப்படமாட்டார்கள், அவர்கள், இக்கல்லூரி அவர்களுடையது என்று காட்டவே இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று சொன்னாராம். பாருங்கள் இவருடைய மன நிலையை.
அதே நேரம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசத்தில் அமைந்துள்ள கலாபீடங்களில் (கல்முனை ஸாக்ஹிறாக்கல்லூரி, தென் கிழக்குப் பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, அட்டாளச்சேனை கல்விக்கல்லூரி) தமிழ் மாணவ மாணவிகள் அவர்களின் மத உரிமைகளோடு நடமாடுகிறார்கள் யாரும் தடுப்பதில்லை தடுக்கவும் அவ்வதிபர்கள் அனுமதிப்பதில்லை. அப்படி நடந்திருந்தால் அதற்கொரு உதாரணமேனும் கூற முடியுமா? ஒவ்வொருவரும் தங்களின் விருப்பு வெறுப்புக்களை மற்றவர்களுக்குள் திணிப்பதை விட்டு விட்டு மற்றவருடைய உரிமைகளை மதிக்கவும், சகிக்கவும் பழகிக் கொண்டால் நாம் சந்தோஷமாக வாழ முடியாதா?
கனடாவில், அமெரிக்காவில், கட்டாரில், சவூதியில், முஸ்லிமும், தமிழரும், சிங்களவரும், சீக்கியரும் ஒரே அறையில் அவர்களுக்கான சொந்த உரிமைகளோடு வாழலாமென்றால் ஏன் தாளங்குடா கல்விக்கல்லூரியில் இது முடியாது? கல்லூரி அதிபர்கள் திருந்துவார்களா?
Read more...